Monday, September 29, 2014

ஃபேக் இலக்கியம் ஃபேக் சினிமா ஃபேக் அரசியல் குயில்கள் வடிவில் சிறகடிக்கும் காகங்கள்

உயிர் எழுத்து பத்திரிகையில் வெளியான கட்டுரை - செப்டம்பர் மாத கட்டுரை

தமிழக அரசியலையே புரட்டிப்போட்ட நிகழ்வு அது. 1963ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்ட முன் வரைவு கொண்டுவரப்பட்டது. அதில் ஹிந்தியுடன் ஆங்கிலமும் தொடரலாம் என அதன் மூன்றாவது பிரிவு கூறியது. “ஆங்கிலமும் தொடர்ந்தால் தொடரலாம், இல்லை என்றால் விட்டு விடலாம் என்கிற அர்த்தம் இதில் தெரிகிறது. இப்படி படிப்படியாக ஹிந்தியை திணிப்பீர்கள். இந்த பிரச்சினையே வேண்டாம். ஆங்கிலமும் தொடரலாம் என்பதை ஆங்கிலமும் தொடரும் என மாற்றுங்கள்” என திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா குரல் எழுப்பினார். தொடரலாம், தொடரும் இரண்டும் ஒன்றுதான் என்றார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. அதை திமுக ஏற்கவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்றால் நாங்கள் சொல்வதுபோல மாற்றுங்கள் என்றார் அண்ணா. ஆனாலும் திருத்தம் செய்யாமல் 27.04.1963இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் கொதித்தெழுந்தது. இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவை துணிச்சலாக எதிர்த்தார். ஒரு நாட்டின் சட்டத்தை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும் தண்டனை குறித்து எள் முனை அளவும் கவலை இன்றி சட்டத்தை எரித்து சிறை சென்றார் அண்ணா. அதன் விளைவாக போராட்டம் வலுத்ததும், மத்திய அரசு பணிந்ததும், திமுக ஆட்சிக்கு வந்ததும் வரலாறு. அரசியல் சட்ட எரிப்பு என்பது தமிழக வரலாற்றில் முக்கியமான ஒன்று.
இதன் அடுத்த வெர்ஷன் 1986இல் அரங்கேறியது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அகில இந்திய அண்ணா திமுக. ராஜீவ் காந்தியின் மத்திய அரசு இந்திக்கு ஆதரவான கல்விக் கொள்கையை கொண்டுவந்தது. அதை எதிர்த்து பிரதான எதிர்கட்சியாக இருந்த திமுக சட்ட எரிப்பு போராட்டத்தை அறிவித்தது. இங்கு சில சுவையான திருப்பங்களை கவனிக்க வேண்டும். 1963 சட்ட எரிப்பு போராட்டத்தின்போது, தமிழகத்திலும் மத்தியிலும் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. 1986இல் திராவிட கட்சிகளின் ஒன்றின் சார்பாக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். எதிர்கட்சியாக இருந்ததும் திராவிடக்கட்சிதான் (திமுக). அதன் தலைவராக இருந்தவர் கருணாநிதி. அதாவது காங்கிரஸ் திமுக மோதல் அல்லது தேசியம் தமிழ் உணர்வு மோதல் என்பது புரட்சித் தலைவர் - கலைஞர் மோதலாக உருவெடுத்தது. ஹிந்தி எதிர்ப்பு என்பது அ.இ.அ.தி.மு.க.வுக்கும் உடன்பாடுதான் என்றாலும், திமுகவின் சட்ட எரிப்பை ஓர் ஆளும் கட்சி ஆதரித்தாலும் பிரச்சினை, எதிர்த்தாலும் தமிழ் துரோகி என்பார்கள் என்ற சிக்கல் எம்.ஜி.ஆர். அரசுக்கு ஏற்பட்டது. இதை எப்படி எம்.ஜி.ஆர். எப்படி சமாளிக்கப்போகிறார் என பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
ஆனால் அவர்கள் சட்ட எரிப்பு போராட்டத்துக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. யாரையும் கைது செய்யவில்லை.. தாராளமாக எரியுங்கள் என்பதுபோல விட்டுவிட்டனர். சட்டத்தை எரிக்க திமுகவினர் கூடியபோதுகூட ஒன்றும் செய்யவில்லை. காவல் துறை சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. எரித்து முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தனர். அதன் பின் ஃபார்மலான கைது என்றெல்லாம் நடந்தன. பிரச்சினை முடிந்தது என பலரும் கருதினர். ஆனால் பிறகுதான் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி சட்டத்தை எரித்ததன் மூலம் சட்டத்தைக் காப்போம் என்ற அவர்களது உறுதி மொழியை மீறி விட்டனர். எனவே அவர்களை பதவி நீக்கம் செய்கிறேன் என அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அதிரடியாக அறிவித்தார். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மிரண்டு போன திமுக, நீதிமன்றம் சென்று தாங்கள் எரித்தது சட்டத்தை அல்ல, வெறும் பேப்பரைத்தான் என்றெல்லாம் வாதிட்டது. மொத்தத்தில் இந்த இரண்டாம் வெர்ஷன் காமெடியாக முடிந்தது. நாங்க விளையாட்டா பேப்பரைக் கொளுத்தினோம்.. நீங்க சட்டம்னு நினைச்சுட்டீங்க.. அய்யோ அய்யோ என்பதுபோல வாதிட்டாலும் சாதகமான தீர்ப்பு வரவில்லை (ஆனாலும் இந்த போராட்டங்களும், அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானமும் ராஜீவை பின் வாங்கச் செய்தன.)
ஹிந்தி எதிர்ப்பில் திமுகவின் பங்கையோ, கலைஞரின் பங்கையோ குறைத்துக் காட்டுவது நம் நோக்கமல்ல. அரசியல் பேசுவதும் நம் நோக்கமல்ல. இந்தியாவையை அதிர வைத்த அண்ணாவின் சட்ட எரிப்பு போராட்டத்தை நம்மால் எப்படி மறக்க முடியாதோ அதே போல இந்த ஃபேக் சட்ட எரிப்பு போராட்டத்தையும் மறக்க முடியாதல்லவா.. அதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்த போலிகள் எல்லாத் துறைகளிலும் உண்டு. இலக்கியம், சினிமா, பத்திரிகை, ஆன்மீகம், பொறியியல், அறிவியல் என எதை எடுத்தாலும் அதில் போலிகளுக்கு முக்கிய இடம் உண்டு.
போலிகள் என்பது வேறு, .குப்பைகள் என்பது வேறு. குப்பைகள் என்பன அவ்வப்போது தோன்றி மறைவன, போலிகள் என்பன நிலைத்து நிற்பன. நாம் ஒன்றை போலி என சொன்னால் அது ஒருவகை பாராட்டுதான் என்பதை மறக்கக் கூடாது. எத்தனையோ நூல்கள் உலகில் தோன்றுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கால வெள்ளத்தில் மறைந்து விடுகின்றன. வெகு சில மட்டுமே குறைந்தபட்சம் ஃபேக் நூல்கள் என்ற அளவிலாவது மனத்தில் நிற்கின்றன. தீமை எதில் அதிகம்? போலியிலா அல்லது குப்பையிலா என்பது சுவையான கேள்வி. திரிபுவாதம், வறட்டுவாதம் என்ற இரண்டுமே தீமைதான் என்றாலும் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உண்டு என மாவோ விளக்கி இருப்பார். அதுபோன்ற விஷயம் இது.
திரிபுவாதம் அல்லது வலது சந்தர்ப்பவாதம் என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்த ஓட்டமே. இது வறட்டுவாதத்தைக் காட்டிலும் அபாயமானது. திரிபுவாதிகள், வலதுசாரி சந்தர்ப்பவாதிகள், மார்க்சியத்துக்கு சொல்லளவில் சேவை செய்கின்றனர். அவர்கள்கூட 'வறட்டுவாதத்தை'த் தாக்குகின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் தாக்குவது மார்க்சியத்தின் மிக அடிப்படை அம்சங்களையே ஆகும். அவர்கள் பொருள்முதல்வாதத்தையும் இயக்கவியலையும் எதிர்க்கின்றனர் அல்லது திரித்துப் புரட்டுகின்றனர். என்கிறார் அவர்.
வறட்டுவாதம் என்பதைவிட திரிபுவாதம்தான் ஆபத்தானது என மாவோ சொல்வதைப் போல குப்பைகளைவிட போலிகள்தான் அதிகம் ஆபத்தானவை என கூறலாம். முதலாளித்துவத்தை எதிர்ப்பதைவிட கடுமையாக போலிகளை எதிர்த்தவர் லெனின் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்' என்ற நூலை படித்தால் இதை உணரலாம்.
சமீபத்தில் 'வேலை இல்லா பட்டதாரி' என்ற படம் வந்தது. அதை எடுத்தவர்கள் அதை உலக சினிமா என நினைத்து எடுக்கவில்லை. அறிவுஜீவிகள் பாராட்ட வேண்டும் என்றும் நினைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அறிவுஜீவிகளும் பண்டிதர்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. (ஆனாலும், தேவையே இல்லாமல் ஓரிரண்டு அறிவு ஜீவிகள் பார்த்து விட்டு, அகிரா குரசோவா ரேஞ்சுக்கு படம் இல்லையே, சிட் ஃபீல்ட் சொன்னபடி திரைக்கதை இல்லையே, ராபர்ட் மெக்கீ சொன்னது மேட்ச் ஆகவில்லையே என கண்ணீர் விட்டனர். மன்னிக்கவும், இது உங்களுக்கான படம் அன்று) இந்தப் படத்தை பொருத்தவரை, இன்றைய சூழலில் எப்படி எடுத்தால் வெற்றி பெறும் என கணக்கிட்டு, ஒரு ஃபார்முலாப்படி எடுத்தார்கள். வென்றார்கள். இதில் நாம் கவலைப்பட ஒன்றும் இல்லை. இந்தப் படம் எல்லாம் காலப்போக்கில் மறக்கப்பட்டு விடும். இது போன்ற படங்களால் எல்லாம் தமிழ் சினிமா நெல் முனை அளவுகூட பாதிக்கப்படாது.
இது நல்ல சினிமா அன்று. ஆனால் ஃபேக் சினிமாவும் அன்று. இது எப்படிப்பட்ட படம் என நடித்தவர் முதல் டீ விற்பவர் வரை அனைவருக்கும் தெளிவாக தெரிந்திருக்கிறது.
இப்படி தன் அடையாளத்தை தெளிவாக காட்டாமல், நல்ல சினிமா என்ற பெயரில் வரும் போலிகளையே ஃபேக் சினிமா என்கிறோம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும், தங்க மீன்கள், குக்கூ, வழக்கு எண் 18/9 என ஃபேக் சினிமாக்களுக்கு ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். சமீபத்திய உதாரணம் சதுரங்க வேட்டை. இவை போன்ற படங்கள்தான் தமிழ் சினிமாவை அழிக்கின்றன.
பயங்கரமான கிரிமினல்களை ஒரு பெண் தன் அன்பால் திருத்தும் புதிய பாதை டைப் க்ளிஷேக்கள், அனைவரையும் இரக்கமின்றி கொன்றுதள்ளும் வில்லன், ஹீரோவை மட்டும் பொறுமையாக வசனம் பேசி (சிலசமயம் துப்பாக்கியை ஹீரோவிடம் கொடுத்து முடிந்தால் கொன்று பார். ஹா ஹா என்பார்) தப்பிக்க வாய்ப்புக் கொடுப்பது, சர்வ வல்லமை பொருந்திய, எதிர்ப்பே இல்லாத ஹீரோ என்ற பாத்திர அமைப்பு, அடுத்தடுத்து கால் செய்தால், ரிசீவரை எடுத்து கீழே வைத்து ஒட்டுக்கேட்க உதவும் அந்தக் கால அசட்டுப் பாத்திரங்கள் (இந்தப் படத்தில் அந்த பணக்கார அசட்டு கதாபாத்திரத்திடம் ஒரே ஒரு போன்தான் இருக்கிறது.. அதையும் ஆஃப் செய்து விடுகிறார்) என பழைய படம் போல இருக்கிறது இந்தப் படம். ஆனாலும் மாற்று சினிமா என சிலரால் முன் வைக்கப்படுகிறது. ஒரு பத்திரிகை இந்தப் படத்துக்கு 50க்கு மேல் மதிப்பெண் வ்ழங்கி தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் பத்திரிகை அவ்வப்போது இப்படி அசிங்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். முன்பு ஒருமுறை ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும், கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரே காலகட்டத்தில் வெளியாகின. அந்தப் பத்திரிகையின் ஒரே இதழில் இரு படங்களின் விமர்சனங்களும் வெளிவந்தன. அதில் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை ஆகா ஓகோ என பாராட்டி அதிக மதிப்பெண்களையும், சந்திரமுகி படத்துக்கு குறைவாகவும் மதிப்பெண்களையும் வழங்கியது. ஆனால் பெரும் வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது சந்திரமுகி படம்தான். (அந்த இதழ் எந்த அடிப்படையில் இப்படி மதிப்பெண் வழங்குகிறது என விவரித்து எழுத உயிர் எழுத்தின் தரம் அனுமதிக்காது. ஃபேக் விமர்சனத்தின் ஓர் உதாரணமாக மட்டுமே இங்கே அதை கவனிக்க வேண்டும்)
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். ஒரு படத்தை பிடித்தால் பார்க்கிறோம். பிடிக்காவிட்டால் புறக்கணிக்கப் போகிறோம். இதில் போலிகளை இனம் கண்டு என்ன ஆகப்போகிறது? நியாயமான கேள்விதான். ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. போலிகளின் ஆரவாரத்துக்கு மத்தியில் ஆரண்ய காண்டம் போன்ற நல்ல படங்கள் கவனிப்பாரின்றிப் போய்விடும் அவலம் அடிக்கடி நிகழ்கிறது. நல்லவேளையாக ஆடுகளம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், நான் கடவுள், கடல், ஜிகிர்தண்டா போன்ற நல்ல படங்களுக்கு இந்த அவலம் நிகழவில்லை. ஆயினும் போலிகளைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.
இந்த விழிப்புணர்வு சினிமாவைவிட இலக்கியத்தில் அதிகம் தேவை. காரணம் ஒரு போலி சினிமா பார்ப்பதால், பெரிய இழப்பு ஒன்று நிகழாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் நல்ல சினிமா ஒன்றை பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இலக்கியம் அப்படி அன்று. நம் ஊரில் புத்தக வாசிப்பு வெகு குறைவு. இதை குறையாகச் சொல்லவில்லை. நம் சூழல் அப்படி இருக்கிறது. நாம் ஒரு வருடத்தில் படிப்பதே ஐந்து புத்தகங்கள்தான் இருக்கும். குப்பை என்பது தெளிவாகத் தெரிந்துவிடுவதால், எப்படியும் அவற்றை தவிர்த்து விட்டுத்தான் இந்த ஐந்தை தேர்ந்தெடுப்போம். இந்த ஐந்தில் நான்கின் இடத்தை போலிகள் பிடித்து விட்டால், படித்தே ஆக வேண்டிய சிறந்த நூல்களை நம் வாழ்நாளில் படிக்க முடியாமலேயே போய்விடும். நம் வாழ்நாள் எல்லை அற்றது என்றால் பிரச்சினை இல்லை. போலிகள், அசல்கள் என எல்லாவற்றையும் படிக்கலாம். ஆனால் நம் குறுகிய வாழ்நாளில் அனைத்தையும் படிக்க முடியாது. அப்படியே படித்தாலும் ஒரு ஃபேக் நூலை படிக்கிறோம் என்ற விழிப்புடன் படிப்பது அவசியம். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர முடியும்.
ஃபேக் இலக்கியம் என்றால் என்ன ? போலியான ஒன்றை நம்மை நம்பச் செய்வதே ஃபேக் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. ஒரு நாவல் வெளிவரும்போது உணர்ச்சி வசப்பட்டு சிலர் அதைப் பாராட்டி விடுவார்கள். மீள் வாசிப்பின்போது அந்தப் பாராட்டை திரும்பப் பெறுவது உண்டு. எனவே ஒரு நாவலின் உண்மைத்தன்மையை அறிய கொஞ்ச காலமாவது அதற்கான எதிர்வினைகளையும், அந்த நாவலையும் தொடர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது. ஃபேக் நாவல் அல்லது சிறுகதை என தனி ஒருவரின் தீர்ப்பை வைத்து முடிவு செய்ய முடியாது.
உதாரணமாக ஜி.நாகராஜனின் எழுத்துகள் அவை வெளிவந்த காலகட்டத்தில் முக்கியமானவைதான். அதுவரை பேசாத கதைக்களனை பேசியதால் அதிர்ச்சி அலைகள் உருவாகின. அந்த அடிப்படையில் பாராட்டப்பட்டது. சிலர் எதிர்க்கவும் செய்தனர். அந்த சர்ச்சைகள் இல்லாத இன்றைய நிலையில் அவை எப்படி மதிப்பிடப்படுகின்றன என்பதே முக்கியம். ஒரு நாவல் வெளிவரும்போதே, சென்சார் போர்டு போன்ற ஓர் அமைப்பு ஃபேக் நாவல் என தரம் பிரிப்பது இயலாத ஒன்று .
அவரது பூர்வாசிரமம் என்ற கதையை பார்க்கலாம். பாலியல் தொழிலாளி ஒருத்தியை தேடிச் செல்கிறான் ஒருவன். அவளுடன் பேசி விட்டு, சுகித்து விட்டு கிளம்புகிறான். அவளை அவனால் மறக்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து மீண்டும் அவளைப் பார்க்கிறான். அவள் இல்லை. அவளுக்குத் திருமணம் ஆகி போய்விட்டதாகவும் இப்போது பாலியல் தொழில் செய்வதில்லை என்றும் சொல்கிறாள் அவள் அம்மா. அவன் ஏமாற்றம் அடைகிறான். அவளுக்குப் பாவமாக இருக்கிறது. சரி வந்தது வந்துட்ட, நீ ஏமாறவேண்டாம், என்னை எடுத்துக்கொள் எனச் சொல்லி அவனை சந்தோஷப்படுத்தி, வாடிக்கையாளர் சேவையை கச்சிதமாக முடித்து அனுப்புகிறாள். அதற்காக காசுகூட வாங்குவதில்லை. இலவச சேவையாம்.
இந்தக் கதையை படித்தால், பாலியல் தொழிலாளிகளின் கஷ்டங்கள், வலிகள் என எதுவும் நமக்குப் புரிவதில்லை. அவர்கள் என்னவோ மனப்பூர்வமாக இதைச் செய்வது போலவும், கஸ்டமர் சேடிஸ்ஃபேக்ஷன் மிக முக்கியம் எனக் கருதும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம்போல நடப்பதாகவும் காட்டியுள்ளார். ஒரு பெரிய பிரச்சினை ஒன்றை நீர்த்துப் போகச்செய்து ரொமாண்ஸ் செய்கிறது இந்த்க் கதை.
ஆனால் படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக குப்பை என ஒதுக்கிவிட முடியாது. மொழி ஆளுமை, சித்திரிப்பு என அழகாக உள்ளது. எங்காவது இது உண்மையாக நடந்திருக்கவும்கூடும். ஆனால் அது கலாபூர்வமான அனுபவத்தை தரவில்லை. கதை ஆசிரியரை நாம் எந்த விதத்திலும் குறை சொல்லவில்லை. ஆனால் இது போன்ற ஃபேக் கதைகளில் தேங்கிவிட்டால், உண்மையான படைப்புகளைப் படிக்க நேரம் கிடைக்காமல் போய்விடும்.
உதாரணமாக, ஒரு சிறுகதையில் ஒரு பாலியல் தொழிலாளியின் வலியை அற்புதமாக படைத்துக்காட்டி இருப்பார் மாப்பசான். தமிழ் சூழலில் எத்தனைபேர் அதை படித்திருப்பார்கள்.
ஃபிரெஞ்சு, ஜெர்மன் யுத்த காலகட்டத்தில் சில ஃபிரெஞ்சு குடியானவர்கள் சிலர் வேறொரு ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள். அவர்களுடன் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருத்தியும் செல்கிறாள். அவர்களுக்கு தன்னிடம் இருந்த உணவுப் பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்கிறாள். வழியில் அவர்கள் ஜெர்மன் அதிகாரியிடம் சிக்கிக்கொள்கின்றனர். அந்த அதிகாரி, அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் அந்தப் பெண் தன்னுடன் படுக்க வேண்டும் என்கிறான். அவள் கோபமாக மறுக்கிறாள். மற்றவர்களும் அவளை ஆதரிக்கின்றனர். அதிகாரியோ பிடிவாதமாக இருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் மனம் மாறுகின்றனர். அதிகாரியின் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி சம்மதிக்கச் செய்கின்றனர். அவள் தன் தன்மானத்தை விட்டுக்கொடுத்து, எதிர்தரப்பு அதிகாரியுடன் படுத்து, அனைவருக்கும் விடுதலை வாங்கித் தருகிறாள். கிளம்பியதும் அவர்கள் நன்றி மறந்து, அவர்கள் கணவான்கள் போலவும் அவள் மட்டும் அற்பப் பிறவி போலவும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கு உணவும் விடுதலையும் அளித்த அவளுடன் பேசுவதும் இல்லை. தமது உணவை அவளுடன் பகிர்வதும் இல்லை. கதையில் இறுதியில் அவளுடன் சேர்ந்து நாமும் கண்ணீர் சிந்துகிறோம்.
இந்தக் கதையை படித்தால் அன்றைய சமூகச் சூழல் (அந்தப் பயணிகள் அன்றைய சமூகத்தை பிரதிபலிக்கும்படி சித்திரிக்கப்பட்டுள்ளனர்), தேச சூழல், புறக்கணிப்பின் வலி என மறக்க முடியாத அனுபவமாக நம்முள் சேகரமாகிறது. பலவீனமான ஒருவர் மீதான சமூகத்தின் புறக்கணிப்பு என்ற அர்த்தத்தில் இது நடந்த இடத்தையும் காலத்தையும் மீறி ஒட்டு மொத்த பார்வையை அளிக்கிறது. இந்த அனுபவம் பூர்வாசிரமம் கதையில் கிடைப்பதில்லை. இதுதான் அசலுக்கும் போலிக்குமான வித்தியாசம்.
நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு போன்ற ஆக்கங்களை படிக்கும்போது, நமக்குள் எதுவும் நிகழ்வதில்லை. வாசகன் குறுக்கீட்டுக்கோ, கற்பனைக்கோ எந்த இடைவெளியும் இல்லை. ஆனால் வடிவ நேர்த்தி, சுவையான நடை, வித்தியாசமான பாத்திரங்கள் என இருப்பதால் இவற்றை புறக்கணிக்கவும் முடியாது. கண்டிப்பாக இவற்றை வாசிக்க வேண்டும். ஆனால் ஃபேக் இலக்கியத்தைப் படிக்கிறோம் என்ற பிரக்ஞையும் வேண்டும்.
குறத்தி முடுக்கு நாவலில் தங்கம் என்ற பெண் தன் கணவனால் வஞ்சிக்கப்பட்டு பாலியல் தொழில் செய்து வருகிறாள். அவளை ஒருவன் உள்ளன்போடு நேசிக்கிறான். திருமணம் செய்யவும் ஆயத்தமாக இருக்கிறான். அவளோ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என தன் கணவனுடனேயே வாழப் போய்விடுகிறாள். இப்படி 'கற்புக்கும்' கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்வதற்கும் புதிய விளக்கம் அளிப்பது சராசரி தமிழ் மனதுக்கு குதூகலம் ஏற்படுத்தினாலும், அதில் யதார்த்தமும் இல்லை. நமக்கு எந்த வித உணர்வெழுச்சி ஏற்படுவதும் இல்லை.
நாளை மற்றுமொரு நாளே விளிம்பு நிலை மக்களைப்பற்றிப் பேசுகிறது. ஆனால், அவர்களது வலி, சந்திக்கும் ஏமாற்றம், அவர்களது மகிழ்ச்சி என எதுவும் நம் மனத்தில் பதிவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அற்புதத் தெறிப்புகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு சாகச நாவலாகவே நம் மனத்தில் பதிகிறது. கதையின் வடிவத்திலும் நடையிலும், சுவையான சம்பவங்களிலும் காட்டப்படும் அக்கறை சமூக பாதிப்பு என்பதில் காட்டப்படவில்லை. நவீனத்துவ காலகட்டத்தில் உருவான ஒரு சார்பு எதார்த்தவாதமே நாவல் முழுக்க விரவி இருக்கிறது. கதையில் வரும் அனைத்து பாலியல் தொழில் பெண்களும் மனைவி என்ற அந்தஸ்தை பெரிதாக கருதுகிறார்கள். ஓர் ஆண் தான் அவர்களது இழி நிலைக்கு காரணமாக இருந்தாலும், ஆணின் பிடியில் இருந்து அவள் தப்ப நினைப்பதில்லை. என்ன இருந்தாலும் ஆணுடன் இருப்பதே பாதுகாப்பு என்ற சிந்தனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தன்னுடன் வாழும் மீனாவை யாருடனாவது ஒப்படைத்து அவளை செட்டில் செய்வதற்கு கந்தன் அப்படி உருகுகிறான். மகள் திருமணத்துக்காக உருகும் யதார்த்த உலக தந்தை என்ற கான்சப்ட் லேசாக மாற்றப்பட்டு இருக்கிறது .அவ்வளவுதான். அதாவது நவீனத்துவம் என்ற பழைய சரக்குதான், போத்தல் மட்டும் மாறி இருக்கிறது. நாவல் என்பது திட்டவட்டமான முடிவை அளிக்கத் தேவையில்லை. அளிக்கவும் கூடாது. ஆனால் ஒட்டுமொத்த பார்வையை அளிக்க வேண்டும். இந்த நாவலைப் பொருத்தவரை சுவையாக படைக்கப்பட்ட ஓர் ஆவணமாகவே நின்று விடுகிறது.
செய்தித் தாளைப்போல நடப்பதை அப்படியே பதிவு செய்வது இலக்கியம் அல்ல. அதுவரை சொல்லப்படாத வாழ்க்கையை பதிவு செய்தது அன்றைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இப்போது படிக்கையில் நமக்கு ஓர் ஒட்டுமொத்த பார்வை தருகிறதா, உணர்வெழுச்சி ஏற்படுத்துகிறதா என்பது கேள்வி.
உதாரணமாக புயலிலே ஒரு தோணி நாவல் நடக்கும் கதைக் களனும், காலமும் நமக்கு அன்னியமாக இருக்கலாம். ஆனால் அந்தக் கதை நமக்கு இன்றும்கூட புதிய அர்த்தங்களைத் தருகிறது
கடல் கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்தபோதோ யாரும் கடிகாரம் பார்க்க்கவில்லை. பார்த்தபோது, எல்லா கடிகாரங்களும் நின்று போய் இருந்தன. என்பது போன்ற வரிகள், வெட்டப்பட்ட தலைகளுக்கு தலை சீவிவிடும் காட்சி என நம்மை சொற்களுக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு இழுத்துக் கொண்டுச் செல்கிறது.
மொழியின் ஊடாகவே மனிதன் சிந்திக்கிறான், உணர்கிறான், வாழ்கிறான். ஆனால் மொழி என்பது வெறும் ஊடகம்தான் என்பது அவன் ஆழ் மனத்துக்கு தெரிந்திருக்கிறது. மொழிக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும் ஒன்றை உணர விழைகிறான். அதற்கு மொழி உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறான் என்கிறார் ஜெர்மானிய அறிஞர் வில்ஹெம் வான் ஹம்போல்ட். மொழி ஆளுமை, செறிவான நடை ஆகியவை முக்கியம்தான். ஆனால் அவை மட்டுமே போதாது . மொழி மூலம் மொழிக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். புயலிலே ஒரு தோணியில் நடக்கும் இந்த ரசவாதம் நாளை மற்றுமொரு நாளேயில் நடக்கவில்லை.
விளிம்பு நிலை வாழ்க்கையை பதிவு செய்வது என்பது வேறு விஷயம். அந்தப் பதிவால் என்ன நிகழ்ந்தது என்பதே முக்கியம். உதாரணமாக காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற ஸ்டீவன் ஹாக்கின்ஸ் நாவல் முக்கியமான அறிவியல் பதிவு. ஆனால் அது நம்மை எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யார் படித்தாலும் ஒரே விதமாகத்தான் புரியும் . ஆனால் ழார் பத்தாய் நாவலான கண்ணின் கதை அப்படி அன்று. நம்மை அது ஏதோ செய்து விடுகிறது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் தெரிகிறது. சிலருக்கு அது பாலியல் கதையாகத் தோன்றலாம். சிலருக்கு போரடிக்கலாம். சிலருக்கு வேறோர் அனுபவம் கிடைக்கலாம். நூறு பேர் படித்தால் நூறுவித கருத்துகள் சொல்லக்கூடும். வெறும் பதிவில் இது நிகழாது.
இலக்கியம், படைப்பாற்றல் என்பது யதார்த்தத்தை பதிவு செய்வது மட்டுமா.. ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள்
சோவியத் சோஷலிஸ்ட் குடியரசுகள் ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். லெனின் அதை பார்வையிட வந்திருந்தார். பலரும் தம் கைத்திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். வண்ணங்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா, ஆர்ப்பரிக்கும் அருவி, சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி, பனி அடர்ந்த புல்வெளி என ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சும்வண்ணம் வரைந்து கொண்டு இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஒரு சிறுவனின் ஓவியம் அவரை திகைக்க வைத்தது. அவன் ஓவியம் வரையாமல் கறுப்பு நிறத்தை தீட்டிக்கொண்டு இருந்தான். என்ன செய்கிறான் என விசாரித்தார். வானத்தை வரைகிறேன் என்றான் பையன். லெனினுக்கு குழப்பம். தம்பி, வானத்தை நீ பார்த்ததில்லையா. ஊர்ந்து செல்லும் மேகம், நட்சத்திரம், சிறகடிக்கும் பறவை, ஒளி வீசும் நிலா என்றல்லவா வானம் இருக்கும் என்றார். அவன் அவரை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். சென்றார். அது ஒரு சேரி போன்ற பகுதி. ஒழுங்கான சாலை இல்லை. சுகாதாரமற்ற சூழல். தாங்க முடியாத துர் நாற்றம். குறைந்தபட்ச வசதிகளுடன் ஒரு வீடு. உள்ளே அழைத்துச் சென்றான். என் ஜன்னல் வழியாகப் பாருங்கள் என்றான். ஒரு தொழிற்சாலை கரும்புகையை கக்கியபடி சூழலை மாசு படுத்திக்கொண்டு இருந்தது. இத்தைகைய சூழலில் வாழும் ஒருவனுக்கு வானம் அழகு கொஞ்சும் வெளியாகவோ தோன்றும்? கலை என்பது இருப்பதை பிரதிபலிப்பதல்ல. இருப்பதன் பொருளை சொல்வது என்கிறார் அரிஸ்டாட்டில். வானம் எப்படி இருக்கிறது என்பதை பதிவு செய்ய ஒரு புகைப்படக் கருவி போதும். ஆனால் வானம் எப்படி தோன்றுகிறது என்பதை தன் பார்வையில் சொல்லி அதன் மூலம் ஒரு தரிசனத்தை அளிக்க ஒரு கலைஞனால்தான் முடியும். அந்த சிறுவனில் ஒரு கலைஞனைக் கண்டார் லெனின். அவனை தனியே அழைத்து சென்று சிறப்புப் பயிற்சிகள் அளிக்க உத்தரவிட்டார். அந்தச் சிறுவன் பிற்காலத்தில் சோவியத் யூனியனுக்கான அடையாளச் சின்னம் உருவாக்கும் அணியில் பெரும்பங்கு ஆற்றினான் என்பதெல்லாம் வரலாறு.
வாழ்க்கையை, சமகால சூழலை பதிவு செய்வது தவறு என்பதல்ல நாம் சொல்வது. ஆவணப்படுத்துதல் என்பது முக்கியமான பணிதான். அதையும்கூட கலைப்பூர்வமாக செய்பவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால் பதிவு செய்தலுக்கு இலக்கிய பிரதிக்கும் இடையேயான வித்தியாசத்தைப் பற்றிய பிரஞ்ஞை மிகவும் முக்கியம். ஆழி சூழ் உலகு நாவல் கடல் வாழ்க்கையை பதிவு செய்வதால் மட்டும் முக்கிய நூலாக கருதப்படவில்லை. அந்த வாழ்க்கையின் ஊடாக நிலவும் காதல், காமம், துரோகம், பிரிவு என மானுட வாழ்வை அங்கே பிரதிபலிக்க செய்வதால்தான் அது முக்கிய நாவலாகிறது. சோ.தர்மனின் கூகை நாவல் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை செய்தித்தாள்போல பதிவு செய்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது. வலுவான உடல் அமைப்பும், பலமும் கொண்ட கூகை, தன் பலம் அறியாமல் துரத்தப்படும் வாழ்வியல் அபத்தத்தை குறியீடாக மாற்றுவதன் மூலம் கலைப்படைப்பாக உருவெடுக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலை படித்தால் கிராம அனுபவமோ, ஜல்லிக்கட்டு அனுபவமோ இல்லாத ஒருவனுக்குக்கூட அவனுக்கான பிரத்யேக அனுபவம், பார்வை கிடைத்து விடுகிறது. மிருகத்தை அதாவது இயற்கையை அடக்கி ஆள முனையும் ஆதி மனிதனின் இச்சையை நாவலில் கண்டடைய முடியும். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கான நுண் விபரங்கள், அன்றைய வாழ்வியல், தொழில் நுட்ப பயிற்சிகள் என ஆவணமாகவும் திகழ்கிறது. ஆவணமாக்கல் மட்டுமே கலையாகாது என்பதே நாம் சொல்வது. உதாரணமாக அகிரா குரசேவாவின் ரோஷமான் திரைப்படத்தில் மழை ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறது. அங்கு மழை பெய்கிறது என்ற தகவலை பதிவு செய்வதன்று அவர் நோக்கம். இயற்கை எதனாலும் பாதிக்கப்படாமல் அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு அதன்போக்கில் சென்றுகொண்டே இருக்கிறது என்ற குறியீடாகவே மழை பயன்பட்டுள்ளது. எனவே அந்த மழை அனைவருக்கும் பொதுவான ஒரு மொழியாக மாறி விடுகிறது.
ஃபேக் எழுத்துகளை படைக்கும் நிர்ப்பந்தம் எப்படி ஒரு படைப்பாளிக்கு உருவாகிறது? உதாரணமாக பாலகுமாரனை பார்க்கலாம். அவர் பின் நவீனத்துவம், மெட்டா ஃபிக்ஷன், இருத்தலியல் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆன்மீகம், விழிப்புணர்வு என அவருக்கு தெரிந்ததை எழுதிக்கொண்டு இருக்கிறார். திடீரென யாராவது புகுந்து, இவ்வளவு பேசும் நீங்கள் தலித்திய நாவல் ஏன் எழுதவில்லை. அவர்கள் மேல் உங்களுக்கு அக்கறை இல்லையா எனக் கேட்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் சற்று யோசிப்பார். சரி நாமும் ஒரு தலித்திய நாவல் எழுதுவோம் என நினைத்து மேலோட்டமாக ஒரு நாவல் எழுதுவார். தலித்துகள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களது அவமானங்கள், அவர்களது வீரம் செறிந்த வரலாறு, அவர்களது தொன்மங்கள், நம்பிக்கைகள் போன்றவை எதுவும் தெரியாமல் எழுதப்படும் நாவல் ஃபேக் நாவலாக உருவெடுக்கிறது. இத்தகைய நாவல்களில் தொழில் நுட்பங்களும் சித்திரிப்புகளும் சரியாக இருக்கலாம் . ஆனால் இலக்கியத்தின் மற்ற கூறுகளான உணர்வெழுச்சி, நிகழ்வாழ்க்கை அனுபவம் போன்றவை இந்த நாவல்களில் கிடைக்கவே கிடைக்காது. முன் விளையாட்டு, கண்டு ரசித்தல், கேட்டு அனுபவித்தல், சுவைத்து மகிழல், மென்மையாக கிள்ளுதல், இதமாக கடித்தல், பதமாக தட்டுதல் என எல்லாமே முயக்கத்துக்கு அவசியம்தான். ஆனால் உச்ச நிலை எனும் ஆர்கசம் எய்தப்படாவிட்டால், அது முழுமை ஆகாது அல்லவா. அதுபோல ஃபேக் இலக்கியங்களில் முழுமை உணர்வு கிடைக்கவே கிடைக்காது. மொழி அழகு, செறிவார்ந்த நடை போன்றவை இருந்தால்தான் மனதை ஈர்க்க முடியும். நாவலை படிக்க வைக்க இது அவசியம் .ஆனால் இவை மட்டுமே நாவலின் வெற்றிக்கு போதாது. மொழியின் மூலம் மொழியற்ற உணர்வை, உணர்வெழுச்சியை அடைய செய்வதே நாவலின் படைப்பாற்றலின் வெற்றி. சாகச நாவல்கள், பல்ப் எழுத்துகளுக்கு இது தேவை இல்லை. இந்த உணர்வெழுச்சியை எழுப்பாத எழுத்துகள் இலக்கியப் படைப்புகள் என முன்வைக்கப்படும்போதுதான் அவை ஃபேக் என அழைக்கப்படுகின்றன.
சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் ஃபேக் எழுத்துக்கு இன்னொரு சான்றாகும். வெளி நாட்டவர் இந்தியாவுக்கு இன்ப சுற்றுலா வந்துவிட்டு மேலோட்டமாக கருத்து சொல்வார்களே. அந்த பாணியிலான நாவல் இது. இதை பின் நவீனத்துவ நூலாக சிலர் முன்வைக்கிறார்கள். பின் நவீனத்துவம் என்பது புனைவை புனைவாகவே முன் வைக்கிறது. மெட்டா ஃபிக்ஷன் எனச் சொல்லப்படும் பாணியை கையாள்கிறது. லட்சியக்கனவுகளை நிராகரித்து பகடி செய்கிறது. தன்னையே நிராகரிக்கிறது. ஆனால் ஜேஜே சில குறிப்புகள் என்ற நாவலில் ஓர் எழுத்தாளனின் ஆளுமையை மையமாக வைத்தே நாவல் சுழலுகிறது. இந்த ஹீரோயிசமோ கடைசியில் அந்த எழுத்தாளனின் வீழ்ச்சிக்காக கண்ணீர் சிந்தும் சோக காவியமோ பின் நவீனத்துக்கு முற்றிலும் எதிரானது. இந்த காரணங்களால்தான் அந்த நாவல் வந்தபோதே பின் நவீனத்துவவாதிகளால் இந்த நாவல் புறக்கணிக்கப்பட்டது. பின் நவீனத்துவம் என்பதை தவிர்த்துவிட்டு ஒரு படைப்பாகவும் அது நம் மனதை கவரவில்லை. அது குறிப்பிட்ட காலத்துக்கான முக்கியமான படைப்பு என்ற பெயரை ஒரு புதிய வடிவத்துக்காக பெறுகிறதே தவிர காலம் கடந்த படைப்பாக ஏற்க இயலாது. இருத்தலிய கோட்பாட்டை சொல்ல முயன்று இருக்கிறார் நாவலாசிரியர். அதில் வென்றாரா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அலுப்பூட்டும் அளவுக்கு ஜேஜே கதாபாத்திரத்தின் சிந்தனைகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த சிந்தனைகளை எப்படி வந்தடைந்தான், அந்த சிந்தனைகளை செயல்படுத்த என்ன செய்தான் என்பதற்கு மண் சார்ந்து, காலம் சார்ந்து எந்தப் பின்னணியும் இல்லை. அவனுடைய எதிர்தரப்பு என்பதும் இல்லை. சமூகம் நம் மேல் சுமத்தும் விழுமியங்கள், மனரீதியான அழுத்தங்கள் போன்றவற்றுக்கு எதிரான தனி நபர்வாதத்தை நாவல் முன் வைக்கிறது. ஆனால் இது குறித்த முரணியக்க பார்வையோ, இருதரப்பு விவாதங்களோ இல்லவே இல்லை. அதை இன்றைய வாசகன் ஒருவன் படித்தால் அவன் அந்தப் பிரதியை எந்த விதத்திலும் இன்றைய கால அடிப்படையில் புரிந்துகொள்ளவே முடியாது. ஜே.ஜே. என்பவரைப்பற்றிய துதியாக மட்டுமே நாவல் நின்று விடுகிறது.
ஆனாலும் ஊடக பலம், சு.ராவின் ஆளுமைத் திறன், அற்புதமான மொழி வளம், கவிப்பூர்வமான சில சித்திரிப்புகள், அவருடைய சீடர்களின் ஆதரவு போன்றவை காரணமாக அதன் புகழ் இன்றும் சற்றும் மங்காமல் நீடிக்கிறது. இவர்களில் நாவல் வெளிவந்த புதிதில் சாரு அதை எதிர்த்து சிறு பிரசுரம் வெளியிட்டார். க.நா.சு., தி.க.சி. போன்ற பல விமர்சகர்களும் நாவலை நிராகரித்தனர். அப்போது நாவலைப் பாராட்டிய ஜெயமோகன் காலப்போக்கில் அவரும் எதிர்ப்பு ஜோதியில் கலந்துவிட்டார்.
நகுலன், அசோகமித்ரன், தஞ்சை பிரகாஷ், சிங்காரம் என பலர் இருக்கும்போது ஃபேக் நாவல்களை ரசிக்கும் போக்கை புரிந்துகொள்ள 'மார்க்ஸ் பிறந்தார்' (எழுதியவர் ஹென்றி வோல்கோவ், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ) என்ற நூலில் இருந்து ஒரு மேற்கோளை கவனியுங்கள்.
“எளிய மனம் கொண்டவர்கள் ( ஃபிலிஸ்டைன்கள்) எப்போதும் மூலத்தை விட கேலி சித்திரத்தையே விரும்புவார்கள். புயற்காற்று அவர்களுக்கு பீதியை கொடுக்கிறது. ஆனால் அதற்கு பிறகு மிஞ்சும் புழுதி அவர்களிடம் குதூகலம் ஏற்படுத்தும்“.
இப்படி ஃபேக் எழுத்துக்கு உதாரணங்களை கொடுத்துக்கொண்டே போகலாம். ஜே.ஜே. சில குறிப்புகளையும், ஜி.நாகராஜன் படைப்புகளையும் மட்டும் இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது. ஜே.ஜே. சில குறிப்புகளை முன் மாதிரியாகக்கொண்டு புற்றீசல் போல பல 'பின் நவீனத்துவ' நாவல்கள் வெளிவந்தன. அவை ஃபேக் என்ற அடையாளத்தைக்கூட பெற முடியாமல் காலமென்னும் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. அவற்றின் பெயர்களை எல்லாம் இது போன்ற கட்டுரைகளில் நினைவுபடுத்தினால்தான் உண்டு.
அதேபோல ஜி.நாகராஜனை முன் மாதிரியாகக்கொண்டு அதிர்ச்சி மதிப்பீடுகளை நோக்கமாகக் கொண்டு புற்றீசல்கள் கிளம்பின என்பதும் வரலாறு. எனவேதான் ஒரு சோற்றுப் பதமாக இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடவேண்டி இருந்தது.
இலக்கியம் என்பதில் ஃபேக் என்பது ஆபத்து என்றால் செய்திகளில் ஃபேக் என்பது இன்னும் மோசமான ஆபத்தாகும். உதாரணமாக காசா பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் என்ற இயக்கத்துக்கும் மோதல் என செய்திகள் வெளியாகி நம் மனத்தில் பதிந்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தை பல நாடுகள் தீவிரவாத இயக்கமாகவே கருதவில்லை என்பதே உண்மை. காசா பகுதியை ஆட்சி செய்து வரும் அவர்கள் தம் பகுதி தாக்கப்படும்போது எதிர்த்துப் போராடுகிறார்கள். அதை அந்த இயக்கத்தின் மோதலாக சித்திரிப்பதே தவறு. உதாரணமாக கார்கிலில் பாகிஸ்தான் அத்துமீறியபோது, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அதை பிஜேபி படை பதிலடி கொடுத்தது என எழுதினால் அது தவறான தகவல் அல்லவா? அப்போது பிஜேபி ஆட்சி செய்தாலும், போரில் ஈடுபட்டது பிஜேபி தீவிரவாதிகள் அல்லர். தம் பகுதியை பாதுகாக்க இந்தியா எடுத்த நடவடிக்கை அது. அது போல, இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை, இஸ்ரேலுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான மோதலாக செய்தி வெளியிடுவது ஃபேக் ரிப்போர்ட்டிங் ஆகும் .
சமீபத்தில் யுக்ரேனில் ஒரு பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அனைவரும் அவசர அவசரமாக அது போராளிகளின் (பிரிவினைவாதிகளின் ?) வெறிச்செயல் என செய்தி வெளியிட்டனர். ரஷ்ய அதிபர் புடின் பயணம் செய்த விமானத்தை சுட்டு வீழ்த்த யுக்ரேன் செய்த சதியாகவும் இருக்கலாம் என்பதை பலர் சுட்டிக்காட்டவில்லை. காலப்போக்கில் இது போன்ற ஃபேக் செய்திகளே நம் மனத்தில் பதிந்து விடுகின்றன. தமிழ் மீனவர்கள் சிறைப்பிடிப்பு (இந்திய மீனவர்கள் இல்லை), ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் (சீக்கிய மாணவர்கள் இல்லை) போன்றவையும் சிறந்த உதாரணங்கள் ஆகும்.
ஃபேக் என்பதில் அதிகம் பாதிக்கப்பட்ட இலக்கிய வடிவம் கவிதை எனலாம். குறிப்பாக ஹைக்கூ அதிகம் பாதிக்கப்பட்டு இன்று மூன்று வரிகளில் எழுதப்படும் எல்லாமே ஹைக்கூ என அழைக்கப்பட்டு வருகிறது.
"வங்கியில் நகை அடகு வைத்தேன்
மீட்டு விட்டேன்.
வங்கி ரிசப்ஷன் அழகியிடம் மனதை அடகு வைத்தேன்
மீட்க முடியவில்லை..
சுதந்திரம் தினம்
கொண்டாடினார்கள்
சிறைக்கைதிகள்
போலீஸ் காவலுடன்
பவனி வந்தார்
உலகை காக்கும் கடவுள்"
இப்படி எழுதி கவிதை என்கிறார்கள். இவற்றையாவது விடலைத்தனமான கவிதை எனலாம் . ஆனால் இலக்கியம் சார்ந்து செயல்படும் பல கவிஞர்களேகூட ஃபேக் கவிதைகளே எழுதி வருகிறார்கள். பட்டியல் கவிதை, ஃபார்முலா கவிதை, சமூக சீர்திருத்த கவிதை, கிசுகிசு பாணி கவிதை என எழுதி தமிழில் கவிதைக்கான இடமே இல்லாமல் செய்து விட்டார்கள். வாய்ப்பாடு கவிதை ஒன்றை தனது சிறந்த கவிதை என நம்பும் ஓர் இலக்கியவாதி, இலக்கியக் கூட்டங்களில் தவறாமல் அந்தக் கவிதையை சொல்லி பார்வையாளர்களை கலக்கத்துக்கு ஆளாக்குவதுண்டு.
கட்சிகளைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் ஃபேக் கட்சிகள் என எதுவும் இருப்பதாக சொல்ல முடியாது. எல்லா கட்சிகளின் நோக்கங்களும் மக்களுக்கும் கட்சியினருக்கும் தெளிவாக தெரிந்துள்ளன. ஜாதி நலன், குடும்ப நலன், மத நலன் என அவர்கள் நோக்கங்களை தெரிந்து வைத்துக்கொண்டேதான் எல்லா கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கின்றனர். இவற்றில் இடதுசாரிக் கட்சிகளை ஃபேக் கம்யூனிச இயக்கங்கள் என ஒரு வாதம் உண்டு . ஆனால் வெகுஜனவாதமாக இல்லை. அகில இந்திய அளவில் ஆம் ஆத்மி கட்சி மீது ஃபேக் கட்சி என்ற குற்றச்சாட்டு உண்டு.
பொழுதுபோக்கு, மதம், ஜாதி, கட்சி நலன்களுக்காக நடத்தப்படும் பத்திரிகைகள் என்ற அடையாளத்துடன் நடத்தப்படும் பத்திரிகைகள் ஆபத்தானவை அல்ல. ஆனால் நடு நிலை, இலக்கியம் என்ற அடையாளங்களுடன் நடத்தப்படும் சார்பு நிலை பத்திரிகைகள் ஆபத்தானவை. அது போன்ற ஃபேக் இலக்கிய பத்திரிகைகள் இங்கு ஏராளம் உண்டு. ஒரு குறிப்பிட்ட கட்சி பிரமுகரின் நிதி உதவியுடன் பத்திரிகை ஆரம்பிக்க ஒரு கவிஞர் இன்னொரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்துகொண்டே முயற்சித்ததாகவும், அந்த பிரமுகரின் அன்பை சம்பாதிக்கும்பொருட்டு தான் ஆசிரியராக இருந்த பத்திரிகை சந்திப்புகளின்போது அலைபேசியை இயக்கத்தில் வைத்து ரகசியங்களை வெளியே கடத்தியதாகவும், அந்தப் பத்திரிகை உரிமையாளர் குற்றம் சாட்டினார். அந்த குற்றச்சாட்டு சரியான முறையில் எதிர்கொள்ளப்படவில்லை. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல அந்த பிரமுகர் சார்ந்த கட்சியிலேயே அந்த கவிஞர் ஐக்கியமாகி, அந்த இலக்கிய பத்திரிகையை கட்சி பத்திரிகையாக்கி விட்டது ஒரு பின் நவீனத்துவ காமெடி.
இவற்றில் எல்லாம் இருக்கும் போலிகள் ஒட்டுமொத்த சமுதாயத்தைப் பாதிக்கின்றன ஆனால் ஃபேக் பெண்ணியம் என்பது பெண்களை மட்டுமே அதிகம் பாதிக்கிறது. பெண்ணியம் சார்ந்த எழுத்துகள், காத்திரமான பணிகள் என ஒரு தரப்பு இயங்குவது மனத்துக்கு நிறைவளிக்கும் விஷயம். ஆனாலும் சில துறைகளில் ஃபேக் இருப்பதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரன் பாதிக்கப்பட்டால், அந்த ஜாதிக்காரர்கள் ஒன்றாக சேர்ந்து ஆதரவளிப்பார்கள். மதம், கட்சி என பலவற்றின் அடிப்படையில் இப்படி சேர்வார்கள் . ஆனால் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றால் சக பெண் எழுத்தாளர், சக பெண் மருத்துவர் என எந்த அடிப்படையிலும் பெண்கள் ஒன்றாகச் சேர்வதில்லை.. ஆனால் அனைவரும் பெண்ணியம் பேசக்கூடியவர்கள் என்பது வினோதம். ஆங்கில மொழி பயன்பாட்டில் ஆணாதிக்க வார்த்தைகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டன. சேர்மன் என்பது சேர்பெர்சன் என மாறிவிட்டது. ஆக்ட்ரஸ் போன்ற வார்த்தைகள் ஆக்ட்டர் என மாறி விட்டன. எண்ணம் உறுதியாக இருந்தால், அவன் தான் எண்ணியதை நிச்சயம் அடைவான் என்பது போன்ற வாக்கியங்கள் வந்தால், அவன் / அவள் அடைவான் / அடைவாள் என இருபாலரையும் எழுதுகின்றனர். அல்லது புத்தக முன்னுரையில், இந்தப் புத்தகத்தில் அவன் என வருவது அவள் என்பதையும் குறிக்கும் என தெளிவாக சொல்லி விடுகின்றனர். இதெல்லாம் ஆங்கில சூழலில் பெண்ணிய இயக்கங்கள் எழுப்பிய குரலின் விளைவாகும். ஆனால், தமிழ் சூழலில் இன்னமும் நடிகை, ஆசிரியை, தலைவி, கவிதாயினி என்றே மரியாதைக்குறைவாக குறிப்பிட்டு வருகின்றனர். இதை மாற்ற பெண்ணிய இயக்கங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை. செல்வி, திருமதி என்ற பிரிவை இன்னமும் ஒழிக்கவில்லை. கற்பழிப்பு என்ற சொல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. சில பெண்ணியவாதிகள் குரல் கொடுப்பதை மறுக்கவில்லை. ஆனால் ஃபேக் பெண்ணியவாதிகளே அதிகம் என்பதால் எதுவும் மாறவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதில் ஃபேக் பெண்ணியவாதிகளின் போலித்தனம் இன்னும் மோசமானது. தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு கேட்பார்கள். ஆனால் தமது கட்சிகளில் அவர்களாகவே முன்வந்து இட ஒதுக்கீடு கொடுக்க வலியுறுத்துவதில்லை.
பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்ற இன்னும் சில தீவிரமான விஷயங்கள் உள்ளன. ஆனால் அவை பெண்ணியவாதிகள் மட்டும் குரல் கொடுக்க வேண்டிய விஷயங்கள் அல்ல. பொதுவான பிரச்சினைகள் என்பதால் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை.
இப்படி பல தளங்களிலும் செயல்படும் போலிகளை ஒழிப்பது சாத்தியம் இல்லை என்றாலும் போலிகளைப் பற்றிய விழிப்புணர்வு சாத்தியமே. அதற்கு நம் மதிப்பீடுகளும் பார்வையும் உண்மையாக இருந்தால்போதும்.

உலகப்கோப்பை கால்பந்து: உள்ளங்களை ஒன்றிணைத்த உன்னதம்

உயிர் எழுத்து  இதழில் வெளியான கட்டுரை  - ஆகஸ்ட் மாத கட்டுரை

ஆஃப்சைடு (Offside, 2005, இயக்கம், எரெஸ் டட்மார் & கய் நாட்டிவ், Erez Tadmor & Guy Nattiv, இஸ்ரேல் ) என்கிற ஏழு நிமிடமே ஓடக்கூடிய குறும்படத்தை யாரும் மறந்து இருக்க முடியாது. எல்லை காக்கும் பணியில் இரு ராணுவ வீரர்கள். ஒரு சின்ன கையடக்கமான வானொலியில் கால்பந்து நேர்முக வர்ணனை கேட்டபடி ரோந்து வந்துகொண்டு இருக்கிறார்கள். உலகக்கோப்பை இறுதிப் போட்டி. ஆட்டம் அனல் பறக்கிறது. சிக்னல் அவ்வப்போது பிரச்சினை செய்தாலும், வானொலியை அப்படி இப்படி திருப்பி வர்ணனையை கேட்கிறார்கள். அப்போது எல்லைத் தடுப்பு வேலியில் எதிர்தரப்பு ராணுவ வீரர்கள் இருவரை பார்த்து விடுகிறார்கள். இரு தரப்பு துப்பாக்கிகளும் சுடுவதற்கு தயாராகின்றன. துப்பாக்கிகள் குறி வைத்தாலும், வானொலி வர்ணனை தொடர்கிறது. அந்த எதிர்தரப்பு வீரர்களும் அந்த வர்ணனையை ஆவலுடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். எல்லைக்கோடு, அரசுகள், கட்சிகள், மொழி, சமுதாயம், மதம், துப்பாக்கி என பிரமாண்டமான பல விஷயங்கள் இரு தரப்பையும் பிரிக்கின்றன. அந்த சின்னஞ்சிறு வானொலிப்பெட்டி இரு தரப்பையும் இணைக்கிறது. மேட்ச் என்ன ஆகுமோ என இரு தரப்பு வீரர்களும் பதைபதைக்கின்றனர். வானொலிப்பெட்டி தவறுதலாக கீழே விழும்போது அனைவருமே பதறுகின்றனர். ஒரு வீரன், துப்பாக்கி குறி வைப்பதை நீக்கிவிடாமல், கால்களாலேயே வானொலியை மீண்டும் இயங்கச் செய்யும்போது, அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். வானொலி இணைக்கிறது. துப்பாக்கி பிரிக்கிறது. இந்த இரண்டும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்துகின்றன. கடைசியில் எது வென்றது என்பது கிளைமேக்ஸ். துப்பாக்கியா வானொலியா!!
கால்பந்துக்கு இப்படி அனைவரையும் இணைக்கும் ஆற்றல் உண்டு. இந்த இணைப்பு ஆற்றலை பல நாடுகளும் உணர்ந்துள்ளன. குறிப்பாக அன்றைய சோவியத் அரசு நன்கு உணர்ந்து இருந்தது. அன்றைய அதிபர் ஸ்டாலின் கால்பந்தில் ஆர்வம் காட்டி வந்தார். கம்யூனிச அகிலத்தின் தேசிய விளையாட்டாக கால்பந்து விளங்கியது என்றால் மிகையாகாது. இந்தியாவிலும்கூட கம்யூனிசம் வலுவாக உள்ள கேரளாவிலும், வங்காளத்திலும் (மட்டும்) கால்பந்து பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 1947 முதல் 1989 வரை கம்யூனிச நாடுகளில் ஒன்றாக விளங்கிய ஹங்கேரி, அந்தக் காலகட்டத்தில் கால்பந்தின் தன்னிகரற்ற சக்தியாக திகழ்ந்தது. இந்த நூற்றாண்டின் சிறந்த போட்டி என வரலாற்றில் இடம்பெற்ற அந்த ஆட்டம் 1953இல் இங்கிலாந்தில் நடந்தது. அதில் 90 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வியே காணாத இங்கிலாந்தை வீழ்த்தியது ஹங்கேரி. அந்த நாட்டில் கம்யூனிசம் வீழ்ந்தபின், கால்பந்தும் அங்கு நலிவடைந்தது வரலாறு. 1990இல் இருந்து இந்த ஆண்டு வரை (2014) உலக கோப்பை எதற்கும் தகுதி பெறாதது ஒரு காவிய சோகம்.
சோவியத் யூனியன் எந்த அளவுக்கு கால்பந்தில் ஆர்வம் காட்டியது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். உள் நாட்டுப் பிரச்சினைகள் முற்றி, யூனியனே கலைந்து போகும் நிலையில் இருந்த 1990ஆம் ஆண்டில், அவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் உலககோப்பை போட்டியை தனது நாட்டில் நடத்த ஆர்வம் காட்டியது சோவியத் யூனியன். இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டது. போட்டியில் இருந்து மற்ற நாடுகள் விலகிய நிலையில் இத்தாலியும் சோவியத் யூனியனும் மட்டுமே கடைசியில் போட்டியில் இருந்தன. வாக்கெடுப்பில் போட்டியை நடத்தும் வாய்ப்பு இத்தாலிக்குக் கிடைத்தது. அந்தமுறை சோவியத் யூனியனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருந்தால், சோவியத் யுக வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கக்கூடும். அடுத்த உலகக் கோப்பை 2018இல் ரஷ்யாவில்தான் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1990 வேறு. 2018 என்பது வேறு.
இப்படி அரசியல்ரீதியாக, பண்பாட்டுரீதியாக ஒவ்வொரு நாட்டுடனும் ஒவ்வொரு விதமாக கால்பந்து கலந்துள்ளது. நம் ஊரில் கால்பந்து முதன்மை விளையாட்டல்ல. இந்தியா உலக கோப்பைக்கு தகுதி பெறுவதும் இல்லை. ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக நம் ஊரிலும் ரசிக்கப்படுகிறது. ஏன் ரசிக்கப்படுகிறது என்பதை சற்று ஆராய்ந்தால் ரசிக்கத்தக்க சில விஷயங்களைக் காண முடியும்.
ஜோர்ஜ் அமடோ, போர்ஹேஸ், ஜூலியோ கொர்த்தசார், கப்ரியேல் கர்ஸியா மார்கோஸ், இசபெல் அலண்டே, ப்யூந்தஸ், மரியோ பர்கஸ் யோசா, நெரூதா, ஆக்டோவியா பாஸ் என லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் சிலருக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரஸீல், அர்ஜெந்தீனா, கொலம்பியா, சிலே போன்றவற்றின் மீது ஒருவித ஈடுபாடு ஏற்பட்டு அந்தந்த நாடுகள் ஆடும் விளையாட்டுகளை ரசிக்க ஆரம்பிப்பார்கள் . இலக்கிய வாசகர்கள் எல்லோரும் இப்படி ரசிப்பார்கள் எனச் சொல்ல முடியாது.
இன்னும் சிலருக்கு தென் அமெரிக்க நாடுகளுக்கும் நமக்கும் இருக்கும் சில ஒற்றுமைகள் அவர்கள்பால் ஓர் ஈடுபாடு ஏற்படுத்தும். பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளின் அலுவல் மொழி அவர்களது பூர்விக மொழி அன்று. 'வந்தேறி' மொழியான ஸ்பானிஷ் அல்லது போர்ச்சுகீசிய மொழிதான் அங்கு கோலோச்சுகிறது. இப்படி பண்பாட்டு, மொழி மோதல்கள் அல்லது கலப்புகள் அங்கு அதிகம். அவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நம் மொழியை, நம் பண்பாட்டை தக்க வைத்துக்கொள்ள போராடி வரும் அனுபவம் நமக்கு இருப்பதால் அங்கு நடந்துள்ள மாற்றங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு நிலவும் வறுமை, அரசியல் பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களின் தலையீடு போன்றவையும் உணரக்கூடிய விஷயங்கள்தான். ஆகவே ஆப்ரிக்க அணிகளைவிட, வெள்ளைக்கார ஐரோப்பிய அணிகளைவிட தென் அமெரிக்க அணிகள் நமக்கு நெருக்கமாக உள்ளன.
ஒரு குறிப்பிட்ட அணியை ரசிக்க இன்னும் பல சுவையான காரணங்கள் உள்ளன. என் நண்பர் நிர்மலின் குழந்தை தீவிர ஜெர்மனி ஆதரவாளர். காரணம்? குழந்தைகளின் மனம் கவர்ந்த ரேப்பன்சல் இளவரசி ஜெர்மனியை சேர்ந்தவளாயிற்றே !!
மெஸ்ஸி, நெய்மார், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரோபன், தாமஸ் முல்லர், அலெக்சிஸ் சான்செஸ் என சில வீரர்களை சிலருக்குப் பிடிக்கும். எனவே அவர்கள் சார்ந்த அணிகளை ஆதரிப்பார்கள் சிலர்.
என் தோழி ஒருவர் ஸ்பெயின் அணி வீரர் ஜெரார்ட் பிக்கின் தீவிர ரசிகை. ஸ்பெயின் முதல் சுற்றுடன் வெளியேறியதுடன் அந்தத் தோழிக்கும் உலக கோப்பை ஆர்வம் போய்விட்டது. உலக கோப்பையை சாக்காக வைத்து அவருடன் நேரம்கெட்ட நேரத்தில் போன் செய்து பேசலாம் என்ற என் கனவு இப்படியாக கலைந்து போய்விட்டது. பட்டர்ஃபிளை எஃபக்ட் என்பதை ஸ்பெயின் அணி எனக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு போனதுதான் இந்த உலக கோப்பையில் அந்த அணியின் ஒரே சாதனையாகும்.
இதுபோன்ற காரணங்களை தவிர்த்துவிட்டு, உண்மையிலேயே கால்பந்து விளையாட்டை கிளப் போட்டிகளில் இருந்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஆஃப்ரிக்க தேசிய சாம்பியன்ஷிப், கோப்பா அமெரிக்கா என எல்லாவற்றையும் ரசித்து தகுதி வாய்ந்த அணிகளின் ரசிகர்களாக இருப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களில் பலர் கால்பந்து விளையாட்டு வீரர்களாக இருப்பதும் உண்டு. பீலே, மாரடோனா, ராபர்ட்டோ பாஜியோ, பெபட்டோ, ரொமரியோ என பாரம்பரியமாக ரசிப்பவர்களும் உண்டு .
இப்படி பல தரப்பினரையும் ஒன்றாக இணைப்பதுதான் கால்பந்தின் கவர்ச்சியாகும். இன, மத, மொழி வேற்றுமைகள் எல்லாம் மறந்து, காலம் இடம் அழிந்து ஒன்றாக மாறுவதை கால்பந்து மட்டுமே நடத்திக்காட்டுகிறது.
அதற்கேற்ப இந்த ஆண்டு போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்து இருந்தன. ஆட்டத்தை மந்தமாக்கும் காரணிகள் கண்டறிப்பட்டு அவ்வப்போது சரி செய்யப்படுவதால், விறுவிறுப்பு என்பது பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது என்று சொல்ல முடியும்.
உதாரணமாக முன்பெல்லாம் வெற்றிக்கு 2 புள்ளிகளும், டிரா ஆனால் இரு அணிகளுக்கு ஒரு புள்ளியும் கொடுக்கப்பட்டன. இதனால் பல அணிகள் தற்காப்பு ஆட்டம் ஆடி டிரா செய்து ஒரு புள்ளியை கைப்பற்ற முயன்றன. இதை தடுப்பதற்காகத்தான், வெற்றிக்கு 3 புள்ளிகள் கொடுக்கும் முறை வந்தது. டிரா ஆனால் ஒரு பாயிண்ட்தான் கிடைக்கும். இரண்டு புள்ளிகள் போய்விடும். இந்த அச்சத்தால் பல அணிகளும் முனைப்புடன் ஆடத் தொடங்கவே, அதிக கோல்கள், குறைந்த டிரா என ஆட்டங்கள் களை கட்ட ஆரம்பித்தன.
அதேபோல, கடைசி க்ரூப் ஆட்டங்களை ஒரே நேரத்தில் நடத்தும் முடிவும் நல்ல பலன்களைத் தந்து வருகிறது. கடைசி ஆட்டம் டிரா ஆனால் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என தெரியவந்தால், இரு அணிகளும் ஒரு புரிதலுக்கு வந்து முனைப்பின்றி ஆடி டிரா செய்து வந்தன. தற்போது ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், கடைசி ஆட்டம் முடிந்த பின்புதான் தகுதி பற்றிய விபரங்கள் தெரியும். எனவே வெற்றி பெறவே அனைத்து அணிகளும் முயல்கின்றன.
இப்படி தேவையான மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய அணிகள் தென் அமெரிக்க மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதற்கு, அதீத வெப்ப நிலை காரணமாகச் சொல்லப்பட்டது. இதற்குத் தீர்வாக இந்தமுறை குளுமைக்கான இடைவேளை என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் முதற்பாதி இரண்டாம் பாதியில், சற்று இளைப்பாறிக்கொள்ள தலா 3 நிமிட இடைவேளை கொடுக்கப்படும். (கிட்டத்தட்ட 30ஆவது நிமிடத்திலும் 75ஆவது நிமிடத்திலும்) . இது எல்லா போட்டிகளுக்கும் கிடையாது. அந்தந்த போட்டிகள் நடக்கும்போது அதிக வெப்ப நிலை நிலவினால் மட்டுமே இந்த இடைவேளை கொடுக்கப்படும். க்ரூப் ஆட்டங்கள் எதற்கும் இந்த இடைவேளை கொடுக்க வேண்டிய நிலை வரவில்லை. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நெதர்லாந்தும் மெக்சிக்கோவும் மோதியபோது, கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இந்த இடைவேளை கொடுக்கப்பட்டது.
ஆசிய அணிகள், ஆஃப்ரிக்க அணிகள், வட அமெரிக்க அணிகள் என ஒவ்வொரு பிரிவிலும் சில அணிகள் சிறப்பாக ஆடின. ஆனால் பெருவாரியாக ஆதிக்கம் செலுத்தியது ஐரோப்பிய அணிகளும், தென் அமெரிக்க அணிகளும்தான்.
ஐரோப்பிய அணிகள் ஆட்டத்திற்கும் தென் அமெரிக்க அணிகளின் ஆட்டத்திற்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. ஐரோப்பிய அணிகளின் ஆட்டம் இலக்கணம் மீறாமல், மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து நேர்த்தியாக வழங்கப்பட்டும் பாரம்பரிய நடனம் போன்றது. தென் அமெரிக்க அணிகளின் ஆட்டம், இலக்கணத்தை மீறி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் களியாட்டம் போன்றது. அதிரடியும் ஆவேசமும் மிக்க சாம்பா நடனத்தின் விளையாட்டு வடிவம்தான் கால்பந்து என்பது பிரஸீல் போன்ற நாடுகளின் பார்வையாகும். இதில் எந்த முறை சிறந்தது என்பது அவரவர் பார்வையை பொருத்தது.
உதாரணமாக, கலவி என்பது இன்பமான விஷயம்தான், இதை முறைப்படி செய்வது ஒருவித சுகம். சிலவகை மூச்சுப் பயிற்சிகள் செய்தால் வெகு நேரம் வரை உடலுறவில் ஈடுபடலாம். பிராணவாயுவை சரியான முறையில் உலவச்செய்வதன் மூலம் வெகு நேரம் வரை கலவி சுகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். முயக்கத்தில் ஈடுபட உரிய நேரத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு முன் மூச்சை ஒழுங்குபடுத்தி, முதலில் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு விழிகளால் அழகைப் பருகி, அதன்பின் நாசிகளால் மணத்தை முகர்ந்து, காதல் மொழிகளை உதிர்த்து, மெதுவாக தொட்டு (எந்த வரிசையில் தொட வேண்டும் எவ்வளவு நேரம் தொட வேண்டும், எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் வரையறைகள் உண்டு), லேசான கிள்ளல், மிதமாக கடித்தல், தட்டுதல், துன்பம் போன்ற இன்பம் தரும் அடுத்தடுத்த செயல்கள் என முறைப்படி செய்தால், அதை விட வேறு இன்பம் இல்லை.
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
அரும்பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே
என கவிதை பாடி, வீணை இசைத்தல் போல பூரண சுகத்தை முறைப்படி பெறுவது ஒரு விதம்.. இதுதான் ஐரோப்பிய விளையாட்டு பாணி. திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் போன்றது
இப்படி எல்லாம் முறைப்படி யோசிக்கவெல்லாம் தேவை இன்றி, காமம் ஒரு கொண்டாட்டமாக, ஒரு களியாட்டமாக, ஒரு பித்தேறிய நிலையாக, காதலின் வெளிப்பாடாக பீறிட்டு தன்னை வெளிப்படுத்தி, தன்னையே மறக்கசெய்து, ஆண் பெண் என்ற இருமை அழிந்து அந்த சங்கமம் மட்டுமே கோலோச்சும் சந்தர்ப்பங்களும் உண்டு. அங்கு கவிதைகள் தேவைகள் இல்லை. காமத்தின் உச்சத்தில் வெளிப்படும் அர்த்தம் அற்ற சிணுங்கலே அங்கே கவிதை. ஆபாச முனகலே அங்கு தேசிய கீதம். எச்சிலே அமிழ்தம். உச்சகட்டமே சுப முகூர்த்தவேளை. பற்குறிகளும், நகக்குறிகளுமே பிரசாதம். எப்போது என்ன செய்ய வேண்டும் என அந்த இரண்டு உடல்களே அறியும். அந்த சங்கமம் எங்கும் எழுதி வைக்கப்பட்ட முறையில் நிகழ்வதில்லை. அங்குதான் முதல் முதலாக எந்த திட்டங்களும் அறிவுரைகளும் இன்றி தன்னிச்சையாக நிகழ்கிறது.
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லென்றால் சொல்லுமாறு எஞ்ஞனமே
என்கிறாரே திருமூலர். சொல்லித்தந்து வருவதல்ல மன்மதக்கலை. இயல்பான எதிர்பாராத தன்மையே அதன் சிறப்பு என்கிற கோணமும் இருக்கிறது.
இது தென் அமெரிக்க விளையாட்டு பாணி. குறைந்தபட்ச திட்டம் அதிகபட்ச திறன் என்ற முறையிலான அதிரடி.
ஐரோப்பிய முறையில் நேர்த்தியை, கட்டுக்கோப்பை ரசிக்கலாம். தென் அமெரிக்க முறையில் எதிர்பாரா ஆச்சர்யங்களை ரசிக்கலாம். எப்படி பாஸ் செய்வார்கள், எப்படி கோல் போடுவார்கள் என்பது அணி வீரர்களுக்கே தெரியாது. அந்தந்த கணத்தில் தீர்மானிப்பதுதான்.
ஐரோப்பிய பாணி என்பது கனிந்த காதலன் ஒருவன் காதலிக்கு முத்தம் கொடுப்பது போன்றது. அவளுக்கு எங்கு எப்படி முத்தம் கொடுத்தால் அவளுக்கு அதிகபட்சம் இன்பம் கிடைக்கும் என கணக்கிட்டு, பீத்தோவனின் சிம்பனி இசைபோல துல்லியமாக அதை நிகழ்த்துவது.
தென் அமெரிக்க பாணி என்பது ஒரு காதலன் தன் முதல் முத்தத்தை தன் காதலியிடம் இருந்து பெறுவதைப் போன்றது. அங்கு இருப்பது இளமையின், காதலின், வாழ்க்கையின் கொண்டாட்டம், அந்த கணத்தில் வாழும் நிலை ஆகியவை மட்டுமே.
இதனால்தான் தென் அமெரிக்க நாடுகளில் கால்பந்து என்பது விளையாட்டாக மட்டும் அல்லாமல் வாழ்க்கையாக, ஒரு மதமாக, ஓர் அடையாளமாக, உயிராக, உணர்வாக இருக்கிறது. கால்பந்து அங்கு இலக்கியமாகவும் இருக்கிறது என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒருமுறை சாருவுடன் பேசும்போது இதைக் குறிப்பிட்டார்.
உருகுவாய் எழுத்தாளரான எதுவார்தோ கலியானோ லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகில் முக்கியமான ஒருவராவார். அவரது SOCCER IN SUN AND SHADOW மிகவும் முக்கியமான நூலாக கருதப்படுகிறது. ஏழ்மை, வன்முறை, அரசியல் பிரச்சினைகள் என ஆயிரம் தடங்கல்களுக்கு மத்தியில் கால்பந்து அங்கு எப்படி வழிபடப்படுகிறது என்பதை அறிய விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த நூலைப் படிக்க வேண்டும்.
அதேபோல சிலே நாட்டின் அரசியல் மாற்றத்தை அடிப்படையாக வைத்து சிலே நாட்டு எழுத்தாளர் அந்தோனியா ஸ்கார்மேத்தாவால் எழுதப்பட்ட I DREAMT THE SNOW WAS BURING என்ற நூலும் மிக முக்கியமான நூலாகும்.
இப்படி வெவ்வெறு பாணியிலான அணிகள் இறுதி போட்டிக்கு வந்தது கால்பந்து ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. ஐரோப்பாவின் சார்பில் ஜெர்மனி, லத்தீன் அமெரிக்காவின் சார்பில் அர்ஜெந்தீனா என இரு அணிகள் இறுதிக்கு வந்தன என்றால் இரண்டுமே தகுதியான அணிகள்தான். இவை இரண்டுமே ஆட்டத்தில் சற்று வித்தியாசத்தையும் கூடுதல் திறனையும் காட்டியதால் மட்டுமே இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது. இன வேற்றுமைக்கு பேர்போன ஜெர்மனியில் பல இன மக்களுக்கும் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, மெசூத் அசில் துருக்கி பின்புலத்தை சார்ந்தவர். சாமி கிடீரா துனிசியா வம்சாவழியைச் சேர்ந்தவர். ஜெரோம் போவாத்தீங் கானா வம்சாவழியைச் சேர்ந்தவர். இப்படி ஜெர்மனி தன்னை மாற்றிக்கொண்டது அந்த அணிக்கு பலனளித்தது.
இந்த உலக கோப்பையை பொருத்தவரை, புதுமைகளை முயன்று பார்த்த அணிகளுக்கு வெற்றி கிடைத்தது. உதாரணமாக நெதர்லாந்து - கோஸ்த்தா ரிக்கா ஆட்டம் எந்த தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் முடிவு செய்யப்பட இருக்கிறது என்ற நிலை வந்தபோது, அதுவரை நன்றாக பணியாற்றிய கோல்கீப்பரை (ஜேஸ்பர் சிலிசன்) வெளியே அழைத்துக்கொண்டு டிம் க்ரூல் என்ற கோல் கீப்பரை பெனால்ட்டி ஷூட் அவுட்டை சந்திக்க அனுப்பினார் பயிற்சியாளர் வேன் கால். இந்த யுக்திக்கு வெற்றி கிடைத்தது. டிம் க்ரூல் இரண்டு கோல்களைத் தடுத்து அணியை அரை இறுதிக்கு எடுத்துச் சென்றார்.
ஆனால் மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளாத அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறின. டிக்கி டாக்காவை நம்பிய ஸ்பெயின், தனது அலுத்துப்போன 4-2-3-1 வியூகத்தை (வீரர்கள் விளையாடும் நிலை) விடாப்பிடியாக கையாண்ட இங்கிலாந்து போன்ற பாரம்பரிய சிறப்பு பெற்ற அணிகள் முதல் சுற்றிலேயே வீழ்ந்தன.
இதை நெதர்லாந்து அணியின் வேன் கால் யுக்தியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு வியூகம் அமைத்தார். ஐந்து ஆட்டங்களுக்கு அவர் அமைத்த ஐந்து வியூகங்களை கவனியுங்கள் 5-3-2, 5-2-3, 4-3-3, 3-4-3, 3-3-1-3 மற்றும் 3-5-2.
ஜெர்மனியின் சீரான வெற்றிகளுக்கு காரணம் இந்த தகவமைக்கும் பண்புதான் என்றால் மிகை இல்லை. ஸ்ட்ரைக்கர் இல்லாமல்கூட வியூகம் அமைத்தது அந்த அணி. அதாவது பொய் ஸ்ட்ரைக்கர் என சொல்லப்படும் ஃபால்ஸ் நைன் முறையை லாகவமாகப் பயன்படுத்தியது ஜெர்மனி. இதில் அர்ஜெந்தீனாதான் கில்லாடியாக கருதப்பட்டது. அந்த யுக்திக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள ஜெர்மனி தயங்கவில்லை. அதேபோல ஸ்பெயினின் டிக்கி டாக்காவையும் கச்சிதமாக பயன்படுத்தியது ஜெர்மனி. அதைப் அப்படியே பயன்படுத்தாமல், தனக்கேற்றவாறு பயன்படுத்தியதில்தான் ஜெர்மனியின் வெற்றி இருக்கிறது. அரை இறுதியில் இந்த டிக்கி டாக்கா ஆட்டத்தை ஜெர்மனியிடம் எதிர்பார்க்காத பிரஸீல் வீரர்கள் திகைத்துப் போய்விட்டனர். என்ன நடக்கிறது என அவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பே ஜெர்மனி வீரர்கள் கோல் மழை பொழிந்து விட்டனர்.
டிக்கி டாக்கா என்பது அணி வீரர்கள் ஒரு முக்கோணம் போன்ற அமைப்பை உருவாக்கி, தமக்குள் பந்தை பாஸ் செய்தவாறு கோலை நோக்கி முன்னேறுவது ஆகும். சிறிய சிறிய பாஸ்களை செய்தவாறு இப்படி விளையாடுவதற்கு அசாத்தியமான நிபுணத்துவமும், அணி வீரர்களுக்கிடையேயான புரிதலும் மிக முக்கியம். ஒருவரிடம் பந்து இருக்கும்போது சக வீரர்கள் அவருக்கு உதவியாக ஆங்காங்கு நிலை கொள்வார்கள். ஆக எண்ணற்ற முக்கோணங்கள் அங்கு உருவாகும். அதில் எந்த முக்கோணத்திற்கு பந்தை பாஸ் செய்கிறார் என்பதில் அந்த வீரரின் மேதமை இருக்கிறது.
நெதர்லாந்துக்கு எதிராக ஒரு கோல் போட்டு முன்னணியில் இருந்த மெக்சிக்கோ தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்து இருந்தால், நெதர்லாந்துக்கு நெருக்கடி கொடுத்து இருக்க முடியும் . ஆனால் தாக்குதல் ஆட்டக்காரர்களை வெளியே அழைத்துக்கொண்டு, தற்காப்பை பலப்படுத்தி தற்காப்பு ஆட முற்பட்டது நெதர்லாந்தின் மீதான நெருக்கடியை குறைத்துவிட்டது. அவர்கள் தாக்குதலில் இறங்கி வெற்றி பெற்றுவிட்டார்கள். இது யுக்திரீதியான தவறாகும்.
அதேபோல, காலிறுதியில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த, பெனால்ட்டி ஷூட் அவுட் ஸ்பெஷலிஸ்ட் டிம் க்ரூல் அரை இறுதியில் கை கொடுக்க - மன்னிக்கவும் - கால் கொடுக்க முடியவில்லை. காரணம் அந்தப் போட்டியில் ஏற்கனவே மூன்று மாற்று ஆட்டக்காரர்களை பயன்படுத்திவிட்டார் வேன் கால். இதுவும் யுக்திரீதியான தவறாகும்.
இப்படி பெரும்பாலான வெற்றி தோல்விகளுக்கு யுக்திகள் காரணமாக அமைந்தாலும், குயுக்திகளும் சில முடிவுகளை பாதித்தது வருந்தத்தக்கது. திட்டமிட்டு குறிப்பிட்ட வீரரை தாக்குவது, காயமடையச் செய்வது போன்றவை அதிகமாகக் காணப்பட்டன. இத்தாலி வீரரை கடித்த சுவாரஸ் தண்டனை பெற்றார். அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு இருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கக்கூடும். அதேபோல, பிரஸீல் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார், கொலம்பிய வீரர் ஜூவான் காமிலோ ஜுனிகாவால் காயப்படுத்தப்பட்டு தொடர்ந்து ஆட முடியாமல் போனார். விளைவாக 1-7 என்ற கணக்கில் பிரஸீல் அணி ஜெர்மனியிடம் அரை இறுதியில் படுதோல்வி அடைய நேரிட்டது. விளையாட்டில் காயம் அடைவது சகஜம். ஆனால் மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் திட்டமிட்ட தாக்குதல் என்பது வருந்தத்தக்கது.
இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க உரிய விதிகள் வேண்டும். உருகுவாயுடனான ஆட்டத்தில் இத்தாலி வீரருக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு, ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிராக க்ரீஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட பெனால்ட்டி கிக், மெக்சிக்கோவுக்கு எதிராக நெதர்லாந்துக்கு கிடைத்த பெனால்ட்டி கிக், ரஷ்ய கோல் கீப்பரை திசை திருப்பி அல்ஜீரியா போட்ட கோல் போன்றவற்றில் சர்ச்சைகள் இருக்கின்றன. கிரிக்கெட் போல, இந்தச் சர்ச்சைகளை தீர்த்து வைக்க தொலைக்காட்சி நடுவர் அமைப்பது அல்லது வேறு மாற்று வழிகள் குறித்து ஃபிஃபா(FIFA) ஆராய வேண்டும்.
இதுபோன்ற தாக்குதல்களைத் தவிர அரசியல்ரீதியான தாக்குதல்களும் அவ்வப்போது நடப்பது சகஜம்தான். முதலாளித்துவ நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற வேலைகளில் நிபுணர்களாக விளங்குகின்றன.
1982 உலகக் கோப்பையில் அல்ஜீரியா, மேற்கு ஜெர்மனி, சிலே, ஆஸ்த்ரியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் இடம் பெற்று இருந்தன. அல்ஜீரியா இரண்டு வெற்றிகள் பெற்று தன் அனைத்து ஆட்டங்களையும் முடித்து இருந்தது. இரு வெற்றிகளை பெற்றிருந்த ஆஸ்திரியாவும், ஒரு வெற்றியை பெற்று இருந்த ஜெர்மனியும் கடைசி ஆட்டத்தில் மோதின.
அந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலோ ஆஸ்த்திரியா வென்றாலோ, அந்த க்ரூப்பில் இருந்து அல்ஜீரியாவும் ஆஸ்திரியாவும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். அல்லது அந்த ஆட்டத்தில் ஜெர்மனி மூன்று அல்லது அதற்குமேல் கோல் போட்டு வென்றால், ஜெர்மனியும் அல்ஜீரியாவும் தகுதி பெறும். ஆக, அல்ஜீரியா வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் திட்டமிட்டு, அல்ஜீரியாவுக்கு எதிராக திட்டம் வகுத்தன. அதன்படி ஆட்டம் ஆரம்பித்த சில நொடிகளில் ஜெர்மனி ஒரு கோல் போட்டது. அதன்பின் இரு அணிகளும் கோல் எதுவும் போட முயற்சிக்கவில்லை. சும்மா பெயரளவுக்கு அளவுக்கு விளையாடி நேரம் கடத்தின. இறுதியில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கணக்கில் வென்று, ஜெர்மனியும் ஆஸ்த்திரியாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. அல்ஜீரியா வெளியேற்றப்பட்டது. இது உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மைதானத்துக்கு வெளியேயும் அணிகள் தோற்கடிக்கப்படுவது உண்டு. கால்பந்து உலகில் பெரிய சக்தியாக விளங்கிய அணி யுகோஸ்லேவியா. கம்யூனிஸ்ட் நாடான அதன் வெற்றி மற்ற நாடுகளுக்கு ஓர் உறுத்தலாகவே இருந்து வந்தது. 90களின் ஆரம்பத்தில் கம்யூனிச அகிலத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் யுகோஸ்லேவியாவில் இருந்தும் சில பகுதிகள் பிரிந்தன. யுகோஸ்லேவிய குடியரசு கூட்டமைப்பு என்ற பெயரில் யூரோ 92இல் போட்டியிட அந்த அணி ஆயத்தமாக இருந்தது. போட்டி ஆரம்பிக்க பத்தே நாட்கள் இருந்த நிலையில் அந்த அணி போட்டியிடக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது. அந்த அணிக்கு பதிலாக களமிறங்கிய டென்மார்க் அந்த சாம்பியன்ஷிப்பை வென்றது ஒரு நகைமுரண்.
அதேபோல, ஐரோப்பிய மண்டலம் க்ரூப் ஐந்தில் முதல் இடத்தில் இருந்த யுகோஸ்லேவியா, 1994 உலக கோப்பையில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இப்படி கண்ணுக்குத் தெரியாத தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
1938 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலியும், ஹங்கேரியும் மோதின. போட்டிக்கு முன் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி இத்தாலி அணிக்கு ஒரு தந்தி அனுப்பியதாக ஒரு (நிரூபிக்கப்படாத) செய்தி உண்டு “உங்கள் முன் இரு வாய்ப்பு. வெற்றி அல்லது மரணம்“. அதாவது ஜெயிக்காவிட்டால் கொன்று விடுவார் என அர்த்தம் இல்லை. அந்த அளவுக்கு அவர் ஆர்வம் காட்டினார். கால்பந்து என்பது வெறும் விளையாட்டாக இல்லாமல் தேச கௌரவத்தின் அடையாளமாகவும் இருந்து வருகிறது.
உதாரணமாக, 1952 ஒலிம்பிக்கில் யுகோஸ்லேவியா, சோவியத் யூனியன் கால்பந்து அணிகள் மோதியபோது அது அரசியல் போட்டியாகவே கருதப்பட்டது. அதில் வென்றே ஆக வேண்டும் என்பதில் ஸ்டாலின் குறியாக இருந்தார். ஆனால் யுகோஸ்லேவியா வென்றது. டிட்டோ-3 ஸ்டாலின் -1 என சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அந்தத் தோல்வி ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்தச் செய்தி சோவியத் பத்திரிகைகளில் வெளியாகவே இல்லை.
அதுபோல எந்த நாடு போட்டியை நடத்துவது என்பதிலும் அரசியல் உண்டு. குறிப்பிட்ட நாடு போட்டியை நடத்த விடாமல் செய்ய மற்ற நாடுகள் அணி திரள்வது உண்டு. சில நேரங்களில் உள் நாட்டு அரசியலும் உண்டு. பிரஸீலை பொறுத்தவரை அதன் கனவு, வாழ்க்கை, அடையாளம் என எல்லாம் கால் பந்துதான். அதனால்தான் மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே போட்டியை நடத்திக்காட்ட விரும்பியது. ஆனால் நம் நாட்டுக்கு இதெல்லாம் தேவை இல்லை என அந்த நாட்டு மக்களிலேயே ஒரு சாரார் எதிர்ப்புக்காட்டியதும் நடந்தது.
இந்த உலகக் கோப்பையில் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள், வீரர்களுக்கு சரியாக ஊதியம் கொடுக்காததால் ஏற்பட்ட பிரச்சினை போன்றவையும் சில அணிகளின் திறனை பாதித்தன.
நாம் துவக்கத்தில் கூறிய ஆஃப்சைடு படத்தில் வசனங்கள் ஏதும் இல்லை. வானொலி வர்ணனை மாத்திரம்தான். இரு தரப்பு வீரர்களும் துப்பாக்கியை நீட்டியபடியே வர்ணனையை கேட்கும்போது தவறுதலாக ஒருவன் சுட்டுவிட, மாறி மாறி இருதரப்பும் சுட்டு அனைவரும் பலியாகின்றனர். வர்ணனை தொடர்கிறது. அவர்கள் சுட ஆரம்பிக்கையில் கோல்ல்ல்ல் என வர்ணனையாளர் உற்சாகமாக சொல்கிறார். கூட்டம் ஆரவாரிக்கிறது. பிறகு தெரிகிறது. அது கோல் இல்லை. ஆஃப்சைடு விதியின் கீழ் அந்த கோல் தவறானதாக அறிவிக்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. சுட ஆரம்பித்தவன், தன்னை வெற்றியாளனாக நினைத்து இருக்கலாம். ஆனால் அங்கும் இருதரப்பும் வெல்லவில்லை.
கால்பந்தும் விளையாட்டு நெறிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டால், யாருக்கும் வெற்றி இல்லாமல் போய்விடக்கூடும். வெல்வது யாராகவும் இருக்கலாம். ஆனால் கால்பந்து தோற்றுவிடக்கூடாது. அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்த உலகக் கோப்பையை பொருத்தவரை அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் நிறைவேறியது என்றே சொல்ல வேண்டும். இன வெறி அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஜெர்மனியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் குறித்து பார்த்தோம் அல்லவா. அது தவிர இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஜெர்மனி அபாரமாக ஆடி பிரஸீலை வென்ற போதும், பிரஸீலை கிண்டல் செய்யும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. கோல் போட்டதும் மிதமாகவே ஒவ்வொரு கோலையும் கொண்டாடினர்.
ரசிகர்களும் விளையாட்டு அறத்துடன் (விளையாட்டுத்தனமான அறம் அன்று) நடந்து கொண்டனர். பிரஸீல் அணியின் தோல்வி உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது. பிரஸீல் தேசம் முழுக்க துக்கம் சூழ்ந்திருந்தது . ஆனாலும் சுதாரித்துக்கொண்டு மூன்றாம் இடத்துக்கான போட்டியை காண வழக்கமான உற்சாகத்துடன் திரளாக கலந்து கொண்டனர். (அதிலும் பிரஸீல் தோற்றது வேறு விஷயம்.)
ஜெர்மனி ஒருங்கிணைந்த நாடாக பெறும் முதல் வெற்றி என்பது இந்த உலகக் கோப்பையின் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதற்குமுன் மேற்கு ஜெர்மனி என்ற பெயரில்தான் வென்றுள்ளது. அதேபோல தென் அமெரிக்க நாட்டில் நடக்கும் போட்டியில் ஐரோப்பிய அணி ஒன்று வெல்வதும் முக்கிய நிகழ்வாகும்.
இதைவிட முக்கிய நிகழ்வு என்பது மற்ற அணிகளை ரசிப்பது, மற்றவர்களிடம் இருந்து கற்பது, குறுகிய வேறுபாடுகளை கொஞ்ச நாளாக மறந்து இருந்தது, உள்ளங்கள் ஒன்றுபடுவதால் ஏற்படும் உவகையை உணர்ந்தது போன்றவைதான். யாரோ ஒரு ஸ்வீடன் பெண்ணும், சென்னையில் வாழும் ஒரு தமிழனும் ஜெர்மனி வெற்றிக்காக ஒன்றாக பிரார்த்திக்கும் அற்புதம் தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியம் ஆனது.
ஜெர்மனி வெற்றியையும், கால்பந்தின் வெற்றியையும் இதைவிட சுருக்கமாக யாரும் சொல்ல முடியாது. பிரஸீலின் முன்னாள் வீரர் ஒருவர் இப்படி சொன்னார்: பிரஸீல் அணி என்ன செய்து வந்ததோ அதை ஜெர்மனி செய்து வருகிறது. ஜெர்மனி அணி எவற்றையெல்லாம் கை விட்டதோ அவற்றை பிரஸீல் செய்ய ஆரம்பித்துள்ளது

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா