Pages

Sunday, September 23, 2012

பாலகுமாரனின் இலக்கிய இடம்- ஜெயமோகன் திடீர் பல்டி- பழைய கட்டுரையும் , புதிய கட்டுரையும்



ஜே ஜே சில குறிப்புகள் வெளி வந்தபோதே , அதை விமர்சித்து எழுதியவர் சாரு நிவேதிதா. விமர்சன நூல் ஒன்றை தன் செலவிலேயே வெளியிட்டார். அப்போதெல்லாம் ஜெயமோகன் போன்றவர்கள் அந்த ஜெஜெ சில குறிப்புகளை பாராட்டி கொண்டு இருந்தனர்.

சமீபத்தில் ஜெயமோகனும் சாருவின் கருத்துக்கே வந்து விட்டார். சமீபத்தில் அந்த நாவல் அப்படி இன்றும் சிறந்தது அல்ல என சொல்லி விட்டார்.

ஓர் எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளர் கருத்துகளை ஏற்பது ஆரோக்கியமானதே... ஆனால் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு நன்றி சொல்லாதது தவறு என நடு நிலையாளர்கள் கருதினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் வணிக எழுத்து தேவையா என்றொரு கட்டுரை ஜெமோ வலைத்தளத்தில் வெளியானது. அதை பார்த்த நடு நிலையாளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். காரணம் , சில மாதங்களுக்கு முன் இதே விஷ்யத்தில்  மாறுபட்ட கருத்துகளை சொல்லி இருந்தார்.

தவறான கருத்தை சொல்லி விட்டு , திருத்தி கொள்வது நல்லதே. ஆனால் முன்பு சொன்னது தவறு என ஒப்புக்கொளவதுதானே அறிவு நாணயம்?

ஜெ மோ அன்று சொன்னது... 


  • வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
  • இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
  • சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.

ஜெ மோ இன்று சொல்வது 

  • ஆனால் வணிகஎழுத்து இல்லாமலானபோது மெல்லமெல்ல சமூகத்தில் வாசிப்பு குறைந்தது.
  • ஆகவே சாண்டில்யனும் நா.பார்த்தசாரதியும் எல்லாம் வாசிப்பின் ஒரு கட்டத்தில் இன்றியமையாதவர்களே. அவர்கள் வழியாகவே நாம் தீவிர இலக்கியத்துக்குள் நுழையவேண்டும். அதுவே சரியான வழி.
  • முன்பு வீடுவீடாக ஆணும் பெண்ணும் இதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். கிராம நூலகங்கள் செயலூக்கமுடன் இருந்தன.இன்று அப்படி ஓர் இயக்கமே இல்லை.


இந்த இரண்டு கருத்துகளையும் பார்த்தால் அவர் தற்போது தன் பழைய தவறான கருத்துகளை மாற்றிக் கொண்டது புரியும்.  தன் தவறை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் , திருத்தி கொண்டாரே , அந்த அளவுக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.. அன்று சுஜாதா , பாலகுமாரன் போன்றவர்களால் இலக்கியம் வளரவில்லை என்றார் . இன்று மாற்றி பேசுகிறார். 

அவரது பழைய கட்டுரையும் , புதிய கட்டுரையும் உங்கள் பார்வைக்கு 
**************************************************


அவரது பழைய கட்டுரை 




கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரிய எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது
pichaikaaran
அன்புள்ள பிச்சைக்காரன்
நீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.
சுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/? என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.
தமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.
வணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்
வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.
அதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.
தமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.
கோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல




*********************************************************************************
அவரது தற்போதைய  கட்டுரை.
நான் வணிக எழுத்து தேவையற்றது என்று நினைப்பவன் அல்ல. சொல்லப்போனால் வணிக எழுத்தின் இடத்தை அங்கீகரித்த முதல் தமிழ் இலக்கியவாதி நான்தான்
நான் எழுத வந்த எண்பதுகளில் இலக்கியம் இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்களின் வட்டத்துக்குள் மட்டுமே வாழ்ந்தது. அங்கே கேளிக்கை எழுத்தின் மீது தீவிரமான எதிர்ப்பும் வெறுப்பும் இருந்தது. அது ஐம்பதுகளில் க.நா.சுவால் உருவாக்கப்பட்டது. சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், பிரமிள் ஆகியோரால் பேணி வளர்க்கப்பட்டது.
அன்றெல்லாம் எந்த ஒரு கேளிக்கை எழுத்தாளரையும் எவ்வகையிலும் பொருட்படுத்தக் கூடாது என்ற உறுதி சிற்றிதழ்ச்சூழலில் நிலவியது. கல்கி முதல் சுஜாதா வரை எவரைப்பற்றியும் ஓரிருவரி நக்கல்களுக்கு அப்பால் எதையும் சொல்ல மாட்டார்கள். எந்த விவாதத்திலும் அவர்களின் பெயர்களைச் சொல்வதென்பது மிகவும் அருவருப்பூட்டும் ஒன்றாகவே கருதப்பட்டது.
அதற்கான காரணமும் உள்ளது. அன்று இலக்கியத்துக்கு எந்த அடிப்படை மரியாதையும் இருக்கவில்லை. எழுத்துக்கள் வாசிக்கப்படுவதில்லை, நூல்கள் விற்பதில்லை. அச்சேறுவதே கடினம்.கல்லூரிகளும் பல்கலைகளும் வணிக எழுத்துக்களையே இலக்கியமாகக் கருதின. அவற்றுக்கே பரிசுகளும் அங்கீகாரங்களும் வந்தன. ஆய்வுகள் நடந்தன. அவை லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. அவற்றை எழுதியவர்கள் பண்பாட்டின் அடையாளச்சின்னங்களாகக் கொண்டாடப்பட்டார்கள்.
அச்சூழலில் இலக்கியத்தை மிகுந்த ஆவேசத்துடன் முன்வைத்தாகவேண்டிய நிலை இருந்தது. வணிக எழுத்து X இலக்கியம் என்ற இருமையைத் திட்டவட்டமாகக் கட்டமைக்கவேண்டியிருந்தது. அதன் பொருட்டு இலக்கியம் என்பதைத் தெளிவாக வரையறுக்கவேண்டிய கட்டாயம் உருவானது. இலக்கியத்தை சில விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்தார்கள்.
சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதுபோல ஆத்மசுத்தி, சுதந்திரம், அழகுணர்ச்சி ஆகியவற்றால் ஆனது இலக்கியம். அவ்விழுமியங்களைத் திரும்பத்திரும்ப வலியுறுத்தவேண்டியிருந்தது அன்று. அதற்காக அந்த விழுமியங்களைக் கொள்ளாத வணிக எழுத்துக்களை முழுமுற்றாக நிராகரிக்கவேண்டியிருந்தது. வணிக எழுத்து ஆத்மார்த்தமானதல்ல, வாசகனுடைய ரசனைக்காக எழுதப்படுவது. அது சுதந்திரமானதல்ல, சமூகப்பொதுவான கருத்தியலை அது மீறமுடியாது. அதற்கு அழகுணர்வு முக்கியமல்ல,சுவாரசியம் மட்டுமே அதன் இலக்கு.
இக்காரணத்தால் எண்பதுகளின் இறுதி வரை வணிக எழுத்து மீதான முழு நிராகரிப்பு சிற்றிதழ் இலக்கியச் சூழலில் நிலவியது. அது தேவையான ஒன்று. தமிழில் இலக்கியத்தொடர்ச்சி அதி தீவிரமாக இலக்கியத்தை நம்பி சிற்றிதழ்ச்சூழலில் செயல்பட்ட நம் முன்னோடிகளால் நிலைநாட்டப்பட்ட ஒன்று. எதிர்மறைச்சூழல்களில் இறுக்கமும் வேகமும் கொள்வது மானுட இயல்பு. மனைவி நகையை விற்று சிற்றிதழ் நடத்திய அம்முன்னோடிகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆனால் தொண்ணூறுகளில் சட்டென்று வணிக எழுத்து அர்த்தமிழந்தது. தொலைக்காட்சியின் வருகை அதற்கான காரணம். நட்சத்திர வணிக எழுத்தாளர்கள்கூடப் பின்னுக்குச்சென்று காணாமலானார்கள். ஊடகப்பெருக்கம் காரணமாக இலக்கியத்துக்கு கவனம் கிடைத்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் லா.ச.ராவும் ,அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும் வெளியே தெரிய ஆரம்பித்தார்கள்.
ஆனால் வணிகஎழுத்து இல்லாமலானபோது மெல்லமெல்ல சமூகத்தில் வாசிப்பு குறைந்தது. இன்று தமிழ்நாட்டில் இலக்கியவாசிப்பு,தரமான வாசிப்பு பலமடங்கு கூடியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக வாசிப்பு கீழிறங்கியிருக்கிறது. முன்பு வீடுவீடாக ஆணும் பெண்ணும் இதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்கள். கிராம நூலகங்கள் செயலூக்கமுடன் இருந்தன.இன்று அப்படி ஓர் இயக்கமே இல்லை.
தொண்ணூறுகளில் இதை நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.இலக்கியம் கேளிக்கை அல்ல, அது ஞானப்பகிர்வு. ஆனால் ஒரு சமூகத்தில் ஓர் உயர்தரக் கேளிக்கையாகவும் வாசிப்பு இருந்துகொண்டிருக்கவேண்டும் என்று சொன்னேன். அதை ஒட்டி நீண்ட விவாதங்கள் நடந்திருக்கின்றன. வாசிப்பைக் கேளிக்கை என்று எப்படிச் சொல்லலாம் என்று சண்டை போட்டிருக்கிறார்கள்.
வாசிப்பு ஓர் இயக்கமாக நீடிக்க வணிக எழுத்து அவசியம்.வெறுமே மனமகிழ்ச்சிக்காகவும் பொதுவான அறிதலுக்காகவும் வாசிக்கப்படும் நூல்களுக்கு சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டில் பெரும் பங்கு உண்டு. வணிக எழுத்தை இலக்கியம் என்று சொல்வது எவ்வளவு பிழையோ அவ்வளவு பிழை அவற்றைத் தேவையற்ற அல்லது கீழ்த்தரமான செயல்பாடு என்பது. இதுவே என் நிலைப்பாடு.
இன்னொரு அம்சத்தையும் நான் சுட்டிக்காட்டினேன். இலக்கியத்தில் ஒழுக்கநோக்குக்கும்,எளிமையான இலட்சியவாதத்துக்கும், கற்பனாவாதக் கனவுகளுக்கும் இடமில்லை. ஆனால் அவை ஒரு சமூகத்துக்குத் தேவை. இளம் மனதில் அவை உருவாக்கும் விளைவுகள் மிகச் சாதகமானவை. ஆகவே சாண்டில்யனும் நா.பார்த்தசாரதியும் எல்லாம் வாசிப்பின் ஒரு கட்டத்தில் இன்றியமையாதவர்களே. அவர்கள் வழியாகவே நாம் தீவிர இலக்கியத்துக்குள் நுழையவேண்டும். அதுவே சரியான வழி.
அறுபதுகள் முதல் தமிழில் இலக்கிய நூல்களுக்குப் பட்டியல்போடும் வழக்கம் இருந்தது. க.நா.சு அதை ஆரம்பித்து வைத்தார். அந்தப்பட்டியல்கள் வழியாகவே இலக்கியத்தொடர்ச்சி நீடித்தது. மூன்று தலைமுறைக்காலம் கைப்பிரதியாகவே அப்பட்டியல்கள் உலவின. அதன்வழியாகவே நல்ல நூல்கள் வாசிக்கப்பட்டன. சுந்தர ராமசாமி எனக்கு அப்படி ஒரு பட்டியலை அளித்தார்
நான் தொண்ணூறுகளில் நல்ல வணிக எழுத்துக்கான பட்டியல் ஒன்றை உருவாக்கினேன். சுந்தர ராமசாமி அது வீண்வேலை என்று என்னைக் கண்டித்தார். ஆனால் அதற்கான அவசியம் உண்டு என நான் நினைத்தேன். அப்பட்டியல் என் ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ நூலின் பின்னிணைப்பில் உள்ளது.
நான் ஊகித்த அந்த அவசியம் இன்று வந்து விட்டது. தொண்ணூறுகளுக்கு முன் இலக்கியங்கள் கிடைக்காத நிலை இருந்தது, பட்டியல்கள் மூலமே அவை நினைவுகூரப்பட்டன. இன்று இலக்கியங்கள் கிடைக்கின்றன. அன்று எங்கும் கிடைத்த வணிக எழுத்துக்கள் மறைந்துவிட்டன. என் பட்டியல் அவற்றை நினைவூட்டுகிறது.





4 comments:

  1. இப்ப எதுக்கு இந்த லபோ திபோ? அப்படிப் பார்த்தால் சாரு அடிக்காத பல்டிகளா! ('கடவுளைக் கண்டேன்' ஒண்ணு போதுமே!) எனி வே, உங்க பேரை தல மெயில் ஃபில்டரில் போட்டு ரொம்ப காலம் ஆச்சு. இதையெல்லாம் அவர் பொருட்படுத்துவார்னு நினைக்கிறீங்க?

    ReplyDelete
  2. /இப்ப எதுக்கு இந்த லபோ திபோ? அப்படிப் பார்த்தால் சாரு அடிக்காத பல்டிகளா! ('கடவுளைக் கண்டேன்' ஒண்ணு போதுமே!) எனி வே, உங்க பேரை தல மெயில் ஃபில்டரில் போட்டு ரொம்ப காலம் ஆச்சு. இதையெல்லாம் அவர் பொருட்படுத்துவார்னு நினைக்கிறீங்க?/

    உன்கிட்ட இந்தத் தப்பு இருக்குனு சொன்னா, உங்க அப்பன்கிட்ட இவ்வளவு பெரிய தப்பு இருக்கு...அத மொதல்ல பாருனு சொல்ற உங்க எளக்கிய(?) பேச்சு ரொம்ப நன்னாருக்கு.

    எனிவே, அவர் பல்டி அடிச்சிருக்கார்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்னி

    ReplyDelete
  3. சுயமோகன்September 27, 2012 at 9:10 AM

    /உங்க பேரை தல மெயில் ஃபில்டரில் போட்டு ரொம்ப காலம் ஆச்சு/

    மெயில் ஃபில்டரில் போடட்டும் காபி பில்டரில் போடட்டும்.. வலைபக்கங்கள் எல்லாருடைய பார்வைக்கும் கிடைக்கப்பெறுபவை. மெயில் ஐடி-யை ஃபில்டரில் போடுறதுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமுமில்ல.

    /இதையெல்லாம் அவர் பொருட்படுத்துவார்னு நினைக்கிறீங்க?/

    பொருட்படுத்துற குணம் இருந்தா நாடு என்னைக்கோ வெளங்கிருக்குமே

    ReplyDelete
  4. கல்கியின் எழுத்து, அகிலன் எழுத்து, மு.வா எழுத்து இலக்கியம் இல்லை என்று வாதாடினால் அடிக்க வருவார்கள் எங்க ஊரில். இன்னமும் வாசிப்பில் அங்கேயே பலர். நல்ல பதிவு இது. அற்புதம். இந்த பாகுபாடு பலருக்குப் புலப்படாது. எனக்கே சாருவைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்துதான் புரிய வந்தது. நவீன இலக்கியத்தை சாரு மூலமாகத்தான் கற்றுக்கொண்டேன்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]