Wednesday, July 31, 2013

எழுத்து தன்னைத்தானே எழுதிக்கொள்ளுமா? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் கவிதை சார்ந்த உரையாடல்

நானும் நிர்மலும் சும்மாவே பேச்சு பேச்சு என பேசிக்கொண்டு இருப்போம். ஏதாவது புத்தகம் பற்றி என்றால் கேட்கவே வேண்டாம்.


நிர்மல் சென்னை வந்தபோது அவர் தேடிப்பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று கவிஞர் றியாஸ் குரானாவின் ”நாவல் ஒன்றின் மூன்றாவது பதிப்பு "
எனும் கவிதை நூல்.

இந்த நூல் குறித்தும் , கவிதைகள் குறித்தும் றியாசிடம் பேசினோம். அதில் இருந்து சில துளிகள்.


******************************************************************

ஆபத்தான ஒரு உலகினுள், பதற்றமின்றி நுழைவதற்கு உதவும் வழிகாட்டிதான் எனது கவிதைகள்.
கவிதை புரிந்துகொள்ளும் ஒரு அம்சமல்ல. புரிந்துகொள்ள முயற்சிப்பதை சிக்கலாக்குவது.
கற்பனையின் விதிகள் எப்போதும் புரிந்துகொள்ளுவதற்கு எதிரானது. ஆனால், ஒருவகை புரிந்துவிட்ட நிலையை உருவாக்குபவை. கடைசியில் எதுவும் துல்லியமாக பிடிபடுவதிலல்லை. இதைச் செய்யும் அனைத்துப் பிரதிகளும் கவிதையின் அனுபவ வெளிக்கு நெருக்கமானதே.


மிகத் துல்லியமாக அர்த்தத்தை ஒரு பிரதி வெளிப்படுத்திவிட்டால் அதன் வேலை அத்தோடு முடிவடைந்துவிடுகிறது. அதற்கு மேல் அதன் சுவரஷ்யம் வற்றிவிடுகிறது.
அது ஒரு திட்டமிட்ட கற்பனைச் செயல்.
கவிதை பிறப்பதில்லை. சிந்திக்கிறோம். அவ்வளவுதான்.



கற்பனைச் செயல் என்பது திட்டமிட்டதுதான். மொழியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதானே. நாம் அதில்தான் சிந்திக்கிறோம். அப்போது, தானாகவே எப்படி வரும்.
நமது ஆன்மீக புரிதல்கள், தங்களுக்கான அறிவு எங்கோ இருந்து வந்ததாக சொல்லிக்கொண்டதன் தொடர்ச்சியே இது.
அதை, இலக்கியத்திற்கும் பொருத்திவிட்டார்கள்.


கவிதை தன்னை தானே எழுதிக்கொண்டது...எழுத்து தன்னை தானே எழுதியது என்கிறார்கள்... நீங்களோ திட்டமிட்டு எழுதுவ்தாக சொல்கிறீர்களே

ஆன்மீக மனநிலையின் பிடிவாதமான தாக்கத்திலிருந்து ஒருவிதமான தளர்ந்த நிலையை இன்னும் நாம் நெருங்கிவிடவில்லை. அதனால்தான், இன்னும் எங்கிருந்தோ உதிப்பதாக கருதுகிறோம்.


திட்டமிட்டு எழுதுவது craftmanship என்றும் spontaneous ஆக பிறப்பதுதான் படைப்பாற்றல் என்றும் சிலர் சொல்கிறார்களே


திட்டமிடல் என்பது ஆரம்பிப்பதற்கான ஒரு விசயம்தான். அதைத் தொடர்ந்து உருவாகும் கற்பனைகள் எழுத்தை தொடர உதவும். ஒன்றிலிருந்து மற்றயதற்கு தாவிச் செல்ல மிக வேகமாக சிந்தனை திட்டமிடுகிறது. அவை அனைத்தையும் இணைத்தே கற்பனைச் செயல் என்கிறோம். இந்தக் கற்பனைச் செயல் என்பதற்கு நிகரான சொல்லாக தன்னைத்தானே எழுதியது என்று பொருள் கொண்டால் அதை ஏற்க முடியும்.
தன்னைத்தானே கடவுள் உருவாக்கிக்கொண்டார் என்பதுபோன்ற, பின்தங்கிய ஒரு கருத்துத்தான் அது.


கவிதைதான் கலைவடிவங்களில் மிக உயர்ந்தது என்ற தேவதேவன் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்

ஹா..ஹா... மிக முக்கியமான ஒரு அறிவிப்பாக இதை கருத பலர் இருக்கக்கூடும். அவர்களின் நம்பிக்கையை குறைகூறத் தேவையில்லை. ஆயினும், ஒன்றை யோசித்துப்பாருங்கள். ஒன்றைவிட மற்றையது உயர்ந்தது என கருதும் தேவையும், அதைக் கடைப்பிடிக்கும் அவசியமும் வரலாற்றில் யாரிடம் இருந்து வந்திருக்கிறது? வன்முறையை மனதார ஏற்றுக்கொள்பவர்களிடம்தான். கலை மாத்திரமல்ல மனிதச் செயல்கள் வன்முறை நீக்கத்தைப் பற்றி அக்கறைகொள்ள வேண்டும் எனக் கருதுபவன் நான். எனக்கு எதையும் உயர்ந்தது எனச் சொல்லவோ, அதைக் கடைப்பிடிக்கவோ அவசியம் ஏதுமில்லை. கலை மாத்திரமல்ல, சூ போவதும் முக்கியமான ஒன்றுதான். கலைக்கு கொடுக்கும் அனைத்து இடங்களையும் இதற்கும் வழங்க விரும்புகிறேன். ஒரு அழைக்கும் வசதிகருதியே கலை என்ற பெயரிடலையும் பார்க்கிறேன்.
இப்படிச் சொல்லுவதினுாடாக தேவதேவனின் கவிதைகளை மறுப்பதாக ஆகாது. அவரின் சிந்தனையின் பெரும்பகுதி வன்முறையாக இருக்க முடியாது. அதுகுறித்த புரிதல் இல்லாது இப்படியான ஒரு முக்கியத்துவத்தை கவிதைக்கு அவர் வழங்கியிருக்கலாம். அதுதவிர தான் செயலாற்றும் ஒன்று என்பதாலும் இப்படிச் சொல்லியிருக்கலாம்.





மிக இலகுவானதுதான் எனது கவிதைகள். நுழையுங்கள். உள்ளே வழிகாட்டிகளும் அதற்கான கையேடுகளும் இல்லை.
விரும்பியபடி பயணிக்கலாம்.



கவிதை என்பது திட்டமிட்ட கற்பனைச் செயல் என்பதை அறிவிக்கிறது. ஆனால், அதன் உள்ளக செயற்பாடுகள் முற்றிலும் வேறு ஒன்றை பேச முற்படுவதாக அமைந்தும் இருக்கின்றன.



இங்கு காலைத் தேனீர் என்று ஒரு கவிதை இருக்கிறது பாருங்கள்.


காலாவதியாகிப்போன நாளொன்றின்
காலைப் பொழுதிற்காக
காத்திருக்கிறேன்.

கடந்தது மீள வராது

ஆயினும்
நான் சந்தித்தேயாக வேண்டும்

அந்திப் பொழுதிலிருந்து
பின்நோக்கி நடக்கிறேன்

அல்லது சிந்திக்கிறேன்

கொஞ்ச நேரம்
எதுவும் தெரியவேயில்லை

அது எனது பகல் தூக்கம்

பின்னோக்கி வருவதுபோல்
பாவனை செய்தபோதும்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்

;காரணம்

கனவில் அவள் தந்த கடிதத்தை
வாங்கிச் செல்கிறாள்

அதுபோல இருந்தது

அதுதான் நிகழ்ந்தது

பின்னோக்கி வரும்போது
தந்தது வாங்கியதாக மாறிவிடும் அல்லவா

மன்னியுங்கள்
மீண்டும் சிந்திக்கலாம்

உச்சி வெயில்

சூட்டை அதிகரிக்கும்
ஆடைகளை உடுத்துகிறேன்

நிலத்தினுள் இறங்கிவிட்ட,
நான் குளித்த நீரையெல்லாம்
கிணற்றுக்குள் ஊற்றுகிறேன்

தலைமயிர்களுக்குள் தங்கிய ஈரமும்
வடித்தெடுக்கப்படுகிறது

சந்தையிலிருந்த மிகவேகமாக
சைக்கிளை பின்நோக்கிச் செலுத்துகிறேன்

எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்த்தபடி
முன்னோக்கிச் சென்றுகொன்டிருக்கின்றனர்

ஏனெனில், அவர்கள்
கடந்துபோன காலைப்பொழுதை சந்திக்கும்
முயற்ச்சியில் இறங்கவில்லை

முதல்முறை சந்தைக்கு போகும்போது
நானும் அவனும்
அருகருகே பேசிக்கொண்டு போனோம்

இப்போது நாங்கள் தனியே பேசிக்கொண்டு
அவன் முன்னோக்கியும்
நான் பின்நோக்கியும் விரைகிறோம்

சரியாக வீட்டில் வந்து நின்றது

பறவைகளின் ஒலிகள்
வெளியில் பரபரப்பாக இருக்கின்றன

தற்போது காலைப்பொழுது

இனி முன்னோக்கிப் பயணிக்கலாம்

ஆவிபறக்க
தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

இந்தத் தேனீரைத்
தவறவிட்டதனால்,

ஒரு பகற்பொழுதை
முன்னோக்கியும் பின்னோக்கியும்
கடந்துசெல்ல வேண்டிவந்தது

இரண்டுமுறை.




ஆமாம், வாக்கியங்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். அதைப் படிக்கும்போது, படிப்பவர் கவிதைக்கான அனுபவத்தை கண்டுகொள்கிறார். அதைக்குறித்து சொல்ல முடிவதில்லை. ஏனெனில், வரிகளைச் சொல்லி எனது கவிதைகளை இன்னொருவருக்கு எடுத்துச் செல்ல முடியாது.
முற்றிலும் ஒரு கவிதைச் சம்பவத்தை கதையாக சொல்லுவதினுாடாகவே மற்றவருக்கு கடத்தலாம்.
அதனால்தான், கவிதை இருப்பதில்லை என்றேன்.

இந்த காலை தேனிர். வாசித்து கொண்டிருக்கிறேன். அருமையாக இருக்கிறது. டைம் ட்ராவல், reversing time.

இந்தக் கவிதையைத் திட்டமிட அதிக நாட்களை செலவிட்டேன்.


தேனீர் ஒரு - Now என எடுத்துகொள்ளலாமா
present moment- அதை தேனீர் என எடுத்துகொள்ளலாமா. அப்படித்தான் எனக்கு தோனுகிறது.



அப்படி எடுத்துக்கொண்டால், அதன் எல்லைகள் விரிவானது.


சாதாரண வாசகர்களும் இக்கவிதையை எதிர் கொள்ளுவர்.
இப்படி.
காலையிலட தேனீரை அருந்து மறந்துவிட்டதை, மலை நேரத்தில் நினைவுக்கு வருகிறது. தவறவிட்டதை அருந்தியே ஆகவேண்டும் என மனம் விரும்புகிறது.அதற்கு தெரியும் வழி என்னவென்றால், மாலையிலிருந்து திரும்பி நடந்துவந்து காலையை சந்திப்பதுதான்.
காலம் என்பது, மூன்று பிரிவுகளாக இல்லை. அது now தான் ஆக, ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்லுவது கற்பனைரீதியான சாகசம் அல்ல. அது எதிர்கொள்ளும் புனைவுகளின் சவால்கள் ஒன்றுமே இல்லை. கடந்துபோன சம்பவங்களை பின்னோக்கி வரும்போது எப்படி எதிர்கொள்வது என்பதை ஓரளவு உணர்த்தக்கூடிய சம்பவங்களை உருவாக்குவதுதான்.




கவிதையிருக்கும் நான் மாத்திரமே திரும்பி வருவதாகவும், மற்றைய சம்பவங்கள் அப்படி நடக்காதமாதிரியும் காட்டுவதுதான் எனது கற்பனை உழைப்பு. அதுவே, ஒரு புதிய வெளியை தந்துவிடுவதுபோன்று தோற்றமளிக்கிறது. இதை கவிதையில் செய்திருப்பதால் கவர்ச்சியாக இருக்கிறது அவ்வளவுதான்.



, சாத்தியமின்மையை உணர வைத்தபடியே கற்பனையில் மிதக்க வைப்பதை ரசித்தேன்

ஆமாம். வாசிக்கும்போது மாத்திரமே கவிதையை காணமுடியும். மற்ற நேரங்களில் அது கவிதையாக பின்தொடராது.


அப்போ the now இந்த ”கவிதை” அல்லது செய்யும் அந்த செயல்.




ஆமாம். the now என்பதை கலைத்துப் பார்க்கவும் முடிகிற தருணங்கள் உண்டு. இப்போது, என்பது பல்லாயிரம் நுண்கணங்களால் ஆனது. மறுதலையாகப் பார்த்தால், பல்லாயிரம் நுண்கணங்களைக் கொண்டே இப்போது என்பது இருக்கிறது.
மிலிந்த அரசனின் ரதம்
அதுபோல,பிளட்டோவின் ரதம் குறித்த உரையாடல்.
கதாஉபநிடதம் கூறும் ரதம்.
இவைகள் இந்த இப்போது என்பதை அதிகம் விவாதித்திருக்கின்றன.

மூன்று ரதம் குறித்த கதைகளையும் வாசித்துப்பாருங்கள். அதுதான் நமது ஆன்மா,மற்றும் அறிவியல் குறித்த அனைத்துக் கதைகளையும் பெருக்கிய கதையாடல்.


கண்டிப்பாக வாசிக்கிறேண், றியாஸ். இப்படியான தேனிர் கவிதை இன்னொன்றும் வாசித்தேன். -
மேசை மீது ஆறிகொண்டிருகிறது தேனிர்



ஜென் தேனீர் எப்போதும் ஆறுவதில்லை என்று சொல்லும்.
நான் ஆறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறேன்.
ஆறிவிட்டது என அதற்கு பொருளல்ல.


குடித்துவிட்டல் ஆறாதுதானே

ஆறிவிடும் என்பதும் அதன் பொருளல்ல.


இன்ஃபினிட்டி
முடிவுறாக்காலம்



தேனீரைக் குடிப்பதற்கும் நான் இடம் வைத்திருக்கவில்லை அல்லவா?
முடிவுறாக்கால் என்று ஒன்று இல்லை. காலம் முடிவற்றதாகவே இருக்கிறது. அப்படி சிந்தித்துவிடுகிறேன்.


ஆமாம் அதற்க்குள்தான் அவள் எதிர்காலத்தை நோக்கியும் அவன் கடந்த் காலத்தை நோக்கியும் நகர்த்திவிட்டிர்களே.


ஆகவே, தேனீர் ஆறிக்கொண்டிருக்கிறது.


தேனீர் ஆறுவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய என தெரியவில்ல்யே. அதில் வரும் அந்த “ அவள்” நான். எப்போது எதிர்காலத்தை நோக்கியே ஒடுகிறேண்.
இந்த சிந்தனையை தருகிறது அந்த கவிதை.




இரு முனைகளும் ஒரு இடத்திலிருந்து பிரிந்து செல்கிறது என்று ஒன்றை சொல்கிறேன். இப்போது என்பதிலிருந்து இரு புறத்திற்கு செல்லுவதாக. ஆனால், இறந்த காலத்திலிருந்து வளர்ந்து படிப்படியாக எதிர்காலத்தை அடைவதாகவே பொதுவாக நம்பும் இடத்தில் இது விவாதிக்கப்பட வில்லை.



dictionary of khazar நாவலில் இப்படித்தான் சொல்லிருப்பார்.


இதையும் சற்று படித்துப்பாருங்கள்.
துண்டு துண்டாக தென்படும் இடங்களிலிருந்து எல்லாம் காலம் உருப்பெறுவதாக சொல்லியிருப்பாரே.. அல்லது அப்படி அது அமைந்திருக்கும்.


நான் குளிக்கவில்லை


றியாஸ் குரானா

கிட்டத்தட்ட 60 தொடக்கம் 100 வரையான
மழைத்துளிகள்தான் பொழிந்தபடி இருக்கின்றன
ஒவ்வொன்றும்
சுமார் இரண்டடி இடைவெளியில்
பெரும் துளிகளாக விழுந்து
உடைந்து தெறித்தவண்ணமிருக்கின்றன

நிலத்தில் சிதறிவிழும் துளிகள்
கைரேகையளவு நதியாய்
வீதியெங்கும் பெருகியபடி இருக்கையில்,
அதனூடாக பயணிக்க வேண்டிய
நிர்ப்பந்தத்தில் நான் இருக்கிறேன்

நனைந்துவிடாமல் இருக்க
நதியினை எட்டிக் கடந்து நடப்பதும்
துளிகளுக்கிடையிலான இடைவெளியில்
ஒழிந்து
மறுக்கி
மறைந்து பயணிப்பதும்
பெரும் சவாலாகவே இருக்கிறது

தலைக்கு மேலாக
இரைந்துகொண்டு வரும் பெரும் துளிக்கு
இடம்விட்டு
மறுதுளி வருவதற்குள் பாய்ந்து
பா..... அதுவொரு போராட்டம்

இத்தனை சிரமத்திற்கும் மத்தியில்
கொஞ்ச தூரம்போய்
திரும்பிப் பார்க்கையில்தான் அறிந்தேன்
மழை என்னை மட்டுமே குறிவைத்து
பின்தொடரந்து வருவதை

எவ்வளவு வேகமாகச் செல்கிறேனோ
அவ்வளவு வேகமாக
என்னைத் துரத்திக்கொண்டுவருகிறது

இனித் தப்பிக்க வழியில்லை
ஆதலால், நனைந்தேன் என்று
சொல்லலாமா என்று யோசிக்கிறேன்

அருகிலிருக்கும் வீடொன்றில்
நுழைந்தேனென்று சொல்லலாமென பார்த்தால்
அந்த வீட்டுக்குள் நுழைந்ததும்
அங்கும் மழை பொழிந்தது

மழையே கொஞ்சம் நில்..
எனக்கொரு சந்தேகம்
இன்று காலை
நான் குளிக்கவில்லை என்று
யாருனக்குச் சொன்னதெனக் கேட்டேன்

அக்கணமே மறைந்துபோனது

துரத்திக்கொண்டிருந்த மழை



ஆமாம்.
குளிக்கவில்லை கவிதையை நான் வாசித்தவுடன் தோன்றியது மழையை காதலாக, அன்பாக. எப்போது அன்பு காரணப்படுத்தபடுகிறதோ அப்போது அங்கு மழை இல்லை. இது முதல் வாசிப்பில் தோன்றியது.






அது தரும் அர்த்தத்தை யோசிக்கிறீர்கள். நல்லது. ஆனால், அதை உருவாக்க கவிதை எப்படி நகர்கிறது என்பதே ஒரு அலாதியான விசயம்தான்.



மழை என்னை மட்டுமே துரத்துவது காட்சி ரீதியாக ஒரு நிலவியலை உருவாக்குகிறது.
மழைத்துளிகளிடமிருந்து தப்புவது.



இது காதலில் வரும் அயர்சியை முற்றாக நினைவுபடுத்துவதுதான். இப்படி சில காதலுக்குரிய தன்மைகளை இக்கவிதையின் இடையிடையே வைத்திருப்பேன் கவனிக்கப்படுவதில்லை அவை...


ஆனால் முடியவில்லை இருந்தும் துரத்துகிறது. so மழையை நிறுத்தவே அந்த கடைசி கேள்வி. so it is a deliberate act.


அக்கணமே மறைந்தது மழை என்ற கூற்று ஒரு வகை மாயமான புனைவுபோல தோன்றினாலும். காதலும் கணத்தில்தான் மாற்றமடைகிறது. என்பதை கூறுவதுதான்.




எப்படியான மழையாகவிருந்தும் நான் நனையவில்லை என்பதை மீண்டும் வாசகனுக்கு உறுதிப்படுத்தும் இடமும் அதுதான். அதன் பின்னே, கவிதையின் தீவிரமான இரண்டாம்பகுதி நோக்கி கூட்டிச் செல்கிறது கவிதை.
எந்தக் குளுவும் இல்லை.

மழை இயல்பாக பெய்வதுதான். அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறான் என்பது

ஆனால், சற்று நேரத்தின் பின ஒரு ஆபத்தை சந்திக்கிறான். அதாவது, தன்னை மாத்திரமே மழை துரத்துவதை உணருகிறான். எப்படி அதிலிருந்து தப்பித்தான் (பிரிந்தான்) என்பதாக யோசித்தால் அங்கே காதலுக்கான வாய்ப்பு அதிகமுண்டு. இப்படி யோசித்துப்பாருங்கள்.



ஆயினும், மழையை கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறேனெ ஒழிய. இயற்கையான மழையையொ, அதன் தன்மைகளையொ நான் பிரதி பண்ணவில்லை. இந்தக் கவிதைக்கென முற்றிலும் வேறான தன்மைகளையும் பண்புகளையும் கொண்ட மழையை உருவாக்கியிருக்கிறேன்.


யெஸ், இங்கு காதல் என வார்த்தை வந்திருந்தால் இந்த அர்ந்தங்கள் கிடைத்திருக்காது. பன்முகத்தன்மை


மழை என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்துமே எனது திட்டமிடலடகள்தான்.
ஆக, புதிய ஒரு மழையை உருவாக்கியிருக்கிறென். இது திட்டமிட்டு கொண்டுவந்த ஒரு மழை.


ஆனால் திட்டமிடாமலேயெ மேலும் சில அர்த்தங்கள் கவிதைக்க்கு அமைந்து விட்டன,,,,author is dead


ஆமா...
ஆசிரியர் இறப்பதில்லை, புதிது புதிதாக பிறக்கிறார் அதனால்தான் முன்பிருந்தவர் இறக்கிறார்.

அவைகளை புரிந்துகொள்வதில் அனைவரும் பங்களிப்புச் செய்வோம்.
தேனீர் ஆறிக்கொண்டிருக்கிறது.
என்பது தலைப்பல்ல. அக்கவிதையின் கிளைமாக்ஸ் வரி.
ஏதாவது ஒரு இடத்தில் வரக்கூடிய ஒரு வரியை தலைப்பாக ஆக்கிக்காட்டியிருப்பேன்.
இது முற்றிலும் புதிய தொழில்நுட்பம்.



அதுபோல, தயவு செய்து இந்தப் பிரதியை வாசிக்க வேண்டாம் என்ற கவிதையும் அப்படித்தான்.



தலைப்பு என்பதும் கவிதையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். அதைத்தவிர முக்கியமான வேறு வேலைகள் இருக்கக்கூடாது.

இரவை அணுகுதல்


றியாஸ் குரானா
Non Linear Poem
பனி இறங்கிவர தாமதிக்கின்றன

சட்டென்று
அந்தத் தெருவில் தோன்றுகிறேன்

கிணற்றிலிருந்து எட்டிப் பார்க்க
நிலா முயற்சிக்கிறது

பாடலொன்றை
தெருவெங்கும் துரத்துகிறது காற்று

முன்பின் அறியாத ஒருவனைப்போல்
பரபரப்பாக கவனிக்கப்படுகிறேன்

நாய்க்கூட்டம் நீந்தி வந்து
வேலி இடுக்குகளில் புதைகின்றன

நினைவு தப்பி
கலவரங்கள் மறந்துவிடுகின்றன

என்னைக் கடந்து சென்ற மழை
நான் நின்ற தெருமுனையை அடைந்து
திரும்பி வந்து கொண்டிருக்கிறது

மிக லாவகமாக அடைத்த பின்னும்
கற்பனைக்கு வெளியில் நாயின் வால் அசைகிறது

குறுக்கிடும் சிலரின் கண்கள்
தூக்கிச் சென்ற என்னை
மரத்தில் தொங்கவிடுகின்றன

இழுத்துச் சென்றவர்களின் கைதவறி
கீழே விழுந்து விடுகிறது இரவு

ரகசியமாக பாதுகாத்த பொருட்களைக் கூட
தொலைத்துவிட்டு அவனோடு தேடுவது நல்லது

கற்பனையின் பல தருணங்கள் குழம்பி
திக்கற்ற காட்டில் விடப்படுகிறேன்

படிக்கட்டின் பின்புறம் மறைவாக
கோழைத்தனமான காலடிகள்
ஏறிக்கொண்டிருக்கின்றன

சில நிமிட இரவிலிருந்து
பலவந்தமாக வெளியேற்றப்படுகிறேன்


ஒரேயொரு இரவில் நடந்து விடுவதில்லை




இது முற்றிலும், புதிதான ஒன்று. வழமையாக கவிதைகளை அனுகுவதைப்போன்று இதை அனுக முடியாது. வாசித்துப் பாருங்கள். ஆமமாம் நிர்மல் தோழர்.
எப்படியான பார்வையாளரையும் துரத்திவிடாமல் அனுசரிக்க முடிகிற பிரதியாக இருக்கிறதா எனப்பார்ப்பதையே விரும்புகிறேன். அது கவிதையா இல்லையா என்பதை முதன்மைப்படுத்த தேவையில்லை.


space reversal மாதிரி இருக்கு, வாசிக்கும் போது தரும் உணர்வு இதுவரை ஏற்ப்படாத ஒன்றாக இருக்கிறது.


கற்பனைக்கு வெளியில் நாயின் வால் அசைகிறது


ஆமா, எவ்வளவுதான் அடைத்தாலும் கற்பனைக்கு வெளியே இருக்கிறது என்பது ஒன்று. நாயின் வால் இப்படித்தான் என்பதுபோல் ஒரு தோற்றம் என அது தருகிறது. நாயைத் தவிர வேறு எதன் வாலாக கருதினாலும் இப்படிக் கவர்ச்சி அதற்கு வந்திருக்காது.


புளிய மரத்தில் காகங்கள் வந்து நிற்கின்றன.
மகன் கல்லெறிந்து அவைகளை துரத்த முயற்சிக்கிறான்.
காகங்கள் உசும்பாது அப்படியே நிற்க, மரத்திலிருந்து அனைத்து இலைகளும் பறந்து சென்று சற்றுத் தொலைவிலிருந்து மரத்தில் அமர்ந்தன. ஏமாற்றத்தோடு திரும்பி வந்தான்.


எனக்கு புரியவில்லை. ஆனால் அதன் காட்சி அமைப்பை ஒரளவுக்கு என்னால் கொண்டுவர முடிகிறது.


அவை துண்டுத் துண்டு சம்பவங்கள். எந்தத் தொடர்புமற்றது.



ஒன்றின் பின் ஒன்றாக இருப்பதைத் தவிர வேறு எந்த உறவும் அவைகளுக்கு இல்லை.





ஆனால், இவை ஒரு இரவில் நடந்துவிடுவதில்லை என்ற அறிவிப்பு மாத்திரமே அனைத்தையும் இணைக்கிறது.


அதாவது பல இரவுகளில் நடந்தவற்றை இங்கு தொகுத்து வைத்திருப்பதாக அறிவிக்கிறது.




இதையும் படிச்சுப்பாருங்கள்.


பிம்பங்களோடு ஒரு விடுமுறை நாள்

றியாஸ் குரானா

விடுமுறை நாள் என்பதால்
பிந்தி எழும்பிய நான்
கண்ணாடியின் முன் நின்று பார்க்கிறேன்.
நிலைக் கண்ணாடி
குளமாக மாறியிருந்தது
விரல்களால் தொட்டதும்
கண்ணாடி சுழித்துத் தளம்பியது
விரல்களில் படிந்த ஈரம்
இன்னும் காய்ந்துவிடவில்லை

நிலைக்குத்தாக குளமிருந்தும்
சிறுதுளிகூட வழியவில்லை
மனைவியை அழைத்து
இந்த அதிசயத்தைக் காட்டினேன்

அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போது
நடந்தவற்றில் சில

அவளாடையிலிருந்த புற்கள்
குளக்கரையில் முளைத்து
பூத்துக் குலுங்கின
கொக்குகள் பறந்துபோய்
கண்ணாடியினுள் அமர்ந்து
மீன்களைத் தேடத்தொடங்கின
ஆடையில் அச்சிடப்பட்டிருந்த
மீன்களெல்லாம் ஒரு துள்ளில்
குளத்தில் வீழ்ந்து நீந்தின
வேலைப்பாடுகள் எல்லாம் அழிந்த
கறுப்பு நிற ஆடையுடன் நின்றவள்
என்னை உரத்துக் கூப்பிட்டாள்

திரும்பிப் பார்க்கிறேன்
தனது பிம்பத்தை அனுப்பி
குளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறான்
எனது அன்பு மகன்






பிம்பம் - இங்கு வெரும் reflection என பொருள் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். சரியா றியாஸ்.


ஆமாம்.



. கண்ணாடி பிரதிபலிக்கும் தனது வேலையை செய்யவில்லை. விடுமுறை அதற்கும்தான். அது தான் விரும்பிய வேலைகளைச் செய்கிறது.
இதுதான் இக்கவிதையின் அற்புதம்.
நானே பலமுறை ரசித்திருக்கிறேன். இதை அறிந்த பின் மீண்டும் படித்துப்பாருங்கள். ...

ற்யாஸ் இது ஒரு வித தவ நிலையில் எழுதியது போல இருக்கிறது. மீண்டும் மீண்டும். The Now, இந்த கணம் பற்றீய விழிப்புணர்வை தருவதாக இருக்கிறது. இதுவே ஜென், வேதம் இலக்கியம் இறைவன் ஆன்மிகம் என எல்லாவற்றயும் இனைப்பதாகவும் இருக்கிறது.
இது உங்களின் திட்டமிடலா. அல்லது விளைவா, அல்லது உங்களின் அனுபவமா?


கற்பனைச் செயல். அதாவது சிந்தனை.
கற்பனையை மேலதிகச் சிந்தனை என்றே நான் அழைப்பேன்.



சூப்பர். இந்த முறை சிந்தனை தவம் போலதான். அதே முறையான சிந்தனையை உங்கள் வாசகனும் அடைவான்.


வாசகனைக் கைவிட்டுவிடாது என்றே நம்புகிறேன். கவிதையின் வெளி வடிவமும், அதில் இருக்கும் மாயமான கவர்ச்சியும் யாரையும் இலகுவில் கவரக்கூடியதுதான். ஆழமான வாசகர்களையும் நெருங்கும் ஆற்றல் உண்டு என்றே நம்புகிறேன்.


இலக்கியம் எப்போதும், துல்லியமான உண்மைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அவைகளுடன் புனைவுகளையும் இணைத்து தர விரும்புகிறது. ஆனால், அரசியல் நிலவரம் என்பது உண்மைகளை வெளியே கொண்டுவருவதினுாடாக கடக்கப்பட வேண்டிய ஒன்று. ஆகவே, அதற்கு இலக்கியம் எப்போதும் பிரயோசனப்படாது.


இன்னும் உங்கள் கவிதை தொகுதிகளை வாசித்துவிட்டு அதன் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். உங்கள் புத்தகத்தின் முகவுரையில் அந்த scene setting/ land scaping/ The Now பற்றிய சிலாகித்து எழுதியிருக்கலாம்.


இல்லை, அதிகமான விபரிப்புகள் கவிதையை புரிந்துகொள்ளும் தடையை உருவாக்கிவிடும். நாம் காட்டும் வழிகளையெ பயன்படுத்தி அதற்குள் மாத்திரமே நின்று கவிதையை புரிந்துகொள்ள வேண்டிவரலாம்...


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா