Friday, December 26, 2014

மிஷ்கினின் பிசாசு படம் கல்கி கதையின் காப்பியா- கிளம்புகிறது சர்ச்சை

கதை காப்பி , திருட்டு என்பது இப்பொதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகி விட்டது...
கல்கியில் 2011ல் வந்த கதை இது..2013 ஆம் ஆண்டு அப்துல்காதரின் குதிரை என்கிற சிறுகதைத் தொகுப்பில் வந்தது.
நல்லவன் ஒருவன் இறந்து விட்டால் , அவன் பேய் மட்டும் எப்படி கெட்டதாக இருக்கும் என்ற கான்செப்ட்..

இதில் வரும் ஆண் கேரகடரை பெண்ணாக மாற்றி மிஷ்கின் படம் எடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது..

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
________________________________________________________________________

எஸ்.எம்.எஸ்
- இல.ஷைலபதி

அவர், பார்ப்பதற்கு நாகரிகமான ஒரு மருத்துவரையோ வழக்கறிஞரையோ போலத்தான் இருந்தார். அமானுஷ்யத்தன்மை ஏற்படுத்தும் எதுவும் அங்கு இல்லாதது என் கற்பனைகளைப் பொய்யாக்கியது. எத்தனை நாகரிகமாக இருந்தாலும் எனக்கு அந்த இடம் மிகவும் வெறுப்பையே தந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான் ஒன்றும் பகுத்தறிவுப் பாசறைக்காரனல்ல என்றபோதும் இவற்றிலெல்லாம் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையிருந்ததில்லை. ஆனாலும் வேறு வழியில்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டேன். 

பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார்.

"என்ன பிரச்சினை?" 

என் உதடுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டன. ஏற்கெனவே மனதுக்குள் இரண்டு, மூன்று முறை சொல்லிப் பார்த்துக் கொண்டுதான் வந்து சேர்ந்தேன் என்றபோதும், தயக்கம் ஒரு பருந்தாக மாறி என் வார்த்தைகளைத் தின்றுவிட்டிருந்தது போலத் தோன்றியது. அவர், தயக்கமின்றிப் பேசும்படி வற்புறுத்தினார்.

"எனக்கு தினமும் ஒரு எஸ்.எம்.எஸ் வருகிறது, அதுவும் நூற்றுக்கணக்கில்!"

"சரி, என்ன செய்தி வருகிறது?"

"ஹாய், ஹவ் ஆர் யூ? என்று"

"இதில் ஒன்றும் தவறில்லையே!"

"ஆம். செய்தியில் தவறில்லைதான்."

"பிறகு?… அனுப்புகிறவரா?"

"நீங்கள் என் சிக்கலை நெருங்கிவிட்டீர்கள்."

"யார் அது?"

"என் நண்பன் ஜேம்ஸ்."

"இதில் சிக்கல் எங்கே என்று சொல்ல முடியுமா?" 

நான் அவரை உற்றுப் பார்த்தபோது அவர் அசிரத்தையான பார்வை ஒன்றை என் மீது வீசினார்.

"ஜேம்ஸ் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது."

இப்போது பார்த்தேன், அவர் அசிரத்தை விலகி விழிப்படைந்தவராக இருந்தார். 

குரலைச் சரி செய்துகொண்டு, "இது ஒன்றும் வோடஃபோன் ஜோக் இல்லையே" என்றார்.

"நிச்சயமாகயில்லை!"

அவர் சுவாரசியமுற்ற மனிதரைப் போலப் பேசத் தொடங்கினார்.

"ஜேம்ஸ் உங்கள் நண்பர் என்றீர்கள்? நெருங்கிய நண்பரா?"

"அப்படிச் சொல்வதற்கில்லை, பொதுவாகவே எனக்கு நண்பர்கள் குறைவு. ஜேம்ஸ் மட்டும்தான் கொஞ்சம் நெருக்கம். அவ்வளவுதான்."

"ஏன், நட்பு என்றால் பிடிக்காதா?"

"அப்படிச் சொல்வதற்கில்லை, ஆனாலும் நான் நண்பர்கள் என்று யாரையும் நெருங்கவிடுவதில்லை. பெரும்பாலும் அவர்கள் தொந்தரவுகளைக் கொண்டு வருபவர்கள் என்பது என் அனுபவம்." 

"நீங்கள் ஒருவகையில் கொடுத்து வைத்தவர், இன்னொரு வகையில் பாவம்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"இறந்தபிறகும் நலம் விசாரிக்கும் நண்பன் உங்களுக்குக் கிடைத்திருக்கிறான். அந்த வகையில் கொடுத்துவைத்தவர். ஆனாலும் உங்கள் கருத்தை உறுதி செய்யும்படிக்கு, இறந்த பின்பு கூடத் தொல்லை தருகிறவர்கள்தான் நண்பர்கள் என்கிற அனுபவமும் உங்களுக்கு வந்து சேர்ந்த விதத்தில் பாவம்."

அவர் பேச்சை நான் ரசிக்கவில்லை. அவர் நையாண்டி செய்வதாகப்பட்டது. ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர் என்கிற அளவில் உதவுவார் என்று நம்பித்தான் இவரிடம் வந்திருக்கிறேன். வேறுவழியில்லை என்று பட்டது. 

"சார்! கொஞ்சம் சீரியஸாகப் பேசலாமே?"

"நிச்சயமாக! நீங்கள் பதட்டமடைய இதில் ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்கள், எதை வைத்து இறந்துபோன உங்கள் நண்பன்தான் எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக முடிவு செய்கிறீர்கள்? அவர் எண்ணிலிருந்து யாராவது விளையாடலாம் அல்லவா? குறிப்பாக, சிறுபிள்ளைகள்?" 

"அதற்கு வாய்ப்பேயில்லை" என்று சொல்லி என் பையிலிருந்து இரண்டு செல்போன்களை எடுத்துப் போட்டேன்.

"இதில் ஒன்று என்னுடையது, மற்றொன்று ஜேம்ஸுடையது. இந்தச் சிக்கல் தொடங்கிய சில நாட்களிலேயே அவன் வீட்டில் இந்த ஃபோனைக் கேட்டு வாங்கிக்கொண்டேன். அவன் இறந்தது முதல் இந்த எண் அணைத்துதான் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதுவரை!"

"எஸ்.எம்.எஸ் அனுப்ப இப்பொழுதெல்லாம் செல்போனும், சிம்கார்டும்கூடத் தேவையில்லை. கணினி மூலமாகக்கூட அனுப்பமுடியும்."

"ஆமாம், அந்தத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் 'வாய்ப் டெக்னாலஜி'. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை."

அவர் இப்போது என் சிக்கலில் அதிக ஆர்வம் உடையவராக எனக்குத் தெரிந்தார். காரணம், காதலியின் உதடுகளை உற்றுநோக்கும் காதலனைப்போல என் உதடுகளையே நோக்கி அதிலிருந்து வரப்போகும் வார்த்தைகளில் ஆர்வமுடையவராய் இருந்தார்.

"ம். மேலும் சொல்லுங்கள்!"

"எஸ்.எம்.எஸ்-கள் வருவதெல்லாம் இரவு நேரங்களில்தான். ஆனால் அதுவல்ல முக்கியம். அது வரும் சில நிமிடத்திற்கு முன்பு யாரோ என்னைத் தொட்டு எழுப்புவது போலிருக்கும். கண்விழித்துப் பார்த்தால், அறையில் இருள் ஒரு பூதத்தைப்போல வளர்ந்து பரவியிருக்கும். இரவு விளக்கு அதன் பற்களைப்போல ஒரு மெல்லிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும். நான் அதிர்ந்து அடங்கும் நொடியில் எஸ்.எம்.எஸ் வந்து சேரும்."

"பிறகு?"

"பிறகென்ன? இப்போதெல்லாம் வீட்டின் எல்லா விளக்கையும் எரியவிட்டுக் கொண்டுதான் படுத்துக் கொள்கிறேன். ஆனாலும் பயம் நிரந்தரமாகிவிட்டது இந்த எஸ்.எம்.எஸ்-களைப் போல. நிரந்தரமாக அது ஒரு நடுக்கமாகி, என் நரம்புகளில் குடிகொண்டுவிட்டது. பகலில் கொஞ்சநாட்கள் தொந்தரவு இல்லாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது பகலிலும் தொடர்கிறது. அணைத்து வைத்துவிட்டு வேலைபார்க்கவும் முடியாத நிலை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள்தான் உதவவேண்டும்!"

அவர் விரல்களில் அகப்பட்டு உருளும் பென்சில், சுருங்கும் நெற்றி ஆகியன 'அவர் சிந்திக்கிறார்' என்று எனக்குச் சொல்லின. 

"கிட்டத்தட்ட உங்கள் சிக்கலை நெருங்கிவிட்டேன். ஆனாலும் முடிவுக்கு வர எனக்கு இன்னும் சில தகவல்கள் வேண்டும். அதாவது உங்கள் நண்பனைப் பற்றி... அவன் மரணத்தைப் பற்றி… முடிந்தவரை சொல்லுங்கள்!"

ஜேம்ஸ் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த ஊருக்குக் குடிவந்த முதல் நாளில்தான் அவன் அறிமுகமானான். வேலை நிமித்தம் நான் சென்ற அலுவலகத்தில் அவனைச் சந்தித்தேன். நீண்டநாள் பழகியவனைப்போல அவன் பேசினான். அவன் என்னை நண்பனாக்கிக் கொண்டான். நகரில் நான் எதற்கும் தேடியலைய வேண்டியதாயில்லை. எல்லாம் அவனால் எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அவனிடம் மட்டும் நான் மனம் திறந்து பேசுபவனாக ஆனேன். வேறு யாரோடும் நான் நட்பு பாராட்டவேயில்லை. அது தேவையாக எனக்குத் தோன்றவில்லை. அவனிடம் இருந்த ஒரே தொந்தரவு அவன் செல்போன்தான். செல்போனிலிருந்து கணக்கற்ற எஸ்.எம்.எஸ்-களை எல்லாருக்கும் அனுப்பியபடியிருப்பான். அவன் எஸ்.எம்.எஸ்-களோடுதான் பொழுது விடியும், பொழுது அடையும். ஆனாலும் அவனுக்காக நான் அதையெல்லாம் வெறுப்பதில்லை. அவன் பற்றிய எந்த நினைவும் அவன் இருக்கும் வரைக்கும் நான் என் மனதில் சேகரித்துக் கொண்டதில்லை. ஆனால், அவன் மரணம் அவை அத்தனையையும் ஒரே நொடியில் என் மனதில் அழியாத மைகொண்டு எழுதிவிட்டது. காரணம், அவன் எவ்வளவு தூரம் நல்லவன் என்பதுதான்.

"இந்த நகரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துகள் நடக்கிறது நாம் காணும்படி… அப்படி ஒன்றை நீங்கள் கண்டதுண்டா? கண்டால் என்ன செய்வீர்கள்? போய் யார் என்றாவது பார்ப்பீர்களா? நான் பார்ப்பதில்லை. ஒருவேளை நீங்கள் பார்க்கலாம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவர்களைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் போவோம், சொல்லுங்கள்? எனக்குத் தெரிந்த வரை மிகக்குறைவு அல்லது சில ஊர்களில் இல்லவேயில்லை. ஏன் கேட்கிறேன் என்கிறீர்களா? ஜேம்ஸ் அப்படி ஒரு விபத்தைக் கண்டால் ஓடிப்போய்ப் பார்ப்பான், அவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவான். அப்படி அவனால் உயிர் பிழைத்தவர்கள் சிலர் அவனை வாயார வாழ்த்தி அவனைப் பேசியதை நானே கேட்டதுண்டு. ஆனால், வாழ்த்துகளும் வசவுகளும் கலியுகத்தில் யாரையும் பாதிப்பதில்லை என்பதை அவன் வாழ்க்கை மூலம்தான் நான் உணர்ந்துகொண்டேன். அவன் விபத்துக்குள்ளான நாளில் அவன் உயிருக்குப் போராடியபோது இந்தப் பெருநகரத்து மக்கள் யாரும் அவனைக் காக்க முயற்சி செய்யவில்லை. ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனை போய்ச் சேர்ந்தபோது அவன் செத்திருந்தான்!"

துக்கம் தனது வலிமையான கரங்களால் என் குரலை நெரித்தது. அதன் வலி பெருக, கண்கள் சில நீர்த்துளிகளைச் சிந்தின. அவர் மௌனமாக இருந்தார். நான் அடுத்த வார்த்தை பேச எத்தனை நாள் ஆனாலும் அதற்காகப் பொறுமையோடு காத்திருப்பவரைப்போல அவர் இருந்தார்.

துக்கம் பெருகுகிற வேளையில்தான் வார்த்தைகள் எல்லையின்றி வாயில் ஊறிவந்தவண்ணம் இருக்கின்றன எனப்பட்டது. இன்னும் எனக்குப் பேசவேண்டும் போலிருந்தது.

"நான்தான் அவனுடலை மார்ச்சுவரிக்குச் சென்று அடையாளம் காட்டினேன். எனக்குள் ஒரு கோழை இருப்பது அன்றுதான் நிரூபணமானது. பிணவறைக்குச் சென்று அடையாளம் காட்டித் திரும்புமட்டும் என் இதயத்துடிப்பின் ஓசை கேட்டே நடுங்கிக் கொண்டிருந்தேன். அவன் மனைவியும் பிள்ளைகளும் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுத ஒலிக்கு அஞ்சித் தூரமாக ஓடி ஒளிந்துகொண்டேன். அவர்களின் பிளவுற்ற குரல்கள் கேட்டு விழித்துக்கொள்ளும் இரவுகள் அன்று முதல் தொடர்ந்தன."

அவர் எழுந்து வந்து என் தோள்களைத் தொட்டார். அது என்னை அமைதிப்படுத்தும் முயற்சி என்று தோன்றியது. 

"மை டியர் ஃப்ரண்ட்! உன் பிரச்சினை வினோதமானது! ஆனால், மிகவும் பழையது. இறந்தவர்கள் யார் மூலமாகவோ அல்லது ஒரு பொருள் மூலமாகவோ, வாழ்பவர்களோடு பேசுகிற கதைகளை நீ கேட்டிருப்பாய். அப்படிப் பேசும் நபரையோ அல்லது பொருளையோ எங்கள் வழக்கில் 'மீடியம்' என்று சொல்வதையும் நீ அறிந்திருக்கக்கூடும். உன் நண்பன் உன்னோடு பேச விரும்புகிறான். அதற்காக எஸ்.எம்.எஸ்-ஸை மீடியமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவ்வளவுதான்."

"அவ்வளவுதான் என்றால், நான் எப்படி அவனோடு பேசுவது? அவன் என்னோடு பேச என்ன காரணம்?"

"பொதுவாக இப்படித் தானே முன்வந்து பேசுபவர்கள் தரப்பில் தேவை ஏதாவது இருக்கும், இருக்கலாம். அதை அவர்களே சொல்லுவார்கள். ஆனால், அதற்கு முதலில், நாம் நம்மோடு பேசுபவர் இறந்துபோன நபர்தான் என்பதை நம்ப வேண்டும்! இதில் பயப்பட ஒன்றும் இல்லை. உன்னோடு பேசுவது உன் நண்பன்தான் என்று புரிந்துகொள்! உன் மனதுக்குள்ளாக நீ அவனை நெருங்கிப் பேசு! நிச்சயம் அவன் இந்த முறையிலோ அல்லது வேறுவழியிலோ உன்னோடு பேசி, தன் தேவையைச் சொல்லுவான். பேச முயற்சி செய்! பயப்படாதே! உடலற்ற ஆவிகள் உடலுள்ள நம்மை ஒன்றும் செய்யாது. அதிலும், உன் நண்பன் நல்லவன் என்று நீதானே சொன்னாய்?"

*******

நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்தது மாணிக்கத்தின் வீடு. போலீஸ் ஸ்டேசனில் இருந்து முகவரியைப் பெற்றுக்கொண்டு வருகிறேன். என் நிலை எனக்கே பரிதாபமாக இருந்தது. யாரைப் பார்க்கப் போகிறோம், எதற்காகப் பார்க்கப் போகிறோம் என எதுவும் தெரியாமல் ஒரு எந்திரத்தைப்போல அலைந்து திரிகிறேன். இதைத் தவிர்க்கவும் முடியாது. பொதுவாகவே நண்பர்களின் தொந்தரவுகளைத் தவிர்ப்பது மிகவும் சிரமம். அதிலும், இறந்துபோன நண்பனின் வேண்டுதல்கள் என்றால் எப்படி? ஜேம்ஸ்தான் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான் என்று நம்பத் தொடங்கிய நாளிலிருந்து, வரும் எஸ்.எம்.எஸ்-கள் எல்லாம் 'மாணிக்கத்தை உடனடியாகப் போய்ச் சந்தி' என்பதுதான். ஆரம்பத்தில், தினமும் ஒன்று இரண்டுதான் வந்துகொண்டிருந்தன. ஆனால், ஒருசில நாட்களிலேயே அது வழக்கம்போல எண்ணிக்கையற்று வரத் தொடங்கிவிட்டது. இப்பொழுது வேறுவழியே இல்லை. எனக்கும் ஜேம்ஸுக்கும் பொதுவாக மாணிக்கம் என யாரையும் தெரியாது. தொடர்ந்து சிந்தித்ததில்தான் தெரிந்தது. ஜேம்சை விபத்துக்குள்ளாக்கிய வேன் டிரைவர் பெயர் மாணிக்கம் என்று. 

மாநகரப் பேருந்தில் ஜேம்ஸ் வந்திருக்கிறான். பேருந்து நிறுத்தம் எவ்வளவு ஓரமாய் இருந்தாலும் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்துவது என்னவோ நடுரோட்டில்தான். அப்படி நடுரோட்டில் நிறுத்திப் பயணிகளை இறக்கியிருக்கிறான் ஜேம்ஸ் வந்த பேருந்தின் ஓட்டுநர். அப்போது, இடதுபுறம் சீறிப் பாய்ந்து வந்த வேன் ஜேம்ஸை இடித்துத் தள்ளியது. ஜேம்ஸ் தூக்கி வீசப்பட்டான். வேன் டிரைவர் தப்பியோட முயலவில்லை. போலீஸ் வரும்வரை அங்கேயே இருந்தான். போலீஸ் அவனைக் கைது செய்தது. எனக்கு, நடுரோட்டில் நிறுத்திப் பயணிகளை இறக்கிய ஓட்டுநரையும் கைது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஆனால், அது வேறு யாருக்கும் தோன்றவில்லை. 'அவன்தான் வேன் டிரைவர்' என்றும், 'அவன் பேர் மாணிக்கம்' என்றும் சொன்னார்கள். நான் அவனைப் பார்த்தேன். பார்ப்பதற்கு அவன் முரட்டு மனிதனாக இருந்தான். அவன் கண்களில் விபத்து நேர்ந்ததற்கான பதற்றம் துளியும் இல்லை. 

மீண்டும் அவனை வழக்கு விசாரணை நாட்களில் பார்த்ததுண்டு. அவன் பார்வை ஒரு மிருகத்தைப்போல என்னைப் பார்த்ததுபோல் இருந்தது. ஜேம்ஸின் மனைவி, குழந்தைகளை அவன் பார்த்த பார்வை அச்சமூட்டுவதாக இருந்தது. அத்தகைய ஒரு மனிதனைப் போய்ப் பார்க்க ஜேம்ஸ் என்னைத் தூண்டுவானேன்? நானும் அதை மதித்து இங்கு வருவானேன்? ஒருவேளை, அவனால் தன் மனைவி, குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என ஜேம்ஸ் அஞ்சுகிறானா? அப்படியென்றால் நான் இதில் என்ன செய்ய? அல்லது என்ன செய்யமுடியும்? அவனைச் சந்தித்துப் பேசினால் அடிவிழாமல் தப்புவோமா? பயம் இருந்தும் இங்கு வரத் துணிந்ததுதான் என்ன? இல்லை, நானாக வரவில்லை. என்னை இயக்குவது நான் இல்லை என்று எனக்குத் தோன்றியது. இதோ மாணிக்கத்தின் வீடு. குரல் கொடுத்தேன். அவன் மனைவி வந்தாள். அவள் இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது. அதன் தலை வறண்டு அழுக்கேறியிருந்தது. அவள் முகத்திலும் வறுமையின் ரேகை அழுத்தமாய்த் தெரிந்தது. 

"மாணிக்கம் இல்லையா?"

"அவர் எங்க ஊட்ல இருக்கிறாரு? சாமீன்ல வந்த நாள்லயிருந்து டாஸ்மாக்லதான் கிடக்குறாரு. நீங்க யாரு சார்?"

நான் பதில் சொல்லவில்லை. "டாஸ்மாக் எங்க இருக்குது?" என்றேன்.

அவள் காட்டிய பாதையில் டாஸ்மாக் வந்து சேர்ந்தபோது அங்கு மாணிக்கம் இல்லை. ஆனால், எல்லோருக்கும் அவனைத் தெரிந்திருந்தது.

"இப்போதான் சார் போனாப்ல. செம டைட்டு! எப்படினாலும் ரயில் கேட்டைத் தாண்டியிருக்காது சார். விரசலாப் போனாக்கா அவனப் புடிச்சிரலாம்."

வேகமாக நடந்தேன். சில நிமிடங்களில் கேட் வந்துவிட்டது. கேட் மூடியிருந்தது. கேட்டிற்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் யாரும் இல்லை, என்னைத் தவிர. எங்கு போயிருப்பான் என்று யோசித்தபடியே கேட்டிற்குள் குனிந்து வந்தேன். தொலைவில் ரயில் வரும் ஓசை கேட்டது. எந்த டிராக்கில் வருகிறது என்று பார்ப்பதற்காக இருபுறமும் பார்த்தேன். அப்போதுதான் ஒரு மனிதன் தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுப்பது தெரிந்தது. ரயில் கத்தும் ஓசை கொஞ்சம் சமீபமாகியிருந்தது. அந்த மனிதன் சரியாக ரயில் வரும் தண்டவாளத்தில்தான் தலை வைத்திருந்தான். என்னுள் பதட்டம் தொற்றிக்கொண்டது. எழுந்துகொள்ளும்படிச் சத்தமிட்டபடியே அவனை நோக்கி ஓடினேன். அவன் காதுகளற்றவனைப்போல நகராதிருந்தான். ரயில் அவனை நெருங்கிவிடும் தொலைவை எட்டிவிடும் தூரத்திலிருந்தது. என்னால் அதற்குள் அவனருகே செல்ல முடியுமா என்று தெரியவில்லை. என் சக்தியை ஒன்று திரட்டி ஓடினேன். காலத்தில் நொடிகள்கூட எவ்வளவு முக்கியம் என்று புரிந்த கணம் அது! இன்னும் சில நொடிகள் ரயில் தாமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். கண்ணிமைக்கும் பொழுதில் தாவி அவனை இழுத்து அப்புறம் போட்டுவிட்டுப் பார்க்கவும் ரயில் கடக்கவும் சரியாகயிருந்தது. ரயில் தோற்றது என்று எண்ணிக்கொண்டேன். அது சரி, ரயில் என்ன, உயிர்காக்கும் மனுசத்தன்மையோடு ஓடுகிறபோது இந்த உலகில் எல்லாம் மனிதனிடம் தோற்கும் என்று பட்டது.

ரயில் பெரும் சத்தத்தோடு கடந்துபோகும் வரை காத்திருந்தேன். பின்பு தோன்றிய வெளிச்சத்தில்தான் பார்த்தேன், அது மாணிக்கம்! நான் தேடிவந்த மாணிக்கம். என்ன நடக்கிறது இங்கு?

"மாணிக்கம்… மாணிக்கம் என்ன இது? என்ன காரியம் பண்றீங்க?"

அவன் ஈனஸ்வரத்தில் அழுது கொண்டிருந்தான். 'என்னையேன் காப்பாத்துனீங்க?… என்னையேன் காப்பாத்துனீங்க?...' என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

நான் ஒன்றும் புரியாத நிலைமையில் இருந்தேன். அவனை நிதானப்படுத்தி, கைத்தாங்கலாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றேன். தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன். இப்போதும் அவன் அழுகை நின்றபாடில்லை. 

"என்னாச்சு மாணிக்கம்? ஏன் அழுறீங்க? என்ன யார்னு தெரியுதா சொல்லுங்க!"

"தெரியுது சார்! நீங்க நான் கொன்ன ஜேம்ஸோட ஃப்ரண்ட்."

"சரி, ஏன் தற்கொலை பண்ணிக்கப் போனீங்க? நான் மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும் சொல்லுங்க?"

"செத்துப் போயிருப்பேன் சார், செத்துப் போயிருப்பேன். அதுக்குதான் முயற்சி பண்றேன், அது எனக்கு வரமாட்டேங்குது. என்னைக்கு அவர அடிச்சிக் கொன்னேனோ அன்னைக்கே பாதி செத்துட்டேன். அவர் பொஞ்சாதி புள்ளைகள பாத்தப்போ மீதியும் செத்துட்டேன். பாவம் சார்! ரெண்டு பசங்க. அதுவும் சின்னப் பசங்க. அவர் இல்லாதைக்கு அதுங்க என்னா சார் பண்ணுங்க? நான் அன்னைக்குக் குடிச்சிருந்தேன் சார்! பொதுவா, குடிச்சாக்கா நான் வண்டி ஓட்டுறதில்ல. அன்னைக்கு மொதலாளி என்ன வம்பு பண்ணி அனுப்பிச்சான் சார்! நான் வேணாம்னுருக்கணும், சொல்லலயே! என்னா வேகம்னு எதுவும் தெரில. பாவம் சார் அவரு! பாத்தாலே பாவமா இருந்தது. அப்படி ஒரு மனுசனக் கொன்னுட்டு என்னா சார் வாழ்க்க? ஜெயில்லயே ரெண்டு தபா சாவ டிரை பண்ணினேன், முடில. காப்பாத்திட்டானுங்க. இங்க வந்து சாவலாம்னா நீ காப்பாத்துற. நா என்னதான் பண்றது?"

எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஜேம்ஸ் இன்னும் மாறவேயில்லை, இறந்தபிறகும்!

Tuesday, December 16, 2014

லிங்கா படத்தை முதல் நாளே பார்த்த கிரிக்கெட் அணி - எல் பாலாஜி ருசிகர பேட்டி

நூறு ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் ஆடிய பெருமையை பெற்றுள்ளார் எல் பாலாஜி.. இவர் சர்வதேச போட்டிகளிலும் கலக்கியவர்.( 8 டெஸ்ட் , 30 ஒரு நாள் ) காயம் காரணமாக அதில் தொடர முடியவில்லை. ஐ பி எல் போட்டிகளிலும் அசத்தினார் அவர். ஹாட் ட்ரிக் எடுத்தவர்.

அவரது நூறாவது போட்டியை முன்னிட்டு அவர் பேட்டி.
 -______________________________________________________________________
2001ல் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தபோது உங்கள் இலக்கு என்னவாக இருந்தது /?

அனைவருக்குமே இந்திய அணியில் ஆட வேண்டும் என்பதே கனவாக இருக்கும். உள்ளூர் போட்டிகளில் சாதிக்கும் கனவும் இருக்கும். இரண்டையும் சாதித்ததில் மகிழ்கிறேன்.

ரஞ்சி போட்டிக்கு முன் கொழும்பு அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் ஆடினேன். தில்ஷான் , முபாரக் ஆகியோருடன் ஆடியது நல்ல அனுபவம்.
அப்போது வலுவாக இருந்த தமிழக அணியில் இடம்பெறுவது ரொம்ப கஷ்டம். ஆனாலும் இடம் பிடித்தேன். முதலில் ஆடும்போது நெர்வசாக இருந்தது. கேப்டன் ராபின்சிங் ஆதரவாக இருந்தார்

உள்ளூர் போட்டிகளில் கலக்கிய நீங்கள் , உங்கள் முதல் சர்வதேச போட்டியில் ரன்களை விட்டுக்கொடுத்தீர்களே. அப்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன/?

உள்ளூர் போட்டியில் ஜொலிக்க காரணமாக இருந்த திறமைகள் மட்டும் போதாது என உணர்ந்தேன்.. மன ரீதியாகவும் பேட்ஸ் மேனை திணறடிக்க வேண்டும். இதற்காக மன ரீதியாக என்னை தயார் படுத்திக்கொண்டேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்தபோது மன ரீதியாக வலுவாக இருந்தேன். சாதித்தேன்

காயம் இல்லாவிட்டால் இன்னும் அதிகம் ஆடி இருப்பீர்கள் அல்லவா

கண்டிப்பாக. 2005ல் காயம் காரணமாக பல போட்டிகளில் ஆட முடியவில்லை. இனி ஆட முடியாது என்றே நினைத்தேன். ஆனால் கடின உழைப்பால் மீண்டு வந்தேன்

அந்த கால கட்டத்தில் யாராவது பேசினார்களா.

ஆமாம்.. ஜாகிர் கான் , ஆசிஷ் நெஹ்ரா போன்றோர் அடிக்கடி பேசுவார்கள். டபுள்யூ வீ ராமன் , ராபின் சிங் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் உட்பட பலர் என்னை ஊக்கிவித்தபடி இருந்தனர். அவர்கள் இன்றி என்னால் மீண்டு வந்திருக்க முடியாது

இப்போது உங்கள் இலக்கு என்ன

தமிழகத்துக்கு ரஞ்சிக்கோப்பை வாங்கித்தர வேண்டும் என்பதே என் இலக்கு. பலமுறை இறுதிக்கு வந்தாலும் எங்களால் ஜெயிக்க முடியவில்லை. அனைத்து தகுதிகளும் எங்களுக்கு உண்டு. கண்டிப்பாக வெல்வோம்

 நீங்கள் ஆடியதில் உங்களுக்கு பிடித்த மேட்ச், பிடிக்காத மேட்ச் /?

2002- 2003, செமிஃபைனலில் பெற்ற வெற்றி வெகு இனிதான மேட்ச். கடந்த முறை என் தலைமையிலான தமிழக அணி வெல்லும் நிலையில் இருந்தபோதிலும் பெங்காலிடம் தோற்று விட்டது. கண்ணீர் விட வைத்த மேட்ச் அது


நீங்கள் ரஜினி ஃபேன் என்பது தெரியும். அவரிடம் என்ன பிடிக்கும்

அவரிடம் எல்லாமே பிடிக்கும். அவரது ஒவ்வொரு செய்கையுமே ரசிக்கத்தக்க ஒன்றுதான். அவர் படங்கள் எல்லாவற்றையுமே முதல் நாளே பார்த்து விடுவேன். லிங்கா ரிலீசின்போது திண்டுக்கல்லில் இருந்தேன். ஒட்டு மொத்த கிரிக்கெட் அணியும் , கோச் உட்பட , முதல் நாளே லிங்கா பார்த்தோம்.

( அதனால் கிடைத்த ஊக்கத்தினால்தான் , ஜம்மு காஷ்மீருக்கு எதிரான மேட்ச்சில் கலக்குதா..சூப்பர்.. நல் வாழ்த்துகள் )


Sunday, December 14, 2014

ஐந்து ஆண்டுகளில் , மொண்ணைத்தனத்தில் இருந்து தமிழகம் விடுபடும் - சாரு ருசிகரப்பேச்சு

சாருவின் சொற்பொழிவு  பொதுவாக மூன்று வகைப்படும்.

வாசகர் வட்ட சொற்பொழிவு,, இது சொந்த ஊரில் பேட் செய்யும் க்ரிக்கெட் மேட்ச் போன்றது... சென்சார் இல்லாமல் உள்ளத்தில் இருப்பதை அள்ளிக்கொட்டுவார்..  பொக்கிஷத்தில் இருந்து வேண்டியதை பொறுக்கிக்கொள்ளலாம்.

இலக்கிய கூட்டங்கள் .  ..இது இந்திய வீரர் , இந்தியாவில் இருக்கும் இன்னொரு ஊரில் பேட் செய்வது போன்றது,,, என்ன இருந்தாலும் அதுவும் ஹோம் பிட்ச்தான்... அதிலும் அருமையாக பேசுவார்..

இவை இரண்டும் இல்லாத பொதுவான கூட்டங்கள் என்பது , இந்திய அணி அயல் நாடு போய் விளையாடுவது போன்றது... அப்படி ஃபாரின் பிட்ச்சில் அவர் ஆட்டம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்... எனவே தமிழ் ஹிந்து விழாவில் அவர் உரை ஆர்வத்தை ஏற்படுத்தியது..

 நடிகர் கார்த்தி , பொன்னம்பல அடிகளார் , நீதிபதி சந்துரு , மயில்சாமி அண்ணாதுரை ஆகிய வெவ்வேறு துறை ஜாம்பவான்கள் மத்தியில் அவர் பேச்சு எந்த அளவு வரவேற்பு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த எதிர்பார்ப்பை மிஞ்சும் வண்ணம் அவர் அன்னிய நாட்டு பிட்ச்சில் அற்புதமாக சதம் அடித்தார்..

 நடிகர் கார்த்தி பேசியபின் அவர் பேச வந்தார்..  ஜெட் வேகத்தில்  அவர் பேச்சு அமைந்தது ... நீதிபதி சந்துரு உட்பட பலர் அவர் பேச்சை கைதட்டி ரசித்தனர்.

அவர் உரை

‘இலக்கிய கூட்டங்களில் பேசித்தான் எனக்கு பழக்கம். இப்போது பத்திரிக்கை கூட்டத்தில் பேசுகிறேன். டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கொடுப்பார்கள். அது கொஞ்சம் கசப்பு என்றாலும் , உடல் நலத்துக்காக ஏற்கிறோம். அது போல , என் பேச்சில் சில கசப்பு இருந்தாலும் , அதன் நன்மை கருதி ஏற்குமாறு கேட்டு கொள்கிறேன் ( கைதட்டல்) .

 நான் பன்றிகளுக்கு மத்தியில் ஒரு சேரியில் வளர்ந்தவன். அந்த இடம் நாகூரில் இன்றும் அப்படியேத்தான் இருக்கிறது.  அந்த வாழ்க்கை இன்னும் ஒரு கொடும்கனவாக என்னுள் இருக்கிறது. அதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் , படிப்பு முக்கியம் என தீர்மானித்தேன். ஆனால் பள்ளி படிப்பு மட்டும் போதாது என்பதிலும் தீர்மானமாக இருந்தேன்.

பள்ளிக்கு அப்பாற்பட்ட கல்வியை இருவர் எனக்கு அளித்தனர். அதில் ஒருவர் ஏ என் சிவராமன் , தினமணி ஆசிரியர் ( கைதட்டல் ).. ஏராளமான உலக ஞானம் அளித்து என்னை உலக மனிதன் ஆக்கியவர் அவர்தான்.

அடுத்த ஆசிரியர் ஹிந்து நாளிதழ்.  ஆங்கிலம் கற்க ஹிந்து படி என்பார்கள். ஹிந்து படித்துதான் என் ஆங்கிலத்தை வளர்த்தேன்.

இன்றைய சூழலில் உலக அறிவு கிடைப்பது நெட் வரவால் சுல்பம் ஆகி விட்டது. எனவே உலக செய்திகளை கொண்டு வந்து சேர்க்க ஏரளாமானோர் இருக்கின்றானர்.  கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தேவையாக இருக்கிறது..அதற்கான தேவைதான் இருக்கிறது.

அப்படி ஒரு விழிப்பற்ற சமூகமாக இருப்பதால்தான் தமிழ் சமுகத்தை பிளிஸ்டைன் சொசைட்டி என சொல்லி வருகிறேன் ( கைதட்டல் ) .. இப்படியெல்லாம் பேச வேண்டாம் என என் மனைவி சொல்லி அனுப்பினார்.. ஆனால் நான் உண்மையை சொல்ல வேண்டும்

ஞானபீட பரிசு ஹிந்திக்கு 9 கன்னடாவுக்கு 8 மலையாளத்துக்கு 7 கிடைத்துள்ளது. எழுத்தாளார் அனந்த மூர்த்தி மறைவுக்கு கர்னாடக அரசு விடுமுறை அளிக்கிறது. துக்கன் அனுஷ்டிக்கிறது. அந்த சூழல் இங்கு இல்லை.

ஒரு பேராசியருக்கு கடிதம் அனுப்பினேன்.. அவர் பதில் அனுப்பினார்.. டியர் மேடம் என ஆரம்பிக்கிறார்.. சாரு என்றால் பெண் என நினைக்கிறார் ( அரங்கில் சிரிப்பலை )>.சாரு , ஜெயமோகன் , எஸ் ரா என யாரையும் இவர்களூக்கு தெரியாது..எப்படி இவர்களால் , எழுத்தாளர்களை மற்றவர்களூக்கு கொண்டு போய் சேர்க்க முடியும்..இந்திரா பார்த்த சாரதிக்கும் டியர் மேடம் என்றுதான் கடிதம் எழுதுவார்கள்>.( பலத்த கைதட்டல் , சிரிப்பு )

ஒரு துணை வேந்தர் , என்னை பார்த்து உங்களை தெரியுமே ,, டீவியில் பார்த்து இருக்கிறேன் என்றார் ( அரங்கில் சிரிப்பலை )>. இந்த பிரச்சனைக்காத்தான் நான் டீவியில் இப்போது பங்கேற்பதில்லை.

இந்த நிலையை மாற்ற ஹிந்து எடுக்கும் முயற்சிகளைத்தான் அதன் முக்கிய பஙகளிப்பு என்பேன்.  நான் வாங்கும் ஹிந்து இதழ்களை , ப்ழைய பேப்பர் கடைக்கு போடுவதில்லை..காரண்ம் ஒவ்வொரு இதழும் பாதுகாக்க வேண்டிய ஒன்று.  நடுப்பக்க கட்டுரைகள் சிறப்பாக இருக்கும்..ஹிந்து இதழ் , இந்த கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ,  நம் சமூகத்தை ஃப்ளிஸ்டைன் சமூகம் என நான் சொல்ல வேண்டிய தேவை இருக்காது..  கே ஃபெஸ்டிவல் திருவனந்தபுரத்தில் பிரமாண்டமாக நடக்கும், சென்னையில் நடத்த அழைப்பு விடுத்தேன்.. அதற்கான இண்டல்கச்சுவல் கிளைமேட் இங்கு இல்லை என மறுத்து விட்டனர்.

ஒரு மொழியை கற்க , பயிற்சியில் சேர்ந்தால் , சில மாதங்களில் கற்று கொடுத்து விடுகின்றனர். ஆனால் பதினைந்து ஆண்டு பள்ளி கல்வி , தமிழை சரியாக சொல்லி தருவதில்லை.. அரைகுறை தமிழை வைத்துக்கொண்டு கதை எழுத புறப்பட்டு விடுகிறார்கள்>  ஒரு சிறுகதை போட்டிக்கு நடுவராக போனேன்.. ரஜ வந்தன் என எழுதுகிறார்கள்>.  நல்ல தமிழில் எழுதிய கதைகள் சில மட்டுமே தேறின. அந்த காலத்தில் ஹிந்து படித்து ஆங்கிலம் கற்றதைப்போல , இப்போது தமிழ் கற்க ஹிந்துவை நம்புகிறேன். பலருக்கு பரிந்துரைக்கிறேன்.

ஒருவர் காரில் வந்து இறங்கினார். அவர் யார் என ஒரு சிறுவன் கேட்டான். தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் என்றேன்.. அவன் நம்பவில்லை.. தமிழ் பத்திரிக்கை ஆசிரியர் எப்படி காரில் வர முடியும் என்றான். தமிழை இழிவாக நினைக்கும் சூழல் இருக்கிறது... ஹோட்டலில் தமிழில் ஆர்டர் சொல்ல கூச்சமாக உள்ளது.. இதையெல்லாம் மாற்ற வேண்டும்.. தமிழ் படித்தால் உயர்வு என்ற நிலையை கொண்டு வர வேண்டும் ( பலத்த கைதட்டல் )

தமிழை விட் ஃப்ரெஞ்ச் படித்தால் நல்ல மார்க் என்பதால் ,, தமிழ் வேண்டாம் , ஃபிரெஞ்ச் படி என சொல்லும் சூழல் இருக்கிறது.. ஃபிரெஞ்ச் வேண்டாம் என ஃபிரான்சில் சொன்னால் கொன்று விடுவார்கள்>. ஆனால் இங்கு தமிழ் இல்லாமலேயே டிகிரி வரை படிக்கலாம்.. ஏன் இப்படி விடுகிறீர்கள்..தமிழை கட்டாயப்படுத்துங்கள்

ஹிந்துவுக்கு மூன்று வேண்டுகோள்>

மலையாளத்தில் வரும் மாத்ருபூமிபோல தரமான வார இதழை கொண்டு வாருங்கள்

ஜெய்ப்பூர் இலக்கிய நிகழ்ச்சிபோல ஒரு சர்வதேச இலக்கிய விழா நடத்துங்கள்

அயர்லாந்தில் டப்ளீன்  என்ற ஊரில் இருக்கும் ஒரு நூலகம் டப்ளின் இம்பாக் விருது என்ற அவார்ட் வழங்குகிறது.. பெரிய பரிசு தொகையும் மதிப்பும் கொண்ட விருது. அந்த விருது பெறுவதே கவுரவம். நம் ஊர் கலைமாமணி போல இல்லை . அது போல ஒரு விருதை ஏற்படுத்துங்கள்

இப்படி அவர் பேசினார்.

சாருவைப்பற்றி தெரியாத பலருக்கும் சாரு மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது அந்த உரை






Tuesday, December 9, 2014

மகாத்மா காந்தி எழுதிய மோட்டிவேஷன் கடிதம் - வெற்றிக்கு 12 படிக்கட்டுகள்


மகாத்மா காந்தியின் முதன்மை சீடர்களில் ஒருவர் ஜன்மலால் பஜாஜ் . இவரது மகன் கமல நயன் , படிக்கும்பொருட்டு வெளியூர் செல்ல வேண்டி இருந்தது... ஆசி வாங்க அவன் காந்தியிடம் வந்தான். காந்தி அவனுக்கு ஒரு கடிதம் அளித்தார்...

_____________________________________________________________

                                                                                            வார்தா
                                                                                            03.06.1935

சிரஞ்சீவி கமல்

1. குறைவாக பேசு

2. அனைவர் சொல்வதையும் கேள். ஆனால் எது சரியோ அதை மட்டும் செய்

3. ஒரு நிமிடத்தையும் வீணாக்காதே. அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் செய்து முடி

4. ஏழையைப்போல் வாழ். பணக்காரன் என பெருமைப்படாதே

5. செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்துக்கொள்

6 கருத்தோடு படி

7 தினமும் உடற்பயிற்சி செய்

8 உணவு விஷ்யத்தில் எச்சரிக்கை தேவை

9 தினமும் நாட்குறிப்பு எழுது

10. புத்திசாலித்தனத்தைவிட இதய பலம் கோடி மடங்கு பெரிது. எனவே அதை விருத்தி செய். அதற்கு கீதை , துளசிதாஸ் போன்றவை படிப்பது முக்கியம். தினமும் பஜானவளி பாராயணம் செய். தினமும் முறையாக இரு முறை பிரார்த்தனை செய்

11. உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டதால் , வேறொரு பெண்ணை கண்ணெடுத்தும் பார்க்காதே

12. ஒவ்வொரு வாரமும் என்ன செய்கிறாய் என்பது குறித்து எனக்கு கடிதம் எழுது

                                            பாபுவின் ஆசிர்வாதம்

_________________________________________


Tuesday, December 2, 2014

எழுத்தின் மாயாஜாலம் - அனல் பறக்கும் எக்சைல் முன் பதிவு


ரஜினி படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கட் வாங்குவது சாருவின் எக்சைல் நாவலுக்கு ஏற்பட்ட பரபரப்பு உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைத்தது. ஒவ்வொருவரும் இரன்டு அல்லது மூன்று புத்தகங்கள் ஆர்டர் செய்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் ..

சமீபத்தில் நிர்மல் சென்னை வந்திருந்தார் . புத்தகம் வரும் முன்பே அதன் சில பகுதிகளை படித்து விட்ட அதிர்ஷ்டசாலிகளில் அவரும் ஒருவர்.  இப்படி ஒரு புக் தமிழில் வந்ததே இல்லை என்றார் அவர். ஒரு விஷுவல் ட்ரீட் காத்திருக்கிறது என்றார்..  தக்காளி, இதென்ன சினிமாவா?  இதில் என்ன விஷுவல் என கேட்டேன்..  தமிழின் முதல் விஷுவல் நாவலாக இது இருக்கக்கூடும்.... அதுதான் எழுத்தின் ரச்வாதம் என்றார்..    அவர் சொல்லும்போது அவர் அடைந்த பரவசத்த்தை வார்த்தையில் வடிக்க முடியாது...  நாம் எப்ப வாசிக்க போகிறோம் என ஏங்க வைத்து விட்டார்.

இது வரை இல்லாத அளவுக்கு அதிரடி தள்ளுபடியில் முன் பதிவு என்ற திட்டம் தமிழ் இலக்கியத்தின் முக்கிய நிகழ்வாகும்..  லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்க ஒப்புக்கொன்ட கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றி.. கிழக்கு பதிப்பக வரலாற்ரில் இல்லாத அளவுக்கு முன் பதிவு ஆர்டர்கள் குவிகின்றன என கேள்விப்பட்டது மன நிறைவு ஏற்படுத்தியது..

நாவல் குறித்து நிர்மல்


சாருவின் எக்ஸைலை எப்படி வாசிக்க வேண்டும்;

மற்ற நாவல்களைப் போல கோடிட்டுக் கொள்ள உங்களுக்கு பிடித்த வரிகள் எதுவும் இருக்காது.

மனதை பிசைய வைக்கும்

நெஞ்சை பிழியும் வார்த்தை ஜாலம் கிடையாது.

கதாபாத்திரங்கள் தனக்கு தானே பேசி தங்களை உங்களுக்கு புரிய வைத்தல் இருக்காது,

எங்காவது நாவலில் உங்களை திவை திருப்பி ஒருவித சஸ்பென்ஸ் இருக்காது.

இதுவரை யாருக்கும் புரியாத தமிழில் இருக்காது,

உங்களுக்கு அட்வைஸ் எதும் கிடைக்காது

திருப்புமுனைகள் என எதுவும் இருக்காது.

ஒவ்வரு பக்கத்தையும் ஒரு சினிமா பார்ப்பது போல இருக்கும்




 நாவல் குறித்து லக்கி யுவா 






சாருவின் ’புதிய எக்ஸைல்’, தமிழ் ஹிந்துவில் ஒரு பகுதி வாசித்தேன்.

கலக்கி விட்டார்.

ஃப்ளோரான்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பின்நவீன நகர வாழ்வியல் சூழல். வளர்ப்பவளின் பெயர் அறுபதுகளின் அரதப்பழசான ‘பெருந்தேவி’. நவீனத்துக்கும், பின்நவீனத்துக்குமான முரண், போர், இணைப்பு என்று தொடரும் சாருவின் சலிக்காத முயற்சிகளில் அடுத்த மைல்கல்.


தனித்துவ மொழிக்காக அவர் நிரம்ப மெனக்கெடுவதில்லை. அதுவே சரளமாக வந்து விழுகிறது. அதை அடுக்குவதில் சாரு காட்டும் கச்சிதம்தான் அவரது அடையாளம்.

இந்த பகுதியை வாசித்தவரை சாரு மேஜிக் மீண்டும் நிகழ்ந்திருப்பதாகவே படுகிறது. வாழ்த்துகள்!

//நட்சத்திரங்களின் குளிர்மை, காற்று, மண்ணின் மணம், மரம், மகரந்தத் துகள், கடல், வானம், எரிமலை, பிரபஞ்ச வெளி, மேகம், மலையின் தனிமை, புல்லாங்குழலின் இசை, குழந்தையின் முதல் குரல், மரணமடைந்தவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எரிதழல், சூரிய ரேகை, நீரோடையின் சலன சங்கீதம், மழை, பூரண நிலவு, பசுவின் குரல், தவளைச் சத்தம், எரிந்து தணிந்த வனம், ஆலம் விழுது, அரச இலை, உறைபனி, அகல்விளக்கு, மலர், தென்றல்...//

சாருவின் மொழி அமரத்துவத்தை எட்டிவிட்டது. அதற்கு சாவே இல்லை.




____________________________________________________________________

 நாவல் ஆர்டர் செய்ய 

1.) கிழக்கு : https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html
தொடர்புக்கு: 9445901234, 9445979797
2.) Namma Books:
http://nammabooks.com/Buy-Charu-Nivedhi…/exile-new-pre-order
தொடர்புக்கு: 9843931463
3.) Chennai Shopping:http://www.chennaishopping.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%…/…/
தொடர்புக்கு: 044-43559493
4.) We Can Shopping:
http://www.wecanshopping.com/…/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%…
தொடர்புக்கு: 9003267399





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா