Saturday, August 6, 2016

கபாலி - இருண்ட வானில் ஓர் ஒளிக்கீற்று

இலக்கிய இதழ்கள் , ஆன்மிக இதழ்கள் என அனைத்திலும் கபாலி விமர்சனம் வருகிறது.. வட இந்திய இதழ்களில் கபாலி குறித்த செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன..
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னமும் கபாலி ஜுரம் தணிந்தபாடில்லை. பாக்ஸ் ஆஃபிஸ் பழைய சாதனைகளை கபாலி தொடர்ந்து முறியடித்து வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் ரஜினி என எளிமையாக கூறி விட முடியாது.. ரஜினி மேஜிக் தவிர வேறு சில அம்சங்களும் படத்தில் உள்ளன

ஐரோப்பிய படங்களைப் பார்க்கையில் இது போன்ற படங்களை தமிழில் என்றேனும் பார்க்க முடியுமா என்ற ஏக்கம் ஏற்படும்... ஆனால் நம் ஊரில் நல்ல படம் என்றால் ஊளையிட்டு அழுவது , மேக் அப் போட்டு பல்வேறு விதமாக ஃபேன்சி டிர்ஸ் போட்டி போல நடித்துக்காட்டுவது என மூளை சலவை செய்து வைத்துள்ளனர்...

பார்வையாளனை அழ வைப்பதே நடிப்பின் உரைகல்லாக நினைத்து வருகின்றனர். எனவே தமிழில் நல்ல படங்கள் என்பது இல்லாமல் போய் விட்டது.

இதை சற்று மாற்றி அமைத்துள்ளது கபாலி எனலாம்.

 நாயகன் , அவனுக்கு ஏற்படும் பிரச்சனை, அதை அவன் எப்படி தீர்க்கிறான் என்ற டெம்ப்லேட்டில் எழுதப்ப்டுவதுதான் சிறந்த திரைக்கதை என சிட்ஃபீல்ட் போன்றோர் தவறாக வழி நடத்தி டெம்ப்லேட் படங்களை உரமூட்டி வளர்த்தனர்... பிரதான பாத்திரங்களை முதல் சில நிமிடங்களை அறிமுகம் செய்து விட வேண்டும்... படத்தின் ஆரம்பத்தில் ஒரு துப்பாக்கி காட்டப்பட்டால் , படம் முடிவதற்குள் அது வெடித்து விட வேண்டும் போன்ற கருதுகோள்கள் , எளிமையான , சுவையான படங்களை  உருவாக்க உதவக்கூடும்.. ஆனால் இவை நல்ல படங்கள் என்பதற்கான இலக்கணம் அல்ல... ஹிட்ச்காக் , டொரண்டினோ , க்றிஸ்டோபர் நோலன் போன்றோர் படங்கள் இந்த டெம்ப்லேட்டில் அமைவதில்ல்லை

இந்த டெம்ப்லேட்டில் அமையாத நல்ல படங்கள் தமிழில் வந்ததுண்டு.. ஆனால் ஒரு மாஸ் ஹீரோ நடித்த படம் அப்படி வந்ததில்லை

பாட்ஷா என்றால் யார் , அவனுக்கு என்ன சவால் , அதை அவன் எப்ப்படி தீர்த்தான் , வேலு நாயக்கனின் பிரச்சனை என்ன என ஒரு மையக்கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகரும்.

ஆனால் கபாலி இதில் மாறுபடுகிறது

கபாலி ஒரு சூப்பர் ஹீரோ அல்ல... அவனுக்கும் வலி இருக்கிறது...இன்னும் எத்தனை கஷ்டங்களை பார்க்கப்போகிறேனோ எனும் திகைப்பு இருக்கிறது... இவை எல்லாம் கனவாகி மறைந்து விடக்கூடாதா எனும் பரிதவிப்பு இருக்கிறது... மனசு என்னவோ போல இருக்கு அமீர் என புலம்ப ஒரு நண்பன் தேவையாய் இருக்கிறது.... உயிர் காப்பாற்ற மகளின் உதவி தேவைப்படுகிறது


கபாலியின் சவால் என்ன , அவன் அதை எப்படி தீர்த்தான் என்ற நேர்க்கோட்டில் கதை நகர்வதில்லை....மையம் அற்ற பிரதியாகவே படம் உருவாக்கப்பட்டுள்ளது... எனவே யதார்த்ததுக்கு வெகு அருகில் படம் இருக்கிறது..

 

மனைவியை தேடி கபாலி புறப்படுகிறான். சராசரி படமாக இருந்தால் அடுத்த ஷாட்டில் அவன் மனைவி முன் கபாலி இருப்பான். அல்லது ஒரு பாட்டின் முடிவில் மனைவியை கண்டு பிடித்து விடுவான்

ஆனால் இந்த படத்தில் மனைவியை தேடி செல்லும் காட்சி தொடர் ஓர் அழகான குறும்படமாக உருவாகியுள்ளது

ஸ்வீடன் இயக்குனர் இங்மர் பெர்க்மன் எடுத்துள்ள ஒரு படம் wild strawberries...  முதியவர் ஒருவரின் பயணம் மூலம் தன்னை கண்டடைகிறார்... அந்த படம் பார்க்கும்போது ஏற்பட்ட உன்னத உணர்வு இந்த காட்சிதொடரில் ஏற்பட்டது.

முழுக்க கெட்டவர்களும் இல்லை...முழுக்க நல்லவனும் இல்லை... தீமையே உருவான வேலு , ஒரு குழந்தையை பார்த்து மனம் மாறி குழந்தையை காப்பாற்றுவதன் மூலம் தன்னை புதிதாக கண்டடையும் பாத்திரப்படைப்பு போல ஒவ்வொரு பாத்திரமுமே செதுக்கப்பட்டுள்ளது

  உன் கருணை மரணத்தை விட கொடூரமானது

   காலம் மாறிடுச்சு.. ஆனா கஷ்டங்கள் அப்படியே இருக்கு

    என ஆழமான வசனங்கள் படம் முழுக்க..

அதில் வெகு சிறப்பான வசனம் ஒன்று

பறவை பறக்கையில் விதைகளை ஏந்திச்செல்வதில்லை.. காடுகளை ஏந்திச்செல்கின்றன

இந்த வசனத்தை வெகுவாக ரசித்தேன்.. இதை பேசுவது ரஜினி அல்ல... கபாலியின் நண்பராக வரும் ஜான் விஜய்

  நம்பகமாக நண்பனாக வருவது மட்டுமே இது போன்ற கேரக்டர்களின் பணியாக இருக்கும்.. ஆனால் அதை தாண்டி அந்த கேர்க்டரின் மன ஓட்டத்தையும் படம் பிடிக்க விரும்புகிறார் இயக்குனர்

 மூஞ்சி இங்கே இருக்கு என சீறும் யோகி , நான் தமிழ்  நேசனின் பேரன் , துரோகம் செய்ய மாட்டேன் என சீறும் கேரக்டர் ,  உரிமைக்கு குரல் கொடு , கேட்காத மாதிரி நடிப்பார்கள் , தொண்டை கிழிய தொடர்ந்து குரல் கொடு என முழங்கும் தமிழ் நேசன் என மைய கதாபாத்திரத்துக்கு நிகராக ஒவ்வொருவருமே மனதில் நிற்கிறார்கள்

பயமே அறியாத பெண் கேரக்டர் யோகி..ஆனால் தந்தை என்ற உறவு ஏற்பட்டவுடன் அவளை அறியாமல் அச்ச உணர்வு ஏற்படுவதும் , அதை பிறர் காண்கையில் ஏற்படும் நாணமும் கவிதை...

ரஜினியின் கோட் ,  தினேஷின் கண்ணாடி ,  பறவை , வீடு என பொருட்களும்கூட மனதில் பதியும் கேரக்டர்களாக உருவாக்கப்பட்ட்டுள்ளன.

ரசிகனை அழ வைக்க வேண்டும் என இயக்குனர் எந்த இடத்திலும் ஆசைப்படவில்லை... நாசர் கொல்லப்படும் காட்சி போன்ற பல காட்சிகள் கமல் போன்றோருக்கு கிடைத்திருந்தால் , நாயகன் படம்போல தானும் அழுது ரசிகர்களையும் அழ வைத்திருப்பார்கள்... ஆனால் அது போன்ற சினிமாட்டிக் அபத்தங்கள் இதில் இல்லை...

தலித் படம் , கேன்ங்ஸ்டர் படம் ,  குடும்ப படம் என பார்ப்பவர்களே இது என்ன படம் என முடிவு செய்யும்படி படம் அமைந்துள்ளது சிறப்பு


  காதல் என்றால் கட்டிப்பிடிப்பது , முத்தம் கொடுப்பது என வெளிப்படையாக சொல்லியே நம் ஆட்களுக்கு பழக்கம்.... இந்த படத்தில் முத்தக்காட்சி எதுவும் இல்லை.. மாறாக , சட்டையை ஏன் அழுக்காக போடுகிறாய் , ஏன் கோப்படுகிறாய் என  நாயகனை திட்டும் காட்சிகளே அதிகம்.  இதில் இருக்கும் காதலை புரிந்து கொள்வோர் சிலர் மட்டுமே.. அவர்களுக்கு இந்த படம் வேறு விதமாக தோன்றலாம்..

தந்தை செல்வா தலைமையிலான ஈழ போராட்டம் , அவருக்கு பிறகு தீவிரம் அடைந்த அடுத்த தலைமுறை தலைவர்கள் என ஈழ வரலாறு தெரிந்தோருக்கு படம் வேறோர் அர்த்தம் தரலாம்//

இப்படி பல நுண்ணிய உள் மடிப்புகளுடம் படம் மிளிர்கிறது

இவை எல்லாம் சேர்ந்துதான் படத்தை வெற்றிகரமாக ஓட வைத்திருக்கிறதே தவிர ரஜினி மட்டுமே காரணமல்ல

மற்றபடி ரஜினி என்றென்றும் பெருமைப்பட்டுக்கொள்ளும் படங்களில் ஒன்று கபாலி..

சில இலக்கிய நூல்களை படிக்கையில் இதை சினிமாவாக எடுக்கலாமே என தோன்றும்
‘கபாலி பார்க்கையில் இதை ஒரு நாவலாக எழுதலாமே என தோன்றியது

மொத்தத்தில் கபாலி, இருண்டு கிடந்த தமிழ் சினிமா வானில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா