Friday, February 15, 2013

பசியை தூண்டி விட்ட “ உறுபசி”- எஸ் ராவின் மாஸ்டர் பீஸ்





எஸ்.ரா எழுத்துகளில் என்னைக் கவர்ந்தவை அவர் சிறுகதைகள்தான். அவற்றையும்விட அவரது கட்டுரைகளும் , உரைகளும் மிகவும் பிடிக்கும். அதற்குப்பின்புதான் அவர் நாவல்கள்.

உறுபசி நாவலை நான் படிக்க காரணம் அதன் சுருக்கமான வடிவம்தான். வெறும் 135 பக்கங்கள்தான்.  சும்மா புரட்டிப்பார்ப்போம் என எடுத்தேன். ஆனால் முதல் வரியிலேயே நாவல் என்னை உள் இழுத்துவிட்டது.

முன்பெல்லாம் , ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை முதல் 15 ஓவர்கள் சும்மா வார்ம் அப் செய்து கொள்வார்கள் . அதன் பின்புதான் ஆட்டம் சூடு பிடிக்கும். ஆனால் இலங்கையின் ஜெயசூரியாவும் , கலுவித்தரனேயும் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து , முதல் பந்திலேயே ஆட்டத்தை துவக்கும் பாணியை உருவாக்கி , உலக கோப்பையும் தட்டி சென்றனர்.

அது போல முதல் வரியிலேயே அதிரடியாக ஆரம்பிக்கிறது நாவல். சம்பத் என்பவன் இறந்து விடுகிறான். அவன் இறப்பின் வலியை மறக்கும்பொருட்டு அவன் நண்பர்கள் மூவர் , பரிச்சயம் இல்லாத ஓர் இடத்துக்கு ( வனத்துக்கு ) சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.

ஒரு பொருள் இல்லை என்று ஆகிவிட்ட பின்புதான் அதன் இருப்பு நம் கவனத்துக்க்கே வரும். அதன் இல்லாமையை உணர ஆரம்பிப்போம். அது போல சம்பத் இறந்த பின்பு , அந்த மூவரின் நினைவுகள் மூலம் சம்பத்தின் இருப்பை அல்லது இல்லாமையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.  

ஒருவனை இன்னொருவர் நினைவுகள் மூலம் அறிந்து கொள்வது சாத்தியமா.. ஒருவனின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில்தான் இன்னொருவனை நினைவில் கொள்வான். எனவே இந்த வகையில் இன்னொருவனை புரிந்து கொள்ள இயலாது. சம்பத்தை நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்க கூடும். ஆனால் அப்படி பார்த்தால் , நம் விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான் அவனை புரிந்து கொள்வோம். ஆக இதிலும் துல்லியமான புரிதல் நிகழாது. எனவே சம்பத்தை புரிந்து கொள்வதை விட , நம்மை புரிந்து கொள்வதே முக்கியமாகி விடுகிறது.

இந்த நாவலை படித்து முடிக்கையில் இந்த சுயதரிசனம்தான் ஆரம்பிக்கிறது.

ராம துரை , அழகர் , மாரியப்பன் மற்றும் கதை நாயகன் சம்பத் ஆகிய நால்வரும் கல்லூரியில் ஒன்றாக தமிழ் இலக்கியம் படித்தவர்கள். மற்ற மூவரும் சூழ் நிலை காரணமாக இலக்கியம் படிக்க, சம்பத்தோ ஆர்வம் காரணமாக படிக்கிறான்.  இலக்கியம் , நாத்திக வாதம் , காதல் , காமம் , தொழில் , லாட்டரி சீட்டு என பலவற்றில் தீவிரமாக ஈடுபட்டு  , அந்த தேடல் எனும் நெருப்பில் எரிந்தும் போகிறான்.

இளம் வயது தேடல்களின் , லட்சியங்களின்  ஆர்வத்தின் அர்த்தமின்மை “  ஒரு கட்டத்தில் புரிந்து விட , ஏதோ ஓர்  இடத்தில் செட்டிலாகி விடும் யதார்த்த “  வாழ்வில் மற்ற மூவரும் பயணிக்கிறார்கள்.

யதார்த்த வாழ்வில் தோல்வி அடைந்து விட்டவன் என அவன் மேல் பரிதாபப்படுவதா அல்லது உண்மையான வாழ்வை வாழ்ந்து பார்த்தவன் என்ற வகையில் அவன் மேல் பொறாமைப்படுவதா என்பதில் அவர்களுக்குள்ளேயே குழப்பம்தான் இருக்கிறது . அவரவரர் மன நிலைகளுக்கு ஏற்ப அவனை புரிந்து கொள்கின்றனர்.


கதையில் ஆசிரியர் கூற்று வெகு வெகு குறைவே. எனவே சம்பத் எப்படிப்பட்டவன் என ஆசிரியர் தன் கருத்தாக எதையும் வற்புறுத்தவில்லை. ஆசிரியர் இறந்து விடுகிறார்.

முழுக்க முழுக்க மற்றவர்கள் மூலம்தான் சம்பத் குறித்த சித்திரங்கள் நமக்கு கிடைக்கின்றன. நான் லீனியர் பாணியில் , முன்னும் பின்னுமாக நகர்ந்து ஒளித்துண்டுகளாக சம்பத் குறித்தும் , வாழ்க்கை குறித்தும் ஒர் பார்வை கிடைக்கிறது. 

இந்த ஒளித்துண்டுகளை மொத்தமாக எடுத்து குலுக்கி கலக்கி ஒன்று சேர்ந்து பார்த்தால் கிடைக்கும் சித்திரம் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. எனக்கு ஒரு வகையாக தோற்றம் அளிக்கலாம். உங்களுக்கு ஒரு வகையாக தோற்றம் அளிக்கலாம். 

பொதுவாக நாவல்களில் சம்பவங்கள் நிகழும். இதில் கொஞ்சம் வித்தியாசமான நடையை பயன்படுத்தி இருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இதில் சம்பவங்கள் நிகழ்வது குறைவே.. ஏற்கனவே நடந்ததை சொல்வதைபோன்ற நடை. உரையாடல்கள் எல்லாம் indirect speech. இந்த பாணியில் சிறுகதை எழுதலாம். ஆனால் நாவல் எழுவது கடினம். ஆனால் இந்த கதைக்கு இந்த நடை மிக கச்சிதமாக பொருந்தி போகிறது. மிக கவனமாக கன்சிஸ்டெண்டாக இந்த பாணியை , இலக்கணத்தவறுகள் ஏதேனும் செய்யாமல் , கையாண்டு இருக்கிறார் எஸ் ரா.

 நண்பர்கள் மூவரைதவிர , இரு பெண்கள் மூலமும் சம்பத்தின் நினைவுகள் உயிர் பெறுகின்றன.  சம்பத்தின் மனைவி மற்றும் பழைய தோழி யாழினி.  எளிமையான மனம் கொண்ட மனைவி சம்பத்தை எப்படி பார்க்கிறாள், ” உலக ஞானம் மிக்க யாழினி எப்படி பார்க்கிறாள் எப்படி பார்க்கிறாள் என்பது அற்புதமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. 


    சம்பத்தைப் பற்றி பல்வேறு சம்பவங்கள் சொல்லப்படுகின்றன, இவை எல்லாவற்றுக்கும் மையச்சரடு ஒன்றே ஒன்றுதான்.

PASSION - தீராத பசி - ஆர்வம் -  தேடல் 

 நாத்திகவாதம் எனும் லட்சியக்கனவு , காதல் , காமம் , லாட்டரி சீட்டு , தொழில் என ஒவ்வொன்றிலும் மிக தீவிரமான ஈடுபட்டுவிட்டு , அதை வாழ்ந்து விட்டு , அதில் உச்சத்தை தொட்டு விட்டு , அதில் இருந்து வெளியே வருகிறான் சம்பத்.

சிறு வயதில் , ஒரு சாதாரண ஆடைக்காக, சண்டையிட்டு  சித்ராவின் மரணத்துக்கு காரணமாகிறான் சம்பத். தான் யார் என்பதை அவனுக்கு உணர்த்திய முதல் சம்பவமாக அது இருக்க கூடும்., ஆடை என்பது முக்கியமில்லை , அந்த வெறி..

ஒரு கட்டத்தில் தீவிரமாக யாழினியை காதலித்தாலும் , அவள் புறக்கணிப்பு அவனை பாதிக்கவில்லை. இன்னும் சொல்லப்ப்போனால் , புறக்கணிப்பை உணரக்கூட இல்லை. மேடைப்பேச்சு என்பதில் அடுத்த ஆர்வம் செல்கிறது. ஒரு கட்டத்தில் அதையும் கடந்து வருகிறான்.

ஒரு விஷ்யத்திற்கு அடிமையாக இருப்பது வேறு. ( டாஸ்மாக் வாசலில் குடித்து விட்டு  படுத்து இருப்பார்களே - _) 

 அதை ஆண்டு அனுபவித்து அதில் இருந்து வெளியே வருவது வேறு.

ஆனால் வெற்றியாளர்கள் “  “ யதார்த்தவாதிகள் இந்த இரண்டு  வகையிலும் இருக்க முடியாது . ஆசைகளை அடக்கிகொண்டு , காம்பரமைஸ் செய்து கொண்டு, பொருளாதார ரீதியாக பலனளிக்கும் செயல்களில் மட்டும் கவம் செலுத்துபவர்களே பிழைக்க தெரிந்தவன் , புத்திசாலி. 

சம்பத் நண்பர்கள் இப்படி புத்திசாலிகளாக இருந்தாலும் , ஏதோ  ஒன்று குறைவதாகவே உணர்கிறார்கள். இந்த குறையை ஈடுகட்டத்தான் வீக் எண்ட் கொண்டாட்டங்கள் . பார்ட்டிகள். சம்பத்துடன் சேர்ந்து ஊர் சுற்றுதல்.

ஆனால் சம்பத்துக்கு வீக் எண்ட் கொண்டாட்டம் எல்லாம் தேவைப்படவில்லை.  அவனை பொருத்தவரை ஒவ்வொரு கணமுமே முழுமையாகத்தானே வாழ்ந்தான்.

ஆனால் வெளிப்பார்வைக்கு அவன் தோல்வியுற்றவன். 

இந்த முரண் தான் உறுபசி..

தீக்குச்சி நடனம் ...கடலில் மல்லிகையை எறியும் குறியீடு... திக்கு தெரியாத இடத்தில் , காசு இல்லாமல் நண்பர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். கையறு நிலை.. எதிர் பாராத விதமாக எப்படியோ, சம்பத் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு , டிக்கட்டும் வாங்கி விடுகிறான்.  பயணத்தின்போது கேஷுவலாக , கேட்கிறான். கடவுள் இருப்பதை நீ நம்புகிறாயா ....  இந்த இடம் என சொல்லிக்கொண்டே போகலாம்.. ஒரு சின்ன நாவலில் எத்தனையோ சம்பவங்கள்...  


கண்டிப்பாக படியுங்கள்


பசி என்பது வரமா . சாபமா என்ற கேள்வியை எழுப்புகிறது உறுபசி... எஸ் ராவின் மாஸ்டர் பீஸ் என்றே நினைக்கிறேன்.. 

வெர்டிக்ட்  :  உறுபசி -   பசியை கிளறிவிடுகிறது 


பிடித்த வரிகள் 
  • திருனீறு பூசிக்கொண்டால் சாவில் இருந்து தப்பி விடலாம் என்பது சற்றே ஆறுதல் தருவதாக இருந்தது.
  • அந்த கயிறை போலத்தான் , நாம் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருக்கிறோமா. பூரான் ஊர்வது போல  மனதில் பயம் நெளியதொடங்கியது.
  • லைட்டர்களில் எரியும் நெருப்பு , தீக்குச்சிபோல நெருக்கம் தரவில்லை. உலகில் எல்லா தீக்குச்சிகளும் பதட்டமாகவே எரிகின்றன. நுனி வரை எந்த தீக்குச்சியும் எரிந்து நான் பார்த்ததே இல்லை.
  • பசுமையின் கோப்பைக்குள் விழுந்து கிடப்பது போல , நாங்கள் நின்று கொண்டு இருந்தோம்.
  • ஒரு மெழுகு வர்த்தி இருட்டில் தனியே ஒளிர்ந்து கொண்டு இருப்பதைப்போல , நம் வகுப்பை ஒளி விட செய்து கொண்டு இருக்கிறாள். அந்த வெளிச்சத்தில் கரைந்து போக நாம் முன் வரவே இல்லை.
  • அடிபட்டு காயம் உலராத மிருகம் போல சுற்றிக்கொண்டே இருந்தான்.
  • நான் ஒரு தக்கை. கிணற்றில் , ஆற்றில், கடலில் என எதில் தூக்கிப்போட்டாலும் மிதக்கும் தக்கை.எல்லோரும் என்னை சேர்ந்து அமுக்கினாலும் மூழ்காத தக்கையாகவே இருக்கிறேன். 
  • ராமதுரை கணக்கு வழக்குகளை சிகரட் அட்டையில் எழுதிக்கொண்டு இருந்தான். மாரியப்பன் சோளக்கதிர் தின்று கொண்டு இருந்தான். நான் சன்னாசியிடம் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்கிறான் என கேட்டுக்கொண்டு இருந்தேன்.
  • சில பக்கங்களில் அக்பர் , பாபர் , ஷேக்ஸ்பியர் , தொல்காப்பியர் என ஏதேதோ பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. தொலைபேசி இலக்கங்களாக விசித்தரமான எண்கள் இடம் பெற்று இருந்தன.
  • செடிகள் தம் விருப்பம் போல வாழ்கின்றன. இயற்கை யாரிடமும் எதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு செடியும் தனித்துவமான இலையமைப்பை, பூக்களை , வாசனையை கொண்டுள்ளன. ஓர் இலை எந்த பக்கம் அசைய போகிறது  என யாருக்கு தெரியும். ? எனக்கு செடிகள் மிக மிக ஆச்சர்யம் அளிக்கின்றன





No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா