Pages

Friday, April 22, 2022

இமையம் எழுதிய எங் கதெ ( நெடுங்கதை ) என் பார்வை

 

 எழுத்தாளர் இமையம் அவர்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பின்னணி கொண்டவை.

விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்பவர் , சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்பவர் என்பது உண்மை என்றாலும் இந்த அடையாளங்கள் இல்லாமல் பொதுவான மானுடம் , மனித உறவுகள் , அன்றாட வாழ்க்கை போன்றவற்றையும் இவர் எழுத்து பேசும்.

விளிம்பு நிலை  மக்களைக்குறித்த இவர் அக்கறை காரணமாக , இவர் எப்போதும் அவ்ர்களைப்பற்றியே எழுதுபவர் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது.


அப்படி இல்லாமல் தஸ்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் போல அழகான , பித்தேறிய காதல் கதைகளும் படைப்பவர்தான் இமையம்.

 நம் ஊருக்கு சூழலுக்கு தேவையான இவரது பெத்தவன் கதை ஒரு ஐரோப்பியனுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் இவரது என் கதெ என்ற  நெடுங்கதையை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அவர்களால் அதில் விரவியிருக்கும் காதலை , ஆண் பெண் உறவின் மாய கணங்களை புரிந்து கொள்ள இயலும் . 


இது எங் கதெ.பத்து வருசத்துக் கதெ.என் ரத்தம்.என் கண்ணீர்.கதெ ஆரம்பிக்கறப்போ எனக்கு வயசு முப்பத்திமூணு.கதெ முடியறப்போ நாப்பத்திமூணு. இது என்னோடது மட்டுமில்ல. கமலாவோட கதெயும்தான்.


 இதுதான் கதை ,, இதுதான் கதையின் முடிவு என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டு கதை ஆரம்பிக்கிறது.


கதை முழுக்க முழுக்க வினாயகம் என்பவரின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.

ஒருவர் பார்வையில் அதுவும் வட்டார பேச்சு வழக்கில் முழுக்கதையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதே முதலில் ஒரு பேராச்சர்யம்.


     உலகியல் பார்வையில் போதிய சாமர்த்தியம் இல்லாத , வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞந்தான் விநாயகம்.  அவ்வ்வூர் பள்ளியில் எழுத்தர் வேலையில் சேரும் கமலா மீது காதல் வயப்படுகிறான். அவள் கணவனை இழந்தவள் , இரு பெண் குழந்தைகள் .  இது தவறு  உனக்கு என ஒரு வாழ்க்கை தேவை     திரும்ணம் செய்து கொள் என பெற்றோர் சொல்வதை இவன் கேட்பதில்லை.


         அவள் பேரழகி என்பதால் ஊரே அவள் கடைக்கண்ணுக்கு காத்திருக்கிறது. ஆனால் அவளோ இவனை ஏற்கிறாள். 

அதற்கு காரணம் காதலா , காமமா , ஒரு பாதுகாப்பா , அல்லது சம்பளமற்ற வேலையாள் தேடுகிறாளோ என்பதெல்லாம் நமக்குத்தெரிவதில்லை .  காரணம் கதையில் அவளது எண்ண ஓட்ட்டங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது கதையின் மிகப்பெரிய அழகு. அவளை நியாயப்படுத்தியோ அவளை தரக்குறைவாகவோ சித்ர்கரிக்க வாய்ப்புகளை உருவாக்காமல் , கதை முழுக்க வினாயகம் பார்வையில் அவன் சொல்வதாகவே நகர்கிறது. 

  கமலா கிடைத்தது   தன் பாக்க்கியம்  , அவள் தன்னை ஏமாற்றுகிறாள் , தன்னை பயன்படுத்துகிறாள் , என அவனுக்கு அந்தந்த சூழலில் தோன்றும் எண்ணங்கள்தான் நமக்கு தெரிகின்றன. அவள் எதிர்வினைகள் , செயல்கள் நமக்கு அவன் மூலம் தெரிந்தாலும் , அவள் என்ன நினைத்து செய்கிறாள் என்பது வினாயகம் போலவே நமக்கும் புலப்படுவதில்லை.  


    மேலதிகாரி மிகவும் தொந்தரவு செய்கிறார் , எனவே சும்மா சில கொஞ்சல் குறுஞ்செய்திகள் அனுப்பினாலாவது அமைதியாக விலகி விடுவார் என நினைத்தேன் என மேலதிகாரி விவகாரம் வெடித்ததும் சொல்கிறாள். 


இது உண்மை போலவும் இருக்கிறது , உண்மை என்றால் விநாயகத்திடம் ஏன் மறைத்தாள் என்றும் அவனைப்போலவே நமக்கும்  தோன்றுகிறது ,  அவளுக்கு காசும் காமமும்தான் முக்கியம் என்றால் வினாயகத்தை விட ஆயிரம் பேர் கிடைப்பார்களே , ஏதோ ஒரு காதல் இருக்கிறதோ என்றும் தோன்றுகிற்து ( அவள் ஒரு போதும் காதல் போன்ற எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில்லை )   தன்னை காதலனின் சகோதரிகள் தேடி வந்து அவமானப்படுத்தியதைக்கூட கேலி கலந்த கிண்டலுடந்தான் சொல்கிறாள் “ இப்படி அப்படி இல்லை   செம திட்டு ஒரே கல்ல்யாண வீட்ல மூணு மைக் செட் கட்டுன மாதிரி இருந்துச்சு “ 

  அவனை சற்றும் பொருட்படுத்தாதவள் , எத்தனை நாள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தாலும் சட்டை செய்யாதவள் . அப்படிப்பட்டவள் எத்தனை நாள் கழித்து வந்தாலும் அவனை ஏற்கிறாள் .   யாரிடமும் ஏமாறாமல் கச்சிதமாக கணக்குப்போட்டு காரியம் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி  அப்படிப்படவள் , அவனை முழுமையாக நம்புவதும் , தன்னை கொல்ல வந்து இருக்கிறான் என்பது தெரியாமல் , ரத்தம் வருவதற்கு அவன் சொல்லும் லாஜிக் இல்லாத பொய்யை ( அவன் சொன்ன ஒரே பொய் )  நம்புவதும் அவளது வேறு ஒரு முகம் .  ஆனால் ஒரு போதும் அவள் தன் கணவனை மறக்கவில்லை. கணவன் இடத்தை இவனுக்கு தரவும் மாட்டாள் 

   எப்படி பலரால் நாஸ்தென்கா கதாபாத்திரத்தை மறக்க முடியாதோ அது போல இந்த கதையை படித்து முடித்தால் , கமலாவையும் மறக்க முடியாது.


  கவிதைகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட நுண்ணுண்ர்வு கொண்ட வினாயகம் கதை சொல்லும்போது நம்மிடம் நீதி கேட்கும் தொனியில் பேசுவதில்லை   ..  தன் மீதும் தவறு இருக்கலாம் என்பதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறான். 

 


பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...


நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்.

என்று தன்னிலை விளக்கம் அளிப்பவன் அவன்

கதை முழுக்க வட்டார வழக்குப் பேச்சு ரசிக்க வைக்கிறது 


இந்த விளையாட்டுக்கு நானாத்தான் போனேன் .,  அவ வேண்டாம்னுதான் சொன்னா   இது சாவுற விளையாட்டு ..  இது செகண்ட் சான்ஸ் கிடையாது


மொட்டைப்பாறையில் எம்மாம் மழை பேஞ்சி என்ன அவ காத்து நான் பஞ்சு


வாங்க போங்க  வா போ ஆகி வாடி போடி ஆச்சு..  குருத்து எல பழுத்த எலயா ஆய்டுச்சு


வெறி பிடிச்ச நாயா இருந்தாலும் உனக்குனு ஒரு நாய் இருக்கணும்


தம்பிக்கு தாழ்வாரத்துலதான் படுக்கணும்னு தலையில் எழுதி இருக்குனு அவளுக்குத் தெரியல


நான் கமலாகூட பானையும் மூடியும் போல ஆனதைப்பார்த்து ஊரே சொன்னுச்சு


அவனும் அவளும் கோழியும் கோழிக்கூண்டுமா இருந்தாங்க 


 நான் சொல்ற எதையும் ஏத்துக்காத மாதிரி இதையும் ஏத்துக்கல  விரியன் பாம்புக்கு இருக்கும் விஷத்துக்கு அதுவா பொறுப்பு


இப்ப ரெண்டு பேருக்கும்  இடையே பேச்சு வார்த்தை இல்லை... வார்த்தையாலதான் மனுஷங்க வாழறாங்க . வாழ முடியும்


     ஒரு பெண்ணின் அன்பு கிடைக்காதா ,  ஒரே ஒரு முத்தம் கிடைக்காதா என ஏங்கும் ஆண் , அவள் கிடைத்து விட்டால் அந்த சந்தோஷத்துக்கு நன்றியுடன் இருப்பதில்லை .


  அவள்: வேறு யாருடனும் பேசக்கூடாது  பேசினால் சிரித்தால் ஆசிட் வீச்சு , கத்திக்குத்து என வேறு ஒரு ஆளாக மாறி விடுகிறான்


ஆனால் வினாயகத்தின் மனதில் இருக்கும் காதலும் , அவன் படித்த நூல்களும் அவனை ஒரு காதலன் என்பதை தக்க வைக்கிறன்றன


       எனக்குக் காதல் எனும் அனுபவம் தந்தாய் . ஆண் என உணர வைத்தாய் இதற்கு மேல் என்ன... நீ யார் கூட வேணும்னாலும் இரு... எப்படி வேணும்னாலும் இரு . என நிறைவுடன் வாழ்த்து விட்டு விலகும்போது அமர் காதலர்களில் ஒருவனாக நின்று விடுகிறான்

       இமையம் எழுத்துகளில் மட்டுமல்ல....  தமிழ் நாவல்களில்  ஒரு வித்தியாசமான நாவக்ல் எங் கதெ 




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]