Saturday, July 4, 2020

வண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்




என்னதான் இணையம் , kindle , ஆடியோ புத்தகங்கள் என வந்து விட்டாலும் பேப்பர் வடிவில் புத்தகங்களை படிப்பது தனி சுவைதான். வசதிகள் என்பது நவீன வடிவங்களில் அதிகம். ஆனால் அச்சு பிரதியில் தொடு உணர்ச்சி என்ற கூடுதல் கவர்ச்சி உண்டு.

சாருவின் பழுப்பு நிறப்பக்கங்கள் – 3 கைக்கு கிடைத்ததும் அந்த  பார்சலை பிரிக்காமல் வெகு நேரம் பார்த்தும் தொட்டும் முகர்ந்தும் மகிழ்ந்தேன். அதன் பிறகு வெகு மெதுவாக நிதானமாக பிரித்து புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தை முதன் முறையாக  கண்ணில் பட்ட அந்த கணம் !!!

கடின அட்டையுடன் கூடிய புத்தகம் என்பது கூடுதல் அழகு.

அதன் பின் மெல்ல ஒரு வரலாற்று பயணத்துக்குள் - காலம் இடம் கடந்து , இலக்கிய முன்னோர்கள் பாதச்சுவடுகளை பின்பற்றி – செல்லலானேன்.

பழுப்பு நிறப் பக்கங்கள் வரிசையின் முதல் இரண்டு புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை என்றாலும் இந்த மூன்றாவது புத்தகம் எனக்கு தனிப்பட்ட முறையில் வித்தியாசமான ஒன்று.

காரணம் சி சு செல்லப்பா…    சு ரா … கு ப ரா…  சா கந்தசாமி…  ம முத்துசாமி ப சிங்காரம் எனும் சம்பந்தமற்ற ஆளுமைகளின் தொகுப்பாக எனக்கு தோன்றியது..

எனவே இதை படிக்கும்போது ஒட்டு மொத்த இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் மனதில் தோன்றியது.



இதை இலக்கிய விமர்சன நூல் வரையறுப்பதா … ஆளுமைகளின் வரலாறு என்பதா.. அல்லது ஆளுமைகளுடனான ஒரு சம காலப்படைப்பாளியின் சொந்த அனுபவ பகிர்வா.. அல்லது ஓர் அறிமுகமா என சொல்லி விட முடியாத அளவுக்கு ஒரு பன்முக குணாதிசயத்தை இந்த நூல் கொண்டுள்ளது.. அதாவது கறுப்புக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்.. அதனால்தான் இது பழுப்பு நிறப் பக்கங்கள் ஆனதோ J

வண்ணம் என சொல்கையில் ஒரு விஷ்யம் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை விரைவாக மீள் வாசிக்கும் பொருட்டு பல்வேறு வண்ணங்களில் வரிகளை ஒளிர்விப்பது என் வழக்கம்.

அழகான மொழியாளுமைகளுக்கு ,  ஒப்பு நோக்க வேண்டிய புத்தக / ஆளுமைகள் பெயர்களுக்கு  ரசிக்கும் வரிகளுக்கு சுவையான சம்பவங்களுக்கு என ஒவ்வொரு வண்ணத்தை பயன்படுத்துவேன். இப்படி படித்து முடித்து விட்டு , ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பார்த்து திகைத்தேன். அந்த பக்கம் முழுமையும் , எல்லா வரிகளுமே , ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த பக்கமே வண்ணமயமாக ஜொலித்தது. கலர்ஃபுல்லாக ஓர் இலக்கிய நூலை எழுதுவது என்பதே ஒரு வியப்புதான்
பின் நவீனத்துவம் என்பதற்கு குறிப்பிட்ட யுக்தி எதுவும் இல்லை.. மூன்றடியில் எழுதி ஒரு காட்சியை சொன்னால் ஹைக்கூ , செப்பலோசை பயின்று வந்தால் வெண்பா. அகவலோசை வந்தால் ஆசிரியப்பா என்று ஃபார்முலா எதுவும் இல்லை.. ஆனாலும் பலர் பின் நவீனத்துவ ஃபார்முலா என எதையாவது நினைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக எழுவதுண்டு.

பின் நவீனத்துவ படைப்பு என்பது இயல்பாக நிகழ்வது. பின் நவீனத்துவ கட்டடங்கள் , பின் நவீனத்துவ இசை என இப்படி அமைந்தவை உண்டு,  அந்த வகையில் பின் நவீனத்துவ கூறுகளை இந்த நூலில் காண முடிகிறது.

இந்த நூலில் இன்னொரு சுவையான விஷயம் , ஒரு விஷயத்தை சொல்லாதே .. அதைக் காட்டு என்ற யுக்தி திறம்பட செயல்பட்டுள்ளது.  கு ப ரா எழுத்தை தவமாக பயின்றதன்  மூலம் அதன் சிறந்த ஒரு பகுதியை – ஒரு மாதிரியாக தேர்ந்தெடுத்து – அதை அப்படியே கொடுத்து குபராவை இது வரை படிக்காதவர்கள் கூட அவர் குறித்து புரிந்து கொள்ள உதவுவது ஒரு நல்ல யுக்தி. ஆனால் அப்படி கொடுக்கும் பகுதி அவர் எழுத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப்பெரிய உழைப்பும் புரிதலும் ஆழ்ந்த வாசிப்பும் தேவை. இதை சாரு சிறப்பாக செய்துள்ளார்.

இந்த நூலில் பேசப்பட்டுள்ள அறுவர் குறித்தும் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கிறது.

இது ஆளுமைகளை வியந்தோதும் பாராட்டுரைகளின் தொகுப்பன்று. சுருக்கமாக ஓர் ஆளுமையின் முழு பரிமாணத்தை 360 டிகிரியில் பார்க்கும் ஒரு பார்வையை தருவதுதான் நூலின் நோக்கம்.

தன் ஆளுமையை உருவாக்கியவர் என ஒரு குரு இடத்தில் வைத்து சுந்தர ராமசாமியை போற்றினாலும் அவர் படைப்புகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரிப்பது , சி சு செல்லப்பா படைப்புகளையும் அவர் வாழ்க்கையையும் அவர் குணங்களையும் அவ்வளவு தூரம் பாராட்டி விட்டு , தமிழில் விமர்சனத்துறை என்பது தனி நபர் வசையாக உருவெடுக்க ஆரம்ப புள்ளி அவர்தான் என்று சுட்டிக்காட்டுவது என விருப்பு வெறுப்பற்ற ஒரு பார்வையை வைக்கிறார் சாரு.

இந்த புத்தகத்தின் நாயகர்களான இந்த அறுவர் தவிர அசோகமித்திரன் ஜி கே செஸ்டர்ட்டன் தி ஜா  எஸ் வைதீஸ்வரன் வெங்கட சாமி நாதன் ஜெயமோகன் சார்த்தர் ஃப்லௌபர்  ஜார்ஜ் ஜோசஃப் என எண்ணற்ற  ஆளுமைகள் பக்கங்கள் தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர், வெறும் பெயர்களாக அன்று. ரத்தமும் சதையுமாக நம்முள் நடமாடுகின்றனர் .

இன்னொரு சுவையான அம்சம் .

இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் பல விஷயங்களுக்கு இந்த புத்தகமே – இதன் நூலாசியரே - உதாரணம் ஆகி விடுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

போலிகளை சுட்டிக்காட்டுவதில் எந்த தயக்கமும் கூடாது என்பதை சுந்தர ராமியிடன் கற்றேன் என்கிறார் நூலாசிரியர்,   அதே சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு ஃபேக் என தன் கைக்காசை செலவிட்டு மனைவியின்  நகைகளை அடகு வைத்து எழுதி நூலாக்கியவர் சாரு . அதாவது தான் கற்றதற்கு உதாரணமாக சுந்தர சாமி சம்பந்தப்பட்ட ஒன்றையே சொல்ல முடியும்

பாரதியார் ஒரு பன்முக கவிஞர். ஆனால் அவரது தேசிய கவிதைகள் பெற்ற பிராபல்யம் காரணமாக அவர் தேசிய கவி என சுருக்கப்பட்டு விட்டார் என்று பேசுகிறார் கு ப ரா

இந்த நூலின் இன்னோர் இடத்தில் சாரு பேசுகிறார் – என்னை நல்ல கட்டுரையாளன் என மக்கள் பாராட்டும்போது எனக்கு அவமானமாக இருக்கும்

அதாவது அவரது கட்டுரை பெற்றுள்ள வரவேற்பால் அவரது மற்ற சிறப்பம்சங்கள் மறக்கடிக்கப்படுவது அவருக்கு வருத்தம். இதைதான் குபரா நூலின் இன்னொரு பக்கத்தில் சொல்கிறார்


இதில் இன்னொரு ட்விஸ்ட் என்ன  என்றால் , சாரு மனதில் அவருக்கு இருக்கும் நாவல் மீதான காதலால் தன்னை சிறந்த நாவலாசியர் என்று மட்டுமே நினைத்துக்கொள்கிறார். அவர் மிகச்சிறந்த சிறுகதைகளை படைத்தவர்,.. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட, அந்த காலத்தில் அவர் எழுதிய லத்தீன் அமெரிக்க திரைப்பட புத்தகமெல்லாம் வரலாற்று பொக்கிஷம்,  சமீபத்தில் அவர் கு ப ரா குறித்து வழங்கிய உரைவீச்சு தமிழ் சொற்பொழிவுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் மறந்து விட்டு தன்னை ஒரு நாவலாசிரியர் என்ற அளவில் சுருக்கிக்கொள்கிறார். அதாவது இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் தவறை அவரும் செய்கிறார்

இப்படி இந்த நூலே இந்த நூலுக்கு ஒரு ரெஃபரன்ஸ் ஆகி விடுவது சுவாரஸ்யம்.

தமிழின் பல சொற்களின் பயன்பாடுகள் அருகி வருகின்றன. இலக்கியவாதிகளால் மட்டுமே பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன என பேசுகிறது இந்த நூல் ,. இந்த நூலே அதற்கு உதாரணமாகவும் உள்ளது.
எத்தனை எத்தனை அழகான சொற்கள் !!      

நாம் எதை ரசிக்கிறோம் என்பதுதான் நம்மை உருவாக்குகிறது. சாருவை கவர்ந்த சொல்லாடல்கள் பலவற்றை இதில் சாரு சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே அளவுக்கு அவரது சொல்லாடல்கள் நம் சிந்தையைக் கவர்கிறது , ஒரு கவிதையைப் போல.. ஓர் ஆப்த வாக்கியம் போல.



உதாரணமாக சில பளிச் வரிகளை பாருங்கள்.. இவற்றில் சில சாருவின் சிந்தனை.. சில சாரு மேற்கோள் காட்டும் ஆளுமைகளின் சிந்தனை…

  • இவர் தமிழ் மொழியின் பொக்கிஷம் என பாரதி குறித்து காந்தி கூறினார். காந்தியிடம் ராஜாஜி சொல்லி இருக்க வேண்டிய வார்த்தைகளை ராஜாஜியிடம் காந்தி சொன்னார்
  • ஆசிரியப்பா , கலிப்பா போன்று இப்போது ஒரு புதிய பா தோன்றி இருக்கிறது . அதுதான் செல்லப்பா
  • உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஓர் அதிசயம் இங்கு நடந்தது . அதாவது அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம்
  • அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தை கற்பித்தார்
  • அபிப்பிராயங்களை அழுத்தமாக உறுதியாகச் சொல்வார்.  நகைச்சுவையுடன் சொல்வார், புண்படுத்தாமல் சொல்வார்
  • கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும்போல தெய்வங்களும் பேய் பிசாசுகளும்கூட வாழ்ந்து வந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்து வந்தன

ஏன் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. இன்றைய சூழலில் இலக்கிய பரிச்சயம் என்பது ஓர் அடிப்படைத்தேவையாக இருக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை.

ஒரு முறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு நடிகர் ராஜேஷ் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். பேசி விட்டு கிளம்பியவர் தன் கார் இஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பதையும் , ஏசி ஆன் செய்து இருப்பதையும் கண்டு ஆத்திரம் அடைந்தார் . இவ்வளவு  நேரம் வீணாக ஓடிக்கொண்டிருப்பது ஏன் என ஓட்டுனரைக் கடிந்து கொண்டார். அதற்கு ஓட்டுனர் பதில் சொன்னார் “ முதல்வர்தான் ஏசியை இயக்கத்தில் வைத்திருக்கச்சொன்னார். அப்போதுதான் நீங்கள் கிளம்பும்போது வசதியாக இருக்குமாம் “

ஒரு வி ஐ பி வருகிறார் என்றால் அவர் வருவதற்கு முன்பே அவருக்கான அறையில் ஏசியை இயங்க வைத்து அவரது வசதியை பேணுவது வழக்கம். இந்த உதாரணத்தில் ஒரு முதல்வர் , ஒரு நடிகருக்காக யோசித்தது ராஜேஷை மட்டும் அல்ல… திமுக அனுதாபியான ஓட்டுனரையும் பிரமிக்க வைத்தது… இப்படி பிறருக்கான யோசிக்கும் தன்மை வாசிப்பால் மட்டுமே வரும்.

இலக்கியப்பரிச்சயம் உங்கள் வாழ்வை செழிப்புறச்செய்யும் என்கிறார் சாரு.. இது முற்றிலும் உண்மை..   ஒருவர் மருத்துவராக , எழுத்தாளராக , பொறியாளராக , ஓட்டுனராக , விவசாயியாக , பேருந்து ஓட்டுனராக என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..  யாராக இருந்தாலும் சரி, இலக்கியப்பரிச்சயம் இருந்தால் , அவர்கள் செய்வது கலாப்பூர்வமாக மாறும்..அவர்கள் பிரஞ்ஞையில் ஒரு மாற்றம் ஏற்படும்.
பழுப்பு நிறப்பக்கங்கள் இந்த மாற்றத்துக்கான ஒரு சாவி எனலாம்.


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா