Sunday, June 28, 2020

பிஜேபி காங் வழியில் திமுக , அதிமுக , இணைய போராளிகள்

சில நாட்களுக்குமுன் நரேந்திர மோடி என்பதைவிட சரண்டர்மோடி தான் பொருத்தமானது என சொல்ல நினைத்து சுரேந்தர்மோடி என எழுதிவிட்டார் ராகுல் . உடனே பிஜேபியினர் அது சுரேந்தர்மோடி அல்ல சரண்டர்மோடி என சேம் சைட் கோல் போட்டனர்.

அதுபோல , காங்கிரஸ் ஆட்சியில் 43000கிமீ நிலத்தை சீனாவுக்கு தாரை வார்த்துவிட்டனர் என பிஜேபி தலைவர் குற்றம்சாட்டினார். உடனே காங் ஆதரவாளர்கள் , அவ்வளவெல்லாம் இல்லை. 43000 சதுர கிமீட்டர்தான் தாரை வார்த்தோம் என சேம் சைட் கோல் போட்டனர்.

இதுபோல அனைவருமே உண்மை பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் ?
−−−−−−−−

அதிமுக... தனியா நின்னு ஒரு தேர்தல்கூட ஜெயிக்க முடியாம கூட்டணி பலத்துலயே காலத்துல ஓட்டறீங்களே ?

திமுக ... தப்பு தப்பு கூட்டணியால ஜெயிக்கல.. எம்ஜிஆர் செல்வாக்கு , இந்திரா காந்தி ஆதரவு,ரஜினி வாய்ஸ் அப்படீனு பல காரணம் இருக்கு. சரி, அதிமுகனாலே ஊழல்தானே நினைவுக்கு வருது

அதிமுக.. தப்பு. போலிஸ் அராஜகம் , கொரோனா, சொதப்பல் அப்படீனு பல விஷயங்கள் நினைவுக்கு வருமே

.....
இணைய போராளிகள்.. செய்திதாள் நடையில எப்படி தைரியமாக புக் எழுதறீஙக

இணைய எழுத்தாளர்கள் : தப்பு தப்பு. நடை மட்டுமல்ல. கண்டெண்ட் கூட செய்திதாள் மாதிரிதான் இருக்கும். சரி. நீங்கள்லாம் ஆட்டு மந்தைகள் மாதிரி ஒரு குறிப்பிட்ட பிரச்சனைல,மட்டும் குறிப்பிட்ட காலத்துல கும்பலா இறங்கறீஙகளே .. ஏன்?

இணைய போராளிகள்.. தப்பு தப்பு
பிரச்சனைகளில் மட்டும் இல்ல. சினிமா , புத்தகம் , காமெடி அப்படீனு.எல்லாத்தலயும் நாங்க ஆட்டு மந்தைகள்தான்





Tuesday, June 16, 2020

இயக்குனர்கள் பாக்யராஜ் & "முகவரி"துரை.. தரையில் இறங்கிய விமானங்கள்


ஒரு காலத்தில் வெற்றி என்பதற்கு அகராதியில் அர்த்தம் பார்த்தால் பாக்யராஜ் என்று இருக்கும்.  அந்த அளவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தவர் அவர். வேறு மொழிகளில் யாரேனும் வெற்றிகளைத் தந்தால் அவர்களை கேரள பாக்யராஜ் , கன்னட பாக்யராஜ் என்பார்கள். அந்த அளவுக்கு வெற்றிகளை கொடுத்தார்.  கட்சி , சித்தாந்தம் போன்றவைகளில் ஆர்வமற்ற வெள்ளந்தி மக்கள்தான் இங்கு அதிகம். அவர்களின் நாயகனாக திகழ்ந்தார் அவர்

இந்த,நிலையில்தான் தன் இமேஜை சீர்திருத்தவாதி என்ற அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்பினார்.  
அதில் தவறு ஏதும் இல்லை

கண்டதேவியில் தேர் இழுப்பதில் பிரச்சனை , திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த கொடூரம் ,  ஆணவக்கொலைகள் , ரிசர்வ் தொகுதிகளில் தன் வேலையாட்களை நிற்க வைத்து வெல்ல வைத்து , மக்கள் பிரதிநிதி தன் வீட்டு வேலை செய்கிறார் என இழிவு படுத்துதல் , அல்லது வென்றதும் உடனடியாக ராஜினாமா செய்ய வைத்து , தேர்தலை கேலிக்குள்ளாக்குவது போன்றவற்றை கண்டிக்க இவருக்கு துணிவு வரவில்லை

வம்பே வேண்டாம் என பிராமணர்களை விமர்சித்து படமெடுக்க நினைத்தார்.
அதிலும் தவறில்லை. இது பலரும் செய்வதுதான்

ஆனால் கீழ்மையான செயல் ஒன்றை அரங்கேற்றியதுதான் பிரச்சனை.  பிராமணர்களை திட்டினால் தனது நடுநிலை இமேஜ் பாதிக்கப்படுமோ என நினைத்து , பிராமணர் ஒருவரையே படத்துக்கு டம்மி இயக்குனராக்க முடிவு செய்தார்.  சூதுவாது தெரியாத பாலகுமாரனை நைச்சியமாக பேசி சம்மதிக்க வைத்தார்

படம் முழுக்க பாக்யராஜின் கைவண்ணம்தான். பெயர் மட்டும் பாலகுமாரன்

படம் அபாரமான வெற்றி பெற்றது. நல்ல காசு பார்த்தார்.

ஆனால் அந்த அறமற்ற செயல் அவரை அத்துடன் முடக்கியது.  அதற்குப் பிறகு அவரது எந்தப் படமும் பழைய வெற்றியை பெறவே இல்லை. 

பாலகுமாரன் இது குறித்து பலமுறை வயிறெரிய குமுறியுள்ளார். தந்திரமாக என்னை ஏமாற்றி விட்டார்.  நான் எளியவன். என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று அனைத்தையும் கவனிக்கிறது என குமுறினார்

இது நிற்க

அஜித்துக்கு திருப்புமுனை தந்த நல்ல படங்களுள் ஒன்று. தரமான நடிகர்கள் , இயல்பான கதை என படம் சிறப்பாக இருந்தது

படத்தின் ஒன்லைன்

தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இசையில் சாதிக்க முயலும் நாயகன் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம் இது. அனைத்து டிவி சானல்களும் இதற்கு நல்ல தரவரிசை அளித்தன

படத்தின் வசனம் பாலகுமாரன். படத்தில் ரகுவரன் சொல்லும் தன்னம்பிக்கை கதை இன்றும் பிரபலம்

ஆனால் , படத்தின் கதை இந்துமதியின் தரையில் இறங்கிய விமானங்கள் போல இருக்கிறதே என்ற பேச்சும் எழுந்தது

இந்த கதையின் ஒன்லைன்


தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இலக்கிய உலகில் சாதிக்க முயலும் விஸ்வம் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

நாயகனின் பெயர் வேறு .  இலக்கியம் என்பது இசை ஆகி விட்டது

மற்றபடி குடும்ப சூழல் , பெருந்தன்மையான அண்ணன் , இனிய காதல் என அனைத்துமே ஒன்றுதான்

படத்தில் பணிபுரிந்த பாலகுமாரன் , இந்துமதியின் நண்பர் என்பதால் . இந்துமதியின் அனுமதியுடன்தான் படம் எடுக்கப்பட்டதாக பலரும் நினைத்ததால் , யாரும் அதை பெரிதாக்கவில்லை

ஆனால் சமீபத்தில் , தன்னிடம் அனுமதி வாங்காமல் கதையை திருடிவிட்டனர் என இந்துமதி குமுறியுள்ளார்

அவரது நாவலை கையில் வைத்துக்கொண்டுதான் கதை விவாதமே நடந்ததாம்

இப்படி திருடியதற்குபதில் முறைப்படி அனுமதி வாங்கி , அண்ணி கேரக்டரை நாவலில் இருப்பதுபோல அழுத்தம் கொடுத்து எடுத்திருந்தால் படம் வேறொரு உயரம் தொட்டிருக்கும்

இயக்குனர் துரை தொடர் வெற்றிகளை அளித்திருப்பார்
அஜித்துக்கு இந்த விவகாரம் தெரிய வாயப்பில்லை. ஆனால் துரைக்கு தார்மீக பொறுப்பு உண்டு

பரவலாக பாராட்டுப்பெற்று , அஜித்தை வைத்து வெற்றாப்படம் கொடுத்து ,உயரத்தில் பறந்த இயக்குனர் அதன் பின் ஒரு போதும் வெற்றியை தர முடியவில்லை

அறிவுலகில் அறம்தவறுவது அழிவையே தரும்
,
முகநூல் பதிவுகளை காப்பி பேஸ்ட்செய்வது , பிறர் கதைகளை திருடுவது என படித்தவர்கள் பலரே செய்வது வருந்தத்தக்கது

அனைத்துக்கும் எதிரவினை உண்டு என்பதை படைப்புலகம் புரிந்து கொள்ளவேண்டும்

Saturday, June 13, 2020

யாமம் .. ரகசியங்களின் கதை


இருள் இருட்டு போன்றவற்றை நாம்
பெரும்பாலும் எதிர்மறையாகவே உருவகித்து வருகிறோம்.  இரவு என்ற வேண்டத்தகாத ஒன்றாகவும் விடிதல் என்பதை சந்தோஷமான ஒன்றாகவும் அன்றாட மொழியிலேயே நிலை பெற்று விட்டது

உண்மையில் இரவு என்பது வசீகரமானது. மர்மம் மிக்கது.  ரகசியஙககள் நிறைந்தது

இந்த இரவு என்பதை ஒரு படிமமாக்கி , மனதின் வரலாற்றின் மனிதனின் ரகசியமான பகுதிகளைப் பற்றி பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் யாமம்

யாமம் என்றால் இரவு. யாமம் என்ற பெயரில் தயாரிக்கப்படும் வசீகரம் மிக்க அத்தர் என்ற பின்னணியில் இந்த நாவல் அமைந்துள்ளது..

அத்தரின் அந்த வசீகரமிக்க கவரச்சி நாவல் முழுக்க விரவியுள்ளது

   நாவலின் கட்டமைப்பே வெகு சுவாரசியமானது

பாரம்பரியமாக பல தலை முறைகளாக அத்தர் உற்பத்தியில் பிரசித்தி பெற்ற குடும்பம் அது.  அந்த குடும்பத்தின் முதல் தலைமுறையான மீர் காசிம் என்பவர் கனவில் சுபி ஞானி பக்கீர் தோன்றி உவமை மொழியில் பேசி , சில தேர்வுகள் வைத்து , கடைசியில் யாரும் தயாரிக்க முடியாத அளவு சிறப்பான அத்தர் தயாரிப்பு முறையை கற்றுத் தருகிறார். அதைக்கற்ற மீர் காசிம் செல்வமும் கீர்த்தியும் பெறுகிறார்.

 அவரது வாரிசுகளும் அதை பின்பற்றி நன்றாக வாழ்கின்றனர்

   தற்போதைய நிகழ்கால வாரிசான அப்துல் கரீம் கனவில் பக்கீர் வருகிறார். இயேசு எப்படி தன்னை உவமைகளால் பேசுபவன் என சொல்லிக் கொண்டாரோ அதுபோல பக்கீரும் உவமைகளால் சில முன்னறிவிப்புகளை செய்கிறார் என ஆரம்பிக்கிறது கதை.
  கதையின் ஆரம்பமே பக்கீர் செய்யும் இந்த முன்னறிவுப்புதான்.  நாம் அப்போது மீர் காசிம் உரையாடலையோ , நாவலின் பிற சம்பவங்களையோ அறிந்திருக்க மாட்டோம் என்பதால் அவரது அறிவுரைகளின் முழு தாத்பர்யம் நமக்கு புரிவதில்லை. ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே உன் வியாபாரம் விருத்தியாகும் என்று மட்டுமே அப்துல் கரீம் புரிந்து கொள்கிறார்

     அதன்விளைவாக  அவர் குடும்பம் என்ன ஆகிறது என்பது ஒரு கதை

     இதைத்தவிர பத்ரகிரி , அவனது தம்பி திருச்சிற்றம்பலம் ,  அவர்களது மனைவிமார்கள் , திருச்சிற்றம்பலத்தின் நண்பன் சற்குணம் , கிருஷ்ணப்ப கரையாளர் அவரது தோழி எலிசபத் , சதாசிவ பண்டாரம் ஆகியோரின் கதைகளும் யாமம் எனும் பொதுவான அம்சத்தின் கீழ் பிணைந்துள்ளன.

லண்டன் நகரும் ஆங்கிலேய சமூகமும்கூட கதாபாத்திரங்களாக வருகின்றன

          அப்துல் கரீம் , பத்ரகிரி , கிருஷ்ணப்ப கரையாளர், சதாசிவம் ஆகியோர் மட்டுமல்ல. முன்கதையில் வரும் இளவரசி உட்பட அனைவர் வாழ்விலும் நறுமணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு விதமான உணர்வுகளையும் விளைவுகளையும் உருவாக்குகிறது


 இவர்களை வசீகரமான ஒரு சக்தி வழி நடத்துகிறது. அதைத்தான் யாமம் என கவித்துவமாக உருவகமாக்கியுள்ளார் எழுத்தாளர்



     தான் என அவர்கள் நினைப்பதற்கு சம்பந்தமில்லாத ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

      இவர்களில் சதாசிவ பண்டாரத்தை வழி நடத்தும் சக்தி மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. மற்றவர்கள் இரவு போன்ற மர்மமான ஒரு விசையால் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்

        தான் இங்கிலாந்து செல்வதே வெள்ளைக்காரிகளை புணருவதற்காகத்தான் என சொல்லக்கூடிய தன்னை பொறுக்கி என நினைக்ககூடிய சற்குணம் , சமூகநல போராளியாக மாறுகிறான்
   
தன் தம்பிக்கு தான் ஒரு தந்தை என மனப்பூர்வமாக நம்பும் பத்ரகிரி பெண்மோகத்தில் விழுகிறான்

      பற்றுகளுக்கு அப்பாற்பட்டவர் என தன்னை நினைத்துக்கொள்ளும் சதாசிவ பண்டாரம் தன் எல்லைகளை உணர்கிறார்

      தங்களை சுயநலவாதிகள் என்றும் அப்துல் கரீமின் சொத்துதான் தஙககளை பிணைத்து வைத்துள்ளது என நினைக்கும் அவரது மனைவிகள் அவர் இல்லாதபோதுதான் கடுமையான வறுமைக்கு மத்தியிலும் ஒருவருக்கு,ஒருவர் அவ்வளவு ஆறுதலாக அன்பாக இருக்கின்றர்

   
     வெளிப்படையாக தெரியாமல் தன் மனத்தால் தன் இருப்பைக் காட்டும் யாமம் போல மனிதனுக்குள் அவனுக்கே தெரியாமல் இன்னொரு மனிதன் இருப்பதும் அவன் தன் இருப்பைக் காட்டுவதும் கதையில் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது

இது மனிதனுக்கு மட்டுமன்று. இமங்களுக்கும் பொருந்தும்
வசீகரமான லண்டன் நகரைப் பாரத்து இதுதான் சொர்க்கமா என நினைக்கும் அதன் இருளான பகுதியைஒரு
தூக்குதண்டனை சம்பவம் மூலம் அறிகிறான்

அதுபோல இந்தியாவை கரையான்போல அரிக்கும் ஆங்கிலேய ஆட்சியின் இன்னொரு முகமான பெண் கல்வி , ஜனநாயக யுகத்தின் பலன் ஆகியவையும் சொல்லப்படுகின்றன

தன் சொந்த மக்களின் ஒரு
பகுதியினரை கொடுமைக்குள்ளாக்கும் அதே ஆங்கில சமூகம்தான் தமிழன் ஒருவரை தன் புதல்வனாக பத்திரமாக பார்த்துக் கொண்டு மேடை ஏற்றி அழகு பார்க்கிறது

நெடுங்குருதி நாவலில் காலம், நிலவியல்
பற்றி தெளிவான குறிப்புகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு இருக்கும். காரணம் அந்த நாவலின் தளம் வேறு. யாமம் நாவலில் இடம் மற்றும் காலம் பற்றிய குறிப்புகள் வெகு கவனமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.

முதன்முதலில் மீர் காசிம் கனவில் தோன்றும் பக்கீர்  , தனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும் என்றும் கடலின் மீன்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்ல வேண்டும் எனவும் கேட்கிறார்.
அது எப்படி முடியும் என திகைத்தாலும் பதிலுக்காக தீவிரமாக தேடுகிறார். கடைசியில் அவருக்கு பதில் கிடைக்கிறது. அந்த பதிலைவிட அந்த தேடலும் நம்பிக்கையும் பக்கீருக்கு பிடித்து விடுகிறது. எனவே தொடரந்து உரையாட ஆரம்பிக்கிறார்

  தெரியாதை தேடிச் செல்லும் நம்பிக்கையும் குறியீட்டுப் பொருளை உணரும் ஆற்றலும் கொண்ட அவருக்கு அள்ள முடியாத நறுமணமிக்க திரவமான இருளை , வடிவற்ற இருளை , வடிவம் கொண்ட அத்தராக உருவாக்கும் வித்தையை கற்றுத்தரலாம் என முடிவெடுத்து அவருக்கு மாகற்றுத்தருகிறார்

ஆனால் இந்த தேடலோ குறியீடுகளை புரிந்தும் தன்மையோ அப்துல் கரீமிடம் இல்லை என்பதை கவனிக்க முடிகிறது.
     

இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது

இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையை போன்றது



இரவின் தீரா வாசனை எங்கும்  பரவி இருக்கிறது



பகலிலும் இரவை உருவாக்கும் திறன்

உங்களது வாசனை திரவியங்களுக்கு மட்டுமே உணடு


பசுவின் காம்பில் இருந்து பால் சொட்டுவதுபோல பிரபஞ்சத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டிக் கொண்டே இருக்கிறது

நீயும் உன் மூதாதையரும் இரவை சிருஷ்டிக்கும் ரகசியம் அறிந்தவர்கள்


   இரவின் ரகசியத்தை நீ உன் புதல்வனுக்கும் அவன் தன் புதல்வனுக்குமாக கைமாற்றி தர வேண்டும்.
         இது எப்போது நிற்கிறதோ அப்போது இந்த வித்தை உங்களை விட்டுப் போய் விடும்

 என மிகுந்த கருணையோடு முன்னறிவிக்கிறார் பக்கீர்

   மீன்களின் எண்ணிக்கை என்ற உலகியல் கேள்விக்கு விடை தேடி , ஆன்மிக அனுபவம் பெற்று , தத்துவரீதியான பதிலை தந்த தன் மூதாதையரின் நுண்திறன் இவருக்கு இல்லை

   இரவின் ரகசிய புத்தக செய்தியை நன்கு அறிந்து அதை உன் மகனுக்கு புகட்டு என்பதை உலகியல் ரீதியாகவே புரிந்து கொண்டு , ஆண் குழந்தை பெற உத்தரவிடுகிறார் என புரிந்து கொண்டு அதையே தன் லட்சியமாக மாற்றிக கொள்கிறார்.   படிப்படியாக அவர் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. ராணிகள் போல இருந்த அவர் மனைவிகள் கூலி வேலை , மீன் விற்பனை என கஷ்டப்படும் சூழல் உருவாகிறது

    இவரது வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பது யாமம் . பிரசித்தி பெற்ற தனது அத்தர் பாட்டில்களை  அவர் குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்.

    இவரது பிரச்சனை காமம் கிடையாது. பேராசைதான் இவரது பிரச்சனை


  கிருஷ்ணப்ப கரையாளர் யாமம் அத்தரின் தீவிர ப்ரியர். தன் பிணத்தின் மீது அத்தரைக் கொட்டி புதைக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குண்டு. அன்பான அரவணைப்பு என்றுதான் யாமம் இவருக்கு பொருள்படுகிறது.  ஆனால் அது அவருக்கே தெரிவதில்லை.  சொத்துதான் தன்னை இயக்கும்விசை என நினைத்து அதற்காக வழக்காடுகிறார்.

   ஒரு மலைத்தங்கலின்போதுதான் , காமமோ பணமோ தனக்கு பொருட்டல்ல என்ற சுயதர்சனம் அவருக்கு கிடைக்கிறது;

இது சுவையான ஒரு சித்தரிப்பாகும்

தன்னை தியாகி என்றும் பொறுப்பான அண்ணன் என்றும் நினைக்கும் பத்ரகிரியின் ஆழ்மனத்தை காமம்தான் ஆட்டுவிக்கிறது. இவனுக்கு யாமம் என்பது காமமாக பொருள்படுகிறது

ஆனால் தன்னை பேராசைக்காரராகவும் காமக்கேளிக்கையாளராகவும் மதிப்பிட்டிருந்த கிருஷ்ணப்பரின் ஆழ்மனம் எளிய வாழக்கையே நாடி இருக்கிறது.

    கிழக்கிந்திய கம்பெனி இங்கு நிலைகொள்ள காரணமாக அமைந்தது மகள் மீது தந்தை கொண்ட பேரன்பு. அப்படி ஒரு நெகிழ்வான கணத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு கதவுகளை திறந்து விடுகிறார்

    மதராபட்டணம் உருவானதற்கு பின்னணியில் இருப்பது பிரான்சிஸ்டே என்பவனுக்கு கிளாரந்தா மீதான பாலியல் கவர்ச்சி

    சதாசிவ பண்டாரம் தன் அன்னையை துச்சமாக நினைத்து துறந்தவர்..  மான அவமானம் , பொருளாசை , பெண்ணாசையைக்கூட துறந்து விடலாம் , ஆனால் ரத்த பந்தத்தை அறுப்பது எளிதல்ல என்பதை உணர்வதுதான் இவரை முழுமை ஆக்குகிறது. தான் பாலுறவு கொண்ட பெண்ணைப்பற்றி நினைப்பதைவிட தன் குழந்தை என்னவாயிற்று என்றே அவர் மனம் துடிக்கிறது.  தன் தாயின் துடிப்பை அப்போதுதான் அவரால் உணர முடிகிறது

      மதம் மாறிய ஒரு பெண் குறித்தும் அவள் ஏற்படுத்திய பெண் கல்வி புரட்சியும் ஒரு சித்தரிப்பு வருகிறது.அவள் மதம் மாறியதும் கலப்பு மணமும் அவள் பெற்றோருக்கு மரணத்தை ஒத்த மிகப் பெரிய வேதனை. அவளுக்கு சாவு சடங்குகளை செய்துவிட்டு ஊரைவிட்டே போய் விடுகிறார்கள்
தனியாகப் பார்த்தால் அந்த பெற்றோர் வேதனை குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஆனால் சீர்திருத்தம் , பெண்கல்வி என பெரிய அளவில் பார்க்கும்போது தனி ஒருவர் கண்ணீருக்கு வரலாற்றில் என்ன பொருள் இருக்க முடியும்.
இந்த பின்னணியில்தான் தன் தாயின் கண்ணீரை புரிந்து கொண்டுஅதன்பின் அதை தாண்டும் பக்குவம் சதாசிவ பண்டாரத்துக்கு கிடைக்கிறது,..ஒரு சத்திரத்தில் தங்கியிருக்கும்போது ஒரு கல்லில் எங்குமே அனுபவித்திராத ஒரு சுகந்தமான மணம்  வீசுவதை கவனிக்கிறார். அது என்ன என்பது அப்போது புரிவதில்லை.  இரவெனும் ரகசியப்புதிரின் மணம் அவரைசூழ்வதன் முன்னறிவிப்பு என பிறகுதான் நமக்கு தெரிகிறது


    நாவலில் இரு சுவாரஸ்யமான காட்சிகள். அனைத்தையும் இழந்து சாலையில் செல்லும் பத்ரகிரி நாய் ஒன்றைப் பார்க்கிறான்.  பேசாமல் அனைத்தையும் விட்டு விட்டு இந்த நாயின் பின் போய்விடலாமா என அவனுகு தோன்றுகிறது

நாயை பின்தொடர்ந்து சென்று ஞானம் பெற்ற சதாசிவ பண்டாரம் நினைவு நமக்கு வருகிறது.

அதேபோல கப்பலில் செல்லும் திருச்சிற்றம்பலம் கடலின் மீன்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது குறித்து யோசிக்கிறான்.

நமக்கு மீர் காசிமிடம் மீன்களை கணக்கிட சொன்ன பக்கீர் நினைவு வருகிறது

    பக்கீர் அவர் கனவில் வந்து வழிநடத்துவதுபோல திருச்சிற்றம்பலத்தை அவன் அம்மா வழிநடத்துகிறாள்

   அப்துல் கரீம் இருந்தவரை தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அவரது மனைவிகள் அவர் காணாமல் போனபின்பு எந்த நிரப்பந்தமும் இல்லாமல் ஒற்றுமையாகி விடுகினறனர், ,ரஹ்மானியின் குழந்தையை வகிதா வளர்க்கிறாள்.சுரையாவையும் தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறாள்

மனித மனதின் விசித்திதங்களுக்கு எல்லையே இல்லை போலும்

எதற்கும் ஆசைப்படாத அதிகம் பேசாத விசாலா ஆசைப்படுவது அத்தர் ஒன்றுககாக மட்டுமே..

தையல் நாயகியுடனான தன் கணவன் உறவை அறிந்து அவனை தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகிறாள்

தைரியமான பெண் என நினைக்கும் தையல் நாயகியில் குணநலன்கள் கடைசியில் வெகுவாக மாறி அவளது சுயரூபம் அவளுக்கே தெரிகிறது

நடைமுறை ஞானத்துடன் பேசும் ஏ எஸ் ஐயர் , பகல் குறித்த எந்த அக்கறையுமற்ற டோபிங் , கலகலப்பான சிறுவன் சந்தீபா , அவனது கிளி, வெள்ளையர்களுக்கு மட்டுமே ஏழு கிணறு என உத்தரவிட்ட பிரிட்டிஷ் அரசு அதை கத்தியின்றி ரத்தமின்றி போராட்டமின்றி கருப்பர்களுக்கு கொடுத்து விடுதல் , இம்பாலா லாட்ஜ் வாசக சாலை , கனவில் வந்து கணக்குக்கு உதவும்"சடட்நாதன் , கால்குலேட்டர் கண்டுபிடிப்பு , நட்சத்திரஙகளுடன் உரையாடும் பத்ரகிரி , பறவைகளை எண்களாக காணும் திருச்சிற்றம்பலம் , அடிமைகளாக மாறவிருத்த மகர் இன ஏழைகள் அரசு மாறகறஙககளால் பெறும் குதூகல வாழ்வு என ஏராளமன சுவாரஸ்யங்கள்

காட்டில் சிறுசிறு திருட்டுகளைச் செய்யக்கூடிய ஆனால் காட்டை
நேசிக்கக்கூடிய ஒரு பாத்திரம் வருகிறது. அதேகாட்டுக்கு காட்டின்மீது மரியாதை இல்லாத காட்டை நுகர்வுப்பொருளாக மாற்றக்கூடிய கனவான்களின் வருகையும் சித்தரிக்கப்பட்டுள்ளது


கைவிடப்பட்ட சிறுமியாக வாழக்கையை ஆரம்பித்து பலவித சிதகதரவதைகளை அனுபவித்து , வாழ்க்கை அவ்வளவுதான் என நினைத்த நிலையில் ஒரு பெரிய மலைக்கே உரிமையாளர் ஆகிறாள் எலிசபத். அவளது மனபிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடுகிறது மலைப்பயணம் அந்த மகிழச்சியுடன் லண்டன் கிளம்புகிறாள். திரும்பி வரும்போது ஒரு அதிர்ச்சியை சந்திக்கவிருக்கிறாள்

லண்டனில் பெரும்புகழ் பெற்று தமிழகம் வரும் திருச்சிற்றம்பலம் இங்கே பெரிய அதிர்ச்சியை சந்திக்கிறான். அடுத்து என்ன செய்வான் என நம்மைப்போல அவனுக்குமே தெரியாது

யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது .அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது என முடிகிறது நாவல்


 நள் இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து வீடு திரும்பும்போது பகலில் பாரத்த நம் வீதிகள் அந்த இரவில் நமக்கே அந்நியமாக புதிதாக தோன்றும்

  அதுபோல இந்த கதை பாத்திரங்கள் தமக்குள் இருக்கும் ரகசிய வெளியைப் பார்த்து , இதுதான் நானா என திகைத்துப்போகின்றனர்

நறுமணம் மூலம் இறைவனுடன் உரையாடுதல் என்ற சுபி மற்றும் இந்திய தொன்மங்களை சற்றே மாற்றி நறுமணம் மூலம் அறியமுடியாமையுடன் உரையாடல் என மாற்றிப்போட்டு இருக்கிறார்

 உனக்குள் இருக்கும் கடவுளை கண்டுபிடி என்பதைவிட உனக்குள் இருப்பது கடவுளாக இருக்கலாம் சாத்தானாக இருக்கலாம் எளிய மனிதனாக இருக்கலாம்.  அதைக்கண்டுபிடிப்பதுதான் முக்கியம்.

இதை படித்து முடித்ததும்  நாம் என நினைத்துக் கொண்டிருக்கும் நாம் உண்மையில் யார்.  நமக்கு தெரியாமல் நமக்குள் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்ற யோசனை வருவதை தவிர்க்க முடியாது


  யாமம் நாவல் அற்புதமான அனுபவம்.

தேசாந்திரி பதிப்பக வெளியீடு

கண்டிப்பாக படியுங்கள்
   




   



 

 



































Wednesday, June 10, 2020

எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.. ஒரு பார்வை


எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பானசாதனைகளுள் ஒன்று

ஆனால் ஒரு முரண்நகைச்சுவை இதில் இருக்கிறது.

இந்த நாவலை படித்த சிலர் இதைப் புகழ்வதாக நினைத்து , இந்த நாவலைப்பற்றி இப்படி சுருங்கச்சொல்வாதுண்டு

"வேம்பலை என்ற கிராமத்தின் மீது படிந்திருக்கும் துயர் எனும் இருளையும் அவ்வூர் மக்களின் வேதனைமிகு வாழ்வையும்  சொல்லும் நாவல்தான் நெடுங்குருதி"

 இதைக் கேட்கும் புதிய வாசகன் ஒருவன் இதை ஒரு புரட்சிகர நாவலாகவோ , சமூக நாவலாகவோ , மெலோடிலாமா வகை எழுத்தாகவோ நினைத்து விடக் கூடும்

   உண்மையில் இந்த நாவல் இதுபோன்ற குறுகிய வரையறைகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டு மொத்த மானுடத்தை நோக்கி உரையாடும் நாவலாகும்

அதே நேரத்தில் கதை நடக்கும் பூமியில் தன் பாதங்களை ஆழமாக ஊன்றி இருக்கிறது நெடுங்குருதி..

தனது பூமியின் துயர்களை , வலிகளை , சந்தோஷத்தை முழுமையாக உணர்ந்து , உலக இலக்கியங்களில் தேர்ந்த ஞானம் கொண்ட ஒருவரால்தான் இப்படி ஒன்றை படைக்க முடியும்

இன்று எழுதும் பலருக்கு பெரிதாக தாம் வாழும் நிலம் குறித்த பரிச்சயம் இருக்காது. படித்ததை வைத்து எழுதுவார்கள். அந்த எழுத்து வெகு அன்னியமாக நமக்கு தோன்றும்

சிலருக்கு அனுபவம் இருக்கிறது. இலக்கியம் குறித்த புரிதல் இருக்காது. இவர்கள் எழுத்தைப் படிக்கையில் ஆவணப்படம் பாரப்பது போல இருக்கும்.



ரஷ்ய பனியை அனுபவித்தராத நாம் எப்படி தஸ்தயேவ்ஸ்கி எழுத்தில் ரஷ்ய சூழலையும் அதன் உணர்வுகளையும் உணர்கிறோமோ அதுபோல வெயிலையே அறிந்திராத ஒரு வசதியான நகரில் வாழும் மனிதனுடனும் உரையாடதக்க பொதுவான மானுட மொழிதான் நாவலின் சிறப்பு

கதை நடக்கும் காலகட்டம் குறித்தோ நில எல்லைகள் குறித்தோ பெரிதாக அக்கறைகாட்டாமல் மனிதனுள் உள்ளே பயணிக்கிறது எஸ். ராவின் எழுத்து

நாகு , அவன் பெற்றோர் , சகோதரிகள் , தாத்தா , மல்லிகா , ரத்னாவதி , ஆதிலட்சுமி, சென்னம்மா , ஜெயராணி , பவுல் , கிருபை , பாதிரி ,சமண துறவிகள் , சிங்கி , குருவன் , தெய்வானை , பக்கீர் , அவனது மனைவி , கிராம ஆசிரியர் , வசந்தா, சேது , சங்கு, திருமால் , லயோனல் , வீரம்மாள் என ஒவ்வொருவர் பாத்திரமும் அவர்கள் சார்ந்த சம்பவங்களும் அற்புதமாக அழகான சிறுகதைகளாக மிளிர்கின்றன. வெயிலும் ஒரு பிரதான பாத்திரமாக வருகிறது. வெயில் மட்டுமன்று. இருளும்கூட

500 பக்கங்களில் 100 அத்தியாயங்களில் பிரமாண்டமாக விரிந்திருக்கும் நாவல் ஒற்றை மையத்தை , ஒற்றை சரடை , ஒற்றை கருத்தை கொண்ட நாவல் அல்ல. படிக்கும் ஒவ்வொருவரும் தனக்கான கதையை உருவாக்க இடம் தரும் எழுத்து இது

உதாரணமாக , வேம்பலையின் நிழல் நகரமாக ஒரு ஊர் வருகிறது. வேம்மலையில் மறைந்தவை அங்கு வாழ்கின்றன
சென்னையில் அருண் ஹோட்டல் , ஆனந்த் தியேட்டர் போன்றவை மறைந்து விட்டாலும் இன்றும் அருண் ஹோட்டலுக்கு பஸ்சில் டிக்கெட்  கேட்டு வாங்க முடிகிறதல்லவா.  மறைந்தும் மறையாமல் வாழ்கிற ஊரை காண முடிபவர்களால் அந்த சித்திரத்தை தமக்குள் பொருத்திப் பார்க்க முடியுமக
எல்லா பாத்திரங்களும் முக்கியமனவை. அனைத்துக்கும் தனியாக கதை இருக்கிறது
   
உதாரணமாக கதையில் நாகுவின் அப்பா கேரக்டர்

பொறுப்பற்ற தன்னலமிக்க பாத்திரமாக அறிமுகம் ஆகிறது. பக்கீர் என்ற தன் நண்பனுக்கு துரோகம் செய்து அவன் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகிறார்.  பொறுப்பில்லாமல் தன் குடும்பத்தை பிரிந்து செல்கிறார்

ஆனால் அந்த பாத்திரம் பரிணாம வளர்ச்சி அடைந்து , அவர் மருமகள் அவர் தன் மேல் பெத்த அப்பனாக பாசம் காட்டி பார்த்துக் கொள்கிறார் என சொல்லத்தக்க அளவு உயர்கிறார்
இந்த மாற்றம் கவித்துவமாக ஒரு இடத்தில் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

 ஒரு மழைக்காலத்தில் தன் மகளின் சமாதிமீது ஊரந்து செல்லும் மண்புழுவை பத்திரமாக எடுத்து வந்து தன் வீட்டின் அருகே விடுகிறார். இனிமேல் இங்கே இருந்துக்கோ தாயி என நெகிழ்வாக சொல்கிறார். அழகான தருணம்

அதேபோல ரத்னாவதி. பாலியல் தொழில் செய்யும் பெண். கலகலப்பான இனிய பெண். அவளுக்குள் காதல் ஏற்படும் மந்திர கணம்.  குழந்தை பிறப்பு. காதலித்தவனின் இறப்பை உணர்தல். குழந்தையால் வேறு ஒரு பரிணாமத்தை அடைதல்.  தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியம்.  மறுமணம்.அத்தையின் பிரிவு. கணவன் இறப்பு. அதன்பின் தன் இனிய சுபாவங்களை இழந்து கசப்பையேதன்  வாழ்வாக கொள்ளுதல்.  அந்த வாழக்கையில் தொடும் உச்சம். அதில் காணும் வீழ்ச்சி . என இவளை வைத்தே தனியாக நாவல் எழுதலாம்.  அந்த சூழலிலும் கழிவிரக்கம் கொண்டு கதறாமல் வாழ்வை நெஞ்சுரத்துடன் எதிர் கொள்கிறாள். கடைசியில் மரணத்தைக்கூட ஒரு சந்தோஷமான சூழலில் மகிழ்ச்சியுடன் தழுவுகிறாள்.
மகனை ஆளாக்கி விட்டபின் , அவனைப்பற்றி சற்றும் நினைப்பதும் இல்லை. எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.

பக்கீரின் மனைவி அந்த ஊரின் வந்தேறி. அநாதரவாக வந்தவள். காலப்போக்கில் அந்த ஊரில் இரண்டறக்கலக்கிறாள். ஊருக்கு மணீக்கூண்டு அமைத்து தருகிறாள்.



   வெயில் கொளுத்தும் பூமி.  அங்குள்ள உயிர்கள் வீரியமானவை.  அங்குள்ள பாம்புகள் கடும் விஷம் கொண்டவை.அங்குள்ள தாவரங்கள் குறைந்தபட்ச தண்ணீரை வைத்து உயிர் வாழும் போராட்டத்தில் இருப்பவை. தமது வேர்கள் மூலம் எல்லாதிசைகளிலும் அலைபாயந்து உயிர் வாழ துடிப்பவை

இதுதான் இக்கதை பாத்திரங்களின் இயல்பாகவும் இருக்கிறது

 வேட்டையாடப்படும் வேம்பர்களுக்கு வேப்ப மரம் அடைக்கலம் அளிக்கிறது , கடும் உக்கிரத்துடன் அமைதியாக நின்றிருக்கும் ஊமை மரம் போன்றவை அழகிய படிமங்கள்.
இயற்கை வேம்பர்களை உருவாக்கி , காத்து , அழிக்கவும் செய்கிறது. ஆரம்பத்தில் வரும் எறும்புகள் முதல் கடைசியில் வரும் கொக்குகள் வரை இதை சொல்கின்றன

இதை வேம்பர்களுக்கு மட்டுமல்ல .  எந்த தேச மனிதனுக்கும் பொருத்தி பார்க்க முடியும்.

, நாவலில் இரண்டு இடங்களில் அணையாத நெருப்பு எனற காட்சி வருகிறது.  வெற்றிலைச் சத்திரத்தில் இருக்கும் கண்ணகி மூட்டிய நெருப்பு. மகான் ஒருவரின் சமாதியில் இருக்கும் அணையா தீபம்


இதில் வெற்றிலை சத்திர நெருப்பை , நாகுவும் காண்கிறான். அவனது மகன் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கிறான்.  ஆனால் இருவருக்கும் அது அளிக்கும் புரிதல் என்பது வெவ்வேறு

  நாகுவின் மகள் வசந்தா பார்த்திருந்தால் அவளுக்கு நாகு அடைந்த உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்ககூடும்.  வேம்பலையின் வீரிய ரத்தம் அவளுள்தான் ஓடுகிறது என்பதை நாகுவின் பறவைக்காடசி அவளுக்கும் கிடைத்தது என்பதில் உணர்கிறோம்

 அவளுக்குதான் வேம்பலையின் அழைப்பு கிடைக்கிறது.  வேம்பலை மீதான ஈர்ப்பு காரணமாகவே அவளுக்கு ஜெயக்கொடி என்ற சகமாணவி மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த நட்பு மரணத்தின் விளிம்புவரை எடுத்துச் செல்கிறது.

ஆக வேம்பலையின் அழைப்பே அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறது. வலி வேதனை காதல் காமம் என அனைத்திலுமே உச்சம் தொடுவதுதான் வேம்பலை

  இந்த பாதிப்புகள் எதையும் சந்திக்காத,ஒரே பாத்திரம் அன்னலட்சுமி மட்டுமே. நடக்க முடியாதவள். பகல் கனவுகளில் வாழ்பவள். பிறர் விஷயங்களை தெரிந்து கொள்வதில் மகிழ்பவள்..  கடைசி வரை பரிணாம மாற்றம் அடையாமல் நிம்மதியாக இருக்கும் பாத்திரம் என்பது தற்கால மனிதனை சுட்டுகிறதோ என தோன்றுகிறது

முகநூல் , ட்விட்டர் , அரசியல் அக்கப்போர்கள் என தங்களுக்கென்று தனி உலகம் அமைத்துக்கொண்டு , வாழ்வின் வெம்மையை சற்றும் அனுபவிக்காமல் வாழ்ந்து மறையும் ஒரு சவலை சமூகம் உருவாகி வரும் சூழலில் அன்னலட்சுமி கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது

   நாவலின் பாத்திரங்கள் மரணஙகளை வலிகளை இழப்புகளை சந்தித்தாலும்.அவர்களுக்குள் அணையா விளக்காக இருப்பது அன்புதான்

   திருமாலிடன் லயோனல் சார் சொல்கிறார். உலகில் அன்பைவிட உயர்ந்த ஒன்று உண்டு . அதற்காக காத்திருக்கிறோம்

படித்தவர்களுக்கும் , செல்வந்தர்களுக்கும் , நகரவாசிகளுக்கும் எட்டாக்கனியான அன்பு இந்த எளிய மக்களிடம் அபரிமிதமாக கொட்டிக்கிடக்கிறது

  தன் கணவனை அழித்த நாகு குடும்பத்தின்மீது பாசம் பொழிரும் பக்கீர்,மனைவி , அவளே ஒரு அபலை என்றாலும் நாகுவின் சகோதரி திருமணத்தை நடத்துவதில் அவள் காட்டும் உறுதி ,  மரண விளிம்பில் இருக்கும் சிங்கியை அரவணைத்து தன் அன்பால் அவனை உருவாக்கும் தெய்வானை , பிறகு கொடூரமாக மாறி விட்ட அவளை பிரிந்தாலும் அவள் இறப்புக்காக கதறும் சிங்கி கிழவன் , தன் மனைவி மக்களைக்கூட கொடூரமாக நடத்தும் கிருபைக்கு தன் தாய் மீது கசியும் பாசம் , துரோகியாக அறிமுகமாகும் நாகுவின் அப்பா செல்லையாவுக்கு தரும் வாழ்வு , அதற்கு செல்லையாக காட்டும் நன்றி என இந்த நாவலை வாதையின் நாவலாக அல்லாமல் அன்பின் நாவலாகவும் வாசிக்கலாம்.

  ஒவ்வொரு ஊராக சென்று அங்கு தூக்கம் எப்படி வருகிறது என டெஸ்ட் செய்யும் விசித்திரமான பாத்திரம். வேம்பலையில் தூங்கி பார்த்துவிட்டு , ஊரா இது? இரவு தூக்கம் வரவில்லை. இரவுதான் புத்துணர்வாக உற்சாகமாக இருக்கிறது. இது திருட்டுப்பசங்களுக்குத்தான் செட் ஆகும் என கோபமாக சொல்லி செல்கிறான். அதைக்கேட்டு ஊர்க்காரர்கள் நினைத்து நினைத்து சிரிக்கிறாரகள். காரணம், அது அவர்களுக்கே தெரிந்த உண்மைதான்

பேயுடன் ஆடுபுலி ஆட்டம் , தானிய குலுக்கைக்குள் அடக்கமாகும் சென்னம்மா , மரணமற்ற நிலை அடைவது , தீராதாகம் , ஆட்டு நாக்கு , மழை பெய்யும் கருவி என ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸ்யம்.

   தானிய குலுக்கைக்குள் போடும்,முன் கடைசியாக வெளி உலகை பார்க்குமபொருட்டு சென்னம்மாவை வெளியே கொண்டு வந்து வெளி,உலகை காண வைக்கிறார்கள்,  வேம்பலையை விட்டு நிரந்தரமாக வெளியேற முடிவு செய்த மல்லிகா கடைசியாக ஒரு முறை தன் தெருவை பார்த்துக்கொள்கிறாள் என இரு காட்சிகள் வருகின்றன . அதேபோல கிணற்றில் இருந்து நிரந்தரமாக வெளியேறவுள்ள ஆமை கடைசியாக ஒருமுறை தலைநீட்டி கிணற்றை பாரத்துக்கொள்வதாக ஒரு காட்சி. செம

விடைபெறும் வசந்தகாலம்
பறவைகள் கண்களில் கண்ணீர்
மீன்கள் கண்களிலும்;
என்ற ஹைக்கூநினைவு வந்தது

  ரத்னாவதி ஓர் அபலை. ஆனால் அந்த சூழலிலும் தனக்காக எதுவும் கேட்காமல் தன் தோழி குழந்தைக்கு கோயிலில் முடி இறக்க நாகு ஏற்பாடுகள் செய்ய கோருகிறாள் மறுபேச்சின்றி நாகுவும் ஒப்புக்கொண்டு ஒரு தாய்மாமன் ஸ்தானத்தில் குழந்தைக்கு அதை செய்கிறான்.அந்த தாய் கண்கலங்கி கைகூப்புகிறாள்

இப்படி பல குறுங்கதைகளை குறுங்கவிதைகளை நாவல் முழுக்க பார்க்கிறோம்

   அன்பும்  கொடும் சூழலிலும் போராடும் வீரமும் என்றென்றும் அழியாத நெடுங்குருதியாக வாழையடிவாழையாக வேம்பலை மக்களிடம் நீடிப்பதை நாவல் காட்டுகிறது
    தேசாந்திரி பதிப்பக வெளியீடு. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்

    பலமுறை படிப்பது உறுதி

நான் அடிக்கோடிட்டு ரசித்த சில வரிகள்

............

கத்தியை யாரோ சாணை பிடிப்பதுபோல தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது

  யாரோ முனகுவதுபோல மண் புரண்டு சப்தமிட்டது. புதையுண்டு கிடந்த மூதாதையர் எலும்புகள் வெக்கை தாங்காமல் திமிறிக் கொண்டு வெடித்தன

பள்ளிக்கு வெளியே தொங்கிய தண்டவாளத்தில் மணியை எடுத்து அடித்தாள். அடங்கியிருந்த இருள் சப்தம் கேட்டு கலைந்து திரும்பியது


சுனையில் நீர் சுரப்பதுபோல வேம்பு காற்று கசிந்து கொண்டிருந்தது

இருட்டு தண்ணீரைப்போல சரசரவென ஊரந்து போய்க்கொண்டு இருந்தது

மழைக்குப்பின் ஊரின் சுபாவம் மாறி இருந்தது. பேச்சில்கூட குளிர்மையேறிருந்தது

இருள் வெளிச்சத்தை தன் விரல்களால் பிடித்து அணைத்துவிட துடிப்பதைப்போல நெருங்கிக் கொண்டிருந்தது





 









Sunday, June 7, 2020

ரமணி சந்திரனும் இணைய மொண்ணைகளும்

திண்ணை இதழில் வெளிவந்த கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது
..........

முகநூல் எழுத்து என்பது அழகான கனவு.  அந்த கனவு கலையும் தருணம் அதைவிட அழகு.

   ஒரு முகநூல் எழுத்தாளர். அவருக்கு ஏராளமான நண்பர்கள். ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லைக்குகள் குவியும் . பலர் அதை பகிர்வார்கள்.  பாராட்டி பலர் பின்னூட்டம் போடுவார்கள்  . ஒருமுறை தனது,நூல் வெளியீட்டு விழாவுக்கு தன் ரசிகர்களை அழைத்தார். சூப்பர் தல,  சுற்றம்சூழ வந்து விடுகிறோம் என பலர் பின்னூட்டம் போட்டார்கள்.  லைக்குகள் குவிந்தன

கடைசியில் பார்த்தால் விழாவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர்தான். இருவரும் அவருக்கு நேரடி நண்பர்கள். நல்லவேளையாக சிறப்பு பேச்சாளருக்கென வந்த கூட்டத்தால் விழா சமாளித்துக கொண்டது

கூட்டம் கூட்டும் திறன் என்பது இலக்கிய தகுதிக்கான அளவுகோல் என்பதல்ல நம் வாதம். தாம் வாழ்ந்தகாலத்தில் அதிகம் அறியப்படாமல் வாழ்ந்து மறைந்த மேதைகள் பலர் உண்டு. அது வேறு விஷயம்

முகநூலில் கிடைக்கும் வரவேற்பு வேறு,யதார்த்த உலகம் வேறு என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டியது

தமிழ்,நாட்டில் வாசிப்பு பழக்கம் குறைவு என நினைக்கிறோம். எம் எஸ் உதயமூர்த்தியின் நூல்கள் எண்பது பதிப்புகளுக்குமேல் கண்டுள்ளன.  திருட்டு pdfகளால் அவற்றின் விற்பனை பாதிக்கப்படுவதில்லை. பொன்னியின் செல்வன் , சுஜாதாவின் நூல்கள் , பாலகுமாரன் நூல்கள் போன்றவை எப்போதுமே பெஸ்ட் செல்லர்கள்தான்

ஆனால் முகநூல் எழுத்தாளர்கள் இவர்களை கண்டுகொள்வதில்லை. அவர்களது விமர்சனத்துக்கு அவ்வப்போது ஆளாகுபவர் இன்னொரு பெஸ்ட் செல்லரான ரமணி சந்திரன்தான்

இந்த விமர்சனத்தால் அவர் விற்பனை பாதிக்கப்படப்போவதில்லை. அவரோ அவரது வாசகர்களோ இத்தகைய இணைய விவாதங்களில் ஆர்வமற்றவர்கள்.

எனவே இந்த முகநூல் எழுத்தாளர்கள் உரையாடுவது ரமணி சந்திரனுடன் அன்று. இவர்கள் உரையாடுவது தங்கள் ஈகாவை திருப்தி செய்து கொள்ளவும், சக முகநூல்வாசிகளை மகிழ்விக்கவும்தான்

இதில் எப்படி இவர்கள் ஈகோ திருப்தி அடைகிறது ?

முகநூல் எழுத்தாளர்கள் பலருக்கு ஒரு தேவையற்ற காம்ப்ளக்ஸ் இருக்கிறது..

இவர்கள் பெரும்பாலும் எழுத்து வாய்ப்பை பெறுவது முகநூல் தொடர்புகளால்தான்.  இவர்களது பதிப்பாளர்கள் , வாசகர்கள் , விமர்சகர்கள் என அனைவருமே முகநூல் பயனாளிகள்தான். என்ன அரசியல் நிலைப்பாடு எடுத்தால் எந்த இதழ்களுக்கு எந்த பதிப்பகங்களுக்கு பிடிக்கும் என்ற அறிவுதான் இதில் முதலீடு.

இப்படி இருப்பதோ தவறோ என்ற காம்ப்ளகஸ் காரணமாக பிரபலஸ்தர்களை அவ்வப்போது த சீண்டுவதன் மூலம் தாங்கள் அவ்வகை எழுத்துக்கு எதிர்தரப்பினர் என்ற பிராண்ட் இமேஜ் பெற முயல்கின்றனர்

இலக்கியத்தில் பிராண்ட் இமேஜ் அர்த்தமற்றது. எழுத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் இங்கு நிற்க முடியும். ஒரு காலத்தில் இன்னார் பெயரைச் சொன்னாலே விற்பனை எகிறும் என்ற நிலையில் இருந்த பலரின் நூல்கள் இலவசமாக கொடுத்தால்கூட படிக்க ஆள் இல்லாத நிலையைப் பார்க்கிறோம்

  முகநூல் எழுத்து என்பதற்கான தாழ்வுணர்ச்சி தேவையற்றது

அந்த காலத்தில் குஜிலி இலக்கியம் என அறியப்படும் மலிவு விலை நூல்கள் ஒரு சிறிய பரப்பில் இயங்கி வந்தன. மெல்லிய தாளில் , மலிவான அச்சில் , குறைவான விலையில் அச்சிடப்பட்டன.  அந்தந்த வட்டார செய்திகள் , அவர்களுக்கே உரிய கிசுகிசுக்கள் , அவரகளது வேட்கைகள் என பிரத்யேக பிரதியாக அவை திகழ்ந்தன. பக்கத்து ஊர்க்காரர் படித்தால் அவருக்கு அது சுவாரஸ்யமாக இருக்காது. இன்னும் சொல்லப்போனால் ஒரே ஊர்காரர் என்றாலும் பொருளாதாரத்தில் மேம்பட்டவருக்கு அது சரிப்படாது

அப்படி குறுகிய , தேர்ந்தெடுக்கபட்ட வாசகர்களுக்காக உருவான குஜிலி இலக்கியம் இன்று பொதுவான வாசகனால் மீள்வாசிப்பு செய்யப்படுகிறது

இப்படிப்பட்ட niche எழுத்துகளுக்கான தேவை என்றுமே இருந்து வருகிறது

ரமணி சந்திரன் எழுத்துகள் அவ்வகையில் வெகு முக்கியமானவை. குறிப்பிட்ட மனநிலையில் குறிப்பிட்ட மதிப்பீடுகளில் குறிப்பிட்ட சூழலில் இருக்கும் பெண்களுக்காக அவர் எழுதுகிறார்.  அவரது வாசகர்வாகள் பலர் நிறுவன மேலாளர்களாக , அவரவர் துறை நிபுணர்களாக , இல்லத்தரசிகளாக இருக்கிறார்கள். கிடைக்கும் சற்று ஓய்வு நேரத்தில் இளைப்பாறுதலை பெறுவதற்காக ரமணிசந்திரனை வாசிக்கிறார்கள். அதற்குமேல் தேடிச் சென்று வாசிக்க தேவையான நேரம் அவர்களுக்கு இருப்பதில்லை.

இவர்களை விட சற்றே அதிக நேரம் கொண்ட பெண்களின் பரப்பும் அதிகமே. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பாலகுமாரன் இவர்களது வாசிப்புத் தேவையை பூர்த்தி செய்தார்

உண்மையில் பெண்களில் இன்னும் பல உட்பிரிவுகள் உண்டு. அவர்களுக்கான எழுத்துகளெல்லாம் வரவே இல்லை


   எல்லோருக்கும் பொதுவான எழுத்து என்ற கருதுகோள் தவறானது.
குழந்தைகளுக்கு , பதின்பருவத்தினருக்கு ,ஆண்களுக்கு , பெண்களுக்கு , பணக்காரர்களுக்கு , ஏழைகளுக்கு என அவரவரக்கு ஏற்ற எழுத்துகளுக்கான தேவை என்றுமே இருக்கிறது. சீனாவில் பெண்களுக்கு என பிரத்யேகமான ரகசிய மொழியே இருக்கிறது.

ஆனால் பெண்களுக்கு என ரமணிசந்திரன் வகை எழுத்துகள் , இணைய பயனாளர்களுக்கென முகநூல் எழுத்துகள் ஆகிய சில மட்டுமே பிரபலமாக இருக்கின்றன.
குழந்தை இலக்கியம் , சிறுவர் இலக்கியம் , பதின்பருவ இலக்கியம் , அறிவியல் இலக்கியம்என பல பிரிவுகளில் வெற்றிடம் இருக்கிறது.

இதுபோன்ற சிறுபிரிவு எழுத்துகள் தம்மளவில் முழுமையானவை என்றாலும் பொதுவான மானுடத்தைப் பேசும் உலக இலக்கியத்தையும் இவர்களில் ஒரு சிறு தரப்பினர் நாடி வருவது நல்லது. 

ரமணி சந்திரனின் வாசகர்களில் சிலராவது அசோகமித்திரன் , லாசரா , சுரா , புதுமைப்பித்தன் என முயன்று பார்க்க வேண்டும்

முகநூல் எழுத்தாளர்களில் சிலராவது தமது தொடர்புகளை பயன்படுத்தாமல் , தமது எழுத்தின் பலத்தால் மட்டுமே நிற்க முடியுமா என சுய சவாலை நிர்ணயித்துக் கொண்டு மோதிப் பார்க்க வேண்டும்

இப்படி நிகழாவிட்டாலும் பரவாயில்லை. முகநூல் எழுத்து , ரமணிசந்திரன் எழுத்து என ஆயிரம் பூக்கள் மலரட்டும். தகுதியானவை எஞ்சட்டும்

Wednesday, June 3, 2020

அறிஞர்களை கொண்டாட காரணம் தேவையா ? திண்ணை விவாதம்

திண்ணை இதழில் ஜகந்நாதராஜா குறித்து வெளியான என் கட்டுரை மீது ஓர் விவாதம்..


  • BSV 
    இக்கட்டுரையைக் கண்டவுடன் ”என்ன ஜகன்னாத ராஜாவுக்கு என்ன ஆச்சு?” என்ற பயம்தான் வந்தது. திடீரென ஒருவரைப்பற்றி எழுத ஏதாவது காரணம் வேண்டும். போனவாரம் நாவலாசிரியர் வெங்கடராம் பற்றிய கட்டுரை இங்கு வந்தது. அவரின் நூற்றாண்டு நினைவு காரணம். அவருக்கும் தாய்மொழி தமிழில்லை.
    ஜகன்னாத ராஜா யார்? எங்கு பிறந்தார்? வளர்ந்தார்? அவருக்குத் தாய்மொழி தெலுங்கு என்று சொல்லிவிட்டால் போதுமா?
    ஒருவரைப் புகழ இன்னொருவரை இகழ வேண்டிய தேவையில்லை. பலவிடங்களில் தமிழ் ஆர்வலர்களை இகழ்கிறார் கட்டுரையில்.தமிழ் பிழைப்புவாதிகள் ஒருபக்கம் இருந்தாலும் தமிழை விரும்பி அதைப் பரப்ப ஆசைப்பட் உண்டு. ஆசைப்பட்ட தமிழ் ஆர்வலர்களும் தமிழ்க்காதலர்களும் எப்போதும் உண்டு. அவர்களுள் ஒருவர்தான் பாரதியார். தமிழ் பிழைப்புவாதியா அவர்?
    தமிழ் என் மூச்சு அதை பிறரிடமும் விடவேண்டுமென்றார் பாரதியார். எப்படி? இப்படி…
    ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்,

    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும் வகை செய்தல் வேண்டும்.

    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

    திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.” என்று ஓங்கியுரைத்தார் பாரதியார்.
    தமிழைப் பிறரிடம் கொண்டு செல்ல மாட்டேன் என்றால் (தமிழ் என் மூச்சு; அதைப் பிறர் மேல் விட மாட்டேன்!” என்றாலதுதான் பொருள்) தெருவெல்லாம் தமிழ் முழக்கம் எப்படி செய்ய முடியும்? தேமதுரத் தமிழோசை உலமெல்லாம் எப்படி கேட்க முடியும்? வெளினாட்டார் தமிழே தெரியாமல் எப்படி வணக்கம் செய்வார்கள்?

  • BSV 
    ஜகன்னாத ராஜா என்பவர் ஒருவரே. ஆனால் ஜகன்னாத ராஜாக்கள் என்ற பன்மையில் தலைப்பு. ராஜாக்கள் என்பவர்கள் தெலுங்கு இன மக்கள். கரிசல் காட்டு பகுதியில் வந்து குடியேறியவர்கள். இவரைத் தவிர நான் வேறு எந்த தமிழறிஞர்களும் ராஜாக்களிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை. எப்படி பன்மை வரும்? அதே சமயம், தமிழ்னாட்டு முதலமைச்சாரகவே அந்த இனத்திலிருந்து வந்தவர்தான் குமாரசாமி ராஜா. அவர் தமிழறிஞர் இல்லை.
    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழறிஞர்கள் ஏராளம். மாபெரும் தமிழறிஞரான பரிதிமாற்கலைஞரே ஒரு தெலுங்கு பிராமணர். தமிழ்னாட்டில் பல தலைமுறைகளாக வசிப்போர் தமிழில் ஆர்வலராகவும் அறிஞர்களாகவும் இருப்பதில் வியப்பில்லை.
    இக்கட்டுரையில் பிற்பகுதியில் பட்டியலிடப்பட்ட நூல்களில் எண்ணம் 10 – தமிழக – ஆந்திர வைணவத் தொடர்புகள்- என்ற நூல் என்னிடம் உள்ளது. எத்தனை முறை வாசித்தேன் என்ற கணக்கே இல்லை. ராஜா என்ற பெயரைப்பார்த்துதான் நான் வாங்கினேன். காரணம்; தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு அம்மொழியில் புலமை பெற்ற ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட நூலை எழுத முடியும். தெலுங்கு-தமிழ் வைணவத்தொடர்பை, சங்ககாலத்தில் தொடங்கி ஆழ்வார் பாசுரங்கள் வழியாக பெரும்புலமையோடு விளக்குகிறார். ஜகன்னாத ராஜா தஞ்சைத் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்.

  • பிச்சைக்காரன் 
    ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பதற்கு மகிழ்ச்சி.
    ஒரு வார இதழின் அட்டையில் ஒரு அரசியல் தலைவர் , நடிகர் , கவர்ச்சி நடிகை இடம்பெற்றால் இயல்பாக எடுத்துக் கொள்வோம். ஓர் இலக்கியவாதி படத்தை பார்த்தால் அய்யய்யோ என்ன ஆச்சு இவருக்கு பதறுவோம். அல்லது”விருது ஏதேனும் வாங்கி இருக்கிறாரோ என நினைப்போம். ஒரு நடிகனை , கட்சிக்காரனை தினம்தோறும் பேசலாம். ஆனால் இலக்கியவாதியை பேச, அவன் சாக”வேண்டும் அவ்லது நூற்றாண்டு விழா, விருது என்பது போல ஏதேனும்் நிகழ வேண்டும். இதுதான் நம் இயல்பு. உவேசா வையே பிறந்த நாளிலோ , நினைவு தினத்திலோதானே பேசுகிறோம். அரசியலையும் சினிமாவையும்தானே கொண்டாடுகிறோம். சான்றோர்களையும் அப்படி நேரம்காலம் பாரக்காது கொண்டாட வேண்டும் என்பதை நீண்ட காலமாக கடைபிடிக்கும் திண்ணை இதழ் பிரத்யேக காரணங்கள் ஏதுமின்றியே ஜகந்நாதராஜா கட்டுரையை பிரதான கட்டுரையாக வெளியிட்டிருப்பது ஆச்சர்யம் இல்லை. பல இலக்கிய இதழ்களிலேயே தற்போது அரசியல்தலைவர்கள்தான் வியந்தோதப்படுகின்றனர். பாரதியாரும் பன்மொழி வித்தகர்தான். பிறநாட்டு கலைச்செல்வங்களை கொண்டு வந்து சேருங்கள். திறமை எங்கிருந்தாலும் மதியுங்கள் என்றார். தமிழை உலகமெங்கும் பரப்புவதற்கு தேவையான பிறமொழி ஞானம் அவரிடம் இருந்தது. மொழி காழப்பு அவரிடம் இல்லை. ராஜாக்கள் சமூகத்தின் பங்களிப்பு,என்று விவரித்து இதை சாதீய விவாதமாக மாற்றலாகாது. அதை தனியாக பேச வேண்டும். நமக்கு தேவை காந்திகள் கிடைப்பதோ கோட்சேக்கள் என பெயர்ச்சொல்லில் பன்மையை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளதுதான்

  • பிச்சைக்காரன் 
    “ஜகன்னாத ராஜா யார்? எங்கு பிறந்தார்? வளர்ந்தார்? அவருக்குத் தாய்மொழி தெலுங்கு என்று சொல்லிவிட்டால் போதுமா?”
    கண்டிப்பாக போதாது.. இது ஒரு அறிமுக கட்டுரை மட்டுமே.. அவர் அமைத்த நூலகம் , இலக்கிய மன்றம் , அவரது இலக்கிய குரு , பிறப்பும் வாழ்வும் என ஏராளம் பேசலாம். பேசவேண்டும் . பேசுவோம்.
    அதுமட்டுமின்றி , மேலும் பல அறிஞர்களை சான்றோர்களை , அவர்கள் சாவதற்காக காத்திராமல் , நூற்றாண்டு விழா , பிறந்த நாள் என காத்திராமல் , அவ்வப்போது கொண்டாடுவோம். வணிக சினிமாக்களையும், கட்சிக்காரர்களையும் கொண்டாட பலர் உள்ளனர். நாமாவது மேதைகளை , நல்லோர்களை , கலையை , தமிழை கொண்டாடுவோம்

Monday, June 1, 2020

மேதைகளின் மோதல் .. சிவாஜி , டிஎம்எஸ் , சீர்காழி, அகிலன்


அந்த காலத்தில் சிவாஜி , எம்ஜிஆருக்கு டிஎம் எஸ்தான் பாடுவார்
இருவருக்கும் ஏற்றமாதிரி வேறுபட்ட பாணிகளில் பாடுவார்

இந்த சூழலில் குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்றொரு பாடல்.. வழக்கம்போல டிஎம் எஸ் சை அணுகினர்

இசை அமைப்பாளர் சொன்ன மெட்டை கேட்ட டிஎம்ஸ் இது எனக்கு செட் ஆகாது .உணர்வுடன் , baவத்துடன் பாடுவது என் பாணி. இந்த பாடல் ராகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல். பிருகாக்கள் அழகாக இடம் பெற்றுள்ளன. இதைப்பாட நான் தகுதியானவன் அல்லன்.  சீர்காழி கோவிந்தராஜன் இது போன்ற பிருகாக்களை துல்லியமாக தன் குரலில் கொண்டு வருவபவர். அவரைப் அணுகுங்கள் என்றார்

அதன்படி சீர்காழியை பாட வைத்தனர்

பாடலை கேட்ட சிவாஜி , பாடல் அற்புதம். ஆனால் நான் பாடுவது போல இல்லை. உணர்வு இல்லை.  டி எம் எஸ் ஸையேபாட வையுங்கள் பாட வையுங்கள் என்றார்
அதன்பின் பாடலின் ராக அம்சங்களை நீர்த்துப்போகச்செய்து ஜனரஞ்சகப்படுத்தி டிஎம்எஸ்ஸை பாட வைத்தனர்.  சீர்காழி பாடிய வெர்ஷனை தன்னால் பாடியிருக்க முடியாது என டிஎம்எஸ் பல மேடைகளில் பெருந்தன்மையாக தன்னை தாழ்த்திக் கொண்டு பேசியிருக்கிறார்.ஆனால் சீர்காழிக்கு சிவாஜி மேல் வருத்தம்தான்

பிறருக்கு விருந்து சாப்பாடு போடுங்கள் . வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் என் எச்சில் இலையில் பிறரை சப்பிட வைக்காதீர்கள் என அவரிடமே தன் கோபத்தை நேரடியாக காட்டினார்

ஆனாலும் சிவாஜி சீர்காழி மேல் கோபப்படவில்லை.
சிவாஜி படங்களில் பிற பாத்திரங்களுக்கோ , அசரீரியாகவோ அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன

இதுபோல இன்னொரு சம்பவம்

பாவை விளக்கு படத்தில் காவியமா நெஞ்சின் ஓவியமா என்ற பாடல் தாஜ்மகாலில் படமாக்கப்பட்டது.

கதாசிரியர் அகிலனுக்கு பிடிக்கவில்லை. இயக்குனர் காரணம் கேட்டார்.
சிவாஜி சில்க் ஜிப்பா அணிந்திருப்பது கதாபாத்திர இயல்பையோ உணர்வையோ பிரதிபலிக்கவில்லை. நான் எழுதியபடி கதர்ச்சட்டைதான் பொருத்தமாக இருக்கும் என்றார்

சிவாஜியிடம் இந்த பிரச்சனை சென்றது
அவர் அகிலனை தனியாக அழைத்துச் சென்று பேசினார்
கதையை நீங்கள் அழகாக படைத்து விட்டீர்கள். அந்த உணர்வை காட்சி வடிவால் எப்படி கொண்டுவருவது என இயக்குனர் , ஒளிப்பதிவாளர் என பலர் யோசிக்கிறார்கள். நானும் என் பங்கை ஆற்றுகிறேன். சில்க் ஜிப்பா காற்றில் அசைகையில் அது ஒரு ஃபீல் உருவாக்கும்.  நீங்கள் சித்தரித்த உணர்வு காட்சி வடிவில் வந்து விடும். அதை செயல்படுத்ததான் அனைவரும் உழைக்கிறோம் என்றார் சிவாஜி

இதைக்கேட்ட அகிலன் , கதாசிரியன் அன்ற எல்லையை தாண்டி நான் பேசி இருந்தால் வருந்துகிறேன். இது ஒரு கூட்டு முயற்சி என்பதை ஏற்கிறேன் என்றார்

அடடா..  இதற்கு ஏன் வருத்தம் ? நீங்கள் கோட்டும் ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சிதான். அதனால்தானே கதாசிரியரான உங்களை படப்பிடிப்புக்கு அழைத்து வந்திருக்கிறோம். உங்கள் கலுத்துகளை சொல்ல தயங்காதீர்கள். என சொன்னார் சிவாஜி.
இருவரும் கட்டிஅணைத்துக் கொண்டனர்
ஒரு அழகான நட்பு உருவாகி கடைசி வரை நீடித்தது

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா