Saturday, November 30, 2013

ஆபாசம் இன்றி ஓர் அடல்ட்ஸ் படம்- ,மகேந்திரனின் மேஜிக்களில் ஒன்று

தமிழில் அடல்ட்ஸ் படங்கள் வந்ததே இல்லை... வக்கிரமான படங்கள் வேறு விதம்..அதுவல்ல..  குழந்தைகளுக்கு புரியாத சற்று பெரிய விஷயங்களை அலசும் படங்களை சொல்கிறேன். அந்த வகையில் தமிழில் முக்கியமான படங்களில் ஒன்று பூட்டாத பூட்டுக்கள்.

தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது அல்லவா...படமும் அப்படியே..

மகேந்திரன் படங்களுக்கு என சில தனித்தன்மைகள் உண்டு... முதல் காட்சியிலேயே படத்தை ஆரம்பிப்பது , இயல்பான நடிகர்கள் , இனிய பாடல்கள், கச்சிதமான ஒளிப்பதிவு , அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள், சிறப்பான துணை நடிகர்கள் , அழகான எடிட்டிங்,  நறுக் என ஒரு கவிதை போல முடிவது  என சிலவற்றை சொல்லலாம்..

பூட்டாத பூட்டுகள் படம் பற்றி பழைய ஆள் ஒருவரிடம் கேட்டார்...அது ஒரு கள்ளக்காதல் படம்பா என்றார்... எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.. இப்படி எளிதாக புரிந்து கொண்டதால்தான் அந்த காலத்தில் இந்த படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை என்பது படம் பார்த்த பின் தெரிந்தது..

மனித மனதின் நுட்பங்களை , புதிர்களை , உறவுச் சிக்கல்களை சொல்லும் படம் இது..

படத்தின் பிரதான கேரக்டர்கள் யார், அவர்களுக்கு என்ன பிரச்சனை , கதையின் முடிச்சு என்ன என்பதெல்லாம் வெகு அழகாக குறைவான நேரத்திலேயே சொல்லப்பட்டு விடுகிறது..

குழந்தை இல்லாத தம்பதிகள்..குழந்தை குறித்து அடிக்கடி பிரச்சனை வருகிறது... தத்து எடுக்கும் முயற்சி சரிப்படவில்லை... நாயகனின் சகோதரனின் கோபமும் இதனால் ஏற்படுகிறது... 
நாயகனுக்கு தன் மனைவி மீது அன்புதான்...ஆனால் அதை சரியாக காட்டினானா? அன்பை கொட்டிக்கொடுக்க அவன் காத்து இருந்தும் , அவள் அன்புக்கு ஏங்கி வேறோர் இடம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்...

காட்டாத அன்பு பூட்டாத பூட்டு போல பயனற்றதுதானே...அதேபோல , போலியான அன்பு எவ்வளவுதான் கொட்டப்பட்டாலும் அதனாலும் பலனில்லை..

இந்த அன்பு எப்படி ஓவ்வொருவரின் உறவுகளை பாதிக்கிறது என பல்வேறு கேரக்டர்கள் மூலம் கேஸ் ஸ்டடி செய்து இருக்கிறார் மகேந்திரன்,

படத்தின்  டைட்டிலில் முதல் பெயராக இடம் பெறுவது ஹீரோவின் பெயர் அல்ல... இந்த கதையை எழுதிய பொன்னீலவன் பெயர்தான் முதலில் காட்டப்படுகிறது..

மகேந்திரன் எப்போதுமே கதையை அப்படியே எடுப்பவர் அல்லர்.. ஒரு ஸ்பார்க் மட்டும் எடுத்துக்கொள்வார்... இதிலும் அப்படியே...ஆனால் வழக்கத்துக்கு மாறாக எழுத்தாளர் பொன்னீலவனுடனும் அவ்வப்போது விவாதித்து இருக்கிறார்.

பெண் கேரக்டர்களை அழுத்தமாக படைப்பது மகேந்திரன் இயல்பு..ஜானியில் ஸ்ரீதேவி கேரக்டரை ரஜினியை விட சற்று உயர்வாக காட்டி இருப்பார்... நாயகியை ஏமாற்ற முயலும் போலி ஜானி , நாயகியின் களங்கமற்ற அன்பை பார்த்து திகைத்து போவது படத்தின் முக்கிய திருப்பமாக இருக்கும்..
பெண்ணீயம் அல்லது பெண்ணடிமை என்ற துருவங்களில் சிக்காமல் , சில இடங்களில் பெண் ஆணை டாமினேட் செய்கிறாள்..சில இடங்களில் விட்டுக்கொடுக்கிறாள் என்ற எளிய யாதார்த்தம் இந்த படத்திலும் இருக்கிறது.

 கணவனை தூக்கி எறிந்து விட்டு , தனக்கு ஆசை காட்டியவனை தேடிசெல்கிறாள் நாயகி... அந்த துரோகியோ இவளை துரத்தி விடுகிறான்.. இவள் இப்போது என்ன செய்வாள்... கையறு நிலை... பெண் என்பவள் ஆண் சார்ந்துதான் இருக்க வேண்டி இருக்கிறது என்ற ஒரு நிலை..இங்கே பெண்மை பணிந்து போகும் நிலை...

இன்னொரு பெண்.. நாயகியுடன் சேர்ந்து வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண்... அவள் கணவனுக்கு கண் தெரியாது...அவனை இவளே காக்கிறாள்...இவள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றபோதும் , தன் கணவனை காக்கிறாள்.... ஒரு கட்டத்தில் கதானாயகனையே காக்கிறாள்... இன்னும் உச்சமாக, அவனுடைய மனைவியையும் தானே கவனிப்பதாக சவால் விடுகிறாள்..அங்கு பெண்மை விஸ்வரூபம் எடுக்கிறது..

இந்த இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்கிறார் மகேந்திரன்...

இதை செண்டிமெண்ட் குப்பையாகவோ , ஆபாச களஞ்சியமாகவோ எடுத்து இருக்கலாம்... ( ஓர் இடைச்செருகல்...இந்த படம் தாமதமானதால் , இதே கதையை சற்று செக்சியாக எடுத்து , இதற்கு முன் ரிலீஸ் செய்து காசு பார்த்தது இன்னொரு படம் ).

ஆனால் மகேந்திரன் துளியும் ஆபாசமின்றி இந்த “ கள்ளக்காதல்” கதையை எடுத்து இருக்கிறார்..

ஊருக்கு புதிதாக வந்தவனின் பசப்பு மொழியில் , போலி அன்பில் நாயகி திசை மாறுகிறாள் என்பதை அவர் எப்படி ஒரே ஒரு ஷாட்டில் காட்டுகிறார் என்பதே அவரை சிறந்த கலைஞன் ஆக்குகிறது...ஆபாசம் ஆகி விடும் அந்த காட்சி கலையாக மிளிர்கிறது..

அவனுக்கு பரிமாற இலை விரிக்கிறாள் அவள்...அவன் சாப்பிட அமர்கிறான்... அவன் இலையில் அவன் சாப்பிட சோறு விழுவதற்கு முன் , அவள் தலையில் சூடியிருந்த பூவில் இருந்து ஒருபூ அவன் இலையில் விழுகிறது...இந்த காட்சி , அதற்கான இசை எல்லாம் உள் அர்த்தத்தை தெளிவாக விளக்கி விடும்... அவள் அவனுக்கு விருந்தாக முடிவெடுத்து விட்டாள்!!

அவன் கணவன் எந்த அளவுக்கு அப்பாவியாக இருக்கிறான்..?
அந்த ஆளை பார்க்க கணவன் போகிறான்.. தன்னை தேடி வருவதைப் பார்த்து அந்த ஆள் நடுங்குகிறான்... கணவனோ சம்பந்தம் இல்லாமல் வேறு என்னவோ சாதாரண விஷ்யம் பேசுகிறான்..தூரத்தில் இன்னொரு ஆளின் குரல் ஒலிக்கிறது... ஒரு அஞ்சு பைசா தொலஞ்சு போச்சு...தேடிக்கிட்டு இருக்கேன்... முக்கியமான ஒன்றே தொலையப்போகிறதே !!

இன்னொரு காட்சி..வயித்துக்கு துரோகம் பண்ணாம சாப்பிடுங்க..

அவன் பதில்// நான் ”வயித்துக்கு”  மட்டும்  துரோகம் பண்ண மாட்டேன்..


படம் எப்படி காட்சி ரீதியாக நகர்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

 நாயகனுக்கு பண நெருக்கடி ..சகோதரனிடம் போகிறான்.. அவனோ அவமானப்படுத்தி அனுப்புகிறான்.

சோகத்துடன் அந்த கண் தெரியாத கணவன் - மனைவி வீட்டுக்கு சென்று தன் சோகத்தை சொல்கிறான்..அந்த பெண் பாவம் ஏழை..கஷ்டப்பட்டு உழைத்தும் , க்டன் வாங்கியும் , தன் கணவன் கண் ஆப்பரேஷனுக்கு பணம் சேர்த்து வருகிறாள்..ஓரளவு பணம் சேர்த்து வைத்து இருக்கிறாள்.

தான் தன் கடையை விற்பதை தவிர வேறு வழி இல்லை என புலம்புகிறான் நாயகன்..

அவள் ஒரு முடிவுடன் எழுகிறாள்..தன் கணவன் தோளைத்தொட்டு ஏதோ பேசப்ப்போகிறாள்...அதற்குள் அந்த கண் தெரியாத கணவன் சொல்கிறான் “ நானும் அதைத்தான் நெனச்சேன் “  வேறு எந்த வசனமும் இல்லை... அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பது வசனம் இல்லாமல் அவனுக்கும் புரிகிறது.. நமக்கும் புரிகிறது.
லெனினின் எடிட்டிங் பற்றி சொல்ல வேண்டும்..ரஜினியின் ராஜாதிராஜா படத்துக்கு அவர்தான் எடிட்டர் என்பதும் , ப்டத்தின் வெற்றிக்கு அவர் எடிட்டிங் முக்கிய காரணம் என்பதும் பலருக்கு தெரியாது..
இந்த படத்தின் அழகுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்..முக்கியமான காட்சிகளை சஸ்டெயின் செய்து ஆழத்தை அதிகரிக்கிறார்... தேவையற்ற காட்சிகள் அறவே இல்லை..
இசை இளையராஜா...பின்னணி இசை அபாரம்.. பாடல்களில் பலருக்கும் பிடித்த பாடல் , ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது என்ற பாடல்..
ஆனால் எனக்கு பிடித்தது இந்த பாடல்..

இந்த பாடலின் தொடர்ச்சியாக , அந்த பெண்ணை கரக்ட் செய்துவிட்டதாக நாயகன் சொல்கிறான்.

இன்னொரு ஆளின் மனைவியை இப்படி செய்வது தப்பில்லையா என கேட்கிறான் ஊருக்கு புதிதாக வந்தவன்,,

இதில் என்ன தப்பு,,, அவளாத்தானே வந்தா என்கிறான் அவன்..

இந்த வார்த்தை அவனுக்கே பிறகு எதிராக போவது அவலச்சுவை..

இயல்பான ஹாஸ்யம், அழகான கேமரா என படத்தை ரசித்து பார்க்க முடிகிறது...

ஊரில் எல்லோரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏளனமாக பார்க்கையில் , அது வரை பைத்தியமாக கருதப்பட்ட ஒருவன் , நான் ஏதேனும் உதவட்டுமா என்பான்,,, இது போன்ற அழுத்தமான காட்சிகள் படம் முழுக்க உண்டு,,

படம் முடிவதற்கு இரண்டு நிமிடம் முன்பு கூட படம் முடியபோவது தெரியாது,.சட் என ஒரு கவிதை போல முடிகிறது படம்..

படம் பார்த்து கொஞ்ச நாளைக்கு அந்த கணவன் மனைவியை மறக்க முடியாது... 

மொத்தத்தில் பார்த்தே ஆக வேண்டிய படங்களில் ஒன்று பூட்டாத பூட்டுகள்

 நடிப்பு - ஜெயன், சாருலதா , பிரபாகர் , சுந்தர் , குமரிமுத்து , சாமிக்கண்ணு மற்றும் பலர்
ஒளிப்பதிவு அசோக்குமார்
பாடல்கள்  பஞ்சு அருணாச்சலம்..









Friday, November 29, 2013

இயக்குனர் மகேந்திரன் ஆணாக்திக்கவாதியா ? கவிஞர் றியாசுடன் ஓர் உரையாடல்

ஆண்டிகளில் பரம்பரை ஆண்டி , பஞ்சத்துக்கு ஆண்டி என இருவகை உண்டு..
நானெல்லாம் இப்போதுதான் மகேந்திரன் படங்கள் பார்த்து வருகிறேன்... ஆனால் அவர் படங்களை வெகு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ,பார்த்து நினைவில் வைத்திருப்பவர்கள் உண்டு...அவர்களுடன் உரையாடுவது ஓர் இனிய அனுபவம்,

அவர் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் , ஆணாதிக்கம் ,மணிரத்னம் போன்றோர் அவர் கதையை சுட்டது ,போன்ற பல விஷ்யங்களை நேற்று விவாதித்தோம்..அவற்றின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு..

**********************************************************



குறியீடு பற்றி பற்றி பேசுபவர்கள் , மகேந்திரனின் பூட்டாத பூட்டுகள் பார்க்க வேண்டும்.. மல்லிப்பூ காட்சி, அஞ்சு பைசா காட்சி ஆகிய இரண்டை மட்டும் பார்த்தாலே போதும்

  • Gj Premkumar பாஸு நானும் பாத்தேன்..எனக்கு தெறிஞ்ச குறியீடு ..ஹாஆஆஆஆவ்..


  • Siva Raj இதுல ரெண்டு தடவை ' பற்றி' வருதே , இதுவும் குறியீடா...?! 


  • Riyas Qurana ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது. பாடல் சட்டென்று நினைவுக்கு வந்தது.


  • Balamurugan Chendurpandian அலோ பிச்சைக்கார்...சினிமா பத்தியே பேசறீங்களே...படம் இயக்க போறீங்களா, தயாரிக்கப் போறீங்களா?


  • Riyas Qurana நன்டு படம் குறித்து பதிந்தபோது, அள்ளித்தந்த வானம் பாடல் நினைவில் வந்தது. ” தனித்த காலம் வளர்த்த இடங்களெ, இளமை நினைவை இசை்கும் தெருக்கள்” வரி சுற்றிக்கொண்டிருந்தது.


  • Riyas Qurana மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை , மணிரத்னம் - மௌனராகமாக எடுத்தார். உதிரிப்பூக்களை - வசந்த் - ஆசை என எடுத்தார்.

  • Riyas Qurana தனது படங்களில் ஆண்களோடு நேருக்கு நேர் பேசாத, எதையும் அமைதியாக பொறுத்துக் கொள்கிற ‘குடும்ப பாங்கான’ பெண்கள்தான் முன்மாதிரியான பெண்கள் என்ற கருத்தை அநேகமாக பதிவு செய்திருக்கிறார்.

    அவரின் முதல் படமான முள்ளும் மலரும் ஷோபா, உதிரிப்பூக்கள் அஸ்வினி, ஜானி ஸ்ரீதேவி, நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் சரத்பாபுவின் இரண்டாவது மனைவி, அதேப் படத்தில் திருமணத்திற்கு பிறகு சுகாசினியின் மாற்றம், கண்ணுக்கு மை எழுது சுஜாதா, மெட்டி விஜயகுமாரி, நண்டு பட நாயகி இப்படி… மகேந்திரன் காட்டவிரும்பும் பெண்கள் விமர்சனத்திற்குரியவை.

  • Pichaikaaran Sgl அவரது எல்லாப்படங்களும் பார்த்து இருக்கீங்க போல...இதைப்பற்றி விரிவா எழுதுங்க...எல்லோருக்கும் பயன்படும்


  • Gj Premkumar அதே போல்..ஆணாதிக்கம் நிறைந்து,ஐயா மகேந்திரனின் படங்கள்..

  • Riyas Qurana தோழர், ஆணாதிக்கம் நிறையாத தமிழப்படமே இல்லை. மகேந்திரனின் படங்களிலும்...

  • Gj Premkumar பெண்களை ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் காட்டிய விதத்தில் அவரின் பங்கு அதிகம் தோழரே..

  • Riyas Qurana முள்ளும் மலரில் படாபட் ஜெயலட்சுமி, உதிரிப்பூக்களில் அஸ்வினியின் தக்கச்சி, கை கொடுக்கும் கையில் ராஜலட்சுமி. துணை நாயகிகளாக காட்டும் பெண்களை அறிந்திருந்தால் இதைச் சொல்ல மாட்டீர்கள். 12 படங்கள் இயக்கியிருக்கிறார். தனக்கு பிடித்த படமான ”உதிரிப்பூக்களை” பிழைகள் குறைந்த படம் என்றுதான் சொல்லியிருக்கிறார். மிகப் பெரிய மனது.

  • Gj Premkumar துணை நாயகிகள் மட்டும்..மற்றபடி மனைவி என்பவள் ,அதே அஸ்வினி,ஷோபா..?

  • Riyas Qurana நாயகிகள் பற்றி மேலே குறிப்பிட்டிருக்கிறேன். படிக்க மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறென்.

  • Gj Premkumar Sorry..

  • Pichaikaaran Sgl அருமை Riyas Qurana .. ஜானியில்கூட ரஜினியை விட ஸ்ரீதேவியை ஒரு படி மேலாக காட்டி இருப்பார்...பூட்டாத பூட்டுகளில், தன் கணவன் கண் ஆப்பரேஷனுக்கு வைத்து இருந்த பணத்தை எடுத்து கொடுக்கும் பெண்ணை மறக்க முடியுமா

  • Riyas Qurana ஜொனி படத்தில், சுஜாதா பாடிய இரண்டாவது பாடல் என நினை்கிறேன். ” ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” அற்புதமான பாடல்.

  • Pichaikaaran Sgl Gj Premkumar விவாதத்தில் என்ன sorry? 
    a
  • Riyas Qurana தன் மனைவி வேறு ஒருவருடன் காதல்கொண்டு அவரோடு சென்று திரும்பவும், தனது கணவனிடம் திரும்பி வருகிறாள். அவளை அவன் ஏற்றுக்கொள்ளும் காட்சி... மிக அபூர்வமானது. இது என்ன படம்...?

  • Pichaikaaran Sgl Riyas Qurana நண்டு படத்தில் கதானாயகியின் தோழியை பவர்ஃபுல்லாக காட்டி இருப்பார் அல்லவா,...இதன் உள்ளீடு என்ன
  • Pichaikaaran Sgl Riyas Qurana நீங்கள் சொல்வது பூட்டாத பூட்டுகள்..தோழர் , அவர் படங்களில் துணை நாயகிகளை , நாயகிகளைவிட வலுவாக காட்டும் உள்ளீடு என்ன

  • Riyas Qurana அவரின் படத்தில் துணைநாயகி என்பது இருப்பதில்லை. ஒரு வசதிக்காக நாம் இப்படி சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு சமாந்திரமாக, விமர்சனமாக பெண்களை உருவாக்கிக்காட்டிய படியே நகருவார். அமைதியான எதையும் ஏற்றுக்கொள்ளுபவள்தான் பெண் எ்ன்ற கருத்து நிலைபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே, முற்றிலும் மாற்றமான ஒரு பெண்ணை சமாந்தரமாக உருவாக்குவார். அப்படிச் செய்வதால், ஆணாதிக்கத்தின் நிழலை படியவிடும் வாய்ப்பை தனது திரையிலிருந்து நீக்குகிறார்.

  • Gj Premkumar ஸாரி என்றது பேட்டரி லோ..அதனால் தோழரே..

  • Pichaikaaran Sgl ஹாஹா..... சூப்பர்....அடிச்சு ஆடுங்க

  • Riyas Qurana ஒரு இனிய மனது பாடலின் இணைப்பிருந்தால் இ்ங்கே தந்துவிடுங்கள். ... அனைவரும் மகேந்திரனை நினைக்கட்டும். அவரது தொலைபேசியின் ரிங்டோன் கூட அந்தப்பாடல்தான்.

  • Pichaikaaran Sgl Riyas Qurana எவ்வளவோ இருளாக இருந்தாலும் , அங்கு ஓர் ஒளி இருக்கும் என்பது அவர ப்டங்களின் பொதுக்கருத்தா... அந்த “துணை நாயகிகளை “ அந்த ஒளியாக கொள்ளலாமா?

  • Pichaikaaran Sgl Gj Premkumar புலி பதுங்குவது , பாய்வதற்காகத்தான் என நான் அறிவேன் 

  • Riyas Qurana ஒருவகைப் பிரகாசம்.
  • Gj Premkumar இங்கு பாடலைப் பற்றி அல்ல விவாதம் தோழரே..அவரின் பாத்திர படைப்பு..


  • Riyas Qurana சலிப்பு வரும்போது கேட்பதற்குத்தான் பாடல். கேட்டுப்பாருங்கள். விவாதிப்பதைவிட ரசிப்பது மிக அற்புதமான தருணம்.


  • Pichaikaaran Sgl மகேந்திரன் படங்களை நான் இப்போதுதான் பார்க்கிறேன்,, நீங்கள் எல்லாம் முன்பே பார்த்தவர்கள்...உங்களிடம் இருந்து அதிகபட்சம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் Riyas Qurana Gj Premkumar

  • Gj Premkumar அவரின் ஆபார திறமை ஓரு வட்டத்திற்குள் நின்று விட்டது என்பதுதான் எனது ஆதங்கம்..

  • Pichaikaaran Sgl எப்படி சொல்கிறீர்கள்? கணவன் மனைவி உறவு , நடுத்தர குடும்ப பிரச்சனை , ஒரு சகோதரனின் பாசம், சிறுவயது ஈர்ப்பு , காமம் என பல தளங்களை அவர் தொட்டு இருக்கிறாரே

  • Riyas Qurana அவர் ஒருபோதும் தன்னை அபாரமான திறமையானவராக சொன்னதில்லை.

  • Riyas Qurana பூட்டாத பூட்டுக்கள் போன்ற கதையைத் தொடுவதற்கு தமிழ் சினமாவுக்கு இன்னும் காலம் பிடிக்கும் என நினைக்கிறென்.

  • Riyas Qurana நெ்ஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலிருந்து... பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலை இணைத்துவிடுங்கள். இன்னுமொரு தேநீர்.

  • Pichaikaaran Sgl ரசிகனை அழ வைக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தாலும், அதை தவிர்ப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்



  • Gj Premkumar அப்படி பார்த்தால் பாலசந்தர் அதை விட அதிகமான கதைகளை கையாண்டவர்..

  • Pichaikaaran Sgl நம்மை அழ வைப்பதை தனது வெற்றியாக பாலச்சந்தர் கருதுவார்...மகேந்திரன் அப்படி நினைப்பதில்லை என்பது முக்கிய வித்தியாசம் என கருதுகிறேன் Riyas Qurana

  • Gj Premkumar ஒரு ரசனையோடு கொடுத்தவர் என்ற விதத்தில் மகேந்திரன் ஒரு படி மேலே நிற்கிறார் எனலாம்..

  • Pichaikaaran Sgl ஆமா ஆமா...அதைதான் சொல்றேன்..அழகியல்

  • Riyas Qurana கடும்கோபம் வந்தாலும், உரத்துப் பேசாத மனிதர்களையும், அவர்கள் தமது வலிகளையும் சந்தோசங்களையும், உள்ளுக்குள்ளே ரசிக்கும்படி ஆக்கிவைத்தவர். தலைமறைவு வாழ்க்கைபோன்ற ஒன்றை உறவுகளிடையெ இருப்பதை வெளிப்படுத்தியவர். பாலச்சந்தர், அழவைத்து பார்க்க முயற்சித்தவர். மகேந்திரன் உணர்த்தியவர்.

  • Pichaikaaran Sgl மகேந்திரன் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் பெண்களுக்கே கொடுக்கப்படுவது குறித்து ?

  • Gj Premkumar ஆனால் பாலசந்தர்'ன் பெண்கள் ஆளுமை திறன் மிக்கவர்கள்..

  • Riyas Qurana கதையின் முக்கியத்துவம் குறித்து... பாடல்கள் அமைவது வழக்கம். மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட என்ற பாடலின் இணைப்பை தாருங்கள். இன்றுவரை வந்த எந்தப்பாடலும் இதற்கு நிகரில்லை என்றே சொல்லுவேன். கேட்டுப்பாருங்கள். அதில், மலையாள பாடகர் பிரேம்மானந்த் பாடிய ” சந்தககவிகள் பாடிடும் மனதில் இன்பக் கனவுகளே..” ஒரு அற்புதமான பாடலும் இருக்கிறது. இணைப்பு கிடைக்கட்டும்.



  • Pichaikaaran Sgl ஆணை பழிவாங்க , அவன் மூலம் கர்ப்பமாகும் கல்கி , சங்கீத் ஞானம் இல்லாமல் கண்வனை டார்ச்சர் செய்யும் சிந்து பைரவி , பாடகனை டார்ச்சர் செய்து பிறகு அவன் காலில் விழும் புது புது அர்த்தங்கள் என பாலச்சந்தர் படங்களில்தானே பெண்னடிமைத்தனம் உள்ளது?

  • Riyas Qurana நுால்வேலி சரிதா மட்டுமே போதும் அவருடைய நாயகிகள் நிங்கள் சொன்னதுபோல இல்லை என்பதற்கு. திருமணம் ஆகாமல் கற்பமாகிறாள். அவளை கடைசியில் கொலை செய்ய வேண்டி வருகிறது. சிந்து பைரவி கதை எல்லாம் தெரியும்தானே... முற்போக்கான பெண்கள் கடைசியில் தற்கொலை செய்வதுதான் முடிவா. இல்லாமல் வாழவைக்க முடியாதா?

  • Pichaikaaran Sgl Riyas Qurana காட்சிகளை தன் இசையால் மூழ்கடித்து விடுகிறார் என இளையராஜா மீது குற்ற்சாட்டு உண்டு,.ஆனால் மகேந்திரன் படங்களில் அழகாக, தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசைக்கிறார்... சண்டைகளில் டிஷ்யூம் டிஷ்யூம் ஓசைகூட இல்லை...மகேந்திரன் படங்களில் இருக்கும் இசை குறித்து என்ன சொல்கிறீர்கள்

  • Riyas Qurana இளையராஜா அப்படி மூழ்கடிப்பதில்லை. அவரின் இசைக்கற்பனையின் வீச்சில் காட்சிகள் கலைந்துவிடுவதுண்டு. நிண்டுபிடிக்க முடியாயாமல் போவதுண்டு. பாலுமகேந்திரா, மகெந்திரனின் படங்களிலும், நிவாஸ், சிறிராம், போன்றவர்களின் கமெராவிலும் அது நடப்பதில்லை.

  • Riyas Qurana மெட்டி ஒலி காற்றோடு என்ற பாடலை கேட்டுப்பாருங்கள். ஒரு பெண் குரலை ஒரு இசைக்கருவிபோல மாத்திரமே பயன்படுத்தியிருப்பார்.

  • Pichaikaaran Sgl மெட்டி ஒலி படத்தில் அண்ணனும் தங்கையும் பாடுவதாக பாடல் வருமே...அது போல சகோதாரப்பாசத்தை காட்டும் பாடல்கள் வேறு வந்ததாக தெரியவில்லையே ( செண்டிமெண்ட் பாடல்கள் வேறு விதம்.. நான் சொல்வது அழகியலோடு கூடிய பாடல்)

  • Pichaikaaran Sgl அதுதான் நீங்கள் சொல்லும் சந்தககவிகள் பாடிடும் மனதில் இன்பக் கனவுகளே

  • Riyas Qurana ஆமா... மிக அருமையான பாடல். ஜெயமோகனுக்கு பிடிக்கும் என்று சொன்னதாக ஞாபகம் அப்போது எனது ரசனையில் சந்தேகம் வந்தது. பின்னர், அந்தப்பாடலைப் பாடிய பிரேமானந்தம் பற்றி கூறியதாக அறிந்தேன்....

  • Riyas Qurana கைகொடுக்கும் கை படத்தில் ”தாளம்பூவே வாசம் வீசு” அருமையான பாடல். அதுபோல, முள்ளும் மலரும் படத்தில் ஜென்சி பாடிய , அடி பெண்ணே பொன்னுாஞ்சல் ஆடும் இளமை. பாலுமகேந்திராவின் கமெரா, எனக்கு விருப்பமான நடிகை ஸோபா, என ஒரே கொண்டாட்டமாகவே இருக்கும். இணைப்பை தந்துவிடுங்கள்.
  • Pichaikaaran Sgl ”ஜெயமோகனுக்கு பிடிக்கும் என்று சொன்னதாக ஞாபகம் அப்போது எனது ரசனையில் சந்தேகம் வந்தது.” ஹா ஹா.... சீரியசான விவாதத்தில் ஒரு காமெடி இடைவேளை சூப்பர்

  • Pichaikaaran Sgl வாவ் வாவ் வாவ்,... நினவில் வைத்து இருந்து கொட்டுகிறீர்களே..ம்ம்ம்

  • Riyas Qurana எப்போதோ படித்தவைகள்தான், பார்த்தவைகள்தான், கேட்டவைகள்தான். நினைவிலிருந்தே எழுதுகிறேன். எனது ஞாபக சத்தியின்மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. ம்...ம்...ம்...

  • Pichaikaaran Sgl அந்த அளவுக்கு உங்கள் மனம் க்வர்ந்து இருக்கிறது
    41 minutes ago · Like · 1
  • Pichaikaaran Sgl பிற்காலத்தில் ஊர்பஞ்சாயத்து , சாசனம் என அவர் ஏன் நீர்த்து போனார்?

  • Pichaikaaran Sgl கலைக்கும் முதுமை உண்டா?

  • Riyas Qurana அவருடைய 12 படங்களில், 4 அல்லது 5 படங்கள்தான் கொண்டாடப்பட்டடுபவை. அதுவும் நம்மைப்போன்ற சிலர். அல்லது புதிதாக வரும் துணை இயக்கநர்கள் போன்றவ்களினால். ஜனவெளியை கைப்பற்ற முடியாது போய்விட்டது. ரஜனியை வைத்து எடுத்த கை கொடுக்கும் கை படத்திற்கும் அதுதான் நிலை.கலைக்கு முதுமை இல்லை. சிந்தனை என்பது காலத்தோடு நகர்ந்துகொண்டு வர வேண்டும். அது காலத்தை பிந்துமானால் எவ்வளவு திறயைமானவராக இருந்தாலும் அவர் பழசுபட்டுப்போய்விடுவார். ஜெயமோகன், இளையராஜா, என அதிக உதாரணங்களைச் சொல்லலாம். சிலருக்கு, தங்கள் இளமைப்பருவத்துக் காலமே தங்களோடு எப்போதும் இருக்கும். அந்தக்கால விசயங்களுடன் தங்கிவிட்டிருப்பார்கள். சிலர் மிக மெதுவாக சிந்திப்பவர்களாக இருப்பார்கள். புதிதாக வருபவைகளை ஏற்க்கமாட்டார்கள். ஒரு பத்தாண்டு கடந்துவிட்டால். தான் பறக்கணித்தவைகளை கொண்டாடுவார்கள். மிகச்சிலரே, காலத்திற்கு சமாந்தரமாக பயணிக்கக்கூடியவர்கள். சாரு, ராஜ சுந்தரராஜன் போன்றவர்கள். காலத்தோடு பயணிப்பதுதான் உயிர்ப்புமிக்கது. பின்தங்கும்போது, மிகப்பழசு பட்டுவிவார்கள்.
  • Pichaikaaran Sgl சுஜாதாவும் கடைசி வரை உயிர்ப்புடன் இருந்தார் என நினைக்கிறேன்..சரியா

  • Riyas Qurana ஆமா.... அவர்குறித்து அதிகமான விமர்சனங்கள் இருக்கிறது. அவர் எழுத்தாளரே இல்லை என்றுகூட, அவரது பிரதிகளை வைத்து சொல்லலாம். ஆனால், அவர் உயிர்ப்புமிகு இலக்கியச் செயற்பாட்டாளர்.

  • Riyas Qurana பிரபஞ்சன்,ஜெயகாந்தன்,சுஜாதா, போன்றவர்களை ஜனரஞ்சக வெளிக்குள்ளும் தள்ளிவிட முடியாது, நவீன வெளிக்குள்ளும் இழுத்து வைக்க முடியாது. இரண்டிலும் தமது செயல்பரப்பை விரிவுபடுத்தியவர்கள். இவர்களை கலைஞர்கள் என சொல்லலாம். இவர்களுடைய செயல்பாட்டை இன்னும் விரிவுபடுத்தி, நவீனப்படுத்தி கொண்டுசெல்ல முடிகிறவர்தான் தமிழின் சிறந்த இலக்கியச் செயற்பாட்டாளராக இன்றைய பொது உளவியல் ஏற்க்கும்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா