Wednesday, November 23, 2011

காமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று - ஜெயமோகன்


ப்ரியா மணி அல்லது மாளவிகா  ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.ப்ரியா மணி , மாளவிகா அல்லது நக்மா ஆகியவர்களில் ஒருவர் நடிக்க  , பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்க வேண்டிய திரைப்படம் அனல் காற்று. அதற்காக ஜெயமோகன் கதை எழுதினார். சில காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை.
படமாக வந்து இருந்தால் ஓடி இருக்குமா? ஜெயமோகன் சிறந்த நாவல்களில் இது ஒன்றா? படித்தே தீர வேண்டிய நாவலா?
பார்க்கலாம்.
எல்லோருக்கும் தெரிந்த , தெரிந்து கொள்ள விரும்புகின்ற ஆனால் தெரிந்து கொள்ள முடியாத ஒரு விஷ்யத்தைப் பற்றிதான் நாவல் பேசுகிறது.
காதல். காம்ம் 

காமம் இல்லாத காதல் உண்டா?   காதல் இல்லாத காமத்திற்கு பின் ஏதேனும் மனோதத்துவ பிரச்சினைகள் உள்ளனவா? காமம் , காதல் இரண்டுமே இல்லாமல் வாழ முடியாதா?
பல குற்றங்களுக்கு இவைதானே காரணங்களாக இருக்கின்றன. அல்லது இவை பற்றிய புரிதல் இன்மை காரணமாக உள்ளது.

இந்த பிரச்சினைக்ளை அலசும் நாவல்தான் அனல் காற்று.

வழக்கமான ஜெ மோ நாவல்கள் போலல்லாமல் எளிய கதை போக்கு. நேரடியான கதை.  சீரான கதை ஓட்டம் என்ற பாணியில் கதை செல்கிறது. ஜெ மோ நாவல்தானா என்று கூட அவ்வபோது சந்தேகம் வருகிறது.

அருண், சுசீ, சந்திரா, அருணின் அம்மா ஆகியோரை அடிப்படையாக கொண்ட கதை.

அருணின் அப்பாவுக்கு மற்ற பெண்கள் தொடர்பு இருப்பதால், அவரை விட்டு விலகுகிறாள் அம்மா. அருணை தானே வளர்க்கிறாள். அருணை அவன் அப்பா போலல்லாது “ நல்லவனாக” வளர்க்க முயல்கிறாள். அவனோ தன் தந்தை பாணியில்,  வயதில் மூத்த - கணவனை இழந்த - சந்திராவுடன் காதல்/ காம வயப்படுகிறான். தன் கணவனுக்கு  எந்த தவறான தொடர்புகளும் இருக்க கூடாது என்ற கனவுடன் இந்தியா வரும் அருணின் முறைப்பெண் சுசீலா மீதும் இவனுக்கு காதல் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் சந்திரா மீதான காதலும் போகவில்லை. சுசீலாவோ இவனை காதலிக்கிறாள். சந்திராவும் காதலிக்கிறாள். சந்திராவுக்கு வளர்ந்த வயதில் ஒரு பையன் இருக்கிறான். 

காதல் என்றால் என்ன? எந்த காதல் ஜெயித்தது என்பது கதை.

இந்த நாவலின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் எளிமையான கதையோட்டமும் , மொழி ஆளுமையும்தான். 

காமத்தின் இன்னொரு எல்லை மரணம் என்பதை உணர்ந்து மரணத்தைப்பற்றியும் கூர்மையாக சுட்டிக்காட்டி இருப்பதுதான் , இந்த நாவலை அர்த்தமுள்ள நாவலாக்குகிறது. 

வசதி குறைவான , கீழ்த்தட்டு மக்கள் வீடுகளைப்பற்றிய குறிப்புகள் அபாரம். வீட்டில் நுழைந்தால் பொருட்கள்தான் பெரும்பாலான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் போன்ற நுட்பமான பார்வைகள் , கதையை நேரடியாக பார்க்க வைக்கிறது.

பெரிய மைனஸ் பாயிண்ட் என்றால் , கதாபாத்திரங்கள் யதார்த்த உலகை விட்டு சற்று விலகி இருக்கிறார்க்ளோ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதுதான்.

இந்த நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் கடைசியில் நல்லவர்கள் ஆகி விடுகிறார்கள். இது சற்றும் நடை முறையில் பார்க்காத ஒன்று.

அதே போல கிளைமேக்ஸ் சினிமாட்டிக்காக இருப்பது போல தோன்றுகிறது. சற்று முன்பே முடிந்து விட்ட  கதை, சுபமான முடிவுக்காக நீட்டப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.

சந்திரா , அருணுக்கிடையே இருப்பது காதல் அன்று. வெறும் உடல் இச்சையும் அன்று. அது வேறு என உணர்வதுதான் கதையின் உச்சம். அதற்கு பிறகு பைக் சேசிங் , விமான பயணம் எல்லாம் செய்ற்கையாக உள்ளது.

அனல் காற்று ஓர் உச்சத்துக்கு சென்ற பின் , குளிர்ந்துதான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. அதே போல குளிர்ச்சிக்கு முன்பு, அதீத வெப்பத்தை சந்தித்துதான் ஆக வேண்டும் என்பதும் விதி.

ஒருவன் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தால், - தான் நினைப்பது போல வாழ்ந்தால் - இந்த இயக்கம் சுமூகமாக நடந்து முடிந்து விடும். ஆனால் அப்படி நடக்க முடியாமல் , சமூக குடும்ப அழுத்தங்கள் செய்து விடுவதால்தான் பல பிரச்சினைகள்.

இங்கே காதல் என்று வேறு ஏதோ ஒன்றைத்தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். பல காதல்களுக்கு எதிர்ப்பே தேவையில்லை. அதை அப்படியே அனுமதித்தால் , தானகவே அது உதிர்ந்து விடும்.

சில தவ்றான காதல்கள் , திருமணத்தில் முடிந்து பிரச்சினையில் முடிவதும் உண்டு. 

அருணை பொறுத்த வரை எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது. சந்திராவுடனான அவன் உறவு , அது கிளைமேக்சை அடைவதற்கு முன்பே சிதைந்து இருந்தால், வாழ் நாள் முழுக்க அவன் அதை ஓர் இழப்பாகவே நினைத்து கொண்டு இருப்பான். அதே போல , அந்த உறவு திருமணத்தில் ( ? ! ) முடிந்திருந்தாலும், வாழ் நாள் முழுக்க வருத்தம்தான்.

அனல் காற்று- மழை என்ற இயல்பான நிகழ்ச்சி அவனுக்கு வாய்த்து விட்டது . 

தனக்கு துரோகம் செய்த கணவன் , அனாதையாக சாக வேண்டும் என்ற மனைவியின் எதிர்பார்ப்பு இயல்பு. அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்வண்ணம் , தந்தை குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கும் அருணின் கேரகடரும் இயல்பு. ஆனால் அந்த குடும்பத்துக்கு தானும் ஆதரவாக நின்று , ஆயிரம் அன்னைகளுக்கு சமமாக தோன்றும் சுசீ இயல்பாக சித்திரிக்கப்படவில்லை. சினிமாவை மனதில் வைத்து எழுதி இருப்பார் போல. 

அந்த கேரகடர் உள்ள ஒரு பெண், தன் வருங்கால மாமியாரைத்தான் ஆதரித்து இருப்பாள்.

அதே போல, சந்திரா மனம் மாறுவது இயல்பு. ஆனால் தன் மகனுடன் பைக் சேஸ் செய்வது சினிமாவின் விறுவிறுப்பான கிளைமேக்சுக்காக என்பது தெளிவு. அவள் மகன் மட்டும் போய் இருந்தால் போதுமே.

இவை எல்லாம் நாவலில் முழுமையாக ஒன்றுவதை தடை செய்தாலும், உரையாடல்கள், மன ரீதியான அலசல்கள்,  நுட்பமான காட்சி அமைப்புகள் போன்றவை நாவலை தூக்கி நிறுத்துகின்றன. அப்பா, அவர் இரண்டாவது குடும்பம், நண்பன் ஜோ கேரகடர் போன்றவையும் வலு சேர்க்கின்றன 

********************************************************************

எனக்கு பிடித்த சொல்லாட்சிகள்

1 வெள்ளை உடை அணிந்த பெண் கூட்ட ஆரம்பித்தாள். என்னை அவள் நெருங்கினால், கூட்டி தள்ளி விடுவாள் என அஞ்சினேன்

2 உனக்கு பிடிக்காத எதுவுமே உலகில் இல்லை என அறிந்தேன். ஏனெனில் உனக்கு உன்னைப் பிடித்து இருக்கிறது

3 “ லவர்ஸ்தான் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க”  “ கல்யாண வாழ்க்கைக்கு ரிகர்சலோ ?”

4 பெண்ணின் அழகு என்பது ஆணின் கண்ணால் உருவாக்கப்படுவது. பார்த்ததும் நம்மை கவரும் பெண்ணின் அழகு மெல்ல மெல்ல நம் கண்ணில் குறைய ஆரம்பிக்கும். நாம் விரும்பி, அவ்விருப்பத்தால் ஒரு பெண்ணில் கண்டடையும் அழகு அப்பிரியத்துடன் சேர்ந்து வளரும்.

5 வில்லில் இருந்து அம்பு பாய்றப்ப, அம்பின் நிழலும் சேர்ந்து போகும். அம்பு நேரா போகும், நிழல் குப்ப, கூளம் ,மேடு பள்ளம் புரண்டு போகும் ,ஆனால் இரண்டும் போய் சேரும் இடம் ஒன்றுதான்

6 மரணத்தின் போது , ஒரு மனிதர் தன் முழுமையுடன் தெரிய வருகிறார்

7 அப்பாவின் படத்தை பார்த்தேன். அவர் இருந்த போது அந்த படம் அவர் போல இல்லை என தோன்றியது. இப்போது அது அவராகவே இருந்தது.

8ஸ்ட்ரா போட்டு இளனீரை உறிஞ்சறப்போ , ஒரு புள்ளில இளனீர் தீர்ந்து போச்சுனு தெரியற மாதிரி, உறவு முறிவது சட் என தெரிந்து விடும்
9 உண்மையான காதல்னா , காதலை கொடுப்பது மட்டும்தான்

**********************************************************************************

சிறந்த கேரக்டரைசேஷன்

சந்திராவின் பையன் நவீன்.. விளையாட்டு பையனாக, சாப்பாட்டு பிரியனாக சித்திரிக்கப்படும் அவனுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது, தெரியாத மாதிரி இருந்திருக்கிறான் என்பது செம ட்விஸ்ட். அவன் அம்மாவின் தவறான உறவை சிலர் சுட்டிக்காட்டும்போது, இதை பற்றி கவலைப்பட வேண்டியது என் அப்பா, அவருக்கு பின் நான் ..உங்களுக்கு என்ன என கேட்பதில் கம்பீரம், கதையின் கிளைமேக்ஸ் இதுதான். எனவே இந்த் கதையில் மனதில் நிற்பது இந்த கேரக்டர்தான்

**************************************************************************

வெர்டிக்ட் 

1 படிக்க வேண்டிய நாவல். படித்தே தீர வேண்டிய நாவல் அன்று 


2 ஜெயமோகனின் உன்னத நாவல்களில் ஒன்றல்ல . 

3 சினிமாவாக எடுத்து இருந்தால், சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் 

******************************************
அனல் காற்று 

ஜெயமோகன்

தமிழினி வெளியீடு

விலை ; ரூ 90 

7 comments:

  1. புத்தக கண்காட்சி வர இருக்கும் நிலையில் இதுபோன்ற இடுகைகள் பயனுள்ளதாக இருக்கும்... நன்றி...

    ReplyDelete
  2. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பாஸ்!

    ReplyDelete
  3. பகிர்விற்கு மிக்க நன்றி பார்வையாளன்

    ReplyDelete
  4. //வெள்ளை உடை அணிந்த பெண் கூட்ட ஆரம்பித்தாள். என்னை அவள் நெருங்கினால், கூட்டி தள்ளி விடுவாள் என அஞ்சினேன்
    //


    அருமை

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா