Thursday, December 5, 2013

உலகை கலக்கிய தமிழனின் உன்னதமான புத்தகம் - புத்தககண்காட்சியில் என் சிபாரிசு


நம் அருகில் இருப்பதன் அருமை நமக்கு தெரிவதே இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் உலகம் சுற்றிய தமிழன் ஏகே செட்டியார் அவர்கள்..அந்த காலத்திலேயே உலகம் எங்கும் சுற்றி இருக்கிறார் என்பது மட்டும் அன்று..அதையெல்லாம் எழுதி வைத்து அரிய ஆவணங்கள் ஆக்கி இருக்கிறார்.

ஆனால் அவருக்கு ஏன் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை..ஏன் யாரும் அவரைப்பற்றி பேசுவதில்லை ( சாரு மட்டும் ஓர் அழகான கட்டுரை எழுதி இருந்தார் ) என்பது அவரது நூல்களை படிக்கும்போதுதான் தெரிந்தது..

அவர் தன்னை காந்தியவாதியாக காட்டிக்கொண்டது முதல் காரணம்.. நம் ஊரில் அறிவு ஜீவிகளுக்கு அடிப்படை தகுதியே காந்தி எதிர்ப்புதானே...

இன்னொரு காரணம் செட்டியார் என்ற பெயர்... நம் ஊரில் என்னதான் சாதிப்பற்று / சாதி வெறி இருந்தாலும் வெளிப்படையாக ஜாதி என ஒன்று இல்லாதது போல காட்டிக்கொள்வது மரபு... எனவே செட்டியார் என்ற பெயர் , ஒரு விலகலை ஏற்படுத்தி இருக்கக்கூடும்..

அடுத்த காரணம் சாதாரணமான ஒரு லாஜிக்...பழைய கால எழுத்தாளர் நடை கடினமாக இருக்குமோ, புரியாதோ என அச்சம்... நானெல்லாம் இந்த பயத்தால்தான் இத்தனை நாள் படிக்கவில்லை..

தற்செயலாகத்தான் அண்ணலின் அடிச்சுவட்டில் என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது.. நண்பர் ஒருவர் இதை கொடுத்து படிக்க சொன்னார்.

அதை படிக்க படிக்கத்தான் அது ஒரு தங்கச்சுரங்கம் என்பது புரிந்தது... காந்தியைப்பற்றி டாக்குமெண்ட்ரி படம் எடுக்க முனைந்த தமிழர்..அதை எப்படி செய்து முடித்தார் என்பதுதான் இந்த புத்தகம்..

இதில் அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள் , அமெரிக்க ஜனாதிபதி முதல் , இந்திய ஜனாதிபதிவரை வியந்து பார்த்த வரலாற்று நிகழ்வு , எளிய மனிதர்களின் பெருந்தன்மை..பெரிய மனிதர்களின் சின்னதனம் , பயண அனுபவங்கள், சினிமா அனுபவங்கள் என ஒன்று விடாமல் அனைத்தையும் பதிவு செய்து இருக்கிறார்..

இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்று நிகழ்வின்போது , பெரிய பெரிய விஅய்பி கள் பங்கேற்கும் வகையில் இவரும் ஒரு வரலாற்று பணி ஆற்றி இருக்கிறார்.. வேறு மானிலத்தவர் யாரேனும் செய்து இருந்தால் , அது பாட புத்தகங்களில் இடம் பெற்று இருக்க கூடும்.. தமிழன் என்பதால் , அவர் செய்தது நமக்கே தெரியவில்லை..

இப்போது மொபைலில்கூட வீடியோ எடுக்க முடிகிறது..அன்றைய நிலையில் வீடியோ எடுப்பது அரிது...ஆனாலும் காந்தி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் படம் எடுத்து இருப்பார்கள்..அப்படி எடுக்கப்பட்ட அபூர்வ படத்துண்டுகளை உலகம் எங்கும் சுற்றி அலைந்து சேகரித்து தொகுத்து படமாக்க்கி இருக்கிறார் செட்டியார்.. தொகுத்தது மட்டும் அன்றி , இதற்காக சில காட்சிகளை ஷூட் செய்தும் சேர்த்து இருக்கிறார்...ஷூட் செய்வது என்றால் நடிகர்களை வைத்து நடிக்க சொல்வது அல்ல... உண்மையான நிகழ்ச்சிகள், தலைவர்களின் பேட்டி போன்றவற்றை ஷூட் எடுப்பது.

இவை எல்லாவற்றையும் சுவையான நடையில் எழுதியும் வைத்து இருக்கிறார் என்பதுதான் இதில் இன்னொரு சிறப்பு..

எத்தனை எத்தனை சம்பவங்கள்..ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை..

காந்தியின் சத்திய சோதனையில் வரும் பலரை நேரில் பார்த்து பேட்டி எடுத்தல் , last night we sang முக்தி நெறி என காந்தி தமிழில் எழுதி இருப்பதை பார்த்து வியத்தல், முசோலியின் ஃபாசிசப்படை காந்திக்கு அணி வகுப்பு மரியாதை கொடுக்கும் அபூர்வ பட  துண்டுகள் கிடைத்தல், அமெரிக்காவுக்கு காந்தி போனதே இல்லை என்றாலும் , அங்கு அவருக்கு இருக்கும் செல்வாக்கு , அங்கு இருக்கும் ஆவணங்கள் , எங்கோ கஞ்சிக்கு லாட்டரி அடித்துகொண்டு இருக்கும் ஆப்ரிக்காவில்கூட காந்தி பற்றிய ஆவணங்கள் கிடைத்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த காலத்தில் நம் தமிழ் நாட்டில் இருக்கும் ஓர் ஊரைப்பற்றி வாஷிங்டன் டைம்ஸ் இதழில் ஒரு தலையங்கம் வந்த ஆச்சர்யத்தையும் பதிவு செய்கிறார்..

அங்கு salem என்ற ஓர் ஊர் இருக்கிறது...அங்கு மது விலக்கு கொண்டு வர முயன்று , முடியாமல் போய் விட்டது...அதற்கு அவர்கள் எழுதினார்களாம்.. நம் நாட்டின் SALEM  நகரில் மது விலக்கு தோற்று விட்டது..ஆனால் இந்தியாவில் தமிழத்தில் இருக்கும் SALEM  நகரில் காங்கிரஸ் அரசு வெற்றிகரமாக மதுவிலக்கை அமுல் செய்துள்ளது என எழுதினார்களாம்..

 நோபல் பரிசு வென்ற ரொமெய்ன் ரோலந்த் என்பவர் சிறந்த காந்தியவாதி.ஃபிரஞ்ச்காரர்,,பல புத்தகங்கள் மூலம் காந்தியின் பெருமையை உலகறியச்செய்வதவர்,,,இந்த படத்துக்காக அவரை பேச சொன்னபோது மறுத்து விட்டாராம்..காரணம்? கேமரா கூச்சம்..பிறகு பேசினாராம்.. ஆனால் பெர்னாட்ஷாவிடம் பேட்டி எடுக்காதீர்கள் என்றாராம்...ஏன்?
அவர் பாராட்டி பேசினாலும் பேசுவார்... மூடு சரி இல்லை என்றால் கிண்டலாக ஏதேனும் சொல்வார்.. அதை கட் செய்தால் , எல்லா பத்திரிக்கைகளிலும் அறிக்கை வெளியிடுவார்... 

இதை பிறகு டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆமோதித்தாராம்..

“ காந்தியின் 70 ஆவது பிறந்த நாளுக்கு , வாழ்த்து செய்தி அனுப்புமாறு பெர்னாட்ஷாவை கேட்டேன்.. அவர் பதில் அனுப்பினார்... என்ன தெரியுமா? நான் ஏன் காந்தியின் 70ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து செய்தி அனுப்ப வேண்டும்.. என் 70 ஆவது பிறந்த நாளுக்கு அவர் அனுப்பினாரா என்ன ? “
இது போல பல சுவையான தகவல்கள்..

ராட்டையில் நூல் நூற்கும் போஸ் கொடுங்கள் ... ஷூட் செய்து கொள்கிறோம் என இவர் கேட்க , நேரு மறுத்து விட்டாராம்... ஷூட் செய்வதற்காக நூற்க முடியாது.. நான் நூற்கும்போது ஷூட் செய்து கொள்ளுங்கள்...

நேருவுக்கு நூற்பதில் நம்பிக்கை இல்ல, திறனும் இல்லை என்றாலும் , காந்தி மீதான மரியாதை காரணமாக தினமும் நூற்றதை பதிவு செய்கிறார்..  நேரு நூற்பதை வைத்து வேட்டி செய்ய முடியாது..ஜமுக்காளம் வேண்டுமானால் செய்யலாம் என கேலியாக சொல்கிறார்.. நேரு நூற்கையில் அவ்வபோது நூல் அறுந்து விடும்..அதையும் விடாமல் எடுக்கவே நேரு டென்ஷனாகி முறைக்க. அதையும் ஷூட் செய்தார்களாம்... அதை படமாக பார்த்த ரசிகர்களுக்கு அது காமடியாக இருந்ததாம்..

அழகாக சின்ன வார்த்தைகளாக, எளிமையான தமிழில் , சின்ன பத்திகளில் இப்படி சுவையாக சொல்லிக்கொண்டே செல்கிறார்... நல்லதோ கெட்டதோ , ஒரு சம்பவம் சொல்லி முடித்தவுடன் வாழ்க நீ எம்மான் என சொல்லி நிறைவு செய்வது ஒரு வித ஆழம் தருகிறது..
அவரது தமிழ் சொற்கள் ரசிக்க வைக்கின்றன ...உதாரணம்  - முக்காலி (Tripod )  தலைப்பு ஏடு (Title Card)

அந்த காலத்தில்யே உலகம் சுற்றி இருக்கிறார் என்றால் , இந்த காந்திய பக்திதான் அதற்கு காரணமாக இருந்து இருக்கிறது..இதற்கு தகவல் சேகரிக்கும்பொருட்டுதான் சுற்ற ஆரம்பித்து இருக்கிறார். அதன் பின் , இந்த பணிக்கு அப்பாற்பட்டு வேறு சில நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.அவற்றை எழுதியும் இருக்கிறார். அவை இன்று முக்கிய ஆவணங்களாக திக்ழகின்றன..

ஆங்காங்கு காந்தி மீதான தன் அபிமானத்தை பதிவு செய்கிறார்.

காந்தி முன் வைத்தது Quit India  என்ற கோஷத்தை..அதை தமிழர்கள் தமக்கே உரிய மிகை உணர்ச்சியால் வெள்ளையனே வெளியேறு என மாற்றி விட்டார்கள்..காந்தி இப்படியா சொன்னார் என வருத்தப்படுகிறார்.

இன்னொரு சம்பவம்...

காந்தி படம் எடுத்து முடித்தததும் அது பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது..அதை பலரும் பார்த்து கட்டுரைகள் எழுதினர். ஒரு பத்திரிக்கையில் இப்படி விளம்பரம் வந்ததாம்
Mahatma is becoming film star  அதிலும் ஒரு வார்த்தை லேசாக மறைந்த மாதிரி வெளியிட்டார்களாம்..Mahatma is becoming film star

அவர்கள் ஒரு விளம்பரத்துக்காக செய்து இருக்க கூடும்..ஆனால் செட்டியார் கோபித்துக்கொண்டு அவர்கள் உறவையே துண்டித்து விட்டார்.

சேரும் இடம் மட்டும் முக்கியம் இல்லை... அதை அடையும் வழியும் முக்கியம் என்பது முக்கியமான காந்தீய நெறி..அதை விட்டுக்கொடுக்காமல் , குறைந்த பட்சம் இந்த படம் முடியும் வரையுமாவது , வாழ்ந்து இருக்கிறார் செட்டியார்.

படத்தை அமெரிக்காவில் திரையிட்டால் , நல்ல காசு கிடைக்கும் என்ற நிலை..ஆனால் ஃபில்ம்களை எடுத்து செல்ல அரசு அனுமதிக்கவில்லை ( அப்போதைய பிரிட்டிஷ் அரசு ).. இவருக்கோ காசு அவசியதேவை...சட்ட விரோதமாக அதை அமெரிக்காவுக்கு கடத்தி சென்று சேர்க்க உதவ சிலர் முன் வருகிறார்கள்.. காந்திய நெறிகளை மனதில் வைத்து மறுத்து விடுகிறார்... ஒரு வேளை அப்படி அனுப்பி  அவர்கள் ஏமாற்றி இருந்தாலோ அல்லது விபத்துக்கு உள்ளாகி இருந்தாலோ எல்லாமே வீணாகி இருக்கும்..
அதேபோல பயணங்களில் குறைந்த பட்ச வசதிகளுடன் வாழும் காந்திய வாழ்க்கையே அவருக்கு கை கொடுத்து இருக்கிறது...

எந்த பதவியிலும் இல்லாத காந்திக்கு அன்று உலகம் முழுக்க இருந்த செல்வாக்கை ஆங்காங்கு குறிப்பிடுகிறார்/
இத்தாலி அமைச்சர் காண்ட்ரி என்பவர் அமெரிக்கா சென்றாராம். அவரை வரவேற்க வரலாறு காணாத கூட்டம்... திகைத்து போனாராம்..பிறகுதான் தெரிந்தது.. காந்தி வருகிறார் என மக்கள் நினைத்து விட்டார்களாம்..இத்தனைக்கும் காந்தி அமெரிக்கா சென்றதே இல்லை..அவர் அங்கு வருவதாக இருந்தால் , அவரது சமூக சேவைக்கு பெருமளவு நிதி தருவதாக சொல்லியும் அவர் போகவில்லை./

இந்த படத்தை ஹாலிவுட்டில் எடுத்து அங்கு திரையிட்ட போது அமெரிக்க ஜனாதிபதி , அவர் மனைவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் அதை பார்வையிட்டனர் என்ற வரலாற்று தகவல் எத்தனை பேருக்கு தெரியும்..அது முக்கியமான செய்தியாக அன்று இருந்தது.

அதேபோல , இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முதல் நாள் இரவு டெல்லியில் இந்த படம் திரையிடப்பட்டது... ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் பார்வையிட்டனர். இந்த படம் ஹிந்தியில் எடுக்கப்படவில்லை..அப்படி இருந்தும் அங்கு தலைவர்கள் உட்பட பலர் அதை ஆர்வமாக பார்த்தனர் ..

ஒரு தமிழ் படம் டெல்லியில் , ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளில் திரையிடப்பட்டு , அதை தலைவர்கள் பார்த்தனர் என்ற வரலாற்று தகவல் நமக்கு தெரியவில்லை...இதை வேறு யாராவது செய்து இருந்தால் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை..

ராஜாஜி இதற்கு முதலில் ஆதரவு கொடுக்கவில்லை... கேலி செய்து புண்படுத்தினார் என்பதையும் கடைசியில் பாராட்டினார் என்பதையும் சொல்கிறார்..

ஆனந்த விகடனில் இருந்த கல்கி அதை விட்டு விலக , இந்த படமும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறது..

எஸ் எஸ் வாசனிடம் இந்த படத்துக்காக உதவி கேட்டார் செட்டியார்.. உதவ தயார் ..ஆனால் படத்தை தான் சொல்லும்படி எடுக்க வேண்டும் என வாசன் சொன்னதை ஏற்க முடியாமல் வந்து விடுகிறார்..இதில் வாசனுக்கு கோபம்.
படம் வெளிவந்தபோது , இதற்கு ஒரு நடு நிலையான விமர்சனம் எழுதி, பிரசுரிக்க விரும்பும் கல்கியை வாசன் தடுத்து விடுகிறார்.. ஒரு மாதம் கழித்தே விமர்சனம் வந்தது..

இப்படி சில பெரிய மனிதர்களின் சின்னத்தனதை ஆங்காங்கு சுட்டிக்காட்டும் அவர் , எளிய மனிதர்களின் பெரிய மனதையும் சுட்டிக்காட்டுகிறார்.

படத்தின் ஃபில்ம் ரோலுடன் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்குகிறார்...அதிகாரி அதை சோதனை செய்யவேண்டும் என்கிறார்... போர்ட்டர் காசு கேட்டு பேரம் பேசுகிறான்... அதில் இருப்பது காந்தி படம் என சொன்னதும் அதிகாரி மென்மையாகி , அதை எடுத்து செல்ல அனுமதிக்கிறார்... அந்த போர்ட்டர் காரில் அதை ஏற்றி விட்டு , காசு வாங்க மறுத்து விடுகிறான்..

இதை இப்படி  நெகிழ்ச்சியாக சொல்லி முடிக்கிறார்.

“ காந்தி படம் எடுத்து விட்டோம் என ஒரு கர்வம் இருந்தது..ஆனால் தனக்குரிய  நியாயமான கூலியை , எவ்வளவு சொல்லியும் ஏற்க மறுத்த , அந்த போர்ட்டர் முன்பு என் கர்வம் அழிந்தது”

காந்தீயத்தின் சக்தியை இதை விட அழகாக சொல்ல முடியாது...

ஒரு காந்தியவாதியான  நெல்சன் மண்டேலாவுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்....
அண்ணலின் அடிச்சுவட்டில் - எழுதியவர் ஏகே செட்டியார்... காலச்சுவடு பதிப்பகம்

புத்தக கண்காட்சியில் இதை கண்டிப்பாக வாங்கி படியுங்கள்..வாசிப்பு இன்பம், வரலாற்று தகவல்கள் என ஒரே அமர்வில் படித்து வைக்க விடும்...





***********************************************************
டெயில் பீஸ்
கஷ்டப்பட்டு எடுத்த படத்தை பிரிட்டிஷ் அரசு பறிமுதல் செய்து விடுமோ என பயந்து , சில காப்பிகள் எடுத்து , நண்பர்களிடம் கொடுத்து ஒளித்து வைக்க சொல்கிறார் செட்டியார்..ஒளித்த இடத்தை தன்னிடமேகூட சொல்ல வேண்டாம் என்கிறார்... அதன்பின் சுதந்திரம் பெற்ற பின்புதான், ஒளித்த இடம் இவருக்கே தெரியும்...இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு காப்பாற்றிய இந்த வரலாற்று பொக்கிஷத்தை நம் சுதந்திர நாடு காப்பாற்றி வைக்கவில்லை..எங்கோ தொலைந்து விட்டது... அதன் பின் கஷ்டப்பட்டு தேடி ஒரே ஒரு காப்பியை மீட்டனர்.. ஹாலிவுட்டில் எடுத்தார் அல்லவா..அதுதான் கிடைத்து இருக்கிறது... தமிழ் வெர்ஷன் கொஞ்சம்தான் கிடைத்து இருக்கிறது... 50,000 அடி ஃபில்ம்களை சேகரித்து , அதில் 12,000 அடியை மட்டுமே படத்தில் பயன்படுத்தினார்...இந்த 12,000 அடி படமே கிடைக்காத நிலையில் அந்த மீதி ஃப்ல்ம்களை நினைத்து வருந்த மட்டுமே முடியும்...



1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா