Pages

Friday, February 8, 2019

பாலச்சந்தர் மேல் வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்- தாசன் படைப்புலகம்





சார்,,, உங்க தோட்டத்த வேவு பார்க்குறானே... அவன் பக்கா திருடன்.. அவனை விரட்டி அடிங்க என்றான் அவன்

அப்படியா... என அலட்டிக்கொள்ளாமல் சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றவனை அவன் மனைவி பிடித்துக்கொண்டாள்

திருட்டு எச்சரிக்கையை ஏன் அலட்சியம் செய்கிறீர்கள் என்றாள்

அவன் சொன்னான்.. எச்சரித்தானே..அவன் இவனை விட பெரிய திருடன்... ஒருவனை விரட்டினால் என்ன பயன் ?

மனைவி கேட்டாள்... இருவரும் திருடன் என்றாலும் ஒருவனை விரட்டினால் பாதி தீமையாவது குறையுமே ?

அவன் சொன்னான்.. தீமையை அப்படி படிப்படியாக குறைக்க முடியாது.. ஒரேயடியாக அழித்தால்தான் உண்டு.. அதற்கான வழிகளைத்தான் யோசிக்கிறேன்

அவள் கேட்டாள் . சரி.. அவனும் திருடன் என எப்படி சொல்கிறீர்கள்

அவன் சொன்னான்.. அவன் சொன்ன தொனியை கவனித்தாயா... என்ன சத்தம், என்ன கூச்சல்..   ஒருவரை குற்றம் சொல்கையில் அவன் மனசாட்சி நீயும்தான் குற்றவாளி என சப்தமிடும்.. அந்த சப்தத்தை மறைக்கவே சத்தமாக பேசுகிறார்கள்... சத்தியத்துக்கு சத்தம் தேவையில்லை

-----------------

மேற்கண்ட உருவக கதை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது... அரசியல் , சினிமா , இலக்கியம் என எதிலும் இதை பொருத்திப்பார்க்கலாம்


இதை எழுதியவர் என்,ஆர். தாசன் .. 80களில் 90களில் பல நல்ல கதைகளை எழுதியுள்ளார்

அபூர்வ ராகங்கள் தன்னுடைய கதை என்று அந்த காலத்தில் புகார் கூறி செய்திகளில் இடம் பெற்றவர் அவர்

தன் கதையின் காப்பி என அவர் கருதியதை புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் அவர் எழுதிய கதையும் அபூர்வ ராகங்கள் கதையும் விக்கிரமாதித்தன் கதை சாயல் கொண்டது.. அதை வைத்துக்கொண்டு காப்பி என்பது சற்று மிகைதான்.. ஆனாலும் கோர்ட் அவர் வாதத்தை ஏற்று பாலச்சந்தருக்கு அபராதம் விதித்தது

விக்கிரமாதித்தன் கதை என்பது பொதுவானது.. அதைப்பார்த்து நான் எழுதினேன்.. இனி யார் எழுதினாலும் அது என்னுடையை காப்பிதான் என எப்படி சொல்ல முடியும்?

அதை தவிர்த்து விட்டுப்பார்த்தால் , இவர் கதைகள் பல சுவையாகவே உள்ளன

இவரது கதை பாணி இயல்புவாத வகையை சார்ந்தது... பகல் கனவுகளோ , அதீத கற்பனைகளோ இல்லாமல் அனுபவத்தை அப்படி பதிவு செய்பவை அவர் கதைகள்.. பேருந்தில் சீட் கிடைக்காமை , சில்லறை தவறி விழுதல் போன்ற எளிய அனுபவங்கள் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இராது.. ஆனால் இவர் பார்வையில் அந்த சின்ன சின்ன சம்பவங்களும் கதைகளாவது சிறப்பு


இந்த எளிய சித்தரத்துக்கு நேர் மாறான உருவக கதைகளையும் எழுதியுள்ளார்

படிமங்களை சிறப்பாக பயன்படுத்த தெரிந்தவர் இவர்

1 இந்த நூற்றாண்டு சிறந்த கதைகள்  நூறு என்ற தலைப்பில் வீ அரசு தொகுத்த கதைகள் ஒரு புத்தகமாக வந்துள்ளது.. அதில் என் தாசன் எழுதிய கதை இடம்பிடித்துள்ளது .கதையின் பெயர் - அவள் அறியாள்

2 அகிலன் தொகுத்துள்ள சிறந்த கதைகளில் இவர் கதை இடம்பெற்றுள்ளது

கதையின் பெயர் -  நீலச்சிலுவை

3 1996ல் வல்லிக்கண்ணன் , ஆ சிவசுப்ரமணியம் தொகுத்து வெளிவந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இவர் கதை : சுய வதம்



எப்போதாவது வாய்ப்பு கிட்டின் இவர் எழுத்தை வாசியுங்கள்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]