Tuesday, November 11, 2014

ரஜினி பட வாய்ப்பை மறுத்த லெனின் - மிக்சர் போஸ்ட்

த கிட் என்ற சார்லி சாப்ளின் படம் பார்த்தேன் . சாலையில் நடந்து வருவார் . மக்கள் பொறுப்பின்றி மாடியில் இருந்து குப்பைகளை கீழே எறிந்தவண்ணம் இருப்பார்கள் . லாகவமாக அதிலிருந்து தப்பி நடந்து வரும்போது தரையில் ஒரு குழந்தையை பார்ப்பார் . உடனே சட் என நிமிர்ந்து மாடி வீடுகளை பார்ப்பார் . அதில் ஆயிரம் அர்த்தங்கள் . நானெல்லாம் படம் எடுத்தால் மவுனப்படம்தான் எடுப்பேன்

______________________________________________________________________--
நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன் .சில மணி நேரங்கள் இருந்தேன் . அலுப்பூட்டும் டிவி நிகழ்ச்சிகள் .அங்கிருந்த குட்டி பையன் பொறுமையின்றி சானல் மாற்றிக்கொண்டிருந்தான். என்னிடமிருந்த சாப்ளினின் கிட் படத்தை கொடுத்து போட சொன்னேன் . எல்லோருமே ரசித்து சிரித்து பார்த்தார்கள் . குழந்தையை குப்பை தொட்டியில் பார்த்து அவர் திகைப்பதும் பிறகு மாடிவீடுகளை அண்ணாந்து பார்ப்பதும் எனக்கு பிடித்த காட்சி . அனைவரும் அதை ரசித்ததை ஆச்சர்யமாக பார்த்தேன் . கடவுள் அனுப்பிய குழந்தையோ என அவர் நினைப்பதாக அந்த குட்டி பையன் டீகன்ஸ்ட்ரக்ட் செய்தது மகிழ்ச்சி அளித்தது
_________________________________________________________________________

சிலருக்கு அமைதியான சூழலில்தான் படிக்க முடியும் . நானெல்லாம் இரைச்சலுக்கு நடுவில் படிப்பவன் . பாட புத்தகமென்றாலும் சரி , பலான புத்தகமென்றாலும் சரி . ஒண்டே பாஸ் வாங்கி பிராட்வேயிலிருந்து கேளம்பாக்கம் போன்ற நீண்ட தூர பஸ்சில் ஏறி படிப்பது என் இயல்பு . ஆனால் இந்த யுக்தி மற்ற ஊர்களில் பயன்படுவதில்லை . ரெண்டு பக்கம் படிப்பதற்குள் செல்லும் இடம் வந்து தொலைத்து விடுகிறது

_____________________________________________________________

அவள் பார்வை என்னை ஊடுருவி துளைத்து சென்றது. ஒருவன் , தன் உள்ளூர உறைந்த ரகசியத்தை , பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவதுபோல , அவள் பார்வை என்னை விட்டு அகன்றது
-ங்கொய்யால , எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் ! !

_________________________________________________
trust அடிப்பரையில் வேலை நடந்தால் செலவு பல மடங்கு குறையும்... நேரம் ஏராளமாக மிச்சம் ஆகும் என்கிறார் Stephen covey . உதாரணமாக கை எழுத்து , ஒப்பந்த பந்திரங்கள் இல்லாமல் இருவர் வெறும் நம்பிக்கை அடிப்படையில் பிசினஸ் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... தொழில் நுட்பம் ஓரளவு இதை சாத்தியமாக்குகிறது என கருதுகிறேன்... டிக்கட் வாங்குவது , அதை செக் செய்வது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகிறது.... முன்பெல்லாம் டிக்கட் தொலைந்து விட்டால் எவ்வளவு பெரிய பிரச்சனை,...மொபைலில் மெசேஜ் காட்டினால் போதும் , பின் என் ஆர் நம்பர் சொன்னால் போதும் என பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று , எதுவும் கேட்காமல் , நம் வார்த்தையை நம்பும் நிலை வந்து இருக்கிறது... இது வரவேற்கத்தக்கது

____________________________________________________________

அவனை காணோம் . அவன் எங்கே சென்றான் என தெரியாது .அவனுக்கு தெரியுமா என்பதும் தெரியாது . 'அவனு'க்காவது தெரியும் என நினைக்கிறேன். அதாவது 'அவன்' என்பது இருந்தால் . 
தக்காளி . எழுதுனா இப்படி எழுதணும் . இல்லைனா எழுதிய கைய தொட்டுக்கும்பிடணும்

_________________________________________________________________________
ஜெகே நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன் . அவன் வாழ்க என வாழ்த்தினால் வாழ்வான் . வீழ்க என வாழ்த்தினாலும் வாழ்வான் -நாகேஷ்

____________________________________________________________

நான் பொதுவாழ்க்கையில் இருப்பதாக எழுதுவதை பார்த்து ,ஈழப்போர் , ஹிந்தி எதிர்ப்பு , ரயில் மறியல் , பஸ் எரிப்பு என எதிலாவது நான் சம்பந்தப்பட்டு இருக்கிறேனா என சிலர் விஷமத்துடன் கேட்கிறார்கள் . ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது , கமெண்ட் , லைக் போடுவது - இதெல்லாம் பொதுவாழ்க்கையில் வராதா 

________________________________________________________________

ஒரு வாலிபன் ஒரு பெண்ணை ரொம்ப நாளாக சைட் அடித்து வந்தான்.அவளுக்கு அவனை பிடிக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் பிடிக்க ஆரம்பித்தது. தன் காதலை கவிதையாக எழுதி அனுப்பினாள்..அதைப்பார்த்த அவன் என்னவோ ஏதோ என அரண்டு விட்டான். ஊரை விட்டு ஓடிப்போகிறேன் என அவளுக்கு எழுதி விட்டு ஓடிவிட்டான். அந்த லெட்டர் பெண் வீட்டார்கள் கையில் கிடைத்தது... ஓடிப்போகலாமா என அதில் எழுதி இருந்தான். அவளை அவர்கள் திட்டினார்கள்.. முறைப்படி வீட்டுக்கு வந்தால் , திருமணம் செய்து வைப்பார்கள் என அவள் எழுதியதை புரிந்து கொள்ளாமல் இப்படி தன் பெயரை கெடுத்து விட்டானே என்ற வேதனையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.. ஊர் அவளுக்காக பரிதாபப்பட்டாலும், அந்த முட்டாள் காதலனை நினைத்து சிரித்தது..
அந்த ஊருக்கு ஒலவையார் வந்தார். தற்கொலை செய்து கொண்ட அந்த பெண் பேயாகி மாறி அவ்வையாரை தாக்க முனைந்தது..
என்னை ஏன் தாக்குகிறாய்.. ஒரு பாட்டை புரிந்து கொள்ள முடியாதவனை, ஒரு விஷயத்தை புரியும்படி எழுத தெரியாதவனை , ஊராரின் கேலிக்கு ஆளானவனை ஒரு பெண் பெற்று போட்டாளே...அந்த மாதரசியைப்போய் தாக்கு... தாக்கு ..தாக்கு என்றார்..அந்த பேய் யோசிக்க ஆரம்பித்தது..
வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற்றெற்றோமற்றெற்று


_________________________________________________________

இரங்கல் செய்தி ஃபார்மலாக இருப்பதே இயல்பு . ஆனால் கண்ணதாசன் மறைந்தபோது ஒரு தலைவர் லேசாக கிண்டல் கலந்து கொஞ்சம் அன்புடன் இரங்கல் அறிக்கை வெளியிட்டார் . அவர் யார் என கீழ்கண்ட வரியை வைத்து யூகியுங்கள்
" யார் அழைத்தாலும் சென்று விடுவாயே கண்ணதாசா . அழைத்தது எமன் என்று தெரிந்துமா சென்று விட்டாய் ? 

_______________________________________________________

சென்னை , பெங்களூர் நகரங்களுக்கு டிரெய்ன் , பஸ் , விமானம் , கார் மூலம் செல்வதைவிட இன்னொரு சுவாரஸ்யமான வாகனம் இருப்பது பலருக்கு தெரியாது . அதுதான் லாரி . லாரியில் ஏறி அசிங்க அசிங்கமாக பேசிக்கொண்டு , பேசுவதை கேட்டு கொண்டு , பிடித்த இடத்தில் சாப்பிட்டுக்கொண்டு , டென்ஷன் இல்லாமல் இயற்கை உபாதைகளை கழித்து கொண்டு ஒரு பயணம் செல்லாவிட்டால் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து விட்டீர்கள் என்று அர்த்தம் .

_______________________________________________________________

எங்கள் அலுவலகத்தில் ஒரு பெண் பணிபுரிகிறார் . சின்ன வயதிலேயே பயங்கர டாலண்ட் . எஞ்சினியரிங் ஸ்டாண்டர் எல்லாம் ஃபிங்கர் டிப்பில் வைத்திருப்பார் . தைரியமாக பேசுவார் . அவருடன் பேசுகையில் ஒரு பெண்ணுடன் பேசும் த்ரில் இருக்காது . ஆணுடன் பேசுவது போல இருக்கும் . இவரிடம் பெண் தன்மையே இல்லை , பாவம் இவருக்கு வரப்போகும் கணவன் என நினைத்து கொள்வேன் . ஒரு டெக்னிக்கல் டவுட் கேட்க அவர் கேபின் போயிருந்தேன் . அவர் இன்னொரு சீனியர் பெண் ஸ்டாஃபிடம் தீபாவளி ஆடை குறித்து உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார் . பெண்களுக்கே உரிய கலகலப்பு , லேசான வெட்கம் கலந்த சிரிப்பு என அவரை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது . என்னை பார்த்தால் அந்த அவதாரம் கலைந்து ஆணாகி விடுவார் என்பதால் பிறகு பேசிக்கொள்ளலாம் என என் சீட்டுக்கு வந்து விட்டேன்

___________________________________________________________

பேசிக்கலாக நான் ஒரு சோம்பேறி . ஃபோன் ரிங் வந்து சில நொடிகள் கடந்தபின்பே அட்டெண்ட் செய்வேன் . இதற்காக நண்பர்களிடம் திட்டு வாங்குவது வருத்தம்தான் என்றாலும் பழகிவிட்டது . நேற்று எஸ்எம்எஸ் பார்க்கும்போது ஒரு கால் வரவே , உடனடியாக அட்டெண்ட் செய்தேன் . ஆனால் பேசிய நண்பன் மகிழவில்லை . என்னடா , உடனே எடுத்துட்ட . பேலன்ஸ் இல்ல .மிஸ்டு கால் கொடுக்க டிரை பண்ணேன் . அட்டெண்ட் பண்ணிட்டியே என்றான் . ஊரில் நம்மைவிட பிச்சைக்காரர்கள் இருப்பதை நினைத்து மகிழ்வதா அல்லது என்ன செய்தாலும் நல்ல பெயர் வாங்க முடியவில்லையே என வருந்துவதா என குழம்பி போனேன்

__________________________________________________________

அரண்மனைக்கு வந்த துறவியை அரசர் நன்கு உபசரித்தார் . விடைபெறும் நேரம் . ஆசி வழங்க வந்த துறவி அரசர் முகத்தை ஆழ்ந்து பார்த்தார் . பெருமூச்சுடன் சொன்னார் . கொஞ்ச நாட்களில் உன் தந்தை இறக்கப்போகிறாய் . அதன்பின் நீயும் சாவாய் . அதன்பின் உன் மகனும் மரணிப்பான் என சொல்லி சென்றார் . என்ன இது .சாபம் கொடுத்து விட்டாரே என அரசன் கலங்கினான் . மந்திரி விளக்கினார் . அவர் சாபம் தரவில்லை . முழு ஆயுளுடன் வாழ்ந்து உங்கள் தந்தை இறந்தபின்தான் உங்களுக்கு மரணம் வரும் . உங்கள் மகனும் இள வயதில் மரணம் அடைய மாட்டான் . நீங்கள் வயதாகி இறந்தபின் உங்களுக்கு கடைசி மரியாதை செலுத்தியபின்பே அவன் இறப்பான் . அவன் இறப்பை காணும் துர்பாக்கியம் உங்களுக்கு இல்லை என்று துறவி ஆசி வழங்கியிருக்கிறார்

________________________________________________________________

தமிழ் திரையுலகில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற முதல் வசனகர்த்தா இளங்கோவன் அவர்கள் . மற்ற படங்களில் வேறுபாணியில் எழுதிய அவர் , ஏ ப பாடும் படத்தில் டைரக்டர் பல்ஸ் தெரிந்து கொண்டு ஆங்கில பட வசனம் போல சுருக்கமாக ஷார்ப்பாக எழுதியிருப்பார் . உயிர் காத்த கந்தனிடம் , ஜாவர் பேசும் வசனம் இருக்கிறதே . வா வ் வ் .

உண்மையில் அந்தக் காட்சியின் போது, ஜாவர் உணர்ச்சிவசப்பட்டு கந்தனின் காலில் விழுந்துவிடுவாரோ, இல்லை வேறு எதுவும் உணர்ச்சிகரமாக பேசிப்போகிறாரோ எனவே நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. இரண்டே வார்த்தைகளில் முடித்துவிட்டார்கள். முக்கியமான படம். இது தான் நிகழப் போகிறதென தெரிந்த பின்னும், பல இடங்களில் வசனங்கள் எதிர்பாராதவையாக இருந்தன. ஒளிப்பதிவும் அவ்வளவு தரம். ஆரம்பக் காட்சிகள், பின் கந்தன் சக கைதியிடம் தன் கதையைச் சொல்லும் போது வருகின்ற காட்சிகள், முற்றிலும் புது அனுபவமாக இருந்தன

_________________________________________________________________

படித்து முடித்து வேலை தேடிய காலகட்டம் . இண்டர்வியூ செல்ல முகவரி விசாரிக்க ஓர் அலுவலகம் சென்றேன். அது நாளிதழ் ஆஃபிஸ் . தற்செயலாக எடிட்டோரியலை சேர்ந்தவர் வரவே அவரிடம் கேட்டேன் . அவர் என்னை அங்கு வேலை தேடி தந்தவன் போல என நினைத்து பேசினார் . எனக்கு அந்த துறையில் அனுபவமோ அதற்கான படிப்போ இல்லை என்றாலும் அந்த துறையில் என்னதான் நடக்கிறது என தெரிந்து கொள்ளும்பொருட்டு , அவருடன் பேசினேன் . நான் வேலை தேடி வரவில்லை என்பதை சொல்லி , பார்ட் டைம் வேலை கொடுத்தால் செய்கிறேன் என்றேன் . அவர் ஒரு டாபிக் கொடுத்து , ஒரு கட்டுரை எழுதி மறுநாள் கொண்டு வர சொன்னார் . அங்கு பணியாற்றிய காலத்தில் உழைப்பு , பிழையற எழுதுவதன் முக்கியத்துவம் , சபலம் தவிர்ப்பதன் அவசியம் , கவனிப்புதன்மை போன்றவற்றை கற்றேன் . ஆசிரியர் பணி , போலீஸ் வேலை போன்ற சில வேலைகள் நம் கேரக்டரையே மாற்றி விடும் . பத்திரிக்கை பணியும் அதில் ஒன்று

_____________________________________________________________________________
ஒரு படத்தில் காந்தமதி தலை சீவும்போது சீப்பு உடைவது போல சீன் . பழைய சீப்புதான் என்றாலும் உடையவில்லையாம் . உடையும்வரை சீவட்டும் என சொல்லி உடையும்வரை படம் எடுத்தாராம் இயக்குனர் . காட்சி நீளமானதால் எடிட்டர் லெனின் பாதிக்குமேல் குறைத்தாராம் . இயக்குனர் யார் ? ஜெயகாந்தன்

_____________________________________________________________
ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் கதையை ஸ்ரீதர் இயக்கினார் . சிவாஜி , சாவித்ரி போன்ற அன்றைய ஸ்டார்கள் நடித்தனர் . படத்தின் கிளைமேக்சில் கதாநாயகன் இறப்பதாக ஸ்ரீதர் மாற்றிவிட்டு ,ஜெகே கருத்து கேட்டார் . தாராளமாக மாற்றுங்கள் . அப்படியே தலைப்பையும் யாருக்காக செத்தான் என மாற்றுங்கள் என கோபமாக சொல்லி விட்டார் ஜெகே . இந்த பிரச்னையால் படம் கைவிடப்பட்டது . பிறகு ஜேகே தன் விருப்பப்படி தானே இயக்கி வெளியிட்டார் . நாகேஷ் , கேஆர்விஜயா நடித்தனர்

____________________________________________________________

மன நிம்மதி இல்லை என புலம்புகிறோம்.. மனதிற்கு என்றாவது நிம்மதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?மனம் என்பதே கேள்விகளால் , குழப்பங்களால் , மதிப்பிடுவதால் , நினைவுகூர்வதால் , நினைவுகளால் ஆன ஒன்று.. நிம்மதி இன்மைக்கு காரணமே மனம்தானே... இந்த மனதுக்கு எப்படி அமைதி கிடைக்கும்.. அமைதி மிக முக்கியாமானது,,, அமைதியான இடத்தில்தான் படைப்பூக்கம் உருவாகும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

_________________________________________________________________________

ஜெயகாந்தன் படத்தை எடிட் செய்கையில் காட்சிகளை சஸ்டைன் செய்து விரிவாக இருக்கும்படி பார்த்து கொண்டேன் . இதனால் படம் ஸ்லோ ஆவதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் அப்படி செய்தால்தான் உணர்வுகள் ஆழமாக இருக்கும் என்பது என் வாதம் . படம் நன்றாக ஓடி படத்தை வாங்கியவர் லாபம் பார்த்தார் . ஆனால் 99 நாட்களில் படத்தை நிறுத்திவிட்டார் . நூறு நாள் ஓடினால் விழா , பரிசு என செலவாகுமே என்பது அவர் கவலை . இதுதான் சினிமா உலகம்-எடிட்டர் லெனின்

__________________________________________________________-

மணிரத்னம் தளபதி படம் ஆரம்பித்தபோதே பெரிய பரபரப்பு ஏற்பட்டது . அந்த படத்தில் நடிக்க , எதேனும் ஒரு வகையில் பணியாற்ற பலரும் போட்டியிட்டனர் . இந்த நிலையில் எடிட்டர் லெனின் தன்னை தேடி வந்த வாய்ப்பை நிராகரித்து படத்தில் பணியாற்ற மறுத்து விட்டார் . அது பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. ரஜினியை வைத்து படம் எடுக்க ஆயிரம்பேர் இருக்கிறார்கள் . மணிரத்னம் போன்றவர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களும் பெரிய நடிகர்களை நாடி செல்வதற்கு இப்படி எதிர்ப்பு தெரிப்பதாக சொன்னார்

_______________________________________________________________

ஆன்மீகத்திலோ , இஸ்லாம் நெறிகளிலோ ஈடுபாடு கொண்ட்வரகள் மகான் குணங்குடி மஸ்தான் பாடல்களை ப்டிக்க வேண்டும்.. இவற்றில் ஈடுபாடு இல்லாதவர்கள் தமிழுக்காகவாவது படிக்க வேண்டும்...
ஒரு பாடலில் அவர் பயன்படுத்தும் உவமைகளைப்பாருங்கள்..
என் தெய்வமே,,, காட்டில் பொழியும் நிலவொளியாக , மலையில் பொழியும் மழையாக என்னை வீணாக்கி விடாதே...யானை வாயில் சிக்கிய கரும்பாக , கடலில் சிக்கிய துரும்பாக , அரசனை விரோதித்த மக்களாக, குரு இல்லாத சீடன் போல என்னை அழித்து விடாதே

________________________________________________________

கமலை எனக்கு பிடிக்காது . அவரை என்றும் ரசிக்க மாட்டேன் . அவரை பொருட்படுத்தவும் மாட்டேன் . ஆனால் இதெல்லாம் நடந்து விடுமோ என பயமா இருக்கு - கமல் புத்தகம் படிக்கும் எஃபக்ட்

________________________________________________________
அலுவலகத்தில் ஒருவர் தன் போனில் திருக்குறளை டவுன்லோடு செய்து எல்லோரிடமும் காட்டி கொண்டு இருந்தார்... அவர் சின்ன வயதில் குறள் படித்ததில்லை.. ஆர்வமும் இல்லை.. யாரோ டவுன்லோடு செய்து கொடுத்து இருக்கிறார்கள்... துப்பார்க்கு துப்பாய குறளை படிக்க சொன்னேன்.. அதை அவர் வாசிக்க சுற்றிலும் அமர்ந்து எல்லோரும் கேட்டனர்... பெரும்பாலானோர் அதை கேள்விப்பட்டு இருந்தனர்..புதிதாக கேட்பவர்களுக்கும் அதன் சந்தம் பிடித்துப் போய் விட்டது... அதன் பின் அதன் அர்த்தம் படித்து , மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தார்... குறள் முழுக்க புரிந்து விட்டது போல அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்...
அர்த்தம் சொல்றேன் ..எல்லோரும் கேளுங்க... “ Rain helps to produce food...And rain itself becomeS a food " என அவருக்கு புரிந்த மாதிரி சொல்ல எல்லோரும் மிக மிக ரசித்தனர்..
kural always rocks

________________________________________________________

கேளடி கண்மணி படம் . பேராசியரை பாட சொல்வார்கள் . என்ன பாடறது . பாட்டெல்லாம் பாட தெரியாது . பாடம் நடத்த தெரியும் . அவ்வளவுதான் என்பார் . இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டு போடவேண்டும் . இசைதான் முக்கியம் . வரி முக்கியமே இல்லை என வைரமுத்துவுக்கு உணர்த்த விரும்பிய ராஜா மேற்கண்ட உரையாடலுக்கு இசை அமைத்து ஹிட் பாடலாக்கினார்

_______________________________________________

பாலகுமாரன்தான் என்னை இலக்கிய கூட்டங்கள் பக்கம் அழைத்து சென்றார் . அப்படி என்றால் அவரும் என் ஆசானா என கேட்டால் கேட்டு கொள்ளுங்கள் , எனக்கு ஒன்றும் இல்லை .முதல் இலக்கிய கூட்டத்தில் பேச அவர்தான் தைரியம் கொடுத்தார் . சில வரிகள் எழுதியும் கொடுத்தார் . நான் அதை அப்படியே வாசிக்காமல் விவரித்து பேசினேன் . நடிகன்யா , அதான் இப்படி பேசறான் என மகிழ்ந்தார் . தவறு செய்து விடுமோ என பயந்தால் எனக்குள் இருக்கும் மாணவன் இறந்து விடுவான் . எனவேதான் தைரியமாக பேசினேன் - க்மல்

__________________________________________________________________
" டேய் ..ஸ்ரீகாந்த் என் பையன் மாதிரி.. ஆனாலும் உனக்கு இந்த படத்தில் சான்ஸ் தறேன்..யூஸ் பண்ணிக்க..சிவாஜி மாதிரி வரணும் நினைச்சு நடி “ என்றார் கே பாலச்சந்தர்... நான் திகைத்து போனேன்...சிவாஜி எங்கே ,, நான் எங்கே... என்னைப்போய் சிவாஜியுடம் ஒப்பிடுகிறாரே...
சிவாஜி மாதிரி ஆக டிரை பண்ணுடா ,, அப்பதான் அதில் பாதியாவது வரும் என்றார்..
அந்த படத்தில் வில்லன் வேடம். பதட்டமாக இருந்தது.. என் பயத்தை போக்குவற்கென்றே ஒரு நடனக்காட்சி வைத்தார்.
நான் நடிப்பில் ரஜினிகாந்தை விட சீனியர். அவருக்கு முன்பே நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். இந்த படத்தில் என் நடிப்பை பார்த்து மலைத்து போனாராம்.. என்னை விட பெட்டராக பண்ண வேண்டும் , என்னை மிஞ்சிக்காட்ட வேண்டும் என நினைத்து சிகரட் ஸ்டைலை பழகியதாக அவர் என்னிடம் சொன்னார். இந்த போட்டி மனப்பான்மையை நான் மதிக்கிறேன்....
********************************
வீடியோ சினிமாவுக்கு போட்டியாக வந்து விடும் என நினைத்து சினிமாக்காரர்கள் போராட்டம் நடத்தினார்கள்.. நான் அந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை.. வீடீயோ என்பது அறிவியல் வளர்ச்சி ..அதை தடுக்க கூடாது ..அதனுடன் இணைந்து வாழ பழக வேண்டும் என்றேன்... இப்படி சொன்னதற்காக என்னை திட்டினார்கள்.. பிறகு வீடீயோ தொழில் நுட்பத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.. மறக்காமல் அதை வீடீயோ எடுப்பதற்கும் ஏற்பாடு செய்தார்கள் 
________________________________________________________________________-
பிளாஷ்பேக்
பக்கத்து வீட்டு அக்கா பெரிய பெரிய நாவல்களை படித்து கொண்டிருப்பதை பார்த்து நானும் எடுத்து பார்ப்பேன் . அதெல்லாம் உனக்கு புரியாதுடா என்பார் . வீம்பாக படிப்பேன் . ஆனால் புரியாது . தோல்வியுடனும் வருத்தத்துடனும் வந்து விடுவேன் . அவர் மேல் கோபம் கலந்த பொறாமை ஏற்படும் . கூடவே அவர் மீது மதிப்பும் ஏற்படும் . அவரை ரோல் மாடலாக கருதி அவர்போல நானும் படிக்க வேண்டும் என நினைப்பேன் . சில ஆண்டுகள் அவருடன் டச் இல்லை . நான் படிக்க திணறிய நாவல்களை பிறகு படித்து முடித்தேன் . பின் அவரை தாண்டி என் வாசிப்பு எல்லைகள் விரிவடைந்தன . ஒரு நாள் பழைய ஊருக்கு போகும்போது அவருக்காக சில புத்தகங்கள் வாங்கி சென்றேன் . பழைய மாதிரியே அன்பாக பேசினார் . என்னை சிறுவனாக உணர்ந்தேன் . வாசிப்புபற்றி பேச்சு வந்தது . அவருக்கு சுத்தமாக ஆர்வம் இல்லை . இப்பலாம் எங்கடா நேரம் இருக்கு என்றார் . புத்தங்களை பற்றி எதுவும் பேசாமல் திரும்ப எடுத்து வந்தபோது ஏதோ ஒரு இனம்புரியாத சோகம்
______________________________________________________________________________

சினிமாவில் வாழ்க்கை அனுபவங்களை காட்ட வேண்டும் . ஆனால் இந்த வயதில் எனக்கு எத்தனை அனுபவங்கள் இருந்துவிட முடியும் . எனவே நிறைய படிக்கிறேன் . தாஸ்தயேவ்ஸ்கி படித்தால் அவர் சொல்லும் அனுபவங்கள் என் அனுபவங்கள் ஆகி விடுகின்றன . வாசிப்பின் மூலம் பல நாடுகள் செல்கிறேன் . பல மனிதர்களை சந்திக்கிறேன் . ஒருலட்சம் பக்கங்கள் படித்தால் அதில் ஆயிரம் பக்கங்கள் நம் மனதில் பதியும் . அதில் இருந்து நூறு பக்கங்கள் எழுத தேவையான அனுபவம் கிடைக்கும்
- மிஷ்கின்

_________________________________________________________________

தற்கொலை செய்தால் உடலில் என்ன மாறுதல்கள் ஏற்படும் என படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டேன் . நாயகின் தந்தை தற்கொலை காட்சியில் அதை காட்சிபூர்வமாக எப்படி காட்டுவது என யோசித்தேன் . அப்போதுதான் சினிமாவை கற்றேன் 
-மிஷ்கின்
______________________________________________________
கஷ்டப்பட்டு ஃபைனான்சியரை பார்த்து கதை சொன்னேன் . ஹீரோயினாக ஒருவரை போடலாம் என்றேன் . அழைத்து வாருங்கள் . நடிப்பை டெஸ்ட் செய்யவேண்டும் என்றார் . ஹீரோயினை பார்த்து விஷயம் சொன்னேன் . சரிணே அட்ரஸ் கொடுங்க . பார்க்கிறேன் என்றார் . நானும் வறேன்மா என்றேன் . அவர் சிரித்தவாறு சொன்னார் . நீங்களும் வந்தா உங்களை இயக்குனர் என சொல்ல மாட்டார்கள் . . ஃ என்பார்கள் என்றார் . இந்த பிழைப்பு தேவையில்லை என நினைத்து இயக்குனர் கனவை கைவிட்டேன் -எடிட்டர் லெனின்
___________________________________________________________________________

படித்ததில் ரசித்தது
காந்தி சென்னை வந்தபோது ஆங்கிலத்தில் வாழ்த்து மடல் வாசித்தார்கள் . அவர் கோபப்பட்டார் . ஒன்று உங்கள் தாய்மொழியில் பேசுங்கள் . அல்லது என் தாய்மொழியில் பேசுங்கள் . ஆங்கிலம் வேண்டாம் என்றாராம்

______________________________________________
சின்ன வயசு பிளாஷ்பேக்
ஹிட்ச்காக் படங்கள் குறித்து கேள்விப்பட்டிருந்தேனே தவிர பார்த்ததில்லை . ஒரு நண்பனின் தந்தை ஹிட்ச்காக் படங்கள் குறித்து சிலாகித்து சொல்வார் . ஒரு விடுமுறையன்று சி டி வாங்கி சென்று அவர் வீட்டில் படம் பார்க்க பிளான் போட்டோம் . அந்த படங்கள் எல்லாம் எங்கு கிடைக்கும் என அவர் மூலம்தான் எனக்கு அறிமுகமானது . கடையில் பிரமாண்ட அணிவகுப்பு ஆச்சர்ப்படுத்தியது . ஆனால் அப்பொதெல்லாம் படங்கள் பற்றி தெரியாதென்பதால் ரோப் படம் மட்டும் வாங்கினேன் . ரொமான்ஸ் படம் டபுள் எக்ஸ் என கடைக்காரன் என் மனதை கெடுக்கவே அதில் ஒன்று என் பர்சனல்யூசுக்கு வாங்கி பையில் வைத்தேன் . எழவு , இரண்டிலுமே பெயர் இல்லாததை கவனிக்கவில்லை . மார்க்கரில் என்னவோ எழுதியிருந்தது . அவ்வளவே.
வீட்டுக்கு போய் அந்த அடையாளத்தை வைத்து எடுத்து கொடுத்தேன் . ஆனால் மாற்றி கொடுத்து அவர்கள் குடும்பம் முன் அசிங்கப்பட போகிறோமோ என்ற திகில் மனதில் , உடலில் பரவ ஆரம்பித்தது . இப்போது யோசித்தால் படத்தை விட அந்த சில கணங்கள் திகிலாக இருந்தது உணர முடிகிறது

____________________________________________________
நேற்று கில்மா பட ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தேன், அப்போது நண்பர் நிர்மல் ஒரு லிங்க் அனுப்பினார்..உடனே அடுத்த மேசேஜ் அனுப்பினார்.. அதை ஓப்பன் செய்ய வேண்டாம்.
எனக்கு குறுகுறுப்பு..ஒருவேளை கில்மா மேட்டர் ஏதேனும் அனுப்பி விட்டு , பிறகு இமேஜை காப்பாற்றிக்கொள்ள ஓப்பன் செய்ய வேண்டாம் என்கிறாரா.. அல்லது ஏதேனும் வைரஸா...
கடைசியில் பார்த்தால் , ஏதோ பின் நவீனத்துவ ஆய்வு நூல் லிங்க் அது..
ஏமாற்றத்துடன் இருந்த போது இன்னொருவர் மெசேஜ் அனுப்பினார்/இந்தியா உருப்படாமல் போக காரணம் , நாம் தவறானவர்களை போற்றுவதுதான் என்றார்..
எப்படி சொல்றீங்க என்றேன்..
புத்தர் ராஜ வாழ்க்கை , உலகியல் வாழ்க்கை எல்லாம் வாழ்ந்து அலுத்துப்போய் , துறவி ஆகி விட்டார்,, ஆனால் எதையும் அனுபவிக்காத மனைவி என்ன பாவம் செய்தார்,, அவரை எப்படி விட்டு செல்லலாம்...இது துரோகம் அல்லவா... ஒரு துரோகியை நாம் புனிதர் என்பது தவறல்லாவா என்றார்..
அட ஆமா...
வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார், தன் மனைவியைக் கண்டு வாடவில்லையே.. இது ஆணாதிக்கமல்லவா.. அவரை வணங்கலாமா என்றார்..
எனக்கு பிரமிப்பாக இருந்தது..
நீ இதை செய்யா விட்டால் உன்னை துன்புறுத்துவேன் என சொல்வது வன்முறை.... காந்தியும் இதைத்தானே செய்தார்... உன்னை துன்புறுத்துவேன் என சொல்லாமல் , என்னை துன்புறுத்திக்கொள்வேன் என்றார்...இதுவும் வன்முறைதானே... அவரைப்போய் போற்றலாமா என்றார்..
இதெல்லாம் தெரியாமல் போச்சே என்று நினைக்க வைத்து விட்டார்.. சரி..அவர் சொல்வதைக்கேட்டு இவர்கள் மீது இருந்த மதிப்பு போய் விட்டது.
புரட்சித்தலைவி, கலைஞர் , சோனியா காந்தி போன்றோர் மீது மதிப்பு அதிகரித்தது,,,, ஆனால் இவர்களில் யாரை போற்ற வேண்டும் என கேட்பதற்குள் அவர் லாக் அவுட் செய்து விட்டார் 

_____________________________________________________________
ஓர் அறிவியல் அறிஞர் ஒரு கருதுகோளை எந்த அளவுக்கு எளிமையாக சொல்கிறார் என்பதை வைத்து அந்த கருதுகோளைப் பற்றிய அவரது புரிதலை மதிப்பிடுவேன் - ஹெய்சன்பர்க்
_________________________________________________
நான் சினிமாவின் குழந்தை . என் சினிமாவுக்கு ஏதேனும் ஆனால் நான் அனாதை . மூன்று வயதில் யதேச்சையாக வந்து சேர்ந்த ஒரு தொழில் என் உலகமாகும் என அன்றே தெரிந்திருந்தால் இன்னும் கற்றிருப்பேன் - கமல்
_________________________________________________________
ஹே ராம் திரைக்கதை வாசித்து கொண்டு இருக்கிறேன். கமல்ஹாசனின் முன்னுரையை மட்டுமே பல முறை படிக்கலாம்... எளிமையாகவும், மற்றவர்களுக்கு புரிய வேண்டும் என்ற அக்கறையும் தெரிகிறது... அவருக்கே உரிய நகைச்சுவைக்கு ஒரு சாம்பிள்...
” இந்த திரைக்கதை தனி மனித குற்றம் அல்ல..உடந்தையாக இருந்தோர் பலர்.. அனைவருக்கும் நன்றி “
சில இடங்களில் அவரது தீவிரம் தெரிகிறது..
திரைக்கதை ஹைக்கூ மாதிரி..பார்ப்பவர் கோணத்துக்கு ஏற்றபடி மாறும் அற்புத கலை ஓணான்.. இந்த ஓணானை காப்பி அடித்தாலும் பரவாயில்லை. கல்லால் அடிக்காதீர்..
______________________________________________________

ஜெயகாந்தனின் முதல் கதை எந்த தொகுதியிலும் இடம்பெறவில்லையாம் . எனவே முதல்கதை பெயரை அவரே சொல்லித்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. தெரிந்ததும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் . என்ன பெயர் ? anyguess ?

___________________________________________________________
மேன்மக்கள் மேன்மக்களே. .
காமராஜரை விமர்சித்து கூட்டம் நடந்தது . படிக்காத காமராஜர் குறித்து படித்த காமராசன் (கவிஞர் நா. காமராசன் ) பேசுவார் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன . பெரியார் சொன்னாராம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனா லேசா மாத்தணும் . படிக்காத காமராஜர் உருவாக்கிய பள்ளியில் படித்த காமராசன் பேசுவார் என அச்சிட்டால் பொருத்தமாக இருக்கும் என்றாராம்
________________________________________________________







1 comment:

  1. அனைத்தும் அற்புதம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா