Wednesday, June 19, 2019

உண்மையான் வெப்பமும் உணரும் வெப்பமும் - அறிவியல்


கோடைக்காலத்திலேயே கூட சில நாட்கள் ஓரளவு வெப்பம் குறைவாக இருப்பதாக தோன்றும்.. சில நாட்கள் புழுக்கமாக இருக்கும்.

ஏன் ?

38 டிகிரி வெப்ப நிலைதான் இருப்பதாக சொல்கிறார்கள் . ஆனால் ஏன் இந்த மாற்றத்தை உணர்கிறோம்

வெப்ப மானியில் காட்டும் அளவைத்தான் பேப்பரில் பார்க்கிறோம்.. ஆனால் இது மட்டுமே போதுமானது அல்ல.

பொது இடங்கள் சிலவற்றில் டிஜிட்டலில் வெப்ப நிலையை பார்க்கும் வசதி உண்டு.. வெப்ப நிலை , காற்றின் ஈரப்பதம் , காற்றின் வேகம் .. இவையும் தெரியும்

இம்மூன்றும் சேர்ந்துதான் , நாம் எவ்வளவு வெப்பத்தை உணர்கிறோம் என்பதை தீர்மானிக்கும்

உதாரணமாக ,   நான் இதை டைப் செய்யும்போது  , வெப்ப மானியில் தெரியும் வெப்ப நிலை 36 டிகிரி செல்சியஸ்.. காற்றின் வேகம் 19 கிமீ / மணி
 காற்றின் ஈரப்பதம் 45 %

இப்படி இருந்தால் நான் உணரும் வெப்பம்  37.5 டிகிரி

அதாவது வெப்ப மானி காட்டும் அளவை விட அதிக வெப்ப நிலையை உணர்கிறேன்

காற்று சற்று நன்றாக வீசும் இடத்தில் குறைவான வெப்பத்தை உணர்வார்கள்

  நாகர் கோயில் போன்ற ஊர்களில் வெப்ப நிலை குறைவு,, காற்றின் வேகம் அதிகம்.. எனவே சென்னையை விட வெப்பம் மிகவும் குறைவு

சில  ஊர்களில் காற்றின் ஈரப்பதம் குறைவு..அதனால் அங்கும் ஒப்பீட்டளவில் சென்னையை விட நன்றாக இருக்கும்

ஈரப்பதத்தை ஏன் சத விகிதத்தில் குறிப்பிடுகிறார்கள்?

30% ஈரப்பதம் என்றால் இன்னும் 70% இடம் காலியாக இருக்கிறது என பொருள்

ஈரப்பதம் அதிகரிக்க அதிகரிக்க புழுக்கம் அதிகரிக்கும்.. ஓரளவுக்கு மேல் காற்றால் அவ்வளவு ஈரத்தை தாங்க முடியாத நிலையில் மழை பெய்கிறது

புழுக்கமா இருக்கு.. மழை பெய்யும்போல என நம் ஆட்கள் இப்படிதான் கணிக்கிறார்கள்

நம்மை விட எறும்புகள் , பறவைகள் போன்றவை இப்படி மழையை கணித்து முன்னேற்பாடுகள் செய்து கொள்கின்றன


 

Saturday, June 15, 2019

தமிழ் எழுத்தாளனை கண்ணீர் கடலில் ஆழ்த்திய ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்


முடிவு எடுக்க உனக்கு பத்து நிமிடங்கள் தருகிறேன்.. நல்ல முடிவாக சொல் என்றான் அவன்
பத்து நிமிடம் முடிந்தது

 நல்லது? “ என்றபடி அவள் முகத்தை பார்த்தான்
--

இப்படி ஒரு மொழி பெயர்ப்பு  நாவலில் படித்தேன்

என்ன எழவு இது.. இந்த சந்தர்ப்பத்தில் ஏன்  “ நல்லது “ என்கிறான் என ஐயப்பட்டு மூல நூலை பார்த்தேன்

“ well ? "  என இருப்பதைத்தான் , நல்லது ? என மொழி பெயர்த்து இருக்கிறார்கள்

தமிழில் மொழி பெயர்ப்பு இப்படித்தான் என முடிவு கட்ட முடியாது

வெ, ஸ்ரீராம் போன்றோர் மொழி பெயர்ப்புகள் , தமிழ் இலக்கிய உலகில் ஆழமான பாதிப்புகள் உருவாக்கின என்பது உண்மை

எனவே ஃபிரஞ்ச் இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் அவர் பேசுகிறார் என்பதை அறிந்து உரை நடக்கும் இடத்துக்கு சென்று விட்டேன்

ஆறு மணி நிகழ்ச்சி என்றால் 7 மணிக்கு வருவது  நம் இயல்பு. ஆனால் நான் ஐந்து முப்பதுக்கே சென்று விட்டேன்.. என் போல பலரும் சீக்கிரமே வந்து இருந்தது ஆச்சர்யம்.. மகிழ்ச்சி

குளிரூட்டப்பட்ட நவீனமான அறை.. அரங்கு நிறைந்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி அளித்தது

சரி..அவர் பேசியதில் சில பகுதிகளை காண்போம்
---------------------------------

70களில் நான் ஃபிரெஞ்ச் கற்று வந்தேன். அதன் உயர் நிலை கல்வியின் ஒரு பகுதியாக ஃபிரெஞ்ச் இலக்கியங்களை படிக்கும் சூழல் அமைந்தது.. முக்கியமான ஃபிரெஞ்ச் எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகம் ஆனது இப்படித்தான்

அது சிற்றிதழ்கள் தீவிரமாக இயங்கிய பொற்காலம்.. பிரஞ்ஞை பத்திரிக்கையுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது.. ரவி சங்கர் , வீராசாமி ஆகியோர் மொட்டை மாடியில் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் விவாதிப்போம்

அப்போது ஃபிரஞ்ச் நூல்கள் ஆங்கில வழியாகவே மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் வெளி வந்து கொண்டு இருந்தன

 நேரடியாக ஃபிரெஞ்ச் மொழி பெயர்ப்பில் தமிழில் கொண்டு வரலாமே என பேசி முடிவெடுத்தோம்

நான் ஆரம்பத்தில் மொழி பெயர்க்க ஆரம்பித்தது ஆல்பர்ட் காம்யூ’வின் பிளேக் ( கொள்ளை நோய் ) நாவலைத்தான்

ஆனால் இந்த நாவலை விட அன்னியன் நாவலே மேலும் செறிவானது.. பூடகமானது என முடிவெடுத்து அன்னியன் நாவலில் இறங்கினேன்

இப்படித்தான் அன்னியன் நாவல் தமிழுக்கு வந்தது

பார்ப்பதற்கு எளிய சிறிய நாவலாய் தோன்றும். ஆனால் எளிமை என்பது மாயத்தோற்றமே.. உள்ளார்ந்த பல அடுக்குகளை கொண்ட நாவல் இது

முதல் பகுதி ஒரு நடை..இரண்டாம் பகுதி இன்னொரு நடை

அது ஏன் என்பதற்கு நாவலிலேயே விளக்கம் இருக்கும்

இலக்கியத்தில் மறக்க முடியாத முதல் வரிகள் என சில உண்டு

அப்படி ஒரு மறக்க முடியாத முதல் வரி இதில் வரும்

அம்மா இன்று இறந்து விட்டாள்

இதுதான் முதல் வரி

அம்மா இன்று இறந்து விட்டாள் . அல்லது நேற்றாகவும் இருக்கலாம். எனக்கு உறுதியாக தெரியாது. தந்தி இப்படி சொல்கிறது “ அம்மா இறந்து விட்டாள் . நாளை இறுதி சடங்கு. ஆழ்ந்த அனுதாபங்கள் “

பாருங்கள்.. முதல் வரிகளிலேயே நேற்று , இன்று , நாளை என மூன்றும் வந்து விடுகிறது. நிச்சயமின்மையும் வருகிறது. இந்த அம்சம் நாவல் முழுக்க வருகிறது

ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் தெரியாமலோ , வேண்டுமென்றோ சிலவற்றை திரித்து மொழி பெயர்த்தனர். அது தமிழில் மேலும் சிதைந்து விடுகிறது. ஆக , மூல நூலில் சாரம் கிடைக்காமல் போகிறது

என்னைப்பொருத்தவரை , மூல நூலில் நான் உணர்ந்த தாக்கம் , மொழி பெயர்ப்பில் கிடைக்க வேண்டும் என உறுதியாக இருப்பேன்

மீள முடியுமா என்பது சார்த்தர் எழுதிய  நாடகத்தின் மொழி பெயர்ப்பு.. Closed door , No exit ஆகிய தலைப்புகளில் இதன் ஆங்கில மொழி பெயர்ப்புகள் வந்தன

மூடிய கதவுக்கு பின்னால் .. என மர்ம நாவல் போல தலைப்பு வைக்க விரும்பவில்லை. மூல நூலை ஊன்றி படித்த பின்பு , மீள முடியுமா என்பதே பொருத்தமான தலைப்பு என முடிவெடுத்தேன்

இறந்த பின் , மீளா நரகம் செல்லும் சிலர் தான் இந்த நாடக கதாபாத்திரங்கள்.. அவர்கள் அடையும் வாழ்க்கை குறித்த தரிசனம்தான் நாடகம்

நரகம் என்பது எண்ணெயில் போட்டு நம்மை வறுக்கும் இடம் அல்ல.. உண்மையில் நம் நரகத்தை உருவாக்குபவர்கள் நம்முடன் சேர்ந்து வாழும் பிறர்தான்.. அதாவது நம் வாழ்க்க்கை முழுக்க முழுக்க பிறரால் தீர்மானிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்பதே நாவலில் தரிசனம்

எழுத்தாளர் இமையம் இதை படித்து விட்டு , என்னை நேரில் பார்க்க வந்து விட்டார். தன்னை எழுத்தாளனாக உருவாக்கிய நாவல் என்று அவர் இதை குறிப்பிடுவது வழக்கம்’

 ஒரு கதையில் குருவி ஒன்று வருகிறது.. அதற்கு என்ன தமிழ் பெயர் என தெரியவில்லை.. இதற்காக பறவை ஆய்வாளர்களுடன் பேசினேன்.. மேற்கு தொடர்ச்சி மலைபகுதி வாழ் மக்களிடம் பேசினேன்

கதையில் வரும் குருவின் தோற்றத்தை பண்புகளை சொன்னதும் அதன் தமிழ்ப்பெயரை அவர்கள் சொன்னார்கள்

தைலான் குருவி

அது ஒரு போதும் தரையில் அமராது.. மரங்களில் கூரைகளில் சுவர்களில் அமரும்.. தரைக்கு வராது.. தரை இறங்கான் குருவி மருகி தைலான் ஆகி விட்டது

இப்படி ஒரு சொல்லுக்காக உழைக்க வேண்டி இருக்கிறது

இறந்தோருக்காக தூக்கம் துறக்கும் கிறிஸ்தவ சடங்க்குக்கு எஸ் வி ராஜதுரை மற்றும் பாதிரியார்களுடன் விவாதித்து , நீத்தார் கண் விழிப்பு என்ற சொல்லை உருவாக்கினோம்


அந்த்வான் து செந்த் - எக்சுபெரி எழுதிய காற்று மணல் நட்சத்திரங்கள் , குட்டி இளவரசன் போன்றவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறேன்


ஃப்ரான்சில் நான் படிக்க சென்றிருந்தபோது , என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தனர்.. ஹோட்டலில் தங்க வைத்தனர்

ஹோட்டல் பணியாளர்களும்கூட என் மொழி பெயர்ப்பு பணியை அறிந்திருந்தனர்

எக்சுபரி இந்த ஹோட்டலில்தான் தங்குவார்... என ரிசப்ஷனிஸ்ட்  சொன்னபோது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி

அது மட்டும் அல்ல.. உங்களை கௌரவிக்கும்வண்ணம் , அவர் வழக்கமாக தங்கும் அறையையே உங்களுக்கு அளித்துள்ளோம் என அவர் சொன்னபோது எனக்கு கண்ணீர் வந்து விட்டது


Friday, June 14, 2019

பாரதியாரின் தம்பியிடம் துணிகர கொள்ளை - குற்றவாளிகள் யார் ?

Nellaiappar.jpg (275×389)

பாரதியார் தம்பி என அழைக்கப்பட்டவர் பரலி நெல்லைப்பர்..இவர் மட்டுமல்ல.. இவர்தம் அண்ணன் தம்பியரும்கூட அந்த காலத்தில் தேச விடுதலைக்கு உழைத்தனர்..

வ உ சி , பாரதியார் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தனர்

பரலி நெல்லையபர் வ உ சி யின் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.. அவரே ஒரு பணியாளர்தான் என்றாலும் பாரதியார் உரிமையுடன் பொருளதவி கேட்கும் அளவுக்கு பாரதிக்கு நெருக்கமாக இருந்தார்

பாரதியார் காலமான போது அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட வெகு சிலரில் இவரும் ஒருவர்.. பாரதி உடலை சுமந்தவர்களில் ஒருவர்

சுதந்திர போராட்டத்தில் பல முறை சிறைக்கு சென்றுள்ளார்

பத்திரிக்கை நடத்தியுள்ளார்.. நூல்கள் எழுதியுள்ளார்

சேவை நோக்கத்தில் செய்த தொழில்களால் பொருள் கரைந்தது

வறுமையில் வாடிய இவர் நிலையை காமராஜர் கவனத்துக்கு கொண்டு சென்றார் பாரதியின் புதல்வியார் சகுந்தலா

பதறிப்போன காமராஜர் சென்னை குரோம்பேட்டையில் 5 ஏக்கர் நிலம் வழங்கினார்.

அதில் ஒரு பகுதியை  விற்று தன் கடன்களை அடைத்தார்.. கொஞ்சத்தை தலித் மக்களுக்கு எழுதிக்கொடுத்தார்.   மிச்சம் இருந்த 5000 ஆயிரம் சதுர அடி இடத்தை பள்ளி அமைக்க உயில் எழுதி வைத்தார்

ஏழை குழந்தைகள் படிக்க இந்த பள்ளி வெகுவாக உதவியது
தற்போதைய நிலை ( 14.06.2019)

1998ல் இந்த பள்ளியை நகராட்சி மூடி விட்டது

மரங்கள் சூழ்ந்த அந்த அழகிய இடம் இப்போது சமூக விரோதிகள் தங்கிச்செல்லும் கூடாரமாகி விட்டது

மீண்டும் பள்ளி நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை எழுப்பவே ,  நகராட்சி ஒரு முடிவுக்கு வந்தது

அந்த இடத்தை தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்தது

மக்கள் கடுமையாக எதிர்க்கவே அந்த திட்டம் கை விடப்பட்டது

கை விடப்பட்ட அந்த இடத்தை கைப்பற்ற அரசியல்வாதிகள் சிலர் முயற்சி செய்கின்றனர்
பரலியார் திருமணம் செய்து கொள்ளவில்லை.. ஆனால் பூங்கோதை என்ற பெண்ணை தத்தெடுத்தார்

அவரது மகன் தான்  (பரலியாரின் மகள் வழி பேரன் ) ஒரே வாரிசு என்பதால் , அவர் சாவதற்காக காத்திருக்கின்றனர் . அவர் மறைந்ததும் ,  அந்த இடம் அபகரிக்கப்பட்டு விடும்

ஒரு தியாகிக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய நம் அரசியல்வாதிகள் முயற்சித்தாலும் , குமரி அனந்தன் மட்டும் தன்னால் இயன்ற அளவு இந்த இடத்தை மீட்க முயன்று வருகிறார்

மீண்டும் பள்ளி நடத்த அல்லது பரலி நெல்லையப்பர் நினைவு மண்டபம் அமைக்க முயற்சிகள் செய்து வருகிறார்

திருடர்கள் ஜெயிப்பார்களா.. தியாகி ஜெயிப்பாரா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

சில ஆண்டுகள் கழித்து , குரோம்பேட்டை , பாரதிபுரம் , நெல்லையப்பர் தெரு சென்று பாருங்கள்..

பள்ளி இதே நிலையில் இருக்கிறதா... புதிய பள்ளி / நினைவு மண்டபம் இருக்கிறதா அல்லது பல அடுக்கு குடியிருப்பு வளாகம் இருக்கிறதா என பாருங்கள்


 நம் கண் முன்னே ஒரு கிழவனின் சொத்தை சிலர் அடித்து பிடுங்கினார்கள் என்பதற்கு சாட்சியாக , எதற்கும் அந்த தற்போதையை நிலையை ஒரு முறை  நேரில் சென்று பார்த்து விடுங்கள்


பிகு..
குமரி அனந்தனை இலக்கிய நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பார்க்கலாம்

ஒரு நாள் , கசங்கிய ஆடை , சவரம் செய்யப்படாத முகம் , பலவீனமான உடலுடன் , ஒருஇலக்கிய நிகழ்ச்சிக்கு வந்து விட்டு , ஆட்டோக்காரர் ஒருவருடன் பேரம் பேசிக்கொண்டு இருந்தார்.. எம் ஜி ஆர் , கலைஞர் , இந்திரா காந்தி , ரஜினி , நரசிம்ம ராவ் என பலருடன் நெருக்கமாக இருந்தவரா இவர் என திகைப்புடன் நான் அவரை பார்ப்பதை கவனித்த ஒருவர் , என்னருகே வந்து என்னை மெல்ல தட்டிக்கொடுத்தார்
என் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டதை அறிந்து கொண்டேன்

Tuesday, June 11, 2019

கட்வுளை தின்பவர்கள் - இயக்குனர் ரஞ்சித் சர்ச்சை


 நீ மாட்டை சாமியாக கும்பிடுகிறாய் , நானோ உன் கடவுளையே தின்பவன் என இயக்குனர் ரஞ்சித் பேசியது சர்ச்சை ஆகி உள்ளது

ராஜராஜசோழன் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொன்னதும் பிரச்சனை ஆகியுள்ளது

கடவுளை தின்பது என்பது சர்ச்சைக்குரிய ஒன்று இல்லை

உண்ணும் வெற்றிலை , பருகும் நீர் எல்லாவற்றிலும் உன்னையே காண்கிறேன்.. உன்னை தின்று உன்னையே பருகுகிறேன் என்கிறார் ஆழ்வார்

என் மாமிசம் உண்மையான போஜனமாக இருக்கிறது.. என் ரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது என்கிறது என்கிறார் இயேசு..

என் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு என்னைபோல உயரிய குணமுடையவராக மாறுங்கள்..என்னை நேசியுங்கள் என்பது பொருள்


ஆக , கடவுளை புசிப்பது சர்ச்சைக்குரிய ஒன்று அல்ல

மாடு என்பது உனக்கு சாமியாக இருக்கலாம்.. எனக்கு அது உணவு என்ற பொருளில் ரஞ்சித் சொன்னதில் தவறு ஏதும் இல்லை


ராஜராஜ சோழன் காலத்தில் சில சாதியினருக்கு சொத்துரிமை இல்லை.. சில சாதியினரின் உழைப்பு சுரண்டப்பட்டது ... அதை முன்னுதாரணமாக கொள்ளாதீர்கள் என்பது அவர் பார்வை

இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? இப்போது அந்த நிலை இல்லை.. அருந்ததியினர் உட்பட அனைவருமே நன்றாக வாழ்கின்றனர்... அவர் ஆட்சி  பொறகால ஆட்சியாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நாங்கள் பொற்கால ஆட்சி வழங்கி இருக்கிறோம் என சொல்ல வேண்டும்.

ஆனால் அப்படி சொல்ல முடியாது.. இன்றுதான் அன்றை விட சாதிய கொடுமைகள் அதிகம்

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான சத்திய வாணி முத்து எழுதியுள்ள ‘ தலித் மக்களுக்கு கலைஞர் செய்த துரோகம் “ என்ற நூலில் திமுக செய்த கொடுமைகளை சொல்லி இருக்கிறார்

திமுகவின் துரோகத்தை திராவிட இயக்க துரோகமாக நினைக்க முடியாது

திக , அதிமுக , தந்தை பெரியார் திக , மதிமுக போன்ற் கட்சிகள் தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டது இல்லை

இட ஒதுக்கீடு , கல்வி மேம்பாடு போன்ற பலவற்றுக்கு திராவிட இயக்கஙள் உழைத்துள்ளன .. சாதித்துள்ளன என்பது வரலாறு

இதை ராஜராஜன் மீதான விவாதமாக மாற்றுவது தவ்று

ரஞ்சித் தன் திரைப்படங்களில் இது குறித்து ஆக்கப்பூர்வமான பார்வைகளையே முன் வைத்து வருகிறார்..
காலா ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு

அவர் பேச்சை திரிக்கலாகாது



Sunday, June 9, 2019

அண்ணல் அம்பேத்கரின் வெற்றி - ஜெயமோகன் சிலிர்ப்பூட்டும் விளக்கம்

2019 ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது கவிஞர் ச.துரைக்கு வழங்கப்பட்டது .. இதற்கான விழா இன்று சீரும் சிறப்பும் இலக்கியமும் இனிமையுமாய் இளமையும் புதுமையாய் நடந்தது


இந்த விருது வழங்கு விழாவில் கூடுதல் அம்சமாக ஒரு சிறப்பு அமர்வு உண்டு. விழாவுக்கு முன்பு சிறுகதைகள் குறித்த ஒரு விவாத அரங்கு

விருது விழா மாலையில் என்றால் , இந்த விவாத அரங்கு மதியம் ஆரம்பிக்கும்..

கொளுத்தும் வெயிலிலும் அரங்கு நிறைந்து இருந்தது மகிழ்ச்சி அளித்தது/


சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய  –வெளிச்சமும் வெயிலும் 

அனோஜன் பாலகிருஷ்ணனின்   பச்சைநரம்பு 
சுரேஷ் எழுதிய  பாகேஸ்ரீ 



ஆகியவை குறித்து முறையே காளிபிரசாத் , சுனில் கிருஷ்ணன் , விஷால் ராஜா பேசினார்கள்

பேசினார்கள் என்பதை விட ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினர் எனலாம்
பலரும் ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேட்டனர்.. ஜெயமோகனும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கேள்விகள் கேட்டார்..
சிறுகதைக்கும் நாவலுக்கும் இடையேயான வேறுபாடு , என்னதான் அசோகமித்திரன் மேதை என்றாலும் அவர் எழுத்தை அளவீடாக கொண்டு பிறர் கதையை மதிப்பிடக்கூடாது என்ற கருத்தாக்கம் , கதையின் அழகியல் , அழகியலே கதைக்கு எதிராக மாறும் சூழல் என பல விஷ்யங்கள் விவாதிக்கப்பட்டன

விஷால் ராஜா , அசோகமித்திரன் குறித்து ஆர்வமாக பேசி முடித்ததும் பலர் கேள்விகள் கேட்டனர்.

அப்போது மைக்’ கை வாங்கிய  வழக்கறிஞரும் , சமூக ஆர்வலருமான கிருபா முனுசாமி  தன் சார்பில் ஒரு கேள்வியை கேட்டார்
ஒடுக்கப்பட்டோர்கள் , விளிம்பு நிலை மக்கள் ஆயுதமாக நாவல் பயன்பட முடியாது என்று சிலர் சொல்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றார்.அதாவது நாவல்கள் மூலம் சமூக நீதி ஏற்படும் சூழல் உள்ளதா என்பது அவர் கேள்வி
இலக்கியம் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு பச்சைக்குழந்தையிடம் இப்படி ஒரு அரசியல் கேள்வியா என அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது..  இன்னும் சொல்லப்போனால் அவர் அருகில் இருந்த கவிதாமுமே சற்று திகைத்தார்
ஆனாலும் விஷால் ராஜா சளைக்காமல் பதில் சொன்னார்..

 நீங்கள் மேற்கோள் காட்டுவது போல யாரும் சொன்னதாக தெரியவில்லை.. ஆனாலும் , இலக்கியம் ஒரு பிரச்சார ஆயுதம் இல்லை என்றாலும் சமூக மாற்றங்களுக்கு மறைமுகமாக பணியாற்றி வருகிறது என்றார்

உண்மையில் நானேகூட , சிறுகதை குறித்தான அரங்கில் இந்த கேள்வி தேவை இல்லையோ என நினைத்தேன்

ஆனால் இந்த் கேள்வி ஆழமான விவாதங்களை உருவாக்கியது.. அந்த அரங்கு முடிந்த பின் கொடுக்கப்பட்ட தே நீர் இடைவேளையில் ஆங்காங்கு இது குறித்த விவாதங்கள் நடந்தன
ஜெயமோகனிடமே கிருபா அந்த கேள்வி
யை கேட்டார்.. கவிதாவும் அவரும் ஜெயமோகனுடன் தே நீர் அருந்தியபடி உரையாடிய ஒவ்வொரு விஷ்யமுமே மேடையில் பேசி ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.. 
அந்த காலத்தில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதை போட்டி போட்டுக்கொண்டு வலைப்பதிவேற்றம் செய்வதில் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவியது. அதன் பின் எல்லா நிகழ்ச்சிகளுமே ஒளிப்பதிவு செய்யப்பட்டு யூட்யூபில் கிடைப்பதால் , வலைப்பதிவுக்கு தேவை இல்லாமல் போய் விட்டது.. ஆனாலும் மேடைக்கு அப்பாற்பட்டு நிகழும் இது போன்ற விவாதங்களும் முக்கியமானவையே

கதை என்பதன்  வலிமை குறித்தும் அதன் ஆற்றல் குறித்தும் ஜெயமோகன் விரிவாக பேசினார்
கதை சொல்லல் என்பதன் மூலம்தான் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிர்களை வெல்ல முடிந்தது... மனிதனை விட உடல் ரீதியாக அறிவு ரீதியாக சிறப்பான மற்ற உயிரிகள் இருந்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் தன் அனுபவங்களை கற்பனை கலந்து கதையாக தன் சகாக்களுக்கு சொல்லும் திறன் இல்லை.. கற்பனைகளாலும் கதைகளாலும் மட்டுமே மனிதன் உலகை வென்றான் என்கின்றன ஆய்வுகள்

இதை ஒட்டி இலக்கிய ரீதியாக ஜெயமோகன் சொன்னார்.. ஒரு விஷயத்தை கதையாக சொல்லும்போது அது எப்படி விரைவாக பரவுகிறது என்பதை , யாரோ டீச்சர் சொன்னதாக , தன்னிடமே யானை டாக்டர் கதை ஒரு குழந்தை மூலம் வந்தடைந்ததை சொன்னார்

அண்ணல் அம்பேத்கர் எப்படி ஆதிக்க சக்தியினரின் மொழியான சமஸ்கிருதம் மூலமாகவே அவர்களை வெல்ல முடிந்தது என்பதை விளக்கியது ஆச்சர்யமாக இருந்தது
ஆதிக்க சக்தியினர் வேறு ,, நாம் வேறு என எல்லை வகுத்துக்கொண்டு ஒதுங்கிப்போகாமல் , அவர்கள் கோட்டைக்குள் ஊடுருவி வெல்வதுதான் சவால்.. அந்த சவாலில் வென்று காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் என அவர் சொன்னது சிலிர்ப்பாக இருந்தது

கண் பார்வை அற்ற ஒரு,நண்பர் நாவல்கள் படித்து டாக்டர் பட்டம் வாங்கும் சவாலை ஏற்று அதில் வென்றதை ஒரு ரொமாண்டிக் ட்விஸ்ட்டோடு சொல்லி முடித்தார்.
வரலாறு , காதல் , சினிமா  , நவீன மூட நம்பிக்கை , என பல புதிய விஷயங்களை  சொல்லிக்கொண்டே இருந்தார்

அதன் பின் மாலை ஆறு மணிக்கு விருது விழா.
அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி கைதட்டல் வாங்குவது வட நாட்டு அரசியல்வாதிகள் ஸ்டைல்
அப்படி இல்லாமல் , குறுந்தொகை , ஞானக்கூத்தன் , அக நானூறு , கல்யாண்ஜி , விருது பெறும் துரை உட்பட பலர் கவிதைகளை ஆழமாக விவாதித்து ஆச்சர்யம் அளித்தார் மலயாளக்கவிஞர் ராமன்..
புத்தகம் படிக்க நேரம் கூடி வரவில்லை என சொல்லி விட்டு , குத்து மதிப்பாக பேசுபவர்களை பார்த்துள்ளோம்.. ஒரு மலையாளக்கவிஞர் இவ்வளவு தூரம் நம் தமிழை கவனித்து , அலசி ஆராய்ந்து பேசியது வியப்பளித்தது என்றால் , அப்போது அங்கே நுழைந்த மனுஷ்ய புத்திரனுக்கு வணக்கம் சொல்லி விட்டு ,  அவர் கவிதை ஒன்றையும் எடுத்து சொல்லி சிலாகித்துப்பேசினார்
 நம்மை விட அதிகமாக தமிழை நேசிப்பவர் போல என நினைத்துக்கொண்டேன்
 நமது புகழ் பெற்ற கவிதைகள் சிலவற்றை மலையாளத்தில் மொழி பெயர்த்து மலையாள பாணியில் ஓசை நயத்துடன் பேசி ( பாடிக் ) காட்டினார்
மொழி என்ற வகையில் இரு மொழிகளுக்கும் இடையேயான ஓசை வேறு பாடுகளை உணர முடிந்தது..அரிய அனுபவம்
துரை எந்த விதத்தில் முக்கியமான கவிஞர் ஆகிறார் என்பதை வெகு அழகாக பேசினார் அவர்...
அதன் பின் பேசிய தேவ தேவன் வெகு சுருக்கமாக பேசி அமர்ந்தார்.. முழு நாள் கருத்தரங்கில் பேசுபதற்கு விஷ்யம் அவரிடம் இருந்தாலும் சுருக்கமாக பேசினார்

வாழ்த்துரை வழங்கிய அருணாச்சலம் ஒரு முழுமையான பார்வையை அளித்தார்.. அவர் சொன்னதும்தான் , துரையின் பல நல்ல கவிதைகள் மேலும் தெளிவாகின
 ’
தன் துறை சார்ந்த உதாரணம் சொல்லி , இலக்கிய செயல்பாடுக்ளை விளக்கியது நச் என இருந்தது

கடைசியில் ஜெமோ பேசினார்
ஒரு சிறுமி இயல்பாக நடந்து செல்வதை கட்டுப்படுத்தி , நடப்பதற்கு ஒரு இலக்கண வரையறை கொண்டு வருவது போல , கவிதை என்பதன் இயல்பு தன்மை மாற்றப்பட்டதையும் அதன் பின் அந்த வரையறைகள் உடைக்கப்பட்டதையும் அதை தொடர்ந்து அடைந்து வரும் வளர்ச்சிகளையும் பேசினார்..
படிமம் , மைக்ரோ நேரேஷன் என வெகு எளிமையாக ஆனால் ஆழமாக பேசினார்

படிமம் என்பது ஆரம்பத்தில்  கவனத்தை ஈர்த்தாலும் போக போக , உற்பத்தி சாலையில் உற்பத்தி செய்யப்படுவது போல , சரமாரியாக படிமங்கள் உருவாக ஆரம்பமானதும் அடுத்த கட்டம் தேவைப்பட்டது.. மைக்ரோ நேரேஷன் உருவானது

அதுவுமே மலினமான சூழலில்தான் , இன்றைய கவிஞர்கள் சிலர் கவிதையை , இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் மாபெரும் பணியை செய்கின்றனர் என்றார்
இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விருது என்றுதான் பொதுவாக நினைப்போம்

ஆனால் இது ஊக்கப்படுத்தும் விழா அல்ல.. சாதனையாளர்களை , திருப்பு முனை நாயகர்களை அடையாளம் காட்டும் விழா என்று சொல்லி , துரை எந்த விதத்தில் திருப்பு முனை நாயகராகிறார் என விளக்கியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது
கடைசியில் துரை ஏற்புரை வழங்கினார்

ஆழமான விழாவாக மட்டும் அல்ல.. சூடும் சுவையுமான விழாவாகவும் அமைந்தது














Thursday, June 6, 2019

இளையராஜா விழாவும் திராவிட இயக்க கலாச்சாரமும்


இளையராஜா விழா சமீபத்தில் நடந்தது..

100 ரூபாய் , 400 ரூ டிக்கெட் வாங்கியவர்கள் எல்லாம் 5000 ரூபாய்க்கான இருக்கைகளை ஆக்ரமித்து விடவே , 5000 ரூ டிக்கெட் வாங்கியவர்களுக்கு இடமில்லை.. ஏக ரகளை , தள்ளு முள்ளுகள்

இசை நுணுக்கத்தை , பாடல் சிறப்பை பேச வேண்டிய இளையராஜா , , எல்லோரும் அவரவர் இடத்துக்கு செல்லுங்கள் , அமைதியாக இசையை கேளுங்கள் என  எல் கே ஜி ஆசிரியர் மாணவர்களிடன் பேசுவதுபோல மேடையில் பேச வேண்டிய சூழல் உருவானது...

ஜே கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் ஒலிபெருக்கியில் அலறிய பாடல்களின் இடைஞ்சல் தாளாமல் , பேச்சை நிறுத்தி விட்டு வெளியேறிய வரலாறும் நமக்கு உண்டு


திராவிட இயக்கம் , இதுபோன்ற் சூழல் தவ்று என்பதை சுட்டுக்காட்டியது மட்டும் அல்ல.. இதற்கு எதிராக போராடியும் வந்துள்ளது

பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு என சிலர் சுருக்கினாலும் , எம்ஜி ஆரோ , அண்ணாவோ ஒரு போதும் அப்படி நினைத்தவர்கள் அல்லர்


 ஒரு நிகழ்ச்சியில் எம் ஜி ஆர் பேச வருகிறார். அனைவரும் அமைதியாக கவனமாக பேச்சை கேட்கின்றனர்

அப்போது அவர் சொல்கிறார்

இப்போது எப்படி கவனமாக என் பேச்சை கேட்கிறீர்கள்.. இதுபோல அமைதியாக எனக்கு முன்னால் பேசிய மு வ பேச்சை நீங்கள் கேட்டிருந்தால் உங்கள் அறிவு விசாலப்பட்டு இருக்கும்.. நான் அப்படித்தான் கேட்டேன்..பல விஷ்யங்களை தெரிந்து கொண்டேன் என்றார்

தன்னை எதிர்த்து பேசிய சின்ன அண்ணாமலையை , அழைத்து தன்னை எதிர்த்து பேச சொல்லி , இயக்க தோழர்கள அனைவரும் அமைதியாக கேட்க வேண்டும் என உத்தரவிட்டார் பெரியார்.. சின்ன அண்ணாமலை தன்னை திட்டி பேசி முடித்ததும் , அன்பளிப்பு அளித்து அனுப்பியவர் பெரியார்


காமராஜர் எளிமையைப்பார்த்தால் நமக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறது..எப்பேற்பட்ட தலைவர் என வியந்து சொன்னவர் அண்ணா... காமராஜரை தோற்கடித்தவருக்கு பதவி தருவது நன்றாக இருக்காது என சொல்லி குணமெனும் குன்றேறி நின்றவர் அண்ணா

 ராஜிவ் நினைவிடம் சென்னையில் உள்ளது... அழகிய புல் வெளி... மற்றபடி விலை உயர்ந்த பொருட்களோ ராணுவ ரகசியமோ இல்லை’

ஆனால் ஆயுதம் தாங்கிய காவலர்கள் அதை பாதுகாக்கின்ற்னர்.. உள்ளே நுழையும் முன் சோதனை செய்த பின்னே அனுமதிக்கின்றனர்

ஏன்?

உள்ளே செல்பவர்கள் அங்கேயே மலம் கழிக்க கூடாது.. சிறு நீர் கழித்து விடக்கூடாது..கண்டதை தின்று குப்பைகளை போடக்கூடாது, மது அருந்தி பாட்டில்களை போடக்கூடாது.. உடல் உறவு கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை பாதுகாப்பு

மிகவும் அசிங்கமாக இருந்தது


திராவிட இயக்க சேவைகளின் பலனை அனுபவிக்கும் நாம் அண்ணா  பெரியார் , எம் ஜி ஆர் போன்றோர் காட்டிய மாண்புகளை என்றும் விட்டு விடக்கூடாது

கடமை கண்ணியம் கட்டுப்பாடு = அண்ணாயிசம் 

கடையேழு வள்ளல்கள் -சுருக்கமான பார்வை


கடை ஏழு மன்னர்கள் பெயர்கள் என்ன?

  1 பாரி
2. வல்வில் ஓரி
3. காரி (மலையமான்)
4. பேகன்
5. அதியமான்
6. நள்ளை
7. ஆய் அண்டிரன்

 ஏன் கடை ஏழு மன்னர்கள் என்கிறார்கள்..

அன்ன சத்திரம் கட்டம் , கல்வி சாலைகள் அமைத்தல் என்றெல்லாம் வள்ளல்தன்மைகள் உண்டு.. இவற்றுக்க்கெல்லாம் ஆதாரமானது அன்புதான்..

இந்த ஏழு மன்னர்களைப்பொருத்தவரை இவர்கள் வள்ளல்தன்மையில் அன்புதான் அதிகமாக வெளிப்படுகிறது. நாம் அறிவுப்பூர்வமாக யோசித்தால் , நானாக இருந்தால் , அப்படி செய்டிருக்க மாட்டேன்.. வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி இருப்பேன் என சொல்வோம்

ஆனால் அன்பு அப்படி யோசித்து முடிவு எடுக்காது..கணக்குப்போட்டு காட்டுவது அன்பாக இருக்க இயலாது

---

பாரி..

இவன் பலருக்கு வாரி வழங்கிய வள்ளல்.. முல்லை படருவதற்கு சரியான கோல் இல்லாததால்  , தன் தேரை முல்லைக்கு அளித்தான் இவன்.. வீட்டுக்குப்போய் , யாரங்கே,, முல்லைக்கு அருகே , ஒரு கம்பை நட்டு வையுங்கள் என உத்தரவிட்டு இருக்கலாம்.. ஆனால் அன்பு மிகுதியால் தேரை அளித்து சரித்திரத்தில் இடம் பெற்றான்

ஓரி

தன்னை புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு தன் சிற்றரசு ஒன்றையே கொடுத்தான் இவன்...   தமிழுக்கு புலமைக்கு அரசை அளித்து புகழ் எய்தினான்

காரி

போர்களில் குதிரைச்சவாரியில் ஈடுபாடு கொண்டவன்.. தான் மதிப்பு மிக்கவை என நினைப்பதை பரிசளிப்பதே நாகரிகம.. தனக்கு தேவை அற்றதை , மிச்சமானதை , தேவை அற்றதை பரிசளிப்பது நாகரிகம் ஆகாது.. தான் மிகவும் நேசிக்கும் குதிரைகளை பரிசளிப்பது இவன் பாணி

பேகன்

மயில் ஆடுவதை பார்த்து  , குளிரால் நடுங்குகிறது என நினைத்து
 போர்வையால் போர்த்திய அன்பு பித்தன் இவன்


அதியமான்

சாகா வரம் அளிக்கும் நெல்லிக்கனியை அவ்வைக்கு அளித்து சாகா புகழ் எய்தியவன் இவன்

 நள்ளி

ஒரு நாள் இம்மன்னன் காட்டில் மாறு வேடத்தில் சென்று கொண்டிருந்தான்.. ஒரு ஏழைப்புலவன் மரத்தடியில் அமர்ந்து பாடல் புனைவதை கண்டான்.. பருக புலவனுக்கு நீர் அளித்தான் . விலங்கு ஒன்றை வேட்டையாடி , தீ மூட்டி பக்குவப்படுத்தி பசியாற்றினான்.. தான் அணிந்திருந்த சங்கிலியை பரிசாக அளித்து விடை பெற்றான்...  கையில் ஏதுமற்ற நிலையிலும் வழங்குதலில் குறை வைக்காத மன்னன்.. ஒரு முறை இவனிடம் வாங்கினால் , பிறகு யாரிடமும் வாங்கும் அவசியம் இராது

ஆய் அண்டிரன்

இவன் கடவுளுக்கே பரிசளித்த புகழ் கொண்டவன்.. அரிய மரகதமணியை பரிசாக கொடுத்தான்

---


இவர்கள் சராசரி வாழ்க்கைக்கு தேவையான ஈகைகளையும் செய்தாலும் , அன்பின் உச்சம் தொட்டு அறிவை மீறி அன்பைக்காட்டிய தருணத்தால் இன்றும் நினைக்கப்படுகிறார்கள்


Saturday, June 1, 2019

மாலைபொழுதை மகிழ்வாக்கிய கதையாடல்


கதை படிப்பது எவ்வளவு சுகமோ அதே அளவுக்கு கதை கேட்பதும் அது குறித்து விவாதிப்பதும் சுகமானதுதான்

அந்த காலத்தில் எல்லாம் பின் மாலைகளில் அக்கம்பக்கத்தினர் , குடும்பத்தினர் , உறவினர் என வீட்டின் முன் கட்டிலில் அமர்ந்தும் ஆங்காங்கு தரையில் அமர்ந்தும் கதைகள் சொல்லி , கேட்டு வாழ்க்கையை அனுபவதித்துண்டு..

இன்று அப்படி எல்லாம் அமர வாய்ப்புகளும் இல்லை.. நேரமும் இல்லை

இப்படி ஒரு இறுக்கமற்ற சூழலில் , இயல்பாக உரையாடுவது போல , கதைகளைப்பற்றி பேசி விவாதிக்க ,ஓர் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது வாசக சாலை

வாசக சாலை பல நிகழ்ச்ச்கள் நடத்துகிறது.. மா நாடு போல நடக்கும் கருத்தரங்குகள் , குளிரூட்டப்பட்ட அறையில் நடக்கும் விவாதங்கள் , உணவுடன் கூடிய முழு நாள் நிகழ்வுகள் , அறிஞர்கள் எழுத்தாளர்கள் ஆய்வ்க்கட்டுரை வழங்கும் விழாக்கள் என்பவை எல்லாம் வேறு .. கதையாடல் என்ற இந்த நிகழ்வு , வெகு இயல்பாக , மனதுக்கு நெருக்கமான ஒரு நிகழ்ச்சி..

நான் முன்பு சொன்னதுபோல , நம் வீட்டில் நம் நண்பர்களுடன் உறவ்னர்ள்டன்  அமர்ந்து பேசுவது போல ,  ஒரு பின் மாலை வேளையில் , அறிவுத்தாகம் கொண்ட நண்பர்கள் மத்தியில் தரையில் அமர்ந்து கதைகளைப் பற்றி பேசுவது ஒரு தனி அனுபவம்


33ஆம் கதையாடல் நிகழ்வில் , கீழ்க்கண்ட கதைகள் விவாதிக்கப்பட்டன

கதை பெயர்
எழுதியவர்
வெளிவந்த இதழ்
மரத்தில் மறைந்த மாமத யானை

இங்கே நிறுத்தக் கூடாது

பகல்கனவு

சஃபைவாலா

அமர்

ஜனமேஜயன்



அ முத்துலிங்கம்

லிவி

அபிமானி

விஜயகுமார்
சொல்வனம்




காலச்சுவடு

வாசகசாலை

கணையாழி

பதாகை



























பேசி வைத்து வந்ததுபோல , அனைவரும் சரியான நேரத்துக்கு வந்து விட்டது ஆச்சர்யமாக இருந்தது...  பாதி நிகழ்ச்சியில் யாரேனும் வருவது , யாரேனும் கிளம்புவது என்றெல்லாம் இல்லாமல் , ஓர் ஒழுக்கத்தை அனைவரும் கடைபிடித்தது சிறப்பு

---------
மரத்தில் மறைந்த மாமத யானை

டெலிபோன் முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்டபோது , அதே கால கட்டத்தில் பல நபர்களுக்கு அதே சிந்தனை எப்படி வந்தது என்பது போன்ற கண்ணுக்கு தெரியாத வலைபின்னல்களை ஆராயும் ஓர் அறிவியல் கதை இது

 நாம் செயல்புரிகிறோமா.. அல்லது நமக்கு தெரியாமல் நம் சிந்தனைகளை , செயல்களை வேறு ஏதாவது சக்திகள் வடிவமைக்கின்றவா என்பதையும் போகிற போக்கில் கதை ஆராய்கிறது

என்ன ட்விஸ்ட் என்றால் , இந்த கதையைப்பற்றி பேசுவதாக இருந்தவர் , வர முடியாமல் போய் விட்டது. இன்னொருவர் பேசினார்..பெயர் வைஷாலி...  என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த கதையின் கருப்பொருளாக மரம் என்ற விஷ்யம் பேசியவருக்கு உண்மையிலேயே பிடித்த விஷ்யம்தான்.. தன் வீட்டின் முன் இருக்கும் மரத்தை உள்ளன்போடு நேசிப்பவர் இவர்..  மர நேசரான இவர் , மரம் பற்றி பேசும் சூழலை உருவாக்கிய தற்செயல் நிகழ்வு போன்ற ஆச்சர்ய நிகழ்வுகளைத்தான் கதையும் பேசுகிறது. உண்மையிலே ஆச்சர்யமாக இருந்தது

கதையை நன்கு புரிந்து கொண்டு , வெகு சிறப்பாக பேசினார் வைஷாலி.  சரளமாகவும் , முக்கிய சம்பவங்களை கச்சிதமாக நினைவில் வைத்திருந்தும் , குறை என தான் நினைப்பவற்றையும் பேசினார்... தான் பெர்சனலாக கதையில் ரசித்த இடங்களையும் அதற்கான காரணங்களையும் அவர் சொன்னது வெகு பொருத்தமாகவும் சுவையாகவும் இருந்தது

பேசி முடித்தபின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் சொன்னார்

பார்வையாளர்களும் எதிர் கருத்துகளையும் , பிடித்த விஷயங்களையும் சொன்னார்கள்..கதையை படிக்க
ஆக , துவக்கமே வெகு சிறப்பாக அமைந்தது


அடுத்து இங்கே நிறுத்தக்கூடாது என்ற கதை குறித்து சுவாதி சேகர் பேசினார்

கதையின் ஒவ்வொரு வரியையும் அவ்வளவு ரசித்துப்படித்து இருக்கிறார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது..

கதை சற்று ஆழமான விஷ்யம் குறித்து பேசினாலும் அதன் நடை கலகலப்பானது...  அதை கச்சிதமாக புரிந்து கொண்டு கலகலப்பாக பேசினார்.
அதன் இன்னொரு பக்கத்தை விவாதத்தின்போது பேசினார்.. பெர்ஃபக்ட்

அடுத்து பகல் கனவு என்ற பின் நவீனத்துவ கதை குறித்து மசாலா கதை ரசிகர் அபு பேசினார்,,, இது ஒரு நல்ல காம்பினேஷன்..  ஒரு இலக்கியக்கதையை மசாலா கதை ரசிகர் எதிர்கொண்டால் எப்படி இருக்கும் .. அவரை கதை எந்த அளவு பாதிக்கிறது.. என்ற கேள்விகளுக்கு இவர் பேச்சு பதில் சொன்னது.. வீண் அலட்டல்கள் , நேம் டிராப்பிங் , வெட்டி பந்தா போன்ற எதுவும் இல்லாமல் , மனிதர் இதயத்தில் இருந்து பேசினார்.. சர வெடி... மிகவும் ரசித்தேன்... மசாலா கதை ரசிகர் என அவர் தன்னை சொல்லிக்கொண்டாலும் நல்ல சிறப்பான பார்வையையே முன்வைத்தார்
கதையை படிக்க

அடுத்து சஃபைவாலா கதை குறித்து சந்தியா பேசினார்...

கதையின் ஒரு கேரக்டர் நம் முன் வந்து , கதையைப்பற்றி சொன்னால் சொன்னால் எப்படி இருக்கும் .. அதுபோன்ற ஒரு நேரடி அனுபவத்தை கொடுத்தது இவர் பேச்சு... அலுவலகம் ஒன்றில் காஃபி கொட்டி விடுகிறது... அதை க்ளீன் செய்ய வேண்டும்.. ஆனால் சாதி பெருமை ,  தன் பதவியின் பெருமை, , வீண் பந்தா போன்ற பல காரணங்களால் க்ளீன் செய்யும் சாதாரண வேலையை துப்புரவு பணியாளர் என்ற பெயரில் வேலைக்கு சேர்ந்துள்ள ப்யூன் உட்பட யாரும் செய்யவில்லை என்ற சம்பவமே கதை... துணியை எடுத்து ஒரு இழுப்பு இழுத்தால் க்ளீன் ஆகி விடும்.. ஆனால் அப்படி செய்தால் பிறர் என்ன நினைப்பார்கள் , நம் பதவி அந்தஸ்து என்னாவது , இந்த வேலை நம் தலையில் கட்டபட்டு விடுமோ என்ற பயம் , சாதி பெருமை போன்ற பலவற்றால் யாருமே அதை செய்வதில்லை.. படிக்கும் நமக்கே , டேய்.. என்னிடம் கொடுங்கடா.. நான் செய்து விடுகிறேன் என கத்த தோன்றும்.. அந்த அம்சத்தை அழகாக சொன்னார் சந்தியா...துப்புரவை வீடுகளில் மங்கல நிகழ்வாக   நினைப்பார்கள்..  ஆனால் எப்படியோ , க்ளீனிங் செய்தால் அந்தஸ்து போய் விடும் என்ற மன  நிலை , பொது வெளியில் உருவாகி உள்ளது என்பதை கதை சொல்கிறது.. அருமையான கதை.. ஆனால் கதை தலைப்பு , இது ஒரு சாதி எதிர்ப்பு பிரச்சாரக்கதையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது.. நல்ல வேளையாக , இவர் அதை தொடாமல் , பொதுவான உணர்வுகளைத்தொட்டு பேசினார்.. அழகு


கடைசியாக அமர் கதை குறித்து ராம கிருஷ்ணன் பேசினார்...

பேச வர வேண்டியவர் வரவில்லை என்பதால் , திடீரென பேச வேண்டிய சூழல்.. ஆனாலும் சிறப்பாக பேசினார்


உட்கார வேண்டிய சாமி  சிலையை , நிற்பது போல ஏன் உருவாக்கினாய் என திட்டுவது போல ஆரம்பிக்கும் கதை ,  யார் என்ன நினைத்தால் என்ன ,, என்ன செய்தால் என்ன...  நிற்பதா அமர்வதா என்பதை முடிவு செய்யும் அழியாவிசை என ஒன்று உள்ளது என முடியும் கதை... கடவுள் , ஆன்மிகம் என்றெல்லாம் இல்லாமல் , நம் மண்ணின் மூத்தோர் வழிபாடு , வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவம் , விலங்குக்கும் மனிதனுக்கும் இருப்பது பொதுவான ஆன்மாதான் என சொல்லாமல் , இரண்டுக்கும் பொதுவாக இருப்பது , விட்டு விடுதலையாகும் உணர்வெனும் விசை என்ற தரிசனம் போன்றவை குறித்து பார்வையாளர்கள் கருத்துகளை முன் வைத்தனர்கதையை படிக்க

மகிழ்ச்சியான , நிறைவான , ஒரு மாலைப்பொழுது







பெருந்தன்மையில் போட்டு போட்ட எம்ஜிஆர் , கண்ணதாசன்

அறிமுக நடிகர்களை வைத்து காதலிக்க  நேரமில்லை போன்ற ஹிட்களை கொடுத்தவர் ஸ்ரீதர்


சில பிரச்சனைகளால் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கினார்

அவருக்கு கால்ஷீட் கொடுத்து உதவ முன்வந்தார் மக்கள் திலகம்

இதற்கிடையே கண்ணதாசனிடம் பாடல்கள் எழுதச்சொல்லி வாங்கி வைத்திருந்தார் ஸ்ரீதர்

விழியே கதை எழுது பாடலை எழுதிக்கொடுத்தார் கண்ணதாசன்

இன்னொரு பாடலின் ஆரம்ப வரிகள் மட்டும் எழுதினார்

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

 மிச்சத்தை பிறகு எழுதுவதாக சொல்லி சென்று விட்டார்


சிலர் ஸ்ரீதரிடம் சென்று , கண்ணதாசனுக்கு எம் ஜி ஆருக்கும் ஆகாது... எனவே இந்த பாடல்கள் வேண்டாம்.. எம் ஜீ ஆர் கோபித்துக்கொள்வார் என்றார்கள்

இயக்குனருக்கோ பாடலை இழக்க மனமில்லை.. கண்ணதாசனிடமே சென்று கேட்டார்

மிச்சப்பாடல்களை வாலியை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்

இந்த பாடல்களுமே வாலி பெயரிலே வரட்டும் என பெருந்தன்மையாக சொல்லி விட்டார் கண்ணதாசன்

பாடல்களைக்கேட்டார் எம் ஜி ஆர்

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்

யார் எழுதியது என்றார்

வாலி என்றார்கள்

புன்னகைத்த  எம் ஜி ஆர் சொன்னார்

இல்லை.. இது கண்ணதாசன் பாணி பாடல் என்றார்

ஆம் ,மன்னித்து விடுங்கள் என்றார் இயக்குனர்


எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாகத்தான் பிரச்சனை

அவர் பாடல்களுக்கு நான் ரசிகன்,., இந்த பாடல் அவர் பெயரிலேயே வரட்டும் என்றார் எம் ஜி ஆர்

படத்தில் கண்ணதாசன் பெயர் வரும்.. ஆனால் இசைப்பேழைகளில் வாலி பெயரில்தான் பாடல் வந்தது

 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா