Pages

Sunday, May 30, 2021

நிபுணத்துவம் அடைய எவ்வளவு மணி நேரம் தேவை ?

 ஒரு விஷயத்தில்  மேதைமை அடைய 10,000 மணி நேரங்கள் பயிற்சி தேவை என்கிறார் மால்கம் கிளாட்வெல்

எளிமையாக சொல்லவேண்டுமென்றால்

10000 / 24  =  கிட்டத்தட்ட  417 நாட்கள் தூங்காமல் சாப்பிடாமல் இரவு பகலாக பயிற்சி எடுக்க வேண்டும்.  அது சாத்தியமில்லை

தினசரி மூன்று மணி நேரங்கள் வீதம் ஒன்பது வருடங்கள் பயிற்சி எடுத்தால் ஒன்பது வருடங்களில் பத்தாயிரம் மணி நேரம் வந்து விடும்.

அதாவது தனது ஐந்து வயதில் ஒருவன் இசை , கிரிக்கெட் , வணிகம், கல்வி என ஏதேனும் ஒன்றில் ஈடுபடும் சூழல் இருந்தால் பள்ளிப்பருவத்தில் அந்தந்த துறைகளில் பிரகாசிப்பான்.  ஆசிரியர்கள் கவனிப்பு, புகழ் , தன்னம்பிக்கை ,  உயரக நட்புசூழல்என நல்ல விஷயங்கள் நடக்கும்.  பிற்காலத்தில் ஜொலிப்பான்

சற்று தாமதமாக , அதாவது பத்து வயதில் ஈடுபாடு ஆரம்பித்தால் , பயிற்சி செய்யும் காலத்தைப்பொறுத்து ,  அவனும் சாதனையாளராகலாம்

ஏஆர் ரகுமான் ,  டெண்டுல்கர் போன்றோரின் குடும்ப சூழல் இந்த பத்தாயிரம் மணி நேரத்தை அவர்களுக்கு அளித்ததை கவனியுங்கள்

ஜெயமோகன் தனது வெகு  சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் சூழல் இருந்ததாக சொன்னது நினைவிருக்கலாம்

ஒருவருக்கு 20 வயதில்தான் இந்த ஒன்றில் ஆர்வம் ஏற்படுகிறது , பயிற்சி எடுக்கும் சூழல் அமைகாறது என்றால் இரவுபகலாக கடுமையாக உழைத்து இந்த பத்தாயிரம் இலக்கை அடைதல் வேண்டும்

சாரு நிவேதிதா போன்ற பல எழுத்தாளர்கள் வெறித்தனமான வாசிப்பு மூலம் இந்த இலக்கை அடைந்தனர்

தாமதமாக தமது பயணத்தை தொடங்கி நாற்பது வயதுகளில் இலக்கை அடைந்தோரும் உண்டு ( எம்ஜிஆர் , நடிகர் விக்ரம் சில உதாரணங்கள)

அறுபது வயது வரை பயிற்சி செய்து,, ஓய்வுக்குப்பின் ஜொலிப்போரும் உண்டு


பெரிய சாதனையெல்லாம் வேண்டாம். ஒரு செயலில் நிபுணத்துவம் அடைந்தால் போதும் என்றால் அதற்கு தேவையான காலம் எவ்வளவு ?


நிபுணத்துவத்தின் நான்கு படிக்கட்டுகள் என ஜேம்ஸ் ஆலன் இப்படி சொல்கிறார்

1 பிடிவாதம் 2 தீவிர ஈடுபாடு  3 ஈடுபாடு மறைதல்  4 ஓய்வு

முதலில் ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட வேண்டும்.  மனம் அதில் ஈடுபடாமல் முரண்டு பிடிக்கும்.   வெட்டியாக இதில் ஈடுபடுகிறோமோ , நாளைக்கு செய்யலாமே என்றெல்லாம் தோன்றும்  ஆனால் பிடிவாதமாக அதில் இருக்க வேண்டும் இது முதல் நிலை

அதன் பின் மனம் சற்று அடங்கும்.  அந்த செயலை அழகாக எளிதாக செய்ய மனமே யோசனைகள் தர ஆரம்பிக்கும் . இந்த  ஈடுபாடு இரண்டாம் நிலை

சைக்கிள் , கார் , பைக் போன்றவை நன்கு பழகியபின் கவனமே இல்லாமல்கூட அவற்றை இயக்க முடியும்.   ஈடுபாடு தேவையற்ற நிலை. இது மூன்றாம் நிலை


கவிதை கதை என நிபுணத்துவம் அடைந்தபின் எழுதவேண்டும் என்ற,முனைப்பு இல்லாதபோதுகூட கற்பனைகள் ஊற்றெடுக்கும்.  உழைப்பு தேவைப்படாத இந்த நிலை நான்காவது நிலை


முதல் இரண்டு நிலைகளை அடைய 48 நாட்கள் ஆகும்


48 நாட்கள் ஒரு விஷயத்தை இடைவிடாது செய்தால் மனம் அடங்கி , ஒத்துழைக்க,ஆரம்பித்து விடும்


அதற்குப்பிறகு அடுத்த நிலைகளுக்கு செல்வதும் உறுதி  .  எடுத்துக்கொள்ளும் வேலையைப்பொறுத்து , நான்காம் கட்டத்தை அடையலாம்

48 நாட்கள் தாக்குப்பிடிப்பது முக்கியம்

 









Friday, May 28, 2021

ஒரு கரும்பின் பயணம் − காமத்தை கையாள்தல்

 காஞ்சிப் பெரியவர் என்றால் அவரை கடவுளாக நினைப்பவர்களும் , இண்டலக்சுவலாக நினைப்போரும் உண்டு.

இன்னொருபுறம் அவரைப்பற்றிய அறிமுகம் இல்லாதவர்களும் கணிசமாக உண்டு.

என்னைப் பொருத்தவரை அவரது எழுத்துகளும் உரையாடல்களும் எனக்குப்பிடிக்கும்.

சமீபத்தில் படித்த திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை என்னைக்கவர்ந்தது.    

ஒருவர் மகாபெரியவரிடம் கேட்டார்.  

மன்மதன் கையில் கரும்பு இருக்கிறது.

அதேகரும்பு காமாட்சி தேவி கையிலும் இருக்கிறது.  இதன் தாத்பர்யம் என்ன?

மகாபெரியவர் சொன்னார்


மன்மதன் கையில் இருக்கும் கரும்பு வில் , பாலியல் ஈர்ப்பை தோற்றுவிக்கக்கூடியது.

அவனது கரும்பு,வில்லில் இருந்து பாயும் மலர்க்கணைகளால்  தாக்கப்பட்டவர்கள் பந்த பாசங்களில் எதிர்பால் கவர்ச்சியில் சிக்குவது உறுதி

ஆனால் அவன் ஒரே ஒருவரிடம் தோற்றான்.   சிவன் மீது பாய்ந்த அவனது கணைகள் அவர்தம் தவத்தை கலைக்கவில்லை.  அவர் மோகவயப்படவில்லை  அவனை எரித்துசாம்பலாக்கி விட்டார்

வென்றவர்க்கு தோற்றவரின் ஆயுதங்கள் சொந்தம் என்ற அடிப்படையில்  , கரும்பு சிவன்வசம் சென்றது. 

இப்படியாக அது காமாட்சியை வந்தடைந்தது

இதன் நுட்பம் என்னவென்றால் ,  காமமே பிரதானம் என்பது மன்மதன் தரப்பு

அந்த காமமானது அன்பு பாசம் மக்கட்செல்வம் என சற்று உயர்நிலை அடைந்தால்தான் மனித குலம் செழிக்கும்

பாலினக்கவர்ச்சியே கூடாது என்ற சிவனது தரப்பு அன்றாட,வாழ்வுக்கு பொருந்தாது

இதனால்தான் மன்மதனின் கரும்பை காமாட்சியும் ஏந்துகிறாள்


இப்படி சொல்கிறார் மகாபெரியவர்


நமது முந்தைய பதிவில் இதை இலக்கியரீதியாக அலசியது நினைவிருக்கலாம்

Thursday, May 27, 2021

ஜெயமோகனின் "அறம்"

 ஜெயமோகனின் அறம் சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகள் தமிழ் இலக்கிய மேடைகளில் மட்டுமல்ல. இலக்கியத்துச்சம்பந்தமற்ற மேடை சொற்பொழிவுகளிலும் பட்டிமன்ற மேடைகளிலும் கூட மேற்கோள் காட்டப்படுகின்றன

யானை டாக்டர் கதையை எழுதியவர் ஜெயமோகன் என்பதுகூட அறியாதவர்கள்  அதை ஒரு நாட்டுப்புறக்கதையாகவோ காற்றுவாக்கில் காதில் விழுந்த உண்மைச்சம்பவமாகவோ நினைத்து மேடைகளில் பேசுவதுண்டு.  


       நூறு நாற்காலிகள் , வணங்கான் போன்றவை சமூக நீதி அடிப்படையில் முக்கியமானவை

    சோற்றுக்கணக்கு , உலகம் யாவையும் , ,கோட்டி , ஓலைச் சிலுவை போன்றவை வரலாற்று மனிதர்களை அவர்களது அறவிழுமியங்களோடு முன் வைப்பவை

    தனி மனித அற விழுமியங்களுடன் பிரபஞ்ச பேரறம் இணைந்து செயல்படுவதை இக்கதைகளில் காண்கிறோம்

உதாரணமாக....

புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அடிதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு. என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது. மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு. அந்த சக்தியால்தான் அப்பா அவ்வளவுதூரம் சென்றார்.

       


தலைக்குமேலே ஓரு பிரம்மாண்டமான உறுமல் ஒலியை சாமர்வெல் கேட்டார். அப்போது அவரை அறியாமலேயே ’ஆமென்’ என்று சொன்னாராம். அவரது தலைக்குமேல் இருந்த ஒரு பனிமலை அபப்டியே பெயர்ந்து ராட்சத அருவிபோல கீழே வந்தது. அவருக்கு மேலே இருந்த ஒரு பனிபாறை நீட்டல் அந்த பனிவெள்ளத்தை இரண்டாக பிளந்தது. அந்த பிளவில் சாமர்வெல் நிற்க இருபக்கமும் இருந்தவர்களை அந்த பனிவீழ்ச்சி அள்ளிக்கொண்டு அதலபாதாளத்தில் இறங்கிச் சென்று மறைந்தது.  பதினாறு வருடம் கழித்து ஒருமுறை சேர்ந்து அமர்ந்து பழையது சாப்பிடும்போதுதான் தன் அப்பா அந்த நாள்முதல் கொடும்பட்டினியிலும் பழையசோறை கையால் தொட்டதில்லை என்று தெரிந்து கண்ணீர் விட்டார். ‘பாவப்பெட்டவனுக்கு பழிவாங்கணுமானா அவனுக்க சொந்த தேகமும் வயறும் ஆன்மாவும் மட்டும்தானேலே இருக்கு?’ என்பார் அப்பா.

அதேபோல  கதைகளில் வரும் சிறிய பாத்திரங்களின் தன்னறமும் மலைக்க வைக்கிறது..

உதாரணமாக...

    அடுத்த படுக்கையில் இருகால்களும் சிதைந்த ஒருவன் கிடந்தான். அவனுடைய கண்கள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து எழுந்தார். அவன் கையை அசைத்து ‘பரவாயில்லை, ஓய்வெடுத்தபின் வாருங்கள்’ என்று சைகை செய்தான்


மேலும் பதினாறு வருடம் கழித்து ஒருமுறை சேர்ந்து அமர்ந்து பழையது சாப்பிடும்போதுதான் தன் அப்பா அந்த நாள்முதல் கொடும்பட்டினியிலும் பழையசோறை கையால் தொட்டதில்லை என்று தெரிந்து கண்ணீர் விட்டார். ‘பாவப்பெட்டவனுக்கு பழிவாங்கணுமானா அவனுக்க சொந்த தேகமும் வயறும் ஆன்மாவும் மட்டும்தானேலே இருக்கு?’ என்பார் அப்பா.



மத்துறு கதையில் பேராசியரின் அற விழுமியங்களுக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொண்ட − வாழ்க்கையில் தோல்வியுற்றவன் என்று கருதப்பட்ட − ஒரு மாணவனை காண்கிறோம்


இதில் வரும் மனரீதியாக துயரை உடல்ரீதியாக அனுபவிக்கும் ஒரு மாமனிதரை  பெரு வலியில் காண்கிறோம்.  அதில் வரும் சிறிய பாத்திரமான,வடநாட்டு பெண்மணியின் பெருங்கருணையில் நெகிழ்கிறோம்.

அறம் கதையில் மனசாட்சி உலுக்கப்படும் தருணத்தை காண்கிறோம்


தனக்கான அற விழுமியங்களை கண்டுகொண்டு அதன்படி வாழ்ந்த மனிதர்களின் கதையை கோட்டி , வணங்கான் , நூறு நாற்காலிகள் , உலகம் யாவையும் , சோற்றுக்கணக்கு , மத்துறுதயிர், யானை டாக்டர் , ஓலைச்சிலுவை போன்ற கதைகளில் பார்க்கிறோம்

அறம் , பெருவலி , தாயார் பாதம் போன்ற கதைகளில் பிரபஞ்ச பேரறத்தை காண்கிறோம்

  சற்று வித்தியாசமாக மிளிர்வது மயில் கழுத்து சிறுகதை.    தனக்கான சுயதர்மத்தை  கண்டு கொள்ளும் அற்புத தருணத்தை பதிவு செய்யும் கதை இது


ஓலைச்சிலுவை , சோற்றுக்கணக்கு , கோட்டி கதையின் இறுதிப்பகுதிகள் ஆகிவற்றிலும் இந்த தருணங்கள் உண்டு


ஆனால் முழுக்க முழுக்க அந்த தேடலை  தன்னை அறிவதற்கு முன்பான தத்தளிப்பை அவஸ்தையை வேதனையை பதிவு செய்யும் கதை


ராமன் மற்றும் பாலசுப்ரமணியன்,ஆகிய இருவரையும் வாசகனால் நெடுங்காலம் மறக்க முடியாது.


இவர்கள் இடம்பெறும் இரு,கதைகளையும் ( தாயார் பாதம் , மயில் கழுத்து )சேர்த்து வாசிக்கும்போது கிடைக்கும் திறப்பு வெகு அழகானது,

   இசைக்கலையில்  மேதைமை ,  பணம் இல்லாவிட்டால் என்ன சரஸ்வதி கடாட்சம் மிக்க பெண் இருந்தால்போதும் என நினைக்கும் மனம் கொண்ட தந்தை  , சரஸ்வதி தேவிக்கு போன ஜென்மத்தில் மட்டுமல்ல இப்பிறவியிலும்,ஆண்டு தோறும்,தேனாபிஷேகம் ,  தந்தை மீதான குருபக்தி எனமேன்மையே  உருவெடுத்து வாழ்வதுபோன்ற ஒருவர் , சரஸ்வதிதேவி நேரில் வரும்போது மல அபிஷேகம் செய்கிறார்


ஆனால்   பெண் போதையில் பாலியல் ஈர்ப்பில் சிக்கி சீரழிந்து கிடந்த ராமன் , அந்த நஞ்சை அமுதமாக்கி வென்று செல்கிறார்


அந்த  நஞ்சு இல்லாவிட்டால் அவர் எழுத்தாளரே அல்லர்.  கோடிக்கணக்கான சாமான்யர்களில் ஒருவர்

ஆனால் அந்த நஞ்சு ரசவாதம் அடையாவிட்டாலும் அவர் அழிந்திருப்பார்.


  சரியான புள்ளியில் அவர் தனது தர்மத்தை கண்டுகொள்கிறார்

    எதையும் தர்க்கரீதியாக பார்க்கும் நிதானமான மனம் கொண்ட பாலசுப்ரமணயனிடமும் மாற்றம் நிகழ்கிறது


தாயார் பாதத்தில்  குரு பக்தி என்ற பால் திரிந்து விஷமாகாறது


மயில் கழுத்தில்  விஷம் பதப்படுத்தப்பட்டு வைரமாகிறது


மயில் கழுத்தில் சில வரிகள்


      


நாய் மாதிரின்னா வாலச்சுழட்டிண்டு பின்னால அலைஞ்சர். அன்னைக்கு தலையிலே அடிச்சுக்காத ரைட்டர்ஸே இல்ல. கரிச்சான்குஞ்சு என்னைக்கூப்பிட்டு டேய் அவன் பிறவிரைட்டர்டா. அவனுக்கு வெக்கமும் பயமுமா ஆத்தாம கெடக்கு. துணிஞ்சு ஒரு நாலஞ்சு தாசிகளண்ட கூட்டிண்டு போ. தெளிஞ்சுட்டுதுன்னா இடுப்புக்குமேலே யோசிக்க ஆரம்பிப்பான்னார். 


தோத்து கேவலப்பட்டு சீரழிஞ்சுட்டேன்.மண்ணுல கால வைக்கவே முடியாதவனா ஆயிட்டேன். எங்கூரிலெ பங்காளி தோட்டத்து மரத்த கொத்தி நவச்சாரத்த புதைச்சு வைப்பாங்க . வெஷம் குருதியிலே ஏறி எலையும் தளிரும் வேரும் விழுதும் எல்லாம் வெஷமாகி மரம் அப்டியே காய ஆரம்பிக்கும். காஞ்சுகாஞ்சு உலந்து தீப்பட்டதுமாதிரி பொசுங்கி நிக்கும்…அந்தமாதிரி எனக்குள்ள ஏறிட்டுது வெஷம்… மூணு வருஷமா எரிஞ்சு கரிஞ்சுட்டிருக்கேன் பாலு…’


    ஆனா எனக்குள்ள இந்த வெஷமில்லேன்னா நான் யாரு, வெறும் சோத்துப்பிண்டமில்ல? 



இந்த தொகுப்பை படித்தவுடன் நமக்கு தோன்றுவது இதுதான்


எ்ததனை மகத்தானவன் மனிதன்! கடவுளின் படைப்பில் இந்த ஓர் உயிருக்கு மட்டும் எவ்வளவு ஆன்ம வல்லமை சாத்தியமாகிறது! அவன் போக்க்கூடிய தூரம் எவ்வளவு அதிகம். அவனால் கொஞ்சம் கைநீட்டினால் மனிதகுமாரனின் கால்களை தொட்டு விடமுடியுமே

Tuesday, May 25, 2021

பென்னை அணுகுதல்

 

    பேனா விற்பனை என்ற அருங்கலை இன்று அழிந்து விட்டது.  சூப்பர் மார்க்கெட்டுகளில் ஓர் ஓரமாக பேனாவுக்கு இடம் ஒதுக்கியிருப்பர். அவற்றிலும்   ஜெல் , பால்பென் , ரோலர் பென் என்பவைதான் அதிகம்.   

    மை ஊற்றி எழுதக்கூடிய பேனாக்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது

        ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் ,  சாதாரண கடைகளில் பேனா வாங்கினால் after sales suppor கிடைக்காது.

     பேனாவுக்கெல்லாம் எதற்கு after sales support என்பதே அவர்களுக்கு தெரியாது

      விலையுயரந்த நல்ல பேனா என்றால் சிறு பழுதுகள் என்றால் தூக்கி எறிய முடியாது.  உதிரி பாகங்கள் தேவைப்படும்

      அந்த காலத்தில் எல்லாம் பைக் சர்வீஸ்போல பேனா சர்வீஸ் கடைகளும் இருந்தன  இன்று அருகி விட்டன

        டெல்லி மும்பை சென்னை பெங்களூரு என எல்லா ஊர்களிலும் ஆஙககாஙககு இப்படிப்பட்ட  கடைகள் உண்டு..   

      மதுரையில் சில கடைகள் உண்டு  அவற்றில் ஒன்றுதான் ஜான்சன் பென் செண்டர்

   மீனாட்சி அம்மன் ஆலயம் அருகே உள்ள கடை   1974ல் இருந்து செயல்படும் இக்கடை சிறிய கடைதான் என்றாலும் பெரிய கடைகளுக்கு மத்தியில் இன்றும் செயல்படுவது பாராட்டத்தக்கது ,  இது தொடர வேண்டும் என கடைநடத்துபவரிடம் சொல்லி விட்டு வந்தேன்  , சில பேனாக்களும் வாங்கிக் கொண்டு வந்தேன்  .  பேனாவில் எழுதும் கலை குறித்த சில டிப்ஸ்கள் வழங்கினார்;

  பழுது பாரப்பதற்கு தேவையான உதிரிபாகங்களையும் பார்வையிட்டு கிளம்பினேன்





 



  ,




Sunday, May 23, 2021

மறக்க முடியாத பிரார்த்தனை


 கடவுள் என ஒருவர் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாத ஒன்று


ஆனால் பிரார்த்தனைகள் நிகழ்த்தும் அதிசயங்களை அவ்வப்போது கேட்கிறேன் ,  நானும் அனுபவிக்கிறேன்


என் சிறுவயதில் , ஒரு முறை உறவினர் வீடு ஒன்றில் மொட்டை மாடியின் மேல் தளத்தில் சிமெண்ட் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.  திடீரென மழை மேகங்கள் சூழ்ந்தன.

மழை பெய்து சிமெண்ட் அடித்து செல்லப்பட்டால் அவருக்கு தாங்கவே முடியாத,நஷ்டம் ஏற்படும்

மழை பெய்தால்  இப்படி சேதம் ஏற்படும் சூழல் பிற்காலத்தில் வந்தபோது பெரிய பாலித்தீன் ஷீட்டுகளை உடனே வாங்கி"வந்து போர்த்தி விட்டு சேதத்தை தவிர்த்த அனுபவம் எனக்குண்டு;

ஆனால்  நான் சொல்லும் சம்பவம் நடந்த இடம் ஒரு கிராமம்.  பாலித்தீன் ஷீட்டுகளோ வேறு  ஏற்பாடுகளோ செய்ய முடியாத சூழல்


அப்படி ஒரு கையறு நிலையில், பிராரத்தனையையே"அவர் நம்பினார்

பிரார்த்தனை என்பது இயல்பான ஒன்று. ஆனால் இந்த சம்பவம் ஏன் மனதில் நிற்கிறது என்றால் அவர் யாரிடம் பிரார்த்தனை செய்தார் என்பதால்தான்;

அவர் திருநீறுடன் காட்சி அளிக்கும் ஹிந்து  ஆனால்  அவர்,பிராரத்தனை செய்தது மேரி மாதாவிடம்;

என்ன ஆச்சர்யம் என்றால் மழை மேகங்கள் விரைவிலேயே கலைந்து விட்டன   நிம்மதிப் பெருமூச்சு விட்டார்

இரண்டு நாட்கள் கழித்து மழை அடித்துக்கொட்டி மேலும் நன்மையை செய்தது

அவர் தன் நன்றிக்கடனை செலுத்தியது புளியால் பெரியநாயகி  தேவாலயத்தில்.

அந்த ஊர் மாதாவின் பெயர்தான் பெரியநாயகி..

புளியால்  என்ற ஊர் காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது

அந்த சம்பவத்துக்குப்பிறகு நானும் சிலமுறைகள் சென்றுள்ளேன்

அவரவர் இறையவர் குறைவிலர்


Thursday, May 6, 2021

கொரோனா தினங்கள்

 நமக்கெல்லாம் கொரோனா வராது என்ற நம்பிக்கை இனியும் யாருக்கும் வேண்டாம்.    யாரும் தப்பிக்க வாய்ப்பில்லை. 


கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து வந்தேன்.   ஒரு பத்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல்


அதில் கொரோனா தொற்றி விட்டது


உண்மையில் ஆரம்பத்தில் தெரியவில்லை.   நாள் முழுக்க தூக்கம் ,  தலைவலி  இருமல் என படுத்தி எடுத்து விட்டது


நான் வழக்கமாகவே என்னை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்பவன்  தற்போது கூடுதலாக தனிமைப்படுத்திக் கொண்டேன்


ஓரளவு குணமானதும் டெஸ்ட் செய்து பாரத்த்போது கொரோனா வந்து விட்டுப் போய்விட்டது தெரிந்தது


கஷாயங்கள் ,   மாத்திரைகள் ,  சக மனிதர்கள் அன்புக்கு  நன்றி


என் உறவினர் ஒருவர் இப்படி பாதிக்கப்பட்டு  மூன்று லட்சம் செலவானது


சிலருக்கு செலவு செய்தும் பயனற்ற சூழலும் உண்டு


சிலர்  வெகு எளிதாக இதைக் கடந்து விடுகிறார்கள்


எனவே  இதை யாராலும் கணிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.   ஜாக்கிரதையாக இருங்கள்    தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்   தடுப்பூசி போடுங்கள்      உரிய  சோதனைகளை செய்து கொள்ளுங்கள்