Pages

Thursday, June 27, 2013

நான் தர்க்காவில் பிச்சை எடுக்கும் பிச்சைக்கார நாயா? - சாருவின் எதிர்ப்பாளர் ஒருவருடன் ஓர் உரையாடல் !!

 நெட்டில் இயங்கி வருபவர்களை இரு வகைகளாக பிரிக்கலாம். சாருவை ரசிப்பவர்கள் , சாருவை திட்டுபவர்கள். யாரை எடுத்துக்கொண்டாலும் இந்த இரு பிரிவில் ஒன்றிதான் இருந்தாக வேண்டும்.

    சாருவுக்கு ஒரு புறம் பாராட்டு என்றால் ஒரு புறம் அவரை கடுமையாக எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதால் இரண்டையும் பேலன்ஸ் செய்துதான் அவர் செல்கிறார்.

அவர் ரசிகன் என்ற முறையில் என்னையும் பொருட்டாக மதித்து சிலர் அவ்வபோது திட்டி மெயில் அனுப்புவது வழக்கம். ஃபேஸ்புக்கில் திட்டி எழுதிவிட்டு , என் மேலான கவனத்துக்கு எனக்கும் லிங்க் அனுப்புவார்கள்.

தர்க்காவில் பிச்சை எடுக்கும் நாய் , ஜால்ரா அடிப்பவன் , அறிவு கெட்ட ஜென்மம் என்றெல்லாம் மெயில் வரும்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இவர்களில் சிலர் என் நண்பர்கள் ( எல்லோரும் அல்ல...சிலர் ) .   என் கருத்து பிடிக்காவிட்டாலும் நண்பர்களாக இருக்கிறார்களே என்பதில் மகிழ்ச்சியே தவிர, அந்த நட்பை பயன்படுத்தி அவர்கள் கடுமையை குறைக்க வேண்டும் என நான் எண்ணியதில்லை. நட்பு வேறு, கொள்கைகள் விருப்பங்கள் வேறு என்பது என் கொள்கை. 

ஃபேக் ஐடியில் அவர்கள் என்னை திட்டினாலும் தனிப்பட்ட முறையில் மிக அன்பாக பழக கூடிய நண்பர்களை பெற்றதை ஆச்சர்யமாகவே நினைக்கிறேன்.  எதிர் அணியில் இருப்பவனாயிற்றே என்ற தயக்கம் இன்றி , என் மேல் நம்பிக்கை வைத்து , ஃபேக் ஐடியை தவிர்த்து  தம் உண்மையான விபரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வதை நினைக்கும்போது , நானெல்லாம் அந்த அளவுக்கு வொர்த்தா என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

சில விரும்பத்தகாத சக்திகள் இணையத்தில் உலாவுவதை மறுக்க முடியாது.  மிரட்டும் நோக்கத்துடன் , அவதூறு நோக்கத்துடன் செயல்படுபவர்கள் இருக்கிறார்கள்..

ஆனால் எல்லோரையும் இப்படி நினைக்க இயலாது.. 

சாருவை தீவிரமாக விமர்சித்து வரும் ஒரு ஃபேக் ஐ டி நண்பருடம் பேசியதின் சில பகுதிகள் உங்களுக்காக... இவர் என்னையும் கடுமையாக திட்டக்கூடிய்வர். அவர் என்ன நினைத்து திட்டுகிறார்.அவர் மன ஓட்டம் என்ன என தெரிந்து கொள்ள இந்த உரையாடல்....

**********************************************************************
சாருவை பாராட்ட சொன்னால் , நீங்கள் அவரை எதற்காக பாராட்டுவீர்கள்?


அவருடைய கட்டுரைகளுக்காக, மற்றும் அவருடைய தன்னம்பிக்கை

அவர் எழுத்தில் உங்களுக்கு பிடித்த நாவல் அல்லது சிறுகதை எது?
அல்லது கட்டுரை..



இதுவரை அவருடைய நாவல்கள் படித்ததில்லை.
சிறுகதைகள் அப்படி ஒன்றும் ஞாபகம் இல்லை


நாவல்களை படிக்காமல் அவரை திட்டிவதை எப்படி நியாய்படுத்துகிறீர்கள்?

நான் அவரை திட்டுவது அவரது இரட்டை நிலைக்கு
hypocrisy


hypocrisy
Example. Coco-cola issue

Nithyananda
அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்


பாமினி திட்டிய பொழுது அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. தமிழருவி மணியன் அவரை திட்டிய போது அது அவருக்கு தவறாக தெரிந்தது

நித்தியானந்தாவை இவரது வாசகர்கள் நம்பவேண்டும் என்பதற்காக இவரது வாழ்க்கையில் நடந்த அதிசயங்களை(?) சொன்னார்

சரி..அவர் தவ்றே செய்தாலும் , அவரை மட்டும் இந்த அளவுக்கு பலரும் டார்கெட் செய்வது ஓவராக தெரியவில்லையா...

அவரை மட்டும் டார்கட் செய்கிறோம் என்று சொல்வது சரியல்ல. ஒருவேளை நாங்கள் ஒவ்வொருவரும் வேறு இயக்கங்களிலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எங்களை இங்கு மட்டுமே பார்ப்பதால் உங்களுக்கு அப்படி தெரிகிறது.

நாங்கள் அவருடையே வழியிலேயே அவரை விமர்சிக்கிறோம். இதை நாங்கள் பொழுதுபோக்காகவும் செய்கிறோம்.
  நீங்கள் பொழுதுபோக்காக செய்யலாம் . ஆனால் சிலர் வெற்று விளம்பரத்துக்காக அவரை விமர்சிப்பதை நீங்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமல்லவா?


விளம்பரத்திற்காக என் நண்பர்கள் யாரும் எதிர்க்கவில்லை . பெரும்பாலோனோர் சொந்தப் பெயரில் இல்லை


சிலர் அப்படி செய்வது உண்மைதான் .அவர்கள் செய்வது சரி என்று சொல்லவில்லை

இதை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று சொன்னதால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.

சொல்லுங்கள்

அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் என்னைப் பொருத்தவரை குப்பை.
.ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

படிப்பவர்கள் புரிந்துகொள்ள சிரமப்படவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவை
அதாவது அதைப் புரியாமல் பலமுறை படிக்கவேண்டும். பிறகு நாமாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டும்

இரண்டு வரி ஜோக்கை ஒரு ட்விஸ்ட்டாக மாற்றி கதையாக எழுதுகிறார்


அப்படிப்பார்த்தால் , படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதும் சாருவுக்கு நீங்கள் ரசிகராக இருந்திருக்க வேண்டுமே


சாருவின் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை
ஆனால் அராத்துவின் கதையை ஆஹா ஓஹோ என்று ஒருவர் சொன்னால் அவர் எப்படி சிறந்த விமர்சகர் ஆகமுடியும்



 வினோதினி. ஈழம் , டில்லி பாலியல் குற்றம் போன்றவை எல்லாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியவை.. ஆனால் உங்களது சாரு எதிர்ப்பால் , நாம் இணைந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுவது வருந்தத்தக்க்துதானே ..
அதற்கு என்ன செய்ய முடியும்.

இதில் ஈழத்திற்காக நான் குரல் கொடுத்ததில்லை. மற்ற அனைத்திலும் நான் என்னால் முடிந்த அளவிற்கு பங்கேற்றுள்ளேன்
ஈழத்தின் மீது வெறுப்பு இல்லை. எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

மற்ற விஷயங்களில் எனது நண்பர்களோடு சேர்ந்து நானும் பங்கேற்றுள்ளேன். உங்க்ளோடு இணைந்து செயல்பட முடியாதது வருந்தத்தக்கதுதான்.

****************************************************************************

Monday, June 24, 2013

புதிய ஊர்களில் மொழிப் பிரச்சினை- திராவிட இயக்கம் தவறு செய்து விட்டதா?


  நான் பெங்களூரு சென்ற முதல் சில நாட்களில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. கன்னட மொழியோ , ஹிந்தி மொழியோதான் அனைவரும் பேசுவது போல இருந்தது. சின்ன சின்ன பையன்கள் எல்லாம் பல மொழிகளிலும் பேசுவதை பார்த்து ஆச்சர்யமாக இருக்கும்.

நம் ஊரில் நமக்கு இப்படி பல மொழிகளை கற்றுத்தரவில்லையே... ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லி நம்மை படிக்க விடாமல் செய்து விட்டார்களே என வருந்தினேன்.

அதன் பின் வேலையில் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி என்பதால் மொழிச்சிக்கல் இல்லை. நண்பர்களும் தமிழ் நண்பர்கள். தமிழ் படம் ஓடும் தியேட்டர்களாக தேடி சென்று பார்ப்போம். எனவே மொழி பிரச்சினை அறவே இல்லை.

அதன் பிறகு ஆங்கிலம் இல்லாத இன்னொரு வேலையில் சேர்ந்தேன். தமிழ் யாரும் இல்லை. முழுக்க முழுக்க மண்ணின் மைந்தர்களான கன்னட சகோதரர்கள்தான்.

அவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஆங்கிலம் எல்லாம் வேலைக்காகாது.. கன்னடம் கலந்த தமிழில் பேசி எப்படியோ சொல்ல வேண்டியதை சொல்லி விடுவேன்,

ஏதோ ஒரு கணத்தில்கன்னட பேச , புரிந்து கொள்ள கை வந்து விட்டது. என் பேட்ச் நண்பன் அங்கிருந்து வட இந்தியா சென்று விட்டான்,

அவனை கொஞ்ச நாள் கழித்து பார்த்த போது, அவனது ஹிந்தியை பார்த்து அசந்து போனேன்,

ஃபேஸ் புக்கில் சிலர் , திராவிட இயக்கங்களால் ஹிந்தி கற்க முடியாமல் போய் விட்டதாகவும், அதனால் வேற்று மா நிலங்களில் வேலைக்கு செல்கையில் கஷ்டப்படுவதாகவும் எழுதுவதை பார்த்ததும் இந்த் நினைவுகள்  மனதில் தோன்றின,.

வேலை நிமித்தம் , ஜெர்மனி, ஃபிரான்ஸ் , ரஷ்யா என்றெல்லாம் செல்ல வேண்டி இருக்கலாம். எல்லா மொழிகளையும் பள்ளியிலேயே கற்பிப்பது சாத்தியமா?

சென்னையில் வட இந்திய தொழிலாளர்கள்  பலர் பணி புரிகிறார்கள். அவர்கள் எல்லாம் அவர்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்து விட்டா வந்தார்கள்?

அதிக பட்சம் இரண்டு மாதங்களில் புதிய மொழிக்கு செட் ஆகி விட முடியும். பள்ளியிலேயே கற்று கொடுத்தால் நல்லதுதான். ஆனால் யார் எந்த ஊருக்கு வேலைக்கு செல்வார்கள் என எப்படி கணிப்பது , எந்த மொழியை கற்று கொடுப்பது?

ஆக இந்த விஷயத்தில் திராவிட இயக்கத்தை பழிப்பது விபரம் இல்லாத செயல் என்றே நினைக்கிறேன்.

அந்த கால நாவல்களை பார்த்தாலே தெரியும். சமஸ்கிருதம் கலந்து எழுதுவார்கள். தமிழ் பேசுவது பெருமை என்ற நிலையை உருவாக்கியது திராவிட இயக்கம்தான்.

திராவிட இயக்கம் தன் பணியில் இருந்து திசை மாறக்கூடாது என சொல்வதுதான் சரியாக இருக்க முடியுமே தவிர , திராவிட இயக்கம் தவறு செய்து விட்டது என சொல்வது , மொழிப் பிரச்சினையை பொருத்தவரை நன்றி இல்லாத செயல் என்றே நினைக்கிறேன்.


Saturday, June 22, 2013

பக்கத்து சீட்டு இளம்பெண்ணுடன் பரவச நிமிடங்கள்- பேருந்து மகிழுந்தான அனுபவம்



திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தேன்.  அதைப் பற்றி பிறகு எழுதுவேன்.
 யாரும்  ”ஹைக்கூ”  ( ?!!@!! )  எழுதினால் , சென்னைக்கு திரும்பி வர மாட்டேன் என போகும்போதே கண்ணீர் மல்க சொல்லி இருந்தேன்..

                         யாருக்கு யார் காவல் !!!!!!!
“ உலகை காக்கும் கடவுளுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!
பாதுகாப்பாக போலீசார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
                          கேட்டது கிடைக்கவில்லை!!!!
“ கேளுங்கள் தரப்பட்டும் என்ற இயேசுவுக்கு
தேவாலாயம் கட்ட முடியவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கேட்ட நன்கொடை கிடைக்காததால் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

                         என்ன பார்வை , உந்தன் பார்வை !!! 
        மாலைக்கண் நோய்க்கு டாக்டரை பார்க்க போனேன்.
        அவர் அறிவிப்பு பலகை எரிச்சலூட்டுயதால்
        பார்க்கமலேயே திரும்பினேன்
        அறிவுப்பு பலகை : பார்வை நேரம் : காலை நேரம் 10 டூ மாலை 6

                          நம்பிக் கை வைக்காதே !!!!                 என் நண்பன் உயிரைக் காப்பாற்றுவார்
                 என்றெண்ணி டாக்டரிடம் ஓடினேன்.!!!!!!!!!!!!!!!!!!!!
                 பார்க்க முடியவில்லை.
                 மாரடைப்பால் இறந்து விட்டாராம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இந்த டைப் ஹைக்கூ கவிதைகள் எதுவும் , என் வேண்டுகோளை மதித்தோ , தற்செயலாகவோ யாரும் எழுதாததால் சென்னை திரும்பினேன்.

ஓர் இடத்தில் டீ சாப்பிட இறங்கி விட்டு பேருந்தில் ஏறினால் , பக்கத்து சீட்டு இளம்பெண் என் சீட்டில் கால் நீட்டியவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த அழகான பெண்ணின் மோன நிலையை கலைக்க விரும்பாதபோதும் , மனதை கல்லாக்கி கொண்டு காலை எடுக்க சொன்னேன்.

அவர் காலை எடுத்து என் சீட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சப்போர்ட்டிவ் கம்பி மீது காலை வைத்து கொண்டார்..

      ஒரு கவியுலக சூறாவளி என்ற மரியாதை இல்லாமல் என்னை நோக்கி காலை நீட்டி இருந்தது மானப்பிரச்சினையாக இருந்தாலும், ஓர் அனுகூலமும் இருந்தது.

காலை எடுத்து விட்டு அவர் சீட்டில் அவர் சாய்ந்து உட்கார்ந்தால் , நான் என் தலையை திருப்பி பார்த்தால்தான் அவரை பார்க்க முடியும். ஆனால் இப்படி அவர் பக்கவாட்டில் திரும்பி காலை நீட்டி இருப்பதால் , அவர் முகம் என்னை நோக்கி இருந்தது. எனவே கலைக்கண்ணோட்டத்துடன் அவரை ரசிப்பது எளிதாக இருந்தது.

இருக்கைகளின் இரு பக்க வரிசைகளும் வெகு அருகில் இருந்ததால் , அவர் முகம் எனக்கு வெகு அருகில் இருந்தது. தள்ளி உட்காரவோ , காலை எடுக்கவோ முயலாமல் அவர் அப்படியே இருந்தது குழப்பமான இருந்தது. கள்ளம்கபடமில்லாமல் இப்படி செய்கிறாரா அல்லது சீண்டுகிறாரா என தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கணத்தில் புன்னகைத்து கொண்டோம்.  யார் முதலில் புன்னகைத்தது என்பது கூட தெரியவில்லை. அதன்பின் மெல்ல பேச ஆரம்பித்து கிரிவலம், ஆன்மீகம், நாத்திகம் , இயற்கையுடன் இயைந்த வாழ்வு என பேச்சு சென்றது.

 நான் கோயம்பேடு வரை செல்லாமல் முதலிலேயே இறங்க வேண்டி இருந்தது. ஆனால் வேலை இல்லாவிட்டாலும் , கோயம்பேடுவரை சென்று விடலாமா என யோசித்து கொண்டு இருந்தேன்.

என் மொபைல் நம்பர் கேட்டார்.

” இது ஆஃபீஸ் எண்.. என் நம்பர் தொலைந்து விட்டது. மெயில் ஐடி சொல்லுங்க்ள்.. நம்பர் வந்ததும் அனுப்புகிறேன் “ என சொன்னேன். அவர் சொன்ன மெயில் ஐடியை காதில் போட்டு கொள்ளாமல் பேருந்தை விட்டு இறங்கி சென்றேன்.

போன் பேச்சு , எஸ் எம் எஸ், மெயில் , சந்திப்பு , விவாதங்கள் , கருத்து மோதல் , கருத்து  வேறுபாடு என கசப்புடன் என்றாவது பிரிவதை விட , ஓர் இனிய பயணத்தில் சந்தித்த இனிய பெண்ணாகவே அவரை என்றென்றும் நினைவில் கொள்ள இப்படி ஒரு முடிவெடுக்கதாகி விட்டது.

அப்படி ஒரு அழகிய முகம்.

Tuesday, June 18, 2013

மரணத்தை முன் அறிவித்தல் - மறக்க முடியாத மகத்தான சினிமா


     
தமிழ் ஸ்டுடியோவும் , பெரியார் ஊடகத்துறையும்  இணைந்து பெரியார் திடலில் நல்ல படங்களை திரையிட்டு வந்தனர். இந்த தொடரின் நிறைவு திரைப்படமாக கனசெம்பா குதிரயேனேறி என்ற கன்னடப் படம் திரையிடப்பட்டது.

  காதல்தான் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை என்பது போல எடுக்கப்படும் தமிழ் படங்களும் ( காதலும் பிரச்சினைதான் என்பது வேறு விஷ்யம் ) , உலகை காக்கும் அமெரிக்கர்கள் என்பது போல எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களும் போரடித்து விட்டதால் , வேற்று மொழி அயல்னாட்டு படங்களை மட்டுமே தற்போது பார்த்து வருகிறேன்.

கன்னட படங்கள் மீது ஆர்வம் உண்டு என்றாலும்  சென்னையில் பார்க்கும் வாய்ப்பு குறைவு. எனவே இந்த திரையிடல் அறிவிப்பு வந்ததும் ஆர்வமாக காத்திருக்கலானேன்.

மாலை 5.30க்கு படம் என்றால் 5 மணிக்கே சென்று விட்டேன். அப்போது யாரும் வந்திருக்கவில்லை. பெரியார் திடலை சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன்.

 கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் வர ஆரம்பித்தனர். வந்தவர்கள் அனைவரும் சினிமா ரசனை மிகுந்தவர்கள் என்பதால் , படம் முடிந்ததும் நிறைவு நாள் நிகழ்ச்சி கலக்கலாக இருக்கும் என நினைத்து கொண்டேன்.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஆர்கனைசர்களுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் போல இருந்தது.
திரைப்படங்களில் சப் டைட்டில் போடுவது சினிமா அனுபவத்தை பாதிக்கிறது என்ப்து என் எண்ணம். சினிமா என்பது வசனம் மட்டும் அன்று. நடிப்பு , கேமிரா, இசை என்றெல்லாம் இருக்கிறது.

ஒரு அட்டகாசமான காட்சியையோ , முக பாவத்தையோ கவனிக்காமல் , சப் டைட்டிலை எழுத்து கூட்டி படித்து கொண்டிருப்பது எனக்கு சரி என தோன்றுவதில்லை. சினிமா பார்க்கும் அனுபவத்தை இழந்து நாவல் பார்க்கும் அனுபவமே கிடைக்கும்.

வீட்டில் இப்படி பார்ப்பது வேறு விஷ்யம். சப்டைட்டிலுடன் ஒரு முறை , சப் டைட்டில் இல்லாமல் ஒரு முறை என பார்க்கலாம். அல்லது சில காட்சிகளை தேர்ந்தெடுத்து சப் டைட்டில் இல்லாமல் பார்க்கலாம். ஆனால் இது போன்ற திரையிடல்களில் சப் டைட்டில் இல்லாமல் போடுவதே உசிதம்.

எனவே படம் சப் டைட்டில் இல்லாமல் ஓட தொடங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே கர்னாடக கிராமம் ஒன்றுக்கு அனைவரும் சென்று விட்டது போன்ற ஓர் உணர்வு.

இறப்பு ஏற்படுவதை தன் கனவு மூலம் முன் கூட்டியே அறியும் சக்தி கொண்ட ஓர் ஏழை வெட்டியான். மற்றும் அவன் மனைவி.

இவர்களைப்பற்றிய கதை..

இந்த எளிய மக்களைப்பற்றி வெகு சில கதாபாத்திரங்களை வைத்து , கிராமத்தில் நடக்கும் கதைதான். ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

குறிப்பிட்ட கனவு வந்தால் இறப்பு நிகழும் என்பது ஐதீகம். அது போன்ற ஒரு கனவு அவனுக்கு வருகிறது.

அந்த ஊரில் பணக்கார முதியவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவரைப்பார்க்க அவர் மகன் ,மரு மகள் ,பேத்தி வருகின்றனர்.  அவர் மருமகளுக்கோ , பேத்திக்கோ அவர் அருகே செல்வதே பிடிக்கவில்லை. உண்மையில் அவர்கள் அவரைப்பார்க்க வரவில்லை. சொத்து விஷ்யமாக வந்து இருக்கிறார்கள்.


இந்த நிலையில்தான் அவனுக்கு கனவு வருகிறது. அந்த கிழ்வன் இறந்ததுதான் கனவாக வந்ததாக நினைத்து அவன் வீடு தேடி வருகிறான், இறுதி சடங்குக்ளைப் பற்றி பேச வரும் அவனை அவர்கள் விரோதமாக பார்க்கிறார்கள்.. யாரும் சாகவில்லை. இறுதி நிகழ்ச்சியெல்லாம் வேண்டாம் என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.

என்ன சுவாரஸ்யம் என்றால் , உண்மையில் அந்த கிழவர் இறந்து விட்டார், காலம் காலமாக இருந்து வரும் கனவு ஐதீகம் இப்போதும் பலித்து விட்டது, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இறப்பை மறைக்கிறார்கள். என்ன பெரிய காரணம்.. சொத்து விவகாரம்தான்,  காசுக்காக பெற்ற அப்பன் உடல் அழுகி நாற்றம் எடுத்தாலும் பரவாயில்லை என நினைக்கும் மகன்.

அந்த அப்பாவி ஏழையின் எளிய நம்பிக்கை... நாகரீகம் பொருந்திய அறிவாளிகளின் தந்திரம் என்ற இரு துருவங்களுக்கு இடையேயான மாபெரும் இடைவெளி நம் கண் முன் விரிகிறது.


அவனது நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருக்கலாம், அந்த மூட நம்பிக்கை அவனை ஏழ்மையில் உழலச்செய்யலாம். இதெல்லாம் தவறுதான், ஆனால் இதற்கு தீர்வு , இந்த நம்பிக்கையை சிதைப்பதுதானா... ஒருவர் தவறை எதிர்க்கிறார் என்றால் அவர் நல்லவர் என்று சொல்ல முடியாது , அவர் அதை விட பெரிய தவறின் பிரதினிதியாக இருக்க கூடும்.

சரி..இவர்கள் அப்படி தந்திரமாக நடந்து கொள்கிறார்களே..அவர்களை பார்த்து வளரும் குழந்தை எப்படி வளரும்?

ஒரு ஹைக்கூ படித்து இருப்பீர்கள்//

ஓர் எறும்பை கொன்றேன்..
என் மூன்று குழந்தைகள்
பார்ப்பதை உணர்ந்தேன் 


அவன் ஏழை..கிழிந்த ஆடை. ஆடை முழுக்க ஓட்டைகள். எந்த ஓட்டையில் தலையை விடுவது , எதில் கால் விடுவது என்பது தெரியாத அளவுக்கு ஓட்டை. ஆனால் அவனை அந்த வறுமை கண்ணீர் விட வைக்கவில்லை. தன் கனவு பொய்யாக போய் விட்டதே என்பதுதான் அவனை வருந்த வைக்கிறது,

ஆனால் இன்னொரு குடும்பம் .இன்னொரு வாழ்க்கை..புத்திசாலிகள் .அசட்டு நம்பிக்கைகள் ஏதும் இல்லாதவர்கள்/ ஆனால் ஒருவர் மீது ஒருவர் அன்பு இல்லாதவர்கள். அந்த குழந்தையும் யார் மீதும் அக்கறையோ அன்போ இல்லாமல்தான் வளரப்போகிறது என்பது பூடகமாக சொல்லப்பட்டு விடுகிறது

இதை சொல்லிய விதம் அற்புதம். அலுப்பூட்டாத திரைக்கதை. ஒவ்வொருவர் கோணத்தில் கதை சொல்லும் பாங்கு அருமை...அசட்டு நகைச்சுவைகளும், எதிர்பார திருப்பங்களும்தான் படத்தை விறு விறுப்பாக்கும் என நினைக்கும் தமிழ் இயக்குனர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.

அந்த பணக்கார வீடு, ஏழை குடிசை, ஒப்பனை இல்லா கிராமம் என கண் முன் நிறுத்தும் கேமரா , இசை என அனைத்திலும் சிறப்பாக அமைந்து இருக்கும் இந்த படத்தை அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.




   

Wednesday, June 12, 2013

கனவெனும் குதிரையில் ஏறி- அட்டகாசமான சினிமா முற்றிலும் இலவசமாக


   பெங்களூருவில் இருப்பவர்கள் தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி , தெலுங்கு , கன்னடா என பல மொழிப்படங்களை பார்க்க முடியும், ஆனால் சென்னையில் இருப்பவர்களுக்கு இந்த  வாய்ப்பு இல்லை.

இங்கு தமிழ் படங்கள்தான் பெரும்பாலும் பார்க்க இயலும், பெரிய அளவில் ஹிட் ஆன ஒரு சில வேறு மொழி திரைப்படங்க்ளை மட்டுமே இங்கு பார்க்க முடிகிறது.

நான் பெங்களூருவில் இருந்த போதுதான் பல்வேறு மொழி மொழிப்படங்களை பார்க்கும் ஆர்வம் வந்தது. கன்னட படங்களை ரசிக்க ஆரம்பித்ததுதான் அப்போதுதான்.

பெங்களூரு செல்லும் நம் ஆட்கள் அங்கும் நம் ஊர் வாழ்க்கைதான் வாழ்வார்கள் . நானும் அங்கு சென்ற புதிதில் அப்படித்தான் இருந்தேன். ஆனால் நல்ல வேளையாக , கூட இருந்த தமிழ் நண்பர்களைவிட்டு பிரிந்த பின் , கன்னட கலாச்சாரம் , அவர்கள் வாழ்க்கை , கலை , உணவு முறை , சினிமா என பழகினேன்.

ஆனால் சென்னையில் கன்னட படங்கள் பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் ஒரு நல் வாய்ப்பாக , கனவெனும் குதிரையில் ஏறி  ( கனசெம்ப்போ குதிரெயனேறி )என்ற கவித்துவமான தலைப்பு கொண்ட அற்புதமான கன்னட படம் சென்னையில் திரையிடப்படுகிறது,,,அதுவும் இலவசமாக என்ற தகவல் கிடைத்தது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டை போற்றும் விதமாக தமிழ் ஸ்டுடியோவும் , பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையும் இணைந்து மாற்றம் தந்த இந்திய சினிமா என்ற தலைப்பில் திரையிடல் நிகழ்ச்சியை கடந்த ஒரு வருடமாக நடத்தின,

இந்த மாதத்துடன் இந்த நிகழ்வு நிறைவடைகிறது, இதில் முத்தாய்ப்பாக திரையிடப்படும் படம்தான் கனவெனும் குதிரையில் ஏறி.

மிக அற்புதமான பார்க்க வேண்டிய படம்.

பலர் சிடியில் பார்த்து இருக்க கூடும். ஆனால் கூட்டதினருடன் சேர்ந்து பார்க்கும்போது , அதுவும் தமிழ் மக்கள் கூட்டத்தில் அமர்ந்து பார்க்கும் அனுபவம் அருமையாக இருக்கும்

15.06.2013 மாலை 5.30க்கு பெரியார் திடலில் இந்த நிகழ்வு நடக்கிறது.

சென்னைவாசிகளுக்கு நன்கு தெரிந்த இடம்தான். வெளியூர் மக்களும் சுலபமாக வரலாம். ரயில் , பேருந்து என எதிலும் வரலாம்,

இந்த படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,. நம்பிக்கை, மூட நம்பிக்கை , மெய், மாயை , பொய் தோற்றம் , உண்மையில் இருக்கும் பொய், பொய்யில் இருக்கும் உண்மை என சில நாட்களாவது உங்களை யோசிக்க வைக்கு வைத்து விடும் இந்த படம்.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

Sunday, June 9, 2013

பரபர விவாதம் , வெளி நடப்பு - தமிழ் ஸ்டுடியோ அருண் குறும்பட நிகழ்வின் சுவாரஸ்யங்கள்


சாஃப்ட்வேரில் ஒரு பெரிய நிறுவனத்தில் அதுவும் அமெரிக்காவில் பணி புரிவதுதான் பெரும்பாலான தமிழர்களின் கனவு. ஆனால் தன் இலட்சியத்துக்காக அமெரிக்க வாய்ப்புகளைக்கூட தூக்கி எறிந்த தமிழ் ஸ்டுடியோ அருண் எனக்கு ஆச்சர்யமான மனிதராக தெரிகிறார் , அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு.

அவர் லட்சியம் சினிமா,  சினிமா என்றால் வழக்கமாக எல்லோர் மனதிலும் தோன்றும் கமர்சியல் படங்கள் அல்ல. உண்மையான ஒரு மாற்று சினிமா என்பது ஓர் இயக்கமாக மாற வேண்டும் என்ற ஆசையில் பல பணிகள் ஆற்றி வருகிறார்.

அந்த பணிகளில் ஒன்றாக , நல்ல படங்களை அனைவரும் சேர்ந்து பார்த்தும் ஒரு வாய்ப்பை அளிக்கும் வகையில் குறும்பட வட்டம் சார்பில் நல்ல படங்களை திரையிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதம் ஓர் உலகத்திரைப்படமும் , ஒரு தமிழ் குறும்படமும் திரையிடப்பட்டது. எனக்கும் ஃபேஸ்புக்கில் இன்வைட் அனுப்பினார்.

 நல்ல படங்களில் எனக்கு ஆர்வம் உண்டு என்பதால் , என் வருகையை உறுதி செய்தேன்.

சன்க்கிழமை. மாலை எழும்பூரில் இருக்கும் ஜீவன ஜோதி அரங்கத்தில் நிகழ்ச்சி நடந்தது.

அதே நாளில் சாருவின் நிகழ்ச்சி ஒன்று நடப்பது பிறகுதான் தெரிய வந்தது. சாருவின் நிகழ்ச்சிகள் எதையும் தவற விடக்கூடாது என நினைப்பவன் நான்,

ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதாக சொல்லி விட்டு போகாமல் இருந்தால் , நடத்துபவர்களுக்கு சில நடைமுறை சிக்கலகள் ஏற்படும். இதை அரசோ அல்லது வேறு பன்னாட்டு அமைப்போ நடத்தவில்லை.

ஆர்வமுள்ள சிலர் தம் சொந்த முயற்சியால் நடத்துகிறார்கள்.  எத்தனைபேர் வருகிறார்கள் என கணக்கிட்டு ஏற்பாடுகளை செய்வார்கள்.  வருவதாக சொன்னவர்கள்  வராமல் போனால் ஏற்பாடுகள் வீணாகும், மேலும் சில கஷ்டங்கள் ஏற்படும்,

எனவே சொன்ன நேரத்துக்கு ஜீவன ஜோதி அரங்கம் சென்றேன்.

நண்பர்கள் கிருபா, பிரியமுடம் துரோகி ஆகியோரும் வந்து இருந்தனர். இதுல் கிருபாவுடன் பேசினான். ப்ரியாவுடன் பிறகு பேசலாம் என நினைத்தேன். அதுதான் தவறாக போய் விட்டது. ஏன் என பிறகு சொல்கிறேன்.

முதலில் yesterday என்ற ஆஃப்ரிக்கப்படம் திரையிடப்பட்டது.

அதன் பின் 14/ 6 என்ற தமிழ் குறும்படம் ( இயக்கம் : பாலாஜி சுப்ரமணியம் )

இந்த இரு படங்களையும் பற்றி தனியாக எழுத இருக்கிறேன்.

குறும்படங்களை யூ ட்யூபிலோ , சிடியிலோ பார்ப்பதை விட கூட்டத்துடன் சேர்ந்து பார்ப்பது அலாதியான அனுபவம்.,

குறும்படங்கள் என்றில்லை. பொதுவாகவே எல்லா படங்களுமே கூட்டத்தினருடன் பார்ப்பதற்காகத்தான் எடுக்கப்படுகின்றன என்றே நினைக்கிறேன்.

படம் முடிந்ததும் படத்தைப்பற்றிய விவாதம் .சூட்டோடு சூடாக விவாதம் என்பதால் விவாதங்களில் அனல் பறந்தது.

படம் பார்த்து முடித்து , ரிலாக்சாக வீட்டில் அமர்ந்தோ அல்லது அலுவலக ஏசியில் அமர்ந்தோ விமர்சனம் செய்து , ஆன்லைன் விவாதம் செய்வது வேறு.

படம் பார்த்து முடித்தவுடன் உடனடியாக அங்கேயே விவாதிப்பது வேறு.

சினிமாவை எப்ப்படி பார்ப்பது , எப்படி விமர்சிப்பது என்பதை சக பார்வையாள நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதே போல , ஒரு படத்தை எப்படி பார்க்க கூடாது, எப்படி விமர்சிக்க கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

திரையுலக பிதாமகர் எடிட்டர் லெனின் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை.

அவர் வருகையும் பேச்சும் மட்டும் அல்ல , அவர் மவுனமும்கூட மேன்மக்கள் மேன்மக்களே என்று காட்டியது.

அவர் வருவார், ஃபார்மலாக பேசி செல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ நீங்கள் எல்லாம் பேசுங்கள். நான் அதை கவனிக்க விரும்புகிறேன், அதன் பின் பேசுகிறேன் என்றார்.

பல கூட்டங்களில் பார்த்து இருக்கிறேன். சில பேச்சாளர்கள் தாம் பேசுவதை மட்டுமே யோசித்து கொண்டு இருப்பார்கள்.  தம் பேச்சு முடிந்ததும் கிளம்பி விடுவார்கள்.

ஆனால் லெனினோ மற்றவர்களை பேச வைத்து கேட்டார். மற்றவர்கள் என்றால் வி ஐ பிகளோ தொழில் முறை பேச்சாளர்களோ அல்ல. வெவ்வெறு துறையை சார்ந்த சினிமா ரசிகர்கள்.

அதன் பின் தன் பேச்சில் , முன்னால் பேசியவர்கள் பேச்சை நினைவு படுத்தி பேசினார். அந்த அளவுக்கு மற்றவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மாமனிதனாக காட்சி தந்தார் என்றால் , அவர் பேச்சில் தான் எவ்வளவு பெரிய தொழில் வல்லுனர் என காட்டினார்.

இசை , ஒலி, ஒளி , வசனம் என பலவற்றை ஒரு பேராசியர் வகுப்பு எடுப்பது போல விளக்கினார்.
சினிமா துறையில் அவருக்கு இருக்கும் PASSION கண்டிப்பாக அங்கிருந்த அனைவருக்கும் inspiration ஆக இருந்து  இருக்கும்.

அவருக்கு முன் பேசியவர்கள் பேச்சு அனைத்தையும் நான் ரசித்தேன். சிலர் விமர்சனாக பேசினார்கள் , சிலர் ரசிகனாக பேசினார்கள், நான் இரண்டையும் ரசித்தேன்.

ஒரு படத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என நாம் சொல்ல முடியாது. பார்வையாளன் அவன் நுண்ணுணர்வு, வாசிப்பு, ரசனை அடிப்படையில் புரிந்து கொண்டு விமர்சிப்பான். இது இயல்பு. எனவே ஒரு பார்வையாளனாக நான் அனைத்து பார்வைகளையும் ரசித்தேன்.

ஆனால் நண்பர் ப்ரியமுடன் துரோகியோ லேசாக டென்ஷன் ஆகிக்கொண்டு வந்தார்.

இதில் இன்னொரு மேட்டர் இருக்கிறது, வழக்கமாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் மாடரேட்டர் ரோலை எடுத்து கொள்வார்கள். இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றினால் , சரி தவறு என்பதற்குள் போகாமல் சமரசம் செய்து வைப்பார்கள். ஓகே பாஸ்... நீங்க சொல்வது ஒரு விதத்தில் சரி.. அவர் சொல்வதும் சரி....   புலவர்களுக்கிடையே சச்சரவு இருக்கலாம்.. அது சண்டையாகி விடக்கூடாது என பேசி நடு நிலையை நிலை நாட்டுவார்கள்.

ஆனால் அருண் இது போன்ற சமரசவாதி இல்லை என்பதால் , கறாராக விவாதத்தை கொண்டு செல்ல விரும்புவார்.

அப்படி இருந்தும் சிலரது பேச்சுகள் நண்பர் துரோகியை டென்ஷன் ஆக்கி கொண்டு இருந்தன.

என்னை பொறுதவரை ஒரே படம், பலருக்க்கு பல விதமாக தெரிவது சுவாரஸ்யமாக இருந்தது.

சிலர் கருத்துகளை பாருங்கள்.


***************************************************

இது எயிட்ஸ் பற்றிய படம். ஆஃப்ரிக்காவில் எயிட்ஸ் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.  அப்படி இருக்கையில் எயிட்ஸ் பற்றி அவர்களுக்கு தெரியாது என்பது போல காட்டி இருப்பது செயற்கையாக இருக்கிறது

************************************************

தமிழ் படமான மிருகம் படத்தை நினைவு படுத்தியது. ஆனால் அதை விட இந்த படம் நேர்த்தியாக இருந்தது.  ஒவ்வொரு ஷாட்டும் அருமை. புதிதாக நகரத்துக்கு செல்லும்போது நிழல்க்ள் மட்டும் காட்டப்படும். அதேபோல புழுதி காட்சி,  வீட்டின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சி எல்லாம் அருமை. கிராமத்தில் ஆண்களே இல்லை என்பது நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

***************************

ஆப்ரிக்காவில் விழிப்புணர்வு இல்லை என்பதை குறையாக சொல்ல முடியாது. ஒரு வேளை இந்த படத்தின் காலம் , எயிட்ஸ் வர ஆரம்பித்த கால கட்டமாக இருக்கலாம் அல்லவா

படம் அருமை...படத்தின் பெயர் யெஸ்டர்டே... ஆனால் என்னை பொறுதவரை இந்த படம் யெஸ்டெர்டெ மட்டும் அல்ல...  Forever

***************************

தமிழ் நாட்டில் என்ன விழிப்புணர்வு இருக்கிறது. என் நண்பன் ஒருவன் இதேபோல பாதிக்கப்பட்டான், இந்த படத்தில் வருவது போலத்தான் உண்மையில் நடந்து கொண்டனர், மிகவும் சிரமப்பட்டோம். அவன் இறந்தபோது தூக்கி செல்ல நான்கு பேர் கூட கிடைக்கவில்லை. எனவே படம் செயற்கை என சொல்வதை ஏற்க இயலாது. பெண்களை அடித்தல் , அடிமையாக வைத்து இருத்தல் போன்றவை உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை படம் காட்சி படுத்தி இருக்கிறது

*********************************************

என்  tommorokkalil மறக்க முடியாத படம் yesterday

**************************************

இது எயிட்ஸ் பற்றிய படம் என தோன்றவில்லை. பெண்ணின் மன உறுதியைப்பற்றிய படம்.

**********************************

வாழ்க்கை எவ்வளவு வலி மிகுந்தது என்பதை படம் சொல்கிறது. வலியை மட்டும் சொல்லாமல் அன்பு மிகுந்த டீச்சர், பக்கத்து வீட்டு பெண், உதவும் வழிப்போக்கர்கள் என பாசிட்டிவாகவும் சொல்கிறது

*******************************

பெண்ணின் பெருந்தன்மை, வீரம் , மன்னிக்கும் குணம் இவற்றையே படம் சொல்கிறது. அந்த குழந்தை கேட்கும் கேள்விகளில் வாழ்வின் மீதான நம்பிக்கை பளிச்சிடுகிறது. தன் கணவனுக்காக அவள் தன்னந்தனியாக அமைக்கும் வீடு , அவளது பழைய வீட்டை விட அற்புதமாக உள்ளது.அதில் அவள் அன்பு தெரிகிறது

**********************************


இந்த எல்லா கருத்துகளையும் நான் ரசித்தேன்.  ஆனால் இதை எயிட்ஸ் விழுப்புணர்வு படமாக நினைத்துக்கொண்டு , சிலர் பேசியதை துரோகி ரசிக்கவில்லை. ஆனால் அடுத்து லெனின் பேச இருப்பதால் மவுனமாக இருந்தார்.

பின் லெனின் பேசினார்.


**********************************
லெனின்

என்னை திரையுலக ஜாம்பவான் என அறிமுகப்படுத்தினார்கள்.  நான் என்னை பெரிய ஆள் என நினைப்பது இல்லை. இதெல்லாம் சும்மா ஃபார்மலான வார்த்தைகள். நான் வேலை செய்யும் படங்களில் இப்படிப்பட்ட வசனம் வந்தால் வெட்டி எறிந்து விடுவேன் ( அரங்கில் கைதட்டல் , சிரிப்பு )

உண்மையில் ஜாம்பவான்கள் எல்லாம் இப்போது திணறுகிறார்கள். புதிய ஆட்கள்தான் ஜொலிக்கிறார்கள். அவர்கள் பெறும் வெற்றிகளை பாராட்ட மனம் இல்லாமல் இந்த ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்.  தாம் செய்ய முடியாததை புதியவர்கள் செய்கிறார்களே என்ற பொறாமை ( கைதட்டல்)

அதே சிந்தனை , வழக்கமான ஷாட் என எடுத்தால் ரசிகன் எப்படி பார்ப்பான், எனக்குதான் வேறு வழியில்லை. தொழில் நிமித்தம் பார்க்கிறேன்.தேவை இல்லாததை எடிட் செய்கிறேன். மீண்டும் மீண்டும் அப்படியே எடுத்தால் என்ன செய்வது?

படம் எடுக்க கற்பது போல விமர்சனத்தையும் கற்க வேண்டும்.

படத்தை அப்படி எடுத்து இருக்கலாமே..இப்படி எடுத்து இருக்கலாமே என சொல்வது விமர்சனம் அல்ல. எடுக்கப்பட்டு பார்வைக்கு வந்துள்ள படத்தின் அடிப்படையிலேயே விமர்சனம் அமைய வேண்டும்.

இங்கு பேசிய சிலர் நன்றாக பேசினார்கள். ஒருவர் ஒரே வரியில் பேசி விட்டு போனார். நன்றாக இருந்தது.

என்னை பொருத்தவரை எயிய்ட்ஸ், விழிப்புணர்வு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

தன் குழந்தை படிக்க வேண்டும். அதுவரை தான் உயிரோடு இருக்க வேண்டும் என நினைக்கிறாளே அந்த பெண்...அதுதான் இந்த படத்தின் ஜீவன்.

படம் எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்..எயிட்ஸ் எல்லாம் இல்லை. ஒரு லாங்க் ஷாட் ..தூரத்தில் புள்ளியாக அந்த பெண்.

எவ்வளவோ உணர்வுகளை இது சொல்லி விடுகிறது.

இங்கு திரையிடப்பட்ட தமிழ் குறும்படத்தின் ஆரம்ப காட்சியை ஒப்பிட்டு பாருங்கள்/

குறையாக சொல்லவில்லை. நன்றாக எடுத்து இருக்கிறார்.

ஆனால் பொதுவான தமிழ் திரைப்பட சூழலை சொல்ல வேண்டி இருக்கிறது.
நம் ஆட்களுக்கு ஒலி உணர்வே இல்லை.

அந்த படத்தில் ஒலி இயற்கையாக அமைய வேண்டும் என்பதற்கு எவ்வளவு பிரயத்தனம் எடுத்து இருக்கிறார்கள் என பார்த்தோம்.

 நம் ஊரில் ஒலிக்கும் இசைக்கும் வித்தியாசம் தெரியாமல் பணியாற்றுகிறார்கள்/ இரவு விழித்து வேலை செய்வதையே பெரிய சாதனையாக நினைக்கிறார்கள்.

இங்கு இயற்கையான ஒலியே இல்லை. எல்லாம் அவரசத்தில் செய்யப்படும் டப்பிங்தான்.  தமிழ் , தமிழுணர்வு என பேசுகிறோம் ஆனால் எந்த நடிகைக்கும் தமிழ் தெரியாது.

டெக்னாலஜி வளர்ந்து விட்டதே தவிர எண்ட் பிராடக்ட் தரம் வளரவில்லை.

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. எதுவாக இருந்தாலும் இப்படி தைரியமாக சொல்ல வேண்டும். சொல்ல வேண்டிய இடத்தில் ,மவுனமாக இருந்து விட்டு வெளியே போய் வீரம் காட்ட கூடாது,.

அனைவருக்கும் நன்றி

*********************************************

அவர் பேசி முடித்ததும் , குறும்படம் குறித்த விவாதம் தொடங்கியது.

அதற்கு முன் யெஸ்டர்டே படத்தை குறித்தும் , விமர்சனங்கள் குறித்தும் அருண் பேசினார்.

கதை நிகழும் ஊரின் புவியியல் அமைப்பை காட்சி படித்தியது. ஆரஞ்சு பழத்தை வைத்து ஏழ்மையை காட்டியது போன்றவற்றை சொன்னார்.

மேலும் பேசுகையில்..

“ இந்த படம் நம்மை பாதித்தது.. ஆனால் அழ வைக்க முயற்சி செய்யவில்லை. நம் படங்கள் ரசிகனை அழ வைப்பதையே வெற்றி என நினைக்கின்றன. அதே போல நம் படங்களில் அதிகமாக ஷாட்களை குறைவான நேரத்தில் வைப்பதை திறமை என நினைக்கின்றன. யெஸ்டர்டே படத்தின் ஆரம்ப காட்சி போன்ற லாங்க் ஷாட், நீண்ட காட்சி , தமிழில் வந்ததே இல்லை “ என்றார்.

அதன் பின் விவாதம் நடந்தது.

ரத்த தானம் பற்றிய படம். பார்வையாளனுக்கு படம் சுவாரஸ்யமாக இருந்ததான்.. இயக்குனர் தோற்றுவிக்க நினைத்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்பட்டதா என அல்சப்பட்டது

ஆனால் விவாதம் சூடுபிடிக்க ஆரம்பிக்க , கொஞ்சம் திசை மாறியது.

கதானாயகனின் மதம் ,  அதன் நுண்ணரசியல் , ரத்த தானத்தில் இருக்கும் டெக்னிக்கல் விஷ்யங்கள்., அமெரிக்க கலாச்சாரம் , இந்திய கலாச்சாரம் என ஒரு மார்க்கமாக விவாதம் செல்லவே, நண்பர் துரோகி டென்ஷனாகி வெளி நடப்பு செய்து விட்டார்.

அவர் போயிருக்க தேவையில்லை என்பது என் கருத்து.

உணர்வுகளை பேச வேண்டிய விமர்சனத்தில் தகவல் பிழைகள் ,  நுண்ணரசியல் என பேசுவது தவறு என அவர் நினைத்து இருக்கலாம்.

ஆனால் ரசிகர்கள் என்றால் எல்லா வகையினரும்தான் இருப்பார்கள்.. எல்லோரயும்தான் இயக்குனர் திருப்தி செய்தாக வேண்டும். எல்லோரையும் திருப்தி செய்ய முடியாவிட்டாலும் , பெரும்பாலானோரை திருப்தி செய்தால்தான் படம் ஓடும்.

பிரியா போன்ற சில எலைட் ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்க முடியாது.



ஆக, சினிமாவை மட்டும் அல்ல..  பல வகை ரசிப்புத்தன்மையை உணரவும் இந்த  நிகழ்வு உதவியது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே..


இந்த இரு திரைப்படங்களைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..

Friday, June 7, 2013

மனுஷ்யபுத்திரனின் பொன்மொழிகள் கவிதைகளாகுமா? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் உரையாடல்


     நண்பர் ராஜராஜனுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் பயங்கர படிப்பாளி.. நானோ துடைப்பாளி, அதிலும் கவிதை , இசை போன்றவை எனக்கு  பிடிபடுவதில்லை.

எனவே அவருக்கு பிடித்த கவிதை ஒன்றை சொல்ல சொன்னேன்.

அவர் சொன்னார். “ தோல்விகளை வேதனையாக நினைக்காதே,,  அவை சாதனைகள் செய்யும் முன் உனக்கு வைக்கப்படும் சோதனைகள் “ என்றார்.

அவர் சொன்ன பொன்மொழி எனக்கு பிடித்து இருந்தது,,

சூப்பர் பாஸ். சரி கவிதை சொல்லுங்க என்றேன்.

அட முட்டாளே என்பது போல என்னை பார்த்து, இது மனுஷ்யபுத்திரன் எழுதிய அருமையான கவிதை என்றார்

கவிதை மாதிரி தெரியலீங்க்ளே என பரிதாபமாக சொன்னேன்.,

இதை மேலிருந்து கீழாக படியுங்கள்...கவிதையாக தெரியும் என்றார்.

எண்ட்டர் கீ புண்ணியத்தில் மேலிரிந்து கீழாக மாற்றினேன்

தோல்விகளை 
வேதனையாக 
நினைக்காதே,,  
அவை 
சாதனைகள் 
செய்யும் 
முன் 
உனக்கு 
வைக்கப்படும்
 சோதனைகள்.

- மனுஷ்ய புத்திரன்


அப்படியும் எனக்கு அது கவிதையாக தெரியவில்லை.. பொன்மொழியாக தெரிகிறது என்றேன்,
கடுப்பான அவர் , சரி நல்ல கவிதை ஒன்றை நீங்கள்தான் எழுதிக்காட்டுங்களேன் ,,பார்ப்போம் என்றார்.

நான் கவிதையை கண்டேனா, கழுதையை கண்டேனா,,,  

இது சரிப்படாது என அவருக்கு பை சொல்லி விட்டு நண்பரும் , கவிஞருமான றியாஸ் குரானாவுடன் கவிதை குறித்து கொஞ்சம் பேசினன்.

*****************************************************

பிச்சைக்காரன்

கவிதை சார்ந்த உரையாடல் முக நூலில் அதிகம் இல்லை என நினைக்கிறீர்களா

றியாஸ் குரானா

இலக்கியம் சார்ந்த உரையாடலே இல்லை.
பொன்மொழிகள் மாதிரி, திடீரெனத் தோண்றி ஏதாவது சொல்லிவிட்டு மறைந்துவிடும் புத்திஜீவிகளே இங்கு அதிகமிருப்பதுபோல் தெரிகிறது.

நாவல் குறித்தாவது அவ்வபோது பேசுகிறார்கள்...கவிதை என்ற வடிவம் நம் மக்களுக்கு இன்னும் பரிச்சயம் ஆகவில்லை

ஆமாம், பேசுகிறார்கள். ஒத்துக்கொள்கிறேன். புதிதாக ஏதும் பேசுவதுபோல தெரியவில்லையே...
எழுத்துக்களில் குறித்தவகையினத்தை மாத்திரம் இலக்கியமாக கருதுவது தொடங்கி,,, இலக்கியம் குறித்து ஏதும் பேசுவதாக காணவில்லை. அல்லது, அவைகளை நான் சந்திக்கவில்லை...

அட்லீஸ்ட் நாவல் குறித்த அறிமுகங்கள் , சினிமா குறித்த அறிமுகங்கள் நடக்கின்றன.ஆனால் கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ அறிமுகங்கள் இல்லை
லத்தீன் அமெரிக்க நாவல்கள் குறித்து ஒரு சராசரி முக நூல் பயனாளனுக்கு தெரியும்.அகிரா குரசாவோ,கிம் கி டுக் என தெரியும்..ஆனால் ஒரு கவிஞர பெயர் கூட தெரியாது

அறிமுகங்கள் அவசியமானவைதான். அதைப் புரிந்துகொள்வதற்கான விமர்சன முறைமைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. அது சிறந்தது, அல்லது சிறப்பற்றது என தமது நீதியை அப்பிரதிகளின் மீது திணிக்கும் வாசிப்பு முறைகளினுாடாகவே, அறிமுகங்களையும் உள்வாங்க வேண்டியிருக்கிறது. இது, நமது பார்வையாளர்கள் எதிர்கொள்ளும் துரதிஷ்டமான ஒரு நிலைதானே....


அதேநேரம், இங்கு உருவாகியிருக்கும் நவீனத்திற்குப் பிறகான, கவிதைகள் குறித்த சரியான பேச்சுக்களும் இல்லை. கவனிப்புக்களுமில்லை. இதுவும் இன்றைய நிலையில் முக்கியமான குற்றச்ாட்டுத்தானே.....

ஆம்
உண்மையில் கவிதையில் என்ன நடக்கிறது என்பது ..சாதாரண வாசகனுக்கும்தெரிய வேண்டும்

விமர்சன முறைமைகளை அறிமுகப்படுத்தி, விவாதிக்காதவரை எந்த இலக்கியப் பிரதியை தமிழ் சந்தித்தாலும், அது எதற்கும் உதவப்போவதில்லை.
நாவல் எழுதிகள், கவிதை புனைவாளர்கள் உருவாகியிருக்குமளவிற்கு, பிரதி வாசிப்பாளர்கள் இங்கு இல்லை. அந்த இடைவெளி, தமிழின் இலக்கியப் பிரதிகளின் மீது (முக்கிய தற்கால) வசை பாடவும் புறமொதுக்கவுமே இடந்தரக்கூடியது.
அதே நேரம், மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பிரதிகள் முக்கியமானவையாக கொண்டாடப்படும் மோசமான ஒரு நிலைக்கும் இட்டுச் செல்லும். ஏன் சென்றுவிட்டது என்றே கூறலாம்.


பின் நவீன கருத்து நிலை நாவல் என்று ஏதுமில்லை என்றே நினை்கிறேன். பின்நவீன வாசிப்பு இருக்கிறது. அதுவும் பல்வகையானது...கவிதை குறித்து ஓரளவு உரையாடியிருக்கிறேன். நான்லீனியர், மற்றும் பின்நவீன வாசிப்புக்கு அனுக்கமானவர்கள் கவிதைப் பிரதிகளை ஓரளவு நெருங்க முடியும் என்றே கருதுகிறேன்....
தனிப்பட்ட கடமை என ஏதுமில்லை. ஆயினும், நீங்கள் சொல்லுவதில் அர்த்தமுண்டு. ஆனால், புனைவெழுத்தாளனாக (கவி) இருந்து கொண்டு அதைச் செய்தால் எனது கவிதைகளை முதன்மைப்படுத்துவதற்காக செய்வதாகவே கடைசியில் குற்றம் சுமத்தப்படுவேன். அதை எதிர்கொள்ள முடியதவனாக இருக்கிறேன்...



பொதுவெளியின் அனைத்துப் பார்வையாளர்களையும் எதிரில் வைத்து இலக்கியப் பிரதிகளை கொண்டுவருவதில்லை. அதுபோல, பெரும்பான்மை பார்வையாளர்களை கருத்தில் கொள்வதுமில்லை. அப்படிச் செய்தால் அது தவறும் அல்ல. ஆனால், முற்றிலும் வேறுபட்ட பார்வையாளர்களுக்காகவே நான் எழுதுகிறேன். அல்லது, கவிதைக்கு ஏலவே உள்ள பார்வையாளர்களிலிருந்து முற்றிலும் புதிய பார்வையாளர்களை உருவாக்குவதே எனது கவிதையின் பணி. பழக்கப்பட்டுப் போன பார்வையாளர்களுக்காக ஒரு பொருளை உற்பத்தி செய்வது புனைவாக இருக்காது.

குட் குட்

புத்திரன் போல பலர் வடை சுட்டபடி இருக்கிறார்கள். எனது பொருளுக்கு பெயரிடுவது கடினம். அதன் சுவையை இப்போதுதான் அறிய வேண்டி வருகிறது. ஆயினும், இது ஒரு ஏற்க்கக்கூடிய முன்வைப்பு அல்ல. இன்றைய பிரதிகளை புரிந்துகொள்ளத்தக்க வாசிப்பு முறைகளை கண்டடைய வேண்டும். அது விவாதிப்பதினுாடாகவே சாத்தியப்படக்கூடியது. விவாதிப்பதற்கு இங்கு யார் முன்வருகிறார்கள்?

இப்போதிய நிலையில் விவாதிக்கும் நிலையில் தமிழ் சூழல் இல்லை.கற்கும் நிலையில் உள்ளது..ஆனால் அதுகூட தெரியாமல் வெறும் வசையை விவாதம் என நினைக்கிறார்கள்

கற்கும் நிலை என்பது, மிகக் கடும் கோபத்திலிருந்து எழும் ஒரு முன்வைப்பு. ஏலவே, நிறை அம்சங்கள் தமிழில் இருக்கிறது. பல கருத்துநிலைகளைத் தமிழ் சந்தித்துமிருக்கிறது. அதைத் தொகுத்து, அவைகளிலிருந்து புதிய ஒரு வாசிப்பு முறையை கண்டடையவில்லை என்பதே இன்றைய நிலைக்கு காரணம்.
பெரும்பான்மையான ஆதரவு என்பதே ஒரு இலக்கியப் பிரதியின் வெற்றியாகவும் பாவிக்கப்படுவதே இங்கு பெரும் அபத்தமானது.


பொன்மொழிகளை கவிதை என சொல்லி ஏமாற்றுகிறார்களே...உங்கள் கருத்து?

நமது தமிழ் எவ்வளவு விசயங்களைத் தாங்கிவிட்டது. இதைத்தாங்குவதொன்றும் பெரிய விசயமா என்ன?

ஹா ஹா

மபு, இதை கவிதையாக கருதவில்லை. அவரின் எந்த புத்தகத்திலும் இந்த பொன்மொழி இல்லை.

ஹஹஹா

அவரை குற்றம் சொன்னால் , தமிழனாக இருந்து கொண்டு தமிழனை குற்றம் சொல்கிறாயே என்கிறார்களே

விஷயம் தெரியாதவர்களோடு உரையாடும் கலையை கற்றுவிடாதது நமது தவறுதான். அவர்கள் சொல்வது சரி. நம்மை குற்றம் சொல்லாது போனால்தான் நாம் கவலைப்பட வேண்டும். அவர்கள்  விஷ்யம் தெரிந்தவர்கள் என்றாகிவிடும்.

ம்ம்ம்

பட்டியல் கவிதை , விடுகதை கவிதை , பொன்மொழி கவிதை என்றெல்லாம் பல வித கவிதைகள் பெருகுவது ஆரோக்கியமானதா தீங்கானதா

அவைகள் இருப்பது ஒரு வகை ஆரோக்கியமானதா என்றால் இல்லை என்பதுதான் எனது உடனடியான பதில். ஆனால், அவை இருப்பது ஜனநாயனமானது. அதற்குரிய தேவையும் இருக்கிறதே.



அப்படி இருந்தால் ஓக்க்கே..ஆனால் பொன்மொழி , விடுகதை , பட்டியல் போன்றவற்றை கவிதை என சொன்னால் எப்படி?

நாம் சொல்வதில்லை. அவர்கள்தான் அவைகளை கவிதை என அழைக்கிறார்கள்.

சராசரி வாசகனும் அதை கவிதை என நினைப்பதுதானே பிரச்சினை..காலப்போக்கில் அவன் கவிஞன் என நிலைப்பெற்று விடுகிறார்னே

அறிஞர் என்றால் அண்ணாதான் என நமது மக்கள் நினைக்கவில்லையா? அப்படித்தான். அது பொது வெளி. அதற்கு மாற்றமாக சிந்திப்பவர்கள் அவைகளை ஏற்பதில்லை. அதுபோலதான் கவிஞன் என்ற அடையாளமும்.

  இவர்களை விமர்சிப்பது ஓகே,,,  எழுத்துலக பிதாமகர் நகுலனை விமர்சித்தது குறித்து?

நான் நகுலனின் அனைத்து கவிதைகள் குறித்தும் சொல்லவில்லை. சில கவிதைகள் குறித்த பேசினேன். அவருடைய கவிதைச் செயல் ஒருவகை உத்தி கொண்டதுதான்.

உத்தி என்பது கவிதைக்கு எதிரானதா

ஒரு பிரதியை கவிதையாக ஒன்றிலிருந்து வேறுபடத்தக்க ஒன்றாக மாற்ற பயன்படுத்தும் வழிமுறை. உத்தி என்பது கவிதையை தடங்காட்டாது. ஆனால், மற்ற கவிதைகளிலிருந்து வேறுபடுத்தி புரிந்துகொள்ள உதவும்.

அவர் கவிதை ஒரு வகை உத்தி கொண்டது என்பது பாராட்டா... விமர்சனமா

ஒருவகை உத்தி கொண்டது என்பது பாராட்டு. ஒரு உத்தி கொண்டது என்பது விமர்சனம். இரண்டையும் ஒரு வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.



ஒருவகை உத்தி என்பதினுாடாக, மற்றவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபட்ட தனியான கவிதையை முயற்சித்திருக்கிறார் என்பது பாராட்டாகவும். அந்த ஒரேயொரு உத்தியை மாத்திரமே நம்பி காலாகாலத்திற்கும் கவிதை எழுதினார். ஆக, ஒரு கவிதையையே இவ்வளவு காலமாக எழுதினார். தனது இரண்டாவது கவிதையை எழுதவில்லை என்பது விமர்சனம். ஒரே வரியில்.

\

***********************************

இலக்கணத்தை மீறி எழுதப்படும் புதுக்கவிதைக்ளுக்கு வரைமுறைகள் தேவையா, சுஜாதாவின் பிற்போக்கு அடையாளங்களை மறைத்து அவரைக்காக்க , அவாளை மிஞ்சும் வகைகள் சிலர் செயல்படுவது குறித்து...
‘அடுத்த பகுதியில்

Wednesday, June 5, 2013

குட்டிப்புலி - சினிமாவில் சாதீய அடையாளங்கள் தவறா?


குட்டிப்புலி படம் பார்த்தேன். என்னை அந்த படம் பெரிதாக இம்ப்ரஸ் செய்யவில்லை.
ஆனால் பலருக்கு ( வலைப்பூ எழுதாதவர்களுக்கு )  படம் பிடித்து இருப்பதை உணர முடிந்தது.

இந்த படத்தின் கதை அம்சம் குறித்த பொதுவான விமர்சனங்களில் , எனக்கு உடன்பாடு உண்டு.

ஆனால் சிலர் இந்த படத்தின் சாதி அடையாளங்களை விமர்சிப்பதுதான் கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

இதற்கு முன்பு தேவர் மகன், சின்ன கவுண்டர் என பல படங்கள் வெளிவந்துள்ளன. இப்போதும் வந்து கொண்டு இருக்கின்றன,

இதில் சசிகுமாரை மட்டும் சாதி வெறியர் , திரையுலக ராமதாஸ் என ஏன் பழிக்கிறார்கள் என தெரியவில்லை.

சமீபத்தில் ட்ஜான்கோ அன்செயிண்ட் என ஒரு படம் வெளிவந்தது. அதில் எல்லாம் இன அடையாளங்களை வெளிப்படையாக காட்டித்தான் எடுத்து இருக்கிறார்கள்.

இதற்காக அங்கு யாரும் சண்டைக்கு வரவில்லை.

ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவு செய்வது போல எடுப்பது தவறுதான், அவதூறு செய்யும் நோக்கத்துடன் பொய்யான தகவல் கொடுப்பதும் தவறுதான்.

ஆனால் சில பகுதிகளில் மக்கள் ஜாதீய அடையாளங்களுடன் வாழ்கிறார்கள் என்பதை பதிவு செய்வது எப்படி தவறாகும் என்பது தெரியவில்லை.

இந்த படத்தின் அதீதப் வன்முறை காட்சிகள், பழங்கால காதல் பாணி போன்றவை எரிச்சலூட்டுகின்றன என்பது வேறு விஷ்யம்.

யாருக்கும் எந்த அடையாளமும் இல்லாமல் , பணக்காரன் என்றால் வில்லன் ஏழைக் கதானாயகன் என்ற பழைய பாணி படங்கள் போலவோ , அல்லது வேறு கிரக மனிதர்களால் பாதிப்பு போன்ற அமெரிக்க படஙகள் போலவோ எடுப்பதுதான் எல்லோருக்கும் நல்லது என தோன்றுகிறது.

Tuesday, June 4, 2013

சுஜாதா மனைவி பேட்டியும், எல்லை கடந்த பிராமணீயமும்


  நான் சுஜாதா எழுத்துகளை இன்று நேற்றல்ல. வெகு நாட்களாகவே படித்து கொண்டு இருக்கிறேன். இன்று பலர் எழுத்துகளை படிக்கும்போது , என்னைப்ப்போலவே பலரும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

யார் என்ன சொன்னாலும் அவர் எழுத்துகள் மீதான மரியாதை குறையப்போவதில்லை. அவர் நூல்க்ளை அவ்வப்போது வாங்குவதும் குறையப்போவதில்லை.


எழுத்தாளர் என்பதற்கு அப்பாற்பட்டு , அவர் ஒரு மனிதராக எப்படி வாழ்ந்தார் என்பதை ஓரளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது அவர் மனைவியின் பேட்டி.

அந்த பேட்டியை விட அதற்கான நம் மக்களின் எதிர்வினைதான் சுவாரஸ்யமாக இருந்தது.

      அவர் மனைவியின் முக்கிய குற்றச்சாட்டு என்ன?


” நான் கொஞ்சம் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். பெண்கள் படிக்க வேண்டும் , உலக அறிவு பெற்றிருக்க வேண்டும்  என நினைக்கும் குடும்பம்.  என் அம்மாவுக்கு பிரத்தியேகமாக ஆங்கிலோ இந்திய டீச்சரை நியமித்து ஆங்கிலம் கற்பித்தார்கள்.

ஆனால் கல்யாணத்துக்கு பின் முற்றிலும் எதிர்மாறான சூழல். சுஜாதா ஜாதி உணர்வு மிக்க பிற்போக்காளாராக இருந்தார். நான் புத்தகம் படிப்பது அவருக்கு பிடிக்காது.  நான் அவருக்கு அடங்கியே இருக்க வேண்டும் என நினைத்தார்.

இப்படிப்பட்ட ஒருவருடன் வாழ பிடிக்காமல் கதறி இருக்கிறேன். பிறந்த வீட்டுக்கே வந்து விடுகிறேன் என அம்மாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் அன்றைய சூழலின் என்னால் தைரியமாக வெளியே வர முடியவில்லை. அதுவே இன்றைய சூழலாக இருந்தால் , அம்மாவிடம் புலம்பாமல் , நானே முடிவெடுத்து அவரை விட்டு விலகி இருப்பேன்”

இப்படி சொல்லி இருக்கிறார் அவர்.

நினைவில் கொள்ளுங்கள் , அவர் சொன்னதன் வீரியத்தை , கடுமையை குறைத்துதான் பேட்டியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவே இப்படி இருக்கிறது.

இதை தமிழ் சமுதாயம் எப்படி பார்க்க போகிறது என ஒரு பார்வையாளனாக கவனித்தேன்.

எல்லோருமே சொல்லி வைத்தது போல ஒரே மாதிரிதான் எதிர்வினை ஆற்றி இருந்தார்கள்.

ஜாதி உணர்வு, பெண்ணை அடிமையாக நினைத்தல் போன்றவற்றை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

வெளியே வர நினைத்து முடியாமல் போனதால் , காம்ப்ரமைஸ் ஆகி வாழ ஆரம்பித்தார் அல்லவா. அப்போது ஏற்பட்ட சில ஏமாற்றங்களை சொல்லி இருந்தார் அவர். குடும்பத்தை கவனிப்பதில்லை என்பது போன்ற சராசரி மனைவியனரின் ஏமாற்றங்கள்.

 நம் ஆட்கள் இதை மட்டும் பிடித்து கொண்டு விட்டார்கள்.

ஜாதி வெறி , பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை மறந்து விட்டார்கள்.

” அவங்க என்ன பெரிசா சொல்லிட்டாங்க... குடும்பத்தை கவனிக்கல... சேலை வாங்கி கொடுக்கல... இது எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டுதானே “

“ ஆம்பிளைனா கொஞ்சம் பிசியாத்தான் இருப்பான்,., பொம்பளைதான் அட்ஜ்ஸ்ட் செஞ்சு போகணும்”

“ ஓர் எழுத்தாளனுக்காக கொஞ்சம் விட்டு கொடுப்பதில் தவறில்லை”

“ பாவம்,, அவர் மனைவி சோகம் , வெறுமை காரணமாக இப்படி பேசுகிறார்”

இப்படி எல்லாம் மெயின் மேட்டருக்கு சம்பந்தம் இல்லாமல் பேசி அவரை “ காப்பாற்றுகிறார்களாம்”

ஆனால் இதிலுமே வலுவான வாதம் இல்லை என்கிறார் ஞாநி

அவர் சொல்லி இருப்பதாவது



இப்படி இருப்பதுதானே சகஜமானது என்று சராசரி ஆண் மனம் நினைக்கிறது. இதை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதானே பெண்ணுக்கும் சகஜமானது என்று ஆண் மனம் நினைக்கிறது. ஏற்க மறுக்கும் பெண் மனம் அதை வெளிப்படுத்தும்போது ஆண்கள் அதிர்ச்சியடைகிறார்கள். தங்கள் நிலையை நியாயப்படுத்த பல உத்திகளை கையாளுகிறார்கள். எழுத்தாளனும் சராசரி ஆண்தான் என்று ஒப்புக் கொள்ள மறுத்து சராசரிப் பெண்ணாக இருக்க மறுக்கும் எழுத்தாளன் மனைவியை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதுவது அதில் ஓர் உத்தி.




ஆனால் இவருமே கூட மெயின் மேட்டரை தொடவில்லை.

ஒரு பத்திரிக்கையில் சுஜாதாவிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். கேள்வியும் சுஜாதாவின் பதிலும்
” இருபது வயதில் கம்யூனிசம் பேசாதவனும் இல்லை.  நாற்பதில் ஆன்மீகம் பேசாதவனும் இல்லை என்கிறார்களே? “
“ இருக்கிறேனே “



கடவுளை நம்புவது நம்பாதது அவரவர் உரிமை.. ஆனால் தன்னை முற்போக்குவாதியாக காட்டிகொள்ளும் பொருட்டு , கடவுளை நம்பாதவர் போல அந்த காலத்தில் முன் நிறுத்தி வந்தார், ஒரு கட்டத்தில் பிராம்ண சங்க கூட்டம் , ஆன்மீகம் என்றெல்லாம் வெளிப்படையாக இறங்கினார்,

ஆனால் ஆரம்பம் முதலே பிற்போக்குவாதியாகவும் ஜாதி உணர்வு மிக்கவராகவும் இருந்தார் என்கிறார் திருமதி சுஜாதா;

ஒரு நல்ல எழுத்தாளன் , நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஒரு நல்ல மனிதன் , ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை.

அது வேறு. இது வேறு.

யார் வந்து என்ன சொன்னாலும் சுஜாதாவின் எழுத்து சாதனைகளை யாரும் மறைக்க முடியாது.

உண்மைகளை மறைத்துதான் சுஜாதாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் உண்மையில் சுஜாதாவிற்கு அவப்பெயரையை சேர்க்கிறார்கள்...

ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி சுஜாதாவை “ காப்பாற்ற “ முயல்பவர்கள் , பிராமணர்கள் மட்டும் அல்ல.. பிராமணர்கள் அல்லாதவர்களும் கூட.

இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களில் பலர் முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்கின்றனர்.

ஆக , பிராமணீயம் என்பது பிராமண சமுதாயத்தின் எல்லை கடந்து பரவுவதையே இந்த எதிர் வினைகள் காட்டுகின்றன.




Sunday, June 2, 2013

உழைப்பை, கருணையை போதித்த நபிகள் நாயகம்- அழகு தமிழில் அருமையான புத்தகம்


    இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள பல நூல்கள் கிடைக்கின்றன. இணையத்திலும் தேவையான தகவல் தர பல நல்ல குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன.

குர் ஆன் வசனத்தை தினம் தோறும் ஒவ்வொன்றாக தரும் வலைத்தளங்கள் உள்ளன.

ஆனால் இவ்வளவு இருந்தும் என்னை போன்றவர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்பது வலம்புரி ஜானின் “ நாயகம் எங்கள் தாயகம் “ என்ற நூலைப்படிக்கையில் தெரிந்தது.

நபிகள் நாயகம் ஓர் இறைத்தூதர் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியுமே தவிர அவர் இளமை பருவம் , இளமையில் சந்தித்த சோதனைகள். திருமணம் , அவரது தொழில் , போர்கள் , குர் ஆன் அருளப்பட்டது , அவர் குடும்பம், தியாகம் என எத்தனையோ பல விஷ்யங்களை இந்த நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

    அதீதமாக உணர்ச்சி வசப்படுவது நம் இந்திய பண்பு, ஒரு கிரிக்கெட் பிளேயர் சென்சுரி அடித்தால் அவரை கிரிக்கெட் கடவுளாக்குவோம். நடிகனுக்கு கோயில் கட்டுவோம்.

நபிகள் மட்டும் உறுதியான வழிகாட்டுதல் காட்டாமல் போய் இருந்தால் , கண்டிப்பாக அவரையும் நம் ஆட்கள் கடவுளாக்கி அவரது அடிப்படை கொள்கைகளுக்கே ஊறு விளைவித்து இருப்பார்கள். அப்படி நடக்காமல் பார்த்து கொண்டது அவரது சிறப்புகளில் ஒன்றாகும்.

காரணம் அவர் வாழ்க்கையை படிக்க படிக்க அவர் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்திய மனப்பான்மை கொண்ட ஒருவர் மனதில் இந்த ஈர்ப்பு அவர் மீது பக்தியாக மாறும் வாய்ப்பு 100% உண்டு,

இஸ்லாமை பொருத்தவரை அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். நபி ஓர் இறைத்தூதர். அவரை உயிரினும் மேலாக மதிக்கலாம். ஆனால் கடவுளாக்கி விடக்கூடாது.

இந்த நிலை இன்று வரை உறுதியாக கடைபிடிக்கபடுகிறது என்றால் அதற்கு காரணம் நபிகள் போட்டு சென்ற பாதைதான்,

இவரது வாழ்க்கை வரலாறு வெறும் ஆன்மீகம் என்பதாக மட்டும் இருக்காது. குடும்பம் , வியாபாரம் , பிரச்சினைகளை தீர்க்கும் சாதுர்யம் , கருணை, மன்னித்தல், சமூக நீதி ,பெண்ணுரிமை , உழைப்புக்கு மரியாதை என பல அம்சங்களும் கலந்த ஒரு விறு விறுப்ப்பான நாவல் போல இருக்கும்.

அதிலும் இந்த நூல் அழகு தமிழில் , கவிதை நடையில் இருப்பதால்  , எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி பரபர என செல்கிறது.

சில சாம்பிள்களை பாருங்கள்..

*********************************************\

ஹலீமா வந்த போது

மக்கா நகரத்துக்குள்

விரல்கள் இருந்தன.

வீணைகள் இல்லை

----------------------

பாலைவனக் கப்பல்கள்

ஈச்ச மரங்களை பிடுங்கி

மணல் வெளி முழுதும்

இரங்கற் கவிதை இழைத்தன
மறைந்தாள் ஆமினா

------------------------------------

சில இளைஞர்கள்

பனைமரங்களை விட உயரமாக வளர்ந்தார்கள். ஆனால்

தென்னை மரங்களை விட கோணலாகி விட்டார்கள்.

இவர்கள் மத்தியில்

நபிகள் நாயகம்

ஆல மரமாய் அணி வகுத்தார்கள்

-----------------------

அம்சா என்ற வாணிபர்
நபிகளிடம்
குறித்த இடத்துக்கு வருவதாக சொன்னார்.

சொன்னதை மறந்து போனார்

மூன்று நாள் கழித்து நினைவு வந்து

பதறி அடித்து ஓடினார்.

விழிப் புருவங்கள் வியப்பால் வளைந்தன.

மூன்று நாட்களாக அதே இடத்தில்

முகமது என்ற தேயாத நிலவு

தேங்கி கிடந்தது

--------------------------------------


கதீஜா-

கைகால் முளைத்த கனவு

மண்ணில் தெரிந்த

மதுர நிலவு ..


-------------------------


நாணல்கள் நடுவில் நாதஸ்வரம் போல

நிமிர்ந்து நின்றார் நபிகள் நாயக்ம்

----------------------

வேரினை தொடர்ந்து செல்லும்

நீரினை போல அண்ணல்

வானவர் ஓத ஓத

வண்ணமாய் ஓதினார்கள்

-----------------------------
தீபத்தை அணைக்க வந்த சூறாவளி

இஸ்லாத்தை

தீப்பந்தமாக ஆக்கியது

----------------------

ஒட்டகத்தில் பால் கறப்பது முதல்

ஒட்டடை அடிப்பது வரை

நபிகளே செய்தார்

**************************************

வல்லினமும்

மெல்லினமும்கூட தள்ளிவைத்த

இந்த இடையினத்தை

மெய்யெழுத்தாய்

உத்தம நபி மாற்றினார்

--------------------------

தீர்க்க தரிசிக்ளுக்கு

பன்னீர் மரங்களின்

பச்சை நிழலா பந்தல் அமைத்தது

கற்பூர நெருப்பல்லவா

களம் அமைத்தது

-------------------------

மைல்கல்லும்
கடவுளாகும் நாட்டில்கூட
நபிகள் இறைவனாக நகரவில்லை
இது நாயனின் ஏற்பாடா
இல்லை
நாயன்வழி நபிகள்
நட்டுவைத்த நோன்பா

*******************************************************************


இப்படி நபிகள் நாயகம் அவர்களின் உன்னதமான வாழ்க்கையை அழகு தமிழில் படிப்பது சுகமாக இருக்கிறது.

கதீஜா, பாத்திமா,. அபூபக்கர் என பலரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது


மத நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட நபிகள் நாயகத்தின் வரலாறை தெரிந்து கொள்வது அவசியம். மன்னிப்பு , கருணை போன்றவைதான் அவர் செய்தியாக இருந்தது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் , பூமியே சொர்க்கம் ஆகிவிடும்...

--------------------------------------------------

நாயகம் எங்கள் தாயகம் - நழுவ விடக்கூடாத நூல்

******************************************

படைப்பு - வலம்புரி ஜான்

ஆசாத் பதிப்பகம்





Saturday, June 1, 2013

எழுத்தாளர் சுஜாதாவின் ஜாதி உணர்வும் , பெரியாரின் தீர்க்க தரிசனமும்


” எழுத்தாளர் சுஜாதாவுக்கு பெண்கள் புத்தகம் படித்தால் பிடிக்காது ”

“ கடைசி வரை ஓர் அக்ரஹாரத்து சிறுவன் மன நிலையிலேயே இருந்தார் “

” அவருடன் வாழப்பிடிக்காமல் என் அம்மாவிடம் கதறியிருக்கிறேன். ஆனால் அன்றைய நிலையில் வேறு வழியில்லாமல் அவருடன் வாழ்ந்தேன். இன்றைய கால கட்டமாக இருந்திருந்தால் அவரை தூக்கி எறிந்து இருப்பேன் “

இப்படி எல்லாம் சுஜாதாவின் மனைவி பேட்டி அளித்துள்ளார்.

ஓர் எழுத்தாளனை அவன் எழுத்தை வைத்து மட்டுமே விமர்சிக்க வேண்டும்.

அவன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நமக்கு கவலை இல்லை. அதனால் சுஜாதாவைப்பற்றிய , திறமையை பற்றிய நம் மதிப்பீடு இந்த ஒரு பேட்டியால் மாறிவிடப்போவதில்லை.

ஆனால் பெரியார் சொன்ன ஒரு விஷ்யம் சமுதாயம் சம்பதப்பட்டது . அதை மட்டும் பார்ப்பது அவசியம்.

“ பார்ப்பானுக்கு எந்த கொள்கையும் கிடையாது. எது லாபமோ அதை செய்வது மட்டுமே அவன் கொள்கை. நாளைக்கே அசைவம் சாப்பிடுவதுதான் லாபம் என்ற நிலை வந்தால் , அசைவம் சாப்பிட ஆரம்பிப்பான். அது மட்டுமல்ல. மீனின் நடுத்துண்டு தனக்குத்தான் தரப்பட வேண்டும் என்ற ஒரு புதிய ஆச்சாரத்தை உருவாக்கி கொள்வான் “ என்கிறார் பெரியார்.

மனதளவில் பிற்போக்கானவர்களாக இருந்தாலும் , பெண் விடுதலை , நாத்திகம் போன்றவை ஃபேஷனாக இருந்தால் , அதிலும் புகுந்து அவர்களே முன்னணியில் இருப்பதை கொஞ்சம் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.

அவாள் தலைமையில்தான் பெண் உரிமை , நாத்திகம் , சினிமா , இலக்கியம் என எல்லாவற்றையும் தம் கைக்குள் எப்படியோ கொண்டு வந்து விடுகிறார்கள்.

 வெகு குறைவாக எண்ணிகையில் இருக்கும் பிராமணர்களா உங்கள் எதிரிகள் . இதில் லாஜிக்கே இல்லையே என அண்ணாவிடம் கேட்டார்கள்.

எங்களுக்கு பிராமணர்கள் எதிரிகள் அல்ல.. பிராமணீயமே எதிரி என்றார் அவர்.

இந்த பிராமணீயம்தான் அவர்களுக்கு எல்லா துறையிலும் ஆதிக்கத்தை தருகிறது என்றார் அவர்.

ஒரு பிற்போக்கு மனிதராக வாழ்ந்த சுஜாதா , தமிழ் எழுத்தின் அடையாளமாக கொஞ்ச நாட்கள் இருந்தது இதையே நினைவு படுத்தியது.

 நானும் சுஜாதா ரசிகன் என்பதை கொஞ்சம் வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்.