Pages

Tuesday, June 4, 2013

சுஜாதா மனைவி பேட்டியும், எல்லை கடந்த பிராமணீயமும்


  நான் சுஜாதா எழுத்துகளை இன்று நேற்றல்ல. வெகு நாட்களாகவே படித்து கொண்டு இருக்கிறேன். இன்று பலர் எழுத்துகளை படிக்கும்போது , என்னைப்ப்போலவே பலரும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

யார் என்ன சொன்னாலும் அவர் எழுத்துகள் மீதான மரியாதை குறையப்போவதில்லை. அவர் நூல்க்ளை அவ்வப்போது வாங்குவதும் குறையப்போவதில்லை.


எழுத்தாளர் என்பதற்கு அப்பாற்பட்டு , அவர் ஒரு மனிதராக எப்படி வாழ்ந்தார் என்பதை ஓரளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது அவர் மனைவியின் பேட்டி.

அந்த பேட்டியை விட அதற்கான நம் மக்களின் எதிர்வினைதான் சுவாரஸ்யமாக இருந்தது.

      அவர் மனைவியின் முக்கிய குற்றச்சாட்டு என்ன?


” நான் கொஞ்சம் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். பெண்கள் படிக்க வேண்டும் , உலக அறிவு பெற்றிருக்க வேண்டும்  என நினைக்கும் குடும்பம்.  என் அம்மாவுக்கு பிரத்தியேகமாக ஆங்கிலோ இந்திய டீச்சரை நியமித்து ஆங்கிலம் கற்பித்தார்கள்.

ஆனால் கல்யாணத்துக்கு பின் முற்றிலும் எதிர்மாறான சூழல். சுஜாதா ஜாதி உணர்வு மிக்க பிற்போக்காளாராக இருந்தார். நான் புத்தகம் படிப்பது அவருக்கு பிடிக்காது.  நான் அவருக்கு அடங்கியே இருக்க வேண்டும் என நினைத்தார்.

இப்படிப்பட்ட ஒருவருடன் வாழ பிடிக்காமல் கதறி இருக்கிறேன். பிறந்த வீட்டுக்கே வந்து விடுகிறேன் என அம்மாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் அன்றைய சூழலின் என்னால் தைரியமாக வெளியே வர முடியவில்லை. அதுவே இன்றைய சூழலாக இருந்தால் , அம்மாவிடம் புலம்பாமல் , நானே முடிவெடுத்து அவரை விட்டு விலகி இருப்பேன்”

இப்படி சொல்லி இருக்கிறார் அவர்.

நினைவில் கொள்ளுங்கள் , அவர் சொன்னதன் வீரியத்தை , கடுமையை குறைத்துதான் பேட்டியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவே இப்படி இருக்கிறது.

இதை தமிழ் சமுதாயம் எப்படி பார்க்க போகிறது என ஒரு பார்வையாளனாக கவனித்தேன்.

எல்லோருமே சொல்லி வைத்தது போல ஒரே மாதிரிதான் எதிர்வினை ஆற்றி இருந்தார்கள்.

ஜாதி உணர்வு, பெண்ணை அடிமையாக நினைத்தல் போன்றவற்றை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

வெளியே வர நினைத்து முடியாமல் போனதால் , காம்ப்ரமைஸ் ஆகி வாழ ஆரம்பித்தார் அல்லவா. அப்போது ஏற்பட்ட சில ஏமாற்றங்களை சொல்லி இருந்தார் அவர். குடும்பத்தை கவனிப்பதில்லை என்பது போன்ற சராசரி மனைவியனரின் ஏமாற்றங்கள்.

 நம் ஆட்கள் இதை மட்டும் பிடித்து கொண்டு விட்டார்கள்.

ஜாதி வெறி , பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை மறந்து விட்டார்கள்.

” அவங்க என்ன பெரிசா சொல்லிட்டாங்க... குடும்பத்தை கவனிக்கல... சேலை வாங்கி கொடுக்கல... இது எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டுதானே “

“ ஆம்பிளைனா கொஞ்சம் பிசியாத்தான் இருப்பான்,., பொம்பளைதான் அட்ஜ்ஸ்ட் செஞ்சு போகணும்”

“ ஓர் எழுத்தாளனுக்காக கொஞ்சம் விட்டு கொடுப்பதில் தவறில்லை”

“ பாவம்,, அவர் மனைவி சோகம் , வெறுமை காரணமாக இப்படி பேசுகிறார்”

இப்படி எல்லாம் மெயின் மேட்டருக்கு சம்பந்தம் இல்லாமல் பேசி அவரை “ காப்பாற்றுகிறார்களாம்”

ஆனால் இதிலுமே வலுவான வாதம் இல்லை என்கிறார் ஞாநி

அவர் சொல்லி இருப்பதாவது



இப்படி இருப்பதுதானே சகஜமானது என்று சராசரி ஆண் மனம் நினைக்கிறது. இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதானே பெண்ணுக்கும் சகஜமானது என்று ஆண் மனம் நினைக்கிறது. ஏற்க மறுக்கும் பெண் மனம் அதை வெளிப்படுத்தும்போது ஆண்கள் அதிர்ச்சியடைகிறார்கள். தங்கள் நிலையை நியாயப்படுத்த பல உத்திகளை கையாளுகிறார்கள். எழுத்தாளனும் சராசரி ஆண்தான் என்று ஒப்புக் கொள்ள மறுத்து சராசரிப் பெண்ணாக இருக்க மறுக்கும் எழுத்தாளன் மனைவியை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதுவது அதில் ஓர் உத்தி.




ஆனால் இவருமே கூட மெயின் மேட்டரை தொடவில்லை.

ஒரு பத்திரிக்கையில் சுஜாதாவிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். கேள்வியும் சுஜாதாவின் பதிலும்
” இருபது வயதில் கம்யூனிசம் பேசாதவனும் இல்லை.  நாற்பதில் ஆன்மீகம் பேசாதவனும் இல்லை என்கிறார்களே? “
“ இருக்கிறேனே “



கடவுளை நம்புவது நம்பாதது அவரவர் உரிமை.. ஆனால் தன்னை முற்போக்குவாதியாக காட்டிகொள்ளும் பொருட்டு , கடவுளை நம்பாதவர் போல அந்த காலத்தில் முன் நிறுத்தி வந்தார், ஒரு கட்டத்தில் பிராம்ண சங்க கூட்டம் , ஆன்மீகம் என்றெல்லாம் வெளிப்படையாக இறங்கினார்,

ஆனால் ஆரம்பம் முதலே பிற்போக்குவாதியாகவும் ஜாதி உணர்வு மிக்கவராகவும் இருந்தார் என்கிறார் திருமதி சுஜாதா;

ஒரு நல்ல எழுத்தாளன் , நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஒரு நல்ல மனிதன் , ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை.

அது வேறு. இது வேறு.

யார் வந்து என்ன சொன்னாலும் சுஜாதாவின் எழுத்து சாதனைகளை யாரும் மறைக்க முடியாது.

உண்மைகளை மறைத்துதான் சுஜாதாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் உண்மையில் சுஜாதாவிற்கு அவப்பெயரையை சேர்க்கிறார்கள்...

ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி சுஜாதாவை “ காப்பாற்ற “ முயல்பவர்கள் , பிராமணர்கள் மட்டும் அல்ல.. பிராமணர்கள் அல்லாதவர்களும் கூட.

இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களில் பலர் முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்கின்றனர்.

ஆக , பிராமணீயம் என்பது பிராமண சமுதாயத்தின் எல்லை கடந்து பரவுவதையே இந்த எதிர் வினைகள் காட்டுகின்றன.




4 comments:

  1. நல்ல கட்டுரை, நல்ல கருத்து.

    ReplyDelete
  2. அற்புதம் அட்டகாசமான உண்மை..
    இதை வெளிபடையாக போட்டு உடைத்து விட்டீர்கள்
    பார்பன புத்தி இன்று எல்லை கடந்து விட்டது.
    சொல்லப்போனால் பார்பான் சற்று அமைதியாகவே உள்ளான்.
    ஆனால் பார்ப்பான் அல்லாத கோஷ்டி அவனை விட பல படி அதிகமாக போய் ஆசாரம் பார்ப்பதும் , கோவில் குலத்திற்கு போவதும், பஜனை பாடுவதும் மெய் சிலிர்க்க வைக்கிறது.நோகாமல் , எல்லாம் தனக்கே வேண்டும் என்னும் பார்பனியம் குடும்ப அமைதியை அழித்து சமூகத்தையும் விடாது.

    ReplyDelete
  3. உங்களின் ப்ளாக்கிற்குள் நுழைந்தால் அனைத்தையும் வாசிக்கத்தூண்டுகிறது... எல்லாமும் உண்டு இங்கே.

    ReplyDelete
  4. பிராமணீயம்,பிராமண சமுதாயம் எங்கே வந்தது இஙகே,
    இது ஆன்/பெண், கனவண்/ மனைவி உறவு பிரச்சனை கண்ணை முடி கொண்டு ஒரு குறிப்பிட்ட பிரிவை குறை கூறுவது சரி இல்லை,
    மேலும்
    சுஜாதா அவர்கள் எந்த நிலையில் அப்படி கூறினார் என்றும் நமக்கு தெரியாது திருமதி சுஜாதா அவர்கள் எதற்க்காக இப்போது இதை கூறுகிறாற்கள் என்றும் புரியவில்லை

    இதை பெண்ணடிமை என்று கூறுவது சரி இல்லை,

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]