Friday, October 20, 2017

பெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்

ஊடகவியலாளர் , எழுத்தாளர் ,கவிஞர், தலித் செயல்பாட்டார் என பன்முக ஆளுமை கொண்டவர் திருமிகு கவிதா சொர்ணவல்லி.. அவருடன் ஓர் உரையாடல்

--------

குமரகுருபரன் அறக்கட்டளையின் விருது விழா மிகச் சிறப்பாக அமைந்தது.. அறக்கட்டளையின் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன ?

நன்றி  அறக்கட்டளையின் பெயர் JKB Foundation. குமாரின் கல்லூரி பெயர் JKB. இளம் இலக்கியவாதிகளுக்கான குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் செலுத்துவது , பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கைகொடுப்பது என்பது குமார் தொடர்ந்து மேற்கொண்டிருந்த விஷயம். அதை JKB அறக்கட்டளையும் முன்னெடுக்கும். தற்போதைக்கு மருத்துவத்திற்கு, கல்விக்கு நிதியுதவி அளித்துக்கொண்டிருக்கிறோம். என்னுடைய சொந்தப் பணத்திளிருந்தே இதையெல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட சாதிக் குழந்தைகளுக்கு தரமான ஆங்கிலக் கல்வி கற்பிக்க வேண்டுமென்பது என்னுடைய, JKB Foundation உறுப்பினரானவழக்கறிஞர் கிருபா முனுசாமியின் விருப்பம். அதை வெகு விரைவில் மெய்ப்படுத்துவோம்.

குமார் நடத்திக்கட்டியது போன்ற இலக்கிய கூட்டங்களை நடத்தவும், சிறந்த புத்தகங்களை JKB Foundation மூலம் பதிப்பிக்கவும் திட்டம் இருக்கிறது. கை கூடவேண்டும். பார்க்கலாம்.

பெரியாரிஸ்ட்டுகள் பலர் உண்மையான பெரியாரை பிரதிநிதித்துவம் செய்வதில்லை..இது சார்ந்த நிகழ்வுகளை நடத்துவீர்களா ?

இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதில் நிஜமாகவே குழப்பங்கள் இருக்கிறது. இலக்கியமோ, அரசியலோ, அறிவுத்தளத்தில் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படும்போது மீண்டும் மீண்டும் அதே பத்து பேர்தான் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பெண்ணியம் பேசும் கூட்டங்களுக்கு மறுபடி மறுபடி பெண்கள் வருவதில் (அதுவும் பெமினிஸ்ட் பெண்கள் வருவதில்) என்னதான் மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. ஆண்களிடம்தானே அதைப் பேச வேண்டும். அவர்களை அழைக்காத பெண்ணியக் கூட்டங்களைப் போல்தான் இங்கு இலக்கிய கூட்டங்களும், அரசியல் கூட்டங்களும் அறிவுத் தளத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பது என்னுடைய எண்ணம்.

இருப்பினும், இன்றைய கால கட்டத்திற்கு அதிகமும் தேவையாய் இருக்கிற சமூக நீதி, சாதி ஒழிப்பு பற்றிய கூட்டங்களை நடத்த ஆர்வத்துடனே இருக்கிறோம். குறிப்பாக சாதி ஒழிப்பு பற்றி திருமாவை பேச (ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் என்றாலே அது திருமாதானே) அழைக்கும் கூட்டமாக இல்லாமல், சாதி ஒழிப்பு பற்றி அன்புமணி ராமதாசின் கருத்துக்களை, சாதி ஒழிப்பிற்கான அக்கட்சியின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையிலான கூட்டங்கள் நடத்துவதே JKB Foundation-ன் எண்ணம்.

ஆனந்தக்ரிஷ்ணன் பக்ஷிராஜனையும் கருப்பு நீலகண்டனையும் வைத்து பெரியார் பற்றிய கூட்டங்களை நடத்துவதும் எங்களுடைய விருப்பம். அதை சாத்தியப்படுத்த்வோம்.


*புத்த மத தீபாவளி என சிலர் அறிமுகம் செய்வது குறித்து உங்க பார்வை ?
ஒரு தேசமோ தேசிய இனமோ வளருவதற்கு வேறு பல காரணிகளுக்கு அப்பாற்பட்டு பண்பாடு, வரலாறு இன்ன பிற தொடர்பான பொது உளவியலும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, அது ஒரு தேசமே அல்ல. சொல்லப் போனால் வெவ்வேறு தேசிய இனங்களின் தொகுப்பே ஆகும்.
மக்கள் திரள்கள் சாதியடுக்குகளாக இருந்து வருவதால் பொது உளவியலோ பிரக்ஞையோ இருப்பதற்கு மாறாக சாதியப் பிரக்ஞையே இருந்து வருகிறது. இங்கு கொண்டாடப்படும் எந்த ஒரு பண்டிகையும், சாதி மதப் பின்புலமின்றி கொண்டாடப்படுவதில்லை.
மததுக்கென்று பல பண்டிகைகளும், சாதிக்கென்று ஏராளமான விழாக்களுமாக, கொண்டாட்டம் என்பதே மத சாதி வண்ணங்களின் தொகுப்புதான்.
“உனக்கு நீயே ஒளியாய் இரு” என்ற புத்தரின் வாசகத்தோடு தீபாவளி என்பது புத்த ஒளி திருவிழா என்று அந்த மார்க்கத்தை முன்னெடுப்பவர்கள் ஒரு கதை வடிக்கிறார்கள். மகாவீரர் வீடு பேறு அடைந்த தினம்தான் தீப ஆவலியாக கொண்டாடப்படுகிறது என்று ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பின், வழக்கமான நரகாசுர வதக் கதைகள். லக்ஷ்மி வீட்டிற்கு வரும் தினமாக ஒரு கதை. இப்படி எந்த வடிவாக இருந்தாலும் அதன் பின்னணியில் மார்க்கமும் மதமுமே இருக்கிறது. மதமும் மார்க்கமும் முன்னெடுக்கும் எதுவொன்றையும் நாம் நம்பத் தொடங்கினோம் என்றாலே அங்கு பகுத்தறிவு என்பது கேள்விக்குறிதானே.
தீபாவளியை ஒரு இந்து மதப் பண்டிகையாக என்னால் ஏற்க முடியாத சூழலில், அதை புத்த மார்க்க பண்டிகையாகவோ, சமண பண்டிகையாகவோ, மார்வாடிகளின் பண்டிகையாகவோ, சேட்டுகளின் பண்டிகையாகவோ எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.   இதில் எல்லாம் எனக்கு எந்தவொரு பெரிய பிடிப்போ, அல்லது நம்பிக்கையோ இல்லை.
(பிற மதப் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், ரம்சானை மட்டும் வாழ்த்து சொல்லி கொண்டாடுகிறீர்களே என்றால்,,, ஆம். பிறப்பால் நான் ஒரு பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவளாக இருக்கிறேன். அந்த அடிப்படையில் அந்த மதத்தில் நிகழும் சாதிக் கொடுமைகளை என்னால் உரத்துக் கேள்வி கேள்வி கேட்க முடிகிறது. நான் பிறந்த பெரும்பான்மை மதம், தன் பாசிச கைகள் கொண்டு ஒடுக்க நினைக்கும் சிறும்பான்மை மதங்களுக்காக குரல் கொடுக்கவும், அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படாமல் இருக்கவும் பிற மதப் பண்டிகைகளை வரவேற்கிறேன்
*பிறப்பு சார்ந்த பெருமிதம்தான் பார்ப்பனியம் என்பது ஒரு பார்வை.. ஆனால் பெரியாரியம் பேசும் சிலர் தமது குடும்ப பெருமையை பேசுவதை அவ்வப்போது காண்கிறோம்.. உங்க கருத்து ?
கொள்கை சார்ந்த பெருமிதங்கள் இருப்பதில் தவறில்லையே  ஆனால் எந்தக் கொள்கையின் அடிப்படையின் நின்று நாம் பேசுகிறோம் என்கிற விழிப்புணர்வு இல்லாமல் வெறும் “கொள்கை பெருமிதங்களை”” மட்டும் சுமப்பது பார்ப்பனியம்தான்.
“நான் பெரியாரிய குடும்பத்தை சேர்ந்தவள்/வன்”
“நான் அம்பேத்கரிஸ்ட்”
“நான் born DMK”
இப்படி வெறுமனே இந்த கொள்கைகளின் பெருமிதங்களில் நின்று பேசுவதில் என்ன ஆகப போகிறது. இந்தக் கொள்கைகளின் அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா ?
மணியம்மையை திருமணம் செய்தது பற்றிய இன்றளவுமாண  விமர்சனத்திற்கு, இன்றைய காலகட்டத்தில் வளர்ந்த இளம் பெண்ணின் பதில்  “30 வயதுடைய மணியம்மை, (பெரியார் தன்னுடைய திருமணம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே மணியம்மைக்கு 30 வயது என்று குறிப்பிடுகிறார்) தான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தேர்வு செய்வது அவருடைய அடிப்படை உரிமை. 70 வயதான ஆணை அவர் திருமணம் செய்தாலும், 20 வயதுடைய ஆணை அவர் விரும்பி இருந்தாலும், அதை அறிவுத் தளத்தில், அரசியல் தளத்தில் முதிர்ச்சியான, 30 வயதுடைய பெண்ணின் தெளிவான தீர்க்கமான முடிவாகத்தான் அதைப் பார்க்க வேண்டும்” என்பதாகத்தான் இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். அதை விடுத்து, “பெரியாரை எந்தப் பெண்தான் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டாள்” என்பதாக மேம்போக்காக விளக்கமளித்து கடக்க கூடாது என்பது என் புரிதல்.

அண்ணலும் பெரியாரும் சமூக நீதிப் போராளிகள் என்றாலும் வழிமுறைகள் வெவ்வேறு.. ன்றைய சூழலில் யார் வழி பொருத்தமாக இருக்கும் ?

அண்ணலையும்-பெரியாரையும் எதிர் எதிர் வைப்பதை நான் எப்போதுமே ஏற்றுக்கொள்வதில்லை. என்னளவில் அதனை கடுமையாக எதிர்க்கவே செய்கிறேன். அண்ணலின் caste annihilation + பெரியாரின் social justice இரண்டும் இணைந்து முன்பெப்போதும் இல்லாத தீவிரத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா