Thursday, February 28, 2019

பாகிஸ்தான் , இந்தியா - யார் சொல்வது உண்மை





 தேச பக்தி , மொழி உணர்வு , ஜாதிப்பாசம்  , இன உணர்வு  என எல்லாமே மனிதன் கற்பனையாக உருவாக்கிய ஒன்று.. இந்த கற்பனைகளால்தான் மனிதன் தன்னை ஒற்றைத்திரளாக திரட்டிக்கொண்டு உலகை ஆள முடிந்தது

இந்த் கற்பனைகள் இல்லாத விலங்குகள் மனிதனை விட வலுவாக இருந்தும் மனிதனிடம் தோற்றன. அவ்வளவு ஏன் , இந்த கற்பனைகள் இல்லாத மற்ற மனித இனங்கள் கூட ஹோமோ செப்பியன்ஸ் என்ற நம் ஆட்களிடம் தோற்று அழிய நேரிட்டது

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தச்சென்ற நம் விமானிக்கு ஆதரவாக நிற்பது நம் கடமை.. பாகிஸ்தான் இதை எப்படி பார்க்கிறது என கவனியுங்கள்.. தேச பக்தி என்பதை எப்படி எல்லாம் கற்பனையாக  புனைவுகள் மூலம் உருவாக்குகிறார்கள் என்பது புரியும்
------

பாகிஸ்தான் செய்தி

கொலை செய்ய வந்த எதிரிக்கு பரிவு காட்டிய பாகிஸ்தான் 

சட்ட விரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நாசகார செயல்கள் செய்ய நினைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கியது

இந்திய விமானிக்கு அது என்ன இடம் என தெரியவில்லை... அங்கிருந்த சிறுவர்களிடம் இது என்ன இடம் என கேட்டான்... அவர்கள் அவனிடம் விளையாடும் பொருட்டு , இது இந்தியா என்றான் ,, பாரத மாதா வாழ்க என கோஷமிட்டான் அவன்,, பாகிஸ்தானுக்கே வெற்றி என அவர்கள் கோஷமிட்டனர்.. அந்த வீர முழ்க்கத்தால் பயந்து போய் அவன் ஓடலானான்,, துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் வைத்திருந்த அவன் சிறுவர்களுக்கு பயந்து ஓடினான்,. சிறுவர்கள் துரத்தினர்.. ஆற்று நீரில் மூழ்கி தப்ப முயன்றவனை வெளியே இழுத்துப்போட்டனர்.,, மீண்டும் ஓடத்தொடங்கிவனை கற்கள் வீசி ஓட ஓட துரத்தினர் பாகிஸ்தான் இளம் வீரர்கள்...கோழைபோல ஓடிய அவனை பாகிஸ்தான் ராணுவம் பரிவுடன் காப்பாற்றியது...சிறுவர்களை சமாதானம் சொல்லி அனுப்பி விட்டு , காயங்களுக்கு மருந்தளிதது

----------


பாகிஸ்தான் ராணுவத்தின் சித்தரவதைக்கு உள்ளாகி ஏற்பட்ட காயங்களுக்கு பாகிஸ்தான் தரப்பு சொல்லும் விளக்கம் அது... பாகிஸ்தான் மக்கள் இதையே நம்புவர்... நாம் நமது அரசு சொல்வதை நம்புவோம்,

உண்மை என்பது யாருக்கும் தெரியாது.,, தெரிந்து ஆகப்போவதுப் ஒன்றும் இல்லை....

நாம் வாழ்வது இது போன்ற பொய்களால்தான் என்பதை உணர்ந்தால் போதும்


Friday, February 22, 2019

வாசிம் ஜாஃபர்- கிரிக்கெட் உலகின் ஃபீனிக்ஸ் பறவை


 உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்... 
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்  நிழலும் கூட மிதிக்கும்....

என்பார் கவியரசர் கண்ணதாசன்..

இதை நம் வாழ்வில் அனுபவித்து இருப்போம்... பிரபலங்களும் இந்த அனுபவத்துக்கு ஆளாவது உண்டு

ரஞ்சிகோப்பையை அடுத்தடுத்து இரு முறை வென்று சரித்திரம் படைத்துள்ளது விதர்ப்பா அணி.. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அந்த அணி வீரர் வாசிம் ஜாஃபர்

இதற்கு முன்பு மும்பை அணிக்காக விளையாடி அந்த அணியின் ரஞ்சி வெற்றிக்கும் உதவி இருக்கிறார் இவர்..

இந்திய அணிக்காகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்

அவர் பிரபலமாக இருந்த கால கட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் இவருக்கு பணி வழங்கியது.. அவர் தம்முடன் இருப்பது ஒரு பெருமை என நினைத்ததால் இந்த கவுரவ பதவி..

ஒரு கட்டத்தில் காயம் காரணமாக மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்... மற்ற அணிகளும் சேர்த்துக்கொள்ளவில்லை... எனக்கு காசெல்லாம் வேண்டாம்.. சும்மா ஆடுகிறேன் என சொன்னதை யாரும் மதிக்கவில்லை

இவர் நிலையை உணர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் , இனி கிரிக்கெட்டல்லாம் வேண்டாம்... ஒழுங்காக நிறுவனத்துக்கு ஒன்பது மணிக்கு எல்லோரையும் போல வேலை செய்யுங்கள்... ஐந்து மணிக்கு வீட்டுக்குப்போய் மெகா சிரியல் பாருங்கள் என்றது

ஒரு கிரிக்கெட் வீரராக இந்த அவமானம் அவரை காயப்படுத்தியது.. இந்த சூழலில் மும்பை பயிற்சியாளராக இருந்த சந்திரகாந்த பண்டிட் விதர்ப்பா அணியின் பொறுப்பை ஏற்றார்.. ஜாஃபரின் திறமையை அறிந்திருந்த அவர் விதர்பா அணியில் அவரை சேர்த்தார்

அதன் பின் நடந்ததெல்லாம் பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய வரலாறு

அவமானங்கள் நிரந்தரம் அல்ல

Wednesday, February 20, 2019

எலி இனம் அழிந்தது- ஆஸ்திரேலியாவில் தேசிய துக்கம்


ஒரு கையடக்க உயிர் ஒன்று நம்மை நம்பி வாழ் முடியலைனா நாமெல்லாம் என்ன மனுஷங்க என 2.0 படத்தில் பக்‌ஷிராஜன் கண்ணீர் மல்க கேட்பார்

நம் கிட்டத்தட்ட குருவிகளை அழித்து விட்டோம்., பல்வேறு தானிய வகைகள் அழிந்து விட்டன... எத்தனை உயிர்கள் அழிந்து வருகின்றன என எந்த கணக்கீடும் இங்கே இல்லை

ஆனால் வளர்ந்த நாடுகளில் ஓரளவு நிலை பரவாயில்லை... பாதுகாக்க முயல்கின்றனர்

ஆனால் அங்குமேகூட அலட்சியத்தால் பல உயிரிகள் அழிகின்றன
The extinction of the Bramble Cay melomys is understood to be the first mammal killed off by human-led climate change.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் படத்தில் இருக்கும் எலி இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்த நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இது தேசிய துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம என அந்த நாட்டு பிரமுகர்கள் கூறுகின்றனர்

அழிந்து வரும் உயிரிகள் பட்டியலில் அது இருந்தபோது , அதை பாதுகாக்க என்ன செய்யலாம் என ஆராய ஒரு கமிட்டி அமைத்தனர்.. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் , காலம் காலமாக வாழ்ந்த உயிரின வகை நம் தலைமுறையில் அழிந்து விட்டது என சோகமாக கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்

சுற்றுச்சூழல் சீர் கேட்டால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவு இது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
இனியாவது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் ஸ்காட் மாரிசனை வலியுறுத்தி வருகின்றனர்

நம் ஊரில் இது குறித்தெல்லாம் எந்த அக்கறையும் யாருக்கும் இல்லை

Monday, February 18, 2019

எப்படி இருந்த நான் ! மனுஷ்ய புத்திரன் கண்ணீர்


இலக்கிய வாதி என்ற அந்தஸ்தில் இருந்த தன்னை அரசியல்வாதியாக மாற்றி அசிங்கப்படுத்துகிறார்கள் என மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதி இருப்பது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


அவர் எழுதிய கவிதை

வரும்போது
சூரியனின் முதல் கிரணங்களில் ஒன்றாக
இந்த பூமிக்கு வந்தேன்
இப்போது என்னை 
சிகரெட் லைட்டரில் எரியும்
சிறு நெருப்பாக பயன்படுத்துகிறீர்கள்

இதைச் சொல்லும்போது
கண்ணீர் சிந்தவேண்டாம்
என்றுதான் நினைக்கிறேன்
ஆனாலும்
கண்ணீர் சிந்துகிறேன் 

மனுஷ்ய புத்திரன்

Thursday, February 14, 2019

படித்தவற்றில் பிடித்தவை - இரு கவிதைகள்

படித்தவற்றுள் பிடித்தவை

( சுமதி இராமசுப்ரமணியம் கவிதைகள்)

மருதமலை ஏறி

மாடிப்படி ஏறுகையில்
பயம் கொள்ளும் சிறுமியவள்

அப்பா இருசக்கர வாகனம் இயக்க
முன்னால் நின்றபடி

மருதமலை உயரம் ஏறி
கிழித்துப்போட்ட பேப்பர் துண்டுகளாய்
வீடுகள் தெரியும் அடிவாரம் நோக்கி

அலட்சியமாய் வீசி எறிகிறாள்

தன் பயத்தை’


---------------------

சிறுமியின் மரம் வளர்க்கும் ஆசை

அப்பாவின்

சிநேகிதர் வீட்டு திருமண விழாவில்

தாம்பூல பைக்கு பதிலாக

மரக்கன்று தரப்பட்டது

” அப்பா அம்மாவுக்கு ஒன்று போக
எனக்காக ஒன்று ”

ஆசையோடு கேட்டு வாங்கிக்கொண்டாள்

வாடகை வீட்டில் வசிக்கும் சிறுமி

Wednesday, February 13, 2019

கண் அடித்து காதலியை கரெக்ட் செய்யும் அரிய தவளை இனம்

Mysticellus franki showing its marbled underside and, left, its false eye spots.வெறும் ஐந்து ஆண்டுகள் முன்புவரைகூட , போரூரின் பல பகுதிகள் கீரிகளும் பாம்புகளும் இன்னும் பெயர் தெரியாத பல உயிரிகள் வாழும் காடாக இருந்தது

இன்று அந்த பகுதி மக்கள் வாழும் - அதுவும் பணக்காரர்கள் வசிக்கும் - வசதிமிகு பகுதியாகி விட்டது..அந்த உயிரிகள் இன்று இல்லை

எத்தனையோ அரிய உயிரிகள் அழிந்தனவோ யாருக்குத் தெரியும்?

நம்மிடம் இது குறித்த ஓர் அறியாமை இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஏதாவது புது வகை பாம்பைப் பார்த்தால் என்ன செய்வோம்.. பாம்பு கூட வேண்டாம்.. பழுப்பும் , ஊதாவும் கலந்த ஒரு வினோதமான வண்ணத்தில் ஒரு புழு  நெளிகிறது... என்ன செய்வோம் ?

உடனே காலில் மிதித்து கொன்று விடுவோம்.. ஒருவேளை அதுதான் அந்த இனத்தின் கடைசி பிரஜையாக இருக்கக்கூடும்..

இப்படிப்பட்ட அரிய இனங்கள் இன்னும் சில தப்பி பிழைத்து வாழ்ந்து வருகின்றன

அப்படி ஒரு அரிய தவளை இனம் கேரளா அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டெல்லி பலகலைக்கழகத்தை ஆய்வாளர்கள் சோனாலி கார்க்  மற்றும் அவரது சீனியர் எஸ் டி பிஜு ஆகியோர் இதை கண்டுபிடித்தவர்கள் ஆவர்

இந்த தவளை வெறும் நான்கு நாட்கள் மட்டுமே கண்ணில் படுகிறது..அதன் பின் எங்கோ மறைந்து ரகசிய வாழ்க்கை நடத்துகிறது..எனவே இப்படி ஒரு தவளை இருப்பதே தெரியாமல் இருந்தது

இதன் டி என் ஏ யை சோதித்துப்பார்த்ததில் இதன் மரபணு இந்திய தவளைகள் எதனுடனும் ஒத்துப்போகவில்லை... முற்றிலும் புதிய இனம்..இது போன்ற இனம் , ம்லேசியா , வியட் நாம் போன்ற   நாடுகளில்தான் இருக்கின்றன.. அந்த காலத்தில் ஆசிய பகுதிகள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுவதாக கருதுகின்றனர்

இதன் முதுகுப்புறத்தில் கண்கள் போன்ற வட்டமான இரு மச்சங்கள் இருக்கின்றன

போரிட வரும் எதிரியை குழப்ப இந்த கண் பயன்படுகிறது

தன் காதலியை கண் அடித்து கரெக்ட் செய்யவும் இந்த அமைப்பு பயன்படுகிறது...

அறிய வேண்டிய அரிய விஷயம்தான் இது

Blink and miss: Kerala’s mystery frog


பாக்யராஜின் துரோகமும் பாலா சந்தித்த துரோகமும்


இட ஒதுக்கீடு என்பது நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்று,, அதன் நோக்கம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது

ஆனால் சில பொதுப்பிரிவினர்  தம் சான்றிதழ்களில் ஃபிராடு செய்து , தம்மை இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற முயல்வதும் , பிறகு மாட்டிக்கொள்வதும் அவ்வப்போது நடப்பதுதான்

பாக்யராஜ் இங்குதான் ஒரு மாற்று சிந்தனையை பயன்படுத்தி ஒரு கதை எழுதினார்..  வேலையில்லாத ஒருவன் , தன்னை பிராமணன் என காட்டிக்கொண்டு வேலை பெறுவதாக ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத கதை

முடிந்த அளவு பெண்களையும் பிராமணர்களையும் இழிவு படுத்துவது போன்ற கதைப்போக்கு..

கண்டிப்பாக தனக்கு புரட்சியாளன் இமேஜ் கிடைக்கும். படம் ஓடும் என்பதை அவர் சரியாக கணக்கிட்டார்.. ஆனால் பிராமணரக்ளை இப்படி நேரடியாக இழிவு செய்தால் , அவர்கள் கோபத்துக்கு ஆளாவோம் என்ற ஒரு பயம் இருந்தது

எனவே ஒரு பலியாட்டை தேடினார்.. நல்ல சினிமாவுக்கான முயற்சியில் இருந்த பாலகுமாரன் சிக்கினார்..  ஓர் அனுபவத்துக்காக இயக்குனர் முயற்சியில் இருந்த அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதாக பாக்யராஜ் சொன்னதை அப்பாவித்தனமாக நம்பினார் பாலகுமாரன்

ஆனால் உண்மையில் அது ஒரு வாய்ப்பல்ல.. பெயர் மட்டும் பாலகுமாரனுடையது.. அதில் கொட்டப்படும் விஷமெல்லாம் பாக்ராஜை சேர்ந்தது..

படம் ஓடியது..லாபம் அவருக்கு ,, கெட்ட பெயர் பாலகுமாரனுக்கு

சினிமாவின் சூதுவாது தெரியாமல் ஏமாந்தது என் பிழை அல்ல... இந்த தந்திரம் ரொம்ப நாள் வேலை செய்யாது என வயிறு எரிந்து பேட்டி அளித்தார்

அந்த 7 நாட்கள் , தூறல் நின்னு போச்சு , முந்தானை முடிச்சு என வெற்றிகளை குவித்த பாக்யராஜுக்கு , மேற்சொன்ன படம்தான் அவர் வாழ்வின் கடைசி ஹிட் படம்

அதன் பின் வரிசையாக தோல்விகளை சந்தித்து முடங்கினார்

துரோகமும் தந்திரங்களும் தற்காலிக வெற்றியை தரலாம்.. ஆனால் நிரந்தரம் அல்ல

அதுபோல இயக்குனர் பாலாவுக்கு துரோகம் செய்தவர்களை இயற்கை நிதி மன்னிக்கப்போவதில்லை

எப்பேற்பட்ட இயக்குனர்.. அவர் இயக்கம் சரியில்லை என சொல்லி அவமானப்படுத்தியவர்கள் வெல்லப்போவது இல்லை

Monday, February 11, 2019

பெரிய மனிதர்கள் ...சிறிய செயல்கள்-- ரஜினி , கலைஞர் , பாலகுமாரன், வைரமுத்து


எழுத்துச் சித்தர் பால குமாரனின் ரசிகன் என்றாலும் அவரை அது வரை பார்த்ததில்லை ( பிற்காலத்தில் பார்த்தது , பேசியது எல்லாம் வேறு.. நான் சொல்வது ஆரம்ப காலம் )

ஒரு வழியாக அவரிடம் பேசி , நான் வருவதை சொல்லி அனுமதி வாங்கி அவர் இல்லம் சென்றேன்..

அப்போது முரசொலி அலுவலகத்தில் ஏதோ விழா என்பதால் சாலை நெருக்கடி.. அவர் இல்லம் செல்ல தாமதமாகி விட்டது

10 மணிக்கு செல்ல வேண்டியவன் 10.30க்கு சென்றேன்...

வா என அன்பாக அழைத்தவர்   , உனக்காக அரை மணி நேரம் காத்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்..

10 மணிக்கு நான் வருவதாக சொன்னதை மறந்திருப்பார் என நினைத்தேன்.. துல்லியமாக நேரத்தை நினைவு வைத்து தயாராக இருந்தது ஆச்சர்ய்மளிதது.. அந்த கால பிரஞ்ஞை வெகு முக்கியம் என புரிந்தது

அதன் பின் பல விஷ்யங்கள் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.. கடைசியாக விடை பெறும் முன் , ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என அனுமதி கேட்டேன்

என்னிடம் இருந்தது பழைய கால நோக்கியா மொபைல் கேமிரா ( அப்போது ஆண்ட்ராய்ட் , ஸ்மார்ட் போன் யுகம் ஆரம்பிக்கவில்லை )

சாதாரண கேமிரா , புதிதாக சந்திக்கும் புதுமுகம் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் அளித்து போஸ் கொடுக்க ஆயத்தமானார்.

எடுக்கும்போது அதிர்ச்சி...சார்ஜ் இல்லை... அட ஆண்டவா என நினைத்துக்கொண்டேன்..  அதை எல்லாம் சொன்னால் தர்ம சங்கடம் என நினைத்தபடி , போட்டோ எடுப்பது போல , ஆக்ஷன் கொடுத்து விட்டு , ஓகே சார்.. நன்றி என சொல்லி விட்டு புறப்பட ஆயத்தமானேன்

என் குரலில் சுரத்து இல்லாததை குறிப்பால் உணர்ந்த அவர் , எங்கே போட்டோவை காட்டு என்றார்

இதை எதிர்பார்க்கவில்லை... ஹி ஹி...சார்ஜ் இல்லை என்றேன்

அப்படி என்றால் சொல்லி இருக்க வேண்டுமல்லவா.. தயார் நிலையில் இருக்காதது உன் தப்பு , தப்பு செய்து விட்டால் மறைத்து என்ன ஆகப்போகிறது.. ஒப்புக்கொண்டு விளைவுகளைஅ சந்திப்பதுதான் அழகு... நான் திட்டினாலும் வாங்கி இருக்க வேண்டும்.. அதில் இழிவு ஏதும் இல்லை.. சரி... சார்ஜ் போட்டுக்கொள் என அதற்கு வசதி செய்து தந்தார்

அதன் பின் போட்டோ எடுத்தேன்... அதையும் செக் செய்தார்... இல்லை.. சரியாக வரவில்லை என சொல்லி விட்டு வேறு இடத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தார்..அழகாக வந்தது

அவர் புகைப்படம் வராத இதழ்கள் இல்லை... அவர் பார்க்காத புகழ் இல்லை..
அவ்வளவு பெரிய ஆளுமை , ஒரு சாதாரண புகைப்படத்துக்கு அவ்வளவு சிரத்தை எடுத்தது , தன் மீது அன்பு கொண்டு தேடி வந்தவனுக்கு கொடுக்கும் மரியாதை ... இது போன்ற சிறிய செயல்கள்தான் ஒருவரை பெரிய மனிதன் என்பதை அடையாளம் காட்டுகின்றன

----


வைரமுத்து நிகழ்த்தும் தமிழாற்றுப்படை நிகழ்ச்சிக்கு பெரும்பாலும் சென்று விடுவேன்..

ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார்.. அரங்கு நிறைந்த கூட்டம்.. முன் வரிசை பிரமுகர்களுக்கு வணக்கம் சொல்லு கை குலுக்கினார்.. அத்துடன் நிறுத்தவில்லை.. கடைசி வரிசை வரை நடந்து வந்து அனைவரிடமும் கை குலுக்கி நலம் விசாரித்து விட்டு அதன் பின் மேடை ஏறினார்.. அந்த சிறிய செயல் பலரை கவர்ந்தது

ஆரம்பிக்கும்போது , இப்போது நேரம் 6.30/. சரியாக 7.30க்கு என் உரை நிறைவடையும் என சொல்லி விட்டு பேச ஆரம்பித்தார்... அந்த கால பிரஞ்ஞை மக்கள் மனதை வென்றது


----------------


அது முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி.. கலைஞர் அப்போது முதல்வர்.. நிகழ்ச்சியை இன்னொரு மேடையில் இருந்து நேர் முக வர்ணனை செய்து கொண்டிருண்டனர்.. திடீரென அதில் பிரச்சனை..வர்னணை தடைப்பட்டது.. நிலையை உணர்ந்த ஸ்டாலின் அவர்களை தம் மேடைக்கு வருமாறு அழைத்தனர்.. ஓட்டமும் நடையுமாக அந்த குழு மேடை ஏறியது.. அந்த அவசரத்தில் வர்ணனையாளர் சுதா சேஷையனின் அலைபேசி எங்கோ கீழே விழுந்து விட்டது.. அலைபேசி என்றால் அதன் விலை மதிப்பு மட்டும் அல்ல.. அதில் இருக்கும் தொடர்பு எண்கள் இழப்பும் பெரிய துன்பம் அளிப்பது.. ஆனாலும் என்ன செய்ய ..  நிகழ்ச்சி முடிந்ததும் வருத்தமாக கிளம்பிய சுதா சேஷையனை , முதல்வர் கலைஞர் குரல் நிறுத்தியது
” அம்மா.. இதோ உங்க அலைபேசி... அவசரத்தில் கீழே விழுந்துருச்சு.. நீங்க கவனிக்கல./” என்று சொல்லி போனை ஒப்படைத்தார் முதல்வர்

அவ்வளவு பெரிய தலைவர் , முதல்வர் இப்படி சிறிய செயல் ஒன்றில் ஈடுபாடு காட்டியதன்மூலம் பெரிய மனித தன்மையை காட்டினார்


-------


பாலகுமாரனின் பெரிய மனித தன்மையை பார்த்தோம்.. அவர் வியந்த பெரிய மனித தன்மை ஒன்று

பாட்ஷா பட விவாதம் ரஜினி வீட்டில் நடந்தது... ரஜினி , பாலகுமாரன் , சுரேஷ் கிருஷ்ணா மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்

ரஜினி ஒரு நிமிடம் எங்கோ போன நேரத்தில் அவரது பிரத்யேக இருக்கையில் ஏதோ நினைவாக அமர்ந்து விட்டார் பாலகுமாரன்.

மீண்டும் ரஜினி வந்தபோது அதை உணர்ந்து  எழ முயன்ற அவரை அதிலேயே அமரச்செய்து விட்டு , சாதாரண இருக்கையில் அமர்ந்தார் ரஜினி.. அது மட்டும் அல்ல.. மூவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் பேச வந்தபோதுகூட , அந்த பிரத்யேக இருக்கை பாலகுமாரனுக்கே கொடுக்கப்பட்டது.. கடைசி வரை அது அவருக்கானதாக இருந்தது என்பதை “ சூரியனுடன் சில நாட்கள் “ நூலில் பதிவு செய்துள்ளார் அவர்

----

சின்ன சின்ன விஷ்யங்களில் செலுத்தும் கவனம் , பிறர்மீதான அக்கறை , பிறர் மீதான மரியாதை போன்றவை நம்மை உயர்த்தும்

Sunday, February 10, 2019

துரோகத்தை சந்திப்பினும் பெருந்தன்மையை கைவிடாத இயக்குனர் பாலா


பாலா எப்போதுமே தன்னிச்சையாக செயல்படும் படைப்பாளி என்பது தெரிந்த விஷயம்தான்

இது தெரிந்துதான் வர்மா படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

விக்ரமுக்கு எப்படி ஒரு திருப்பு முனை படம் கொடுத்தாரோ அதே போல அவர் மகனுக்கும் ஒரு திருப்பு முனையை கொடுப்பதுதான் அவர் மனதில் இருந்தது

சூர்யா , ஆர்யா என அவர் படத்தில் நடித்த அனைவருக்குமே அந்த படங்கள் பெருமை சேர்க்கும் படங்களாகத்தான் அமைந்தன

இந்த நிலையில் , அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிட முயன்றது தயாரிப்பாளர் நிறுவனம்

பாலா அதற்கு இடம் கொடுக்கவில்லை

வேண்டுமென்றால் நான் விலகிக்கொள்கிறேன்.. எடுத்த படத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன்.. விருப்பம்ப்போல காட்சிகளை சேர்ப்பது , நீக்குவது உங்கள் விருப்பம்.. ஆனால் ஒரு நிபந்தனை.. என் பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றார்

இது தெளிவாக டைப் செய்யப்பட்டு ஜனவரி 2019 மாதம் கை எழுத்து இடப்பட்டது

 உண்மை இவ்வாறு இருக்க  , பட நிறுவனம் திடீரென ஓர் அறிவிப்பு வெளியிட்டது

எடுத்த வரையில் படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் புதிதாக எடுக்கப்போகிறோம் என்றும் அறிக்கை வெளியிட்டனர்

இது நடு நிலையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என அவர் சென்ற மாதமே சொல்லி விட்ட பிறகு இந்த அறிக்கை என்பது பாலாவை அவமானப்படுத்தும் செயல்தான்


விக்ரமும் பாலாவும் இது குறித்து பேசவில்லை

ஆனால் பாலா தன் அமைதிக்கு காரணம் விக்ரம் மகனின் எதிர் காலம் என்கிறார்.. இது அவரது பெருந்தன்மை

விக்ரம் அமைதியோ நேர்மையற்றதாகும்


ஏறிய ஏணியை உதைப்பது வெகு எளிது..ஆனால் அது நல்லதல்ல என யாரேனும் விக்ரமுக்கு சொல்ல வேண்டும்
 

பெண்மையை இழிவு படுத்தும் திருமண மந்திர விளக்கமும் , உண்மையும்


விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவரிடம் உங்களுக்கு எப்படி முடி கொட்டியது என கேட்டார்கள்

- சார்... நான் எப்பவுமே படிச்சிக்கிட்டே இருப்பேன்,,பயங்கர படிப்பாளி... படிச்சு படிச்சு முடி கொட்டிருச்சு என்றார் அவர்

- அப்படியா.. எப்படி என்னதான் படிப்பீங்க ? என ஆச்சர்யத்துடன் கேட்டார் கோபி நாத்

- பொன்னியின் சொல்வன் படிப்பேன் என்றார் அவர்

திகைத்துப்போன கோபி நாத் , சரி., அதை அப்படி வெறித்தனமா படிச்சாலும்கூட  , ஒரு வாரத்துல முடிச்சுறலாமே.. என்றார்

- இல்லை சார்.. தினமும் அதை படிப்பேன் என்றார் அவர்

- சரி., அதுல வரும் கேரக்டர் ஏதாச்சும் சொல்லுங்க என கேட்டதும் திகைத்துப்போய் விழித்தார் அவர்

நம் ஆட்களின் படிப்பு அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.. எதையும் சரியாக படிப்பதில்லை

படிக்காதது ஒரு குற்றம் என சொல்வதற்கில்லை... ஆனால் படிக்காமல் அரைகுறையாக எழுதுவது தவறு

இவர்கள் இப்படி அரைகுறையாக முக நூலில் வாட்சப்பில் எழுதுவதை ஆதாரமாக வைத்து அரசியல் தலைவர்களும் மேடையில் பேசி அசிங்கப்படுவதும் நிகழ்கிறது


மாங்கல்யம் தந்துனானே என திருமணத்தில் மந்திரம் சொல்கிறார்கள் ... அதன் பின் வரும் வரிகளின் அர்த்தம் என்ன ?

சோமஹ ப்ரதமோ விவேத
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ

 ஒருவன் நித்திரை தேவியின் பிடியில் இருந்தான் என்றால் என்ன அர்த்தம்?  நித்திரை தேவி என்று ஒரு பெண் இருக்கிறாள்... அவள் அவனை இழுத்து படுக்கைக்கு அழைக்கிறாள் என்றா அர்த்தம்?

அப்படி பாமரர்களும் பொருள் கொள்ள மாட்டார்கள்.. தூங்கி விட்டான் என்பதை நித்திரை தேவி அவனை ஆட்கொண்டாள் என கவிப்பூர்வமாக சொல்கிறார்கள்

உன் நாவில் சரஸ்வதி தேவி வசிக்கிறாள் என்றால் , அப்படி ஒரு பெண் நம் நாக்கில் வீடு கட்டி வசிக்கிறாள் என்பதல்ல.. அவன் நன்றாக சுவையாக பேசுகிறான் என்பது பொருள்


அதுபோன்ற கவிப்பூர்வமான வரிகள் அவை


பெண்ணே.. 

நீ  நிலவின் குளிர்ச்சியாய் உதித்தாய்

பின்பு கந்தர்வ அழகு உன்னை ஆட்கொண்டது

அதன் பின் பெண்மை நெருப்பு உன்னைப் பற்றியது

இதோ இப்போது உன்னவனை கரம் பற்றுகிறாய்


இதுதான் அந்த வரிகளின் அர்த்தம்


இதைப்புரிந்து கொள்ளாமல் முதல்வர் பகல் கனவில் இருக்கும் சில தலைவர்களே பேசுவது கொடுமை

பெண்ணே

கொஞ்ச நாள் பக்கத்து வீட்டு சந்திரனை கல்யாணம் செய்து வாழ்ந்தாய்

அவனை டைவர்ஸ் செய்து விட்டு , கந்தர்வன் என்ற எதிர் வீட்டானை மணந்தாய்

அக்னிகோஷ் என்ற வட இந்தியனை அடுத்து மணந்தாய்

கடைசியாக இந்த பலியாடு உன்னிடம் சிக்கியுள்ளது... இவனையாவது கண் கலங்காமல் பார்த்துக்கொள் என்றொரு பாமரத்தனமான விளக்கத்தை மேடையிலேயே பேசுகிறார்கள்

அப்படி பேசுபவர்களோ அதை கேட்டு கைதட்டுபவர்களோ இந்த கட்டுரையை படிக்கப்ப்போவதில்லை...திருந்தப்போவதும் இல்லை

உண்மையான அறிவைத்தேடுபவர்களுக்கு இது உதவக்கூடும் என்பதால் இந்த பதிவு 






Friday, February 8, 2019

பாலச்சந்தர் மேல் வழக்கு தொடர்ந்த எழுத்தாளர்- தாசன் படைப்புலகம்





சார்,,, உங்க தோட்டத்த வேவு பார்க்குறானே... அவன் பக்கா திருடன்.. அவனை விரட்டி அடிங்க என்றான் அவன்

அப்படியா... என அலட்டிக்கொள்ளாமல் சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றவனை அவன் மனைவி பிடித்துக்கொண்டாள்

திருட்டு எச்சரிக்கையை ஏன் அலட்சியம் செய்கிறீர்கள் என்றாள்

அவன் சொன்னான்.. எச்சரித்தானே..அவன் இவனை விட பெரிய திருடன்... ஒருவனை விரட்டினால் என்ன பயன் ?

மனைவி கேட்டாள்... இருவரும் திருடன் என்றாலும் ஒருவனை விரட்டினால் பாதி தீமையாவது குறையுமே ?

அவன் சொன்னான்.. தீமையை அப்படி படிப்படியாக குறைக்க முடியாது.. ஒரேயடியாக அழித்தால்தான் உண்டு.. அதற்கான வழிகளைத்தான் யோசிக்கிறேன்

அவள் கேட்டாள் . சரி.. அவனும் திருடன் என எப்படி சொல்கிறீர்கள்

அவன் சொன்னான்.. அவன் சொன்ன தொனியை கவனித்தாயா... என்ன சத்தம், என்ன கூச்சல்..   ஒருவரை குற்றம் சொல்கையில் அவன் மனசாட்சி நீயும்தான் குற்றவாளி என சப்தமிடும்.. அந்த சப்தத்தை மறைக்கவே சத்தமாக பேசுகிறார்கள்... சத்தியத்துக்கு சத்தம் தேவையில்லை

-----------------

மேற்கண்ட உருவக கதை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது... அரசியல் , சினிமா , இலக்கியம் என எதிலும் இதை பொருத்திப்பார்க்கலாம்


இதை எழுதியவர் என்,ஆர். தாசன் .. 80களில் 90களில் பல நல்ல கதைகளை எழுதியுள்ளார்

அபூர்வ ராகங்கள் தன்னுடைய கதை என்று அந்த காலத்தில் புகார் கூறி செய்திகளில் இடம் பெற்றவர் அவர்

தன் கதையின் காப்பி என அவர் கருதியதை புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் அவர் எழுதிய கதையும் அபூர்வ ராகங்கள் கதையும் விக்கிரமாதித்தன் கதை சாயல் கொண்டது.. அதை வைத்துக்கொண்டு காப்பி என்பது சற்று மிகைதான்.. ஆனாலும் கோர்ட் அவர் வாதத்தை ஏற்று பாலச்சந்தருக்கு அபராதம் விதித்தது

விக்கிரமாதித்தன் கதை என்பது பொதுவானது.. அதைப்பார்த்து நான் எழுதினேன்.. இனி யார் எழுதினாலும் அது என்னுடையை காப்பிதான் என எப்படி சொல்ல முடியும்?

அதை தவிர்த்து விட்டுப்பார்த்தால் , இவர் கதைகள் பல சுவையாகவே உள்ளன

இவரது கதை பாணி இயல்புவாத வகையை சார்ந்தது... பகல் கனவுகளோ , அதீத கற்பனைகளோ இல்லாமல் அனுபவத்தை அப்படி பதிவு செய்பவை அவர் கதைகள்.. பேருந்தில் சீட் கிடைக்காமை , சில்லறை தவறி விழுதல் போன்ற எளிய அனுபவங்கள் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இராது.. ஆனால் இவர் பார்வையில் அந்த சின்ன சின்ன சம்பவங்களும் கதைகளாவது சிறப்பு


இந்த எளிய சித்தரத்துக்கு நேர் மாறான உருவக கதைகளையும் எழுதியுள்ளார்

படிமங்களை சிறப்பாக பயன்படுத்த தெரிந்தவர் இவர்

1 இந்த நூற்றாண்டு சிறந்த கதைகள்  நூறு என்ற தலைப்பில் வீ அரசு தொகுத்த கதைகள் ஒரு புத்தகமாக வந்துள்ளது.. அதில் என் தாசன் எழுதிய கதை இடம்பிடித்துள்ளது .கதையின் பெயர் - அவள் அறியாள்

2 அகிலன் தொகுத்துள்ள சிறந்த கதைகளில் இவர் கதை இடம்பெற்றுள்ளது

கதையின் பெயர் -  நீலச்சிலுவை

3 1996ல் வல்லிக்கண்ணன் , ஆ சிவசுப்ரமணியம் தொகுத்து வெளிவந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இவர் கதை : சுய வதம்



எப்போதாவது வாய்ப்பு கிட்டின் இவர் எழுத்தை வாசியுங்கள்

Thursday, February 7, 2019

நாகேஷ் அடைந்த டென்ஷன் - மேதைகளின் மோதல்


சாலையில் செம நெரிசல்.. வாகனங்கள் இரண்டு ஒன்றை ஒன்று லேசாக உராய்ந்து கொண்டன.. இரு வாகன சாரதிகளும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதை காதால் கேட்க இயலவில்லை

சராசரி மனிதர்களின் மோதல் இபப்டி இருக்கும்

ஆனால் மேதைகளின் மோதல் , அப்படி இருக்காது... ரசிக்கும்படி இருக்கும்
-----

அதற்கு இரு உதாரணங்கள்


புல்லாங்குழல் மேதை மாலியின் இசைக்கச்சேரி...  நடிப்பு மேதை நாகேஷ் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.. மாலி வர தாமதமானது.. ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.. ஆனால் புல்லாங்குழலை மறந்து விட்டார்.. தன் உதவியாளரை வீட்டுக்கு அனுப்பி கொணரச் சொன்னார்

இன்னும் தாமதமா என ரசிகர்கள் அலுப்படைந்தனர்..
மாலி சொன்னார்..  என் இசை விருந்தை ரசிக்க விரும்பினால் சின்ன சின்ன தடங்கல்களை பொறுத்துதான் ஆக வேண்டும்... பொறுமை இல்லை என்றால் கிளம்பி விடுங்கள்...பாதியில் கிளம்பாதீர்கள்

இப்படி அவர் கோபமாக சொன்னதும் ரசிகர்கள் அமைதியாக அமர்ந்தனர்... ஆனால் நாகேஷ் கோபமாக கிளம்பி விட்டார்

மாலி இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது

முடித்து விட்டு வெளியே வந்த மாலி திகைத்தார்..காரணம் நாகேஷ் வீட்டுக்குப் போகாமல் வெளியே காத்திருந்தார்

அதாவது அவர் வெளி நடப்பு ஒரு கோபத்தால்தான். மற்றபடி மாலி மீது மரியாதை உண்டு

இதை உணர்ந்த மாலி , நாகேஷ் காரில் ஏறி அவருடன் அவர் வீட்டுக்கு சென்று  அவருக்கென பிரத்யேகமாக இசை விருந்து படைத்தார்


------

காந்தி ஒரு முறை சென்னை வந்திருந்தார்... தன் அருமையான ஆங்கிலத்தில்சொற்பொழிவு ஆற்றினார்

அவருக்கு பாரதியார் கடிதம் எழுதினார்

அன்புள்ள திரு .காந்தி அவர்களுக்கு

தங்கள் உரை நன்றாக இருந்தது.. ஆனால் ஒரு குறை..  நீங்கள் தாய் மொழிப்பற்றை வலியுறுத்துபவர்.. எனவே நீங்கள் உங்கள் தாய் மொழியான குஜாராத்தியில் பேசியிருக்க வேண்டும். அல்லது எங்கள் தாய் மொழியாம் தமிழில் பேசியிருக்கலாம்.. சம்பந்தம் இல்லாமல் ஆங்கிலத்தில் பேசியது நெருடல்

அன்புடன்

சுப்ரமணிய பாரதி

இதற்கு காந்தி பதில் எழுதினார்

அன்புள்ள பாரதி,,

என் தவறை ஒப்புக்கொள்கிறேன், மன்னிப்பு கோருகிறேன்.. ஆனால் உங்கள் கடிதத்தை தமிழிலோ குஜராத்தியிலோ எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதி இருப்பது என்னை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது

அன்புடன்

எம் கே காந்தி

----------------

Wednesday, February 6, 2019

அண்ணாவா பெரியாரா... அம்மாவா அப்பாவா- எம் ஜி ஆர் ருசிகர பதில்கள்



அண்ணாவால் தன் இதயக்கனி என போற்றப்பட்டவர் எம் ஜி ஆர்

1967ல் திமுக வென்றதும் தனக்கு மாலை அணிவிக்க வந்தவர்களை , எம் ஜி ஆர்தான் இந்த மாலைக்கு உரியவர் என அவரிடம் அனுப்பியவர் அண்ணா


கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை தமிழகத்துக்கு தந்த அண்ணா குறித்து எம் ஜி ஆர் பல சர்ந்தர்ப்பங்களில் பேசி இருக்கிறார்... அதில் ஒன்று இது

------------

உங்களை சிலர் அவதூறாக பேசும்போது என்ன நினைப்பீர்கள்

எம் ஜி ஆர் - இப்போது நான் புகழ் பெற்று இருப்பவன்.. தெரிந்தோ தெரியாமலோ யாருக்காவாது தவறிழைத்திருக்கக்கூடும்.. ஆனால் சாப்பாட்டுக்குகூட வழியின்றி தவித்த அந்த  நாட்களில் , யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காதபோது  , எங்களை காரமின்றி அவமானப்படுத்தியவர்கள் பலர் உண்டு... வேறு வழியின்றி அவ்ற்றை சகித்துக்கொண்ட அந்த நாட்களை நினைத்து ஆறுதல் அடைவேன்


அம்மா புகழைப்பாடும் நீங்கள் அப்பாவைப் புகழ்வதில்லையே?


எம் ஜி ஆர் . அம்மா என்பதிலேயே அப்பாவும் வந்து விடுகிறாரே.. தந்தை இன்றி தனயன் ஏது... அப்பாவுக்கும் பயந்து நடக்கும் பலர் அம்மாவை மதிப்பதில்லை..எனவேதான் அம்மாவுக்கு முக்கியத்துவம் தருகிறேன்,, ம்ற்றபடி நான் இருவரையுமே வணங்குபவன்



ஆன்மிக படங்களில் ஏன் நடிப்பதில்லை?


தாய்ப்பாசம். பிறர்க்கு உழைத்தல் , தீமையை வெல்லல்.. இவைதான் ஆன்மிகம்,,, அப்படிப்பார்த்தால் என் படங்கள் எல்லாமே ஆன்மிக படங்கள்தான்


சத்துணவு திட்டம் வெற்றி பெறாது ,,,எம் ஜி ஆருக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்கிறாரே கலைஞர்?


எனக்கு பொருளாதாரம் தெரியாது.. நான் படிக்காதவன்,, ஆனால் ஏழைகளின் பசி தெரியும்.. ஏழைகள்தான் என்னை முதல்வராக்கி இருக்கிறார்கள்... அவர்களுக்கு நல்லது செய்வது என் கடமை


பெரியார்.. அண்ணா .,, யார் சிறந்தவர்?


சுய மரியாதை நம் அடிப்படைத் தேவை.. இதை வலியுறுத்தியவர் பெரியார்... அவர் சொன்னதை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அண்ணா.. இருவரும் சிறந்தவர்கள்தான்..அவர்களைப்பற்றி ஆராய்வதை விட அவர்கள் சொன்னபடி நடக்கிறோமா என நம்மை நாமே ஆராய்வதே முக்கியம்

Tuesday, February 5, 2019

எங்கள் ஊர் - கிவாஜ - நூல் அறிமுகம்


தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவர்களில் ஒருவர் கிவாஜ.. கலைமகள் ஆசிரியராக இருந்து பலரை தமிழ் எழுத்துலகுக்கு கொ கொணர்ந்தவர் இவர்

ஒரு முறை , இம்மைக்கும் மறுமைக்கும் உரிய வழி என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார்

பேச ஆரம்பிக்கும்போது மைக் தகராறு செய்யவே வேறு மைக் கொணர்ந்தனர்.. அதுவும் வேலை செய்யவில்லை

உடனே சொன்னார் - இம்மைக்கும் சரி இல்லை.. அம்மைக்கும் சரியில்லை

கூட்டத்தில் பயங்கர சிரிப்பொலி

இவர் தலைமை தாங்கிய கூட்டம் ஒன்றில் குமரி அனந்தன்  சிறப்பாக பேசினார்.. உடனே கிவாஜா அவரிடம் கேட்டார்...எங்கிருந்து வருகிறீர்கள்

குமரியார் - வண்ணாரப்பேட்டை

கிவாஜா - வெளுத்துக்கட்டி விட்டீர்கள்

கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது


தன் இதழில் , எங்கள் ஊர் என்ற தலைப்பில் சில பிரமுகர்களை எழுத வைத்தார் அவர்.. அதே தலைப்பில் சில வாசகர்களும் தன் எண்ணங்களை பதிவு செய்தனர்

அது நூலாக வெளிவந்துள்ளது  

தி சே சௌ ராஜன் , ஸ்ரீனிவாச ராகவன், ஸ்ரீனிவாச சாஸ்திரி,  ராவ் பகதூர் சுப்ரமணிய முதலியார் , கொணஷ்டை , குமுதினி உள்ளிட்ட பெருந்தலைகள் தம் அனுபவங்களை பகிர்துள்ளனர்

50களில் வெளியான நூல் இது

இதில் எழுதிய பிரமுகர்கள் இன்று நம்மிடையே இல்லை என் முன்னுரையில் சொல்கிறார் கிவாஜ..

அந்த வரி என்னை சிலிர்க்க வைத்தது... காரணம் அதை எழுதிய கிவாஜ வும் இன்று நம்மிடையே இல்லை

ஆனால் அந்த முன்னோடிகளின் எழுத்து  , அவர்களின் தமிழ் உழைப்பால் விளைந்த பயன் இன்றும் நம்மிடையே இருக்கிறது..

ஆக அவர்கள் எல்லாம் மரணம் வென்றவர்கள்

 நாக்பூர் குறித்தும் டெல்லி குறித்தும் வாசகர்கள் எழுதியுள்ள அனுபவ பகிர்வும் சிறப்பு...

அன்றைய ஊர்கள் இன்று மாறி விட்டன.. ஆனால் மாறாத தன்மைகள் சில உள்ளன.. எங்கு சென்றாலும் தனித்து செயல்படும் தமிழன் , லொட லொடவென்ற பேச்சு , உணவில் காட்டும் பிடிவாதம் போன்றவை எப்பவும் மாறுவதில்லை

அந்த கடிதம் எழுதிய வாசக்ர்களும் சாஸ்வத தன்மை பெற்று விட்டதை எண்ணிப்பார்த்தேன்.. இந்த நூல் பிரதியை ஒரு பொக்கிஷம்போல தம் பரம்பரைகளிடம் காட்டி இருக்கக்கூடும்..

பிரமுகர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரையும் இன்றைக்கும் படிக்கும் தன்மையுடன் அழகான நடையுடன் புனைவுத்தன்மையுடன் இருக்கிறது..அதே நேரத்தில் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் இருக்கிறது

அமைச்சர் , மருத்துவர் , பேச்சாளர்  , எழுத்தாளர் என்ற கலவையில் இந்த நூல் படைப்பாளிகள் இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான அம்சம் என்பது தமிழ்...தமிழ் நேசம்

வாய்ப்பு கிடைப்பின் படியுங்கள்

எங்கள் ஊர் - தொகுப்பு கிவாஜ.. ஜெனரல் பப்ளிஷர்ஸ்

Monday, February 4, 2019

ரஜினி இயக்குனருக்கு ஏற்பட்ட சோகம்


80களில் அதிரடி சண்டைப் படங்களில் நடித்து வந்த ரஜினிக்கு சற்று வித்தியாசமாக அமைந்த படம் - தனிக்காட்டு ராஜா...

நான் தான் டாப்பு , மத்ததெல்லாம் டூப்பு என மாஸ் பாடல்கள் இருந்தாலும் நிலம் எங்கள் உரிமை என்பது போன்ற புரட்சிகரமான கருத்துகள் கொண்ட படம்..

அதில் ஒரு பாடல்

கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே சேரிக்குள்ளே
சூரியன் வந்தது இல்ல
புதுசூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர

கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே

அந்த படத்தின் இயக்குனர் விசி குக நாதன்

நல்ல சிந்தனையாளர்... தமிழார்வம் மிக்கவர்.. எம் ஜி ஆரால் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்... இவரும் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்

தனிக்காட்டு ராஜா வெற்றிக்கு பிறகு பல படங்கள் இயக்கும் வாய்ப்புகள் வந்தன,,, வெற்றிகரமான இயக்குனராக உருவாக தொடங்கினார்

ஆனால் இவர் வளர்ச்சி பாதியில் நின்று போனது .. அது ஏன் என்பதே இந்த கட்டுரை


ஒரு நாள் ஏ வி எம் நிறுவனத்தில் இருந்து போன் வந்தது.. இவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதால் அவர்கள் மேல் அன்பு கொண்டவர்.. உடனே புறப்பட்டு சென்றார்

அவர்கள் சொன்னார்கள்.. ஒரு படம் எடுத்து வருகிறோம்.. சரியாக வரவில்லை.. நீங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு அதை முடியுங்கள்

குக நாதனுக்கு திகைப்பு.. நாமே ஒரு தனி இயக்குனராக உருவாகி வரும்போது  , இதில் கை வைப்பதா என குழம்பினார்

ஆனாலும் நன்றிக்கடனுக்காக ஒப்புக்கொண்டார்

படத்தில் டைட்டிலில் இயக்கம் என்பதில் என் பெயரை போடாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.. காரணம் படம் அவருக்கு பிடிக்கவில்லை.. அதில் தன் பெயர் இடம்பெறுவதை விரும்பவில்லை

ஆனாலும் இவர் பெயருடனே படம் வெளி வந்து படு தோல்வி அடைந்தது’

 அவர் மார்க்கெட் அத்துடன் வீழ்ந்தது..

அந்த படம் - பாட்டொன்று கேட்டேன்

ரகுமான் , சித்தாரா , ரேகா உட்பட பலர் நடித்தனர்.. மரகத மணி இசை

 ஒருவருக்கு கெட்ட நேரம் எப்படி வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது...

Sunday, February 3, 2019

மரண விளிம்பில் ஒரு கதை


எதிர்பார்ப்புடன் வாங்கும் சில நூல்கள் குப்பைகளாக இருப்பதுண்டு

தற்செயலாக வாங்கும் நூல்கள் அரிய அனுபவம் தருவதும் உண்டு


இலக்கியச்சிந்தனை அமைப்பு வருடம்தோறும் சிறந்த கதைகள் சிலவற்றை ( 12 கதைகள் ) தேர்ர்ந்தெடுத்து அதில் சிறந்த கதை ஒன்றை அந்த வருடத்தின் சிறந்த கதையாக தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது

ஆரம்ப கட்ட தேர்வு இலக்கியச்சிந்தனை அமைப்பை சேர்ந்தது... அவற்றில் சிறந்த கதை ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மூத்த எழுத்தாளர் யாராவது ஒருவரிடம் வழங்கப்படும்... அவர் அந்த கதைகள் குறித்த தம் விமர்சனத்தை  சொல்லி விட்டு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து அத்ற்கான காரணங்களையும் சொல்வார்

அந்த அலசல் மிகவும் சுவையாக இருக்கும்.. பயனுள்ளதாகவும் இருக்கும்

வானதி பதிப்பகம் இதை நூலாக வெளியிடுகிறது

 கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த பணி நடந்து வருகிறது... அவற்றில் பெரும்பாலான நூல்களை படித்துள்ளேன்

2012 சிறந்த சிறகதைகள் நூலை வாங்கிய பின்புதான் அது ஒரு அரிய ஆவணம் என்பதை அறிந்தேன்


கிருஷ்ணா டாவின்சியின் கடைசி சிறுகதையும் தமிழருவி மணியனின் முதல் சிறுகதையும் இடம்பெற்றுள்ள தொகுப்பு இது

இதில் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால் இரண்டுமே மரணத்தை கதைக்களனாக கொண்டவை

புகழ் பெற்ற ஓர் எழுத்தாளரின் கடைசி கதை எனும் அரிய தருணத்தை படம்பிடிக்க ஒரு மேதையால்தான் முடியும்.. இந்த தொகுப்புக்கு மதிப்புரை வழங்கியுள்ள வண்ணதாசன் அதை சிறப்பாக செய்துள்ளார்


குமுதம் வாசகர்கள் மத்தியில் கிருஷ்ணா டாவின்சி மிகவும் பிரபலம்.. மற்றவர்களும் அவரை அறிவார்கள்.. தனிப்பட்ட முறையிலும் பல நண்பர்களைக்கொண்டவர் அவர்

குமுதத்தில் இருந்து விலகிய பின் சினிமா துறையில் ஈடுபட்டார்.. பல பத்திரிகைகளில் எழுதினார்

அந்த கடைசிக்கதை விகடனில் வெளியானது


மரணத்தை எதிர் நோக்கும் ஒருவனைப் பற்றிய கதை அது.. நீ பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியபின்பும் , மாற்று மருத்துவத்தால் பிழைத்து எழுந்த ஒருவனின் கதை

ஆனால் அந்த கதை வெளியானபோது அதைப்பார்க்க அவர் இல்லை... ஆம்... மருத்துவர்கள் சொன்னது உண்மையாகி அவர் இறந்து விட்டார்.. அந்த குறிப்புடன் அந்த சிறுகதையை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி இருந்தது விகடன்

 நோயின் கொடுமையை டாக்டர்கள் சொல்லும்போது மனதில் ஏற்படும் உணர்வுகள் , அந்த அச்சம் ,  அதை கண்டு கொள்ளாத மருத்துவ மனை நிர்வாகம், பரிதாபப்பட்டாலும் உதவ முடியாத நிலையில் இருக்கும் மருத்துவர்கள் , மாற்று வழி இருக்குமா என நோயாளின் பரிதவிப்பு என பல விஷயங்களை படம் பிடித்துள்ள கதை ஒரு முக்கியமான ஆவணம்

ஆனால் , அந்த ஆவண மதிப்பு மட்டும் போதாது என கருதி , சிறந்த கதையாக ஒற்றைச் சிறகு ( தமிழருவி மணியன் ) கதையை தேர்ந்தெடுத்துள்ளார் வண்ண தாசன்... அந்த கறார்தன்மையும் நூலுக்கு அழகு சேர்க்கிறது

இதே அமைப்பு சார்பாக , சில ஆண்டுகளுக்கு முன் சிறந்த கதைகான பரிசை இரு முறைகள் பெற்றவர்தான் வண்ண தாசன்,,,   அவரை தேர்ந்தெடுத்தவர்கள் சுஜாதா ஒரு முறை , ராஜம் கிருஷ்ணன் ஒரு முறை

இப்போது அவரே நடுவர்... இதுவும் சிறப்பம்சம்

இந்த இரு கதைகள் தவிர மற்ற கதைகளும் நன்றாக உள்ளன

வாய்ப்பிருப்பின் படித்து பாருங்கள்








Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா