Wednesday, December 30, 2015

இசையும் இறைவனும் - இளையராஜா பேச்சு

கவிஞர் மேத்தாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் இளையராஜாவின் பேச்சு ஆழமாக அமைந்திருந்தது.. ஆனால் ஊடகங்கள் உரிய கவனம் கொடுக்கவில்லை..

அவர் பேசியதாவது

 நான் தனிமையில் வாழ விரும்புவவன்.. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சிக்குகூட வர வேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் நான் வராவிட்டால் , விருதே வேண்டாம் என மேத்தா உறுதியாக இருந்ததால் , வந்துள்ளேன்..

படங்கள் பார்ப்பதும் இல்லை.புத்தகங்கள் படிப்பதும் இல்லை.  என் கண்ணில் குறைகள் மட்டுமே படும்.. அதை சொன்னால் வருத்தங்கள் ஏற்படும். எனவேதான் இந்த முடிவு.

கற்றதினால் ஆய பயன் என இறைவனை வணங்குவதையே குறள் சொல்கிறது... ஏன் கற்றவனுக்கு சொல்கிறது... கொஞ்சம் படித்து பெரிய ஆள் ஆகி விட்டால் பழசை மறந்து விடுவார்கள்.. கடவுளையும் மறந்து விடுவார்கள்... ஆனால் படிக்காதவன் அவன்பாட்டுக்கு தன் வேலையை செய்தபடி இறைவனை வணங்கிக்கொண்டு இருப்பார்.. படிக்காதவனே மேல் என்பதே இந்த குறள்

அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் சத்தம் வடிவில் அரூபமாக இருக்கும் இறைவனை குறிக்கிறது.. ஒலிதான் அனைத்துக்கும் ஆதாரம். அதுதான் இசையாக வெளிப்படுகிறது..

சிந்தனை ஒருபோதும் தெளிவுக்கு அழைத்து செல்லாது. குழப்பம் என்பது சிந்தனையின் ஒரு வடிவம். சிந்தனையற்ற நிலைதான் தெளிவு,

இசையிலும் இறைவன் சன்னிதானத்திலும் சிந்தனை நின்று விடுகிறது...

'இசையின் பயனே இறைவன்தான்' என திருநாவுக்கரசர் கூறுகிறார். இறைவன் இசையாகவே இருக்கிறான்

Tuesday, December 29, 2015

பொறுப்பற்ற ஜர்னலிசம்- ஜெயகாந்தனின் சிறு நூல்- ஒரு பார்வை

ஜெயகாந்தனின் சற்று பெரிய சிறுகதையான கரிக்கோடுகள் தனி நூலாக வந்துள்ளது..இபப்டி சிறு நூல்கள் வருவது ஆரோக்கியமானது...

மூன்று பிரதான பாத்திரங்கள்.. இரு வேலைக்காரர்கள்.. இவர்களை வைத்து பின்னப்பட்ட ஒரு ஃபீல் குட் சிறுகதை இது. படித்து முடித்ததும் மனதில் ஒரு நிறைவு ஏற்படும்.

இந்த கதையில் ஒரு காட்சி... இலக்கியவாதியின் கணவனுக்கு , குடும்ப நண்பர் ஒரு கடிதம் எழுதுகிறார்.. ”அவள் எழுத்து தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்துகிறது..அவளை நிறுத்தினால் நல்லது என்பது என் கருத்து... என் கருத்தையும் நீங்களும் அறியும்பொருட்டு உங்களுக்கு எழுதுகிறேன் ”
இதை படித்த கணவன் , அவள் எழுதவேண்டாம் என தான் நினைப்பதாக சொல்கிறார்.. அவள் கோபித்துக்கொண்டு கடிதம் எழுதி வைத்து விட்டு போய் விடுகிறாள்
அவள் தன்னை தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை.. நண்பன் சொன்னதாக சொல்லி அவன் பெயரை கெடுக்க கூடாது என நினைக்கிறான் கணவன்.. தான் சொன்னதாகவே சொல்லி இருக்கலாமே என நினைக்கிறார் நண்பர்...
நல்லவருக்கும் கெட்டவருக்கும் இடையேயான பிரச்சனை ஒரு சுவை என்றால் , நல்லவர்களுக்கு இடையேயான பிரச்சனை இன்னும் சிக்கலானது..
இதை கையாள்வதில் வல்லுனர் ஜெயகாந்தன்

இதில் வரும் பாத்திரங்கள் அனைத்துக்கும் வயது ஐம்பது பிளஸ்.. ஆனாலும் கதை முழுதும் இளமை கொண்ட்டாட்டம்...

ஓய் மாதவராவ்.. நீர் காதலித்திருக்கிறீரா என கேட்டேன்
இல்லை .. நீங்கள் கேட்கிற அர்த்த்ததில் காதலித்தது இல்லை என்றான்
அவன் சொன்ன தோரணை நான் என்ன பொருளில் கேட்கிறேன் என்பதை பிசிறில்லாமல் புரிந்து கொண்ட தெளிவுடன் ஒலித்தது

சில வெள்ளைக்கோடுகளும் கறுப்புக்கோடுகளும் மனிதனை இளமையாகவும் காட்டும் , முதுமையாகவும் காட்டும். கோடுகளை எங்கே வரைகிறோம் என்பதை பொருத்தது அது

காலம் வரைகிற கரிக்கோடுகளை மாற்ற முடியாது. மனிதன் வரைகிற கோடுகளை மாற்றலாம்

ஓர் போட்டோகிராஃபர். அவரது மனைவி இலக்கியவாதி. அவளது இலக்கிய தீவிரத்தை ஏற்கும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் இல்லை என்பதால் அவள் எழுதுவதை சற்று நிறுத்த வேண்டும் என அவரது நண்பர் ஆலோசனை சொல்கிறார்..இதன் விளைவாக மனைவி பிரிந்து போய் விடுகிறாள்.. கடைசியில் மனம் மாறி தான் கோபமாக எழுதிய கடிதத்தின் கோபமான வரிகளை கரிக்கோடுகளால் அழித்து விடுகிறாள்..

கரிக்கோடு கதையின் ஒவ்வொருஇடத்திலும் ஒவ்வொரு பாத்திரம் எடுப்பது இந்த கதையின் சிறப்பம்சம்,

ஆழமான கரு , அதிர்ச்சியூட்டும் கிளைமேக்ஸ் என்றில்லாமல் ஒருவர் கோணத்தில் எழுதப்பட்ட சுகமான நடையில் எளிமையான கதை.

ஆரம்பத்தில் நல்ல நோக்கத்துடன் எழுத வந்தவர்கள் , ஜர்னலிசம் எனும் கிருமியால் அழிந்து விடுகின்றனர் என முன்னுரையில் சொல்லும் ஜெகே , அந்த கோபத்தை கதை முழுதும் பரவ விட்டுள்ளார்.. நிருபர்கள் அடிக்கடி வாங்கி கட்டிக்கொள்ளும் சம கால சூழலில் இந்த கதை பொருத்தமாக இருக்கிறது..

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்..

வெளியீடு - மீனாட்சி புத்தக நிலையம்

விலை  ரூ 30

Wednesday, December 23, 2015

24-12-2015 இசை - சென்னையில் இன்று

24-12-2015 இசை நிகழ்ச்சிகள் பின்வருமாறு’’


பிரம்ம ஞான சபா

1 மதியம்  - வம்ஷி கிருஷ்ணன் பாடல்

2-15             - கோகுலகிருஷ்ணன்  பாடல்

4 மாலை   - அக்கரை சகோதரிகள்  பாடல்

7                    -  கௌரி ராம நாராயணன்  நடனம்


லக்‌ஷ்மண் ஸ்ருதி

காலை  9    - ரித்விக் ராஜா   பாடல்

10.30             - ப்ரசன்னா - கிட்டார்

மதியம் 1   - மீனாக்‌ஷி  ராகவன் - பரதம்

2.45             - ரேவதி க்ருஷ்ணா   - வீணை

4.45             - சௌம்யா  - பாடல்

7.30             - விஜய் பிரகாஷ் பாடல்



முத்ரா

மாலை 6.15     கத்ரி கோபால் நாத் சாக்சபோன்

 நாத இன்பம்

மாலை 4 - ஜயந்த் - புல்லாங்குழல்

 நாரத கான சபா

காலை 8.15     திருவாரூர் சாமி நாதன் - புல்லாங்குழல்

10                     சிக்கில் சந்திர சேகர் - புல்லாங்குழல்

12.15                 சாரதா கணேஷ்        - பாடல்

1.45                ராகவேந்திரா  - பாடல்

1,45      ஸ்ரீஷா    சஷாங் க்     - பரதம்

4           சஞ்சய் சுப்ரமணியன்  - பாடல்



Sunday, December 20, 2015

கேள்வி கேட்கும் கலை - உளறல் நிருபர்களும் கமல்ஹாசனும் - ஒப்பீடு

இடம் பொருள் தெரியாமல் கத்துக்குட்டித்தனமாக கேள்வி கேட்பவர்கள் பரபரப்பை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்... ஆனால் ஒரு நல்ல ஊடகம் பரபரப்பை மட்டும் நம்பி செயல்படாது.. பரபரப்பு என்பது ரொம்ப நாள் நிற்காது என்பது அவர்களுக்கு தெரியும்..
கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சி , இணையத்தில் இருந்து விலகி அதிகம் வானொலிதான் கேட்கிறேன்..அதில் ஹலோ எஃப் எம்மில் கேட்ட ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் தங்கி இருக்கிறது...
இதில் கலந்து கொண்டவர் கமல்ஹாசன்..
பரபரப்பு ஏற்படுத்தி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அதை எப்படி அவர் தவிர்க்கிறார் என்பதை கவனியுங்கள்
எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெற்றால்தான் பிள்ளையா என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது... கமல்ஹாசனும் , ஹலோ எஃப் எம்மும் இணைந்து இதை வழி நடத்துகிறார்கள்...
சிறுவர்களுக்கு எப்படி எய்ட்ஸ் வருகிறது என்றால் , அவர்களது பெற்றோர்கள் மூலம் பிறக்கும்போதே வந்து விடுகிறது...
அப்படி பாதிக்கப்பட்டோருடன் கமல் பேசுவதை கவனியுங்கள்.. அந்த பண்பை பாருங்கள்
--------------
வணக்கம்மா... என் பேரு கமல்ஹாசன்... உங்களைப்பத்தி சொல்லுங்க

அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றாலும் தன்னை அறிமுகம் செய்தபின்பே பேசும் நாகரிகம்...அது மட்டும் அல்லாமல் , ஒரு செலிப்ரிட்டியாக பேசாமல் , ஒரு நண்பன் போல அவர்கள் பிரச்சனையை , அவர் சொல்லாமல் விட்டதைக்கூட நினைவு படுத்தி பேசுகிறார்..

எப்ப கல்யாணம் ஆச்சு

எனக்கு பதினாறு வயசுலயே , முப்பது வயசு ஆளு ஒருவருடன் கல்யாணம்

ரொம்ப வயசு வித்தியாசமா இருக்கே..எப்படி ஒத்துக்கிட்டீங்க

என்னை யாரும் கேட்கல... கடமையை முடிச்சா போதும்னு ரெண்டாம் தாரமா பண்ணி வச்சுட்டாங்க..அவர் மூலமா எனக்கு இந்த நோய் வந்திருச்சு

ஓ..ரெண்டாம் தாரமா...அப்ப இன்னொரு பொண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பாரே...
-------------
அடுத்து சிறுவனுடன் பேசுகிறார்
வணக்கம்,... நான் யாருனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்... உங்க பேரு என்னனு சொல்ல வேண்டாம்... அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்...
அவர்கள் அடையாளத்தை சொல்லி பரபரப்பு ஏற்படுத்த விரும்பாத தன்மையை கவனிக்கவும்.. பரபரப்பு வேண்டாம் ..ஒரு எமோஷனல் டச் கொடுப்பதற்காகக்கூட பெயரை பயனபடுத்தலாகாது என நினைக்கிறாரே... அது பெரிய மனம்
------- 

பெற்றால்தான் பிள்ளையா எனும் இந்த அமைப்பு குறித்தி அறிந்து கொள்ள ஹலோ எஃப் எம்மை கேட்கவும்

ஊடக அறமும் இளையராஜா கோபமும்- முழு உண்மை



இளையராஜா இப்படி பேசுகிறார்.

இளைஞர்கள் இவ்வளவு தூரம் அர்ப்பணிப்பு உணர்வோடு இருப்பது பெருமை அளிக்கிறது.  நம்மிடம் இருக்கும் மனித நேயத்தை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இறைவன் இப்படி ஒரு பிரச்ச்னையை நம் மீது ஏவி விட்டானோ என தோன்றுகிறது

( இப்படி சொல்லி விட்டு நிவாரண பணிகள் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார் )

ஒரு நிருபர் சம்பந்தமே இல்லாமல் வேறொரு பிரச்சனை ( சிம்பு பாடல் ) குறித்து கேட்கிறார்...டென்ஷனான ராஜா , உனக்கு அறிவு இருக்கா,, நாம் எதற்காக இங்கு வந்திருக்கிறோம்.. இந்த நேரத்தில் இதையா கேட்பது என்கிறார்..


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ போகும் இடத்தில் இப்படி கேட்டால் வேறு யாராவதாக இருந்தால் இன்னும் கடுமையாக நடந்து இருப்பார்கள்... ராஜா ஓரளவு பொறுமையாகத்தான் பேசுகிறார்..

அறிவு இருக்கா என கேட்டவுடன் , அந்த நிருபர் சாரி சொல்லி இருக்கலாம்.. ஆனால் அறிவு இல்லாததால்தான் சார் கேட்கிறேன் என தொடர்ந்து இடக்காக பேசுகிறார்...

அந்த நிருபரிடம் இதற்கு மேல் பேசி பயனில்லை என சற்று கூலாக அறிவு இல்லை என எந்த அறிவை வைத்து கண்டு பிடித்தாய் என கிண்டலாக கேட்கிறார் ராஜா...

இதை கட் எடிட் செய்து , அறிவு இருக்கா என ராஜா கேட்பதை மட்டும் ஒளிபரப்பு செய்து அவர் தேவையில்லாமல் கோபப்பட்டதுபோல பிரச்சாரம் செய்கின்றன ஊடகங்கள்..இதுதான் ஊடக அறம்போலும்...

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற செல்லும்போது இப்படி ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்??

மானுடவியல் நிபுணர் ஆகுங்கள் - மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டிப்ஸ்- ரிச்சர்ட் கார்ல்சன்


மானுடவியல் என்பது மனிதனையும் அவன் ஆதிகால தோற்றத்தையும் ஆராயும் அறிவியலாகும்.  நாம் இப்போது பார்க்கப்போகும் டிப்சில் ஒரு வசதிக்காக இப்படி வரையறுத்துக்கொள்ளலாம்.  மானுடவியல் என்பது , எப்படி வாழ்வது எப்படி நடந்து கொள்வது என்பதை  மக்கள் எப்படி தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்பதை விருப்பு வெறுப்பின்றி ஆர்வமாக கவனித்தலாகும்.

இப்படி செய்தால் நம் இரக்கமும் புரிந்துகொள்ளலும் மேலோங்கி அமைதி ஏற்படும். விருப்பு வெறுப்பின்றி ஒருவர் செயலை கவனிக்கும்போது அவர் செயல்கள் நம்மை கோபப்படுத்த வாய்ப்பில்லை.

 நமக்கு அன்னியமான காரியங்களை சிலர் செய்கையில், இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் என அலுத்துக்கொள்ளாமல் , அட சுவையாக இருக்கிறதே. அவருக்கு இப்படி வாழ்வதுதான் பிடித்திருக்கிறதுபோல என சொல்லிக்கொள்ளுங்கள். கவனம் தேவை,,, ஆர்வமாக கவனிப்பது வேறு. உன்னிப்பாக கவனித்து விமர்சிப்பது வேறு.

ஒரு முறை நானும் என் ஆறு வயது மகளும் வணிக வளாகம்  போய் இருந்தோம். அப்போது சில இளைஞர்கள் தம் முடியை பல  ஆரஞ்சு நிறமாக மாற்றிக்கொண்டு , உடல் முழுதும் பச்சை குத்திக்கொண்டு எங்களை கடந்து சென்றனர், “ அப்பா ,, யார் இவர்கள் ..ஏன் இப்படி இருக்கிறார்கள்..ஏதேனும் மாறு வேடப்போட்டியா என கேட்டாள் மகள்..   இவர்கள் செய்வது அநாகரிகம்.. ஆடை ஒழுக்கம் முக்கியம் என சொல்லி இருப்பேன். ஆனால் இப்போது மானுடவியல் நிபுணன் ஆயிற்றே, எனவே இப்படி சொன்னேன்.. ஏன் இப்படி இருக்கிறார்கள் என தெரியவில்லை.. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பது சுவராஸ்யமாக இருக்கிறது அல்லவா என்றேன்

ஆமா.. ஆனா எனக்கு என் இயற்கையான முடிதான் பிடித்து இருக்கிறது என்றாள் அவள். மற்றவர்களை பற்றி விவாதித்து எங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காமல் அத்துடன் அதை விட்டு விட்டு எங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட்டோம்.

மற்றவர் செயலை ஆர்வமாக கவனிப்பது என்பது அவர்கள் செயலை ஏற்கிறோம் என்பது அல்ல,  முடியை விரித்துபோட்டுக்கொண்டு , கலர் அடித்துக்கொண்டு செல்வதை நான் செய்ய மாட்டேன். மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யவும் மாட்டேன். ஆனால் அதை விமர்சிக்கவும் மாட்டேன்.

மற்றவர்கள் தவறுகளை விமர்சிப்பது என்பது நம் சக்தியை வீணடிக்கும். நம் இலக்கை அடைவதை தடை செய்யும் என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்

Saturday, December 19, 2015

ஆகமம் - அர்ச்சகர் - அரசியல்வாதிகள் . உண்மையும் தீர்வும்


ஆகம விதிகளை பைபாஸ் செய்து விட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்தபோதே இது கோர்ட்டில் நிற்காது என்பது பலருக்கும் - குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு -  புரிந்துதான் இருந்தது.. காரணம் ஆகம விதிகளில் கை வைக்க நீதிமன்றம் விரும்பாது.. அது மத நம்பிக்கையில் குறுக்கிடுவதாகி விடும். ஆக , இது கோர்ட்டில் நிற்காது என தெரிந்து கொண்டு சும்மா புரட்சியாளர் அடையாளம் பெறும் பொருட்டு கொண்டு வரப்பட்ட சட்டம் இது..

உண்மையிலேயே ஒடுக்கப்ப்ட்டோர் மீது அக்கறை இருந்தால் , இன்னும் எத்தனையோ கிராமங்களில் கஷ்டப்பட்டு வரும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற ஏதேனும் செய்திருக்கலாமே...

சில ஆண்டுகள் முன்பு ,  அரசு பேருந்துக்கு ஒருக்கப்ப்ட்ட மக்களுக்கு போராடிய ஒரு தலைவர் பெயர் வைக்கப்பட்டது.. அந்த பேருந்தில் பயணம் செய்ய மாட்டோம் என அழிச்சாட்டியம் செய்த ஆதிக்கசாதியினருக்கு பயந்து , இனிமேல் தலைவர்கள் பெயரே வைக்கப்படாது என பம்மியது அரசு..

அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் கொண்டு வந்த இந்த சட்டம் ஆழமான சிந்தனை ஏதும் இல்லாத ஒன்று என்பது தெளிவு...  நலிந்த மக்களுக்கு ஆதரவாக செய்வதுபோல பம்மாத்து காட்டும் வேலைதான் இது..

இது ஒரு புறம்,

பிராமணர்கள் மட்டும்தான் அர்ச்ச்கர் ஆகலாம்போல என சிலர் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்..

இது தவறு..

பிராமணர்கள் யாரும் அர்ச்சகர் ஆக முடியாது .. அது ஆகம விதிப்படி தவறு..

சிவாச்சாரியர் என்ற பிரிவினர்தான் சிவன் ஆலயங்களில் அர்ச்சகர் ஆக முடியும்.. ஆனால் இவர்களுமேகூட விஷ்ணு கோயில்களில் அர்ச்சகர் ஆக முடியாது..  அங்கு பட்டாச்சார்களுக்கு அந்த உரிமை உண்டு,..சிதம்பரம் நடராஜன் கோயிலிலில்  தீட்சிதர்களுக்கு அந்த உரிமையும் மேல்மலையனூர் ஆலயத்தில் பர்வத ராஜ குலத்தினர் அர்ச்சகர் ஆகலாம். வேறு யாரும் ஆக முடியாது.. பிராமணர்களுக்கு என சிறப்பு சலுகை ஏதும் இல்லை.

அப்படி என்றால் சிவாச்சார்யர்கள்தான் பிராமணர்களை விட உயர்ந்தவர்களா என்றால் இல்லை... பிராமணர்கள் யாரும் இவர்களுக்கு பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை.. எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை...


ஆகம விதிகளில் கை வைக்க முடியாது. சரி.. வேறு என்ன செய்யலாம்...

அந்த ஆலயங்களை விட பிரமாண்டமாக அரசு பெரிய ஆலய்ங்கள் கட்டலாம்... அதில் அர்ச்சகர்கள் நுழைவுத்தேர்வு மூலம் , மதிப்பெண் அடிப்படையில்  நியமிக்க்கப்படுவார்கள் என அறிவிக்கலாம்... சாதி என்பது இதில் கணக்கில் கொள்ளப்படாது .


Friday, December 18, 2015

சில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ பார்வைகள்

1 சீனா

மனம் இல்லை   புத்தர் இல்லை

இருத்தல் இல்லை

சிதறிக்கிடப்பவை சூனியத்தி எலும்புகள்

இந்த பொன் சிங்கம்

ஏன் தேடி செல்ல வேண்டும்

அந்த நரிக் குகைக்கு



நீர் பறவை

வருகிறது செல்கிறது

ஆனால் விட்டுச்செல்வதில்லை

ஒரு காலடி சுவடி

அதற்கு தேவையும் இல்லை

ஒரு வழி காட்டி


72 ஆண்டுகள் அடக்கி வைத்திருந்தேன்

அந்த எருதை மிக கடுமையாக

இன்று

மீண்டும் பிளம் மலர் பூத்திருக்க

பனிப்பொழிவில் அலையவிட்டேன்

அதை

ஜப்பான்
----------------------------------------------------------------------------------------------

 இரவில் திருடசெல்பவன்

நிலவொளியில் சற்று நிற்கிறான்

ஹைக்கூ பாட

--------------------------------------------------------------------------
இந்தியா

எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேளையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.
*- தேவதச்சன்

Thursday, December 17, 2015

கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வையில்


கிளாசிக்  நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு மனத்தடை இருக்கும்.  பாதி படிக்கும்போது போரடித்தால் , நிறுத்தினால் அதுவரை படித்த நேரம் வீணாகி விடுமே என முழுதையும் படித்து , இன்னும் நேரம் வீணாகும்.

அதனால்தான் கரிச்சான் குஞ்சு படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என சாருவே சொன்னபோதிலும்  நான் படிக்கவில்லை...

ஒரு மழை நாள் இரவில் தற்செயலாக பசித்த மானிடம் நாவலை எடுத்தேன்.. சில வரிகளிலேயே நாவல் என்னை உள்ளே இழுத்துக்கொண்டு விட்டது. அந்த எழுத்தின் வசீகர தன்மை என்னை வென்று விட்டது..

உடல் பசி , ஆன்மிக பசி , அறிவு பசி என பசிகள் பல வகை , இதில் ஏதோ ஒரு பசி எல்லோருக்கும் இருக்கும். ஒரு பசி தீர்ந்தவுடன் அடுத்த பசி ஆரம்பிக்கும் என்றுதான் இன்றைய மனோதத்துவம் சொல்கிறது. நம் தத்துவ மரபும் இதைத்தான் சொல்கிறது..

பசிக்கு சாப்பிடுவது பசியை தீர்க்கிறதா அல்லது பசியை அதிகரிக்கிறதா அல்லது சாப்பிடுவது என்ற செயல் , பசி எனும் உணர்வை மழுங்கடிக்கும் ஒரு தீமையாக செயல்படுகிறதா என்பது நம் பலருக்கும் இருக்கும் குழப்பம்.


இதை கணேசன் , கிட்டா என்ற இரு பாத்திரங்கள் மூலம் அழகாக அலசுகிறது நாவல்.

கொஞ்சம்கூட போரடிக்காத நடை என்பது இந்த நாவலின் சிறப்பு. பின்னால் வரபோகும் முக்கிய காட்சிகளுக்கான குறிப்புகளை , ஆரம்பத்திலேயே ஆங்காங்கு தூவிச்செல்லும்  நடை திறமையான திரைக்கதை போல இருக்கிறது..

உதாரணமாக கணேசன் தன் கைப்பையை கட்டி அணைத்தவாறு உறங்குகிறான். அப்போது அவனுக்கு அந்த கைப்பை என்னவாக தோன்றுகிறது என்பதன் முக்கியத்துவம் அப்போது நமக்கு புரிவதில்லை. பிற்பாடு அது புரியும்போது அட என ரசிக்க வைக்கிறது..

கணேசன் என்பவன் அழகானவன் , சின்ன வயதில் இருந்தே பலராலும் விரும்பப்படுபவன். எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு பிற்காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அனைவராலும் அவமானத்தப்படும் அவல நிலைக்கு வீழ்கிறான். ஆனால் அவன் மனதில்  நிறைவு இருக்கிறது..


கிட்டா என்பவன் சின்ன வயதில் தோல்விகளை மட்டுமே சந்தித்த்தவன். பிற்காலத்தில் செல்வந்தன் ஆகிறான். ஆனால் அவன் மனதில் தான் ஒரு தோல்வியாளன் என்றே தோன்றுகிறது. இப்படி சுவையான இரு துருவங்கள்

இந்த துருவங்களும் நாவலின் ஒரு கட்டத்தில் இணைவது ஒரு சுவாரஸ்யம்.

இது மட்டும் அல்ல . நாவலில் இப்படிப்பட்ட சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம்.

கிட்டாவின் அண்ணனை ஒரு பைத்தியக்காரன் என நினைக்கும்படி காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த அண்ணனால் கிட்டாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்வது வாழ்வியல் அபத்தங்களில் ஒன்று.


வீடு தேடி அலையும் கணேசனுக்கு ஒரு வீடு கிடைக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் இவனால் பெரும் பலன் அடைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. அந்த நன்றியை அவர்களால் மறக்க முடியவில்லை. ஆனால் அவனை வீட்டில் வைத்திருப்பதிலும் சிக்கல். ஆனால் வீட்டை விட்டு துரத்தும் அளவுக்கு அவர்கள் தீயவர்கள் அல்லர். இப்படி ஒரு முடிச்சு..

காமமே வாழ்க்கை என வாழ்ந்த கணேசனை அனைவரும் துரத்தும் நிலையில் சில இளம்பெண்கள் சகோதர வாஞ்சையுடன் பாதுகாக்கிறார்கள்.. அன்பு எனும் உன்னதத்துடன் வாழ்பவர்களும் உண்டு என அறிவதுதான் கணேசன் வாழ்வில் உச்சம் என நாம் நினைக்கும்போது அவன் அவர்களிடம் இருந்து பிரிகிறான். இப்படி ஒரு சுவையான முரண்.

ஏதோ ஒரு இலக்குடன் கிளம்புவன் ஒரு கட்டத்தில் எந்த இலக்குமே தேவை இல்லை என முடிவெடுக்கும்போது அவன் அடுத்து செல்ல வேண்டிய இடத்துக்கு எந்த சாலையிலும் செல்ல முடியும் என்ற நிலை ஏற்படும் மாற்றம்  ஜென் நிலை அளிக்கிறது..

கிட்டாவை எப்படியாவது ஓர் ஆளாக உருவாக்கி விட வேண்டும் என்ற தாயின் பரிதவிப்பு , ஊர் பெரிய மனிதரின் சின்னத்தனம் என எந்த ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது



அனாதரவாக ஊருக்கு வரும் கணேசனை ஒரு குருவாக நினைத்து உதவி செய்கிறார் பசிபதி எனும் காவலர். ஆனால் ஒரு வகையில் பசுபதியும் கணேசனுக்கு குருவாகி விடுகிறார்.

கணேசனை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறியும் பெண் டாக்டர் , அவனை மணந்து கொள்ளும் பெண் , பிச்சை எடுக்கும் பெண் வாழ்வில் கணேசன் இணைவது என ரசித்துக்கொண்டே இருக்கலாம்..

அந்த பிச்சைக்காரியிடன் கணேசன் சினேகமாக பேசுவதை உணர்ந்த அவள் சின்னஞ்சிறு மகன் , கணேசன் முன் ஒரு துணியை விரித்து சில காசுகளை போட்டு வைக்கிறான். இதை பார்த்து அவன் பிச்சை எடுக்கிறான் என உணர்ந்து மக்கள் காசு போடட்டுமே என்ற அந்த தொழில் அறிவு கணேசனை கவர்கிறது..

இந்த இடம் நம்மை கவர்கிறது.. பிற்காலத்தில் அந்த சிறுவனை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விடுகிறான் கணேசன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் இந்த வித்தியாசமான காட்சியை மறக்க முடியாது..

அதேபோல உதாவக்கரையாக இருந்த கிட்டாவின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக டிராக் மாறுவதும் அழகு, அவன் சந்திக்கும் முதிய்வர் - மனைவி - சீடன் சம்பவம் ஒரு ஹைக்கூ கதை..

அழகான உடல் இருந்தது. அதை அனுபவித்தோம். இப்போது அது இல்லை.. இதையும் அனுபவிக்கிறோம்.. ஆனால் அதை அனுபவித்த மனம் மட்டும் அழியவில்லை, ஒருவேளை இதுவும் அழியுமோ... அழிந்தால் அதையும் அனுபவித்துப்பார்ப்போமே என்ற கணேசனின் பார்வை நமக்கும் ஏற்படுவதே நாவலின் வெற்றி என்பேன்..


கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்


Tuesday, December 15, 2015

ராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம்



இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக பலர் நினைக்கிறார்கள்... மின்சாரம் , நெட் , டிவி என சிலருக்கு கிடைப்பதால் அதை மட்டும் வைத்துக்கொண்டு எல்லோரும் சுகம் என நினைக்கிறார்கள்.. ஆனால் இதை பதிவிடும் 15.12.2015  நிலவரப்படி இன்னமும்கூட நீரில் மூழ்கி இருக்கும் இல்லங்கள் ஏராளம் , தண்ணீர் தொடர்ந்து இறைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது...சாலைகள் சீரடையாத சூழலும் பல இடங்களில் உள்ளது

-----------------------------------------------------

என்னதான் கடைகளில் காய்கறி வாங்கி சாப்பிட்டாலும் நாமே நம் வீட்டில் காய்கறிகளை பயிரிட்டு உண்டால் அதன் சுவையே தனிதான்.. அதேபோல நம் வாகனங்களை சர்வீஸ் செய்ய விடுவதை விட , நாமே அதை கழுவி , பாகங்களை பிரித்து , உயவுப்பொருட்கள் தேவைப்படும் இடங்களில் அதை சேர்த்து மீண்டும் சரியாக பொருத்தி சரியாக வேலை செய்ய வைத்தால் அப்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்.. வாகனம் என்பது சைக்கிளாக இருக்கலாம். அல்லது காராக இருக்கலாம்.  எதுவாக இருப்பினும் அனுபவம் ஒன்றுதான்

----------------------------

மின்சாரம் இல்லாத சென்னை ஒரு வித்தியாசமான அனுபவம் தந்தது. எங்கும் வெளிச்சமே இல்லை. கும்மிருட்டு , மையிருட்டு என்றெல்லாம் சொல்வார்களே...அதை அனுபவிக்க முடிந்தது, கண் மூடினால் எப்படி இருக்குமோ அதேபோலவே கண்ணை மூடினாலும் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.  நெட் , டிவி , மின்விளக்கு வெளிச்சம் இல்லாத சுகத்தை அனுபவித்தபின் மீண்டும் இவற்றை பயன்படுத்த மனம் வரவில்லை... தேவைப்படும் குறைந்த பட்ச மின்சாரம் , குறைந்தபட்ச நெட் , குறைந்தபட்ச டிவி என்பது எனக்கு பழக்கமாகி விட்டது

---------------------------------------------


அதுவரை அக்கம்பக்கத்தினர் யாரென்றே தெரியாமல் இருந்தவர்கள் , மின்சாரம் இல்லாமல் டிவி பார்க்க முடியாமல் , மொட்டை மாடி மீட்டிங் நடத்தி டொனால்ட் டிரம்ப் முதல் செம்பரம்பாக்கம் ஏரி வரை சகல விஷ்யங்களையும் அலசினர். என்னவோ ரொம்ப நாள் பழகிய மாதிரி கொஞ்சி குலவினர். மீண்டும் மின்சாரம் வந்ததும் மீண்டும் வீட்டிலேயே பம்ம ஆரம்பித்து விட்டனர்..

------------------------------------------------------


சில படங்களை ரசித்து பார்த்திருப்போம். நாயகர்களை போற்றி இருப்போம். அதே நாயகர்கள் மார்க்கெட் போன பின்பு சாதாரண படங்களில் நடிக்கையில் சற்று வருத்தமாக இருக்கும். உதாரணமாக ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களில் நடித்த ஜெய்சங்கர் பிற்காலத்தில் வில்லனாக நடித்து சின்ன சின்ன நடிகர்களிடம் அடி வாங்கியதுபோல நடித்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்தது...

ஒரு காலத்தில் ரஜினி , கமலுக்கே டஃப் ஃபைட் கொடுத்த  ராமராஜன் , இப்படி சாதாரண வேடங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளித்தது . ராமராஜன் என்றால் கரகாட்டக்காரன் நினைவு வந்தால்போதும்.


----------------------------------------------

சில எளிய மருத்துவ குறிப்புகள்

படித்தது...பகிர்கிறேன்... பிடித்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

தீப்புண்

வெங்காய சாறு + கால்பங்கு உப்பு கலவையை புண் மீது தடவிவர வேண்டும்

குளிர்காய்ச்சல்

1 வெங்காயம் + 9மிளகாய்கள் ..வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும்

பல்வலி 

வெங்காயம் + கிராம்பு சாறு...

காதில் எறும்பு அல்லது பூச்சி போய் விட்டால்

உப்பு கரைசலை காதில் ஊற்ற வேண்டும்


நகச்சுற்று

உப்பு , வெங்காயம் , சுடுசோறு .. நன்கு அரைத்து விரலில் கட்ட வேண்டும்



Saturday, December 12, 2015

சென்னை இயற்கை பேரிடர் - சில ஹீரோக்கள் , சில ஜீரோக்கள்


ஒரு பிரச்சனையின்போதுதான் மனிதனின் இயல்புத்தன்மையை தெரிந்து கொள்ள முடியும். சென்னையில் பெய்த பெருமழை , வெள்ளத்தின் போது பலர்  ஹீரோக்களாக உருவெடுத்தனர். சிலர் ஜீரோவானார்கள்..
------------------------------------------------------------
ஹீரோக்கள்

1 பெரு மழையன்று மின்சாரம் இல்லை, செல்போன்கள் இயங்கவில்லை. ஆனாலும் நெட் வேலை செய்தது.  முக நூல் , ட்விட்டர் , வாட்சப் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி சேதங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தி , உதவிகளை ஒருங்கிணைத்தவவர்களின் பணி என்றென்றும் நி னைவுகூரப்படும்

2 இலவச ஆட்டோக்கள் ஓட்டினர் சிலர். சிலர் அந்த வெள்ளத்திலும் ஷேர் ஆட்டோ சேவை வழங்கினர்.. ஹேட்ஸ் ஆஃப்

3 பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் இணைய வசதி இல்லாதோர். இவர்கள் வெளிஉலகை தொடர்பு கொண்டு உதவி பெற வானொலி நிலையங்கள் உதவின. சில வானொலிகள் நிவாரணப்பணிகளில் நேரடியாக பங்கேற்றன..

4  இணையம் ,  வானொலி என எதையும் பயன்படுத்தாமல் , வெளியே தெரியாமல் பெரும் உதவிகளை வழங்கினர் பலர்

5அவ்வளவு மழையிலும் மார்க்கெட் சென்று காய்கறி  வாங்கி வந்து , நியாயமான விலைக்கு விற்ற கடைக்காரர்கள் மக்கள் மனதில் இடம்பிடித்தனர்

6 அயராது பணியாற்றிய பேருந்து ஓட்டுனர்கள் ,  நடத்துனர்களை மறக்க முடியாது

7 பால் , காய்கறிகள் வாங்க செல்பவர்கள் தமக்கு மட்டும் வாங்காமல் அண்டை வீட்டினருக்கும் வாங்கி வந்தனர்

8 வந்து சேரும் நிவாரண பொருட்களை வினியோகிக்க உதவிய தன்னார்வலர்கள் சேவை குறிப்பிடத்தக்கது

9 சாலைகளில் பள்ளங்கள் இருப்பதை எச்சரித்து வாகனங்களை வழி நடத்துவதை அந்தந்த பகுதி இளைஞர்கள் முனைப்புடன் செய்தனர்

10  சாஅலைகளில் எச்சரிக்கை அறிவிப்புகளை அந்த பகுது மக்களே செய்தனர்....   அதிகாரபூர்வமற்ற இந்த எச்சரிக்கை பலகைகள் பேருதவியாக இருந்தன

-----------------------------------------

ஜீரோக்கள் 

1 . சின்னசின்ன உதவிகள் கூட பெரும் பலனை விளைவிக்கும் சூழலிலும் ஒரு சிலர் ஃபேஸ்புக்கில் எழுதுவதில் மட்டுமே ஆர்வமாக இருந்தனர்.. எரிச்சலூட்டிய போக்கு

2 ஏரி உடைவதை செல்ஃபீ எடுக்க திரண்ட கூட்டம் மிகப்பெரிய இடைஞ்சலாக இருந்தது

3 இந்த அவலத்தையும் அரசியலாக்க முயன்ற சில ஊடகங்கள்




Saturday, October 24, 2015

பிரயாணம்- அசோகமித்திரன்

மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின் 
கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன். 
“இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை 
பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த மலை விளிம்பு அந்த இடத்தில் செங்குத்தாகப் பல நூறு அடிகள் இறங்கி, 
அடியில் ஒரு ஓடையைத் தொட்டது. தண்ணீர் தேங்கும் குட்டைபோல அந்த இடத்தில் ஓடை இருந்தாலும் சற்றே தள்ளி, அதுவே ஆவேசத்துடன் பாறைகள் மீது மோதிப் பள்ளத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கத்தில் மலை உயர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் வந்த விளிம்பு ஓரமாக இன்னும் பத்துப் பன்னிரண்டு மைல் போனால் ஒரு 
கணவாய் வரும். அதற்குப்பிறகு சிறு புதர்களால் நிறைந்த ஒரு சமவெளிப் பிரதேசம். 
அது ஒரு காட்டை எட்டிக் கரைந்து விடும். அந்தக் காட்டைத் தாண்டியவுடன் ஒரு 
சிற்றாறு. அதன் அக்கரையில்தான் முதன் முதலாக மனித வாடை வீசும் ஒரு கிராமம் - 
ஹரிராம்புகூர். ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரிராம்புகூரைத் தாண்டி நானும் 
குருதேவரும் நடைப் பயணமாக எங்கள் ஆசிரமத்திற்கு வந்து சேர இரண்டு பகல் 
பொழுதுகள் தான் தேவைப்பட்டன. இப்போது மலையிலிருந்து பாதி இறங்குவதற்குள் ஒரு 
பகல் போய்விட்டது. அரை மணி நேரத்தில் இருட்டிவிடும்.
    நான் என் சாக்கைப் பிரித்துப் பெரியதாக ஒரு துப்பட்டியையும், முரட்டுக் 
கம்பளியினால் தைக்கப்பட்ட நீளப் பையொன்றையும் எடுத்தேன். என் குருதேவரைப் 
போர்த்தியிருந்த கம்பளத்தையும், துணிகளையும் அகற்றிய பிறகு துப்பட்டியால் 
அவரைச் சுற்றிவிட்டு அவர் மெதுவாக அந்தக் கம்பளப் பையில் நுழைந்துகொள்வதற்கு 
உதவினேன். பை அவரது தலையையும் மூடிக்கொள்ள வசதியிருந்தாலும் முகத்தை மட்டும் 
திறந்து வைத்தேன். கம்பளி மஃப்ளர் ஒன்று இருந்தது; அதை அவர் காது முழுவதும் 
மூடியிருக்குமாறு தலையைச் சுற்றிக் கட்டிவைத்தேன். ‘சிறிது கஞ்சி தரட்டுமா?” 
என்று கேட்டேன். அவர் கண்களால் “கொடு”  என்றார். சாக்கிலிருந்து மூடியிடப்பட்ட 
சிறு தகரப் பெட்டி, இரண்டாம் உலக யுத்தத்தில் சிப்பாய்களுக்குக் கொடுத்த 
வட்டமான ஒரு தகரப் பாத்திரம், ஒரு ராணுவத் தண்ணீர் ‘பாட்டில்’ இவை மூன்றையும் 
எடுத்தேன். வட்டப் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொண்டு தகரப் 
பெட்டியின் மூடியைத் திறந்தேன். அதில் பாதியளவு உறையவைத்த மண்ணெண்ணெய் 
இருந்தது. நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து அதன் அருகே கொண்டு போனேன். 
மண்ணெண்ணெய் குப்பென்று பிடித்துக்கொண்டு ஒரே சீராக எரிந்தது. பாத்திரத்தின் 
மடக்குப் பிடியை நீட்டிக்கொண்டு ஜூவாலையில் தண்ணீரைச் சுட வைத்தேன். ஒரு கொதி 
வந்ததும் என் முதுகுப் பையில் சிறு மூட்டையாகக் கட்டிப் போட்டிருந்த கிழங்கு 
மாவில் ஒரு பிடி எடுத்துப் போட்டேன். ஒரு குச்சி கொண்டு கிளறிக்கொண்டே 
மாவுத்தண்ணீரைக் காய்ச்சினேன். அது கூழாகிவிடக் கூடாதென்று இன்னும் சிறிது 
தண்ணீர் சேர்த்தேன். கஞ்சி தயாராயிற்று. எரிந்துகொண்டிருந்த தகரப் பெட்டியை 
அதன் மூடி கொண்டு மூடினேன். நெருப்பு அணைந்து சிறிது மட்டும் வந்தது. கஞ்சியைப் 
பாத்திரத்தில் கலக்கியே ஆற வைத்தேன். பொறுத்துக்கொள்ளக்கூடிய சூடு என்று 
தோன்றியபோது என் குருதேவரின் தலையை மெதுவாக என் மடிமேல் ஏற்றி வைத்துக்கொண்டு, 
கஞ்சியை அவருக்குப் புகட்டலானேன். இரண்டு வாய் குடித்ததும் அவர் ‘போதும்’ 
என்றார். அவருக்குச் சிறிது தெம்பு வந்திருந்த மாதிரி இருந்தது. மிச்சமிருந்த 
கஞ்சியை நான் குடித்தேன். பாத்திரத்தைக் கழுவாமல் ஒரு துணி கொண்டு துடைத்து 
வைத்தேன். தண்ணீர் ‘பாட்டி’லில் சிறிதுதான் தண்ணீர் இருந்தது. நான் கீழே இறங்கி 
ஓடையில் தண்ணீர் பிடித்துவர அடுத்த நாள் காலையில்தான் முடியும்.
    என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம் 
பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல் 
இருக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். ஐம்பது, அறுபது வருட காலம் முதிர்ந்து 
யோகியாகவே வாழ்க்கை நடத்திய என் குருதேவர், அந்நேரத்தில் வாயைத் திறந்து 
வைத்துக் கொண்டும்கூட மூச்சு விடுவதற்குப் பெரும் உபாதைப்பட்டுக் 
கொண்டிருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்றை அழுத்திப் 
பிடித்துக்கொண்டு ”அம்மா” என்று அவர் கீழே விழும்வரையில், அவர் சுவாசம் விடுவதே 
மிகவும் கூர்ந்து கவனித்தாலன்றித் தெரியாது. அப்படிப் புலனானால், ஒரு 
மூச்சுக்கு இன்னொன்று மிக நீண்ட சீரான இடைவெளிவிட்டு வருவதை உணர முடியும். 
இப்போது அவர் வாயால் மூச்சு விடுவதற்குத் திணறிக் கொண்டிருந்தார்.
    சூரியன் மலைகளின் பின்னால் விழுந்து, மலைகளே மலைகள் மீது பூதாகரமான 
நிழல்களைப் படர விட்டுக் கொண்டிருந்தன. இரவும் அந்த நிழல்களும் ஒன்றறக் கலக்கச் 
சில நிமிடங்களே இருந்தன. அதற்குள் அங்கே குச்சி குச்சியாக வளர்ந்த பரந்து 
கிடந்த செடிகளில் உலர்ந்துபோன சிலவற்றைச் சேகரிக்க நான் முனைந்தேன். எனக்குக் 
குளிரவில்லை. மேலங்கியே போட்டறியாத என் குருதேவர் இரு வாரங்களாகக் கம்பளத்தைச் 
சுற்றிக்கொண்டு கம்பளப் பையிலும் நுழைந்து கிடக்க வேண்டியிருந்தது. அவருக்குக் 
கணப்பு வேண்டும். அர்த்த ராத்திரி அளவில் பனி இறங்க ஆரம்பித்து விடும். ஆவி 
போலல்லாமல் பஞ்சுப் பொதிகளாகவும் இறங்கும். என் குருதேவருக்குக் கணப்பு 
வேண்டும். இன்னொரு காரணத்திற்காகவும் கணப்பு வேண்டும். பகலில் சில 
அடிச்சுவடுகள்தான் காணப்படும். இரவு வேளையில் அந்த அடிச்சுவடுக்குரியவை 
வந்துவிடும்.
    உலர்ந்த செடிகளை நான் வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்தேன். என் கைகளால் 
மார்போடு அணைத்துக்கொண்டு வரக்கூடிய அளவு இருமுறை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் 
எல்லாவற்றையும் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்க்க வேண்டியிருந்தது. என் 
குருதேவரைப் படுக்கவைத்து நான் இழுத்து வந்த பலகையுடன் ஒரு விறகுக் கட்டும் 
கட்டிவைத்திருந்தேன். அந்த விறகுத் துண்டுகள் இலகுவில் பற்றிக் கொண்டுவிடாது. 
பற்றி கொண்டாலும் ஓர் இரவு நேரத்திற்கு மேல் வராது. எங்கள் ஆசிரமத்திலிருந்து 
வருடத்திற்கு இரண்டு மூன்று முறை அத்யாவசியத் தேவைகளுக்காக ஹரிராம்புகூருக்கு 
நாங்கள் வந்து போகும் போதெல்லாம் பிரயாணத்திற்கு அந்த அளவு கட்டைக்குமேல் 
எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இம்முறை அது போதவே போதாது என்று எனக்குத் 
தெரிந்துவிட்டது.
    நான் பிடுங்கி வந்த குச்சிகளில் ஒரு கைப்பிடியில் அடங்குபவையை எடுத்து ஒரு 
சிறு கூடாரம் மாதிரித் தரையில் பொருத்தி வைத்தேன். என் குருதேவரின் கால் 
பக்கமாகத்தான் வைத்தேன். அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும் 
லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க 
வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பல நூறு 
அடிகள் கீழே, குறைந்தது அரை மைலுக்கப்பால் பிரவாகமாக மாறும் ஓடை, தொடர்ந்து 
இரைச்சல் எழுப்பிக்கொண்டிருந்தது. இந்தச் சப்தங்களும், என் குருதேவரின் 
மூச்சுத் திணறலும் தவிர வேறு எதுவும் என் காது கேட்க அங்கிருக்கவில்லை.
    பட்டாசுத் திரி போல் உலர்ந்த குச்சிகள் பற்றிக்கொண்டு எரிந்தன. அந்த 
ஜூவாலையில் நுனி மட்டும் படும்படியாக ஐந்தாறு விறகுத் துண்டுகளை ஒரு 
சக்கரத்தின் ஆரைக்கம்புகள் போல் வைத்தேன். நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாகத் 
தெரிய ஆரம்பித்துவிட்டன.
    ஒரு விறகு பற்றிக்கொண்டு எரிந்தது. நான் பாய்ந்து சென்று அதைக் கையில் 
எடுத்து மூன்று, நான்கு வீச்சுகளில் ஜூவாலை விட்டு எரிவதை அணைத்து அது வெறும் 
தணலாக எரியும்படி செய்தேன். ஒரு விறகு மட்டும் அதிகமாகப் புகைந்து 
கொண்டிருந்தது. அதைத் தரையில் ஒருமுறை தட்டிவிட்டுப் புரட்டி வைத்தேன். புகை 
சிறிது கரைந்தது. நான் என் குருதேவரின் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டேன். 
பின்னர் எழுந்து எங்களிடமிருந்த நீண்ட மூங்கில் கழியை என் பக்கத்தில் எடுத்து 
வைத்துக்கொண்டு அமர்ந்தேன். எல்லாப் பக்கத்திலும் உறைந்துபோன பேரலைகள்போல் 
மலைச் சிகரங்கள் அந்த இருளிலும் கரும் நிழல்களாகக் கண்ணுக்குத் தெரிந்தன. 
பொழுது விடிய இருக்கும் இன்னும் பல மணி நேரத்துக்கு அவற்றைத்தான் நான் 
பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். அமைதியாக உட்கார்ந்துகொண்டே இருந்ததில் நான் 
எனக்குள்ளே விரிந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆசிரமக் 
குடிசைக்குள் என் குருதேவர் எந்த வித உடல் இடர்ப்பாடும் இல்லாமல் படுத்திருக்கும் வேளைகளில் நான் ஒவ்வொரு நாளும் வெட்ட வெளியில் உட்கார்ந்து, இந்த விசால உணர்வைக் காத்திருந்து வரவழைத்துக்கொள்வேன். இப்போது என்னிச்சையின்றி அந்த விசால உணர்வு வர ஆரம்பித்ததும் அதை அகற்றிவிட வேண்டுமே என்ற கவலை வந்தது. அந்நேரம் தூரத்தில் இரு மலைச் சிகரங்கள் அசைந்து என் திசையில் குவிந்து வருவதுபோல் இருந்தது. என் அடிவயிற்றில் திடீரென்று பயம் எழுந்தது. உடனே மன லயம் கலைந்துபோயிற்று. மலைச் சிகரங்களைப் பார்ப்பதை விட்டு ஆகாயத்தைப் பார்த்தேன். தாறுமாறாகச் சிதறிக் கிடப்பதுப்போல் இருந்த 
நட்சத்திரங்கள் சீக்கிரத்தில் தனித்தனிக் கூட்டங்களாக் கண்ணுக்குத் தெரிய 
ஆரம்பித்தன. முதலில் அந்த உருவங்களுக்கு என் மனம் கற்பிக்கும்படியான தோற்றம் 
ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது மாறி ஒவ்வொரு நட்சத்திரக் குவியலும் வெவ்வேறு 
விதமான கை கால்களை நீட்டிக் கொண்டு வெறியுடன் பறந்து செல்லும் உருவங்களாகக் காண 
ஆரம்பித்தன. கண்களை மூடிக்கொண்டு மூச்சு விடுவதுகூட ஒரு தாள லயத்துடன்தான் 
வந்து கொண்டிருந்தது. அதன் மீது மனத்தைச் செலுத்தியபோதும் என் நினைவுப் பிரக்ஞை 
அமிழ்ந்து என்னை உறக்கத்துக்குக் கொண்டு செல்வதை உணர்ந்தேன். அதைத் தடுத்துக் 
கண்களைத் திறந்துகொண்டு நட்சத்திரங்களைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் வெவ்வேறு 
கூட்டமாகப் பிரிந்து உருவங்களாக மாறும் தருணத்தில் மலைச் சிகரங்களை நோக்கினேன். 
என்னை அறியாமல் என் கவனம் என் குருதேவரின் சுவாச ஒலியில் மீண்டும் லயிக்க 
ஆரம்பித்த போது எழுந்திருந்து உட்கார்ந்தேன். நான் எக்காரணம் கொண்டும் அன்றிரவு 
என் நினைவை இழக்கக் கூடாது. மலையைத் தாண்டி, சமவெளியைத் தாண்டி, வனத்தைத் 
தாண்டி, ஆற்றைத் தாண்டி, ஹரிராம்புகூரை அடைந்தே தீரவேண்டும். என் குருதேவருக்கு 
வைத்திய உதவி கிட்டும்படி செய்ய வேண்டும். பனி இறங்க ஆரம்பித்தது. நான் 
எங்களிடம் மிகுதியிருந்த ஒரே பழந்துண்டைத் தலையோடு போர்த்திக் கொண்டு ஒரு 
தொடையை இன்னொரு தொடை மீது இறக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.
    மலைச் சிகரங்களிடையே புகுந்து வீசிக்கொண்டு செல்லும் காற்றின் ஒலி 
எனக்குள்ளேயே கேட்டது. ஓடைச் சப்தமும் கேட்டது. நான் விரிந்து கொண்டிருந்தேன். 
எல்லாத் திசைகளிலுமாக விரிந்து கொண்டிருந்தேன். கணத்துக்குக் கணம் நான் 
இலேசாகிக்கொண்டே வந்து எனக்கு எடை, உருவமே இல்லை என்கிற அளவுக்கு விரிந்து, 
இன்னமும் விரிந்து கொண்டிருந்தேன். எல்லா ஒலிகளையும் கேட்க முடிந்த எனக்கு 
அவையெல்லாம் எங்கோ ஓர் அடித்தளத்தில் மட்டும் இயங்கிக்கொண்டிருந்ததாகத்தான் 
தோன்றியது. அப்போது தனியாக ஒரு ஒலி, அவையெல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று, 
கேட்டது. அந்த நிலையில், அந்தத் தருணத்தில் அது பொருந்திப் போகவில்லை. 
மறுபடியும் அந்த சீறல் வந்தது. நான் நொடிப் பொழுதில் என்னைக் 
குறுக்கிக்கொண்டேன். ஒரு வருடப் பயிற்சியில் மன லயத்தில் நான் அடைந்திருந்த 
தேர்ச்சி எனக்கு அப்போது வேண்டாததாக இருந்தது. அந்தச் சீறல் மீண்டும் கேட்டது. 
என் பக்கத்தில் இருந்த தடியைப் பற்றிய வண்ணம் சீறல் வந்த திசையில் பார்த்தேன். 
இரண்டு மின்மினிப் பூச்சிகள் பளிச்சிட்டன. என் கழியை வீசினேன். முதல் வீச்சில் 
அந்த இரட்டை ஒளிப்பொறிகள் சிறிது அசைந்து மட்டும் கொடுத்தன. நான் என் கையை 
எட்டி மீண்டும் கழியை வீசினேன். அது எதன் மீதோ தாக்கிற்று. மயிர் 
குத்திடக்கூடிய ஊளையொலி கேட்டது. மறுகணம் அந்த ஓநாய் பின் வாங்கி ஓடிச் 
சென்றுவிட்டது.
    என் குருதேவரின் பக்கம் பார்த்தேன். நான் வைத்திருந்த விறகுகள் அநேகமாக 
எல்லாம் எரிந்து அணையும் தறுவாயில் இருந்தன. நடு ராத்திரியைக் 
கடந்திருக்கக்கூடும். நான் தூங்கிப்போயிருந்திருக்கிறேன். தணலாக இருந்த 
விறகுகள் கூட முக்காலுக்கு மேல் சாம்பலாகிப்போயிருந்தன. அதன் பிறகுதான் ஒரு 
ஓநாய் வந்திருக்கிறது. ஒரு சாண் அளவுக்கு மிஞ்சியிருந்த ஒரு கட்டைத் துண்டை ஊதி 
ஊதி ஜூவாலை எழச் செய்தேன். அதைக் கொண்டு என் குருதேவரைத் தலையிலிருந்து கால்வரை 
பார்த்தேன். அவர் படுத்திருந்த பையில் கால் பக்கத்தில் சிறிது கிழிந்திருந்தது. 
நான் ஓரிரு நிமிஷங்கள் தாமதித்திருந்தால்கூட அந்த ஓநாய் கம்பளப் பையை இன்னமும் 
கிழித்து என் குருதேவரின் காலைக் கவ்வியிருக்கும்.
    அந்தக் கட்டை அணைந்து புகைய மட்டும் செய்தது. நான் உறைந்த மண்ணெண்ணெயை ஒரு 
விரலில் எடுத்துத் தணல் மீது வைத்தேன். கட்டை பற்றிக்கொண்டு எரிந்தது. அதை என் 
குருதேவர் முகத்தருகே கொண்டுசென்று, ”ஐயா” என்று கூப்பிட்டேன். அவர் காதில் அது 
விழவில்லை. முன்பு வாயைத் திறந்து படுத்துக்கொண்டிருந்தவர் இப்போது வாயை 
மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். நான் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் 
அவருக்குத் தாகம் எடுத்திருக்கக் கூடும்; பசித்திருக்கக்கூடும். நான் “ஐயா” 
என்று சொல்லி அவரைச் சிறிது அசைத்து எழுப்பினேன். அவர் அப்படியே இருந்தார். 
அவர் மூக்கருகே என் புறங்கையை வைத்துப் பார்த்தே. அடுத்தபடி என் காதை அப்படியே 
அவர் மார்பு மீது அழுத்திக்கொண்டு கேட்டேன். அங்கு காது கேட்பதற்கு 
ஒன்றுமில்லை.
    குருதேவரின் சாவு அதிர்ச்சியைத் தரவில்லை. அப்பழுக்கில்லாத தேக நிலை உடைய 
அவர் எப்போது நீர் விலகிக் கொண்டிருக்கும்போது கூடத் தன்னை நகர்த்திக்கொள்ள 
இயலாத அசக்தி அடைந்திருந்தாரோ அப்போதே நான் எதற்கும் என் மனத்தைத் தயார் 
செய்துகொண்டிருந்தேன். என் யோக சாதனை விடுபட்டுவிடும். அவரைத் தேடிக் 
கண்டுபிடித்து, அவர் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மூன்றாண்டு காலத்திற்கும் 
மேலாயிற்று. இனி இன்னொரு தகுதி வாய்ந்த குருவை அடைய எவ்வளவு ஆண்டுகள் 
பிடிக்குமோ தெரியாது. வேறு குரு கிடைப்பாரா என்பதே சந்தேகம். எனக்கு நிர்ணயம் 
செய்யப்பட்டதற்கிணங்கத்தான் எனக்கு வாய்க்கும். ஹரிராம்புகூரை அடைவதற்குள் என் 
குருதேவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே அப்போது என் பிரார்த்தனை. 
கடைசிச் சுவாசம் என்று தோன்றும்போது சிறிது பசும்பாலை வாயில் ஊற்ற வேண்டும் - 
இதை வெகு நாட்கள் முன்பே என் குருதேவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அன்று 
அந்தப் பேச்சே பொருத்தமில்லாததாக இருந்தது. ‘என் போன்றவர்களை ஆறடி குழி 
தோண்டிப் புதைக்க வேண்டும்’ என்று அவர் சொன்னதும் அபத்தமாகப்பட்டது. அன்று நான் 
பசும்பால் விடத் தவறிவிட்டேன். ஆறடி குழி தோண்டியாவது புதைக்க வேண்டும். அதற்கு 
எப்படியும் இந்த மலைப்பாறையிடத்திலிருந்து சமவெளியருகில் இறங்கியாக வேண்டும். 
ஆறடி தோண்டி, வெறும் மண்ணை மட்டும் போட்டு மூடினால் போதாது. பெரிய பெரிய 
கற்களையும் போட வேண்டும். ஒரு ஓநாய் அவரை முகர்ந்துவிட்டது. அடுத்து, ஒரு 
ஓநாய்ப்படை வருவதற்கு அதிக நேரம் பிடிக்காது.
    அப்போது அரைகுறைச் சந்திரன் வந்துவிட்டான். நான் என் குருதேவரைப் 
போர்த்திருயிருந்த துணிகள், கம்பளப்பை முதலியவற்றை மெதுவாக உருவி எடுத்தேன். 
என் குருதேவரின் முகம் அற்புதமான அமைதியுடன் காணப்பட்டது. சுவாசத்திற்கும், 
இதயத் துடிப்பிற்கும் நான் தேடியிராவிட்டால் அவர் தூங்கிக்கொண்டுதான் 
இருக்கிறார் என்று நினைக்கும்படியான தோற்றம். ஒரு பழந்துணியைக் கிழித்து 
அவருடைய கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டினேன். அதே போல் கைகள் 
இரண்டையும் பிணைத்தேன். ஒற்றை வேஷ்டி கொண்டே அவரைத் தலை முதல் கால்வரை சுற்றி, 
கம்பளப் பைக்குள் நுழைத்து, பையின் வாயை இழுத்துக் கட்டினேன். மெதுவாகத் தணல் 
எரியும்படி செய்துகொண்டு பொழுது விடிவதற்காகக் காத்திருந்தேன். 
முழங்கால்களுக்கிடையில் தலையைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். கிழக்கு 
வானத்தில் வெளிர்ச்சாயம் தோன்றுவதற்குள் என்னைச் சுற்றி இரண்டங்குல 
உயரத்திற்குப் பனி உதிர்ந்திருந்தது. அந்த அரை வெளிச்சத்தில் நான் மீண்டும் என் 
குருதேவர் கிடந்த பலகையை இழுத்து நடக்க ஆரம்பித்தபோது பின்னால் ஒரு முறை 
பார்த்ததில் தூரத்தில் ஒரு உருவம் அசைவதை உணர முடிந்தது. நான் இரண்டாம் முறை 
திரும்பிப் பார்த்தபோதும் அது அதே தூரத்தில் வந்துகொண்டிருந்தது. இம்முறை அந்த 
ஓநாய் முனகிற்று.
    இறந்தவர்கள் எப்படி எடை கூடக்கூடும் என்று தெரியவில்லை. என் குருதேவரை, 
அவர் சுவாசம் இயங்கிக்கொண்டிருந்தபோதைவிட இப்போது இழுத்துப் போவது கடினமாகிக் 
கொண்டிருந்தது. காலையில் சற்று நேரத்திற்குத் தலையில் பனியிருந்தபோது பலகை என் 
பின்னால் வழுக்கிக்கொண்டு வந்தது. ஆனால், உச்சி வேலை நெருங்குவதற்குள் அங்கு 
பனியும் பெய்திருக்குமா என்று தோன்றுமளவுக்கு எல்லாம் உலர்ந்துவிட்டது. இப்போது 
நான் இறங்குமுகமாக இருந்தேன். பல சமயங்களில் பலகையை இழுத்து வருவதற்குப் பதில் 
பின்னாலிருந்து தள்ளி நகர்த்தி வந்தேன். கனம் அதிகரித்துக்கொண்டே வந்த அந்தச் 
சுமை பள்ளத்தில் சரிந்து விழுந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டு போவது மிகவும் 
சிரமமாக இருந்தது. முன்னிரவு என் குருதேவர் குடித்து மிஞ்சியிருந்த கஞ்சியைச் 
சாப்பிட்ட பிறகு நான் எதுவும் உண்ணாமலிருந்தபோதும் எனக்கு பசி எழவில்லை. 
இடுப்பும், தோளும் மட்டுமே வலித்தன. நான் எங்கும் நிற்கவில்லை. மறுபடியும் இரவு 
வருவதற்குள் மலைப் பிரதேசத்தைக் கடந்து சமவெளியை அடைந்துவிட வேண்டும் என்ற ஒரே 
நோக்கமாக இருந்தேன். என் மனத்திடத்திற்கு உடல்திடம் முடிந்தவரையில் 
ஈடுகொடுத்தது. ஆனால் அது போதவில்லை. நான் அடிமேல் அடி எடுத்து வைத்துத்தான் 
செல்ல முடிந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மலை நிழல் நீண்டுகொண்டு 
போவதை உணர முடிந்தது. இன்னும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வெளிச்சம் 
இருந்தால் எனக்குப் போதும் ஆனால், எனக்கு அது கிடைக்கத் தவறவிட்டு மீண்டும் 
கள்ளிகளுக்காக அலைந்து திரட்டி வைப்பதும் அறிவற்றது. சற்றும் எதிர்பார்க்க 
முடியா வண்ணம் பல இடங்களில் பாறை வெடித்துப் பல நூறு அடிகளுக்குச் செங்குத்தாக 
இறங்கியது. அந்தப் பிளவுகளின் அடியிலும் செடி கொடிகள் வளர்ந்து படர்ந்திருந்தன. 
அந்த ஒரு பகல் நேரப் பிரயாணத்திலேயே நான் அந்தப் பள்ளங்களில் தவறிப்போய் 
விழுந்த பல மிருகங்களின் சின்னங்கள் - அழுகி, உலர்ந்து, பூச்சி அரித்து, 
காற்றில் சிதறிப்போன சடலங்கள் - கிடப்பதைக் கண்டேன்.
    அதிகரித்துவரும் உடல் சோர்வைக் குறைந்துவரும் வெளிச்சம் சரிக்கட்டி வந்தது. 
வெளிச்சம் இம்மியளவு குறைவதையும் என் உடல் முழுதாலும் என்னால் உணர முடிந்தது. 
என் உடல் யத்தனம் அதிகரித்தபோதிலும் என் பிரயாணத்தின் வேகம் வெகுவாக 
அதிகரிக்கவில்லை. நடப்பதென்றில்லாமல் நகர்வதற்கே மிகுந்த பிரயாசை 
எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் கண் முன்னால் ஆயிரக்கணக்கான பூச்சிகள் 
பறப்பதுபோலத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னமும் இரண்டு மணி நேரப் பிரயாணம் 
இருந்தது. நிமிஷங்கள் செல்லச் செல்ல வெளிச்சம் மறைவதற்குள் நான் மலைப் 
பிரதேசத்தைக் கடந்துவிடுவேன் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னொரு 
இரவு பனி விழும் மலைகளுக்கிடையில் நான் தங்க வேண்டும். பகலில் என் கண்களுக்கு 
ஒன்றும் படவில்லை. ஆனால் அந்த உணர்வு என்னுடன் இருந்துகொண்டேயிருந்தது. அந்த 
ஓநாய் என்னுடைய ஒவ்வொரு அசைவையும் அறியும். அது வரும்போது தனியாக வராது.
    கண்ணுக்கெட்டும் தூரத்தில் சமவெளி தெரிந்தது. ஆனால் அதை நம்பி நான் 
பிரயாணத்தைத் தொடர முடியாது. என் குருதேவரின் சடலம் கிடந்த பலகையை அப்படியே 
தழைத்துக் கீழே வைத்துவிட்டு மீண்டும் கள்ளிகலுக்காக அலைந்தேன். நேற்று கிடைத்த 
அளவு கிடைகக்வில்லை. நேற்றைவிட இன்று நான் ஒரு நாள் வயது கூடுதலானவன்; உடல் 
களைப்பும் பலஹீனமும் அதிகரித்தவன். கிடைத்ததை வைத்து நெருப்புப் பற்றவைத்தேன். 
நான்கே விறகுக் கட்டைகள் பாக்கியிருந்தன. ஒவ்வொன்றாகப் பற்ற வைத்துக்கொண்டு, 
தணலாக எரியும் விறகுடன் என் குருதேவரின் சடலத்தைச் சுற்றிச் சுற்றி 
வந்துகொண்டிருந்தேன். இன்றும் நான் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே 
செங்குத்தாகப் பள்ளம் இறங்கியது. அங்கு ஓடையில்லை - அது எங்கோ வேறு திசையில் 
சென்றுவிட்டது. இந்தப் பள்ளத்தின் அடியில் புதர்தான் மண்டியிருந்தது. நேற்றுப் 
பிரயாணத்தை நிறுத்தியபோது எனக்குப் பீதி எழவில்லை. என் குருதேவர் நேற்றும் 
உடலால் எனக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாதவர். அந்த விதத்தில் நேற்றும் நான் 
தனியன்தான். ஆனால் நேற்று இல்லாத பீதி இன்று என் அறிவைச் 
சுருக்கிக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையின் சாதனைகள், லட்சியங்கள், சிந்தனை 
அடிப்படைகள், ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஆவியாகப் பறந்துபோய், என் 
குருதேவரின் சடலத்தை முழுமையாகச் சமவெளியில் அடக்கம் செய்துவிட வேண்டும் 
என்பதைத் தவிர வேறு இலக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தேன். இன்னொரு இரவுப் பனி 
உயிரற்ற சடலத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் என் பற்களிலும், 
எலும்புகளிலும்கூட இழையோடும் பீதியுடன் இருந்தேன். என் உடலெல்லாம் காதாகக் 
கேட்டுக்கொண்டிருந்தேன். நன்றாக இருட்டிய பின் காற்றோசையோடு வேறொன்றும் கேட்க 
நான் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை. மெல்லிய சீறலுடன் பல ஜதை மின்மினிப் 
பூச்சிகள் என்னை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.
    நான் ஒரு கையில் கொள்ளிக்கட்டையையும், இன்னொன்றில் மூங்கில் கழியும் 
எடுத்துக் காத்திருந்தேன். அந்த இருட்டிலும் என் கண்கள் ஓரளவு பார்க்கத் 
தொடங்கிவிட்டன. ஓநாய்கள் கூட்டமாக வந்தாலும் பதினைந்து இருபது அடி 
தூரமிருக்கையில் பிரிந்து எங்களைச் சுற்றிவர ஆரம்பித்தன. ஒவ்வொன்றும் உறும 
ஆரம்பித்து, சிறிது நடந்து, பின்வாங்கி, ஒருமுறை சீறி, முன்னேறி, பின்வாங்கி, 
எங்களைச் சுற்றியவண்ணம் இருந்தது. நிமிஷங்கள் யுகமாக நகர்ந்தன. ஓநாய்கள் 
எங்களைச் சுற்றும் வட்டத்தின் விட்டம் அங்குல அங்குலமாகக் குறைய ஆரம்பித்தது. 
ஐந்தாறு ஓநாய்கள் முழு வளர்ச்சி பெற்றவை. அவையெல்லாம் வாலைப் 
பின்னங்கால்களுக்கிடையில் பொருத்தி வைத்துக்கொண்டு எங்களைச் சுற்றின. நான் என் 
குருதேவரின் தலைப் பக்கமாக நின்று கொண்டு, நாற்புறமும் மாறி மாறி என் 
கொள்ளிக்கட்டையை ஆட்டியவண்ணம் இருந்தேன். பகலெல்லாம் ஓநாய்களைக் கண்ணெதிரே 
பாராமல், ஆனால் அவை எங்களைத் தாக்க எங்கோ தூரத்தில் பின்தொடர்ந்து வருகின்றன 
என்ற உணர்வே என்னைப் பெரும் பீதியில் விறைப்பாக இருக்கச் செய்தது. இப்போது 
அவற்றை நேரே கண்டவுடன் என் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. அந்நேரத்தில் எனக்குச் 
சிந்தனைகளே அவ்வப்போது எழாமல் போவதையும் உணர்ந்தேன்.
    நான் மிகவும் நிதானமாக என் கைகளை அசைத்துக்கொண்டிருந்தேன். ஓநாய்கள் எங்களை 
இன்னமும் சுற்றிச் சுற்றி வந்தவண்ணமிருந்தன. நான் முதலில் தாக்க வேண்டும் என்று 
அவை காத்திருந்ததுபோலத் தோன்றிற்று. எனக்கும் அந்த ஓநாய்க் கூட்டத்துக்குமிடையே 
எழுந்திருக்க ஒரு இக்கட்டு நிலையை இருவரும் தீவிரப்படுத்தாமல் இருந்தால் இரவின் 
எஞ்சிய நேரம் அப்படியே கழிந்துவிடும் என்றுகூடத் தோன்றிற்று. பகல் என்று 
ஏற்பட்டவுடன் ஓநாய்கள் பின்வாங்கிவிடக்கூடும்.
    நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது 
அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது. தாமாகவே 
தங்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு நியதிக்கு அவை தம்மைக் 
கட்டுப்படுத்திக்கொண்டு அதிலிருந்து இம்மியளவு  பிறழத் தயாராக 
இல்லாதிருப்பதுபோல எங்களை வலம் வந்துகொண்டிருந்தன. எனக்கு அந்த ஓநாய்கள் மீது 
பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு 
உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி 
வருவதுபோலத் தோன்றிற்று. அப்போது என் கையிலிருந்த கொள்ளிக் கட்டை சட்டென்று 
அணைந்துவிட்டது. ஜூவாலை எழுப்ப அதை நான் வேகமாக வீசினேன். அப்போது, அந்த மலைப் 
பிரதேசமே மூச்சு விடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு ஸ்தம்பித்துக் 
கிடப்பதுபோலத் தோன்றிற்று. என் கைக்கட்டை முழுவதும் அணைந்துவிட்டது. அதைப் 
போட்டு விட்டுக் கீழே தணல் நுனிகளுடன் கிடந்த கட்டைகளில் ஒன்றைப் பொறுக்கி 
எடுக்க நான் தீயின் பக்கம் குனிந்தேன். ஒரு அரைக் கணம் ஓநாய்கள் உறுமுவதுகூட 
நின்றுவிட்டது. அடுத்துப் பேரிரைச்சலுடன் பெரிய ஓநாயாக ஒன்று என் மேல் 
பாய்ந்தது. என் முகத்திற்கு நேரே பயங்கரமாக விரிந்துவந்த ஓநாயின் வாயில் என் கை 
விறகுக் கட்டையைத் திணித்தேன். அது ஊளையிட்டுக் கொண்டு பின் வாங்கிற்று. அந்த 
நேரம் வேறு சில ஓநாய்கள் என் குருதேவரின் உடலைப் போர்த்தியிருந்த கம்பளப் 
பையைக் கடித்துக் கிழிக்க ஆரம்பித்தன.
    அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில் 
சிதறுண்டுபோயின. என்னை ஒவ்வொரு ஓநாயாகத்தான் தாக்கின. ஆனால் உயிரற்றுக் கிடந்த 
என் குருதேவரின் சடலத்தின் மீதே கூட்டமாகப் பாய்ந்தன. நான் என் மூங்கில் 
கழியைச் சக்கரமாகச் சுற்றினேன். ஒவ்வொரு முறை என் கழி எதையாவது தாக்கும்போது 
என் தோள் பட்டை விண்டுவிடுவது போல நான் எதிரடி உணர முடிந்தது.
    இப்போது ஓநாய்கள் என் மீதும் இரண்டு மூன்றாகத் தாக்கின. அந்த நேரத்தில் 
எங்களுக்குள் இருளே நிலவாதது போல் இருந்தது. என் ரத்தமும் ஓநாய்களின் ரத்தமும் 
தீப்பற்றி வெடித்த வாணம் போல் எங்கள் மேலேயே சிதறி, சுற்றுப்புறமெல்லாம் சிதறி 
விழுந்தன.
    ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கி, 
மீண்டும் பாய்ந்த வண்ணமிருந்தன. அப்போது இன்னொன்றையும் உணர்ந்தேன். என் 
சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒலிகளை, உரத்த ஒலிகளை, நான் 
எழுப்பிக்கொண்டிருந்தேன். அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக 
மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை 
பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்.
    ஆனால் அது நீடிக்க முடியவில்லை. ஓநாய்ப் படையின் பெரும்பகுதி அடிபட்டு, 
ஊனமுற்று ஓடிப்போய்விட்டது. மூன்றுதான் எஞ்சியிருந்தன. என் மேலங்கி பல 
இடங்களில் கிழிந்து ரத்தக் கறையோடு தொங்கிக் கொண்டிருந்தது. என் குருதேவரின் 
சடலம் வைக்கப்பட்ட கம்பளப் பை எப்போதோ துண்டு துண்டுகளாக்கப்பட்டு விலகிக் 
கிடந்தது.
    ஒரு ஓநாய் என் கழியின் வீச்சில் படாமல் என்னைப் பல திசைகளிலிருந்து 
தாக்கிக்கொண்டிருந்தது. நான் தழைய வீசினால் அது எகிறிக் குதித்தது. நான் மேலாக 
வீசினால் அது தலையைத் தரைமட்டத்துக்குத் தாழ்த்திக் கொண்டது. அதை ஒழித்துவிட 
என் வெறியெல்லாம் சேமித்து நான் போரிட்டுக்கொண்டிருந்தேன். அது என்னுடைய 
ஒவ்வொரு அசைவையும் உணர்ந்ததாக இருந்தது. ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும் 
அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன். நான் இருந்த இடம், என் 
குருதேவரின் சடலம், மற்ற ஓநாய்கள் ஆகிய எல்லாவற்றையும் மறந்து அந்த ஒரு ஓநாயைத் 
துரத்தி ஓடினேன். அது பெரியதாக ஊளையிட்டுக்கொண்டே இருட்டில் ஓடி மறைந்தது. அது 
ஊளையிடுவதாகக் கேட்கவில்லை. ஏதோ வெற்றி முரசு முழக்குவதுபோலச் சீறிவிட்டுத்தான் 
சென்றிருந்தது. மற்ற இரு ஓநாய்கள் என் குருதேவரின் சடலத்தைக் கவ்வி 
இழுத்துக்கொண்டிருந்தன. “ஐயோ” என்று நான் அலறிக்கொண்டு அவைமீது பாய்ந்தேன். 
அதற்குள் என் குருதேவரின் சடலத்துடன் அவை பள்ளத்தில் விழுந்துவிட்டன. அதுவரை 
என் கண்ணுக்கு எல்லாமே வெட்ட வெளியாகத் தெரிந்தது தடைப்பட்டுவிட்டது. “ஐயோ, 
ஐயையோ!” என்று அலறிக்கொண்டு நான் பாய்ந்தேன். காலில் ஏதோ தடுக்கிற்று - என் 
குருதேவரை நான் கிடத்தி இழுத்து வந்த பலகையாகத் தான் இருக்க வேண்டும். நான் 
விழுந்தேன். நான் தரையை அணுகுவதற்குள் என் நினைவு நீங்கிவிட்டது.
    நான் மீண்டும் விழித்துக்கொண்டபோது என் மீது லேசான பனிப்போர்வை இருந்தது. 
காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக என் கண்களைத் தாக்கின. அப்படியே 
படுத்திருந்தவன் ஒரு குலுக்கலுடன் எழுந்தேன். பஞ்சுபோலப் பனி சிதறிற்று. நான் 
கிடந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த பள்ளத்தில் எட்டிப் பார்த்தேன். 
விளிம்பு ஓரமாக இறங்கி, ஓட்டமும் நடையுமாகப் பள்ளத்தின் அடியை அடைந்தேன். 
ஓநாய்கள் என் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. தலையையே 
காணோம். உடலெல்லாம் இரத்தம் வெளிப்பட்டு உறைந்திருந்ததுபோல இருந்தது. கைக் 
கட்டை விரல்களைக் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால் 
அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது.

Tuesday, October 6, 2015

எழுத்தாளர் இமையம் - நேர்காணல்

சூரிய கதிரில் ( செப்டம்பர் 2015 )வெளியான அண்ணன் இமையம் அவர்களின் பேட்டி.....

பேட்டி எடுத்தவர் - உங்கள் பிச்சை

 
எழுத்தாளன் உருவாகிறானா... உருவாக்கப்படுகிறானா... உங்களை எழுத தூண்டியது எது...      



 இரண்டும்தான் நிகழ்கிறது. இரண்டில் ஒன்று மட்டுமே நிகழ்ந்தால் ஒருவர் முழுமையான எழுத்தாளராக மிளிர முடியாது. என்னை எழுதத் தூண்டியது, எழுதுவதற்கு சிந்திக்கத் தூண்டியது நிகழ்கால சமூகமும், அதனுடைய வாழ்க்கை முறையும்தான். சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார சுரண்டல்கள், உழைப்புச் சுரண்டல்கள், சாதிய மேலாதிக்கம், உலகமயம், கிராமவாழ்வு அதனுடைய தற்சார்பு தன்மையிலிருந்து விடுபடுவது போன்ற பல சமூகக் காரணிகள்தான் எழுதத் தூண்டுகின்றன. கடவுளின் அருளால் நான் எழுதவில்லை. நான் வாழ்கிற நிகழ்கால சமூகமும், அதனுடைய இயங்கியல் போக்கும், சிக்கல்களும்தான் என் எழுத்திற்கான அடிப்படை, ஊற்றுக்கண்.


 இலக்கியம் என்பதில் கற்பனை வேண்டும் என்பது ஒரு பார்வை... தாம் பார்த்த உண்மைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பது சிலர் கருத்து... உங்க்ள் பார்வை ?


           நிஜமும் புனைவும் கலந்ததுதான் இலக்கியப் படைப்பு. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே எழுதினால் அது அறிக்கை. புள்ளி விபரத் தொகுப்பு. அறிக்கையை, புள்ளிவிபரங்களை, தகவல்களைத் தொகுத்துத் தருபவன் வரலாற்று ஆய்வாளன். இலக்கியவாதி அல்ல. படைப்பாளி அல்ல. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சமூகம், என்னென்ன விதமாக வாழ்ந்தது, வாழ்வதற்கு அச்சமூகம் மேற்கொண்ட சமூக ஒழுக்கவியல், அறவியல், வாழ்வியல் பண்புகள், மதிப்பீடுகள், நடைமுறைகள் என்ன என்பதை சொற்களின் வழியே உருவாக்கிக்காட்டுகிறவன், சொற்களில் சேமித்து வைக்கிறவன் எழுத்தாளன். வெறும் உண்மையை மட்டுமே எழுதுவது இலக்கியப் படைப்பல்ல. வெறும் புனைவை மட்டுமே எழுதுவதும் இலக்கியப் படைப்பு அல்ல. உண்மையும் புனைவும் கலந்திருப்பதுதான் இலக்கியம். வெறும் உண்மை என்பது வேறு. கலை என்பது வேறு.



 மேஜிக்கல் ரியலிசம் , சர்ரியலியசம் , ரியலிசம் போன்றவை குறித்து ?

             இலக்கியப் படைப்புகளில் கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள், இசங்கள் இரண்டாம்பட்சமானவை. ஒருவகையில் அவசியமற்றவை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், இசங்கள் வருகின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை போய்விடுகின்றன. அந்தந்த காலத்தில் உருவாகும் கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள், இசங்களுக்கேற்ப இலக்கியப் படைப்புகளும் சிலரால் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்கள் இசங்கள் மாறும்போது, அதை முன்னிருத்தி எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளும் அந்த காலத்தோடு செத்துவிடுகின்றன. எக்காலத்திற்குமான கொள்கைகள், தத்துவம் என்று எதுவுமில்லை. காலத்திற்கு காலம் மாறும். ஆனால் இலக்கியப் படைப்பு அப்படி அல்ல. காலத்திற்கு காலம் மாறாது. கொள்கைக்கு கொள்கை மாறாது. கொள்கைகளை, கோட்பாடுகளை முன்னிருத்தியோ, அவற்றைப் பிரச்சாரம் செய்யும் விதமாகவோ எழுதப்படுபவை இலக்கியமல்ல. பிரச்சாரம் செய்வது இலக்கியத்தின் அடிப்படை நோக்கமல்ல.

கோவேறு கழுதைகள் வெளி வந்த போது மிகப்பெரிய சர்ச்சைகள் ஏற்பட்டன... இன்று திரும்பி பார்க்கையில் என்ன தோனறுகிறது 


            இலக்கியப் படைப்பு பரபரப்புக்காக எழுதப்படுவதல்ல. பரபரப்பை உருவாக்குபவன் படைப்பாளியுமல்ல. பரபரப்புக்காக எழுதப்படும் படைப்பு பரபரப்பு முடிந்ததும் செத்துவிடும். நான் பரபரப்புக்காக எழுதுகிறவனல்ல. கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நாவல் இன்னும் வாங்கப்படுகிறது. வாசிக்கப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அந்த நாவல் குறித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சர்ச்சைகள், வீண்வாதங்கள், பழிகள், பரபரப்புகள் எல்லாம் உருவான வேகத்திலேயே செத்துவிட்டன. படைப்புதான் நிற்கும். பரபரப்பு அல்ல. சர்ச்சைகள் அல்ல. அப்போதும் சரி, இப்போதும் சரி நான் எந்தவிதமான வீண்சர்ச்சைகளிலும் ஈடுபட்டதில்லை. சர்ச்சைகளில் ஈடுபடுவது, சர்ச்சைகளை உருவாக்குவது எழுத்தாளனின் வேலை அல்ல என்பதால் நான் அப்போது எந்த சலனமும் அடையவில்லை. சர்ச்சைகளின் வழியே ஒரு படைப்புக்கு எந்த மதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. படைப்பின் தரம்தான் அதற்கான மதிப்பையும் வாழ்வையும் தீர்மானிக்கிறது.

குறிப்பிட்ட இன , மத அடையாளங்களுக்குள் சிக்க விரும்பாதவர் நீங்கள்... இதனால் உங்களை எந்த தரப்பும் நம் ஆள் என ஏற்க முடியாத நிலை வரலாம் அல்லவா...


             ஆதரவாக எழுதுவது, எதிராக எழுதுவது என்பது என் எழுத்தின் நிலைப்பாடு அல்ல. உண்மையை எழுதுவது, அதை சமரசமின்றி, சார்பின்றி எழுதுவதுதான் என் நிலைப்பாடு. இதுவரை அப்படித்தான் எழுதிவந்திருக்கிறேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். நான் ஒரு சாதியில் பிறந்துவிட்ட காரணத்தால் என் எழுத்து, குறிப்பிட்ட சாதி சார்ந்துதான் இருக்கும், சுயசாதி சார்ந்த பெருமைகளை, இழிவுகளையே பேசும் என்று நம்புவதும், முத்திரை குத்துவதும், அடையாளப்படுத்துவதும் இழிவான செயல். அடிப்படையில் நிஜமான எழுத்தாளன் சாதிக்கு, சாதிய மனோபாவத்திற்கு, சாதிய மேலாதிக்கத்திற்கு, சாதியமைப்புகளை கட்டிக்காக்கும், பாதுகாக்கும், வளர்க்கும் எல்லாவிதமான கலாச்சார பண்பாட்டுக்கூறுகளுக்கும் எதிரானவன். சாதி கூடாது, சாதி சார்ந்த இழிவு கூடாது என்று எழுதுகிறவர்களே சாதி சார்ந்த அடையாளத்தை விரும்புவது. அதை பெருமையாக பேணுவது ஏற்புடையதல்ல. சாதிசார்ந்த அடையாளங்களுடன் எழுதப்படுவதும், படிக்கப்படுவதும், கொண்டாடப்படுவதும், சாதி சார்ந்த பண்புகளை மேலும் இறுக்கமாக்கிவிடும். அக்காரியத்தை இலக்கியப் படைப்பு செய்யக்கூடாது. படைப்பாளி செய்யக்கூடாது. சாதியை வளர்ப்பதற்காக இலக்கியப் படைப்புகள் எழுதப்படுவதில்லை. பிற்போக்குத்தனங்களுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத்தான் இலக்கியம் எழுதப்படுகிறது.

செடல் நாவல் உருவான பின்னணி குறித்து ?

,             நான் எழுதிய நாவல்களிலேயே மிகவும் முக்கியமானது 'செடல்'. தமிழகத்தில் இசைவேளாளர் இனத்தை சேர்ந்தவர்களைத்தான் கோவில்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவார்கள் என்ற சமூக நம்பிக்கையை, செடல் பொய்யென நிரூபித்தது. தாழ்த்தப்பட்டவர்களிலேயே கடைநிலையில் இருக்கக்கூடிய - தெருக்கூத்து ஆடுவதைத் தொழிலாகக்கொண்ட இனத்துப்பெண்ணையும் பொட்டுக்கட்டுவார்கள் என்ற நிஜமான வரலாற்றை சொன்ன நாவல். ராஜாக்கள் கட்டிய பெரியபெரிய கோவில்களில் மட்டும்தான் பொட்டுக்கட்டுவார்கள் என்பது மட்டுமல்ல சாதாரண கிராமத்துக் கோவில்களுக்கும் பொட்டுக்கட்டிவிடுவார்கள் என்ற உண்மையை சொல்கிறது. சட்டரீதியாக தமிழகத்தில் பொட்டுக்கட்டும் மரபு ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை பொய்யென நிரூபித்தது மட்டுமல்ல, அது இன்னும் தமிழக கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது என்பதை சொன்னது செடல். அதோடு சாதாரண மக்களுடைய கலையாக இருந்த தெருக்கூத்துப் பற்றியும், அதனுடைய அழகியல் கூறுகளையும், மேன்மைகளையும் கலைத்தன்மையோடு விவரிக்கிறது நாவல். சிலப்பதிகாரத்திற்குப் பிறகு தமிழில் கூத்துக் கலையின் அடவுமுறைகளைப்பற்றி விரிவாக பேசிய இலக்கியப் படைப்பு செடல் நாவல்தான். செடல் என்னுடைய ஊர்க்காரர். என்னுடைய இளமைக்காலத்திலிருந்து அவருடைய நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு கரிநாள் அன்று "பொங்க காசு கொடுங்க" என்று கேட்டு வந்தபோதுதான் செடலைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

எங்கதே நாவல் உங்க்ள் நாவல்களில் சற்று வித்தியாசமானது.. ஆனால் முழுக்க முழுக்க ஆண் பார்வையிலான நாவல் என்ற விம்ர்சனம் குறித்து ?

            சங்க காலத்திலிருந்து இன்றைய காலம்வரை காதலால், காதலின் ஏமாற்றத்தால், காதல் கைக்கூடாததால், பெண்கள்தான் ஏங்குவார்கள், அழுவார்கள், காத்திருப்பார்கள் என்று இலக்கியங்களின் வழியே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதை சமூகமும் முழுமையாக நம்பி வந்திருக்கிறது. இலக்கியங்கள் உருவாக்கிக்காட்டுகிற துயரமும், சமூக நம்பிக்கையும் முழுஉண்மை அல்ல என்பதை சொல்கிறது          "எங் கதெ" நாவல். காலம்காலமாக இலக்கியப் படைப்புகள் கட்டமைத்த மதிப்பீட்டிற்கு, சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிராக எழுதப்பட்டிருப்பது "எங் கதெ". மரபை உடைத்திருக்கிறது இந்த நாவல். காதலில் ஆணும் ஏமாற்றப்படலாம், துயரப்படலாம், கண்ணீர் சிந்தலாம், ஏங்கலாம், காத்திருக்கலாம், அவஸ்தைப்படலாம் இதுவும் சாத்தியம்தான், உண்மைதான் என்பதை சொல்கிறது எங் கதெ நாவல். ஆணின் வலியை அழுகையை, ஆணினுடைய பார்வையில் சொல்வதுதானே பொருத்தம்?


 சுய சரிதையை சிலர் நாவல் என்கிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தீர்கள். ஆட்டோஃபிக்‌ஷன் என்பதும் இலக்கிய வகைகளில் ஒன்றுதானே..


            ஆட்டோ ஃபிக்ஷன் இலக்கிய வகைகளில் ஒன்றுதான். நாவலுக்கும், தன்வரலாற்றுக்கும், தன்வரலாற்றுக்கதை நாவலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடு எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் தெரியாமல் இருப்பதுதான் விநோதம். தெரியாது என்பதைவிட தெரிந்தே செய்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். நாவலை - நாவல் என்றும், தன்வரலாற்றை தன்வரலாறு என்றும், தன் வரலாற்றுக்கதை நாவல் என்பதை, தன் வரலாற்றுக்கதை நாவல் என்றும் எழுதுங்கள், வெளியிடுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். தன்வரலாற்றை நாவல் என்று போடாதீர்கள். அப்படிப்போட்டால் அது இலக்கிய மோசடி. இந்த மோசடியை எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் சேர்ந்தே செய்கிறார்கள். இப்படி ஏன் செய்கிறீர்கள் என்று வாசகனும் கேள்வி கேட்பதில்லை என்பது இன்னும் மோசம். நம் எழுத்தாளர்களுக்கு எழுதத் தெரியவில்லை, நம் வாசகர்களுக்கு படிக்கத் தெரியவில்லை என்று அர்த்தமாகிறது. இது மொழிக்கு இழிவு அல்லவா?

எழுத்துப்பிழைகளை கண்டு கொள்ளாதீர்கள்.... கருத்தை மட்டும் பாருங்கள் என சில நாவலாசிரியர்கள் சொல்கிறார்களே..

.           அப்படி சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. எழுத்துப்பிழை முக்கியமில்லையா? அப்படியென்றால் எது முக்கியம்? கருத்துப்பிழை, வாக்கியப்பிழை, காலக்குழப்பம் முக்கியமில்லையா? படைப்பு சொல்ல வந்த கருத்து மட்டும்தான் முக்கியமா? இலக்கியம் மொழியால்தானே உருவாக்கப்படுகிறது. இலக்கியப்படைப்பிற்கு அடிப்படையே மொழிதானே. அதுவே சரியில்லையென்றால் எப்படி? இது ஒரு மனிதனுக்கு உயிர் மட்டும்தான் முக்கியம் என்று சொல்வதுபோலிருக்கிறது. ஒரு மனிதனுக்கு உயிர்மட்டும் இருக்கிறது, காது கேட்கவில்லை, கண்தெரியவில்லை, கைகால்கள் ஊனமாக இருக்கின்றன என்றால் அந்த மனிதனை எப்படி சொல்வீர்கள்? ஊனமானவர், குறை உடையவர் என்றுதானே. அப்படித்தான் இலக்கியப்படைப்பும். எழுத்துப்பிழை, வாக்கியப்பிழை, கருத்துப்பிழை, காலக்குழப்பம் இருந்தால் அது ஊனமான படைப்புத்தான். குறை உடைய படைப்புத்தான். ஒரு இலக்கியப்படைப்பின் வழியே எழுத்தாளன் கதையை மட்டும் சொல்வதில்லை. மொழியை உருவாக்குகிறான். மொழியைப் புதுப்பிக்கிறான். மொழிதான் எழுத்தாளனுக்கான ஆயுதம். அதன் மூலம்தான் அவன் ஒரு வாழ்வை உருவாக்கிக் காட்டுகிறான். கதவை திறந்துகொண்டுதான் வீட்டிற்குள் செல்ல முடியும். ஒரு படைப்பிற்குள் செல்வதற்கு கதவைப்போன்றது மொழி.மொழியே சரியில்லை என்றால் எப்படி? எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, வாக்கியப் பிழை, காலக்குழப்பத்துடன் எழுதப்படுவதுதான் தூய, அதி உன்னத இலக்கியமா?

தலித்திய பெண்ணிய எழுத்துகளுக்கான தேவை குறித்து ?


          தலித்திய, பெண்ணிய, மார்க்சிய, முற்போக்கு, விளிம்புநிலை, மேஜிக் ரியலிசம், சர்ரியலிசம், இருத்தலியல் போன்ற அடையாளங்களுடன் இலக்கியப்படைப்புகள் உருவாக்கப்படுவது ஏற்புடையது அல்ல. அடையாளங்கள் சிறந்த படைப்பிற்கு தடையாக இருக்கும். எழுதுவதற்கும், படிப்பதற்கும். சார்பு தன்மை இருந்தால் அது படைப்பை ஊனப்படுத்தும். கொள்கைகளையும், கோட்பாடுகளையும் முன்னிருத்தாமல் வாழ்வையும், அதனுடைய போக்கையும், மாற்றத்தையும் அதனுடைய இயங்கியல் போக்கிலேயே அணுகி எழுதவேண்டும். தலித்திய, பெண்ணிய, மார்க்சியம் போன்ற அடையாளங்கள் எழுத்தாளருக்கும் நல்லதல்ல, படைப்பிற்கும் நல்லதல்ல. அடிப்படையில் இலக்கியப்படைப்பு அடையாளங்களுக்கு, வரையறைகளுக்கு, முத்திரை குத்தப்படுவதற்கு எதிரானது. அடையாளங்களை எழுத்துக்கான பெருமையாக, எழுத்தாளனுக்கான பெருமையாகக் கொள்ளக்கூடாது. அப்படிக்கொண்டால் அது குறிப்பிட்ட படைப்பிற்கான, படைப்பாளிக்கான வீழ்ச்சியல்ல. மொழிக்கான பெரும் வீழ்ச்சி. 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா