Pages

Sunday, May 22, 2016

காலம் கடந்து நிற்கப்போகும் கலைக்களஞ்சியம் - சாருவின் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்


சில புத்தகங்களை படிப்பது என்பது நம் தேர்வு… சில புத்தகங்களை படிப்பது என்பது நாம் செய்தே ஆக வேண்டிய ஒரு செயல். அவ்ற்றை படித்தபின் நாம் வாழ்க்கையே பார்ப்பதை வேறு விதமாக மாறி விடும்.
அப்படி ஒரு புத்தகம்தான் சாரு நிவேதிதாவின் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்
 நாவல் , சிறுகதை போன்றவைகளில் சாரு விற்பன்னர் .. அவற்றுகான வாசகர்கள் ஏராளம் என்றாலும் அவரை பிடிக்காதவர்களும் உண்டு..ஆனால் அவரை பிடிக்காதவர்களையும்கூட ஈர்க்கக்கூடிய வசியம் கொண்டவை அவரது பத்தி எழுத்துகள்..
தமிழின் சுவையான பத்தி எழுத்தாளர் என சுஜாதாவை குறிப்பிடுகிறார் சாரு..ஆனால் இந்த சாருவின் கட்டுரைகளை தொடர்ந்து படிப்போர்க்கு அவர்  சுஜாதா தொடாத சில உயரங்களை தொட்டு வருவது புரியும். சாருவின் எழுத்துகள் ஒரு கலைக்களஞ்சியம் போல விஷ்யங்களை உலக ஞானங்களை நமக்கு அள்ளித்தருகிறது என வாலி ஒரு முறை குறிப்பிட்டார்.. ஆனால் விஷ்ய ஞானம் எனபதையும் தாண்டி அவர் எழுத்துகளில் ஊடுபாய்ந்து விரவிக்கிடக்கும் மைய தரிசனம்தான் , ஆன்மிக பார்வைதான் அவர் எழுத்துகளை காலக்கடந்த படைப்பாக்குகிறது என கருதுகிறேன்.
ஆன்மிகம் என்றால் ஜீவாத்மா , பரமாத்மா , விபூதி , மந்திரம் ,ஆலயம் என்பது அல்ல…  வரும் துன்பத்தை தாங்கி , பிறர்க்கு துன்பம் தராமல் வாழ்தலே தவம் அதுவே ஆன்மிகம் என்கிறாரே வள்ளுவர்…  அந்த ஆன்மிகம்தான் சாரு பேசுவது…   சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்து விஷ்யங்களையும் வேற்றுலகவாசியின் டயரி குறிப்புகள் பேசுகிறது.. ஆனால் ஆய்வுக்கட்டுரை போல இல்லாமல் , சுவராஸ்யமான உரையாடல் போல பல விஷ்யங்களை சொல்லித்தருகிறது…அந்த விஷ்யங்கள் வெறும் knowledge ஆக இல்லாமல் அந்த விஷ்யத்தையும் தாண்டி மனதில் ஓர் ஆழ்ந்த திறப்பை ஏற்படுத்துகிறது
உதாரணமாக ஓர் இடத்தில் மசூதியின் பாங்கு ஓசையயும் கபாலீஸ்வரர் ஆலயத்தின் வேத கோஷத்தையும் ஒப்பிடுகிறார்…எல்லா மதங்களும் சொல்வது ஒரு விஷ்யம்தான் என்ற ஆன்மிக பார்வை நமக்கு கிடைக்கிறது..இப்படி கிடைப்பதற்கு முன் ப்ரிட்ஜ் விளையாட்டுக்கு அந்த பெயர் எப்படி வந்தது , பாலம் ஒன்று இரு கலாச்சாரங்களுக்கும் பாலமாக இருப்பது , நகரா இசை , ரஜினி உட்பட பலரின் ரோல் மாடல் லீ க்வான் யூவின் இன்னொரு பக்கம் என பல விஷ்யங்கள் எஃப்ஃபோர்ட்லெஸ்சாக  விளையாட்டுபோல நம்மை வந்தடைந்து விடுகின்றன..அதுதான் சாரு
  நமக்கு ஏதாவது கஷ்டம் வ்ந்து விடுகிறது..  நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என புலம்புகிறோம்…ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை , நல்ல விஷ்யங்களை நினைத்துப்பார்த்து நமக்கு மட்டும் ஏன்  இப்படி கிடைக்கிறது என நினைப்பதே இல்லை..இதை அழகாக – ஆர்தர் ஆஷ் வரலாற்றை விளக்கி – சொல்கிறார் சாரு. அந்த கட்டுரையை மட்டும் காப்பி எடுத்து தமிழகமெங்கும் வினியோகித்து ஒவ்வொருவரையும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அதை படிக்கையில் தோன்றியது.. அந்த கட்டுரையை உள்வாங்கி படித்தால் , அதன் பின் இன்னொரு புத்தகம் வாழ்க்கையில் தேவையே படாது
 வாய் விட்டு சிரிக்க செய்யும் நகைச்சுவை சாருவின் ஸ்பெஷாலிட்டி. கீழ்கண்ட வரிகளை படித்து வெகு நேரம் சிரித்தேன்
குழந்தைகளைப்பற்றி தாய்மார்கள் பெருமை அடித்துக்கொள்கிறார்களே..அது பயங்கரம்.. அதி பயங்கரம். என்னமா இங்லீஷ் பேசறான்..எல்லாதலயும் முதல் பரிசு .
இது எல்லாவற்றிலும் டாப் என்ன தெரியுமா..சமீபத்தில் ஒரு தாய் தன் 29 வயது மகன் குறித்து சொன்னார்.என் மகன் மகாத்மாதான் ( அய்யோ..இந்த புத்தகத்தை ஒளித்து வைக்க வேண்டுமே..  காரணம் இதை சொன்னது என் மனைவி..என் மகன் குறித்து )
பாகிஸ்தான் , தஜிகிஸ்தான் , இத்தாலி , ஸ்காட்லாந்து என உலகெங்கும் சுற்றிபார்த்த உணர்வை தரும் இந்த புத்தகம் ,  நாம் உள்முக பயணம் செய்து நம்மை நாமே சுற்றிப்பார்த்த உணர்வையும் தருகிறது
 
 நுண்ணுணர்வு என்பது சாரு அடிக்கடி சொல்லும் விஷ்யம்.. இலக்கியம் படிக்காமல் இது சாத்தியம் இல்லை
எனக்கும் தமிழ்தான் மூச்சு.. ஆனால் அதை பிறர் மேல் விட மாட்டேன் என்ற ஞானக்கூத்தன் வரிகளில் இதை காணலாம்.
தலைவியை பார்க்க குதிரை வண்டியில்  விரைந்து வரும் தலைவன் , வண்டி சப்தம் வண்டுகளுக்கு இடையூறாக இருப்பதை பார்த்து விட்டு , வண்டியை விட்டு இறங்கி நடந்து செல்லும் சங்க பாடல்களில் இதை காணலாம்.
வாசிப்பு.. வாசிப்பு ...வாசிப்பு...இதை விட்டால் வேறு வழி இல்லை என சொல்லும் சாரு , தான் ஓர் எழுத்தாளன் என்பதை விட முதலில் ஓர் வாசகன் என சொல்கிறார் என்றால் அது மிகை அல்ல.. இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து எழுதினாலும் , இன்னும் புதிதாக சொல்ல அவரிடம் ஏராளமான விஷ்யஙகள் இருக்கின்றன என்றால் காரணம் வாசிப்புதான்.. இந்த புத்தகத்தில் சினிமா , இலக்கியம் , இசை , சாப்ப்பிட வேண்டிய உணவு என ரெஃபரன்சுகள் ஏராளம்..ஒவ்வொன்றையும குறிப்பெடுத்து , தேடி பார்த்து பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம்.. ஆக இந்த புத்தகத்தை யாராலும் படித்து முடிக்க இயலாது. இது என்றென்றும் பய்ன்படப்போகும் user manual
அருளப்பரின் வரலாறு நம்மை நெகிழச்செய்கிறது .செல்கர்க் வரலாறு சிலிர்க்கச்செய்கிறது , ஆர்தர் ஆஷ் வரலாறு நம் அகத்தை தொட்டுப்பார்க்கிறது , தோர் ஹயர்டால் வரலாறு மயில் தோகையாய் மனதை வருடுகிறது,, மகாபாரதம் , குற்றாலக்குறவஞ்சி , பாஷோ என எத்தனை எத்தனை… நம்புங்கள்..இவை அனைத்தும் ஒரே புத்தகத்தில்
 
தமிழில் வந்த புத்தகங்களில் இது மிகவும் முக்கியமான நூல் என்றே சொல்லலாம்.. மிஸ் செய்யக்கூடாத புத்தகம்
 
வேற்றுலகவாசியின் டயரி குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம்