Monday, November 22, 2021

தமிழ்ஸ்டுடியோ எனும் சினிமா பல்கலைக்கழகம்






 திரைப்படம் என்பதை மலிவான ரசனைக்கு வடிகாலாக பலர் பயன்படுத்தும் நிலையில் அது கலை வடிவின் ஓர் உச்சம் என்ற புரிதல் சிலருக்கே உண்டு.

   இசை , கவிதை ,  சிறுகதை , நாவல் , ஓவியம் , புகைப்படக்கலை என  அனைத்து வகை கலைகளும் சங்கமமாகும் அரும்பெரும் கலை வடிவம் திரைப்படம்.   


அந்த வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு செய்து வரும் பணிகள் மகத்தானவை

ஏராளமான குறும்படங்கள் , ஆவணப்படங்கள் , உலகத்திரைப்படங்கள் ,  அரிய இந்திய  திரைப்படங்கள் ,  தமிழ் சாதனைப்படங்கள் என ஏராளமான திரையிடல்கள் மூலம் ரசனையை உயர்த்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கியப் பங்கு உண்டு

    ஜெய்பீம்  போன்ற படங்கள்  தமிழில் உருவாக முடியும் என்ற  லட்சியக்கனவு விதையை பல ஆண்டுகள்,முன்பே விதைத்த இயக்கம்  தமிழ் ஸ்டுடியோதான்


வடபழனி, பேருந்து நிலையம்,அருகே,இயங்கி,வந்த  ப்யூர் சினிமா அலுவலகம்  சினிமா ஆர்வலர்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தது..   அங்கு வந்து தம்மை மெருகேற்றிக் கொண்ட பலர் இன்று திரைவானில் ஜொலிக்கின்றன


அலுவலகம் நுழைந்தால் திரைப்டக்கல்வி பயிலும் படிமை மாணவர்களால்,   பாலின சாதி மத அடையாளங்களற்ற  இளைஞர்களால்  அந்த இடமே

அறிவிப்பிழம்பால் ஒளிர்ந்து கொண்டிருக்கும்


பெளர்ணமி இரவு திரையிடல்களை  இரவு விவாதங்களை யாரால் மறக்க முடியும்


ப்யூர் சினிமா புத்தக அங்காடி தற்போது வளசரவாக்கத்தில்  இயங்கி வருகிறது.  கீழ்த்தளம் ,  நெரிசல் இல்லாத இடம் போன்ற அனுகூலகங்களுடன் அற்புதமாக தன் பயணத்தை தொடர்கிறது ப்யூர் சினிமா புத்தக அங்காடி.


தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வெளிவரும் படச்சுருள் மாத இதழ் தமிழ் இதழியல் வரலாறில் என்றும் நிலைத்திருக்கும்.

இன்று 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த,அமைப்பு பல்லாண்டுகள் பயணித்து சாதனைகள் புரிய வாழ்த்துகள்


வாழ்த்துகளை விட   நமது சார்பில்  வருங்கால தலைமுறைகள் சார்பில்  நன்றி என்பதே பொருத்தம்




Sunday, November 7, 2021

வாலி−லட்சுமணன் , பரதன் − லட்சுமணன்.. சுவையான ஒப்பீடு

 ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் வெகு உயர்வாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

நல்ல மகன், நல்ல நண்பன் ,  நல்ல கணவன் ,  நல்ல அரசன் என ஜொலிக்கும் அவனது புகழுக்கு சற்றே மாசு ஏற்படுத்துவது வாலியை அவன் கொன்ற விதம்தான்.

ராமன் − வாலி பகுதி ராமாயணத்தில் − குறிப்பாக கம்ப ராமாயணத்தில் − வெகு அற்புதமாக ஒரு சிறப்பான திரைகதையாக மிளிர்கிற்து

வாலி என்பவன் ராமன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன்.  ராமன் உன்னைக் கொல்லக்கூடும் என யாரேனும் சொன்னால் , அவர்கள்,மீது சீறுபவன்.  ராமன் எப்பேற்பட்ட குணசீலன் தெரியுமா என வியந்தோதுபவன்.   சீதையை தேடும் ராமனின் பணிக்கு திறமையாக உதவியிருக்கக்கூடியவன்


ஆனால் சுக்ரீவனோ ராமன் மீது பெரிய மரியாதை அற்றவன்.  அண்ணனையே கொல்லத்துணியும் துரோகியை நம்ப வேண்டாம் என்று லட்சுமணன் இவனை இழிவாகவே நினைக்கிறான்.


இப்படி எல்லா விதங்களிலும் உயர்வான வாலியை விட்டுவிட்டு சுக்ரீவனோடு ராமன் கூட்டணி அமைப்பதுதான் பிரபஞ்சத்தின் புரிந்து கொள்ள முடியாத விதி.   எத்தனையோ நல்லவர்கள் திறமைசாலிகள் வாடுவதும் பொய்யர்கள் திறமையற்றவர்கள் செழிப்பதும் அன்றாடக்காட்சிதானே


வாலிக்கு எதிராக விதி எப்படி செயல்படுகிறது,  ராமனின் புகழை கெடுக்க விதி எப்படி செயல்படுகிறது என்பதை ராமாயணம் வெகு துல்லியமாக விளக்குகிறது.


ராமனுக்கு வாலி , சுக்ரீவன் என யாரையும் தெரியாது.  அப்போது கபந்தன் என்ற அரக்கனுடன் மோத வேண்டியது வருகிறது.  கபந்தன் வீழ்த்தப்பட்டு ,  சாபவிமோசன் பெற்று கந்தர்வன் ஆகிறான்

இந்த நன்றிக்கடனுக்காக ராமனுக்கு ஒரு டிப்ஸ் தருகிறான்.  சீதையை மீட்க படைபலம் தேவை , எனவே சுக்ரீவனுடன் கூட்டணி அமையுங்கள் என்கிறான் அவன்

வாலியை அறிமுகம் செய்யாமல் ஏன் சுக்ரீவனை  சொல்கிறான் ?  ஒரு,வேளை பலமும் , வளமும் பெற்ற வாலி மீது அவனுக்கு ஏதும் பொறாமையா என நினைக்கிறோம்;

அடுத்தபடியாக ராமன் சந்திப்பது சபரி எனும் ஞானியை.   அவளிடம்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்கிறான் ராமன்.  சுக்ரீவன் வேண்டாம் , வாலியைப் பாருங்கள் என  அவளும் சொல்லவில்லை.   சுக்ரீவனைப் பார்க்க வழி காட்டுகிறாள்.

கபந்தனுக்கு உள்நோக்கம் இருக்கலாம். தவத்தில் கனிந்த சபரிக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.  ராமன்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்டான் ,  அதை சொல்லி விட்டோம் என்பதைத்தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை

அடுத்தபடியாக அனுமனை சந்திக்கிறான் ராமன். பார்த்ததுமே  ராமனை நேசிக்க ஆரம்பித்துவிட்ட அனுமனும் சுக்ரீவனுக்கு ஆதரவாகவே பேசுகிறான்


கபந்தன் ,  சபரி  மற்றும் அனுமன் என யாரேனும் ஒருவர் வாலியை ஆதரித்து இருந்தால் , வாலியின் உயிரும் ராமனின் புகழும் காப்பாற்றப்பட்டு இருக்கும்


அது நிகழாமல் போனது பிரபஞ்ச பெரு நியதி

இதில் ஒரு சுவாரஸ்யம்


தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவன் நமக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பான் என்ற நியாயமான  சந்தேகம் எழுப்புகிறான் ( பிற்பாடு நன்றி இல்லாமல் நடந்து கொண்டு இந்த சந்தேகத்தை உண்மையாக்குகிறான் சுக்ரீவன்)

லட்சுமணன் கேள்விக்கு ராமன் சரியாக பதிலளிக்கவில்லை.  சரி விடு , அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என மழுப்பிவிடுகிறான்

ஆக தனக்குப் பிடிக்காத  ஒருவனுக்காக தன்னை மதிக்கககூடிய ஒருவனை கொன்று பழி சுமக்கும் சூழல் உருவாகி விடுகிறது


கடவுள் அவதாரம் என்றாலும் விதியை வெல்ல முடியாது என்ற இந்த பகுதி அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று

பின்குறிப்பு

இதில் ஒரு சுவாரஸ்யம்.  அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவனை நம்ப வேண்டாம் என்கிறான் லட்சுமணன்

ஃப்ரீயா விடு.. அவனுக்குத் தெரிஞ்சது

அவ்வளவுதான். சகோதர பாசம் அரிது.  எல்லோரும் உன்னைப் போல இருப்பார்களா என்றுதானே  சொல்லி இருக்க வேண்டும் ?

ஆனால் ராமன் இப்படி  சொல்கிறான்

சகோதர பாசம் அரிது.  எல்லோரும் பரதனைப்போல இருப்பார்களா?  பரதனின் பாசத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியுமா என  பரதனை லட்சுமணைவிட ஒருபடி மேலாக வைத்து பேசுகிறான் ராமன்

சுவையான இடம்




Friday, November 5, 2021

அண்ணாத்தே − திரைப்பார்வை

 ரஜினியுடன் நெருக்கமான  இயக்குனர்கள் ராஜசேகர் , மகேந்திரன் , எஸ்பிஎம் ,  கேஸ்ரவி  ,  பி.வாசு  போன்றோருடன் இணைவதை பல நடிகர்கள் விரும்புவார்கள்.

ரஜினி வரலாற்றில் முதன்முறையாக இன்னோரு நடிகரின் இயக்குனருடன் ஆசைப்பட்டு இணைந்திருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிவாவுடனான இணைவு எப்படி இருக்கிறது?

அண்ணன் தங்கை என்ற பிரதான கதைக்குள் சில ஹைக்கூக்கள் , சில சிறுகதைகள் என பல படங்களில் காண முடியாத ( ரஜினி படங்களிலும் இதுவரை இல்லாத )    சில  வித்தியாசமான  அனுபவங்களை படம் தருகிறது.

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை மிகவும் அலட்சியமாக அவமரியாதையாக நடத்துகிறான் காளையன். பிற்பாடு பிரகாஷ்ராஜ் பாத்திரம் வெகு உயரத்துக்கு சென்று  காளையனே அவர் பாதம் பணியும் அளவு செல்கிறது.  தன்னளவில் ஒரு தனி சிறுகதை

பிரகாஷ்ராஜிடம் வேண்டுமென்றே அடிவாங்கும் காட்சி அமைப்பு அழகான  கவிதை


அதுபோல இரு வில்லன்களுக்கிடையே ( அகனிநட்சத்திரம்)  போன்ற  வாரிசுரிமைப்போர்.   ஒரு கட்டத்தில் தம்பி வாழ்க்கையில் தோற்று தற்கொலை செய்து கொள்ள ,  தம்பி என்ற அங்கீகாரம் பெற்று திருப்தியுடன் கண் மூடுகிறான்

அதுவரை தம்பி என ஏற்காத அண்ணன் ,  தனது தம்பிக்காக தன் உயிரேயே பணயம் வைக்க தயாராகிறான்.

இப்படி ஒரு உருக்கமான கிளைக்கதையை − அதுவும் வில்லனுக்கு−  படங்களில் பார்ப்பது அரிது


புதிய தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடனான ரஜினியின் கெமிஸ்ட்ரிரசிக்க  வைக்கிறது

அண்ணாத்த பட படப்பிடிப்பு அனுபவங்களை கவிஞர் பிறைசூடன் பெருமையுடன் சொன்னது நினைவிருக்க்கூடும்.  அவர் நடித்த காட்சிகளைப் பார்க்க அவர் இன்று இல்லை.  மரியாதைக்குரிய − ரஜினிக்கே அறிவுரை சொல்லத்தக்க −  பெரியப்பா பாத்திரம்.   பிறைசூடன் ரசிகனாக மகிழ்ச்சி

பாண்டியராஜன்  , லிவிங்க்ஸ்டன் ,  குஷ்பூ , மீனா ,  சதீஷ் , சத்யன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள்  ஃபீல் குட் சூழலை உருவாக்குகின்றனர்

இடைவேளைக்குப் பிறகு வேறொரு படமாக மாறி விடுகிறது அண்ணாத்த

டூயட்டுகளுக்காக  கவர்ச்சிக்காக  நாயகிகள்  அல்லது அடக்கி  வைக்கப்படுவதற்காக  நாயகிகள்  என்பது மாறி ,  ரஜினிக்கு இணையான அந்தஸ்துடன் ,அவருக்கு உதவி செய்யக்கூடிய திறனுடன் அவர் பட நாயகிகள் சமீபத்திய படங்களில் வருகின்றனர்.  இதில் நயன்தாரா அப்படிப்பட்ட  ஓர் ஆளுமையாக வருகிறார்

முள்ளும் மலரும் படத்தில்  அண்ணனுக்காக  காதலை மறுக்கத் தயராகும் தங்கை

இந்தப்படத்தில்  தங்கையின் மனமகிழ்ச்சிதான்  முக்கியம் என நினைக்கும்  அண்ணன்

காலம் ஏற்படுத்தியுள்ள இந்த  மாற்றம் குறிப்பிடத்தக்க ஒன்று


ரஜினியின் மேக்அப் , சிகை அலங்காரம் என புதிய தலைமுறை கலைஞர்கள் சிறப்பு.  ரஜினியின் பிரமாண்டமான  நிழல்  தங்கைக்கு எப்படிப் பொருள்படுகிறது  வில்லனுக்கு எப்படி பொருள்படுகிறது என்ற ஒப்பீடு இயக்குனரின் பெயர் சொல்லும்.   ஒளிப்பதிவு தரம்

இசை  பொருத்தமாக இருக்கிறது.  பாடல்களில் தியேட்டர் குலுங்குகிறது

கீர்த்தி சுரேஷ்  கண்களில் நிற்கிறார்

நல்லது செய்ய பொய் சொல்லலாம் என நினைத்து பாட்டி சொல்லும் பொய் தீமையாக முடிகிறது என்பது யதார்த்தமான  ட்விஸ்ட்


அனைத்து  கேரக்டர்களும்  அந்தந்த கேரக்டர்களின்  தன்மைக்கேற்ப  உயர்வுடன்  பேசுவது ரசிக்க வைக்கிறது.  நாயகனுக்கு மட்டுமே  அனைத்தும் தெரியதும் ,  நாயகி உட்பட அனைவரும் கோமாளிகள் என்ற தேய்வழக்கு தவிர்க்கப்பட்டுள்ளது


மொத்தத்தில்  அண்ணாத்தே  ,  அருமை







Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா