Saturday, November 12, 2016

தமிழ் சினிமாவின் ஓர் அபூர்வ பாடல் - ஒரு நாள் போதுமா

ஒரு நல்ல சினிமாவில் திரைமொழி , இசை மொழி , உடல் மொழி பல மொழிகள் இருக்கும்... அவற்றுக்கான காதுகள் , கண்கள் திறக்கும்போதுதான் அவற்றை முழுமையாக ரசிக்க முடியும்...

உதாரணமாக திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு நாள் போதுமா என்ற பாடல்... திமிர் பிடித்த ஒரு வட இந்திய பாடகர்  ,  தமிழக அரசவைக்கு வந்து என்னைப்போல யாரும் இல்லை என ஆணவத்தோடு பாடும் பாடல்..அந்த  திமிரை சிவன்  அதைவிட நல்ல பாடல் பாடி அடக்குகிறார் என்பது கதை..

அந்த ஆணவப்பாடலை பாடுவ்தற்கு சீர்காழி கோவிந்தராஜனை அழைத்தனர்... இது தோற்கப்போகும் பாடல்...இதை பாட விரும்பவில்லை என சொல்லி விட்டார்...

ஆனால் இதுவா தோல்விப்பாடல்? வெற்றி பெறுவதாக படத்தில் வரும் பாடலை விட மட்டும் அல்ல.. இது வரை வந்துள்ள சிறந்த பாடல்கள் பலவற்றை விட அருமையான ஒரு பாடல் இது..

காட்சி , நடிப்பு , இசை , பாடல் வரிகள் என எல்லாமே சரியாக அமைந்த பாடல் இது...பாடலை எழுதியவர் கண்ணதாசன்....


ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா?

புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா 

அவரது தன்னம்பிக்கையை , ஆணவத்தை கண்ணதாசன் வரிகள் மூலம் சொல்வதுபோல இசை அமைப்பாளர் கேவி மாகாதேவனும் அந்த பாடகரைப்பற்றி தன் இசை மொழியால் சொல்கிறார்...எப்படி... அவர் பாட ஆரம்பிப்பது மாண்ட் எனும் ஹிந்துஸ்தானி  ராகத்தில்...எத்தனை வகை இசைகள் இருந்தாலும் தன் இசையே பெரிது என நினைக்கும் வட இந்திய பாடகர் என்பதை இந்த ராகத்தில் இசை அமைத்து , அவர் மனோபாவத்தை இசை மூலம் சொல்கிறார்..

தனக்கு அது மட்டும் அல்ல...கர்னாடக இசையும் தெரியும் என சொல்வது போல கடைசியில் அதையும் பாடிக்காட்டுவது போல தோடி , தர்பார் , மோகனம் , கானடா போன்ற ராகங்களில் சில வரிகளை பாடுகிறார் அந்த பாடகர் என சிந்தித்து இந்த ராகங்களில் கடைசி வரிகளை இசை அமைத்து தன் மேதமையை காட்டுகிறார் மகாதேவன்.. அதற்கேற்ப பாலையா நடிப்பை வழங்கியுள்ளார்..


அதற்கேற்ப கண்ணதாசனும் வார்த்தைகளில் விளையாடி இருப்பதுதான் இந்த பாடலை மாஸ்டர் பீஸ் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது..

பல ராகங்களை பாடிக்காட்டுகிறார் அல்லவா..அந்த ராகங்களுக்கான வரிகளை கவனியுங்கள்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ..
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
கலையாத மோகனச் சுவை நானன்றோ

கானடா என் பாட்டுத் தேனடா

இசை தெய்வம் நானடா

பாடுபவரின் குணாதிசயத்தையும் கொண்டு வந்து ராகங்களையும் கொண்டு வந்த கவிஞர் ,  அந்தந்த ராகங்கள் வரும் வரிகளை அந்த ராகங்களில் இசை அமைத்த இசை அமைப்பாளர் , சிறப்பாக நடித்த நடிகர் என மிக சரியான ஒத்திசைவோடு அமைந்த அபூர்வமான பாடல் இது

இப்படி ஓர் அபூர்வ பாடலை பிறருக்கு விட்டுக்கொடுத்துள்ளார் படத்தின் நாயகன் சிவாஜி கணேசன்,, இதுவும் ஓர் அபூர்வமான தன்மைதான்

இந்த பாடலைப்பற்றி நான் எழுத முக்கிய காரணம் இதைப்பாடிய பாலமுரளி கிருஷ்ணா... மிக அற்புதமாக பாடி வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் அவர்..

இன்னொருவரால் புறக்கணிக்கப்பட்ட தோல்விப்பாடல் என்றாலும் ஈகோ இல்லாமல் பாடினார் என்கின்றனர் சிலர்..

அவருக்கு இதை சொல்லாமல் மறைத்து பாட வைத்தனர் என்கின்றனர் சிலர்...

உண்மை தெரியவில்லை... எது எப்படி இருந்தாலும் , இந்த பாடல் அவருக்கு பெருமை சேர்க்கும் பாடல்..அவர் இந்த பாடலைப் பாடியதன் மூலம் சினிமாப்பாடல்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதே உண்மை

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா