Saturday, November 12, 2016

தமிழ் சினிமாவின் ஓர் அபூர்வ பாடல் - ஒரு நாள் போதுமா

ஒரு நல்ல சினிமாவில் திரைமொழி , இசை மொழி , உடல் மொழி பல மொழிகள் இருக்கும்... அவற்றுக்கான காதுகள் , கண்கள் திறக்கும்போதுதான் அவற்றை முழுமையாக ரசிக்க முடியும்...

உதாரணமாக திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு நாள் போதுமா என்ற பாடல்... திமிர் பிடித்த ஒரு வட இந்திய பாடகர்  ,  தமிழக அரசவைக்கு வந்து என்னைப்போல யாரும் இல்லை என ஆணவத்தோடு பாடும் பாடல்..அந்த  திமிரை சிவன்  அதைவிட நல்ல பாடல் பாடி அடக்குகிறார் என்பது கதை..

அந்த ஆணவப்பாடலை பாடுவ்தற்கு சீர்காழி கோவிந்தராஜனை அழைத்தனர்... இது தோற்கப்போகும் பாடல்...இதை பாட விரும்பவில்லை என சொல்லி விட்டார்...

ஆனால் இதுவா தோல்விப்பாடல்? வெற்றி பெறுவதாக படத்தில் வரும் பாடலை விட மட்டும் அல்ல.. இது வரை வந்துள்ள சிறந்த பாடல்கள் பலவற்றை விட அருமையான ஒரு பாடல் இது..

காட்சி , நடிப்பு , இசை , பாடல் வரிகள் என எல்லாமே சரியாக அமைந்த பாடல் இது...பாடலை எழுதியவர் கண்ணதாசன்....


ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா?

புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா 

அவரது தன்னம்பிக்கையை , ஆணவத்தை கண்ணதாசன் வரிகள் மூலம் சொல்வதுபோல இசை அமைப்பாளர் கேவி மாகாதேவனும் அந்த பாடகரைப்பற்றி தன் இசை மொழியால் சொல்கிறார்...எப்படி... அவர் பாட ஆரம்பிப்பது மாண்ட் எனும் ஹிந்துஸ்தானி  ராகத்தில்...எத்தனை வகை இசைகள் இருந்தாலும் தன் இசையே பெரிது என நினைக்கும் வட இந்திய பாடகர் என்பதை இந்த ராகத்தில் இசை அமைத்து , அவர் மனோபாவத்தை இசை மூலம் சொல்கிறார்..

தனக்கு அது மட்டும் அல்ல...கர்னாடக இசையும் தெரியும் என சொல்வது போல கடைசியில் அதையும் பாடிக்காட்டுவது போல தோடி , தர்பார் , மோகனம் , கானடா போன்ற ராகங்களில் சில வரிகளை பாடுகிறார் அந்த பாடகர் என சிந்தித்து இந்த ராகங்களில் கடைசி வரிகளை இசை அமைத்து தன் மேதமையை காட்டுகிறார் மகாதேவன்.. அதற்கேற்ப பாலையா நடிப்பை வழங்கியுள்ளார்..


அதற்கேற்ப கண்ணதாசனும் வார்த்தைகளில் விளையாடி இருப்பதுதான் இந்த பாடலை மாஸ்டர் பீஸ் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது..

பல ராகங்களை பாடிக்காட்டுகிறார் அல்லவா..அந்த ராகங்களுக்கான வரிகளை கவனியுங்கள்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ..
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
கலையாத மோகனச் சுவை நானன்றோ

கானடா என் பாட்டுத் தேனடா

இசை தெய்வம் நானடா

பாடுபவரின் குணாதிசயத்தையும் கொண்டு வந்து ராகங்களையும் கொண்டு வந்த கவிஞர் ,  அந்தந்த ராகங்கள் வரும் வரிகளை அந்த ராகங்களில் இசை அமைத்த இசை அமைப்பாளர் , சிறப்பாக நடித்த நடிகர் என மிக சரியான ஒத்திசைவோடு அமைந்த அபூர்வமான பாடல் இது

இப்படி ஓர் அபூர்வ பாடலை பிறருக்கு விட்டுக்கொடுத்துள்ளார் படத்தின் நாயகன் சிவாஜி கணேசன்,, இதுவும் ஓர் அபூர்வமான தன்மைதான்

இந்த பாடலைப்பற்றி நான் எழுத முக்கிய காரணம் இதைப்பாடிய பாலமுரளி கிருஷ்ணா... மிக அற்புதமாக பாடி வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் அவர்..

இன்னொருவரால் புறக்கணிக்கப்பட்ட தோல்விப்பாடல் என்றாலும் ஈகோ இல்லாமல் பாடினார் என்கின்றனர் சிலர்..

அவருக்கு இதை சொல்லாமல் மறைத்து பாட வைத்தனர் என்கின்றனர் சிலர்...

உண்மை தெரியவில்லை... எது எப்படி இருந்தாலும் , இந்த பாடல் அவருக்கு பெருமை சேர்க்கும் பாடல்..அவர் இந்த பாடலைப் பாடியதன் மூலம் சினிமாப்பாடல்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதே உண்மை

Sunday, September 11, 2016

புல்லாய் பிறந்தாலும்...


ஓர் இசைக்கச்சேரியில் இந்த பாடலை கேட்டேன்.. வெகு இனிமை




புல்லாய் பிறந்தாலும் மிருகாதி ஜனனங்கள்
பசியாறி மகிழும் அன்றோ
பூண்டாய் பிறந்தாலும் புலத்தியர்கள் கொண்டு சில
பிணி தீர்த்து கொள்வர் அன்றோ

கல்லாய் பிறந்தாலும் நல்லவர்கள் மிதி கொண்டு
காட்சிக் குருத்துமன்றோ
கழுதை உருவந்தாலும் ஆவெனக் கத்தினால்
கை கண்ட சகுனம் என்பார்

எல்லாம் இலாமலே இப்பிறவி தந்து என்னை
ஏங்கவிட்ட கல நின்றாய்

எத்தனை அன்னை பின் எத்தனை தந்தை
பின் எத்தனை பிறவி வருமோ
அல்லல் எனும் மாசு அறுத்து ஆட்கொளும் தெய்வமே
அப்பனே தில்லை நகர் வாழ்
அதிபதி ஜனகாதி துதி பதி சிவகாமி
அன்பில் உரை நடனபதியே

Sunday, September 4, 2016

அசோகமித்ரனின் பார்வை சிறுகதை - என் பார்வையில்


அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளைக்கூட மிக சிறப்பாக கதை ஆக்குபவர் அசோகமித்ரன்.. ஒரு வரியில் ஓர் அழகான சித்திரத்தை படைத்து விடுவார்....அவர் கதைகளில் எல்லாமே சிறப்பானவை என்றாலும் பார்வை எனும் சிறுகதை எனக்கு மிகவும் பிடிக்கும்..காரணம் இதன் எளிமைத்தன்மை.. இதன் உள்ளடக்கம்..

ஒரு பெண் சோப் பொடி விற்க வருகிறாள். பேச்சு வாக்கில் தன் சுயசரிதையை - ஏன் மதம் மாறினோம் என்பதை- சொல்கிறாள்.. அதன் பின் போய் விடுகிறாள்.. இதுதான் ” கதை சுருக்கம் “ ஆனால் கதை இந்த சுருக்கத்துள் சுருங்கி விடாமல் வானளவு விரிகிறது..

கதையின் ஆரம்பத்தில் அந்த பெண் அந்த வீட்டுக்குள் கதவை திறந்து வருகிறாள்..அந்த வீட்டுப்பையன் கதவை திறந்து வீட்டை விட்டு கிளம்புகிறான்.

இந்த இரண்டு வரிகளில் அந்த பெண்ணின் கேரக்டர் , அவள் குடும்ப பின்னணி. இந்த வீட்டின் தோற்றம் , இந்த வீட்டின் பொருளாதார நிலை , வீட்டினரின் மனப்போக்கு என பல விஷயங்கள் நமக்கு தெரிந்து விடுகின்றன.. அதுதான் அசோகமித்திரன்.

சோப்பு பொடி விற்பவள் என்பதால் அதைப்பற்றி சொல்கிறாள்.. ஆனால் வீட்டுக்கார பெண்ணுக்கோ பொதுவான விஷ்யங்கள் பேசவும் ஆசை. அந்த பெண்ணைப்பற்றி கேட்கவே அவள் பதில் சொல்கிறாள்.. பேச்சு வாக்கில் தன் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியதை சொல்கிறாள்... அதற்கான காரணத்தையும் சொல்கிறாள்.. அவள் தங்கைக்கு கண் பார்வை போய் விட்டது... இயேசுவை கும்பிட்டு சரியாகி விட்டது.

இன்னும் கொஞ்சம் பேசி விட்டு , ஒரு டெமோ காண்பித்து விட்டு அவள் கிளம்பிப்போகிறாள்... அவள் எப்படி வந்தாளோ அதேபோல கதவை ஓசையின்றி அடைத்து விட்டு செல்கிறாள்..

    எப்படி அந்த தங்கையின் பார்வை குடும்பத்தை மாற்றியதோ அதே போல ஆரம்பத்தில் அவள் மீது ஈடுபாடு இல்லாத பார்வை கொண்ட வீட்டுக்காரரின் பார்வை அவளைப்பற்றி தெரிந்ததும் மாறுகிறது என்பதை மறைந்து வருகிறது...ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அவள் பார்வை வேலையின்மீது மட்டுமே இருக்கிறது.. சகஜமாக பேசினாலும் அவள் பார்வை மாறவில்லை என்பதை அழகாக காட்டி இருப்பார்.. டெமோ பொடியை நான் பக்கத்து வீடுகளில் கொடுக்கிறேன் என்ற உதவி கிடைக்கிறது.அதாவது ஒரு தரப்பு பார்வை மாறி விட்டது. ஆனால் அவள் பார்வை மாறவில்லை/

    அவள் பார்வை என்பது குடும்பம் , வேலை என்பது..ஆனால் வீட்டுக்காரரின் பார்வை என்பது பொழுது போக்கு , அடுத்தவர் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் போன்றவை..

அவள் ஓசைப்படாமல் கதவை திறந்து வந்ததற்கும் , அந்த பையன் சத்தத்துடன் திறந்து போனதற்கான ஒப்பீடு நம் மனதில் தோன்றுகிறது. அதேபோல , வீட்டுக்காரரின் பெண்ணுக்கும் இவளுக்குமான ஒப்பீடும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.. இத்தனைக்கும் அந்த பெண் நேரடியாக கதையில் வருவதில்லை..குரல் மட்டுமே... இப்படி நாமும் கதையில் பங்கேற்று நம் பார்வைக்கும் இடம் கிடைக்கிறது.

    சின்ன சின்ன நுணுக்கங்கள் அபாரம்,உதாரணமாக , தான் மதம் மாறியதை அவள் சொல்கையில் , அடடா,, மாறாமல் இருந்திருக்கலாமே என அங்கலாய்க்கிறாள்  வீட்டுக்கார அம்மா..  உண்மையில் அவள் மாறினாலும் மாறாவிட்டாலும் இவளுக்கு ஒன்றும் இல்லை.. சும்மா வம்பிழுத்தல், பேச தூண்டுதல். இவள் கேள்விகளால் அவளுக்கு லேசாக எரிச்சல் வருவதும் பதிவாகி இருக்கிறது.


அசோகமித்ரன் சிறுகதை தொகுப்புகளில் இந்த கதை இருக்கும் தொகுதியாக பார்த்து வாங்கி படியுங்கள்




Saturday, August 6, 2016

கபாலி - இருண்ட வானில் ஓர் ஒளிக்கீற்று

இலக்கிய இதழ்கள் , ஆன்மிக இதழ்கள் என அனைத்திலும் கபாலி விமர்சனம் வருகிறது.. வட இந்திய இதழ்களில் கபாலி குறித்த செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன..
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னமும் கபாலி ஜுரம் தணிந்தபாடில்லை. பாக்ஸ் ஆஃபிஸ் பழைய சாதனைகளை கபாலி தொடர்ந்து முறியடித்து வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் ரஜினி என எளிமையாக கூறி விட முடியாது.. ரஜினி மேஜிக் தவிர வேறு சில அம்சங்களும் படத்தில் உள்ளன

ஐரோப்பிய படங்களைப் பார்க்கையில் இது போன்ற படங்களை தமிழில் என்றேனும் பார்க்க முடியுமா என்ற ஏக்கம் ஏற்படும்... ஆனால் நம் ஊரில் நல்ல படம் என்றால் ஊளையிட்டு அழுவது , மேக் அப் போட்டு பல்வேறு விதமாக ஃபேன்சி டிர்ஸ் போட்டி போல நடித்துக்காட்டுவது என மூளை சலவை செய்து வைத்துள்ளனர்...

பார்வையாளனை அழ வைப்பதே நடிப்பின் உரைகல்லாக நினைத்து வருகின்றனர். எனவே தமிழில் நல்ல படங்கள் என்பது இல்லாமல் போய் விட்டது.

இதை சற்று மாற்றி அமைத்துள்ளது கபாலி எனலாம்.

 நாயகன் , அவனுக்கு ஏற்படும் பிரச்சனை, அதை அவன் எப்படி தீர்க்கிறான் என்ற டெம்ப்லேட்டில் எழுதப்ப்டுவதுதான் சிறந்த திரைக்கதை என சிட்ஃபீல்ட் போன்றோர் தவறாக வழி நடத்தி டெம்ப்லேட் படங்களை உரமூட்டி வளர்த்தனர்... பிரதான பாத்திரங்களை முதல் சில நிமிடங்களை அறிமுகம் செய்து விட வேண்டும்... படத்தின் ஆரம்பத்தில் ஒரு துப்பாக்கி காட்டப்பட்டால் , படம் முடிவதற்குள் அது வெடித்து விட வேண்டும் போன்ற கருதுகோள்கள் , எளிமையான , சுவையான படங்களை  உருவாக்க உதவக்கூடும்.. ஆனால் இவை நல்ல படங்கள் என்பதற்கான இலக்கணம் அல்ல... ஹிட்ச்காக் , டொரண்டினோ , க்றிஸ்டோபர் நோலன் போன்றோர் படங்கள் இந்த டெம்ப்லேட்டில் அமைவதில்ல்லை

இந்த டெம்ப்லேட்டில் அமையாத நல்ல படங்கள் தமிழில் வந்ததுண்டு.. ஆனால் ஒரு மாஸ் ஹீரோ நடித்த படம் அப்படி வந்ததில்லை

பாட்ஷா என்றால் யார் , அவனுக்கு என்ன சவால் , அதை அவன் எப்ப்படி தீர்த்தான் , வேலு நாயக்கனின் பிரச்சனை என்ன என ஒரு மையக்கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகரும்.

ஆனால் கபாலி இதில் மாறுபடுகிறது

கபாலி ஒரு சூப்பர் ஹீரோ அல்ல... அவனுக்கும் வலி இருக்கிறது...இன்னும் எத்தனை கஷ்டங்களை பார்க்கப்போகிறேனோ எனும் திகைப்பு இருக்கிறது... இவை எல்லாம் கனவாகி மறைந்து விடக்கூடாதா எனும் பரிதவிப்பு இருக்கிறது... மனசு என்னவோ போல இருக்கு அமீர் என புலம்ப ஒரு நண்பன் தேவையாய் இருக்கிறது.... உயிர் காப்பாற்ற மகளின் உதவி தேவைப்படுகிறது


கபாலியின் சவால் என்ன , அவன் அதை எப்படி தீர்த்தான் என்ற நேர்க்கோட்டில் கதை நகர்வதில்லை....மையம் அற்ற பிரதியாகவே படம் உருவாக்கப்பட்டுள்ளது... எனவே யதார்த்ததுக்கு வெகு அருகில் படம் இருக்கிறது..

 

மனைவியை தேடி கபாலி புறப்படுகிறான். சராசரி படமாக இருந்தால் அடுத்த ஷாட்டில் அவன் மனைவி முன் கபாலி இருப்பான். அல்லது ஒரு பாட்டின் முடிவில் மனைவியை கண்டு பிடித்து விடுவான்

ஆனால் இந்த படத்தில் மனைவியை தேடி செல்லும் காட்சி தொடர் ஓர் அழகான குறும்படமாக உருவாகியுள்ளது

ஸ்வீடன் இயக்குனர் இங்மர் பெர்க்மன் எடுத்துள்ள ஒரு படம் wild strawberries...  முதியவர் ஒருவரின் பயணம் மூலம் தன்னை கண்டடைகிறார்... அந்த படம் பார்க்கும்போது ஏற்பட்ட உன்னத உணர்வு இந்த காட்சிதொடரில் ஏற்பட்டது.

முழுக்க கெட்டவர்களும் இல்லை...முழுக்க நல்லவனும் இல்லை... தீமையே உருவான வேலு , ஒரு குழந்தையை பார்த்து மனம் மாறி குழந்தையை காப்பாற்றுவதன் மூலம் தன்னை புதிதாக கண்டடையும் பாத்திரப்படைப்பு போல ஒவ்வொரு பாத்திரமுமே செதுக்கப்பட்டுள்ளது

  உன் கருணை மரணத்தை விட கொடூரமானது

   காலம் மாறிடுச்சு.. ஆனா கஷ்டங்கள் அப்படியே இருக்கு

    என ஆழமான வசனங்கள் படம் முழுக்க..

அதில் வெகு சிறப்பான வசனம் ஒன்று

பறவை பறக்கையில் விதைகளை ஏந்திச்செல்வதில்லை.. காடுகளை ஏந்திச்செல்கின்றன

இந்த வசனத்தை வெகுவாக ரசித்தேன்.. இதை பேசுவது ரஜினி அல்ல... கபாலியின் நண்பராக வரும் ஜான் விஜய்

  நம்பகமாக நண்பனாக வருவது மட்டுமே இது போன்ற கேரக்டர்களின் பணியாக இருக்கும்.. ஆனால் அதை தாண்டி அந்த கேர்க்டரின் மன ஓட்டத்தையும் படம் பிடிக்க விரும்புகிறார் இயக்குனர்

 மூஞ்சி இங்கே இருக்கு என சீறும் யோகி , நான் தமிழ்  நேசனின் பேரன் , துரோகம் செய்ய மாட்டேன் என சீறும் கேரக்டர் ,  உரிமைக்கு குரல் கொடு , கேட்காத மாதிரி நடிப்பார்கள் , தொண்டை கிழிய தொடர்ந்து குரல் கொடு என முழங்கும் தமிழ் நேசன் என மைய கதாபாத்திரத்துக்கு நிகராக ஒவ்வொருவருமே மனதில் நிற்கிறார்கள்

பயமே அறியாத பெண் கேரக்டர் யோகி..ஆனால் தந்தை என்ற உறவு ஏற்பட்டவுடன் அவளை அறியாமல் அச்ச உணர்வு ஏற்படுவதும் , அதை பிறர் காண்கையில் ஏற்படும் நாணமும் கவிதை...

ரஜினியின் கோட் ,  தினேஷின் கண்ணாடி ,  பறவை , வீடு என பொருட்களும்கூட மனதில் பதியும் கேரக்டர்களாக உருவாக்கப்பட்ட்டுள்ளன.

ரசிகனை அழ வைக்க வேண்டும் என இயக்குனர் எந்த இடத்திலும் ஆசைப்படவில்லை... நாசர் கொல்லப்படும் காட்சி போன்ற பல காட்சிகள் கமல் போன்றோருக்கு கிடைத்திருந்தால் , நாயகன் படம்போல தானும் அழுது ரசிகர்களையும் அழ வைத்திருப்பார்கள்... ஆனால் அது போன்ற சினிமாட்டிக் அபத்தங்கள் இதில் இல்லை...

தலித் படம் , கேன்ங்ஸ்டர் படம் ,  குடும்ப படம் என பார்ப்பவர்களே இது என்ன படம் என முடிவு செய்யும்படி படம் அமைந்துள்ளது சிறப்பு


  காதல் என்றால் கட்டிப்பிடிப்பது , முத்தம் கொடுப்பது என வெளிப்படையாக சொல்லியே நம் ஆட்களுக்கு பழக்கம்.... இந்த படத்தில் முத்தக்காட்சி எதுவும் இல்லை.. மாறாக , சட்டையை ஏன் அழுக்காக போடுகிறாய் , ஏன் கோப்படுகிறாய் என  நாயகனை திட்டும் காட்சிகளே அதிகம்.  இதில் இருக்கும் காதலை புரிந்து கொள்வோர் சிலர் மட்டுமே.. அவர்களுக்கு இந்த படம் வேறு விதமாக தோன்றலாம்..

தந்தை செல்வா தலைமையிலான ஈழ போராட்டம் , அவருக்கு பிறகு தீவிரம் அடைந்த அடுத்த தலைமுறை தலைவர்கள் என ஈழ வரலாறு தெரிந்தோருக்கு படம் வேறோர் அர்த்தம் தரலாம்//

இப்படி பல நுண்ணிய உள் மடிப்புகளுடம் படம் மிளிர்கிறது

இவை எல்லாம் சேர்ந்துதான் படத்தை வெற்றிகரமாக ஓட வைத்திருக்கிறதே தவிர ரஜினி மட்டுமே காரணமல்ல

மற்றபடி ரஜினி என்றென்றும் பெருமைப்பட்டுக்கொள்ளும் படங்களில் ஒன்று கபாலி..

சில இலக்கிய நூல்களை படிக்கையில் இதை சினிமாவாக எடுக்கலாமே என தோன்றும்
‘கபாலி பார்க்கையில் இதை ஒரு நாவலாக எழுதலாமே என தோன்றியது

மொத்தத்தில் கபாலி, இருண்டு கிடந்த தமிழ் சினிமா வானில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று

Saturday, July 9, 2016

அறிவியல் வேண்டாம்.. ஆன்மிகம் வேண்டும்


படிப்பு என்பது நல்ல விஷ்யம்.. ஆனால் படித்து விட்டால் மட்டுமே அது விழிப்புணர்வை தந்து விடாது... ஆன்மீகம் தேவை இல்லை.. அறிவியல் போதும் என பலர் நினைப்பதுண்டு

தற்போது நடக்கும் கொடூரங்களை பார்க்கையில் , எஞ்சினியரிங்  மெடிக்கல்  ஐ டி போன்ற  படிப்புகள் படித்தவர்கள்தான் கொடூரங்களில் தலை சிறந்து விளங்குகின்றனர்

உயிரின் மதிப்பு , பிறரின் உணர்வுகள் பலருக்கு புரிவதில்லை

ஒண்ணாங்கிளாஸ் படிப்பில் இருந்தே தாவர் வளர்ப்பு , மிருகங்கள் வளர்ப்பு போன்றவற்றை ஒரு கட்டாய பாடமாக்கினால் நன்றாக இருக்கு  என் நினைக்கிறேன்

பிராக்டிக்கலாக இந்த பாடம் இருக்க வேண்டும்..  தனக்கு பிடித்த ஒரு தாவரம் ஒரு மிருகத்தை வகுப்பின் முதல் நாள் தேர்வு செய்து அவற்றை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்

ஓர் ஆண்டின் முடிவில் அதன் வளர்ச்சியின் அடிப்படையில் மதிப்பெண்

விதை செடியாக துளிர் விடும் அந்த பசுமை கணம் , நோய் தாக்காமல் அதை காப்பாற்ற தேவைப்படும் அக்கறை , பெரிய மிருகமாக நாம் காணும் எருமை போன்றவை கன்றுக்குட்டியாக இருப்பதை அருகில் இருந்து கண்டு வளர்க்கும் அனுபவம் , அவை நம்மை அடையாளம் காணும் அழகு என ரசித்து பழகி விட்டால் , சக உயிரின் அற்புதம் புரியும்.

காதல் என்பது நேசித்தல் , ஆக்ரம்பிப்போ வன்முறையோ அல்ல என புரியும்
இதுதான் ஆன்மிகம்



Tuesday, July 5, 2016

தவளையின் சங்கீதம்

மன அமைதிக்காக தியானம் செய்கிறேன் என்றான் சீடன்.. அட கேப் வெண்டை... அமைதியின்மைதான் மனதின் இயல்பு..அதை ஒரு போதும் அமைதியாக்க முடியாது... மனமே இல்லாமல் ஆகும் நிலை என்பது வேறு.. நீ எந்த அளவுக்கு தியானம் செய்ய முயல்கிறாயோ அந்த அளவுக்கு மனம் மென்மேலும் செழித்து வளரும்.. அது இல்லாமல் போகாது என்றார் குரு.
சீடன் கேட்கவில்லை... தியானம் , மூச்சுப்பயிற்சி என தொடர்ந்தான்.
ஓர் அதிகாலை... இனிய காற்று, பறவைகள் சங்கீதம் என லயித்தபடி கண்மூடி அமர்ந்தவாறு தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தவன் ஏதோ சப்தம் கேட்டு கண் விழித்தான்
குரு ஒரு செங்கலை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தார்
யோவ் குரு நாதா... என்ன செய்கிறீர் என் கத்தினான் சீடன்
செங்கலை தரையில் தேய்த்து கண்ணாடியாக்கப்போகிறேன் என்றார் குரு
உம்மை ஒரு கேப் வெண்டை என ரொம்ப நாள் சந்தேகப்பட்டேன்... அது உண்மையாகி விட்டது.. என்னதான் முயன்றாலும் செங்கல் செங்கலாகத்தான் இருக்கும்.. கண்ணாடி ஆகாது என்றான்
ரொம்ப நாள் கழித்து இப்பதான் அறிவுப்பூர்வமாக பேசுகிறாய்... எதுவும் தன் இயல்புப்படிதான் இருக்கும்... தியானம் செய்வதன் மூலம் மனம் இல்லாமல் போகாது என சொல்லி விட்டு செங்கலை பக்கத்தில் இருந்த குளத்தில் வீசினார்.
தியானம் செய்து செய்து மழுங்கிப்போய் இருந்த சீடன் முதல் முறையாக விழிப்புடன் அந்த சத்தத்தை கேட்டான்.. மனம் அங்கே அழிந்தது
----
பழங்கால குளம்
குதிக்கிறது தவளை
அந்த சப்தம்

Monday, June 13, 2016

சிறுகதைப் போட்டி

ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறுகதைப்போட்டி்

முதல் பரிசு - 10,000
இரண்டாவது பரிசு 8000
3ம் பரிசு 6000 இரு ஆறுதல் பரிசுகள் ரூ 2000

சகோதரி நிவேதிதை குறித்து கதை இருக்கலாம் ( சாரு நிவேதிதா குறித்து அல்ல ) 
வாழ்க்கை குறித்த பாசிட்டிவ் பார்வையுடனோ ,தீமை அழிவது குறித்தும் கதை இருக்கலாம்

ராமகிருஷ்ணவிஜயம் இதழின் மூன்று பக்கங்களுக்குள் கதை இருக்க வேண்டும்
சொந்த கதை என்பதற்கும் இதுவரை எங்கும் வெளிவராத கதை என்பதற்கும் உறுி மொழி தேவை
srv@chennaimath.org என்ற மெயிலுக்கு அனுப்புங்கள்..சப்ஜெக்ட்டில் சிறுகதை போட்டி என குறிப்பிட மறக்காதீர்கள்.. வாழ்த்துகள்
கடைசி தேதி ஜூலை 25, 2016
செப்டம்பரில் முடிவு தெரியும்

Sunday, May 22, 2016

காலம் கடந்து நிற்கப்போகும் கலைக்களஞ்சியம் - சாருவின் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்


சில புத்தகங்களை படிப்பது என்பது நம் தேர்வு… சில புத்தகங்களை படிப்பது என்பது நாம் செய்தே ஆக வேண்டிய ஒரு செயல். அவ்ற்றை படித்தபின் நாம் வாழ்க்கையே பார்ப்பதை வேறு விதமாக மாறி விடும்.
அப்படி ஒரு புத்தகம்தான் சாரு நிவேதிதாவின் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்
 நாவல் , சிறுகதை போன்றவைகளில் சாரு விற்பன்னர் .. அவற்றுகான வாசகர்கள் ஏராளம் என்றாலும் அவரை பிடிக்காதவர்களும் உண்டு..ஆனால் அவரை பிடிக்காதவர்களையும்கூட ஈர்க்கக்கூடிய வசியம் கொண்டவை அவரது பத்தி எழுத்துகள்..
தமிழின் சுவையான பத்தி எழுத்தாளர் என சுஜாதாவை குறிப்பிடுகிறார் சாரு..ஆனால் இந்த சாருவின் கட்டுரைகளை தொடர்ந்து படிப்போர்க்கு அவர்  சுஜாதா தொடாத சில உயரங்களை தொட்டு வருவது புரியும். சாருவின் எழுத்துகள் ஒரு கலைக்களஞ்சியம் போல விஷ்யங்களை உலக ஞானங்களை நமக்கு அள்ளித்தருகிறது என வாலி ஒரு முறை குறிப்பிட்டார்.. ஆனால் விஷ்ய ஞானம் எனபதையும் தாண்டி அவர் எழுத்துகளில் ஊடுபாய்ந்து விரவிக்கிடக்கும் மைய தரிசனம்தான் , ஆன்மிக பார்வைதான் அவர் எழுத்துகளை காலக்கடந்த படைப்பாக்குகிறது என கருதுகிறேன்.
ஆன்மிகம் என்றால் ஜீவாத்மா , பரமாத்மா , விபூதி , மந்திரம் ,ஆலயம் என்பது அல்ல…  வரும் துன்பத்தை தாங்கி , பிறர்க்கு துன்பம் தராமல் வாழ்தலே தவம் அதுவே ஆன்மிகம் என்கிறாரே வள்ளுவர்…  அந்த ஆன்மிகம்தான் சாரு பேசுவது…   சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்து விஷ்யங்களையும் வேற்றுலகவாசியின் டயரி குறிப்புகள் பேசுகிறது.. ஆனால் ஆய்வுக்கட்டுரை போல இல்லாமல் , சுவராஸ்யமான உரையாடல் போல பல விஷ்யங்களை சொல்லித்தருகிறது…அந்த விஷ்யங்கள் வெறும் knowledge ஆக இல்லாமல் அந்த விஷ்யத்தையும் தாண்டி மனதில் ஓர் ஆழ்ந்த திறப்பை ஏற்படுத்துகிறது
உதாரணமாக ஓர் இடத்தில் மசூதியின் பாங்கு ஓசையயும் கபாலீஸ்வரர் ஆலயத்தின் வேத கோஷத்தையும் ஒப்பிடுகிறார்…எல்லா மதங்களும் சொல்வது ஒரு விஷ்யம்தான் என்ற ஆன்மிக பார்வை நமக்கு கிடைக்கிறது..இப்படி கிடைப்பதற்கு முன் ப்ரிட்ஜ் விளையாட்டுக்கு அந்த பெயர் எப்படி வந்தது , பாலம் ஒன்று இரு கலாச்சாரங்களுக்கும் பாலமாக இருப்பது , நகரா இசை , ரஜினி உட்பட பலரின் ரோல் மாடல் லீ க்வான் யூவின் இன்னொரு பக்கம் என பல விஷ்யங்கள் எஃப்ஃபோர்ட்லெஸ்சாக  விளையாட்டுபோல நம்மை வந்தடைந்து விடுகின்றன..அதுதான் சாரு
  நமக்கு ஏதாவது கஷ்டம் வ்ந்து விடுகிறது..  நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என புலம்புகிறோம்…ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை , நல்ல விஷ்யங்களை நினைத்துப்பார்த்து நமக்கு மட்டும் ஏன்  இப்படி கிடைக்கிறது என நினைப்பதே இல்லை..இதை அழகாக – ஆர்தர் ஆஷ் வரலாற்றை விளக்கி – சொல்கிறார் சாரு. அந்த கட்டுரையை மட்டும் காப்பி எடுத்து தமிழகமெங்கும் வினியோகித்து ஒவ்வொருவரையும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அதை படிக்கையில் தோன்றியது.. அந்த கட்டுரையை உள்வாங்கி படித்தால் , அதன் பின் இன்னொரு புத்தகம் வாழ்க்கையில் தேவையே படாது
 வாய் விட்டு சிரிக்க செய்யும் நகைச்சுவை சாருவின் ஸ்பெஷாலிட்டி. கீழ்கண்ட வரிகளை படித்து வெகு நேரம் சிரித்தேன்
குழந்தைகளைப்பற்றி தாய்மார்கள் பெருமை அடித்துக்கொள்கிறார்களே..அது பயங்கரம்.. அதி பயங்கரம். என்னமா இங்லீஷ் பேசறான்..எல்லாதலயும் முதல் பரிசு .
இது எல்லாவற்றிலும் டாப் என்ன தெரியுமா..சமீபத்தில் ஒரு தாய் தன் 29 வயது மகன் குறித்து சொன்னார்.என் மகன் மகாத்மாதான் ( அய்யோ..இந்த புத்தகத்தை ஒளித்து வைக்க வேண்டுமே..  காரணம் இதை சொன்னது என் மனைவி..என் மகன் குறித்து )
பாகிஸ்தான் , தஜிகிஸ்தான் , இத்தாலி , ஸ்காட்லாந்து என உலகெங்கும் சுற்றிபார்த்த உணர்வை தரும் இந்த புத்தகம் ,  நாம் உள்முக பயணம் செய்து நம்மை நாமே சுற்றிப்பார்த்த உணர்வையும் தருகிறது
 
 நுண்ணுணர்வு என்பது சாரு அடிக்கடி சொல்லும் விஷ்யம்.. இலக்கியம் படிக்காமல் இது சாத்தியம் இல்லை
எனக்கும் தமிழ்தான் மூச்சு.. ஆனால் அதை பிறர் மேல் விட மாட்டேன் என்ற ஞானக்கூத்தன் வரிகளில் இதை காணலாம்.
தலைவியை பார்க்க குதிரை வண்டியில்  விரைந்து வரும் தலைவன் , வண்டி சப்தம் வண்டுகளுக்கு இடையூறாக இருப்பதை பார்த்து விட்டு , வண்டியை விட்டு இறங்கி நடந்து செல்லும் சங்க பாடல்களில் இதை காணலாம்.
வாசிப்பு.. வாசிப்பு ...வாசிப்பு...இதை விட்டால் வேறு வழி இல்லை என சொல்லும் சாரு , தான் ஓர் எழுத்தாளன் என்பதை விட முதலில் ஓர் வாசகன் என சொல்கிறார் என்றால் அது மிகை அல்ல.. இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து எழுதினாலும் , இன்னும் புதிதாக சொல்ல அவரிடம் ஏராளமான விஷ்யஙகள் இருக்கின்றன என்றால் காரணம் வாசிப்புதான்.. இந்த புத்தகத்தில் சினிமா , இலக்கியம் , இசை , சாப்ப்பிட வேண்டிய உணவு என ரெஃபரன்சுகள் ஏராளம்..ஒவ்வொன்றையும குறிப்பெடுத்து , தேடி பார்த்து பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம்.. ஆக இந்த புத்தகத்தை யாராலும் படித்து முடிக்க இயலாது. இது என்றென்றும் பய்ன்படப்போகும் user manual
அருளப்பரின் வரலாறு நம்மை நெகிழச்செய்கிறது .செல்கர்க் வரலாறு சிலிர்க்கச்செய்கிறது , ஆர்தர் ஆஷ் வரலாறு நம் அகத்தை தொட்டுப்பார்க்கிறது , தோர் ஹயர்டால் வரலாறு மயில் தோகையாய் மனதை வருடுகிறது,, மகாபாரதம் , குற்றாலக்குறவஞ்சி , பாஷோ என எத்தனை எத்தனை… நம்புங்கள்..இவை அனைத்தும் ஒரே புத்தகத்தில்
 
தமிழில் வந்த புத்தகங்களில் இது மிகவும் முக்கியமான நூல் என்றே சொல்லலாம்.. மிஸ் செய்யக்கூடாத புத்தகம்
 
வேற்றுலகவாசியின் டயரி குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம்

Saturday, April 30, 2016

மதுவிலக்கு - ரிஷி கபூர் கருத்து



தேர்தல் வந்தால் மது விலக்கு பிரச்சாரமும் வந்து விடும்.. ஆனால் யார்  ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு வரப்போவதில்லை..

மது விலக்கு கொண்டு வந்தால் , பக்கத்து மானிலங்களில் சென்று குடிக்கலாம்....  கள்ளச்சாராயம் குடிக்கலாம்.. வெளி நாட்டு சாராயம் குடிக்கலாம்.. இப்படி குடித்து மக்கள் காசு வீணாவதற்கு பதில் அரசே அதை நடத்தி , அந்த காசை மக்களுக்கு பயன்படுத்தலாம் என்பது அரசின் லாஜிக்

ஏன் இப்படி மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறீர்கள் என சிலர் கேட்கலாம்.. பிச்சை தேவைப்படும் நிலையில் பலர் இருப்பது மறுக்க முடியாத உண்மை

ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் இருப்பவர்கள் மட்டும் அல்ல... வேலை தேடுபவர்கள் பலரும் பட்டினியை உணர்ந்திருப்பார்கள்,, அம்மா உணவகம் இவர்களுக்கு பேருதவி...

இதற்கெல்லாம் மது வருவாய்தான் பயன்படுகிறது..

பீகாரில் மது விலக்கு இருக்கிறதே என்கிறார்கள் சிலர்,,,

-------------------------------

இது குறித்து நடிகர் ரிஷி கபூர் சொல்கிறார்

 மதுவிலக்குக்கு எதிராக பேசுவதால் என்னை பீகாருக்குள் நுழைய விட மாட்டோம் என சிலர் சொல்கிறார்கள்.. நான் மீண்டும் சொல்கிறேன்.. நான் மதுவுக்கு ஆதாரவானவன் அல்ல.. ஆனால் இதை எல்லாம் சட்டம் போட்டு தடுக்க இயலாது... இதை அமல் செய்த சில நாட்களிலேயே இது உயிர் பலி வாங்க தொடங்கி விட்டது,, பலர் பக்கத்து மானிலமான உத்தர பிரதேசம் சென்று மது அருந்துகிறார்கள்...
பணக்காரர்கள் வெளி நாட்டு மதுவை அருந்துவார்கள்... ஏழைகள் கள்ளச்சாராயம் அருந்தி உயிர் இழப்பார்கள்
பீகார் தன் தவறை விரைவில் உணரும்

Friday, April 29, 2016

வெற்றிக்கு 21 வழிகள்- பாலகுமாரன் காட்டும் வழி

உன்னால் முடியும் தம்பி வகை புத்தகங்கள் பெரும்பாலும் அரைத்த மாவையே அரைத்து இருக்கும்.

பாலகுமாரன் போன்ற அனுபவமிக்க எழுத்தாளர்கள் இது போன்ற புத்தகங்கள் எழுதிகையில் ஒரு வித்தியாசமான பரிமாணம் கிடைக்கிறது

அந்த வகையில் எழுத்துச்சித்தர் காட்டும் வெற்றிக்கு வழிகளை கொண்ட புத்தகம் இது.

1. காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

காதலை பழகுங்கள்.. காமம் என்பது காதல் இல்லை.... காதல் இன்றி வெற்றி இல்லை

2  உடலை வசப்படுத்துங்கள்

3சோம்பல் அறுத்தல்

சோம்பல் ஒரு நோய்...

4 தொடர்பு கொள்ளும் கலை

5 அறிதலே வாழ்க்கை

6 கர்வம் அழித்தல்

7 தனக்குள் பார்த்தல்

8கோபம் தவிர்த்தல்

9 களவு மறுத்தல்

10 வைராக்கியம் வளர்த்தல்

11 கடுமையாக  உழைத்தல்

12 பொறாமை அகற்றல்

13ஆராவாரம் அகற்றல்

14 பதட்டம் குறைத்தல்

15 காலம் தவறாமை

16 தூக்கத்தின் அவசியம்

17 அவமானம் தாங்க பழகு

18 உடற்பயிற்சி

19தியானம்

20 புத்தகங்கள்

21 தனிமை

என 21 தலைப்புகளில் அழகாக எழுதியுள்ளார் எழுத்துச்சித்தர்

வெறும் அறிவுரைகளாக இல்லாமல்  ஒவ்வொன்றும் சிறுகதை போல இருப்பது சிறப்பு

கூடுதல் போனசாக , பாலகுமாரனின் பிறந்த நாளுக்கு அவர் வீட்டுக்கு ரஜினி வந்த சம்பவம் முன்னுரையில் இடம்பெற்றுள்ளது வெகு அருமை

கண்டிப்பாக படிக்கலாம்

தலைப்பு  - வெற்றி வேண்டுமெனில்

பதிப்பகம் - விசா பப்ளிகேஷன்

 

Wednesday, April 27, 2016

ரகசிய தேர்தல் அறிக்கைகள் - திடுக்கிடும் கண்டுபிடிப்பு


பொதுவான ஃபார்மலான தேர்தல் அறிக்கைகள் பார்த்து ரசித்து விட்டோம்..ஆனால் இதுவரை வெளிவராத சில கட்சிகளின் ரகசிய தேர்தல் அறிக்கைகள் நம் கவனத்துக்கு வந்துள்ளதுன


திமுக
1 பாதகமான தேர்தல் கணிப்புகளை வெளியிடும் ஊடகங்களை ஜாதிப்பெயர் சொல்லி திட்ட வேண்டும்

2. ஜாதி சொல்வதில் பிரச்சனை என்றால் அவர்கள்  நேர்மையை கிண்டல் செய்ய வேண்டும்

3அதுவும் சரிப்படவில்லை என்றால் தேர்தல் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை என சொல்ல வேண்டும்

4 வாக்களிப்பு நடக்கையில் தேர்தல் கமிஷனை எதற்கும் இருக்கட்டும் என திட்டி வைக்க வேண்டும்

5 தோற்று விட்டால் தேர்தல் கமிஷனை குறை சொல்ல வேண்டும்

6 ஜெயித்து விட்டால் அனைவரையும் பாராட்ட வேண்டும்

அதிமுக

1 மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார் அறிஞர் அண்ணா... அண்ணாயிசத்தில் நடக்கும் நம் கட்சி , திமுகவின் கண்டுபிடிப்பான திருமங்கலம் ஃபார்முலாவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது

2 பேட்டி , பிரச்சாரம் . ,மேடைப்பேச்சு என எதையும் கண்டுகொள்ளாமல் திருமங்கலம் ஃபார்முலாவை மனப்பூர்வமாக ஏற்று செயல்பட  வேண்டும்

3 தோற்று விட்டால் வொட்டிங் மெஷின் மேல் பழி போட வேண்டும்

4 ஜெயித்தால் ஜன நாயகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்

( மற்ற கட்சிகள் அடுத்த பதிவில் )
 

Tuesday, January 19, 2016

அ தி மு க ஆட்சி மீதான நம்பிக்கை தளர்ந்து வருகிறது - சோ - துக்ளக் விழா ( இறுதி பகுதி)







பழ கருப்பையா

புகழ் மிக்கவர்களின் புதல்வர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன் , அன்புமணி ராமதாஸ் அவர்களே , 110 விதியின் கீழ் சட்டசபையில் பேசுவதுபோல உரிமையுடன் பேசும் அதிகாரம் படைத்த செல்லப்பிள்ளை சரத்குமார் அவர்களே , அமைச்சருக்குரிய தோரணை கொண்ட பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே , கண்ணதாசனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்த எஸ் ஆர் பி அவர்களே அனைவருக்கும் வணக்கம். இத்தனை பெரிய சான்றோர்களுடன் ஒப்பிட்டால் என் தகுதி மிகவும் குறைவு என நினைத்ததாலோ என்னவோ என்னை கடைசியாக அழைத்துள்ளார் சோ என நினைக்கிறேன் ( இல்லை என கூட்டத்தினர் கோஷமிட்டனர் )

இன்றைய அரசியல் பற்றி பேசுவதென்றால் , இப்போதெல்லாம் ஓர் அமைச்சர் கீப் வீட்டுக்கு போவதென்றாலும்கூட எஸ்கார்ட் கார் பாதுகாப்புக்கு போகிறது.. காரணம் அவர் பப்ளிக் சர்வெண்ட். காந்தி , காமராஜரால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் இன்று  நக்மா , குஷ்புவை நம்புகிறதே..இதுதான் இன்றைய அரசியல் .

இளங்கோவன் என் சகோதர்தான்..இப்படி பேசுவதால் தப்பாக நினைக்க மாட்டார்.. காமராஜரிடம் பணியாற்றி விட்டு எப்படி அய்யா நடிகைகளுடன் பணியாற்றுகிறீர்கள்..

 நான் அடிக்கடி சந்தித்த தலைவர் காமராஜர். அதுபோல அடிக்கடி சந்திக்கும் ஒரே நபர் சோ தான்…  காமராஜரைப்போலவே சோவும் மிகவும் ஷார்ப்பானாவர்.. நாம் சொல்லபோகும் விஷயத்தை சில நிமிடங்களில் புரிந்து கொண்டு , இதைத்தானே சொல்ல வருகிறாய்…  நேரடியாக விஷ்யத்துக்கு வா என்பார் காமராஜ். ஒரு பில்ட் அப் கொடுக்க முடியாது..சோவும் அப்படித்தான்

 சோ இன்று நம் முன் நலமாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் மகனும் மருமகளும்தான்.. இரவு பகலாக அவரை கவனித்து அவரை தேற்றி இருக்கின்றனர். நர்சுகள் ஏதேனும் சாப்பிட சொன்னால்கூட , தன் பார்வை மூலமாகவே மருமகள் அனுமதி கேட்டபின்பே சாப்பிடுவார் சோ
சோவின் பணி இன்னும் முடியவில்லை.. ராஜாஜி பெரியார் ஆகியோர் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன உறுதியால்தான் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். அப்படியே சோவும் வாழ வேண்டும்.

சோ 40 ஆண்டுகளுக்கு முன் போட்ட நாடகங்கள் இன்றும் பொருத்தமாக இருப்பது சமூக அவலம். நேர்மை உறங்கும் நேரம் , உண்மையே உன் விலை என்ன , யாருக்கும் வெட்கமில்லை என அனைத்தும் இன்றும் பொருத்தமாக உள்ளன.

அரசியலில் ஜன நாயகம் சற்றும் இல்லை. இப்போதெல்லாம் தீர்மானங்கள் விவாதிக்கப்படுவதே இல்லை. வாசிக்கமட்டுமே செய்கிறார்கள். அவை அப்படியே ஏற்கப்படுகின்றன.

புருஷன் பொண்டாட்டியே ஒத்துப்போக முடியவில்லை. ஆயிரக்கணக்கான எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் ஒருமித்து ஒரே மனதாக தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்களாம்.

ஒரு கருத்து முன்வைக்கப்ட்டால் , அதை எதிர்த்து இன்னொரு கருத்து தோன்ற வேண்டும். இந்த இரண்டின் கருத்து மோதலால் புதிதாக ஒரு கருத்து உருவாகும் , இதுதான் ஆரோக்கியமானது என்கிறார் ஹெகல். இப்படி புதிதாக உருவான கருத்தும்கூட இறுதியானது அல்ல. அதுவும் இன்னொரு கருத்தால் மோதப்பட வேண்டும்.
ஆனால் எந்த கட்சியும் இப்படி செயல்படுவதில்லை. எந்த கட்சியிலாவது சர்வாதிகாரம் இல்லை என்றால் அது போதுமான அளவுக்கு வளரவில்லை என பொருள் ( பலத்த கை தட்டல் )

கடவுளையே வியாபார பொருள் ஆக்கி விட்டார்கள். என் மனைவி அடிக்கடி ஆலயம் செல்வார். அவர் அளவுக்கு எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் அவருடன் செல்வேன். கோயில் உண்டியல் அவருக்கு எட்டாது. கஷ்டப்பட்டு அதில் காசு போடுவார். ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய். நம் அமைச்சர் அவ்வளவு வறுமையிலா இருக்கிறார் என்பேன் . ( பலத்த கை தட்டல் ) . நாம் போடும் காசு கடவுளுக்கா போகிறது. அமைச்சர்களுக்குதானே போகிறது. ஏன் இப்படி பேசுகிறீர்கள் என மனைவி கோபிப்பார்

மதம் நிறுவனம் ஆகி விட்டது. தனக்கு மொட்டை போடுவது பக்தி.  காசு கொடுத்து அழைத்து வந்து 2000 பேருக்கு மொட்டை போடுவது அசிங்கம் இல்லையா., கடவுளையும் கேவலப்படுத்தி நம்மையும் கேவலப்படுத்திக்கொள்கிறோம்

முன்பெல்லாம் கோடீஸ்வரன் என்றால் ஒரு கோடி வைத்திருப்பார்கள். இன்றோ ஒரு லட்சம் கோடி , ஆயிரம் கோடி என்று ஆகி விட்டது. இப்போதெல்லாம் ஊழல்கள் என்றாலே லட்சம் கோடிகள்தான்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் இவ்வளவு காசை வைத்து கொண்டு என்ன செய்வார்கள். 30 வேளை சாப்பிடுவார்களா.. பணத்தை உள்ளே வைத்து மெத்தை செய்வார்களா.. அப்படி செய்தால் அந்த படுக்கை சுகமாக இருக்காதே

அதிகார வர்க்கம் துணையின்றி இவ்வளவு ஊழல் நடக்காது. வல்லபாய் பட்டேல் அமைச்சராக இருந்தபோது அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்வதாக சொன்னார் , அரசியல்வாதிகளுக்கு பயப்பட வேண்டாம் என்றார். அதற்கேற்ப விதிகள் உருவாக்கப்பட்டன.

மூன்று கடிவாளங்களை உருவாக்கினார். அதிகார வர்க்கம் , பத்திரிக்கை , நீதி துறை ஆகிய மூன்று மூக்கணாங்கயிறுகள் அரசியல்வாதிகளை அடக்கும் என நினைத்தார்
ஆனால் அதிகார வர்க்கம் இன்று விலை போய் விட்டது.. அவர்களுக்கும் பண ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுத்து விட்டனர் அரசியல்வாதிகள்.

விளம்பரம் கொடுத்து பத்திரிக்கைகளையும் வாங்கி விட்டனர். நீதி துறைதான் ஓரளவாவது பரவாயில்லை. ஆனாலும் சல்மான்கான் போன்றோர் விஷ்யத்தில் சந்தேகம் வரத்தான் செய்கிறது. அவரும் கொல்லவில்லை , டிரைவரும் கொல்லவில்லை என்றால் அத்தனைபேர் எப்படி இறந்தனர் ( கைதட்டல் )

சில அதிகாரிகள் சுடுகாட்டில் படுக்கும் அளவுக்கு நேர்மையாக இருப்பதும் உண்டு. அப்படிப்பட்ட நல்லவர்களையே மக்கள் தேடுகிறார்கள்.  முன்பெல்லாம் நல்லவர்கள் என்றால் பெண் கொடுப்பார்கள். இப்போதோ முதல்வர் ஆக்க விரும்புகிறார்கள். அதனால்தான் கேஜ்ரிவால் வர முடிந்தது.

( நேரம் முடிந்து விட்டதாக துக்ளக் நிருபர் கூறுகிறார். பேசுங்கள் பேசுங்கள் என கூட்டம் குரல் கொடுக்கிறது )

கூட்டத்தை அமைதிப்படுத்தி விட்டு பழ கருப்பையா தொடர்ந்தார்

 இல்லை.. விதிக்கு கட்டுப்பட்டாக வேண்டும். பேச்சை முடிக்கிறேன். ஒன்றே ஒன்று சொல்கிறேன்

சங்க காலத்தில் பாதீடு என்ற முறை இருந்தது..போரில் வெல்லும் அரசன் தான் வென்றதை போர் வீரர்கள் , அதிகாரிகள் , போருக்கு நாள் குறித்தவர் என அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பான்... அப்படிப்பட்ட சங்க கால தமிழர் பண்பாடு இன்று மீண்டும் செழித்து வளரத்தொடங்கியுள்ளது... கொள்ளை அடிக்கும் அமைச்சர் கொள்ளை பணத்தை அதிகாரிகள் உட்பட பலருக்கும் பகிர்ந்து அளிக்கிறார் 

இதெல்லாம் மாற வேண்டும்

கடைசியாக சோ நிறைவுரை ஆற்றினார்

 சோ

பழ கருப்பையா நல்ல சிந்தனையாளர். சிந்தனையாளனுக்குத்தான் குழப்பம் வரும். அவரை ஜனதா கட்சியில் இருந்த காலத்தில் இருந்தே அறிவேன். நேர்மையாளர்.

அதிமுக ஆட்சி என்றால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் , உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது., அது தற்போது தளர்ந்து வருகிறது. எதிர்ப்பை பற்றி கவலை இன்றி உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம்
பணம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது

நிறைகளும் உள்ளன. வெள்ள நிவாரணம் சரியாக வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பல்வேறு பவர் செண்டர்களாக குடும்ப ஆட்சி நடந்தது. அது ஒழிக்கப்பட்டுள்ளது

திமுக மீண்டும் வந்து விடக்கூடாது. திமுகவை தோற்கடிக்கும் கட்சி எது என கண்டறிந்து அதற்கு வாக்களிக்க வேண்டும். தோற்கும் கட்சிகளுக்கு வாக்களித்து வாக்கை வீணாக்க கூடாது

மோடி ஆட்சியின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே சகிப்பின்மை என புதிதாக சொல்கிறார்கள். மன்மோகன்சிங் ஊழலை சகித்துக்கொண்டார். மோடியிடம் அந்த சகிப்புத்தன்மை இல்லைதான்

நல்ல சமயமிது.இதை நழுவ விடலாமா என ஒரு பாடல் உண்டு. மோடியை நாம் தவற விட்டு விடக்கூடாது. அவர் நம் காலத்தின் தேவை

விஜயகாந்துக்கு டெபாசிட் வாங்கும் அளவுக்குகூட வாக்கு கிடையாது. ஆனால் அவர் பெறும் வாக்குகள் மற்றவர்கள் வெற்றியை பாதிக்கும் , அப்படி ஒரு 8% வாக்குகளை அவர் அப்படியே வைத்திருப்பது பெரிய சாதனைதான்.

ஆனால் அவர் தன்னை முதல்வர் வேட்பாளர் என்கிறார். வேறு சிலரும் சொல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வாக்களிப்பது திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கவே செய்யும். திமுகவை தோற்கடிக்கும் கட்சிக்கு வாக்களித்து , திமுக பெரிய தோல்வியை சந்தித்தால்தான் , தமிழ் நாட்டில் மாற்று அரசியல் கட்சி உருவாக முடியும்


இதன்பின் தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் முடிந்தது

Thursday, January 14, 2016

இளங்கோவனின் சாத்வீக பேச்சு - சோ கிண்டல் - துக்ளக் விழா

இளங்கோவன் பேச அழைக்கப்பட்டபோது பலத்த கைதட்டல் எழுந்தது..

அவர் உற்சாகமாக பேச ஆரம்பித்தார்

இளங்கோவன்

சோ உடல் நலம் தேறி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.. முடிந்தவரை அல்ல ,, முழுமையாகவே அவர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறார். என்னை அழைத்து பொன் ராதாவுக்கும் அன்புமணிக்கும் நடுவே அமர வைத்துள்ளார். இந்த விசித்திரத்தை சோ மட்டுமே நிகழ்த்த முடியும்

மெரினாவில் துக்ளக் விழாக்கள் நடந்த கால கட்டத்தில் இருந்தே ஆர்வமாக கவனித்து வருகிறேன். அப்போது இருந்தே சோ மீது எனக்கு பிடிப்பு உண்டு. ஆனால் எனக்கும் அவருக்கும் கொள்கை ரீதியாக ஒத்துப்போகாது. நானும் உயரம் , அவரும் உயரம், அது மட்டுமே ஒற்றுமை

ஆனால் எப்போதாவது ஒத்துப்போகும். பாபர் மசூதி இடிக்க்கப்பட்டபோது அயோத்தியில் அயோக்கியத்தனம் என எழுதினார். கருப்பு அட்டைப்படம் போட்டார். இதெல்லாம் எனக்கும் உடன்பாடானவை.

இன்று நம் முன் பிரச்சனையாக இருப்பவை தீவிரவாதமும் , க்லோபல் வார்மிங்கும்..இன்று பருவ நிலை சீர்கெட்டு விட்டது.குளிரடிக்க வேண்டிய கால கட்டத்தில் இன்று டெல்லியில் குளிர் இல்லை ,
 எனக்கு முன் பேசிய சிலர் கூட்டணிக்கு அஸ்திவாரம் இடுவதுபோல பேசினார்கள்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறி விடும் என்றார்கள்

 நல்ல மாற்றம் வேண்டுமென்றால் ஏரி ஆக்கிரமிப்பு கூடாது

மரங்கள் வெட்டப்படக்கூடாது ( பலத்த சிரிப்பு , இடைவிடாத கை தட்டல் )  கட்டப்பஞ்சாயத்து கூடாது ( அவர் யாரை சாடையாக பேசுகிறார் என உணர்ந்து பலத்த கைதட்டல் )  ஜாதி வெறி கூடாது

 நான் அதிகம் பேச வேண்டாம் என நினைத்தே வந்தேன்.  ஆனால் என்னை பேச வைக்கிறார்கள்

செம்பரம்பாக்கம் ஏரியை பொறுப்பின்றி கையாண்டதால்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என் பேசினார்கள்..இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாது..படித்து நல்ல வேலைக்கு சென்று தன்னை தன் குடும்பத்தை வளப்படுத்த வேண்டும்.. பிழைப்புக்காக அரசியலுக்கு வரக்கூடாது

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சூழல் வெகு மோசமானது..இதை மாற்ற சோ முயற்சி செய்ய வேண்டும் .. நீங்கள் இரு தேர்தல்களில் முக்கிய பங்காற்றியது எனக்கு தெரியும்..முதல்வர்களை உருவாக்கியது எனக்கு தெரியும்..ஓட்டுக்கு பணம் என்பதை நீங்கள் மாற்ற வேண்டும்

சோ

இளங்கோவனின் சமீபத்திய பேச்சுகளில் சாத்வீகமான பேச்சு இதுதான் ( பலத்த கைதட்டல் ) இவருக்கு எங்கிருந்துதான் வார்த்தைகள் கிடைக்குமோ

ஓட்டுக்கு பணம் என்பது காங்கிரஸ் காலத்தில்தான் ஆரம்பித்தது…அதை இப்போது இவரே எதிர்ப்பது வரவேற்கத்தக்கது ( பலத்த கைதட்டல் ) சுதந்திர போராட்டம் , பார்லிமெண்ட் சிஸ்டம் போன்ற பல நன்மைகளை ஆரம்பித்ததும் காங்கிரஸ்தான்.. ஓட்டுக்கு பணத்தை ஆரம்பித்தது காங்கிரஸ் முதல்வர் ஒய் எஸ் ஆர் தான்… அதைத்தான் தமிழகத்தில் காப்பி அடிக்கிறார்கள்… ஓட்டுக்கு பணம் என்பதை நானும் எதிர்க்கிறேன்.இது ஒழிய வேண்டும்


பொன் ராதாகிருஷ்ணன்

இதே துக்ளக் விழாவில் மோடி பிரதமராக வேண்டும் என சோ பேசினார். அது இன்று நடந்துள்ளது

அன்பு மணி பேசும்போது அவர் என்னவெல்லாம் நிகழ்த்துவேன் என சொன்னாரோ அதை குஜராத்த்தில் நடத்திக்காட்டியவர் மோடி

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு முப்படைகளையும் பயன்படுத்தி உதவினார் மோடி. நிவாரண தொகை ஒதுக்கினார். அவருக்கு தமிழகம் கடமைப்பட்டுள்ளது

தமிழர்களுக்கு சம உரிமை , சம அந்தஸ்த்து வேண்டும் என இலங்கை சென்று பேசினார் மோடி ,  இலங்கையில் தமிழர் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்ட ஒரே பிரதமர் மோடிதான்

தேசிய வாதிகளுக்கு பிராந்திய உணர்வு இருந்தால் நல்லது என்பதற்கு மோடி நல்ல உதாரணம்

ஈ டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து ஊழலை ஒழித்துள்ளார், பதான்கோட் தீவிர வாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார்
இலங்கைக்கு பாலம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம்

1967ல் செய்த தவறை மக்கள் மீண்டும் செய்து விடக்கூடாது

சோ


மோடி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்த்தாக பேசினார். மோடியை விட அதிக நன்மை செய்தவர் ராஜீவ்தான். ராஜிவ் ஒப்பந்தத்தை அமல் செய்ய வேண்டும் என இப்போது பலர் பேசுவதே அதற்கு சான்று. உணவுப்பொட்டலங்கள் இலங்கையில் போடப்பட்டது அவர் ஆட்சியில்தான்.. அவர் சாதனைகளை பேசுவதில் திமுக கூட்டணி காரணமாக இளங்கோவனுக்கு சங்கடங்கள் இருந்திருக்கலாம்.. அந்த சாதனைகளை இளங்கோவன் பேச வேண்டும்.. அவர் பாணியில் பேசினால்தான் சரிதான்

அண்ணா கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டது- அன்புமணி பரபரப்பு பேச்சு - துக்ளக் விழா

துக்ளக் விழா - இரண்டாம் பகுதி


சோ

என்னை அதிகம் பேச வேண்டாம் என டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்..டாக்டர்கள் பேச்சை கேட்பதே நல்லது.. டாக்டர் கலைஞர் , டாக்டர் ஜெயலலிதா , டாக்டர் விஜயகாந்த் (பலத்த சிரிப்பு , கைதட்டல் )... வாசகர் கேள்வி பதில் நிகழ்ச்சி இருக்காது...வாசகர்களின் கேள்விக்கு துக்ளக்கில் பதில் வெளியாகும்

( சரத்குமார் , எஸ் ஆர் பி பேச்சுக்கு பிறகு அன்புமணி பேசினார் )

அன்புமணி

தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்றால் சில தகுதிகள் தேவை..படித்திருக்ககூடாது..பட்டம் பெற்றிருக்க கூடாது. இளைஞராக இருக்க கூடாது... சினிமாவில் நடித்திருக்க வேண்டும். வசனம் எழுதி இருக்க வேண்டும்.. வீர வ்சனம் அடுக்குமொழி வசனம் பேச தெரிந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரத்தில்தான் 50 ஆண்டுகளாக தமிழகம் இருக்கிறது..

எப்படி இருந்த தமிழகம் இது.. சித்த வைத்தியம் , இயற்கை வளம் , இலக்கியம் என சிறப்பாக இருந்த தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக சீரழிந்து விட்டது.

எந்த ஒரு மானிலத்திலும் 50 ஆண்டுகள் திரைத்துறையினர் ஆண்டது இல்லை.. அழுதுகொண்டே பதவியேற்றதில்லை.  மந்திரிகள் காவடி எடுத்ததில்லை.. 3ல் ஒரு பங்கு வருவாயை மது மூலம் பெறுவதில்லை.

கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவை. புதிய சிந்தனை புதிய அரசியல் தேவை. எங்களால் இந்த மாற்றம் கொண்டு வர முடியும்

என் மகள் சொல்கிறாள்..அப்பா , நீங்கள் படித்திருக்கிறீர்கள்... மந்திரியாகி சேவை செய்திருக்கிறீர்கள்..இதெல்லாம் போதாது.சினிமாவில் நடியுங்கள்..அப்போதுதான் முதல்வராகலாம் என்கிறாள் ( பலத்த கைதட்டல்)

சினிமா , மது , இலவசங்கள் என சீரழிந்துள்ள இந்த நிலையை எங்களால் மாற்ற முடியும். தரமான கல்வி , எல்லோருக்கும் நல்ல ,மருத்துவ வசதி என கொண்டு வருவோம். வை ஃபை , டாப்லட் என் கல்வி இருக்கும்... புத்தக மூட்டைகள் இருக்காது

இப்போது யாரும் கலைஞர் ஆட்சி வேண்டும் , ஜெயலலிதா ஆட்சி வேண்டும் , ஓ பி எஸ் ஆட்சி வேண்டும் என கேட்பதில்லை.. காமராஜர் ஆட்சி வேண்டும் என்கிறார்கள்..காரணம் அன்று 2000 பள்ளிகள் திறக்கப்பட்டன, இன்று 6000 டாஸ்மாக் திறக்கப்படுகிறது

சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் வேலை இன்மை குறையும். வேலை இல்லாமல் சரக்கு அடிக்க செல்லும் நிலை மாறும். பிஜேபி தன்னை நம்பாமல் விஜயகாந்தை தேடி அலைகிறது... அவரோ பிஜேபியுடனும் பேசுகிறார்.. அவர்கள் எதிரியான திமுகவுடனும் பேசுகிறார்.. திமுக எதிரியான கம்யூனிஸ்ட்டுகளுடன் பேசுகிறார். அவரை ஏன் நம்புகிறார்கள்... நாங்கள் எங்களை நம்பி களத்தில் இறங்கவில்லையா

1967ல் திமுக ஆட்சியை பிடித்தபோது இன்னும் 50 ஆண்டுகள் எங்கள் ஆட்சிதான் என்றார் அண்ணா.. அந்த 50 ஆண்டுகள் இந்த ஆண்டுடன் முடிகிறது... ( கைதட்டல் )

சோ சொன்னதுபோன்ற டாக்டர் நான் அல்ல... ஜெயலலிதா , கலைஞர் போன்ற டாக்டர் அல்ல... படித்த டாக்டர்,,, எங்களால் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும்


சோ

சினிமா மட்டுமே வெற்றிக்கு உதவாது. எம் ஜி ஆர் , ஜெ வென்றாலும் எத்தனைபேர் தோற்றிருக்கிறார்கள்..டி ராஜேந்தர் , பாக்கியராஜ் என எத்தனை தோல்விகள்..அவ்வளவு ஏன் , சிவாஜியால் கூட ஜெயிக்க முடியவில்லையே
எனவே அன்புமணி சினிமாவில் நடித்தால் போதும் என நினைக்ககூடாது ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) மதுவிலக்கு சாத்தியம் என நான் நினைக்கவில்லை

ஆனால் மதுவிலக்கில் உண்மையான ஆர்வம் கொண்ட தலைவர் ராமதாஸ் மட்டுமே என நினைக்கிறேன்






மோடி வெளி நாடு பயணம். - சரத்குமார் சுவையான பேச்சு - துக்ளக் விழா

வருடம் தோறும் துக்ளக் இதழ் நடத்தும் ஆண்டு விழா வித்தியாசமான ஒன்று... இப்படி ஒரு பத்திரிக்கை 46 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வாசகர்களை சந்திப்பது ஆச்சர்யமே.,,

பொங்கலை முன்னிட்டு பலர் ஊருக்கு போய் இருப்பார்கள்..இந்த சூழலிலும் பெருந்திரளாக வாசகர் கலந்து கொள்வது விசித்திரம்.. 6.30க்கு நிகழ்ச்சி... மதியம் 2 மணியில் இருந்தே க்யூவில் அமர்ந்து இருக்கிறார்கள்..அப்போதுதான் அரங்கில் சீட் கிடைக்கும்,, சீட் இல்லாதவர்க்ள் இன்னொரு அரங்கில் அமர்ந்து வீடியோ ஒளிபரப்பை பார்க்கலாம்.. கூட்டம் நிரம்பி வழிந்தது,,,

யாரும் மிரட்ட தேவை இல்லாமல் வாசகர்களே ஒழுங்காக வரிசையை பின்பற்றியது அழகு,,,துல்லியமாக 6.30க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது..

சோ சற்று தளர்ந்து இருந்தாலும் தனக்கே உரிய குசும்பை மறக்கவில்லை
----------------------------------------------------------

சோ - 

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.. புத்தாண்டு வாழ்த்துகள்... திகைக்காதீர்கள்... மூன்று மாதம் கழித்து வரப்போகும் புத்தாண்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்த்துகள் ( பலத்த சிரிப்பு ,...கை தட்டல் )  ..சரத்குமார், எஸ் ஆர் பி , இளங்கோவன் , பொன் ராதாகிருஷ்ணன் , பழ கருப்பையா ஆகியோர் பேச இருக்கின்றனர்,,,,மேடையில் இருப்பவர்கள் ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போகாதவர்கள்.. நான் யாருடனும் ஒத்துப்போகாதவன்.. ஒத்துப்போகாதவர்களின் நிகழ்ச்சி இது..

முதலில் சமக தலைவர் சரத்குமார் பேசுவார்...

சரத்குமார்


தலைவர்களே...சோ அவர்களே..வாசகர்களே... செல்போன் பிரியர்களே ( கை தட்டல் ) அனைவருக்கும் வணக்கம்.. இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து வரவிருக்கும் புத்தாண்டுக்கு வாழ்த்துகள்.. மன்னிக்கவும்... மூன்று ஆண்டுகள் அல்ல..மூன்று மாதங்கள்...

இது ஒரு வித்தியாசமான மேடை..இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்..இம்முறை பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இன்றைய அரசியல் என்பதே இன்று கொடுக்கப்பட்ட தலைப்பு... முதலில் நேற்றைய அரசியல் பற்றியும் நாளைய அரசியல் குறித்தும் பேச விரும்புகிறேன்.. அப்போதுதான் இன்றைய அரசியல் குறித்த புரிதல் ஏற்படும்.


நேற்றைய அரசியல் சுதந்திரத்துக்காக பாடுபட்டதில் ஆரம்பிக்கிறது..காந்தி மக்களை வழி நடத்தினார்.. நாடு சட்டங்களால் ஆளப்படக்கூடாது . நல்ல தலைவர்களால் ஆளப்பட வேண்டும்.. அந்த வகையில் சிறப்பான ஆட்சி தந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.. எட்டு பேர் கொண்ட மந்திரிசபையை வைத்துக்கொண்டு பொற்கால ஆட்சி வழங்கினார்...

நாளைய அரசியல் எப்படி இருக்கும்... தங்கத்தட்டு இருக்கும்..சாப்பிட உணவு இருக்காது..இளைஞர்களுக்கு அரசியல் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது...அரசியல் ஞானம் குறைந்து விட்டது. ஏன் இளைஞர்களுக்கு அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை..ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு ஜாதி மத முத்திரை குத்தி விடுகின்றனர்.. நான் உட்பட யாரும் விதி விலக்கல்ல..

சென்னையில் ஏற்பட்ட பேரிடரின்போது இளைஞர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு தொண்டாற்றினர்..இந்த ஒற்றுமை ஏன் அரசியலில் இல்லை...இது குறித்து விரிவான விவாதம் தேவை...

மோடி வெளி நாடு சென்று விடுவதாக விமர்சனம் இருக்கிறது... இந்தியா என்றால் பாம்பாட்டி , யானை , காலி வயிறுகள் என நினைக்கும் வெளி நாட்டு மன நிலையை மாற்ற பயணம் தேவை.. அவர் இந்தியாவை மார்க்கெடிங் செய்கிறார்...பி ஆர் ஓ வேலை செய்கிறார்...அது மிகவும் வரவேற்கத்தக்கது... தேவையானது..

இலவச திட்டங்களுக்காக ஜெயலலிதாவை விமர்சிக்கிறார்கள்...கொடுக்கப்பட்ட 177 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறார்.லாப்டாப் போன்ற இலவசங்கள் நன்மையைத்தான் செய்து இருக்கிறது..அம்மா உணவங்கள் பலருக்கும் பயனளிக்கிறது

இளைஞர்கள் பெருமளவு அரசியலுக்கு வர வேண்டும்..அரசியல் விழிப்புணர்வு வேண்டும்... இன்னும் ஒரு மாதத்தில் ஒரு விரிவான விவாத அரங்கு நடத்த வேண்டும் என சோ அவர்களை கேட்டுக்கொள்கிறேன்


சோ

ஒரு மாதம் கழித்து விவாதம் நடத்த சொன்னார்... ஒரு மாதம் என்றால் ஒரு வருடம் என பொருள்...அதுதான் ஆரம்பத்திலேயே பூடகமாக சொல்லி விட்டார் ( பலத்த கைதட்டல் )   தமிழ் நாட்டை பொருத்தவரை ஒரு மாதம் செல்வது ஒரு வருடம் போல இருக்கிறது....அவ்வளவு குழப்பங்கள்

அடுத்து எஸ் ஆர் பாலசுப்ரம்ணியன்  ( த மா கா  )பேசுவார்

எஸ் ஆர் பி

அந்த காலத்தில் கண்ணதாசன் நடத்திய தென்றல் பத்திரிக்கை மூலம் பல கவிஞர்கள் உருவானார்கள்..அவராலேயே அதை தொடர்ந்து நடத்த முடியவில்லை...அது நிறுத்தப்பட்டபோது கதறி அழுதார். ஆனால் சோ இத்தனை ஆண்டுக்ளாக வெற்றிகரமாக துக்ளக்கை நடத்துவது பாராட்டத்தக்கது

இன்றைய அரசியலில் பிராந்திய உணர்வுகள் அதிகரிப்பது ஆபத்தானது... எல்லோரும் ஒற்றுமையாக , சம உரிமையுடன் வாழ வேண்டும்... என்க்கு கோயிலுக்கு போக உரிமை உள்ளதுபோல மசூதிக்கு சர்ச்சுக்கு போகின்றவர்கள் எந்த உறுத்தலும் இல்லாமல் போகின்ற சூழல் வேண்டும்.

திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாடினால் எதிர்க்கிறார்கள்... நான் சுல்தான் பேட்டையை சேர்ந்தவன் என்பதால் திப்பு மேல் ஈடுபாடு உண்டு.. அவரை ஹிந்து விரோதி என்கிறார்கள்... சிருங்கேரி மடம் மராட்டியர்களால் கொள்ளை அடிக்கப்பட்டபோது , மராட்டியர்களுக்கு பதிலடி கொடுத்து செல்வத்தை மீட்டு தருகிறேன்..இல்லையேல் நான் தருகிறேன் என சொன்னவர் திப்பு

வெள்ள நிவாரண பணிகளை அரசு சிறப்பாக செய்தது..ஆனால் செய்ததை சரியாக சொல்லவில்லை

மக்களின் மறதியை சில கட்சிகள் பயன்படுத்தப்பார்க்கின்றன...இப்போது அரசை குறை சொல்லும் கட்சி ஆட்சியில் இருந்தபோது திண்டுக்கல்லில் 1973ல் ஓர் அணை கட்டியது..தப்பான இடம் , தப்பான டிசைன், தரம் குறைந்த பொருட்கள்...

விளைவாக பெரு வெள்ளம்... பலர் இறந்தனர்...ஏராளம் இழப்பு... அப்படி செய்தவர்கள்தான் இன்று அதிகம் பேசுகின்றனர்,,,,மக்கள் இவர்களை நம்பக்கூடாது....

மோடி பாகிஸ்தான் சென்றதை பாராட்டி சில நாட்களில் பதான்கோட் தாக்குதல்... மக்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும்

சோ

திமுக பெயர் சொல்லாமல் திமுகவை விமர்சித்தார்...பெயர் சொல்ல தயக்கம்...காரணம் நாளை என்ன நடக்குமோ..யாருக்கு தெரியும் ( பலத்த கைதட்டல்)
அதேபோல அதிமுகவையும் பெயர் சொல்லவில்லை... பிரயோஜனம் இருக்குமா என்பதில் அவருக்கே குழப்பம் ( கைதட்டல் சிரிப்பு ) மோடி பாகிஸ்தான் பயணம் பயனற்றது என சொல்ல முடியாது...அந்த பயணத்தால்தான் பாகிஸ்தான் சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறது...

கொடுக்கப்பட்ட 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் திப்புவைப்பற்றியே பேசி விட்டு போய் விட்டார்... சுல்தான் பேட்டை அவர் ஊர் என்பதால் இருக்கலாம் ( சிரிப்பு , கைதட்டல் )

அடுத்து அன்புமணி பேசுவார்
அன்புமணி உரை

இளங்கோவன் பொன் ராதாகிருஷ்ணன்


ஜெ.யை கோபப்படுத்தி அதிமுகவில் இருந்து வெளியேற காரணமான பழ கருப்பையா பேச்சு

( அன்புமணி , இளங்கோவன் , பழ கருப்பையா பேச்சு....அடுத்த பதிவில் )

Tuesday, January 12, 2016

கவிதா சொர்ணவல்லியின் பொசல் சிறுகதை தொகுப்பு - என் பார்வையும் ஒரு விவாதமும்


பெண் எழுத்தாளர்கள் கதை பொதுவாக இரு துருவங்களில் ஒன்றில் இருக்கும்..பெண்ணியம் , புரட்சி என்ற துருவம் ஒன்று..குடும்பக்கதை என்ற துருவம் மற்றொன்று... அதுவும் இல்லாவிட்டால் ஆண் எழுத்தாளர்களை ஃபேக் செய்ய முனையும் கதைகள் இன்னொரு வகை..

கவிதா சொர்ணவல்லியை பொருத்தவரை அவர் சில கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கக்கூடியவர்... எனவே அவர் கதைகள் ஏதேனும் இசங்கள் சார்ந்தோ , பெண் விடுதலை சார்ந்தோ இருக்கும் என நினைத்தேன்.. அப்படி எழுதும் ஆழ்ந்த அறிவும் தகுதியும் கொண்டவர் அவர் என்பதால் அப்படிப்பட்ட கதைகளை எதிர்பார்த்தே அவரது பொசல் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் என்ன ஒரு ஏமாற்றம்...இனிய ஏமாற்றம்.. அழகு தமிழில் , இனிய நடையில் , பொதுவான மனித உணர்வுகளைப்பேசும் கதைகள் அவை....

ஒரு  மழைக்கால பேருந்து பயணத்தில்  படித்த அந்த தொகுப்பு மழை அனுபவத்தை மேலும் ரசனை மிக்கதாக மாற்றியது


ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒரு விதம்


காதல் கடந்த ஈர்ப்பை கூறும்  நான் அவன் அது  , கிராமத்து கடவுள்களை பற்றிகூறும் விலகிபோகும் கடவுள்கள் , இந்த தொகுப்பில் பலரது ஃபேவரைட் கதையான கதவின் வெளியே மற்றொரு காதல் , தாய் பாசத்தை உணர்வுபூர்வமாக சொல்லும் அம்மாவின் பெயர் , காதலின் கதகதப்பை உணர வைக்கும் எங்கிருந்தோ வந்தான் ,  நவீன வாழ்வியல் சூழலில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் காதலை சொல்லும் மழையானவன் , சற்றே பூடகமான கதை அம்சம் கொண்ட யட்சி ஆட்டம் , இலக்கிய ரீதியாக கச்சிதமான எழுத்து நடையைக்கொண்ட பச்சை பாம்புக்காரி , அமானுஷ்யமாக தொடங்கி நெகிழ்ச்சியாக முடியும் டிசம்பர் பூ என ஒவ்வொரு கதையும் மனதில் தென்றலின் குளுமையை வீசிச்செல்கிறது

கதையின் கடைசி வரிகளை அழுத்தமாக அமைப்பது , கதாபாத்திரங்களை வெகு சில வரிகளில் அறிமுகம் செய்வது , கதையின் மன நிலையை ஆரம்பத்திலேயே மனதில் கொண்டு வருவது , இனிமையான நடை என பாசிட்டிவாக பல விஷ்யங்களை சொல்லலாம்..

ஆனால் குறிப்பிட்ட சூழலில் நடக்கும் கதையில் இன்னும் அதிகமான வட்டார சொற்கள் இடம்பெற்றிருக்கலாம்.. பொது தமிழில் இருப்பது சராசரி வாசகனுக்கு வசதிதான் என்றாலும் , யதார்த்த சூழல் சற்று குறைவதாக தோன்றுகிறது

 கிராமத்து சூழலில் கொஞ்சம் குறை இருந்தாலும் மாடர்ன் சூழலை , தற்கால பெண்ணின் மொழியை கண் முன் நிறுத்துவதில் சற்றும் குறை வைக்கவில்லை

வேறு ஏதாவது சொல்லணுமா என்றான்..

  நீண்ட நாட்களாக நீ கேட்ட  உன் மீதான என்  காதல் பற்றிய கவிதை என் கையில் இருக்கிறது..அதில் உனக்கு பிடித்த போன்சாய் செடிகூட இருக்கிறது என சொல்ல நினைத்து , எதுவும் இல்லை என சொல்லி சிரித்தேன் என்பதில் அந்த உணர்வை துல்லியமாக கொண்டு வந்து விடுகிறார்...  அவனது தேவ தூத இறகுகள் நீண்டுதான் இருந்தன.. ஆனால் அதன் பட்டு நூல் அறுந்திருந்தது என பொயட்டிக்காக சொல்ல முடிந்திருப்பது அருமை ( எங்கிருந்தோ வந்தான் )

காதல் என்பது எதிர்பார்ப்பற்றது,, நிபந்தனை அற்றது என்பார் ஜே கிருஷ்ண மூர்த்தி... ஆனால் பெண் அப்படி எளிதாக காதல் வயப்பட்டு விட முடியாது.. காதலை பிரகடனப்படுத்தவும் மூடாது,,,உதாரணமாக ஆட்டோகிராப் படம்போல ஒரு பெண் தன் காதல்களை சொல்லிவிட முடியாது... இதை அழகாக அலசி இருக்கும் கதை கதவின் வெளியே மற்றொரு காதல்... ஒருவருடன் பிரச்சனை வந்தால்தான் இன்னொருவருடன் காதல் வரும் என்பது இல்லை... உண்மையில் வெறுப்பு நிறைந்த இதயத்தில் காதல் வரவே வராது... காதல் நிரம்பிய இதயத்தில் காதல் பூத்துக்குலுங்குவதை யாரும் தடுக்க இயலாது என சொல்லும் இந்த கதை ஒரு பெண்ணின் மனதை துல்ல்லியமாக பிரதிபலிக்கும் தமிழ் சிறுகதைகளில் முக்கியமான கதைகளில் ஒன்று

பேசுபொருள் சார்ந்து எனக்கு பிடித்த கதை இது..ஆனால் சொல்லப்பட்ட விதம் காரணமாக எனக்கு பிடித்த கதை பச்சைபாம்புக்காரி

தன் அப்பாச்சியின் சமையல் சுவைக்கு காரணம் அருவாள் மனைதான் என நினைத்து சிறுமியாக இருக்கும்போதே அதைகேட்கிறாள் நாயகி...கைப்பக்குவத்துக்கு காரணம் பச்சைப்பாம்பை கைகளால் உருவதுதான் என்கிறாள் அப்பாச்சி... இதெல்லாம் கிராமத்து நம்பிக்கை என நினைக்கிறோம்.. ஆனால் கடைசியில் அருவா மனை , பச்சைப்பாம்பு ஆகியவை வேறொரு பொருள் கொள்ளும்போது அவை பிரமாண்டம் ஆகின்றன...  பெண்களால் வழிவழியாக காப்பாற்றப்படும் வாஞ்சை  கண் முன் தோற்றம் கொள்கின்றன

அன்பு என்பது வெகுளித்தனமானது..ஆனால் நாம் அதற்கு வெவ்வெறு பெயர்கள் வைத்துள்ளோம்... உண்மையான அன்பு தீங்கு செய்யாது.. அன்பு எதிர்பார்ப்பற்றது....இதை சொல்லும் அற்புதமான கதை நான் , அவன் , அது...


ஆனால் இதையெல்லாம் மீறி பாட்ஷா டைப் கதைதான் அம்மாவின் பெயர்.. அம்மாவின் பெயர் என்னவென்றே தெரியாத ஒரு மகள்... அவள் பெயர் தெரியும்போது எப்பேற்பட்ட பெண்மணி என பிரமித்துப்போகிறாள்... தன் சுயத்தை மறைத்து , சுயத்தை இழந்து வாழும் நம் ஊர் பெண்களை டிராமட்டிக்காக கண் முன் நிறுத்தும் இந்த அம்மாவின் பெயரையே தலைப்பாக வைத்தது மிகவும் பொருத்தமானது... கடைசி வரிகள் மிகவும் அருமை

இதைவிட இன்னொரு கதை எழுதி விட முடியாது என நினைக்கும்போது கடைசியாக ஒரு கதை...  அது தாய் மீது மகள் கொண்ட அன்பு என்றால் இது தாய் மீது மகன் கொண்ட வாஞ்சை...தாய் மகள் அன்பை ஓர் ஆண் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்...ஆனால் மகன் தாய் அன்பை ஒரு பெண் புரிந்துகொள்ள முடியும் என்ற சப் டெக்ஸ்ட் பலரால் மிஸ் செய்யப்படும் வாய்ப்பு அதிகம்..



என்ன ஏன் சாக விட்ட” அப்படின்னுதான் கேப்பாங்கன்னு நினைக்கிறேன். அத அவங்க கேக்றதுக்காகத்தான் நானும் காத்துட்டு இருக்கேன்” என்றான். “கேட்டா என்ன செய்வே” என்றேன் ‘சத்தியமா என் கிட்ட பதில் இல்ல” என்றான் தடவிய டிசம்பர் செடியின் குட்டி முள் கிழித்து என் விரலில் ரத்தம் வடிந்ததை நான் கிருஷ்ணாவிடம் சொல்லி கொள்ளவில்லை.



-----------------------------------------------------

இந்த கதை குறித்து நண்பர் நிர்மலுடன் ஓர் உரையாடல்...



- நண்பா...பொசல் தொகுப்பு எப்படி இருந்துச்சு


வாசித்தேன் நல்லாருந்திச்சி


எந்த அம்சம் உடனடியா ஈர்த்துச்சு


கதைகள் அனைத்தும் first person ல் சொல்லியது பிடித்திருந்தது

உங்க ஃபேவரைட் எது

அவன் அவள் அது. Is really good.

லவ்லி


அம்மா பெயர் is also nice

யட்சி கதை பிடித்திருந்தது


இன்னொரு காதல் கதை என் ஃபேவரைட்..பெண் மனதை துல்லியமா பிரதிபலித்தது...சரி,,,இந்த கதைகளின் மைனஸ் என்ன 



இன்னும் இண்டென்ஸா எழுதிருக்கலாம் still it's good..வட்டார சொற்கள் இன்னும் அதிகம் வந்திருக்கலாம்



ஒருவருடன் காதலில் இருக்கும்போது , இன்னொருவர் மேலும் நேசம் வரலாம் என்று ஒரு பெண் பார்வையிலான கதை எப்படி இருந்துச்சு




அது தீம் நல்லாருக்கு, இன்னும் உள்ளே போயிருக்கலாமோ ந்னு தோனிச்சி.

சூப்பர்...ஆனா எனக்கு பிடிச்சு இருந்துச்சு

எனக்கு பிடித்தது நான் அவன் அது..ஆனா தலைப்பு தான் ஏதோ மலையாள படம் போல இருக்கு

ஹாஹா


 incest லவ்

Attraction.

Infatuation

ந்னு எதுவும் புரியாமல் இருக்கும் attraction




நெறய ஆங்கில வார்த்தைகள் வருதே, அது ஒகேவா. எனக்கு பிடித்திருந்தது.

ஆங்கில வார்த்தைகள் இந்த கதை மாந்தருக்கு பொருத்தமாகவே இருந்தது


Yes agreed I liked it too

ஒரு மாடர்ன் பெண் தூய தமிழில் யோசிப்பதாக எழுதினால் செயற்கையாக இருக்கும்


அம்மாவின் பெயர் மனதில் நிற்கும் கதை

அம்மாவை ஓர் ஆண் பார்ப்பதற்கும் பெண் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை புரிய வைத்தது


யட்சி கதை , மாடனும் மோட்சத்தில் வரும் ஒரு கதை போல இருந்தது

யெஸ் just realised that. ஒரு மகன் அம்மா மீது என்னிக்கும் பொறாமை படமாட்டான்ல

எக்சாக்ட்லி


எனக்கு இந்த இடத்தில் அட்லிஸ்ட் இரண்டு observable act சொல்லிருந்தா அந்த இண்டென்ஸ் வந்திரிக்குமோ?

How does that Jeslouse operate

என் மகளுக்கும் என் மனைவிக்கும் என்னை குறித்து ஒரு போட்டி உண்டு




ஒருத்திய குட் ந்னு மகளுக்கு பிடிக்காது . ஏன் காரில் நானும்மனைவியும் பேசினால் கூட மூக்கை நுழைத்து நானும் அம்மா வுக்கு ஈக்வல்னு நிறுவ முயற்சி செய்வாள்


ஆமா... அது இயல்பானது


இது போல ஏதாச்சும் ....எனி ஹவ் கதையின் தீம் அது இல்ல.

தாய்க்கு ஈக்வல் என மகள் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கள் உண்டு... மகளுக்கு ஈக்வல் என் தாய் காட்டிக்கொள்ள விரும்பும் தருணங்கலும் உண்டு


யெஸ் யெஸ்

இதைத்தாண்டியும் அவர்களுக்குள் வாஞ்சை இருக்கிறது என்பதே அவர்கள் உறவை மிகவும் இண்டென்ஸ் ஆக்குகிறது..


யெஸ்

Jealousy need Not be negative or destructive

யெஸ்ஸ்ஸ்ஸ்


It's a unavoidable feel resulting in comparison

ஆமா... தேவதச்சன் வரிகள் நினைவுக்கு வருகின்றன

உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா