Monday, December 28, 2020

நிலமும் பொழுதும் நூல்... ஒரு சின்ன உரையாடல்

 நிலமும் பொழுதும் நூலாசிரியர் நிர்மலுடன் ஒரு சின்ன உரையாடல்..


.   1 பூமியின் வரலாறு,  வரலாறை ஆராயும் ஆர்வம் ஏன் தோன்றியது , யாரெல்லாம் உழைத்தனர் என மூன்று வித தளங்களில்  நூல் பயணிக்கிறது.  ஏதேனும் ஒரு தளமேகூட தனி நூலாகும் தகுதி கொண்டவை என்றாலும் ஒரே நூலில் இவற்றை தொகுக்கும் எண்ணம் எப்படி தோன்றியது?

படைப்பின் நோக்கமே Anthropocene என்கிற தற்காலத்தை சொல்வதற்கே.. புத்தகத்தின் பெயர் ஆந்திரோபோசின் எனதான் வைத்திருந்தேன் ஆனால் புவியின் நீண்ட காலத்தில் ஆந்திரபோசின் ஒரு சிறிய பகுதி போல புத்தகத்திலும் அது சில பக்கங்களாகிவிட்டது




2 கற்பனைக் கதைகள் என்றாலும் அந்த கற்பனைத்திறன்தான் செப்பியன்ஸ்கள் ஆளுமைக்கு காரணம் என்ற சூழலில் அக்கதைகளை எல்லாம் எதிர்மறையாகவே சித்தரித்துள்ளீர்கள் என  தோன்றுகிறதே


எதிர்மறை அல்ல அதுதான் இன்னும் மனிதர்களின் நடவடிக்கை பலவற்றை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது அதே வரிசையில் அறிவியல் சொல்லும் புதிய கதையை சேர்த்துக் கொண்டால் நல்லது

அதனால்தான் புதிய கதை ந்னு அறிவியல் சொல்லும் வரலாற்றை வைத்துள்ளேன்

அறிவியல் சொல்வதும் ஒரு கதைதானே. 

லை ஆஃப் பை மாதிரிஎந்த கதை பிடிக்குதோ  எது தேவையோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எந்த மாற்றத்தையும் அறிவியல் மட்டுமே கொண்டு வர முடியாதுதானே

3 இதைப்படைக்க எத்தனை காலம் தேவைப்பட்டது.?


இரு வருடங்கள்.

 தினம் ஒரு நாள் கூட விடாமல் குறைந்தது நாலு பக்கங்களாவது இதைக் குறித்து வாசிப்பேன்.


4 இந்நுாலை எழுத தமிழில் முன்னுதாரணமாக நூல்  எதையும் எடுத்துக் கொண்டீர்களா


இல்லை

  Quest of an chronolgist to find the age of earth மாதிரி சொல்லிருக்கேன் ஆனால் அதில் ஐரோப்பிய மறுமலர்ச்சி இருக்காது

அறிவியல் பாட நூல் போல இருக்கும் அது. மேலும் அது காலகட்டமாகவும், அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைக் கொண்டு கடத்தி செல்வார். நான் நிகழ்வுகளை வைத்து கொண்டு சென்றேன்







பூமியின் கதையை சுவைபட சொல்லும் நூல்

 

 செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கின்றனவா..    பறக்கும் தட்டுகள் என்பவை உண்மையா...  கடந்தகாலப்பயணம் சாத்தியமான ஒன்றா  .. இரும்பை தங்கமாக்கல் சாத்தியமா  போன்ற சில பாமர கற்பனைகளுக்கு கேள்விகளுக்கு பதில் அளிப்பதையே தமிழ்ச்சூழலில் அறிவியல் என நினைத்து வருகிறார்கள் 


ஆனால் அவ்வப்போது சில அற்புதமான அறிவியல் நூல்களும் அத்திப்பூத்தாற்போல வருவதும் உண்டு


அப்படி நான் சமீபத்தில் படித்த நல்ல நூல் ”  நிலமும் பொழுதும் “   எழுதியவர் நிர்மல்

கிண்டில் பதிப்பாக வெளி வந்துள்ளது

பூமி எப்போது தோன்றியிருக்கக்கூடும் , உயிரிகள் எப்போது தோன்றியிருக்கும்   , இவை குறித்து ஆராய வேண்டும் என்ற உந்துதல் எப்போது எப்படி மனிதனுக்கு ஏற்பட்டது  , இவை குறித்த தேடல் என்றில்லாமல் பொதுவான அறிவுப்புரட்சிக்கு எந்த நிகழ்ச்சி தொடக்கப்புள்ளியாக அமைந்தது , அறிவியல் வளர்ந்தால் கடவுள் நம்பிக்கை அழிந்து விடும் என்ற பொதுப்புத்திக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மதவாதிகள் ஏன் இவ்வாராய்ச்சிகளுக்கு ஊக்கம் அளித்தனர் , தர்க்கம் என்பது உண்மைக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு மாறாக , தர்க்க ரீதியாக பொய்யைக்கூட உண்மை என நிறுவ முடியும் என்பதால் , தர்க்கத்தை கடந்தே உண்மையைக்காண வேண்டும் என்ற பார்வை எப்படி உருவானது , உலகின் எல்லா நாட்டு பாறை  வகைகளும் ஒரே வகையில் இருக்குமா , சகாப்தம் என்பதைக்குறிக்கும் era என்பதை விட விரிவான அர்த்தம் தரும் சொல் மற்றும் அதற்கான தேவை என்ன , ஒவ்வொரு காலகட்டத்துக்கும் பாறை வகைகளுக்கும் எப்படி பெயர் இடுகிறார்கள் என்பது போன்ற பல சுவாரஸ்யமான சங்கதிகளை அழகாக சொல்கிறது நூல்


பல சர்ச்சைக்குரிய விவாதத்துக்குரிய விஷயங்களையும் புத்தகம் தொட்டுச்செல்கிறது


பழைய ஆன்மிக நூல்கள் அறிவியல் வளர்ச்சியால் காலாவதியாகி விட்டனவா அல்லது புதுப்பொலிவு கொள்கின்றனவா  , திருக்குறள் கடவுள் பெயர் எதையும் சொல்லவில்லையா..   ஆதியில் வார்த்தை இருந்தது அது தேவனோடு இருந்தது அது தேவனாகவே இருந்தது என்ற பைபிளும் , பசு பதி என இரண்டுமே அனாதி ,அதாவது தோற்றுவித்தவன் என யாரும் இல்லை என அறைந்திடும் இந்திய ஞானமும் தற்போதைய சூழலில் என்ன பொருள்படுகின்றன ,   செப்பியன்ஸ் எனும் நமது மனித இனத்தை விட பலமும் அறிவும் கொண்ட மற்ற மனித இனங்கள் அழிய , நாம் மட்டும் வென்றிடக்காரணம் மதம் சாதி தேசம் போன்ற கற்பிதங்களை நம்பி ஒன்றிணையும் பண்பு நமக்கு மட்டுமே உண்டு , உலக சிங்கங்களே ஒன்றிணையுங்கள் என சிங்கமோ புலியோ மற்ற இனங்களோ ஒன்று சேராது , ஆக கதைகள் சாதிய வாதம் மதவாதம் போன்றவைதான் மனித இனம் வாழ்வதற்கே காரணமாகும் , ஆனால் உண்மையை அடைய இதுபோன்ற கற்பிதங்களும் கதைகளும் தடை என சொல்வதற்கான காரணம் என்ன என நம்மை யோசிக்க வைக்கிறது நூல்

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் , மனிதத்துவ யுகம் போன்றவை உலகையே மாற்றி அமைத்ததை அறிவது மட்டுமல்ல  அதன் விளைவுகளையும் தமிழக திராவிட இயக்க சூழலில் ஓர் அறிவியல் நூல் யோசிக்க வைப்பது வியப்புக்குரியது


தொல்லுயிர் படிமங்கள் மனிதனைஈர்த்ததில் ஆச்சர்யமில்லை.  அப்படி ஆரம்பித்த தேடல் பூமியின் வரலாறையே சொல்லித்தந்து விட்டது ஆச்சர்யமளிப்பது..

இயற்கை தன்னைத்தானே விளக்கிக்கொள்ள தொல்லுயிர்ப் படிமங்களை தூண்டிலாக பயன்படுத்தியதோ என தோன்றியது

உலக சிந்தனையாளர்கள் தமிழ் இலக்கியகர்த்தாக்கள் என நூல் முழுதும் பெயரளவில் மட்டுமன்றி நூல் நடையிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர்

எழுத்தாளனின் மரணம் , நான் லீனியர் எழுத்து , மையமற்ற பிரதி போன்றவற்றை புனைவில் பார்த்திருப்போம்.  முதல்முறையாக அபுனைவில் காண்கிறோம்.  முன்னுரையில் மட்டுமே படைப்பாளியை காண்கிறோம்.   மற்றபடி வேறெங்கும் எழுத்தாளனை காணிலோம். பிரதியே தன்னை கட்டமைத்துக் கொள்கிறது.

எங்கிருந்தும் ஆரம்பித்து எங்கும் முடிக்கலாம் என்பதுபோல தனித்தனி சிறுகதை போல கட்டப்பட்டுள்ளது இப்படைப்பு


 தலைப்புகள் , உப தலைப்புகள் ,  முகப்பு வரிகள் ஆகியவை உலக அறிவியலை தமிழ் மணக்க நம்முன் நிறுத்துகிறது

அடுத்த முறை ஆலயம் சென்றால் நாம் காணும் யாளி சிலை ,  சுவறில் காணும் பல்லி எலும்பு ,  மலைகள் ,  காலை இடறும் கல் ,  தீயில் எரியும் கரி போன்ற"பல நம்மை சற்றே கவனிக்க வைக்கும் அதுவே நூலின் வெற்றி


நூலில் கற்க  முரண்பட  விவாதிக்க ஏராளம் உண்டு.

புரியாமல் எழுவதுதான் தரமான எழுத்து என நினைக்கும் நோய்மைச் சூழலில் அறிவார்ந்த விஷயத்தை ஒரே அமர்வில் படிக்கத்தக்க வகையில் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது

கிண்டில் பதிப்பாக நூல் கிடைக்கிறது

நூல் வாங்குவதற்கு



Sunday, December 20, 2020

இயற்கை இனிதா கொடிதா ?

 பரணில் குவிக்கப்பட்ட பழைய பொருட்களை சுத்தம் செய்தல் சுவாரஸ்யமான பணி.

பழைய பொக்கிஷங்கள் , அந்தக்காலத்தில் நடத்திய கையெழுத்துப்பிரதி , கடிதங்கள் என எவ்வளவோ கிடைக்கும்

அப்படி சுத்தம் செய்தபோது திடீரென ஓர் எலியைப் பார்த்து திடுக்கிட்டேன்.  விரட்டினாலும் அது ஓடவில்லை.

கடைசியாக துரத்தியாயிற்று

பிறகுதான் அவ்வெலியி


ன் பரிதவிப்புக்கான காரணம் புரிந்தது

உள்ளே சின்னஞ்சிறு எலிக்குஞ்சுகள். வெகு மென்மை. வெகு அழகு

கதகதப்பாக ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு சுருண்டு கிடந்தன.

நடக்கவோ பார்க்கவோ முடியாத புத்தம்புது பிறவிகள்


ஏராளமான உணவுப்பொருட்களை ஆண்டுதோறும் அழிக்கின்றன , நோய்க்கிருமிகளை பரப்புகின்றன , நோய்களை உருவாக்குகின்றன என மனிதனின் எதிரியாக உள்ளன.  ஆனால் இயற்கையைப் பொருத்தவரை அதற்கும் எலியும் ஒன்றுதான்  மனிதனும் ஒன்றுதான்

மனிதனைப்படைப்பது போன்ற கவனத்துடன்தான் எலியையும் இயற்கை படைத்துள்ளது

       பறவைகள் பூனைகள் போன்றவைகளுக்கு உணவாகும் பொருட்டு படைக்கப்பட்டவை எலிகள் இன்று பறவைகள் குறைவு. கட்டட நெரிசல்களில் வாழும் எலிகளை பிற உயிரிகள் உணவாக்குவது கடினம்.

உணவுச்சங்கிலி  உடைந்து இயற்கை சமநிலை பிறழ்ந்துவிட்டது.   இதில் எலிகளின் பிழை ஏதும் இல்லை


எலிப்பொறிகள் , விஷ மருந்து என பல வகைகளில் அவை கொல்லப்படுகின்றன

மனிதன் தலையிடாதவரை இயற்கை அழகுதான்








Wednesday, October 14, 2020

அப்பரின் அரிய பாடல்

 

சில பாடல்களின் பொருள் நமது வாசிப்பால் புதிதாக ஒரு பொருளைத்தருவதுண்டு

கீழ்க்கண்ட பாடலைப்பாருங்கள்.  அப்பர் ( திருநாவுக்கரசர் ) தேவாரப்பதிகம்


வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்

தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்

இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே


ஐந்து கள்வர் ஒரு ஆமையைப்பிடித்து நீரில் போட்டு அடுப்பிலேற்றினர்.  சற்று நேரத்தில் சாகப்போகிறோம் என்பதறியாது, அவ்வாமை இதமான சூட்டின் வெதுவெதுப்பை முட்டாள்தனமாக ரசித்து மகிழ்ந்தது. அது"போன்ற முட்டாளாக நானும் இருக்கிறேனே..  ஐந்து புலன்கள் தரும் உலகின்பத்தை நிலையென ரசித்து மகிழ்ந்து வரப்போகும்  மரணம் குறித்த அறிவின்றி இருக்கிறேனே  என்பது மேலோட்டமாக நமக்குத் தெரியும் பொருள்

ஆனால் உள்ளார்ந்த பொருள் வேறு

ஆமை ஒன்று குளிரில் உறைந்து மரணத்தின் விளிம்பில் இருக்கிறது

அப்போது ஒருவன் அதைப்பாரத்து, சமைத்து தின்ன முடிவெடுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தில் அதைப் போட்டு அடுப்பிலேற்றினான்

அந்த வெப்பத்தால் ஆமைக்கு உணர்வுகள் திரும்பின. உயிர் வந்தது. மகிழ்ந்தது

சில நிமிடங்கள் முன் ஒரு ஜடம். அதில் விழிப்புணர்வில்லை

சில நிமிடங்களுக்குப்பிறகு மரணம் . அதிலும் விழிப்பில்லை

இதோ ..கிடைத்திருக்கும் இந்த கணங்கள்தான் வாழ்வின் உச்சம்.  அதை உணர்ந்து நீருக்கு அடுப்புக்கு தனக்கு வாழ்வு தந்தவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியில் திளைக்கும் தெளிவின்றி , மரணத்துக்கு வருந்தி கிடைத்த கணத்தை வீணாக்கும் மூடனாக அது இருந்தால் அது எப்படி இருக்கும்..  


நான் அப்படி இருந்துவிடலாகாது..  உலக வெற்றிகளுக்கு சராசரி இன்பங்களை துறந்து வறண்ட வாழ்க்கை வாழந்தால் ஆமை குளிரில் இறப்பது போல் ஆகிவிடும்


உலக இன்பங்களில் திளைத்து அதையே பெரிதென நினைப்பின் கொதிநீரில் வெந்து அவிந்த ஆமை நிலை வந்து விடும்

துறத்தல்  திளைத்தல் இரண்டுக்குமிடையே ஒரு நடுநிலையை பேணும் ஞானம் வேண்டும் என்ற பார்வையையும் இப்பாடல் அளிக்கிறது


Wednesday, October 7, 2020

என் ரத்தத்தில் இருப்பது டிஎன்ஏ அல்ல யுஎஸ்ஏ டிரம்ப் அதிரடி

 அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி  டிரம்ப் பின்தங்கி இருக்கிறார்   பிடன் முந்துகிறார்

ஆனால் ஒட்டு மொத்தமாக யாருக்கு ஆதரவு அதிகம் என்பதைவிட  மகாணங்களில்  குறிப்பாக பெரிய மகாணங்களில் யாருக்கு அதிக ஆதரவு என்பதுதான் முக்கியம்

கொரானா கட்டுப்படுத்தலில் டிரம்ப் நிர்வாகம் தோற்றுவிட்டது என பிரச்சாரம் செய்து வந்த பிடனுக்கு ,  அதை நிரூபிப்பதுபோல டிரம்புக்கே கொரோனா வந்தது , நல்வாய்ப்பானது.  டிரம்ப் நிர்வாகம் தோற்றதை இனியாவது உணர்ந்தால் சரி என பிரச்சாரம் செய்தார்;


ஆனால் டிரம்ப் அசரவில்லை.   ஆண்டுதோறும் பல்வேறு நோய்களால் உயிரிழப்பு நடக்கிறது.   அதற்காக முடங்கிக்கிடக்க முடியுமா.  மோதிப்பார்த்து விடுவோம் நம் ரத்தத்தில் இருப்பது டி என் ஏ அன்று..  யு எஸ் ஏ.

கொரானாவை வெல்வோம் என மாஸ்க் இல்வாமல் முழங்குகிறார்


இது அங்குள்ள வெள்ளைக்கார இளைஞர்களை கவர்கிறது


தற்போதைய சூழலில் வெற்றி வாய்ப்பு டிரம்புக்கு,அதிகம்




Tuesday, October 6, 2020

மீண்டும் 50:50 பார்முலா! வொர்க் அவுட் ஆகுமா?

 பிஹார் தேர்தலில் பிஜேபி  ஐஜத   கூட்டணி உறுதியாகியுள்ளது.

இரு கட்சிகளும் சமமான இடங்களில் போட்டியிடுகின்றனர்.  எந்தக் கட்சி எவ்வளவு இடங்களில் வென்றாலும் அதைப்பொருட்படுத்தாமல் நிதிஷ் குமார்தான் முதல்வர் என அறிவித்துள்ளர்

ராம் விலாஸ் பஸ்வான் கட்சி இந்தக்கூட்டணியில் இல்லை.   தனித்துப்போட்டியிடுவதாகவும் பிஜேபி போட்டியிடும் இடங்களில் அவர்களுக்கு ஆதரவு என்றும் அறிவித்துள்ளனர்  இதற்கு பதிலுதவியாக தாங்கள் போட்டியிடும் இடங்களில் தமக்கு பிஜேபி ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்


பிஜேபி இதற்கு ஒப்பவில்லை.   ஐஜத பிஜேபி கூட்டணி நிதீஷ் தலைமையில் இயங்குகிறது.  இதற்கு புறம்பாக ரகசியகூட்டணிக்கு இடமில்லை என தெரிவித்துள்ளது


இப்படி ஒரு சூழலில் பஸ்வான் கட்சியுடன் ரகசிய கூட்டுவைத்து நிதீஷுக்குப்பபதில் தாங்களே முதல்வராக பிஜேபி ஆசைப்படும் என்ற அச்சம் இயல்பானதுதான்


ஆனால் நிதிஷ் எத்தனுக்கு எத்தன்.  பிஜேபி பஸ்வானுடன் உறவாடினால் அவர் காங்கிரசுடனோ லாலு கட்சியுடனோ உறவாடத் தயங்க மாட்டார்


பல மாநிலங்களில் ஆட்சியைக்கவிழ்த்த பிஜேபியின் விளையாட்டு பிஹாரில் பலிக்கவில்லை

பிகாரில் கட்சித்தாவல்கள் நடந்தன.  ஆனால் பிஜேபிக்கு சாதகமாக அல்ல  நிதிஷுக்கு சாதகமாக


எனவே நிதிஷின் 50:50 கூட்டணி அவருக்கு சாதகமாகும் வாய்ப்பு அதிகம்

Sunday, October 4, 2020

சூரியனை குளிர்விக்க ப்ரிசரால் முடியுமா ? சிறுகதைப்பார்வை

 ஃப்ரீசருக்குள் உறங்கும் வெய்யில் -(எழுதியவர் நறுமுகை தேவி) சமீபத்தில் நான் ரசித்துப்படித்த கதைகளில் ஒன்று

நம்மை நேசிப்பவர்களல்தான் நமது நுண் ரசனைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

  பனிபடர்ந்த புல் வெளியை ரசித்தல் , புத்தக வாசம் ,  மெல்லிய இசை என எதுவாக இருக்கலாம்

குளிர்காலத்திலும் ஏசியைப்போட்டுக்கொண்டு , அந்தக்குளிரில் போர்வைக்குள் சுருண்டு,கிடப்பது சிலருக்குப்பிடிக்கும்ஶ   குளிர்காலத்துல எதுக்கு ஏசி என குடும்பத்தினர் கத்துவார்கள்.

இப்படி  ஒரு நுண் ரசனையைப்பற்றிய கதை இது.  தனது அந்த ரசனையை மதிப்பவர்கள் மீதான,அன்பு என்றும் மாறாது. அவர்களுக்கு மரணமும் கிடையாது என்பதை , ப்ரீசரில் வைத்து சூரியனைக்குளிர்வித்த முடியாது என்ற கவித்துவமான தலைப்பு சுட்டுகிறது

கதையில் சூரியனும் வெயிலும் ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றன

தேவா என்ற குடும்பத்தலைவியின் பார்வையில் கதை விரிகிறது

அவள் அப்பா நல்ல,"தரமான  சிறப்பான கம்பளிப்போர்வையின் ரசிகர். பண்டிகைகளுக்கு புத்தாடை எடுப்பதைவிட புதுப்போர்வைகள் வாங்கக்கூடியவர்

நல்ல தூக்கம் என்பது நல்ல போர்வையில் இருக்கிறது என நம்புபவர்

இதை அவர் மனைவி எப்படி பார்க்கிறார் தேவா எப்படி பார்க்கிறாள் என்பது இதை அழகான சிறுகதை ஆக்குகிறது

அப்பாவின் வறுமைமிகு இளமைக்காலத்தில் குளிரில் கஷ்டப்பட்டு இருப்பார். நல்ல போர்வைக்கான,அன்றைய ஏக்கத்தை இப்படி தீர்த்துக் கொள்கிறார் என எளிமையாக அதை புரிந்து கொள்கிறார் அம்மா

ஆனால் தேவாவைப் பொறுத்தவரை போர்வை என்பது வெறும் உலகியல்"சார்ந்த விஷயம் அன்று.  அது ஒரு சிறிய சூரியன்.  சூரியனுக்கே தெரியாமல் சற்று வெயிலைத் திருடி வந்து தேவைப்படும்போது வழங்கும் உறுதுணை.  வெயிலை சேமித்து வைத்து அதைத் தேவைப்படும் சூடான தின்பண்டம்போல வழங்க அப்பா கண்டுபிடித்த ஒரு கருவிதான் போர்வை


உண்மையில் இந்த ரசனை , இந்த நுண்ணுவர்வு அவளது ஒட்டு மொத்த ரசனையை , வாழ்வியல் சமூகம் சாரந்த நுண்ணுணர்வை உயர்த்தியுள்ளது என கதையின் போக்கில் உணர்கிறோம்

போர்வை என்பது சூரியனின் படிமமாக மாறி . அது அப்பாவாக உருவெடுக்கிறது.

சூரியனை ப்ரீசரால் குளிர வைத்து விடாது அதுபோல அப்பா என்றும் மரணிக்க முடியாது என அவள் உணர்வது பூடகமாக சொல்லப்பட்டு கதை முடிகிறது

நறுமுகைதேவி கவிஞர் என்பதால் பல வரிகளில் அழகு மிளிர்கிறது


சிறப்பான கதை










Wednesday, September 30, 2020

சூடுபிடிக்கும்,அமெரிக்கத்தேர்தல்

 அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் , போட்டியாளர்கள் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோரின் கருத்துமோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது

இது அமெரிக்கத் தேர்தல்களில் வழக்கமான அம்சமாகும்.

ஒபாமா இரண்டாவது முறையாக போட்டியிட்டபோது அவர் தோல்வியுறும் சூழல்தான் இருந்தது

அப்போது விவாதங்களில் ரோம்னி செய்த தவறுகளால் ஒபாமா முன்னிலை பெற்றார்.

அது குறித்த என் பதிவு

ஆனால் சென்ற தேர்தலில் , விவாதங்களில் சோபிக்காதபோதும் டிரம்ப் வென்றார்.

இந்தப்பின்னணியில் நேற்றைய விவாதம் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது

ட்ரம்ப் மீது பல அதிருப்திகள் இருந்தாலும் கொரானாவை அவர் கையாண்ட விதம் அவர் செல்வாக்கை கணிசமாகக் குறைத்து விட்டது


இவற்றுக்கெல்லாம் விவாதத்தில் என்ன பதில்,சொல்வார் , எப்படி சமாளிப்பார் என்பது சஸ்பென்சாக இருந்தது

டிரம்ப் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தவர்   பிசினஸ் நூல்கள் பல எழுதியுள்ளார். முழுக்க நஷ்டமடைந்து கோடிக்கணக்கான கடனில் மூழ்கிய சூழலிலிருந்து உயிர்த்தெழுந்த வரலாறு இவருக்குண்டு.


அதுபோல ஏதாவது செய்து சமாளிப்பார் என்று தோன்றியது

விவாதம்,ஆரம்பிக்கும் முன் பிடன் எளிதாக டாமினேட் செய்வார் என்ற சூழல் இருந்தது


ஆனால் டிரம்ப் வித்தியாசமான ஒரு பாணியை கையாண்டார்;

நம் ஊர் தொலைக்காட்சி விவாதங்கள்போல , தனி மனித,தாக்குதல் , பிறர் பேச்சில் குறுக்கிடல் , அப்பட்டமான பொய் என நம் ஊர் அரசியல்வாதிகள் போல இறங்கினார்;

திகைத்துப்போன பிடன் ஒருகட்டத்தில் ஷட் அப் என  ஆவேசமாக எகிறினார்


ஒருங்கிணைப்பாளாரால் இந்த தெருச்சண்டையை கட்டுக்குள் வைக்க முடியவில்லை


அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விவாதம் நடந்ததில்லை என்று பெருவாரியினர் கருதுகின்றனர்.


ட்ரம்ப் ,நிருவ முயன்றது இதைத்தான். தான் நல்லவன் என காட்ட முடியாது.  நானும் மோசமானவன் எதிரியும் மோசமானவன் என்று காட்ட முயன்று அதில் வென்றுள்ளார் டிரம்ப்


கருத்துக்கணிப்புகளின்படி பிடன்தான் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் இருவருக்கிடையிலான வித்தியாசம் குறைவுதான் 

டிரம்ப்பின் இன்னோரு வியூகம் , தேர்தல் நேர்மையாக நடக்காது என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி தேர்தல்மீது ஆர்வம் குன்றச் செய்து தனக்கு எதிரான வாக்காளர்களை குழப்பி வாக்களிக்கவிடாமல் செய்தல்.;

இவையெல்லாம் வெற்றிபெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்










Friday, September 18, 2020

அகாலிதள் இடத்தில் தமிழக கட்சிகள் இருந்தால்??

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்கள் தங்கள் மாநில நலனை பாதிப்பதாகக்கூறி அதை எதிர்த்து அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளர். அகாலிதள் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.

இவர் இடத்தில் நம் கட்சி உறுப்பினர்கள் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

..............

தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளதே ?

ஆம். எங்கள் வருத்தத்தை பிரதமரிடம் சொல்லி விட்டோம்

சொன்னது சரி.. ஆனால் தமிழகத்தை அழிக்கும் மசோதாவை நிறைவேற்றி விட்டார்களே ?

ஆம். இது குறித்து கட்சிப் பத்திரிக்கையில் கண்ணீரகவிதை எழுதி இருக்கிறேன்  தமிழக நலனில் விட்டுக்கொடுப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை


அதை எதிர்த்து உங்கள் கட்சி அமைச்சர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வாரா?

அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு , யாரை அங்கே அமர்த்தத் துடிக்கிறீர்கள் என எனக்குத் தெரியும்


தமிழர்களை அழித்தாலும் பரவாயில்லை. மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் மாட்டோம் என்பது சரியான நிலைப்பாடா,?


அந்த மசோதாவில் இருந்து தமிழகத்துமட்டும் விலக்கு தேவை என வழக்கு தொடர்ந்திருக்கிறோம். மற்றபடி,ஆதரவை"வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை

( சில ஆண்டுகளுக்குப் பிறகு. விவசாயிகள் தற்கொலை செய்திகள் )

நீங்கள் கொண்டு"வந்த மசோதா விவசாயிகளின் சாவுக்கு காரணமாகிறதே ?


அது நாங்கள்"கொண்டு"வந்ததல்ல. அதை எதிர்த்து அப்போதே கவிதை எழுதியிருக்கிறோம். தமிழகத்துக்கு விலக்கு உண்டு என கோர்ட் உத்தரவு வாங்கினோம்;

அந்த தீர்ப்பு செல்லாது என உங்கள் கூட்டணி கட்சி தீர்ப்பு,வாங்கியபோதுகூட ஆதரவை நீங்கள் விலக்கவில்லையே. 

அப்போதைய பிரதமருக்கு நாங்கள் கடிதம் எழுதியதை மறந்துவிட்டீர்களா


தற்போது விவசாயிகள் சாகிறார்களே ?

அதை தடுத்திருக்க வேண்டியது தற்போதைய ஆளும்கட்சிதான்




Wednesday, September 16, 2020

நீட்.. பெருமை திமுகவுக்கா அதிமுகவுக்கா?

 நீட் தேர்வு நல்லதா கெட்டதா என தெரியவில்லை.  உண்மையிலும் கட்சிகளுக்கும் தெளிவில்லை. எனவேதான் வாய்ஜாலம் காட்டுகின்றனவேதவிர , செயலில் எதையும் காட்டுவதில்லை.

ஓகே..  ஒருவேளை நீட் தேர்வு நல்லது,என தெரியவந்தால் யாரைப் பாராட்ட வேண்டும்?

வரலாற்றைப்புரட்டுவோம்

ஆளாளுக்கு மருத்துவக்கல்லூரி நடத்தி சர்ட்டிபிகேட் வழங்கினால் இந்திய டாக்டர்களுக்கு உலகளவில் மதிப்பிருக்காது என்பதற்காக இந்திய,அளவில் ஒரு ஸ்டாண்டர்டை உருவாக்க 2010ல் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி நினைத்தது. அப்போது சுகாதாரத்துறை துணை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன்

இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சில் கெசட்டில் வெளியிட்டுள்ளது

அதன்படி,தேர்வு நடத்த தயாரானபோது காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் அதை எதிர்த்தன. கட்டப்பஞ்சாயத்துப்பேசி தேர்வை ஓராண்டு தள்ளி வைத்தனர்


ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கோர்ட்டுக்கு சென்று நீட்டுக்கு எதிராக தடையாணை பெற்றனர்

நீட் மரணமுற்றது


இதை எதிர்த்து காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு மேல்முறையீடு செய்து நீட் உயிர்த்தெழ வழி வகுத்தது

இந்த கால கட்டங்களில் ஜெயலலிதா இதை தீவிரமாக எதிர்த்து வந்தார்

ஆனால் மத்தியில் அவருக்கு அப்போது செல்வாக்கு இல்லை

மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக அதை தடுக்க முனையவில்லை.;

மாறாக ஜெயலலிதாவுக்குப் போட்டியாக அவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை விட்டனர்

மத்தியில் அப்போது செல்வாக்கில்லாத ஜெ அறிக்கை விடுவது ஓகே. ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திமுக அதை தடுக்க,முயற்சி செய்யாமல் பெயரளவுக்கு அறிக்கை விட்டு காமெடி செய்தது

அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஜெ அப்போதும் நீட்டுக்கு எதிராகவே இருந்தார்.


ஆனால் அவரது உடல்நிலை , அவர் மறைவு , கட்சிக்குழப்பங்கள் போன்றவற்றால் அதிமுகவும் உரிய முறையில் நீட்டை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவில்லை


நீட்டை விதைத்து அதை மரமாக்கிய பெருமை திமுகவுக்கு உண்டு. வளர்ந்த மரத்தை வெட்டத்தயங்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு




 



Monday, September 14, 2020

சந்தர்ப்பவாதமே நல்லது !! கவிஞர் வாலியும், சில சினிமா கலைஞர்களும்

 

கவிஞர் வாலி  தன் கட்டுரையொன்றில் இங்கனம் குறிப்பிடுகிறார்

------------------------

இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?

# 2 ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ”வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!”

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

# 3 என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்’ என்று மெல்லிய குரலில் சொன்னார்.

# 4 சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.

ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.

‘ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-

கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.


என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.


நாடகம் எழுதித் தரக் கேட்டவர் – நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் – தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் – திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!


--------------

  வறுமையில் தள்ளப்பட்ட கலைஞர்களைப்பார்த்தபின் சந்தர்ப்பவாதம் என்பது தவறில்லை என்ற முடிவுக்கு அவர் வந்ததை நேர்மையாக ஒப்புக்கொண்டது பாராட்டத்தக்ககது..


அந்தக்காலத்தில் திமுக ஆட்சி நடந்தபோது இனியொரு வாய்ப்பு கிடைக்காது என நினைத்ததுபோல வீராணம் ஊழல் , மஸ்டர் ரோல் ஊழல் , பூச்சிக்கொல்லி மருந்து ஊழல் , குளோபல் தியேட்டர் மோசடி என புகுந்து விளையாடினர்



அப்போது கலைஞரை விமர்சித்து வாலி எழுதிய பாடல் இது

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்


வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே

தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே

ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்

தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே

இப்படி எம்ஜிஆர் படத்தில் எழுதினார்.




எம்ஜிஆர் மறைந்தபின் திமுக ஆட்சிக்கு வந்தபின் கலைஞரைப் பாராட்டி இப்படி எழுதினார்




நீ பாலுாட்டும் தாயானாய்


நான் வாலாட்டும் நாயானேன்


இப்படி சந்தர்ப்பவாதமாகப்பேசி கடைசி"வரை வளமாக வாழ்ந்தார்


,.......

தியாகராஜபாகவதரும் இப்படி நடந்து கொண்டிருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம்

அம்பிகாபதி படத்தில் நாயகனாக நடித்தவர் அவர். பிற்காலத்தில் அதே படம் சிவாஜியை நாயகனாக வைத்து எடுக்கப்பட்டது. அம்பிகாபதியின் அப்பாவாக நடிக்க கோரி அவரை அணுகினர். 


நான் நாயகனாக நடித்த கதையில் சிறு வேடத்தில் நடிக்க மாட்டேன் என சுயமரியாதையுடன் மறுத்துவிட்டார்.  அவர் நாயகனாக நடித்தபோது பெற்ற ஊதியத்தைவிட அதிகம் தர  முன்வந்தும் ஏற்கவில்லை


சந்திரபாபு என்ற அருங்கலைஞனும் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசியதால் வறுமைக்கு ஆளானார்


அந்த கட்டுரையில் வரும் சாவித்திரியும் இளங்கோவனும் சுயமரியாதைமிகு கலைஞர்கள்


அவர்கள் வரலாற்று நாயகர்கள். வாலியோ வறுமைக்கு அஞ்சி சந்தர்ப்பவாதி ஆகி விட்டார்.



இன்று திமுகவைப் பாராட்டினால் ஊடக வாய்ப்புகள்  , பிஜேபியைப் பாராட்டினால் அரசு விருதுகள் என்ற தற்கால சூழலில் பெரும்பாலான படைப்பாளிகள் திமுக அல்லது பிஜேபி சார்பு நிலைக்கு சென்று விட்டனர் கைமேல் பலனும் பெறுகின்றனர்.

ஆனால் உண்மையான"படைப்பாளிகளுக்கு பாரதியின் இவ்வரிகளே வேதம்


பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

− பாரதியார்

Saturday, September 5, 2020

வானொலி நினைவுகள்

 ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான நூல்களில் வானொலிப் பெட்டி தயாரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நூலும் ஒன்று

அந்தக்காலத்தில் அந்த அளவு வானொலிப் பெட்டிக்கான தேவை இருந்தது.  செய்திகள் , சினிமாப்பாடல் , கர்நாடக இசை , கிராமிய இசை , சான்றோர் சிந்தனை , விவசாயம் , அறிவியல் , நாடகம் என ஒரு முழுமையான தகவல் தொடர்பு சாதனமாக அது மிளிர்ந்தது.

அந்த வரவேற்பு காரணமாக பலர் தமக்கான  வானொலியை தாமே செய்து கொண்ட வழக்கமும் இருந்தது.

தனித்தனி பொருட்களாகவும் வாங்கி இணைக்கலாம் அல்லது ஏற்கனவே இணைக்கப்பட்ட அமைப்பை வாங்கி , வயரை இணைத்து , நமக்குப்பிடித்தமான அழகான வெளிப்புற பெட்டியை வாங்கி அதற்குள் இதை பொருத்திவிடின் சூப்பரான வானொலிப் பெட்டி ரெடி. 

அல்லது இதற்கென இருக்கும் உள்ளூர் தச்சர்களிடம் ஆர்டர் செய்து மரத்தினாலான வானொலிப்பெட்டி வாங்கிவைத்துக் கொண்டால் வீட்டுக்கு அது தனி,அழகைத்தரும்

அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களின் வானொலிப் பெட்டியை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்

டிவி வருகைக்குப்பின் படிப்படியாக வானொலி செல்வாக்கிழந்தது.

ஆனால் காலையில் பள்ளிக்கு வேலைக்கு கிளம்பும்போதுகூட வானொலியைக் கேட்டவாறே தமது பணியைச் செய்யும் சுகம் டிவியில் இல்லையென்பதால் சாட்லைட் ரேடியோ , பண்பலை வானொலி என வானொலி மீண்டும் தலைதூக்க முயன்றது


ஆனால் அலைபேசியிலேயே பாடல் கேட்கும் வசதி கொண்ட ஆண்ட்ராய்டு போன்களால் மீண்டும் வானொலி பின்னடைவைச் சந்தித்தது. சாட்லைட் ரேடியோ எடுபடவில்லை

ஆனால் நாமே பதிவு செய்து நாமே கேட்பதில் த்ரில்  இல்லை. எதிர்பாராமல் காதில் விழும் அரிய பாடல்கள் அளிக்கும் த்ரில் என்பது வேறு

இது டிவியில் சாத்தியமில்லை. பல அரிய பாடல்களின் ஒளி வடிவம் இருக்காது. உரிமம் இருக்காது; எனவே டிவியில்,குறிப்பிட்ட பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவர்

இதனால் பலரும் வானொலியை நாட ஆரம்பித்துள்ளனர்

தனியார் நிகழ்ச்சிகளுடன் போட்டியிடும் வகையில் அகில இந்திய வானொலியும் சூப்பரான நிகழ்ச்சிகளை வழங்குகிறது

கட்சி சார்பற்ற செய்திகள் ,  இலக்கிய உரைகள் என தரமாகவும் சுவையாகவும் கலக்குகின்றனர்

எந்த தொழில் நுட்ப வளர்சசி வானொலியை அழித்ததோ இன்று அதுவே வானொலிக்கு உதவுகிறது

முன்பெல்லாம் திருச்சி நிலைய ஒளிபரப்பை அந்தப் பகுதி நேயர்களேகேட்க இயலும். மதுரை , நெல்லை , தர்மபுரி என அவரவர்களே கேட்க முடியும்


இன்று அங்கனம் இல்லை. இந்தியாவின் எந்த நிலைய ஒளிபரப்பையும் app நிறுவிக்கொண்டால் உலகின் எம்மூலையில் இருந்தும் கேட்கலாம்

சார்ஜ் செய்யத்தக்க வானொலிகள் இருக்கின்றன.  வாங்கி விட்டால் பைசா செலவற்ற என்டர்டயிண்ட்மெண்ட் , நம்பகமான செய்திகள் என  மாதச்சந்தா போன்றவை இன்றி அனுபவிக்கலாம்


இதனால் மீண்டும் வானொலி புத்துயிர் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது







Friday, September 4, 2020

சோ தர்மனின் சூல்.. சுயநலத்தால் அழியும் இயற்கை

 நமது கிராம நிர்வாக முறை − குறிப்பாக நீர் மேலாண்மை − வெகு அற்புதமானது.

ஊருணிகள் , ஏரிகள் , குளங்கள் , கண்மாய்கள் என வடிவமைத்து , தலை,போகிற வேலை என்றாலும் அதை,விட்டுவிட்டு , ஆண்டுக்கொரு முறை கிராமத்து மக்கள் அனைவரும் சாதி , பொருளாதார வித்தியாசமின்றி ஒன்றுகூடி கண்மாயை தூர்வாரும் ஊர்க்கட்டளை என மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வயிராற உண்டவர்கள் நாம்

கண்மாய்களை சீரழித்தால் குடும்பத்தில் ஊமைக்குழமை பிறக்கும் என்ற ""மூடநம்பிக்கை " கொண்ட முன்னோர்கள் காலத்தில் வறட்சி கிடையாது

இதெல்லாம் மூடநம்பிக்கை ,  ஏரிகளை மூடி கட்டிடங்கள் கட்டினால் காசு கிடைக்கும் என்று தெரிந்து கொண்ட அறிவாளிகள் அதிகாரம் பெற்றதும் நீர் நிலைகள் அழிய ஆரம்பித்தன

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏராளமான கண்மாய்கள் ஏரிகள் அழிக்கப்பட்டு தமிழகம் பாலைவனமாகி வருகிறது

இது குறித்து ஆய்வுகள் செய்து சோ. தர்மன் எழுதியுள்ள நாவல் "சூலி"


எப்படி,ஒரு தாய் ஓர் உயிரை பூமிக்கு கொணர்கிறாளோ அதுபோல ஒரு கண்மாய் உலகுக்கு எத்தனைஎத்தனை உயிர்களை புவிக்கு அளிக்கின்றன


ஆரா, உளுவை, கெண்டை, பாம்புக்கெண்டை, கூனக்கெண்டை, அயிரை, கெளுறு, கொரவை, விலாங்கு, விரால், ஊளி, தேழி என எத்தனை மீன்கள் , அவற்றை நாடி வரும் பறவைகள் , அதைச்சுற்றி வாழும் தாவரங்கள் என வாழ வைக்கும் தாய்தான் கண்மாய்


மனசாட்சியின்றி இதை அழித்த கட்சியினரை நோவதா , அழிவது நம் குழந்தைகள்தான் என தெரிந்தும் அழிவுக்கு துணைபோகும் மக்களை நோவதா ?


அரசர் காலத்தில் நீர்நிலை பராமரிப்புக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை அழகாக சித்தரித்துள்ளார் தர்மன்

உருளைக்குடி கிராமத்துக்கு தாயாக விளங்கிய கண்மாயை அரசாங்கங்கள் அழிப்பதை கண்முன் காட்டுகிறார்


ரத்தமும் சதையுமான பாத்திரங்கள் ,  பறவைகள் மரங்கள் பற்றிய சுவையான தகவல்கள் , சுவாரஸ்யமான சம்பவங்கள் என நல்ல வாசிப்பனுவம் தருகிறது சூலி







Thursday, September 3, 2020

கார்ட்டூனுக்காக மிரட்டப்பட்ட தேமுதிக . பாசிச பாதையில் தமிழகம்



 

 திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்காக தேமுதிக காத்திருப்பதுபோல தினமலர் கார்ட்டூன் வெளியிட்டது

இது தேமுதிகவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நாங்க ஏன் பிறரை கெஞ்ச வேண்டும்.  பழம் நழுவி பாலில் விழாதா என பிற கட்சியினர்தான் எங்களை கெஞ்சினார்கள் என்பதை நீங்களே சுட்டிக்காட்டியிருக்கிறீர்களே என தேமுதிக ( சுதீஷ்) , தினமலர் 2016ல் வெளியிட்ட காா்ட்டூனை வெளியிட்டது 

இதற்கு தினமலர்தான் டென்ஷனாகியிருக்கவேண்டும். அல்லது தினமலர் மேல் அனைவரும் டென்ஷனாகி இருக்க வேண்டும்.

ஆனால் சம்பந்தமின்றி தேமுதிக மேல் அனைவரும் பாய்ந்து அக்கார்ட்டூனை நீக்கச்செய்து விட்டனர்

நில மாதங்கள் முன் கார்ட்டூனிஸ்ட் மதியை மிரட்டி அவர் வேலையைப் பறித்தனர்;

திராவிட அரசியல் குறித்து நாவல் எழுதினால் தான் உயிரோடு நடமாட முடியாது என சாரு நிவேதிதா சொன்னது,நினைவுக்கு வருகிறது











Saturday, August 29, 2020

மனுதர்ம அடிப்படையில் இந்திய சட்டம் உருவாக்கப்பட்டதா ? விஜயகாந்த் பரபரப்பு

 மனுதர்மம் என்பது எப்போதுமே

 சர்ச்சைக்குரிய ஒன்று


ஏதாவது ஒரு குக்கிராமத்தில் ஏதாவது ஒரு ஆணவக் கொலை நடந்தால் அதற்கு மனுநீதி மேல் பழியைப்போடுவோர் உண்டு. உண்மையில் அந்த கிராமத்தில் யாரும் மனுதர்மம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்


சாதி என்பது பிறப்பால் வராது. குணிதிசயங்கள்தான் மனிதனின் உயர்வை தீர்மானிக்கிறதென அது சொல்வதாக சிலர் சொல்கின்றனர்


அது சாதிய நூல் என்போரும்

உண்டு


கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் இப்படி பேசுகிறார்


வேதம் கற்ற அந்தணன் தவறு செய்தால் அவனுக்கு கூடுதல் தண்டனை விதிக்கிறது மனுதர்மம்.  அந்த மனிததர்ம அடிப்படையில்தான் இந்திய அரசல் சட்டம்  அமைந்துள்ளது என அனல் பறக்க"பேசுகிறார்


அதாவது படித்தவர்கள்  அதிகாரத்தில் இருப்போருக்கு கூடுதல் தண்டனை என மனு சொல்வது நல்லது என்கிறார்;


 மனுதர்ம ஆதரவாக ஒரு சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் பேசியது ஆச்சர்யம்









Wednesday, August 26, 2020

வினோதமான அறிவியல் கேள்விகள்

 திடீரென பூமி தன் சுழற்சியை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்


90% ஒளியின் வேகத்தில் ஒரு பந்தை எறிந்தால் என்னாகும் 

உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரே நேரத்தில் லேசர் ஒளியை நிலவின் மீது பாய்ச்சினால் அதன் நிறம் மாறுமா



தனிம ஆவர்த்த அட்டவணையில் இருக்கும் தனிமங்களால் உருவான செங்கற்களை பயன்படுத்தி தனிம ஆவர்த்த அட்டவணையைப் போலவே ஒரு சுவர் கட்டினால் என்ன நடக்கும்;


உலகின் அ னைத்து மக்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் ஒரு குதித்தால் என்ன நடக்கும்


திடீரென அனைத்து  மனிதர்களும் ஒரே நேரத்தில் அழிந்துவிட்டால் , மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளி மூலங்கள் அணைவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்

கீழ் நோக்கி துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் எதிர்விசையை பயன்படுத்தி பறக்க முடியுமா

நொடிக்கு ஒரு அடி என்ற வேகத்தில் பறக்க ஆரம்பித்தால் நம் மரணம் எப்படி நிகழும்


இண்டர்நெட் இயங்க எவ்வளவு இடம் தேவைப்படுகிறது


பறக்கும் துப்பாக்கி குண்டை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்


ஒரு பந்தை எவ்வளவு வேகத்தில் அடித்தால் அது கோல்கீப்பரைத் 


தள்ளிக்,கொண்டுபோய் அவருடன் சேர்ந்து கோலில் விழும்


உலகில் அனைவரும் தம்மை இரு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் ஜலதோஷத்தை உலகினின்று ஒழித்துவிடலாகுமா 


திடீரென நம் உடலின் டிஎன்ஏ மறைந்துவிட்டால் என்ன ஆகும்


தேநீரை அதிவேகமாக கலக்குவதன் மூலம் அதை சூடாக்க முடியுமா


இது போன்ற பல சுவையான கேள்விகளையும் பதில்களையும் ஒர் ஆங்கில நூலில் படித்தேன்


பதிலை யோசியுங்கள்...






Monday, August 24, 2020

இந்திய இணைப்பு மொழி !

 டெல்லிக்கு ஒரு வேலை விஷயமாக சக அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன்

எனக்கும் அவருக்கும் இந்தி தெரியாது

ரயிலினின்று இறங்கி ஒருவரிடம் வழி கேட்க வேண்டியிருந்தது

எனது சகா தனது ஆங்கிலப்புலமையைக் காட்டி ஆங்கிலத்தில் வழி கேட்டார்.

டெல்லிக்காரர் புரியாமல் விழித்தார். நான் இந்தி கலந்து தமிழில் கேட்டேன். அவரும் ஏதோ பதிலளித்தார். வழி புரிந்து விட்டது

என்ன தமாஷ் என்றால் எனக்கும் அவருக்கும் இந்தி தாய் மொழி கிடையாது.  

வட இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. உயர்வர்க்கம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டாலும் சராசரி மக்களின் இணைப்பு மொழியாக உள்ளது.

மோடி , காந்தி என பலருக்கு தாய்மொழி ஹிந்தி கிடையாது . ஆனால் வட இந்தியாவில் ஒரு சாமன்யனிடம் ஆங்கிலம் பேசினால் காமெடியாக இருக்கும் என்பதால் இந்தியை ஏற்கின்றனர்

டெல்லி , ஹரியானா , ராஜஸ்தான் , அஸ்ஸாம் , பீகார்  , மகாராஷ்ட்ரா என பல இடங்களிலும் இந்தியை வைத்து ஒரு சாமான்யனிடம் உரையாடிவிட முடியும்

தமிழ் நாட்டில் இப்படி மாநிலங்களுக்கிடையேயான பயணம் குறைவு என்பதால் நமக்கு ஒமெரு

 பொது இந்திய மொழியின் அவசியம் ஏற்படவில்லை


ஆனால் தென் மாநிலங்களிடையே பயணம் என்றால் , ஒரு சாமான்யனிடம் ஆங்கிலம் பேசுவது எவ்வளவு காமெடியோ அதே நிலைதான் ஹிந்திக்கும்

இரண்டுமே தென்னகத்துக்கு அந்நிய மொழிகளே.

இது வட இந்தியர்களுக்குப் புரிவதில்லை


ஆங்கிலத்தை வைத்து சமாளிக்கலாம் என்ற நம் ஆட்கள் கருத்து முட்டாள்தனமானது.  வட இந்தியா போல தென்னக மக்களும் தமக்குள் ஹிந்தி பேசுவார்கள் என்ற வட இந்தியர்கள் கருத்தும் முட்டாள்தனமானது

உலகோடு உறவாட ஆங்கிலம் , நமக்குள் உரையாட தாய்மொழி , இதைத்தவிர இன்னும் இரு இந்திய மொழிகளும் , ஒரு அயல்தேச மொழியும் தெரிந்திருப்பதுதான் நம்மை தன்னம்பிக்கை மிகுந்த முழு மனிதனாக்கும்

பணக்கார மாணவர்களுக்கு இது கிடைக்கிறது

ஏழை மாணவர்கள் வாழ்வில்தான் பலரும் விளையாடுகிறார்கள்

இன்ன மொழி படி என கட்டாயப்படுத்தாமல் , தனியார் பள்ளிகள் பாணியில் மாணவரே அவரவர்க்குத் தேவையான மூன்றாவது மொழியைத் தேர்வு செய்ய வழி வகை செய்வதே சமூக நீதி



Friday, August 21, 2020

இந்திராகாந்தியை எதிரத்த சகுந்தலா தேவி

    மனித கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் சகுந்தலா தேவி குறித்து ஒரு  திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

சினிமா ஸ்டார்கள் அரசியல்வாதிகள்  கிரிிக்கெட் வீரர்களைக்  கொண்டாடும் தேசத்தில் இது நன்முயற்சிதான்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்து பெரிய உயரம் தொட்டவர் இவர்.

கணித மேதை ராமானுஜனுடன் ஒப்பிடத்தக்க கணித மேதை அல்லர் இவர்.

இன்னொரு வித்தியாசம்.  ராமானுஜன்  தன் மேதைமைக்குக் காரணம் நாமகிரித் தாயார் என பதிவு செய்திருக்கிறார்.  சகுந்தலா தேவி அது தனது மன ஆற்றல் என்றும் முயன்றால் யாரும் இதை செய்யலாம் என்றும் சொன்னவர்

மனதிலேயே பெரிய பெரிய எண்களைப் பெருக்குதல் , குறிப்பிட்ட ஆண்டு மாதம் தேதி சொன்னால் கிழமையைச் சொல்லுதல் போன்றவை இவரால் முடிந்தது.  

இந்த திறமை எப்படி சிலருக்கு பிறவியிலேயே வருகிறது என்பது புதிராகவே உள்ளது.

இவருக்கு இந்த திறமையை வைத்து போராடி தனக்கொரு இடம் பிடிக்கும் போர்க்குணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது பலராலும் அஞ்சப்பட்ட இந்திரா காந்தியையே தேர்தலில் எதிர்க்கும் துணிச்சல் இவருக்கு இருந்தது

வெளி நாடுகளில் பல மேடைகளைப்பார்த்த இவரை 

சென்னைத் தொலைக்காட்சியில் பயன்படுத்திக் கொள்ள சிலர் நினைத்தனர்.   ஆனால் இந்திராவை எதிர்த்தவர் என்பதால் மேலிட அனுமதி கிடைக்கவில்லை

இவர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கே வந்து கடுமையாக கத்தினார்.   தவறு அவர்கள் பக்கம் என்பதால் நிலையத்தினர் மழுப்பலாக சமாதானம் பேசினர்.   அவர் விடாமல் கத்தினார் கடைசியில் அவர்களும் கத்தி பெண்சார்ந்த வசைச்சொற்களை ( வழக்கமான ஆணாதிக்க ஆயுதம்)பெரும் பிரச்சனையாகி அடுத்த நாள் இது தலைப்பு செய்தியானது

இந்த போர்க்குணம்தான் ஆணாதிக்க உலகில் அவருக்கு ஓர் இடத்தைப் பெற உதவியது

ஆனால் அவர் மனம் எப்படி செயல்பட்டது,, கணிதவியலில் அவரது ஆர்வம் எப்படி..  ஆழ்மனக்காட்சிகள் போன்றவை புதிராக உள்ளன

படத்திலும் இவை குறித்துப் பேசவில்லை.

அவர் வாழ்ந்தபோது அவரைப் புரிந்து கொள்ளாத அவர் மகள் பார்வையில் பெரும்பாலான காட்சிகள்

அவரை அவர் குடும்பம் எப்படிப்பாரத்தது. என்பது ஆடியன்சுக்குப் பிடிக்கும் என நினைத்துளளனர்

சரியான யோசனைதான்

ஆனால் அவர் எப்படி உலகத்தைப்பார்த்தார் அவர் எப்படி எண்களைப்பாரத்தார் எனபதுதான் ஆவண மதிப்பை அளிக்கும்





Wednesday, August 19, 2020

இனக்கலவரத்தில் சித்துவின் உயிர் காத்த வீரன் - சேத்தன் சவுகான் நினைவலைகள்



 

 வரலாற்று நாயகர்களாக வாழ்வது கெத்து என்றாலும் அதற்கான விலையும் அதிகம்    ப்ரவைசி இருக்காது    இமேஜ் என்ற சிறையை மீறி எதுவும் செய்ய முடியாது அவதூறுகள்  பொறாமைகள் என் வாழ் நாள் முழுக்க அவதிதான்

  சத்தமில்லாமல் சாதனைகள் செய்து விட்டு சுதந்திரமாக உற்சாகமாக தான் நினைத்தபடி வாழ்வது ஒரு வகை


சில பாடல்களைக் கேட்டு கண்ணதாசன் பாடல் என நினைத்துக்கொண்டு இருப்போம் கடைசியில் பார்த்தால் அதிகம் பிரபலமாகாத ஒரு மேதை அதை எழுதி இருப்பார்

உதாரணமாக எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் பாடப்படும் “ நந்தா நீ என் நிலா நிலா “ என்ற பாடல் கண்ணதாசன் எழுதியதன்று

அதேபோல கிரிக்கெட்டில் பலர் இருக்கிறார்கள்   சமீபத்தில் காலமான சேட்டன் சவுகான் இப்படிப்பட்ட அமைதியான சாதனையாளர்களில் ஒருவர்


கவாஸ்கர் _ ஸ்ரீகாந்த்  கார்னிட்ஜ் _ ஹெயின்ஸ்     டேவிட் பூன் _ மார்ஷ்   போன்ற துவக்க ஆட்ட ஜோடிகள் உலகப்புகழ் பெற்றவை

அவற்றுக்கிணையான ஜோடிதான் கவாஸ்கர் _ சேட்டன் சவுகான் ஜோடி

இருவரும் இணைந்து பல ஆட்டங்கள் ஆடி இருக்கின்றனர் இந்த இணை பல சாதனைகள் செய்துள்ளது

ஆனால் கவாஸ்கருக்கு கிடைத்த பெயர் இவருக்கு கிடைக்கவில்லை   அதை இவர் விரும்பவும் இல்லை

தன்  எல்லைகளை உணர்ந்தவர் இவர்


சர்வதேசப்போட்டிகளில் ஒரு செஞ்சுரி கூட அடிக்காதவர் இவர்  ஒரு செஞ்சுரிகூட அடிக்காமல் ஓப்பனிங் ஆட்டக்காரராக பல ஆண்டுகள் நீடிக்க முடிந்ததை வைத்து இவர் அணிக்க்கு எவ்வளவு முக்கியமாக இருந்தார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்


அவரது பண்பு நலன் களுக்கு இரு உதாரணங்கள்


ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியின்போது அணித்தலைவர் கவாஸ்கருக்கு அவுட் கொடுக்கப்பட்டது   அது தவறு என நினைத்த கவாஸ்கர் எதிர்முனையில் இருந்த சவுகானைப்பார்த்து இந்த ஆட்டத்தை புறக்கணிப்போம்   என்னுடன் நீங்களும் வெளியேறுங்கள் எனச்சொல்லி விட்டு கிளம்பினார்


சவுகானுக்கு தர்ம சங்கடம்  அணிதலைவர் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் ஆனால் தானும் வெளியேறினால் இந்திய அணி தோற்றதாக அறிவிக்கப்படும் ஒரு களங்கமாக வரலாற்றில் பதிவாகி விடும்

அமைதியாக கவாஸ்கரிடம் சொன்னார்  உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் நான்  இதோ நானும்  வருகிறேன் என சொல்லி விட்டு நடக்கலானார்

ஆனால் அணி நிர்வாகத்துக்கு யோசிக்க நேரம் கொடுக்கும் பொருட்டு மிக மெதுவாக நடந்தார்     அதற்குள்   அணி நிர்வாகம் பேசி முடித்து ஆட்டத்தை தொடருமாறு சைகை செய்தனர்   ஒரு தவறான முன்னுதாரணம் தவிர்க்கப்பட்டது


அணியில் சேர்ந்த ஆரம்ப கால கட்டங்களில் அவ்வப்போது அணியை விட்டு நீக்கப்பட்டார் மீண்டும் கடும் முயற்சி செய்து உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அணியில் இடம் பெற்றவர் இவர்

ஓய்வு பெற்றபின் அணியின் மேனேஜராக பணியாற்றியபோதும் இவரது பண்பு நலன் பளிச்சிட்டடது


இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இன துவேஷமாக நடந்து கொண்டார் என்பது குற்ற்ச்சாட்டு   2008ல் ல்   டெண்டுல்கர் தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று இருந்தது..    ஒரு போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ஸை   குரங்கு எனத் திட்டி விட்டதாக பஞ்சாயத்து

அப்போது மேனேஜர் என்ற முறையில் சேட்டன் சவுகான் ரிக்கி பாண்டிங் உடன் பேசினார்

குரங்கு என்பது உங்கள் சூழலில் இன துவேஷ வார்த்தையாக இருக்கலாம். இந்தியர்களுக்கு அது கடவுள் என அனுமான் ஆலயங்கள் , அனுமன் சிலைகள் போன்ற படங்களைக்காட்டி விளக்கினார். ஹர்பஜன் அப்படிப்பேச  வாய்ப்பில்லை என புரிய வைத்தார். இவற்றை எல்லாம் விளக்கும் அளவுக்கு ஹர்பஜனுக்கு ஆங்கிலம் தெரியாது என சாமர்த்தியமாகப்பேசி ஹர்பஜன் சார்பில் தானே பேசி பஞ்சாயத்தை சுமுகமாக முடித்து வைத்தார்

இந்த தன்மை அவருக்கு அரசியலில் உதவியது.   உத்தர்பிரதேஷத்தின் லோக் சபா எம் பி யாக இருந்து இருக்கிறார். மறையும்போது அமைச்சராக மறைந்து இருக்கிறார்

உள்ளூர்ப்போட்டிகளில் தனது கடைசி ஆட்டம் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.  ஒரு முறை தனது தாடை உடைந்தபோதும்கூட களத்தில் நின்று ஆடியவர் இவர்..   அடுத்தடுத்து இரு போட்டிகளில் இரட்டைச்சதம் ,  தொடக்க ஜோடியாக 400 ரன்களுக்கு மேல் குவித்தது என இவரது சாதனைகள் ஏராளம் 

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் 438 ரன் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்குடன் ஆடத்தொடங்கிய இந்தியா கிட்டத்தட்ட அந்த இலக்கை எட்டிய நிலையில் நேரமின்மை காரணமாக ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியா எடுத்த ரன்கள் ( 429- 8)   இந்தப்போட்டியில் கவாஸ்கர் - சேட்டன் சவுகான் ஜோடி மிக அபாரமாக ஆடி 200 ரன்களுக்கு மேல் குவித்தது


1984ல் உள்ளூர் போட்டி ஒன்றை முடித்து விட்டு ரயிலில் தன் அணித்தோழர்களுடன் வந்து கொண்டு இருந்தார்.


அப்போது இந்திரா காந்தி படுகொலை நடந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது.


நவ்ஜோத் சித்து , ரஜீந்தர் கய் ஆகிய சீக்கிய வீரர்கள் அவருடன் பயணித்தனர். அவர்களைத்தாக்க  முயன்ற கூட்டத்தை அரண்போல நின்று காத்தவர் இவர்தான்


இவரைப்பற்றி கவாஸ்கர் உருக்கமாக கூறுவதாவது


” அவன் என் உயிர் நண்பன்  அவன் செஞ்சுரி அடிக்காமல் போனதற்கு நானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்..  ஒரு போட்டியில் 97 ரன்கள் எடுத்து இருந்தான்.  டீவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவர் செஞ்சுரி அடிக்கப்போகிறார்.. எழுந்து வந்து பால்கனியில் நின்று பாருங்கள் என சக வீரர்கள் அழைத்தனர். நான் நேரில் பார்த்தால் அவுட் ஆகி விடுவார் என்றொரு  நம்பிக்கை எனக்கு இருந்தது.. ஆனால் வற்புறுத்தலால் பால்கனியில் நின்று பார்த்தேன்.  என்ன கொடுமை.. நான் பார்த்த நேரம், அவன் அவுட் ஆகி விட்டார்.  இன்னொரு போட்டியில் அம்பயருடன் நான் போட்ட சண்டை காரணமாக அவுட் ஆகி விட்டான்


கடைசி ஆண்டுகளில் நாங்கள் அவ்வப்போது சந்திப்போம். வாழ்க்கை எனும் விளையாட்டின் கடைசி ஓவர்களில் இருக்கிறோம். எப்படியாவது செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பேன். அவன்சிரிப்பான்..  நீதான் செஞ்சுரி அடிப்பதில் வல்லவன்.  எனக்கும் செஞ்சுரிக்கும் ஒத்து வந்ததே இல்லை என்பான்.. அவன் சொன்னதுபோலவே சீக்கிரமே கிளம்பி விட்டான்.. என் துயரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை

Thursday, August 13, 2020

கவுண்டமணி செந்தில் காமெடியும் தேங்காயும்

 

சின்ன கவுண்டர் படத்தில் , எலுமிச்சம்பழம் எலுமிச்சங்காய்  , வாழைப்பழம் வாழைக்காய்..  மாம்பழம் மாங்காய் என இருப்பதுபோல , தேங்காய்க்கு பழம் என்பது இல்லை என்பதை வைத்து கவுண்டமணியை கன்ஃப்யூஸ் செய்வார் செந்தில்

 நாம் அனைவரும் அந்த காமெடிக்கு சிரித்து இருப்போம்.

ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் கிடையாது.  

தேங்காய் , தென்னை மரம் போன்றவை சங்க காலத்தில் இருந்ததற்கான ஆதாரம் சங்கப்பாடல்களில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என சில தமிழர்கள் கூறுகிறார்கள்.  தொ பரமசிவன் இப்படி கூறுபவர்களில் ஒருவர்.. ஏழாம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்த வந்தேறி மரம் இது..என சொல்கிறார்கள் ..

உண்மையில் தேங்காயின் பழத்தை குறிப்பிடும் சொல் தமிழில் உண்டு.. தேங்காய் குறித்த குறிப்பும் சங்கப்பாடல்களில் உண்டு

ஆனால் தேங்காய் என இருக்காது . தெங்கு , தென்னை மரம் என குறிப்பிட்டப்பட்டு இருக்கும்’


கோள் தெங்கின் குலை வாழை ,,,  ஒலி தெங்கின் இமிழ் மருதின்...  என்றெல்லாம் தென்னை குறிப்பிடப்படுகிறது..  எனவே தேங்காய் என்பது வந்தேறி கிடையாது


தென்னை + காய்  = தேங்காய்


தென்னை + பழம் = தெங்கம்பழம்


நாய் பெற்ற தெங்கம்பழம் என்று பழ மொழி உண்டு’


நாயிடம் தென்னம்பழம் ( தேங்காய்)  கிடைத்தால் அதனால் உடைத்து தின்ன முடியாது.. பிறர்க்கும் கொடுக்காது என்பது இதன் பொருள்


பழம் என்பதை கனிந்த வடிவில் பார்த்து பழகியதால் , தென்னம்பழம் என சொல்வது மறைந்து தேங்காய் என்றே சொல்கிறோம். 


ஆக தேங்காய் என்பது தமிழக மரம்தான் என்பதில் நினைவில் கொள்க


சமஸ்கிருத , ஹிந்தி , ஆங்கில அறிஞர்களிடம் இருந்து தமிழ்ப்பெருமையை நாம் காத்துக்கொள்ளலாம். தமிழறிஞர்களிடம் இருந்து தமிழைக்காப்பதுதான் பெரிய சவால் 


 


Saturday, August 8, 2020

நான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் கர்ஜித்த சந்திரசேகர்





 

இந்தியா மறக்கக்கூடாத முக்கிய தலைவர்களில் ஒருவர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்.  சோஷலிச தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு இருந்த இவர் அறுபதுகளிலேயே , பிஜேபியின் (அப்போதைய ஜன சங்கம் ) எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்க்கதரினசத்துடன் நினைத்தவர்.ஆச்சார்ய நரேந்திர தேவ் தலைமையை ஏற்று பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் செயல்பட்ட்ட இவர் , ஜனசங்கத்தை எதிர்க்க காங்கிரசால்தான் முடியும் என நினைத்து காங்கிரசில் சேர்ந்தார். 


மன்னர் மான்ய ஒழிப்பு , வங்கிகள் தேசிய மயமாக்கல் போன்ற இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் இவருக்குப்பிடித்து இருந்தன.  காங்கிரசில் இருந்த பழமைவாதப்போக்குகளுக்கு எதிராக குரல்கொடுத்த மோகன் தாரியா , கே , டி. மாளவியா போன்றோரை உள்ளடக்கிய இவரது குழுவினர் இளம் துருக்கியர் என அழைக்கப்பட்டனர்.  இந்திரா காந்துக்குமே பழைய தலைவர்களை பிடிக்காது என்றாலும் இந்திரா காந்திக்கு தர்ம சங்கடம் ஏற்படும் வகையில் , மொரார்ஜி தேசாய் போன்ற மூத்த தலைவர்களை எதிர்த்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருடன் அவ்வபோது மோதினார்


ஆனால் போக போக இந்திரா காந்தியின் தன்னிச்சையான போக்கு பிடிக்காமல் அவரையும் எதிர்க்கலானார். எம்ர்ஜென்சியின் போது , காங்கிரசில் இருந்தாலும் , கைது செய்யப்பட்டார்


சிறையில் இருந்து வெளி வந்ததும் ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டார். இந்திரா காந்தியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது ஜனதா. ஜனசங்க உறுப்பினர்களுடன் இவர் மோதல் தொடர்ந்தது.


விரைவிலேயே ஜனதா ஆட்சி கவிழ்ந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது

இந்திரா காந்தியை தொடர்ந்து எதிர்த்து வந்தார். 1983ல் வட இந்தியா முதல் தென் இந்தியா வரை இவர் நடத்திய பாரத யாத்திரை என்ற பெயரிலான பாத யாத்திரை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 


ஆனால் 1984ல் இந்திரா காந்தி படுகொலையால் , ராஜிவ் பிரதமரானார். ராஜிவ் ஆட்சியை எதிர்த்து வந்தார்

அடுத்த பொதுத்தேர்தலில் ராஜிவ் காந்தியை வீழ்த்து தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் சூழல் வந்தது.  பிஜேபியும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன

விபிசிங் ஒரு சந்தர்ப்பவாதி , அவர் பிரதமராக ஆதரவு அளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்

சரி , விபி சிங் வேண்டாம் , தேவிலாலை பிரதமராக்குவோம் என உறுதி அளித்ததை அடுத்து அதற்கு ஒப்புக்கொண்டார்

ஆனால் கடைசி நேரத்தில் ( ஏற்கனவே விபி சிங்குடன் நடத்திய ரகசிய பேரத்தின் காரணமாக ) தேவிலால் விபிசிங் பெயரை முன் மொழிய விபி சிங் பிரதமரானார். தேவிலால் துணை பிரதமர் ஆனார்

இந்த துரோகம் சந்திரசேகரை வெகுவாக காயப்படுத்தியது..

விரைவில் தேவிலாலுக்கும் விபிசிங்குக்கும் மோதல் ஏற்பட்டது

பிஜேபி தன் ஆதரவை தேசிய முன்னணி அர்சுக்கு விலக்கிக்கொண்ட நிலையில் , சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் ஆனார். தேவிலால் துணை பிரதமர் ஆனார்

வெறும் ஆறு மாதங்களே ஆட்சியில் இருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள்தான் இந்தியாவை பேரழிவில் இருந்து காத்தன என்கிறது வரலாற்று நூலாசிரியர் ரொடெரிக் மாத்யூஸ் எழுதிய , சந்திரசேகரும் இந்தியாவைக் காப்பாற்றிய ஆறு மாதங்களும் என்ற நூல் 

தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டு , தேர்தலை சில ஆண்டுகள் கழித்து சந்தித்து சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த ராஜிவ் காந்தி , ஏன் அவசரப்பட்டு சந்திரசேகர் அரசை கவிழ்த்தார் என ஒரு புதிய 

கோணத்தை காட்டுகிறது நூல் . அதில் இருந்து ஒரு பகுதி

-----------------------------------------------

   ராமர் கோயில் கட்டுமானப்பணிக்காக விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கி இருந்த ராம்ஜன்மபூமி ந்யாஸ் அறக்கட்டளை தலைவர்களும் அனைத்திந்திய பாபர் மசூதி  நடவடிக்கை கமிட்டி தலைவர்களும் பிரதமர் சந்திரசேகரை சந்திக்க வந்து இருந்தனர்.  ஷரத் பவாரும் , பைரோன் சிங் ஷெக்காவத்தும் ஏற்கனவே இவர்களுடன் பேசி இருந்தனர். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள்தான்

பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நிகழ்ந்தது

முதலில் இந்து தலைவர்கள் வந்தனர்

வெகு இயல்பாக  பதட்டமின்றி சந்திரசேகர் பேசினார் “ அயோத்தி பிரச்சனையில் என்னதான் செய்யலாம் . சொல்லுங்கள் “

அவரது இயல்பான தொனியை வைத்து , அவரை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம் என நினைத்த அவர்களும் இயல்பாக சொன்னார்கள்

“ இதில் பேச என்ன இருக்கிறது. அது ராமர் ஆலயம். அனைவருக்கும் தெரிந்ததுதானே அது “

இரண்டொரு நிமிடங்கள் அமைதியாக இருந்த சந்திரசேகர் சொன்னார்

“ சரி.. கொஞ்சம் சீரியசாக பேசுவோம். நான் இப்போது பிரதமர். எத்தனை நாள் பதவியில் இருப்பேன் என தெரியாது. ஆனால் நான் பிரதமராக இருக்கும்வரை யாரும் அந்த கட்டடத்தின்மீது கை வைக்க முடியாது “  சற்று இடைவெளி விட்டபின் தன் பாணியில் பேசினார் “ நான் விபி சிங் கிடையாது. மாநில முதல்வரிடம் பொறுப்பைதள்ளி விட்டு வாளாவிருக்கும் ஆள் நான் கிடையாது. யாராவது அந்த இடத்தில் கை வைத்தால் சுட்டுத்தள்ள உத்தரவிடுவேன். ஏழை நாடான இந்தியாவுக்கு இது போன்ற பிரச்சனைகள் தேவையே இல்லை. கடவுளுக்காகத்தானே போராடுகிறார்கள் , சுட்டுத்தள்ளி கடவுளிடமே அனுப்பிவிடுகிறேன் “

    அனைவரும் திகைத்தனர். இது பொதுக்கூட்ட மேடைக்கான வெற்றுப்பேச்சு அல்ல. ஒரு பிரதமராக உண்மையாக எச்சரிக்கிறார் என புரிந்து கொண்டனர்

” சரி  இஸ்லாமிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள் . அவர்களுடன் பேசி விட்டு முடிவெடுப்போம் “ என்றார்

அதன்பின் இஸ்லாமிய தலைவர்கள் வந்தனர்

   அவர்களுடன் பேசினார்

“ நான் வி எச் பியுடன் பேசி விட்டேன். தெளிவாக சொல்லி விட்டேன். நான் இங்கே இருக்கும்வரை அந்த இடம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் யோசியுங்கள். நாடுமுழுக்க லட்சக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்கின்றனர்.  நாளை ஏதேனும் கலவரம் என்றால் அனைவரையும் காக்கும் நிலையில் என்னிடம் போலிஸ் இல்லை. என்ன செய்யலாம் என நீங்களே சொல்லுங்கள் 

சரி.. இதை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்கிறோம் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்

“ சரி... சில அடிப்படை நெறிகளை பின்பற்ற வேண்டும். இரு தரப்பும் பேசுங்கள் ஷரத் பவாரும் , ஷெகாவத்தும் உங்களுடன் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் முடிவை அரசு செயல்படுத்தும். இது சத்தியம். ஆனால் சில நிபந்தனைகள் . என்ன பேசுகிறீர்கள் என்பதை வெளியே சொல்லக்கூடாது. முடிவு எட்டப்படும்வரை விஷயம் வெளியே போகக்கூடாது”


இருபது நாட்கள் வரை பேச்சு நடந்தது. பைரோன் சிங் ஷெகாவத் வெற்றிச்சிரிப்புடன் வந்தார்

“ உடன்பாடு ஏற்பட்டு விட்டது. ஆனால் இருதரப்புமே தம் ஆட்களை வெகுவாக உசுப்பேற்றி வைத்துள்ளனர். அதை எப்படி சரி செய்வது என்பதுதான் தெரியவில்லை “ 


ஒரு வழியாக உடன்பாடு ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் முன் வைத்த ஒப்பந்த நகல் இப்படி இருந்தது

“ இந்துக்களின் உணர்வுகளை மதித்து நிலத்தை அவர்களிடம் தர சம்மதிக்கிறோம். ஆனால் இரு நிபந்தனைகள் . மசூதி கட்ட எங்களுக்கு வேறு இடம் தர வேண்டும். இன்னொன்று , இது போன்ற பிரச்சனைகள் இனி ஒரு போதும் எழக்கூடாது என சட்டம் இயற்ற வேண்டும் , 05.08. 1947ல் மசூதியாக இருந்தவை மசூதி , கோயிலாக இருப்பவை கோயில் . இனி பிரச்சனைகள் எழவே கூடாது “


இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்


இந்த சம்பவதை ஷரத் பவார் தனது சுயசரிதை நூலில் உறுதிப்படுத்துகிறார்

பிரச்சனைக்குரிய இடத்தின் ஒரு பகுதியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டதாக எழுதுகிறார் அவர்

ஆனால் ஏன் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை? 

அங்குதான் அரசியல் விளையாடியது

ஷரத் பவார் , ராஜிவிடம் இந்த ஒப்பந்தம் குறித்து சொன்னார். ராஜிவ் சந்திரசேகரை போனில் தொடர்பு கொண்டார். “ நல்ல முறையில் தீர்வு கண்டமைக்கு பாராட்டுகள் . இரண்டு நாட்கள் யோசிக்க நேரம் கொடுங்கள் : என்றார் ராஜிவ்

இரண்டு நாட்களில் சந்திரசேகர் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்த்தார் ராஜிவ் 

இந்த பிரச்சனை சந்திரசேகர் ஆட்சியில் தீர்வு கண்டால் , அவர் ஒரு வலுவான தேசிய தலைவர் ஆகி விடுவார் என்ற அச்சம் ராஜிவுக்கு இருந்தது. இந்த பிரச்சனையை தான் முனைந்து தீர்ப்பதுதான் பழைய செல்வாக்கை ஈட்டுவதற்கான ஒரே வழி என ராஜிவ் நினைத்து இருந்தார். அந்த பெயரை சந்திரசேகருக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை

மலிவான அரசியல் மூலம் நடக்ககூடாத பல செயல்கள் நடந்து விட்டன


Chandra Shekhar And The Six Months That Saved India’ -  Roderick Matthews 




Tuesday, August 4, 2020

கோவில் கோயில் எது சரி ?


கோவில்...  கோயில்.. இரண்டில் எது சரி என்பதில் சிலருக்கு சந்தேகம்.

எவ்வளவோ பார்த்து விட்டோம்.. இதைப்பார்க்க மாட்டோமோ.. 

வாங்க பார்த்து விடுவோம்..

தலைவனின் அரசனின் அல்லது இறைவனின்  இல்லம் என்பதுதான் கோ இல்  

   கோ மற்றும் இல் ஆகியவை சேர்ந்தால் என்ன ஆகும் என்பதே கேள்வி

இரு சொற்கள் சேர்ந்தால் உருவாகும் புது சொல் எப்படி இருக்கும் என்பதற்கு சில விதிகள் இருக்கின்றன

பூ + தொட்டி  = பூந்தொட்டி ( புது எழுத்து உருவாதல்)

மண் + வெட்டி     = மண்வெட்டி ( எந்த எழுத்தும் சேரவில்லை/ அழியவில்லை)

பனை + காய்  = பனங்காய்  ( ஐ அழிந்து , அங் என்ற சாரியை உருவானது)

இப்படி எல்லாம் பல்வேறு விதிகள் உள்ளன

கோ  இல் என்பது  எப்படி சேரும்?


கடல் .. அலை என்பது கடலலை என மாறும்..  தாய் .. அன்பு என்பது தாயன்பு என சேரும்


புள்ளி வைத்த எழுத்தை ( மெய் எழுத்து)  தொடர்ந்து இன்னொரு சொல் வரும்போது அதிக சிக்கல் இன்றி அப்படியே இணைவு நடக்கிறது

ஆனால் அடுத்து வரும் சொல் க ச ட த ப என்பதில் ஆரம்பித்தால் கவனம் தேவை
நாய் கடி   என்பது நாய்க்கடி என க் சேரும்

தாய் பாசம்   என்பது தாய்ப்பாசம் என்றாகும் 

 முதல் சொல் உயிர் எழுத்தில் முடிந்து அடுத்த சொல் உயிர் எழுத்தில் ஆரம்பித்தால் , வ் அல்லது ய் என புதிதாய் ஓர் எழுத்து சேர்ந்து , அவ்விரு சொற்களையும் சேர்த்து வைக்கும்

உதாரணமாக மொழி ;. அறிவு...    என்ற சொற்களுக்கு மத்தியில் ய் தோன்றுகிறது


மொழி  ய்  அறிவு  = மொழியறிவு

திரு  வ்  அருள்         = திருவருள் 


வ் வருமா ய் வருமா என தொல்காப்பியரிடம் கேட்டால் , அவர் இப்படி எல்லாம் திட்டவட்டமாக சொல்லக்கூடாது என்கிறார்

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே

உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்

உயிர் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்தால் , வ் ய் அன்ற எழுத்து  தோன்றும். ஆனால் இந்த எழுத்துதான் வரும் என வரையறுக்க மாட்டார்கள்

என்கிறார்

தக்காளி, அப்ப என்னதான் தீர்வு?

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி

இசையின் திரிதல் நிலைஇய பண்பே


சொற்களின் ஓசை நயத்துக்கேற்ப புது எழுத்து தோன்றும் என்கிறார்


 நன்னூல் என்ன சொல்கிறது ?


இ ஈ ஐ வழி “ய” வ்வும்

ஏனை உயிர்வழி “வ” வ்வும்

ஏமுன் இவ் இருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்


அதாவது முதல் சொல் இ ஈ ஐ என முடிந்தால் , ய் என்ற எழுத்து தோன்றும்


பள்ளி   அறை    -- பள்ளி  ய் அறை        பள்ளியறை


வாழை  இலை    ---  வாழை  ய் இலை      வாழையிலை


ஏ என்ற சொல்லில் முடிந்தால் ,  வ் ய் என இரண்டுமே வரக்கூடும்


மற்ற உயிர் எழுத்துகளில் முடிந்தால் ,வ் தோன்றும்

 

மா  இலை    மாவிலை


அளவு  அறிந்து   அளவறிந்து


இந்த விதிப்படிதான் , கோ இல் என்பதை சிலர் கோவில் என எழுதுகிறார்கள்


ஆனால் சங்க இலக்கியங்களில் கோயில் என்றே வருகிறது. .பேச்சு வழக்கில் கோயில் என்றுதான் சொல்ல முடிகிறது..   கோவிலுக்கு போகிறேன் என்பதில் இயல்பு இல்லை




மா  + இருள் என்பது இந்த விதிப்படி மாவிருள் என்றுதான் வர வேண்டும் .. ஆனால் மாயிருள் என்பதே சரியானது



அதற்கு காரணம் , இ என்ற சொல்  வந்தால் அங்கே ய் தோன்றும் என நன்னூல் சொல்வதை , இரண்டாவது சொல்லில் வைத்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர்


அதாவது  மா   + இருள் என்பதில் இரண்டாம் சொல் இ என்பதால் , அங்கே ய் தோன்றி மாயிருள் ஆகிறது


அதேபோல கோ இல் என்பது கோயில் என்றுதான் ஆகும்..


அதுமட்டுமின்றி தொல்காப்பியர் சொன்னதுபோல , இசை நயம்தான் முக்கியம் என்ற விதிப்படியும் கோயில்தான் சரி .. அதனால் சங்க நூல்களில் கோயில் என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள்


சில ஆர்வக்கோளாறு இலக்கணப்பண்டிதர்களால் , கோவில் என்பதும் பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அது தவறு என நிறுவ முடியாது.. நன்னூல் விதியின்படி கோவில்தான் சரி என்பார்கள்.


ஆனாலும் கோயில்தான் சரியான் சொல்.. யாராவது கோவில்தான் சரி என்று சொன்னால் , மையமாக புன்னகைத்து நகருங்கள்.. 






















    

Wednesday, July 15, 2020

நாயன்மாரை புகழ்ந்து பாடிய ஆழ்வார் - ஆன்மிக வினோதம்

 நாயன்மார்கள் என்பவர்கள் சிவ பக்தர்கள் ..

ஆழ்வார்கள் விஷ்ணு பக்தர்கள்

இன்று இரண்டுமே இந்து மதம் என ஒன்றாகி விட்டாலும் , அந்த காலத்தில் சிவமும் வைணவமும் தனித்தனியாக இயங்கின..

இப்படி ஒரு சூழலில் , நாயன்மார்களில் ஒருவர் குறித்து ஆழ்வார் ஒருவர் பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் ( எனக்கு ஆச்சர்யமாக இருந்தது)

கோச்செங்கட்  சோழ நாயனார்..

இவர் சோழ அரசனாக இருந்தவர்...

இவர் பிறப்பே ஆச்சர்யமானது...இவரை கருவில் சுமந்திருந்தபோது , ஒரு ரிஷி இவர் தாயாரிடம் ( அவர் சோழ அரசி ) நான் குறிப்பிடும் நேரத்தில் குழந்தை பிறந்தால் , குழந்தை புகழ் பெற்ற அரசனாக வாழ்வான். கடைசியில் இறைவனையும் அடைவான் .. என நேரம் குறித்து கொடுத்தார்

        அந்த அரசிக்கு  அந்த நேரம் வருவதற்கு சில நாழிகைகள் முன்பாகவே பிரசவ வலி ஏற்பட்டது.. குழந்தை பிறப்பதை தாமதப்படுத்துங்கள். என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் என தன் தாதியர்க்கு ஆணையிட்டாள் மகாராணி..

         இப்படி குழந்தை பிறப்பு தாமதமாக்கப்பட்டு , உரிய நேரத்தில் குழந்தை பிறந்தது.. இப்படி ஒரு கடுமையான சூழலுக்கு தன்னை உட்படுத்திய அரசி மரணம் அடைந்தாள்

பிறந்த குழந்தைக்கு கண்கள் சிவப்பாக இருந்தன.. எனவே கோ செங்கண்ணன் என பெயரிடப்பட்டது

தெய்வ அருளால் பிறந்த குழந்தை என்பதால் , வெற்றி மீது வெற்றி பெற்றான்.. புற நானூறில் இவனது வெற்றி பதிவாகியுள்ளது


உலகியலில் வெற்றிகளை குவித்த இவனுக்கு ஆன்மிக வெற்றியைத்தர இறை முடிவு செய்தது

வெற்றிகளையே குவித்த இவன் ஒரு போரில் தோல்வியுற்றான்..

தோல்வியில் துவண்டு போய் இருந்த அவனை , ஒரு ரிஷி சந்தித்தார்

“  நான் தான் உன் தாய்க்கு நேரம் குறித்து கொடுத்தவன்.. நீலகண்டன் என் பெயர்.. நீ விஷ்ணுவை நோக்கி தவம் செய்.. ஒரு திருப்பத்தை காண்பாய் “ என்றார்

திரு நரையூர் என்ற இடத்தில் தவம் செய்து விஷ்ணுவிடம் இருந்து ஒரு தெய்வ வாளை வரமாக பெற்றான்.  அந்த வாள் அவனுக்கு வெற்றி அளித்தது.  தோற்கடித்த மன்னனை வீழ்த்தினான்


அந்த ஊரில் விஷ்ணுக்கு ஆலயம் எழுப்பினான்


 நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை  அவனுக்கு அந்த சம்பவம் உணர்த்தியது.ஒரு நன்றிக்காக விஷ்ணு ஆலயம் கட்டினாலும் அவன் மனம் ஏனோ வைணவத்தில் லயிக்கவில்லை

அப்போது மீண்டும் அந்த ரிஷி வந்தார்

இறை என்பதன் எல்லா வடிவமும் ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தவே உன்னை விஷ்ணுவை வழிபடச்செய்தேன்
உண்மையில் நீ சிவ அம்சம்..  சிவ கணங்களில் ஒருவனாக இருந்தாய்.. இன்னொரு சிவ கணத்துடன் , பக்தியில் சிறந்தவன் யார் என்ற மோதல் ஏற்பட்டது.. இதனால் சிவன் உங்களை பூமியில் பிறக்க வைத்தார்


நீ சிலந்தியாகவும் அவன் யானையாகவும் பிறந்தீர்கள்


சோழ நாட்டில் ஒரு சிவலிங்கத்தை அந்த யானை தன் துதிக்கையில் ஏந்தி வந்து அர்ச்சித்து வழிபட்டது...  அதை அறியாமல் சிலந்தி தன் வாயில் சுரக்கும் நூலால் அலங்காரம் செய்து வழிபட்டது

சிவலிங்கத்தில் சிலந்திக்கூடு கட்டும் சிலந்தி மீது யானைக்கும் , லிங்கம் மீது வாய் கொப்பளிக்கும் யானை மீது சிலந்திக்கும் கடும் கோபம்.. சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து இம்சித்தது. வலி தாங்கவொண்ணா யானை , தும்பிக்கையை கோபமாக பாறையில் அடித்தது.. விளைவாக இரண்டுமே இறந்தன

யானைக்கு இறைவன் முக்தி அளித்தான்.. சிலந்தியை மன்னனாக பிறக்க வைத்துள்ளான்

இதுதான் உன் கதை என்றார் அவர்

இதைக்கேட்டதும்தான் தன் மனம் ஏன் இறையை நாடினாலும் , வைணவத்தின்பால் செல்லவில்லை என புரிந்து கொண்டான்..

ஏற்கனவே சில ஆலயங்கள் அமைத்து இருந்தாலும் , அதன் பின் முழு வீச்சாக ஆலயங்கள் அமைத்தார் அவர் .. எழுபதுக்கும் மேல் ஆலயஙகள் எழுப்பி கடைசியில் இறைவனடி சேர்ந்தார்..  கோச் செங்கட் சோழ நாயனார் என ஆலயங்களில் வீற்றிருப்பார்.. அடுத்த முறை கவனியுங்கள்


இவர் அமைத்த திரு நரையூர் பெருமாள் கோயிலைப்பற்றி திருமங்கை ஆழ்வார் ஏராளமாக பாடியுள்ளார்

கோச் செங்கட் சோழ நாயனாரைப் பற்றியும் கடவுளிடம் இருந்து வாள் பெற்றதையும் , அவர் சிவனுக்கு கோயில்கள் கட்டியதையும் பாடியுள்ளார்

இப்படியாக , நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வைணவ நூலில் சிவனும் , சிவனடியாரும் இடம் பெற்ற அபூர்வ நிகழ்வு நடந்தேறியது


திருமங்கை ஆழ்வாரின் எல்லா பாடல்களும் தமிழ்ச்சுவை மிக்கவை..

விளக்கம் தேவையில்லாத இப்பாடலைப் பாருங்கள்


அத்தா அரியே என்றுன் னையழைக்க,

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,

முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற

வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.


இப்படி அனைத்தையும் சொல்வதை விட  , இந்த கட்டுரை சம்பந்தமான ஒரு பாடலை பார்த்து முடித்துக்கொள்வோம்

பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா

செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்

கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


கடலையே ஆடையாகவும் , பூமியை திருவடிகளாகவும் , வாயு மண்டலத்தை உடலாகவும் , பேரண்டத்தை தலையாகவும் கொண்டுள்ள பிரமாண்டமான இறை சக்தியை உணர விரும்புகிறீர்களா?

ஆரவாரமாக படை பலத்துடன் எதிர்த்து வந்த மன்னர்களை தெய்வ வாள் துணை கொண்டு வீழ்த்திய சோழ மன்னன் உருவாக்கிய திரு நரையூர் ஆலயம் வாருங்கள்  , அங்கு உறையும் இறையை இறைஞ்சுங்கள்


முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்

செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்

இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


மலர் போலும் கனி போலும் சிவந்த இதழ்களைக்கொண்ட நப்பின்னை தாயாரின் கணவனும் , நெறி மீறும் அரசர்களின் சிரம் அறுக்கும் திறன் உடையவனுமான பெருமாளின் திருவடிகளை உங்கள் தலையில் சூட விருப்பமா?

வேதம் ஓதுகின்ற சிவனுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைத்த சோழன் கட்டிய ஆலயத்தை வந்தடையுங்கள்












Monday, July 6, 2020

நகுலனின் இவர்கள் - சொல்லமுடியாமையை சொல்லுதல்


நல்ல எழுத்து அல்லது  நல்ல ஓவியம் அல்லது நல்ல இசை போன்றவை நம்மிடம் ஒன்றை சொல்லி சொல்ல முடியாமைக்கு எடுத்துச் செல்லும் தன்மை கொண்டவை

   முதலில் அவை நம் வெளி மனதுடன் தர்க்கப்பூர்வமாக உரையாடி சற்று நேரத்தில் ஆழ் மனதுடன் பேசத்தொடங்கும்.. சொல்லில் விளங்காதவதற்றை சொலவ்தற்கு நாவல் , சிறுகதை போன்றவற்றை பயன்படுத்திக் கொண்ட மேதைகள்

இப்படிப்பட்ட பாவனைகள் இன்றி நேரடியாக ஆழ் மனதுடன் உரையாட முயல்பவை நகுலனின் எழுத்துகள்

நாவல் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும் , சம்பவங்கள் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் இல்லாமல் கதை மூலம் சம்பவங்கள் மூலம் கிடைக்கக்கூடிய உச்சட்ட அபோத நிலையை நேரடியாக தரக்கூடிய ஒரு  நாவல்தான் நகுலனின் “ இவர்கள் “ என்ற நாவல்

மனித்ன் என ஒருவன் தான் உண்டு. துரைசாமி , ராம்சாமி , கிருஷ்ணசாமி என்பவை எல்லாம் வெறும் லேபிள்கள் மட்டுமே. எல்லோரும் எல்லோரிடமும் இருக்கிறார்கள் என்  நாவலில் ஒரு இடம் இருக்கிறது


ஒரு கதையை கதாசிரியன் உருவாக்கி அதை வாசிப்பவனாக வாசகனை மாற்றாமல் வாசகனையும் பிரதியில் பங்கேற்கச்செய்கிறார் நகுலன்


எஸ் ராமகிருஷ்ணனின் நாவல் நெடுங்குருதி நாவலில் , வேம்பலை என்ற கிராமத்தின் நிழலாக ஒரு கிராமம் வரும் . வேம்பலையில் அழிந்தவையும் இற்ந்தவையும் அந்த நிழல் கிராமத்தில்  வாழும்

அதுபோல , ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிழல் உண்டா , இன்றைய நிழல் கடந்த காலத்தில் வீசுகிறதா என் மிஸ்டிக் ஆன கேள்வியுடன் நாவல் ஆரம்பிக்கிறது

நனவோடை யுக்தியில் , தானாக தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் எழுத்தாக இந்த நாவல் அமைந்திருப்பது ஒரு வகை திடுக்கிடலை உருவாக்குகிறது

மனதின் ஆழத்தை அறிவின் குறுக்கீடுகள் இன்றி தரிசிப்பது அரிதான ஓர் அனுபவம்

உண்மையில் இப்படி திட்டமிட்டு எழுதமுடியாது.. ஓர் அரிய கணத்தில் இப்படி எழுத்து பீறிட்டு வந்தால்தான் உண்டு

அந்த வகையில் நகுலனின் இவர்கள் நாவல் முக்கியத்துவமானது.

அவரது நினைவுப்பாதை மற்றும் நாய்கள் நாவலை விட இவர்கள் நாவல் ஒரு தன்னிகற்ற நாவலாக அமைந்துள்ளது

நாவலில் வரும், நவீனன் தான் ந்குலன் என யாரும் நினைத்து விடக்கூடாது என கவனம் செலுத்தி இருந்தாலும் , நவீனன் நகுலன் அல்லன் என்றாலும் நகுலனின் நிழலாக அவன் இருக்கக்கூடும் என கூர்ந்து வாசிக்கையில் புலப்படுகிறது


உலக உலக்கியமும் இந்திய வேதாந்தமும் கைகுலுக்குவதும் ,  தமிழ் காதலும் சமஸ்கிருத ஞானமும் பரஸ்பரம் புன்னகைத்துக்கொள்வதும் ஒரு வித்தியாசமான ஃபிளாவரை தருகிறது


ராம நாதன்  , நல்ல சிவம் பிள்ளை ,  , தனது அப்பா , அம்மா , ஆகியோர் நவீனனின் மனவோட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள்


ராம நாதன் தான் படித்த நூல்களைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்/

மௌனி கதைகள்  ஜேகே , காசியபன் கவிதைகள் என்றெல்லாம் நல்ல சிவம் பிள்ளை பேசுகிறார்

நான் என்ற குறுகிய பார்வைதான் , விசாலமான பார்வையை மறைக்கிறது. நான் என்பது மறையும்போதுதான் உண்மையாக வாழத்தொடங்குகிற்றோம். என்பார் ஜே கிருஷ்ணமூர்த்தி

இந்த நானற்ற நிலையை வாழ்ந்து காட்டுபவர் அவரது அம்மா.. 

  நானற்ற நிலை வேறு.. நான் என்பதை மதிக்காத கண்மூடித்தனம் வேறு.. இதற்கு உதாரணமாக இருப்பவர் அப்பா

இந்த நால்வர் குணாதிசயங்களையும் இப்படி சுருக்கமாக அனாயசமாக காட்டி இருப்பார் நகுலன


நல்ல சிவன் பிள்ளை சின்ன வயதில் எப்படி இருந்திருப்பார்
ஊமையாக இருந்திருப்பார்

ராம நாதன் ?  ஒரு நாளைக்கு ஒன்பது நூல்கள் வாசித்து இருப்பார்


அப்பா ? பள்ளிக்கூடம் போகிறேன் என்று சொல்லி விட்டு கள்ளுக்கடைக்குப் போய் இருப்பார்

அம்மா ? அனைத்தையும் அதிசயம் போல பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள்


கலை என்பது என்ன ,, அதன் நோக்கம் ,,  என பல இடங்களில் விவாதிக்கிறார்


உடலின் பிரதிபலிப்பு நிழல்..   மனதின் பிரதிபலிப்பு எழுத்து..


அம்மாவின் சென்ஸ் ஆஹ் ஹ்யூமரை அவள் சொன்ன விதம் என் பார்வையில் படவில்லை ,, ராம நாதன் பார்வையில் பட்டது

எனக்கு நிழல்கள் இருப்பதால்தான் நான் எழுத்தாளனோ


நமக்கு நம் நிழல்களே பேய் ஆகி விடுகின்றன

என பல  விதங்களில் சொல்பவர் , ஒருகட்டத்தில் சொல்ல முடியாமையின் திகைப்பையும் சொல்லின் மூலம் காட்டுகிறார்


தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்கிறதம்மா என தான் கண்ட கனவை சொல்ல முடியாமல் தவிக்கும் ஊமையின் தவிப்பை சொல்வதன்மூலம் , அவன் கண்டது என்ன என்பதன் நிழலை நம்மை தரிசிக்க செய்து விடுகிறது  நிழல்கள்


முதலில் பரிசுத்த ஆவியாக இருந்து பிறகு நிழல் ஆகி அதன் பின் பேய் ஆக மாறும் நவீனனனும் , முழுக்க முழுக்க அறிவால் கலையை வசப்படுத்த முயனறு தோற்பவனும் கலைக்கு களப்பலி ஆகின்றவனும் எழுத்தின் வசீகரத்துக்கு சான்றாக நிற்கின்றனர்

Saturday, July 4, 2020

வண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்




என்னதான் இணையம் , kindle , ஆடியோ புத்தகங்கள் என வந்து விட்டாலும் பேப்பர் வடிவில் புத்தகங்களை படிப்பது தனி சுவைதான். வசதிகள் என்பது நவீன வடிவங்களில் அதிகம். ஆனால் அச்சு பிரதியில் தொடு உணர்ச்சி என்ற கூடுதல் கவர்ச்சி உண்டு.

சாருவின் பழுப்பு நிறப்பக்கங்கள் – 3 கைக்கு கிடைத்ததும் அந்த  பார்சலை பிரிக்காமல் வெகு நேரம் பார்த்தும் தொட்டும் முகர்ந்தும் மகிழ்ந்தேன். அதன் பிறகு வெகு மெதுவாக நிதானமாக பிரித்து புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தை முதன் முறையாக  கண்ணில் பட்ட அந்த கணம் !!!

கடின அட்டையுடன் கூடிய புத்தகம் என்பது கூடுதல் அழகு.

அதன் பின் மெல்ல ஒரு வரலாற்று பயணத்துக்குள் - காலம் இடம் கடந்து , இலக்கிய முன்னோர்கள் பாதச்சுவடுகளை பின்பற்றி – செல்லலானேன்.

பழுப்பு நிறப் பக்கங்கள் வரிசையின் முதல் இரண்டு புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை என்றாலும் இந்த மூன்றாவது புத்தகம் எனக்கு தனிப்பட்ட முறையில் வித்தியாசமான ஒன்று.

காரணம் சி சு செல்லப்பா…    சு ரா … கு ப ரா…  சா கந்தசாமி…  ம முத்துசாமி ப சிங்காரம் எனும் சம்பந்தமற்ற ஆளுமைகளின் தொகுப்பாக எனக்கு தோன்றியது..

எனவே இதை படிக்கும்போது ஒட்டு மொத்த இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் மனதில் தோன்றியது.



இதை இலக்கிய விமர்சன நூல் வரையறுப்பதா … ஆளுமைகளின் வரலாறு என்பதா.. அல்லது ஆளுமைகளுடனான ஒரு சம காலப்படைப்பாளியின் சொந்த அனுபவ பகிர்வா.. அல்லது ஓர் அறிமுகமா என சொல்லி விட முடியாத அளவுக்கு ஒரு பன்முக குணாதிசயத்தை இந்த நூல் கொண்டுள்ளது.. அதாவது கறுப்புக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்.. அதனால்தான் இது பழுப்பு நிறப் பக்கங்கள் ஆனதோ J

வண்ணம் என சொல்கையில் ஒரு விஷ்யம் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை விரைவாக மீள் வாசிக்கும் பொருட்டு பல்வேறு வண்ணங்களில் வரிகளை ஒளிர்விப்பது என் வழக்கம்.

அழகான மொழியாளுமைகளுக்கு ,  ஒப்பு நோக்க வேண்டிய புத்தக / ஆளுமைகள் பெயர்களுக்கு  ரசிக்கும் வரிகளுக்கு சுவையான சம்பவங்களுக்கு என ஒவ்வொரு வண்ணத்தை பயன்படுத்துவேன். இப்படி படித்து முடித்து விட்டு , ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பார்த்து திகைத்தேன். அந்த பக்கம் முழுமையும் , எல்லா வரிகளுமே , ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த பக்கமே வண்ணமயமாக ஜொலித்தது. கலர்ஃபுல்லாக ஓர் இலக்கிய நூலை எழுதுவது என்பதே ஒரு வியப்புதான்
பின் நவீனத்துவம் என்பதற்கு குறிப்பிட்ட யுக்தி எதுவும் இல்லை.. மூன்றடியில் எழுதி ஒரு காட்சியை சொன்னால் ஹைக்கூ , செப்பலோசை பயின்று வந்தால் வெண்பா. அகவலோசை வந்தால் ஆசிரியப்பா என்று ஃபார்முலா எதுவும் இல்லை.. ஆனாலும் பலர் பின் நவீனத்துவ ஃபார்முலா என எதையாவது நினைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக எழுவதுண்டு.

பின் நவீனத்துவ படைப்பு என்பது இயல்பாக நிகழ்வது. பின் நவீனத்துவ கட்டடங்கள் , பின் நவீனத்துவ இசை என இப்படி அமைந்தவை உண்டு,  அந்த வகையில் பின் நவீனத்துவ கூறுகளை இந்த நூலில் காண முடிகிறது.

இந்த நூலில் இன்னொரு சுவையான விஷயம் , ஒரு விஷயத்தை சொல்லாதே .. அதைக் காட்டு என்ற யுக்தி திறம்பட செயல்பட்டுள்ளது.  கு ப ரா எழுத்தை தவமாக பயின்றதன்  மூலம் அதன் சிறந்த ஒரு பகுதியை – ஒரு மாதிரியாக தேர்ந்தெடுத்து – அதை அப்படியே கொடுத்து குபராவை இது வரை படிக்காதவர்கள் கூட அவர் குறித்து புரிந்து கொள்ள உதவுவது ஒரு நல்ல யுக்தி. ஆனால் அப்படி கொடுக்கும் பகுதி அவர் எழுத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப்பெரிய உழைப்பும் புரிதலும் ஆழ்ந்த வாசிப்பும் தேவை. இதை சாரு சிறப்பாக செய்துள்ளார்.

இந்த நூலில் பேசப்பட்டுள்ள அறுவர் குறித்தும் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கிறது.

இது ஆளுமைகளை வியந்தோதும் பாராட்டுரைகளின் தொகுப்பன்று. சுருக்கமாக ஓர் ஆளுமையின் முழு பரிமாணத்தை 360 டிகிரியில் பார்க்கும் ஒரு பார்வையை தருவதுதான் நூலின் நோக்கம்.

தன் ஆளுமையை உருவாக்கியவர் என ஒரு குரு இடத்தில் வைத்து சுந்தர ராமசாமியை போற்றினாலும் அவர் படைப்புகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரிப்பது , சி சு செல்லப்பா படைப்புகளையும் அவர் வாழ்க்கையையும் அவர் குணங்களையும் அவ்வளவு தூரம் பாராட்டி விட்டு , தமிழில் விமர்சனத்துறை என்பது தனி நபர் வசையாக உருவெடுக்க ஆரம்ப புள்ளி அவர்தான் என்று சுட்டிக்காட்டுவது என விருப்பு வெறுப்பற்ற ஒரு பார்வையை வைக்கிறார் சாரு.

இந்த புத்தகத்தின் நாயகர்களான இந்த அறுவர் தவிர அசோகமித்திரன் ஜி கே செஸ்டர்ட்டன் தி ஜா  எஸ் வைதீஸ்வரன் வெங்கட சாமி நாதன் ஜெயமோகன் சார்த்தர் ஃப்லௌபர்  ஜார்ஜ் ஜோசஃப் என எண்ணற்ற  ஆளுமைகள் பக்கங்கள் தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர், வெறும் பெயர்களாக அன்று. ரத்தமும் சதையுமாக நம்முள் நடமாடுகின்றனர் .

இன்னொரு சுவையான அம்சம் .

இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் பல விஷயங்களுக்கு இந்த புத்தகமே – இதன் நூலாசியரே - உதாரணம் ஆகி விடுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

போலிகளை சுட்டிக்காட்டுவதில் எந்த தயக்கமும் கூடாது என்பதை சுந்தர ராமியிடன் கற்றேன் என்கிறார் நூலாசிரியர்,   அதே சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு ஃபேக் என தன் கைக்காசை செலவிட்டு மனைவியின்  நகைகளை அடகு வைத்து எழுதி நூலாக்கியவர் சாரு . அதாவது தான் கற்றதற்கு உதாரணமாக சுந்தர சாமி சம்பந்தப்பட்ட ஒன்றையே சொல்ல முடியும்

பாரதியார் ஒரு பன்முக கவிஞர். ஆனால் அவரது தேசிய கவிதைகள் பெற்ற பிராபல்யம் காரணமாக அவர் தேசிய கவி என சுருக்கப்பட்டு விட்டார் என்று பேசுகிறார் கு ப ரா

இந்த நூலின் இன்னோர் இடத்தில் சாரு பேசுகிறார் – என்னை நல்ல கட்டுரையாளன் என மக்கள் பாராட்டும்போது எனக்கு அவமானமாக இருக்கும்

அதாவது அவரது கட்டுரை பெற்றுள்ள வரவேற்பால் அவரது மற்ற சிறப்பம்சங்கள் மறக்கடிக்கப்படுவது அவருக்கு வருத்தம். இதைதான் குபரா நூலின் இன்னொரு பக்கத்தில் சொல்கிறார்


இதில் இன்னொரு ட்விஸ்ட் என்ன  என்றால் , சாரு மனதில் அவருக்கு இருக்கும் நாவல் மீதான காதலால் தன்னை சிறந்த நாவலாசியர் என்று மட்டுமே நினைத்துக்கொள்கிறார். அவர் மிகச்சிறந்த சிறுகதைகளை படைத்தவர்,.. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட, அந்த காலத்தில் அவர் எழுதிய லத்தீன் அமெரிக்க திரைப்பட புத்தகமெல்லாம் வரலாற்று பொக்கிஷம்,  சமீபத்தில் அவர் கு ப ரா குறித்து வழங்கிய உரைவீச்சு தமிழ் சொற்பொழிவுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் மறந்து விட்டு தன்னை ஒரு நாவலாசிரியர் என்ற அளவில் சுருக்கிக்கொள்கிறார். அதாவது இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் தவறை அவரும் செய்கிறார்

இப்படி இந்த நூலே இந்த நூலுக்கு ஒரு ரெஃபரன்ஸ் ஆகி விடுவது சுவாரஸ்யம்.

தமிழின் பல சொற்களின் பயன்பாடுகள் அருகி வருகின்றன. இலக்கியவாதிகளால் மட்டுமே பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன என பேசுகிறது இந்த நூல் ,. இந்த நூலே அதற்கு உதாரணமாகவும் உள்ளது.
எத்தனை எத்தனை அழகான சொற்கள் !!      

நாம் எதை ரசிக்கிறோம் என்பதுதான் நம்மை உருவாக்குகிறது. சாருவை கவர்ந்த சொல்லாடல்கள் பலவற்றை இதில் சாரு சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே அளவுக்கு அவரது சொல்லாடல்கள் நம் சிந்தையைக் கவர்கிறது , ஒரு கவிதையைப் போல.. ஓர் ஆப்த வாக்கியம் போல.



உதாரணமாக சில பளிச் வரிகளை பாருங்கள்.. இவற்றில் சில சாருவின் சிந்தனை.. சில சாரு மேற்கோள் காட்டும் ஆளுமைகளின் சிந்தனை…

  • இவர் தமிழ் மொழியின் பொக்கிஷம் என பாரதி குறித்து காந்தி கூறினார். காந்தியிடம் ராஜாஜி சொல்லி இருக்க வேண்டிய வார்த்தைகளை ராஜாஜியிடம் காந்தி சொன்னார்
  • ஆசிரியப்பா , கலிப்பா போன்று இப்போது ஒரு புதிய பா தோன்றி இருக்கிறது . அதுதான் செல்லப்பா
  • உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஓர் அதிசயம் இங்கு நடந்தது . அதாவது அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம்
  • அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தை கற்பித்தார்
  • அபிப்பிராயங்களை அழுத்தமாக உறுதியாகச் சொல்வார்.  நகைச்சுவையுடன் சொல்வார், புண்படுத்தாமல் சொல்வார்
  • கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும்போல தெய்வங்களும் பேய் பிசாசுகளும்கூட வாழ்ந்து வந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்து வந்தன

ஏன் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. இன்றைய சூழலில் இலக்கிய பரிச்சயம் என்பது ஓர் அடிப்படைத்தேவையாக இருக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை.

ஒரு முறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு நடிகர் ராஜேஷ் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். பேசி விட்டு கிளம்பியவர் தன் கார் இஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பதையும் , ஏசி ஆன் செய்து இருப்பதையும் கண்டு ஆத்திரம் அடைந்தார் . இவ்வளவு  நேரம் வீணாக ஓடிக்கொண்டிருப்பது ஏன் என ஓட்டுனரைக் கடிந்து கொண்டார். அதற்கு ஓட்டுனர் பதில் சொன்னார் “ முதல்வர்தான் ஏசியை இயக்கத்தில் வைத்திருக்கச்சொன்னார். அப்போதுதான் நீங்கள் கிளம்பும்போது வசதியாக இருக்குமாம் “

ஒரு வி ஐ பி வருகிறார் என்றால் அவர் வருவதற்கு முன்பே அவருக்கான அறையில் ஏசியை இயங்க வைத்து அவரது வசதியை பேணுவது வழக்கம். இந்த உதாரணத்தில் ஒரு முதல்வர் , ஒரு நடிகருக்காக யோசித்தது ராஜேஷை மட்டும் அல்ல… திமுக அனுதாபியான ஓட்டுனரையும் பிரமிக்க வைத்தது… இப்படி பிறருக்கான யோசிக்கும் தன்மை வாசிப்பால் மட்டுமே வரும்.

இலக்கியப்பரிச்சயம் உங்கள் வாழ்வை செழிப்புறச்செய்யும் என்கிறார் சாரு.. இது முற்றிலும் உண்மை..   ஒருவர் மருத்துவராக , எழுத்தாளராக , பொறியாளராக , ஓட்டுனராக , விவசாயியாக , பேருந்து ஓட்டுனராக என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..  யாராக இருந்தாலும் சரி, இலக்கியப்பரிச்சயம் இருந்தால் , அவர்கள் செய்வது கலாப்பூர்வமாக மாறும்..அவர்கள் பிரஞ்ஞையில் ஒரு மாற்றம் ஏற்படும்.
பழுப்பு நிறப்பக்கங்கள் இந்த மாற்றத்துக்கான ஒரு சாவி எனலாம்.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா