ஒரு பெண் சானிட்டரி நாப்கின் வாங்கி வருவதை பார்த்த ஒரு வாலிபன் கிண்டலாக கேட்டான்.
“ மேடம் ..பிரட் வாங்கிட்டு போறீங்களா? எனக்கு இல்லையா? “
அந்த பெண் சொன்னாள் ‘
: பிரட் சும்மா சாப்பிட்டா நல்லா இருக்காது..கொஞ்ச நேரம் கழித்து ஜாம் தடவி தறேன்,, சாப்பிடு :
இது போன்ற பல ஜோக்குளை அந்த காலத்தில் சொல்லி நண்பர்களை சிரிக்க வைத்து இருக்கிறேன். அவர்கள் சொல்ல நான் சிரித்து இருக்கிறேன்.
இது சிரிக்க வேண்டிய விஷயமா... தாய்மை சம்பந்தப்பட்ட , பெண்களின் வலி மிகுந்த உடல்கூறைப் பொருத்த ஒரு விஷ்யம்.
எனக்கு இந்த புரிதல் ஏற்பட்டு பெண்மையை தற்போது மதிக்கிறேன் என்பது எந்த அளவுக்கு உண்மையோ , ஒரு காலத்தில் கேலி செய்து இருக்கிறேன் என்பதும் உண்மை.
மறந்து விட்ட அந்த சம்பவங்களை நினைவு படுத்து என்னை வெட்கி தலைகுனிய வைத்த்து சென்ற் சனியன்று பார்த்த ஆவணப்படம்..
தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் சார்பில் ஆவணப்பட திரையிடல் மற்றும் குறும்பட ரசனை வகுப்பு சென்ற சனிக்கிழமை சென்னையில் நடந்தது.
மாதவிடாய் (படைப்பு :கீதா இளங்கோவன்) மற்றும் விடியாத பொழுதுகள் (படைப்பு : வசந்த் கே. பாண்டியன்) ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.
அதற்கு முன் அயல் நாட்டு குறும்படம் திரையிடப்பட்டது.தொடர்ந்து ரசனை வகுப்பு நடந்தது. சினிமா கோட்பாடு என்ற அருமையான மொழியாக்க புத்தகத்தை தந்த , திரைப்பட அறிஞர் சிவகுமார் வகுப்பு எடுத்தார்.
சினிமா என்ற பெயரில் வேறு எதையோ பார்த்து நேரத்தை வீணடித்து விட்டோமே என்ற ஆதங்கம் அவர் பேச்சை கேட்டபோது ஏற்பட்டது. சினிமா தர வேண்டிய உன்னத உணர்வை பெறாமல் ஒரு பொழுதுபோக்கு பொம்மைபோல அதை பயன்படுத்துகிறோமே என உண்மையிலேயே வருத்தப்பட்டேன்.
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தது மட்டும் அன்றி அவரும் சில கேள்விகள் கேட்டார். பதில்களில் இருக்கும் போதாமையை சுட்டி காட்டினார். கேள்விகளைப்பற்றியும் தன் கருத்துகளை சொன்னார்.என்னை எதுவும் கேட்டு விடக்கூடாதே என சற்று தலைமறைவாக அமர்ந்து இருந்தேன் :)
அதன் பின் மாதவிடாய் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் படம் என சரியாக சொல்லி இருந்தார்கள்.
மாதவிடாய் என்றால் என்ன, அது சார்ந்த மூட நம்பிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய சுகாதார பழக்கங்கள் , பெண்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் என களப்பணி செய்து பிரசண்ட் செய்து இருந்தார்.
நாமெல்லாம் காட்டுமிராண்டி சமுதாயத்தில்தான் இன்னும் இருக்கிறோமோ என தோன்றியது.
இதை எல்லாம் மூடி மறைத்து , மத சடங்குபோல ஆக்கியதால்தான் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போய் , நான் ஆரம்பத்தில் சொன்னது போல முட்டாள்தனமாக சிலர் நடந்து கொள்வதில் முடிகிறது.
அரசு, தனியார் நிறுவனங்கள் , பள்ளிகள் போன்றவற்றில் இதற்காக எந்த சிறப்பு வசதிகளும் செய்யப்படுவதில்லை..அதற்கு நிதியும் ஒதுக்கப்படுவதில்லை.
ஒரு பெண் உறுப்பினர் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ எழுந்து நின்று இதற்காக நிதி ஒதுக்குங்கள் என கேட்க கூச்சப்படுவது யதார்த்தம். அவர்களே அப்படி என்றால் சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள்?
மாற்றுத்திறானிகளான பெண்கள் அனுபவிக்கும் கொடுமை சொல்லி மாளாது.
பேசத்தயங்கும் இந்த விஷ்யத்தை கையில் எடுத்து, தெளிவாக படம் எடுத்த கீதா பாராட்டுக்குரியவர்.
அரங்கில் அவரைத்தவிர அனைவரும் ஆண்களே.
அவர் உள்ளத்தில் ஒளியுடன் அத்தனை ஆண்கள் மத்தியில் இந்த பிரச்சினை குறித்து பேசியபோது அனைவருமே மிகவும் பிரமிப்போடும் மரியாதையுடனும் அவர் பேச்சை கேட்டார்கள்.
சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள், இது வரை புரியாமல் நடந்து கொண்டதற்கு சிலர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்கள்.
இரண்டாவதாக திரையிடப்பட்ட ஆவணப்படம் விடியாத பொழுதுகள். இலங்கை ராணுவத்தால் கஷ்டப்ப்படும் மீனவர்களைப் பற்றிய படம்.
உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமை, ஒரு நாட்டு மீனவர்களை இன்னொரு நாட்டு ராணுவம் தாக்குவது.
வேறு எந்த நாடாக இருந்தாலும் , தன் நாட்டு குடிமகன் தாக்கப்படுவதை பார்த்து கொண்டு இருக்காது, ஆனால் இதை ஒரு பொருடடாகவே நினைக்காத இந்திய அரசு. இது தன் இறையாண்மைக்கு இழுக்கு என்பதையே புரிந்து கொள்ளவில்லை என்பதை ஆவணப்படுத்து இருந்தார் வசந்த் பாண்டியன்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் பார்வையில் பிரச்சினையை சொல்லி இருந்தது சிறப்பு.
பேசக்கூச்சப்படும் விஷயம். பேச மறந்து போன விஷ்யம் என இரு முக்கிய பிரச்சினைகளைப்பற்றிய படங்களை திரையிட்டு இருந்தது நிறைவாக இருந்தது.
வாய்ப்பு கிடைக்கையில் இந்த படங்களை பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.

