Tuesday, July 31, 2012

கமல் ஹாசனும் சாருவும் - ரோலண்ட் பார்த்

சில சினிமாக்களை ரசித்து பார்த்து இருப்போம். கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் , இதையா ரசித்தோம் என நமக்கு தோன்றும். அதே போலத்தான் புத்தகங்களும்.

எழுத்தின் வகைகள் குறித்து ரோலண்ட் பார்த் நிறைய பேசி இருக்கிறார். படைப்பு என்பது இரு வகைகளில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.  ஒன்று வாசகனை / ரசிகனை சந்தோஷப்படுத்தும் பொருட்டு படைக்க்கப்படுவது. இன்னொன்று வாசகனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லாமல், வாசகன் எதிர்பாராத ஒன்றை கொடுப்பது.   இந்த வகை படைப்புகளே வாசகனே உயர்த்தும். அவன் தன் பங்குக்கு கொஞ்சம் உழைத்தால் , இன்பத்தின் உச்ச நிலையை அடையலாம். தியானத்தின் போது கிடைக்கும் பரவச நிலை , ஆர்கசம் போன்ற ஒரு உன்னத நிலையை அடையலாம் என்கிறார் அவர்.

      என்ன சொல்கிறார் அவர்? சில உதாரணங்களை பார்க்கலாம்.

 கமல் ஹாசன் படங்களை பார்த்தால், அவர் எப்படி நடிப்பார் , கதை எப்படி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.  நமக்கு தெரியும் என்பது அவருக்கும் தெரியும். ஆனால் அவர் அதே பாணியைத்தான் தொடர்வார். காரணம் , நாம் எதிர்பார்ப்பது போலவே அவர் படம் இருப்பதால் , நமக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. உலகத்தரத்திலான படம் ஒன்றை பார்த்து விட்டோம் போல என நினைத்து மகிழ்ந்து கொள்கிறோம்.

     சிரித்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பை அழுகையாக மாற்றுவார். பேசிக்கொண்டிருக்கும்போது சட் என பேச்சு வராமல் நிறுத்துவார். பார்க்கும் நமக்கு கண்டிப்பாக ஆஸ்கார் அவார்ட் இவருக்குதான் என தோன்றும். மேக் அப் போட்டுக்கொண்டு ஹீரோ , வில்லன் , காமெடியன் , சைட் ஆக்டர் என ஒரே படத்தில் எல்லா வேடங்களையும் செய்வார்.  நமக்கு பிரமிப்பாக இருக்கும்.

நமது இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொருட்டே அவர் படங்கள்.  இதே போல எழுத்திலும் உண்டு.

ஆனால் வாசகனை அல்லது ரசிகனை திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் , நமக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தும் படைப்புகளும் உண்டு. இவை முதல் பார்வையில் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதது போல இருக்கும். சில சமயங்களில் பிடிக்காமலும் போகக்கூடும். நமக்கு சவால் விடுவது போல இருக்கும். கொஞ்சம் முட்டி மோதி போராடினால், ஏதோ ஒரு கணத்தில் அந்த படைப்பின் ஆன்மா நம் கண் முன் பளிச்சிட்டு விடும். அந்த மந்திர கணத்தைத்தான் ரோலண்ட் பார்த் பேரின்ப நிலை என்கிறார்.

சாருவின் சீரோ டிகிரியை நான் முதன் முதலில் படிக்கையில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதுவரை நான் படித்த நாவல்கள் , எழுத்துகளில் இருந்து முற்றிலும் வேறு பட்டு இருந்தது. எந்த வகையிலும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

அதன் பின் , சில காலம் இடைவெளியில் அவ்வப்போது வாசித்து இருக்கிறேன்.  ஒரு வாசிப்பின்போதுதான் , அந்த நாவலின் ஆன்மாவை என்னால் தரிசிக்க முடிந்தது. அந்த கணத்தை என்னால் மறக்க இயலாது.


படைப்பை பொருத்தவரை படைப்பாளியை விட வாசகனே முக்கியம் என்கிறார் ரோலண்ட் பார்த்.  ஒரு நல்ல படைப்பு எண்ணற்ற ஜன்னல்களை திறந்து விடக்கூடும். படைத்து முடித்தவுடன் , அந்த படைப்பாளி இறந்து விடுகிறான் என உருவகமாக கூறுகிறார் அவர். அதாவது அந்த படைப்பின் அர்த்தத்தை வாசகன் தான் தேடி அடைய வேண்டும்.

புதிய சிந்தனைகள் , புதிய பார்வைகளை ஒரு படைப்பு அளிக்க வேண்டும் . அதே சமயம் ஒரே வடிவத்தை மீண்டும் மீண்டும்  பயன்படுத்தியும் மாயஜாலம் நிகழ்த்த முடியும் என்கிறார்.

   நேரம் கிடைக்கையில் ரோலண்ட் பார்த் நூல்களை படித்து பாருங்கள்


Sunday, July 29, 2012

துக்ளக் கட்டுரைக்கு தினமணி கடும் எதிர்ப்பு - கவிஞர் வாலி vs பத்திரிக்கையாளர் சாவி

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி..

- வாலி


**********************************************


சமீபத்தில் கவிஞர் வாலி , மூத்த பத்திரிக்கையாளர் சாவி  பற்றி சில கருத்துகள் சொல்லி இருந்தார் . தை கண்டித்து , தினமணியில் இன்று கட்டுரை வந்துள்ளது. கீழ்கணட கட்டுரையை படித்தால் , அது என்ன விவகாரம் என  புரிந்து விடும் என்பதால் , அந்த விவகாரத்தை விவரிக்க விரும்பவில்லை. என் மனதில் எழுந்த சில கேள்விகள் மட்டும் உங்கள் பார்வைக்கு...









  • பத்திரிக்கையாளர் சாவி எழுத்து துறையில் பலரை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் யாரும் ஏன் குரல் எழுப்பவில்லை.
  • சரியோ, தவறோ. சாவி அவர்கள் தி மு க சார்பு நிலை எடுத்து , கடைசி வரை அதில் உறுதியாக இருந்தார். தி மு கவினர் யாரும் ஏன் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை.
  • இந்த பிரச்சினையை வாலி இப்போது ஏன் , காலம் கடந்து எழுப்புகிறார்? 
  • சாவி சொன்னது தவறு என்பதற்கு வாலியிடம் ஆதாரம் இருக்கிறதா ?
  • வாலி சொன்ன சம்பவத்துக்கு சாட்சிகள் உண்டா?
  • அண்ணாவுக்கு பிறகு கலைஞர் திமுக தலைவர் ஆனது , அவர் தகுதியை பார்த்து கட்சியினர் கொடுத்தது. அதே போல எம் ஜி ஆருக்கு பிறகு ஆர் எம் வீ தான் , அ தி மு க தலைவர் ஆகி இருக்க வேண்டும் என வாலி துக்ளக்கில் எழுதினார். இதற்கு துக்ளக் ஆசிரியர் சோ மறுப்பு கருத்து எழுதினார். கலைஞரின் தகுதியை பார்த்து , கட்சியினர் அவரை ஆசைப்பட்டு தலைவர் ஆக்க வில்லை. சில தகிடுதித்தங்கள் , எம் ஜி ஆர் ஆதரவு போன்றவற்றால்தான் , நெடுஞ்செழியனை மீறி தலைவர் ஆனார். ஆர் எம் வீக்கு அதிமுகவினர் ஆதரவு இருந்ததில்லை , எனவே தான் அவர் தலைவர் ஆகவில்லை என சோ எழுதினார். 
             வாலியின் இந்த கருத்துக்கு உடனடி மறுப்பு எழுதிய சோ , சாவி பற்றிய கருத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. எனவே வாலி கருத்து சோ ஏற்பதாக எடுத்து கொள்ளலாமா ? 

சரி.. தினமணி கட்டுரையை  பாருங்கள்.


**********************************************************************




தினமணி கட்டுரை 



கலாரசிகனின் இந்த வாரம்: வாலி மீது எய்த பாணம்!




கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான் என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்.
"துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்டிருந்தார் என்பதைத் தெரிவிக்காமல் நான் மேலே எழுதினால் அதைப் படிப்பவர்களுக்குத் தலையும் புரியாது, வாலும் தெரியாது என்பதால் அதை மறுபதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
 ""கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்'' - இப்படி அந்தப் பத்திரிகையில் என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் செய்தி வந்திருந்தது.
எனக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரோடு நான் பழகிய இருபத்தைந்து வருட நட்பில், இருபத்தைந்து தடவை கூட ராமாவரம் தோட்டத்துக்குள் போனது கிடையாது. அப்படியிருக்க, இப்படி "சாவி' எழுதியது அதர்மமல்லவா?
சில நாள்கள் கழித்து, "சாவி'யை மூப்பனார் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
""சாவி சார்! வயசில நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவரு... இப்படி என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதலாமா? இப்படித்தான் என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, பாரதிராஜாவின் சொந்தப் படமான "புதிய வார்ப்புகள்' பூஜையன்னிக்கு, அருணாசலம் ஸ்டூடியோவிலே, ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்''.
இதுதான் கவிஞர் வாலி பதிவு செய்திருக்கும் சம்பவம். இது உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள ஆசிரியர் சாவி சாரும் உயிரோடு இல்லை. மூப்பனாரும் காலமாகிவிட்டார்.
இப்படிக் கவிஞர் வாலி சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி அவரது கன்னத்தில் "பளார்' என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால் அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அதுபோலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது. அது போகட்டும்.
சாவி சார் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் அப்படி என்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கோபப்பட வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் சில அவதூறுகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்? அப்போதே "நான் ஒன்றும் அரசவைக் கவிஞர் பதவிக்காக ராமாவரம் தோட்டத்துக்குப் போகவும் இல்லை, ஆசைப்படவும் இல்லை' என்று கவிஞர் வாலி மறுப்பு எழுதியிருக்கலாமே, அறிக்கை வெளியிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?
தன்னை விமர்சனம் செய்த பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தேன் என்று அகவை எண்பதில் பெருமை தட்டிக் கொள்ளக் கவிஞர் வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா? அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், கிருஷ்ண விஜயத்தையும் எழுதுவதற்காகப் படித்த ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் கவிஞர் வாலி கற்றுக்கொண்டது அவ்வளவுதானா?
கவிஞர் வாலி விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் எல்லோருக்குமே தெரிந்த உண்மை, கவியரசு கண்ணதாசனையும், புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கத்தையும் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியைப் "பத்மஸ்ரீ' விருதிற்குக்கூடப் பரிந்துரைக்கவில்லை என்பது. கருணாநிதி அரசால் பரிந்துரைக்கப்பட்டு 2007-இல்தான் அவருக்குப் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது என்பதுதானே உண்மை?
கவிஞர் வாலியால் தன்னைத் தாங்கிப் பிடித்த, மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களே கூடத் தங்களை ஆசிரியர் சாவியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவி சாரின் உயரமும், பங்களிப்பும் எங்கே, இவர்கள் எங்கே?
வெகுஜனப் பத்திரிகைக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தவர், கவியரசு கண்ணதாசனை தினமணி கதிரில் "அர்த்தமுள்ள இந்து மதம்' எழுத வைத்து அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர்; நாடகம், சினிமா என்று மட்டுமே இருந்த "சோ' சாரை "மை டியர் பிரம்மதேவா' நாடகத் தொடரை எழுத வைத்துப் பத்திரிகைப் பிரவேசம் செய்யப் பிள்ளையார் சுழி இட்டவர், நாங்கள் சாவி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள் என்று எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன் என்று ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பட்டாளத்தால் மதிக்கப்பட்டவர் எங்கள் ஆசிரியரான சாவி சார்!
சொல்லப்போனால் சாவி சாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் சாவி பத்திரிகையிலிருந்து விலகியவன்தான் நான். அதனால் அவர் எனது ஆசிரியர் இல்லாமலாகி விடுவாரா, இல்லை, அவரது குறைகள் அவரது நிறைகளை இல்லை என்றாக்கிவிடுமா?
திரு.வி.க.வுக்கும், கல்கிக்கும் பிறகு பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவானாக வளைய வந்த ஆசிரியர் சாவியை இப்படித் தரக்குறைவாகச் சித்திரிக்கவும், தனது சொந்த மனமாச்சரியங்களையும், காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக்கொள்ள, கட்டுரைத் தொடர் எழுத முற்பட்டிருப்பதையும் பார்க்கும்போது நமது மதிப்பிலிருந்தும் மரியாதையிலிருந்தும் கவிஞர் வாலி சடசடவென்று சரிந்துவிடுகிறாரே...
சாவி சார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பராக இருந்தவர்தான். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தவரும்தான். ஆனால், கடைசிவரை கருணாநிதியின் நண்பராகவே தொடர்ந்தவர். கவிஞர் வாலியைப்போல முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்வரை அவரை "ஏ.எம் தொடங்கிப் பி.எம் வரை இமைமூடாப் பணி செய்யும் சி.எம்' என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே, முதல்வர் ஜெயலலிதாவை "ரங்கநாயகி' என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் அவருக்கு இருந்ததில்லை.
சாவி சார் கோபக்காரர்தான். அவருக்கும் குற்றம் குறை உண்டுதான். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த பத்திரிகையாசிரியர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. அவரது பாசறையில் தயாரான என்னைப் போன்றவர்களால், இறந்துவிட்ட அவரை வசைபாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
எழுபதுகளில் ஒரு நாள். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சங்கர ஜயந்தியை முன்னிட்டுக் கவிஞர் வாலியின் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அன்று கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்தக் கவியரங்கத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் வாலியின் கவியரங்கம் என்று சொன்னால் கால்கடுக்க நின்றாவது அதைக்கேட்டு ரசிப்பதுடன், எழுதி எடுத்து மனனம் செய்யும் அளவுக்கு நான் அவரிடம் பித்துக் கொண்டிருந்தவன்.
கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்.
 "சாக்கடையில் விழுந்தாலும்
 சந்தனத்தில் விழுந்தாலும்
 எதுவுமே -
 ஒட்டிக் கொள்ளாமல்
 உள்ளது உள்ளபடியே
 எழுந்து வருகிறது -
 என்னுடைய நிழல்.
 நிழலுக்கு இருக்கும் - இந்த
 நிட்காமிய ஞானம் - என்
 உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
 காய்ச்சிய ஈயமும் ஒன்று!'
இது எனக்கு மனப்பாடம். நான் விசனிப்பதெல்லாம் அகவை எண்பது கடந்தும் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?
இந்த வாரம் வாசகர்களிடம் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் எனது நெஞ்சக் குமுறலைப் பகிர்ந்து கொள்வதன் காரணம், கவிஞர் வாலி போலல்லாமல், அவர் இருக்கும்போதே அவரைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணமும், சாவி சார் பற்றிய தவறான பதிவுக்கு அவரால் தயாரான பத்திரிகையாளன் என்கிற முறையில் பதிலளித்தாக வேண்டும் என்கிற குரு பக்தியும்தான் காரணம்.
கவிஞர் வாலி தன்னைப் பற்றித் தானே ஒரு கவியரங்கத்தில் எழுதிய கவிதை இது. நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் வாலியின் வரிகளில் இதுவும் ஒன்று -

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி!


Wednesday, July 25, 2012

சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா? - ஹாலிவுட் இயக்குனர் க்றிஸ்டோஃபர் நோலன் பேட்டி





ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர்  நோலன் பல விஷ்யங்களைப்பற்றி பேசும் சுவையான பேட்டி உங்கள் பார்வைக்கு. 



உங்களுக்கு சினிமா ஆர்வம் எப்படி ஏற்பட்டது..எப்போது ஏற்பட்டது ?

  லண்டனில் வசித்தபோது படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அப்போது என் வயது 7 . நானும் என் சகோதரனும், தன்னுடைய சூப்பர்8 கேமிராவை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கும் அன்பு என் தந்தையிடம் இருந்தது. சிறிய சண்டைபடங்களையும் , அறிவியல் கதைகளையும் அந்த கேமிராவில் படம் பிடிப்போம். நாங்கள் எடுத்த படம் எப்ப்டி வந்து இருக்கிறது என பார்ப்பதற்கு , அது ப்ரோசஸ் ஆகி வரும் வரை இரண்டு வாரங்கள் காத்து இருக்க வேண்டும். மறக்க முடியாத இனிய நாட்கள் அவை.

சினிமா எடுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய விஷ்யம் / சம்பவம் நினைவு இருக்கிறதா ?

 நான் சினிமாவை காதலித்தேன் . அவ்வளவுதான். என் பெற்றோர்கள் என் ஆர்வத்தை ஊக்குவித்தனர். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். என் தந்தை ஆங்கிலேயர் , என் தாய் அமெரிக்க பெண். கொஞ்ச நாட்கள் சிக்காக்கோவில் இருந்தோம். பிறகு லண்டனில் குடியேறினோம். அங்குதான் நான் படித்தேன்.

சினிமாவைப்பற்றி படித்தீர்களா?

இல்லை.ஆங்கில இலக்கியம் படித்தேன். இந்த படிப்பினால்தான் , தாம் நினைப்பதை சொல்லும் சுதந்திரத்தை பல நூற்றாண்டுகளாக எழுத்தாளர்கள் அனுபவித்து வருவது என் சிந்தனையை தொட்டது. சினிமா படைப்பாளிகளுக்கும் இந்த சுதந்திரம் கிடைக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. எம்மா தாமஸும் நானும் பல்கலைக்கழகத்தின் திரைப்பட கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தோம். அங்கு படங்கள் திரையிடப்படும். டிக்கட் விற்பனையில் கிடைத்த பணத்தில் , கோடைக்காலத்தில் 16 mm படம் எடுத்தோம். எம்மா இப்போது என் மனைவி . என் அனைத்து படங்களின் தயாரிப்பாளர் அவர்தான். 

குழந்தைப்பருவத்தில் இருந்தே சினிமாவை காதலித்து வருவதாக சொன்னீர்கள். உங்களை கவர்ந்த சில படைப்ப்பாளிகள், படைப்புகள் பற்றி சொல்லுங்களேன். 

சிலரை மட்டும் சொல்வது கடினம்.   Stanley Kubrick, Terrence Malick, Ridley Scott   மற்றும் Nicholas Roeg போன்றோரை எப்போதும் ரசித்து வருகிறேன். 2001: A Space Odyssey, Chinatown and Lawrence of ArabiaAlien   மற்றும் Blade Runner  போன்ற படங்கள் மிகவும் பிடிக்க்கும். 

சினிமாவை உங்கள் தொழிலாக எடுத்து கொள்ள எப்போது முடிவு செய்தீர்கள் என நினைவு இருக்கிறதா?

எனக்கு 12 வயது இருக்கும்போது , ஒரு இயக்குனர் என்ன செய்கிறார் என ஒரு மாதிரியாக புரிந்தது. இயக்குனர் என்று ஒரு தொழில் இருப்பதை உணர்ந்தேன். அந்த கணம்தான் , நான் இன்று இயக்குனராக இருப்பதற்கு அடித்தளம் அமைத்தது என்பேன். 
.
உங்கள் திரைப்பயணம் எப்படி தொடங்கியது?

 என் முதல் படைப்பின் பெயர் “ Following “. அது ஒரு 16 எம் எம் கறுப்பு வெள்ளை படம். ஒரு திருடனை பின்  தொடரும் எழுத்தாளனின் கதை அது. கதை , இயக்கம் எல்லாம் நான் தான். தயாரிப்பாளர்களில் ஒருவர் எம்மா. திரை விழாக்களில் அது கவனம் பெற்றது. வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டினார்கள்.  இதனால் மெமெண்டோ படம் எடுக்க தேவையான பணம் திரட்ட முடிந்தது


மெமெண்டோ ஒரு தனித்துவமான படம்? எப்படி இதற்கான கரு கிடைத்தது ?


ஜோனாவின் சிறுகதை ஒன்றின் அடிப்படையில் அமைந்தது அது. அந்த கதையை அவர் முடிக்கவில்லை. அதைப்பற்றி அவர் சொன்னபோதே , அதற்கான திரைக்கதையை நான் அமைப்பதாக சொல்லிவிட்டேன். தன் ஷார்ட் டெர்ம் மெமரியை இழந்த ஒருவனின் கதையை எப்படி சொல்வது என தீர்மானிப்பதே என் முதல் வேலையாக இருந்தது.  அது சுவையான சவாலாக இருந்தது, 


ஒரு படத்தை இயக்குவது என்பது மிகப்பெரிய அர்ப்பணிப்பு தேவைப்படும் ஒன்று. ஒரு படத்தை இயக்க எந்த அடிப்படையில் முடிவு செய்கிறீர்கள்?


  ஒரு படத்தை இயக்காவிட்டால் , அதற்காக வருந்துவேனா என என்னை நானே கேட்டு கொள்வேன்.  நான் எடுக்கப்போக்கும் இந்த படம் , பார்ப்பதற்கு கிளர்ச்சியூட்டும் படமாக எனக்கு இருக்குமா ? இந்த் கதை வருடக்கணக்கில் என் மனதில் தங்கி இருக்குமா? இது போன்ற கேள்விகளை கேட்டு கொள்வேன். 

சினிமா பொழுது போக்குவதற்கு மட்டுமா அல்லது அதற்கு மேல் ஏதாவது இருக்கிறதா ?  

சினிமாவின் முதல் மற்றும் முக்கியமான நோக்கம் பொழுது போக்குதான். ஆனால் வரலாற்றை பார்த்தால் , அனைத்து வகை பொழுது போக்குகளுமே பொழுது போக்கு என்ற கருதுகோளை கடந்து செறு இருப்பதை காண முடியும் . பொழுது போக்கு பல வகைகளில் இருக்க முடியும். சீரியசாகவும் ,அறிவு பூர்வமாகவும் இருக்க முடியும். அல்லது அன்றாட கவலைகளில் இருந்து தப்பிக்க உதவும் கருவியாகவும் இருக்கலாம். பொழுது போக்கு என்ற உலகின் சாத்தியங்கள் ஏராளம். ஆனால் நம் யுகத்தில், கதை சொல்லும் முக்கிய ஊடகம் சினிமாதான் என நினைக்கிறேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். புத்தகங்களையும் , நாடகங்களையும்  நேசிக்கிறேன். ஆனால் நம் கால கட்டத்தில் கதைக்கான ஊடகம் சினிமாதான் என்பது என் கருத்து. 

சினிமாவின் எதிர்காலம் என்ன ? எதிர்காலத்தில் மக்கள் செல்போன்களில் , வீட்டிலேயே சினிமா பார்ப்பார்களா? 

சினிமாவின் எதிர்காலத்தில் எனக்கு அபார நம்பிக்கை உண்டு.  முன் பின் தெரியாத பலருடன் சேர்ந்து அமர்ந்து , பெரிய திரையில் ஒரு கதை நம் முன் நிகழ்வதை பார்ப்பதில் இருக்கும் சந்தோஷமே தனி . னம் கற்பனைக்கு இடம் அளித்து , வேறோர் உலகத்துக்கு அழைத்து செல்கிறது இது. உலகம் முழுமைக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். 

வெற்றியின் ரகசியம் என்ன ? 

இதற்கு எளிதான ஒரு பதிலை  சொல்ல முடியாது. ஒரு படத்தை நேசித்து அதை செய்யுங்கள் . வேறொன்றுக்கு உங்களை அழைத்து செல்லும் படிக்கல்லாக நினைத்து அதை செய்யாதீர்கள். என்ன படம் எடுக்கிறீர்கள் என்பது முக்கியம் அன்று. கதை சொல்வதை நேசித்து , அதை செய்யுங்கள்  

***********************************************************************************************

Monday, July 23, 2012

வான்கோழியை பார்த்து மயில் காப்பி அடித்ததா? - கமல் காமெடியும், டொரொண்டினோ பேட்டியும்.



தன்னுடைய வித்தியாசமான படங்களால் புகழ் பெற்றவர் ஹாலிவுட் இயக்குனர்   க்வாண்டின் டொரண்டினோ .  தான் பல படங்களைப்பார்ப்பதாகவும் , அவற்றின் மூலம் கற்றுகொள்வதாகவும் அடக்க்கத்துடன் சொல்லிக்கொள்கிறார்,  மற்ற படங்களில் இருந்து கற்பதை பெருமையாகவே சொல்கிறார்.  ஒரு வேளை இந்திய படங்கள் பார்த்து இன்ஸ்பைர் ஆகி இருந்தால் அதை சொல்லி இருப்பார். ஆனால் அப்படி எங்கும் சொன்னது இல்லை.

கமல் ஆதரவாளர்கள் , கமல் படம்தான் அவருக்கு இன்ஸ்பிரேஷன் என்று ஒரு கற்பனை செய்தியை கிளப்பி விட்டனர். அனுபவசாலியான கமல், உண்மைத்தன்மையை அறியாமல், இந்த கற்பனை செய்தியால் மகிழ்ந்து டொரோண்டினோவுக்கு நன்றி தெரிவித்தார். டொரண்டினோவுக்கு யார் இந்த கமல் , ஏன் நன்றி சொல்கிறார் என புரியாமல் விழித்தார்.

    சிலரின் விளையாட்டில் , தான் ஏமாந்து போய் கேலிப்பொருள் ஆனதை , கமல் தாமதமாகத்தான் உணர்ந்தார்.

 கில் பில் படம் ரிலீஸ் ஆன கால கட்டத்தில் டொரண்டினோ அளித்த பேட்டி , உங்கள் பார்வைக்கு...


****************************************************************


உங்களுக்கு சினிமா எடுப்பதற்கான ஊக்கம் , சினிமாவில் இருந்து கிடைக்கிறதா அல்லது வாழ்க்கையில் இருந்து கிடைக்கிறதா ?

   ( சிரிக்கிறார் ) இரண்டுமே பாதி பாதி என நினைக்கிறேன் . 50 -50 . சினிமா பார்ப்பதன் மூலம் தற்போதைய சினிமாவின் போக்கை அறிந்து கொள்ள முடிகிறது.  சில படங்கள் ஊக்கம் அளிக்கின்றன., சினிமா வட்டாரத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது புரிகிறது. அதே நேரத்தில் வாழ்க்கையில் இருந்து நிறைய கற்று கொள்கிறேன்.

  கில் பில் படத்தை பற்றி பேசலாமா?

    தாராளமாக..


உங்கள் படைப்பின் உச்சம் என கில் பில்  படத்தை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பல்ப் ஃபிக்‌ஷனில் இருந்து இந்த படம் எந்த வகையில் மாறுபட்டது ?

  இது வரையிலான எனது படைப்புகளில் முழு நீள குங் ஃபூ  ஆக்‌ஷன் படம் இதுதான்.  பழி வாங்க முனையும் கொலைகாரியின் கதை இது. பார்ப்பவர்களை பைத்தியமாக அடிக்கும் வகையில் சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள் படம் முழுக்க உள்ளன. சீன பாணியிலான குங்ஃபூ பாதிப்பில் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய வகையிலான சினிமா எடுக்கும் என் முயற்சி இது.  நான் கற்பனை செய்த அளவுக்கு படத்தை எடுக்க முடியுமா என்பதே என் முன் இருக்கும் பெரிய சவால்.

வெளியே நிறைய புறாக்களை பார்த்தேன். புறாக்களும் படத்தில் உண்டா?

( சிரிக்கிறார் ) அய்யய்யோ.. அதெல்லாம் இல்லை. அந்த அழகிய புறாக்கள் எப்படி இங்கு வந்தன என எனக்கு தெரியாது.  சில நாய்களும் முயல்களும் கூட இங்கே வளர்கின்றன.

குற்றப்பின்னணி கொண்ட படங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, உண்மையான குற்றவாளிகளிடம் பேசி தகவல் சேகரிக்கிறீர்களாமே?

 எனக்கு அவ்வளவாக யாரையும் தெரியாது. என் அனுபவங்களை வைத்தே கதாபாத்திரங்களை உருவாக்குகிறேன். நான் சேர்க்கும் சுவையான விஷ்யங்களால் அது உண்மை போல தோற்ற்ம் அளிக்கிறது.



 தனக்கு பிடித்த பொம்மையுடன் ஆசையாக விளையாடும் குழந்தையின் உற்சாகத்தை போல , சினிமா மீது தணியாத ஆர்வத்துடன் இருக்கிறீர்கள்

உண்மைதான், முதலில் நான் ஒரு நல்ல ரசிகன். சினிமா பார்க்காத ஒரு சினிமா படைப்பாளியை கற்பனை செய்யவே முடியவில்லை

உலக சினிமாவின் மாணவன் என உங்களை சொல்லிகொள்வது உங்கள் வழக்கம்.

உண்மைதான்.

மற்றவர்களிடம் இருந்து என்ன கற்று கொண்டீர்கள்.

என்னுடைய அனைத்தும் - திரை மொழி, தனி பாணி போன்றவை - சினிமாவில் இருந்து கிடைத்தவைதான். மற்றவர்களிடம் இருந்து ஏராளமாக கற்றுக்கொண்டேன்.  சினிமாவின் தற்போதைய போக்கை அவர்களிடம் இருந்தே கற்றேன். என் அனுபம் மூலம் அவற்றை கிரகித்து எனக்கேற்ற பாணியை உருவாக்கி கொண்டேன். படைப்பாளி என்ற முறையில் திறந்த மனத்துடனும் , எல்லாவற்றில் இருந்தும் கற்கும் திறனுடனும் , நுண் உணர்வுடனும் நான் இருந்தாக வேண்டும்.

பல படங்களில் நடித்தும் இருக்கிறீர்கள். நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் , உங்களுக்கு நெருக்கமான கதாபாத்திரம் எது ?

 எதுவும் இல்லை. நான் வேறு, நான் ஏற்கும் கதாபாத்திரங்கள் வேறு. பல்ப் ஃபிக்‌ஷனில் வரும் ஆசாமி நான் அல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. பைபிளை அடிப்படையாக வைத்து நீங்கள் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் ?

( ஆச்சர்யம் அடைகிறார் ) அட. சுவையான கேள்வி. சுவாரஸ்யமான விஷ்யம். கண்டிப்பாக முழு பைபிளை எடுக்க முடியாது . தடுக்கப்பட்ட கனி என்ற விஷ்யத்தை மட்டும் எடுக்கலாம். உண்மையில் அது பாவகரமான கனி அல்ல. ஆதாம் , ஏவாள் அதை புசித்தது தவறும் அல்ல. அவர்கள் அந்த கனியை புசித்திராவிட்டால் , இதோ, இந்த முயல்களை போலத்தான் வாழ்ந்து கொண்டு இருப்போம் ( சிரிக்கிறார் ).  விடுதலைக்கான அந்த கனியை கொடுத்த பாம்பை விடுதலைகான தூதன் என்பேன். அதை புசித்த ஆதாம் ஒரு ஹீரோ

ஏவாள் கதாபாத்திரத்துக்கு யாரை தேர்வு செய்வீர்கள்?

( சிரிக்கிறார் ) இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை

பாம்பு கேரக்டரில் யார் நடிப்பது ?

 நான் முயலலாம் என நினைக்கிறேன். ஹா ஹா ( சிரிக்கிறார் )

************************************************





Sunday, July 22, 2012

கமல் படத்தை பார்த்து இன்ஸ்பைர் ஆனாரா ? -குவாண்டின் டொரண்டினோ என்ன சொல்கிறார் ? உண்மை விளக்கம்.


கமலுக்கு ஏன் உலக அளவில் பரிசுகள் கிடைக்கவில்லை என் சாரு நிவேதிதாவிடம் கேட்கப்பட்டது. மொழி மாற்றம் செய்வதற்கு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டால் , கண்டிப்பாக அவருக்கு பரிசு உண்டு என சாரு கிண்டலாக பதில் அளித்தார்.

ஆங்கில படங்களை பார்த்து அரை குறையாக புரிந்து கொண்டு , அதை கேவலமாக மொழி மாற்றம் செய்து , தோல்வி படங்கள் அளிப்பவர் கமல். நான் நன்றாகத்தான் படம் எடுத்தேன் .மக்களுக்கு புரியவில்லை என சொல்லி விடுவார்.

சரி.. காப்பி அடிப்பது அவர் உரிமை.. நாம் என்ன செய்வது , செய்து தொலைக்கட்டும் என ரசிகர்கள் விட்டு விட்டார்கள். ஆனால் சமீபத்தில் படு பயங்கர காமெடி ஒன்றை அரங்கேற்றி அனைவரும் திகைக்க வைத்து விட்டார் அவர். அவரைப்பற்றியும் , அவரது டிராமாக்களையும் அந்த காலத்தில் இருந்து பார்த்து வருபவர்கள்கூட இந்த காமெடியால் அதிர்ந்து போனார்கள்.

என்ன காமெடியை அரங்கேற்றினார்? சொல்கிறேன்.

ஒரு பத்திரிக்கையில் கமல் பேட்டி அளித்தார். “பிரபல ஹாலிவுட் இயக்குனர் குவாண்டின் டொரண்டினோ என் படமான ஆள வந்தானை பார்த்துதான் , தன் படத்தில் அனிமேஷன் யுக்தியை பயன்படுத்தியாதாக கூறியுள்ளார். நம் ஆட்களுக்குதான் என் அருமை புரியவில்லை. ஆனால் உலக அளவில் பிரபலமான அவருக்கு என் அருமை புரிந்து இருக்கிறது. அவருக்கு நன்றி “


இதை படித்த நமக்கு அதிர்ச்சி. ஆள வந்தான் படத்தின் தயாரிப்பாளர் “ ஆள வந்தான் , என்னை அழிக்க வந்தான்” என கண்ணீர் பேட்டி அளித்தார் . அந்த அளவுக்கு அந்த படம் கேவலமான படு தோல்வி அடைந்தது . தமிழில் மட்டும் அல்லாமல் , தெலுங்கு , ஹிந்தி , சமஸ்கிருதம் , துளுவம் என பல மொழிகளில் வெளியாகி அனைத்திலும் தோல்வி அடைந்தது.


நம் ஆட்களே பார்க்க முடியாத அந்த குப்பையை குவாண்டின் டொரண்டினோ எப்படி பார்த்து இருப்பார் ? அபப்டியே தப்பி தவறி பார்த்து இருந்தாலும், இனி படம் எடுக்கும் ஆசையே போய் இருக்குமே தவிர , இன்ஸ்பைர் ஆகி , இதே போன்ற காட்சியை எப்படி தன் படத்தில் வைத்து இருக்க முடியும்?

அவர் என்னதான் சொன்னார் ? அது எப்படி திரிக்கப்பட்டது என , அவர் பாராட்டியதாக வெளியிடப்பட்ட செய்தியை பார்த்தேன்.


  • அவர் அந்த படத்தை பற்றி பாராட்டி கமலிடம் பேசவில்லை
  • அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடமும் பேசவில்லை.
  • பட தயாரிப்பாளரிடமும் பேசவில்லை 


உண்மையிலேயே பாராட்ட வேண்டும் என நினைத்தால் , இவர்களிடம் அல்லவா தொடர்பு கொண்டு இருக்க வேண்டும் . அல்லது சம்ப்ந்தப்பட்ட தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டி இருக்கலாம்.

  ஆனால் இவர்கள் யாரையுமே அவருக்கு தெரியாது .

சரி.. அந்த செய்தி வெளியான பத்திரிக்கையின் நிருபரிடம் இவ்வாறு பாராட்டி பேசினாரா?

அதுவும் இல்லை ..

என்ன எழவு இது... சரி... யாரிடம்தான் பாராட்டினாராம்..?

 அவர் பாராட்டி பேசியதாக னுராக் காஷியப் அந்த பத்திரிக்கையிடம் சொன்னாராம்..


  ஓஹோ... அனுராக் காஷியப்பிடமாவது பாராட்டினாரா?


   அதுவும் இல்லையாம்...     


      நமன் ராமச்சந்திரனிடம் பாராட்டி பேசினாராம். அதை அவர் இவரிடம் சொன்னாராம். இவர் அதை இவரிடம் சொல்ல , அவர் பத்திரிக்கை நிருபரிடம் சொல்ல , அது பிரசுரமாக , அதை கமல் நம்மிடம் சொல்லி , இந்த “ பாராட்டுக்கு “ மகிழ்ந்து கொள்கிறார்.


     இப்படி ஒரு அதிகாரபூர்வமற்ற பாராட்டுக்கு ஒரு சீனியர் கலைஞரான  கமல் மகிழ்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது... கமல் நடிப்பில் கொஞ்சம் முன் பின் இருந்தாலும் , சீனியர் கலைஞர் என்ற முறையில் அவரை மதித்தே ஆக வேண்டும். அப்படிப்பட்ட சீனியர் , இந்த “ செய்தியை “ கேள்விப்பட்டு என்ன சொல்லி இருக்க வேண்டும்?


   “ இது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. அனிமேஷன் சீக்வன்ஸ் பல படங்களில் ஏற்கனவே வந்து , பிரபலமாக இருக்கும் யுக்திதான். என் படத்தில் அது பயன்படுத்தப்பட்டதற்கும் , அவர் படத்தில் பயன்படுத்தப்பட்டதற்கும் , அடிப்படையிலேயே பல வித்தியாசஙக்ள் உள்ளன. அந்த படத்தில் கொலைகான காரணம் வேறு,. என் படத்தில் வேறு காரணம். அனிமேஷனின் பின்புலத்தை அந்த படத்திலேயே காட்டி இருப்பார்கள் “ என்று சொல்லி இருந்தால் , கில் பில் படத்தை பார்த்த ரசிகர்கள் மனதில் கமல் மரியாதை கூடி இருக்கும். 


             இப்போதோ , கமலுக்கு நடிக்கத்தான் தெரியவில்லை. படங்களை புரிந்து கொள்ளவும் தெரியவில்லை போலிருக்கிறதே என நினைக்க வேண்டி இருக்கிறது..     
     
         வெகு வெகு சாதாரண அறிவு இருப்பவர்கள்கூட கில் பில் படத்தை பார்த்தால் , இயக்குனர் எந்த கலாச்சாரத்தால் கவரப்பட்டு, அதை படத்தில் பயன் படுத்தி இருக்கிறார் , அந்த கார்ட்டுன் கேரகடர் எந்த நாட்டை சேர்ந்தவள் என்பதை புரிந்து கொள்ள முடிய்ம் , அந்த அளவுக்கு தெளிவாக சின்ன பிள்ளைக்கு பாடம் சொல்லி தருவது போல சொல்லி இருப்பார்கள்.


              ஒரு சீனியர் நடிகர் இதைக்கூட புரிந்து கொள்ளாமல் , அந்த பத்திரிக்கையின் கேலியை புரிந்து கொள்ளாமல் வருத்தம் அளிக்கிறது..


 சரி..யாரைப்பார்த்து அவர் இன்ஸ்பைர் ஆனாராம்? டொரண்டினோ சொல்கிறார்..பாருங்கள்..

*******************************************************************


Was it your intention to let the audience know that this was a very black comedy?




Quentin Tarantino (QT): Definitely, that's definitely the case. I've done violence before but I've never done it in such an outrageous way. Not that I have any problem with it when it's not outrageous but this is definitely not taking place on planet Earth and is actually just using a lot of Japanese filmmaker influences.

It's a standard staple in Japanese cinema to cut somebody's arm off and have them have water hoses for veins and I'm keeping that tradition alive

   
****************************************************************

Tuesday, July 17, 2012

அவமதிக்கப்பட்டவர்களும் , நிந்திக்கப்பட்டவர்களும் - தாஸ்தயேவ்ஸ்கியின் மாஸ்டர் பீஸ்

சிந்தனை , அறிவு போன்றவற்றின் மீது நமக்கு பெரிய மயக்கம் உண்டு. இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். மனிதனை , மற்ற உயிரினங்களில் இருந்து வேறு படுத்தி காட்டுவது சிந்தனை சக்தியே. அதாவது மனம் என்ற அம்சம்.

ஆனால் யோசித்து பார்த்தால் , நாம் காணும் பல பிரச்சினைகளுக்கு காரணம் மனம் தவறாகவும் , துவேஷத்துடனும் இயங்குவதுதான். விலங்குகள் பசிக்காக , மற்ற விலங்குகளை கொல்லக்கூடும். ஆனால் கூட்டம் கூட்டமாக சக விலங்குகளை கொல்வதோ , இழிவு படுத்துவதோ இல்லை. இவை மனித இனத்தின் தனி “சிறப்புகள்”.

இப்போது சொல்லுங்கள். அறிவாற்றல் , சிந்தனை சக்தி என்பது வரமா அல்லது சாபமா? எல்லோருமே அப்பாவிகளாக இருக்கும் உலகம் ஒன்று இருந்தால் , அங்கு இது போன்ற கொடூரங்கள் நடக்காதோ.. அப்பாவியாக , அசடனாக இருப்பதே மேன்மையா..


இது போன்ற கேள்விகளுக்கு தாஸ்தயேவ்ஸ்கியின் நூல்களில் பதில்களை காணலாம்.

அவமதிக்கப்பட்டவர்களும், நிந்திக்கப்பட்டவர்களும் - இது அவரது முக்கியமான நாவல்களில் ஒன்று.

என்ன கதை ?


**********************************************
வான்யா என்ற இளம் எழுத்தாளன் கதையை சொல்கிறான். நாவல் முழுக்க இவன் பார்வையிலேயே இருக்கிறது.

நிக்கோலே மற்றும் அன்னா ஆண்ட்ரேயேவ்னா ஆகிய தம்பதிகளின் பெண் நடாஷா. இவர்கள் பணக்காரர்களாக இருந்தவர்கள். ப்ரின்ஸ் வால்கோவ்ஸ்கி என்பவனால் ஏமாற்ற்றப்பட்டு கஷ்டங்களை சந்தித்தவர்கள். சந்திப்பவர்கள்.
வால்கோவ்ஸ்கி மிகவும் தந்திரசாலி , அறிவாளி. யாரையும் இவனால் தன் அறிவால் வெல்ல முடியும் . ஏமாற்ற முடியும். இவன் மகன் அலக்சே தன் தந்தைக்கு நேர் எதிர். அப்பாவி. எடுப்பார் கைப்பிள்ளை. இவனது அப்பாவித்தனத்தால் கவரப்பட்டு , நடஷா அவனை காதலிக்கிறாள். பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி தன் காதலனை மணக்கும் பொருட்டு வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கிறாள்.

இவளை உளப்பூர்வமாக காதலிக்கும் வான்யாவுக்கு இவள் எடுத்த முடிவு ஏமாற்றம்தான். ஆனாலும் அவளுக்கும், அவள் காதலுக்கும் உதவியாக இருக்கிறான்.

வால்கோவ்ஸ்கிக்கு தன் மகன் காதலை ஏற்க விருப்பம் இல்லை. பணக்கார பெண்ணான கத்ரீனாவை அவனுக்கு மணம் முடிக்க நினைக்கிறான். கடைசியில் வழக்கம்போல அவன் அறிவு கூர்மை வெல்கிறது, மகன் தன் தந்தை முடிவுக்கு கட்டுப்படுகிறான்.

இதற்கிடையில் , ஸ்மித் என்ற கிழவர் இறப்பதை தன் கண் முன் காணும் வான்யா , அந்த கிழவனின் பேத்தியான எலினாவை காப்பாற்ரி தன்னுடன் வைத்து கொள்கிறான். எலினாவுக்கு ஒரு ஃப்ளேஷ் பேக். எலினாவின் தாய் , தன் தந்தையின் எதிர்ப்பை மீறி தன் காதலனுடன் சென்றவள். எலினா பிறந்தவுடன், அவள் சொத்துகளை பறித்து கொண்டு அனாதாரவாக விட்டு சென்றவன் அவன். கொஞ்ச காலத்தில் எலினாவின் தாய் இறந்து விடுகிறாள். இப்போது அவள் தாத்தாவான ஸ்மித்தும் இறந்து விட்டார்.

எலினாவை , ந்டஷாவின் பெற்றோர்களிடன் ஒப்படைக்க நினைக்கிறான் வான்யா. அந்த சிறுமியின் கதை நடாஷாவின் பெற்றோர்கள் மனதை மாற்றுகிறது. தம் கோபத்தை மறந்து நடாஷவை மீண்டும் ஏற்கின்றனர். நடாஷா , வான்யாவின் காதலை புரிந்து கொண்டு அவனுடன் சேர்கிறாள் .

எலினாவின் தந்தை யார் என்ற திடுக்கிடும் உண்மை வெளியாகிறது.

*****************************************************


அறிவு கூர்மை மிக்க வால்கோவ்ஸ்கி , வெற்றி மீது வெற்றி பெறுவதாகவும் , நல்லவர்களான மற்றவர்கள் நிந்திக்கப்படுவதாகவும் , அவமதிக்கப்படுவதாகவும் தோன்றுகிறது. இதன் மூலம் தாஸ்தயேவ்ஸ்கி என்ன சொல்கிறார் ? எந்த கேரக்டரை மேன்மையாக சித்திரிக்கிறார் ?



அறிவோ , பணமோ ஒரு பொருட்டே இல்லை. சரியாக கையாளப்படாவிடில் இதனால் , கஷ்டம்தான். வால்கோவ்ஸ்கி வெற்றி மீது வெற்றி பெறுவதாக தோன்றினாலும் , அவன் வாழ்வின் உன்னதங்களை அனுபவிப்பதாக சொல்ல முடியாது. ஒரு மெஷின் போல வாழ்ந்த வாழ்க்கையே மீண்டும் மீண்டும் வாழ்கிறான்.




மற்ற அனைவரும் அவமதிப்புகளையும் கஷ்டங்களையுமே சந்திக்கிறார்கள். ஆனால் கஷ்டப்படுவது மட்டுமே ஒரு தகுதி அல்ல. அந்த கஷ்டங்களை எப்படி சந்திக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

அறிவாற்றலுக்கு எதிர் துருவமான அப்பாவித்தனத்தின் இலக்கணமாக , வால்கோவ்ஸ்கியின் மகன் சித்திரிகப்பட்டுள்ளான். அறிவு என்பது முழுமையை அனுபவிக்க உதவாது என்றால், இந்த மகன் வாழ்வின் முழுமையை உணர்ந்தானா? இவனை வான்யாவை விடவும் உத்தமனாக காட்டுகிறார் தாஸ்தயேவ்ஸ்கி . அப்படி என்றால் இவன் தான் வாழ்வை உணர்ந்தவனா?

இல்லை. இவனும் வாழ்வில் தோல்வியுற்றவனே. இவன் நல்லவன் தான் , இவனே நினைத்தாலும் கூட யாருக்கும் கெடுதல் செய்ய தெரியாத உன்னதமானவன் தான். ஆனால், வாழ்வின் இன்ப துன்பங்களை, அதன் கொடூரங்களை , மகிழ்ச்சிகளை இவன் அனுபவிக்கவே இல்லை. பாதுகாப்பாக ஓர் இட்த்தில் பத்திரமாக நிற்கும் கப்பல் போன்றவன் இவன், கடலில் இறங்கி , அலைகளை புயல்களை இவன் சந்திக்கவே இல்லை. இவன் பயணம் துவங்கவே இல்லை.
இவன் தந்தை ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருகிறான். இவனோ அதை கூட செய்ய முடியாமல் , தேங்கி நிற்கிறான். ஒரு வேளை , தந்தையை எதிர்த்து , நடாஷாவுடன் வழ்ந்து இருந்தால் , பண ரீதியாக கஷ்டப்பட்டு இருக்கலாம். ஆனால் அந்த க்‌ஷ்டத்தில் வாழ்க்கையை உணர்ந்து இருப்பான்.

கஷ்டத்திற்கு இரையாகி, தான் பட்ட கஷ்டங்களை மற்றவர்களும் அனுபவிக்க வைப்பவர்கள் பலர். ஆனால் வான்யா, தான் கஷ்டப்பட்டாலும் , அதையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எடுத்து கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறான். தன் காதலி எடுத்த முடிவு தவறு என சுட்டி காட்டுகிறான். அந்த முடிவை அவள் மறுத்த நிலையில், அவள் மீது கோபம் கொள்ளாமல் , அவளுக்கு உதவ முனைகிறான் .

அவன் பெரிய பணக்காரன் எல்லாம் அல்லன். ஆனால் அவன் விழிப்புணர்வும், அன்பும், வாழ்வின் அனுபவங்களும் அவனை முழுமை ஆக்குகின்றன.

கஷ்டங்களை மட்டுமே பார்த்த எலினாவின் மனதில் அன்பு பூ பூக்கும் காட்சி செமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையை அப்படியே ஏற்க வேண்டும் என சொல்லும் இந்த நாவல் , தாஸ்தயேவ்ஸ்கியின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம்.

Wednesday, July 11, 2012

செர்னில் சிவன் சிலை- நண்பர் கோவி.கண்ணன் சந்தேகமும் , விளக்கமும்


கடவுள் அணுவும் சிவனின் நடனமும்- குருமூர்த்தி என்ற இடுகையை பார்த்து இருப்பீர்கள்.. பார்த்ததும் சிலருக்கு சந்தேகம்.. நண்பர் கோவி.கண்ணன் அவர்கள், உண்மையிலேயே சிலை அமைக்கப்பட்டதா அல்லது செவி வழி செய்தியா என கேட்டார்..

அந்த சிலை அமைக்கப்பட்டபோது மத சார்பின்மை என்றெல்லாம் பரபரப்பு ஏற்பட்டத்தை அவர் கவனிக்கவில்லை போலும். பரவாயில்லை... அவர் சந்தேகத்தை தீர்ப்பது நம் கடமை.. இதோ , அவர் கேட்ட ஆதாரங்கள்







SHIVA STATUE

The statue of the Indian deity Shiva at CERN was unveiled by His Excellency K M Chandrasekhar (seated), Anil Kakodkar (left) and Robert Aymar (centre).
On June 18, 2004, an unusual new landmark was unveiled at CERN, the European Center for Research in Particle Physics in Geneva — a 2m tall statue of the Indian deity Shiva Nataraja, the Lord of Dance. The statue, symbolizing Shiva's cosmic dance of creation and destruction, was given to CERN by the Indian government to celebrate the research center's long association with India.
In choosing the image of Shiva Nataraja, the Indian government acknowledged the profound significance of the metaphor of Shiva's dance for the cosmic dance of subatomic particles, which is observed and analyzed by CERN's physicists. The parallel between Shiva's dance and the dance of subatomic particles was first discussed by Fritjof Capra in an article titled "The Dance of Shiva: The Hindu View of Matter in the Light of Modern Physics," published in Main Currents in Modern Thought in 1972. Shiva's cosmic dance then became a central metaphor in Capra's international bestseller The Tao of Physics, first published in 1975 and still in print in over 40 editions around the world.
A special plaque next to the Shiva statue at CERN explains the significance of the metaphor of Shiva's cosmic dance with several quotations from The Tao of Physics.Here is the text of the plaque:
Ananda K. Coomaraswamy, seeing beyond the unsurpassed rhythm, beauty, power and grace of the Nataraja, once wrote of it "It is the clearest image of the activity of God which any art or religion can boast of."
More recently, Fritjof Capra explained that "Modern physics has shown that the rhythm of creation and destruction is not only manifest in the turn of the seasons and in the birth and death of all living creatures, but is also the very essence of inorganic matter," and that "For the modern physicists, then, Shiva's dance is the dance of subatomic matter."
It is indeed as Capra concluded: "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics."

கடவுள் அணுவும் சிவனின் நடனமும்- குருமூர்த்தி

கடவுள் அணு என அழைக்கப்படும் நுண்மையான அணுவைப்பற்றி செய்தி சென்ற வாரம் ஹாட் நியூசாக இருந்தது. ஸ்விஸ்- ஃப்ரான்ஸ் எல்லையில் இருக்கும் செர்ன் ஆய்வகத்தில் இந்த கண்டு பிடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இது குறித்து குருமூர்த்தி கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் இருந்து சில பகுதிகள் ..

*****************************************


  • இந்த கண்டுபிடிப்புக்கு பிள்ளியார் சுழி போட்டவர் நம் நாட்டு விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ் என்ற இளைஞர். 1924ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஆராய்ச்சி கட்டுரை அனுப்பினார். அப்போது அவருக்கு வயது 309. அவரும் ஐன்ஸ்டீனும் செய்த ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட் என்ற கண்டு பிடிப்புதான் , இந்த கடவுள் அணு ஆராய்ச்சியின் ஆரம்ப புள்ளி
  • அதனால்தான் இந்த அணுவை ஹிக்ஸ்-போசான் என அழைக்கிறார்கள்
  • இந்த அணுதான் பிரபஞ்சத்தில் இருக்கும் தோற்றம் , பரிமாணம் சம்பந்தப்பட்ட எல்லா ரகசியத்திற்கும் , கேள்விகளுக்கும் விடை அளிக்கும். எனவேதான் செல்லமாக கடவுள் அணு என்கிறார்கள்.
  • “ இந்தியாதான் கடவுள் அணு கண்டு பிடிக்கும் முயற்சிக்கு தாய் என செர்ன் விஞ்ஞானிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பாளர் பாவ்லோ குபிலோனோ 2011ல் வெளிப்படையாக அறிவித்தார். 
  • செர்ன் விஞ்ஞான கூடத்தில் 6 அடி உய்ரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை ( நடனமாடும் சிவன் சிலை ) அமைக்கப்பட்டுள்ளது. சிவனின் நடனத்துக்கும் , உப அணுக்களின் நடனத்துக்கும் இடையேயான தொடர்பை ப்ரிட்ஜாப் காப்ரா எனும் பௌதீக விஞ்ஞானிமுதன் முதலாக கண்டு பிடித்து எழுதினார். இதை விரிவாக The Tao of Physics என்ற தலைப்பில்   புத்தகமாக எழுதினார். இது விற்பனையில் சாதனை படைத்தது. இந்த நூலின் சில வரிகள் அந்த விஞ்ஞா கூடத்தில் இருக்கும் சிலைக்கு அருகே பொறிக்கப்பட்டுள்ளன
  • காப்ராவுக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலமே நடராஜர் நடனத்துக்கும் , அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார்.
  • இந்த அபார கண்டுபிடிப்புக்காக போஸுக்கு நோபல் பரிசு கிடைத்து இருக்க வேண்டும் . ஆனால் அந்த பரிசை இத்தாலியர் ஒருவருக்கு வழங்கினார்கள். இந்தியாவும் அவரை பெரிய அளவில் கவுரவிக்கவில்லை. போனால் போகிறது என ஒரு பத்மபூஷன் விருதை வழங்கினார்கள்.


******************************************************

Monday, July 9, 2012

zorba சொல்லித்தரும் டாப் 8 விஷயங்கள்- உங்களை மாற்றி அமைக்கவல்ல புத்தகம்



  • ஒரு பெண் இயேசு மீது கொண்ட அன்பால் விலை உயர்ந்த தைலத்தால் அவருக்கு அபிஷேகம் செய்தாள். அதைக் கண்ட சிலர், இது வீண் செலவு. அந்த தைலத்தை விற்று ஏழைகளுக்கு உதவி இருக்கலாம் என்றனர். இயேசு இந்த கருத்தை மறுத்து பேசினார்.
  • கோயில் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதற்கு பதில் , அந்த பாலை மக்களுக்கு இலவசமாக தரலாம் என அவ்வப்போது சிலர் ஆலோசனை சொல்கின்றனர்.
  • சும்மா ஊர் சுற்றி பார்ப்பதை , வெளியூர் செல்வதை  தமிழர்கள் பெரும்பாலும்   விரும்புவதில்லை. ஏதேனும் வேலை இருந்தாலும் மட்டுமே பயணம் மேற்கொள்கின்றனர்.
  • இலக்கிய புத்தகங்களை விட நேரடி பலன் தரக்கூடிய புத்தகங்களே அதிகம் விற்பனை ஆகின்றன.

இது போன்ற பல உதாரணங்களை அன்றாடம் பார்க்கிறோம். எதற்குமே காரணம் தேவைப் படுகிறது. உணர்வு பூர்வமாக செய்வதை விட லாபம் தரக்கூடியதை செய்வதையே விரும்புகிறோம். 
உதாரணமாக ஒருவன் இரவு முழுதும் விழித்து வேலை செய்தால் , அவனை நம் மனம் உயர்வாக நினைக்கும், ஆனால் ஒருவன் இரவு முழுதும் விழித்து பவுர்ணமியை ரசிக்க நினைத்தால் , அவனை பைத்தியக்காரன் என்றே நினைப்போம்.

அறிவுபூர்வமாக வாழ்வதால் பலவற்றை இழக்கிறோம் என்பது ஒரு புறம்.

இன்னொரு வகை உண்டு.

என் நண்பர் ஒருவர் லீவு போட்டு விட்டு ஊட்டி சென்று வந்தார். அங்கு போய் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாக சொன்னார். அங்கு போய் என்ன செய்தார் ? ஒரு ரூம் போட்டு , நாள் முழுக்க குடித்து கொண்டு இருந்தாராம். அதை இங்கேயே செய்து இருக்கலாமே என நினைத்து கொண்டேன். அவர் வாழ்வை அனுபவித்தாரா அல்லது வாழ்க்கையின் சவாலை எதிர் கொள்ள முடியாமல் , ஊட்டிக்கு தப்பி சென்றாரா என்பது தெரியவில்லை.
அறிவு பூர்வமாக வாழ்ந்தாலும் இழப்புதான். உழைக்க பயந்து கொண்டு வேறு ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகி , அதுதான் மகிழ்ச்சி , அதுதான் உல்லாசம்   என நினைப்பதும் தவறுதான்.

சரி..அப்படியானால் பேலன்ஸ்டு லைஃப் என்பது என்ன ?

zorba the greek எனும் நாவல் இதற்கி விடை அளிக்கிறது

***************************************************************


கசான்ஸ்சாகிஸ் படைத்த நாவல்தான் இந்த “ ஜோர்பா எனும் கிரேக்கன் “ 

என்ன கதை?

அறிவு ஜீவியாக வாழும் ஒருவன் , வாழ்க்கையில் சலிப்புற்று தீவு ஒன்றுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறான். ( இவன் சொல்வது போல கதைப்போகு அமைந்துள்ளது )   கிட்டத்தட்ட இறந்து போன நிலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்துக்கு உயிர் கொடுத்து நடத்தி , தன் முத்திரையை பதிப்பது அவன் ஆசை. படகுக்காக காத்து இருக்கும் நேரத்தில் சோர்பா எனும் வயதானவரை சந்திக்கிறான். அவரது இசை, இனிய பேச்சால் கவரப்படுகிறான். அவர் தனக்கு வேலை போட்டு தந்து தன்னையும் அழைத்து செல்ல கோருகிறார். அவன் ஏற்கிறான்.

சென்ற இடத்தில் காதல் , மோதல் எல்லாம் நடக்கிறது. அவ்வப்போது முதலாளிக்கும் ( கதை சொல்லிக்கும் ) வேலையாளுக்கும் ( சோர்போ ) இடையே பல விஷயங்கள் குறித்து உரையாடல் நடக்கிறது.

சோர்போவை கவனிப்பது இவன் மனதில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது. வாழ்வை கொண்டாடுதல் என்பது முழுமையாக வாழுதலே என உணர்கிறான். சிறிய விஷயங்களை கூட அனுபவித்து ரசிக்கலாம் என்பது புரிகிறது.  எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருக்கும்போது , கையில் காசு இருக்கும் போது மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது பெரிய விஷ்யம் அல்ல. கடும் சோதனையின்போதும் , வாழ்வின் மீது நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும் என்பது புரிந்து ஊர் திரும்புகிறான். 

கதையை விட ஜோர்போவின் பாத்திர படைப்புதான் அபாரம். அன்றைய விமர்சகர்கள் எழுதினார்கள்.. story is plot-less . but it is not pointless.

இதை விட சுருக்கமாக இதை விமர்சிக்க இயலாது.. நாவல் என்ற முறையில் இதன் தகுதி சற்று சந்தேகிக்கப்பட்டு, நோபல் பரிசை இழந்தது. பிற்காலத்தில்தான் இந்த நாவலின் உன்னதத்தை உணர்ந்தார்கள்.

முதலில் படிக்கும்போது , சாதாரணமாகத்தான் தோன்றும். சில முறை படித்தால்தான் , இதில் ஒளிந்து கிடக்கும் விஷ்யங்கள் புரியும்..

**************************************************

இந்த நாவல் பல விஷயங்களை சொன்னாலும், என்னை கவர்ந்த டாப் 8 விஷ்யங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1 முழுமையாக வாழுங்கள்

       எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எதுவும்  ஈடாகாது. ஈடுபாட்டுடன் செய்ய முடியாத வேலையில் இருக்கும் பட்சத்தில் , கூடிய சீக்கிரம் வேறு வேலையை செய்ய ஆரம்பிப்பது நல்லது. 

              When I'm playing, you can talk to me, I hear nothing, and even if I hear, I can't speak.It's no good my trying. I can't!''But why, Zorba?''Oh, don't you see? A passion, that's what it is!'

2 உங்களை மட்டுமே நம்புங்கள்

          இன்றைய நண்பன் நாளைய எதிரி ஆகலாம். எல்லாமே மாறக்கூடியது  , மனிதர்கள் உட்பட. எதுவும் , யாரும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டுமே இதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. நேற்றைய நீங்களோ , நாளைய நீங்களோ கூட உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இன்று , இப்போது மட்டுமே இருக்கும் நீங்கள் மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் . ஆகவே இந்த கணத்தை முழுமையாக வாழுங்கள். 


I don't believe in anything or any one; only in Zorba. Not because Zorbais better than the others; not at all, not a little bit! He's a brute like the rest! But Ibelieve in Zorba because he's the only being I have in my power, the only one I know.All the rest are ghosts. I see with these eyes, I hear with these ears, I digest withthese guts. All the rest are ghosts, I tell you. When I die, everything'll die. The wholeZorbatic world will go to the bottom!'


3 பழமையின் கண் கொண்டு பார்க்காதீர்கள்.

ஒரு புத்தகத்தை படிக்கும்போதோ , ஒருவர் சொல்வதை கேட்கும்போதோ , உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த அனைததையும் மறந்து விட்டு , புதிதாக கேட்பது போல கேட்டால் , படித்தால் முழுமையான பலன் கிடைக்கும். சாலையில் செல்லும்போது , எப்போதும் செல்லும் பாதைதானே என அசட்டையாக செல்லாமல், விழிப்புணர்வுடன் சென்றால் , சாலை ஓரத்தில் மலர்ந்து இருக்கும் புதிய மலர் கண்ணில் படக்கூடும். 

Boss, did you see that?' he said at last. 'On slopes, stones come to life again.'I said nothing, but I felt a deep joy. This, I thought, is how great visionaries and poetssee everything - as if for the first time. Each morning they see a new world before theireyes; they do not really see it, they create it

Like the child, he sees everything for the first time. He is for everastonished and wonders why and wherefore

4  பயம் வேண்டாம்.

ஒரு கவிஞர் தன் காதலியை பற்றி வர்ணிக்கையில் “ வினை முடிதன்ன இனியள் “ என வர்ணிப்பார். ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுவது , காதலியுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பது போல இனிமையானது. மதுவைப்போல போதை தருவது.  இந்த நிறைவில் பயம் என்பதே இருக்காது. 


Throwing yourself headlong into yourwork, into wine, and love, and never being afraid of either God or devil ... that's whatyouth is!'


5   இந்த கணத்தில் வாழுங்கள்

கடந்த காலம் என்பதை வரையறுக்கலாம். எதிர்காலம் என்பதையும் வரையறுக்க முடியும். நிகழ்காலம் என்பதை மட்டும் வரையறுக்கவே முடியாது. நாம் அதைப்பற்றி நினைக்கும் முன்பே அந்த நிகழ் காலம் , கடந்த காலம் ஆகி இருக்கும். செய்யும் செயலில் முழுமையாக ஈடுப்பட்டு , அந்த செயலாகவே மாறி விடுவதே  நிகழ்காலத்தில் வாழ்வதாகும் . இதை விட சிறந்த தியானம் ஏதும் இல்லை 

What are you doing at this moment, Zorba?" "I'm sleeping." "Well, sleepwell." "What are you doing at this moment, Zorba?" "I'm working.' "Well, work well.""What are you doing at this moment, Zorba?" "I'm kissing a woman." "Well, kiss herwell, Zorba! And forget all the rest while you're doing it; there's nothing else on earth,only you and her! Get on with it


6   உலகத்தை நம்மால் மாற்ற முடியாமல் போகலாம். ஆனால் நம்மை மாற்றி கொள்ளலாம்.

          உலகம் அபத்தங்களால் ஆனது. எதிர்பாராமல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நாம் அவற்றை எப்படி கையாள்கிறோம் என்பதை நாம் கட்டுப்படுத்தலாம். 

One night on a snow-covered Macedonian mountain a terrible wind arose. It shookthe little hut where I had sheltered and tried to tip it over. But I had shored it up andstrengthened it. I was sitting alone by the fire, laughing at and taunting the wind. "Youwon't get into my little hut, brother; I shan't open the door to you. You won't put my fireout; you won't tip my hut over!"'In these few words of Zorba's I had understood how men should behave and what tone they should adopt when addressing powerful but blind necessity.I walked rapidly along the beach, talking with the invisible enemy. I cried: 'You won'tget into my soul! I shan't open the door to you! You won't put my fire out; you won't tip  me over!


7 அடிமையாகவும் வேண்டாம் , பயப்படவும் வேண்டாம்.

 ஒரு விஷ்யத்தை முழுமையாக செய்வதே அதில் இருந்து தப்பிக்கும் வழியாகும். சிகரட் பிடிக்க ஆசையாக இருக்கிறதா? ஆசை தீரும் அளவுக்கு புகைத்து தள்ளிவிட்டு , அடுத்த விஷ்யத்துக்கு நகர வேண்டும். ஒரே விஷயத்தில் கட்டுண்டு கிடப்பது ஆபத்தானது. ஒரு விஷ்யத்தை அனுபவிக்க பயந்து கொண்டு, ஏங்கி கொண்டே இருப்பது அபத்தமானது.

I'm going to do withmy books what you did with the cherries. I'm going to eat so much paper, it'll make mesick. I shall spew it all up and then be rid of it for ever


8 குழந்தைத்தனதை இழந்து விடாதீர்கள் 

எல்லாவற்றையும் கணக்கு பார்த்து செய்தால் , வெறும் மெஷினாகத்தான் இருப்போம். கொஞ்சம் பைத்தியகாரத்தனம் , குழந்தைத்தனம் தேவை. 


You're young, you have money, health, you're agood fellow, you lack nothing. Nothing, by thunder! Except just one thing - folly


********************************

கண்டிப்பாக படியுங்கள். உங்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொள்வார் zorba..   ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.. படிக்க படிக்க ஏராளமான விஷ்யங்கள்.

And when the body dissolves, does anything at all remain of what we havecalled the soul? Or does nothing remain, and does our unquenchable desire forimmortality spring, not from the fact that we are immortal, but from the fact that during the short span of our life we are in the service of something immortal?

Friday, July 6, 2012

நோட்ஸ் ஃபிரம் த அண்டர்கிரவுண்ட் - மனிதனின் இருப்பும் சவாலும்

   நண்பர் நிர்மலும் நானும் zorba the greek  நாவல் குறித்து , அப்போது படித்த்வற்றைப்பற்றி விவாதித்து கொண்டு இருந்தோம்.   ஒரு பாயிண்டை வலியுறுத்துவதற்காக தாஸ்தயேவ்ஸ்கியின்  notes from underground  நாவலின் முதல் அத்தியாயத்தில் இருந்து ஒரு பாயிண்டை எடுத்து அவர் பார்வைக்கு வைத்தேன்.

அதில் அவர் கன்வின்ஸ் ஆனோரோ இல்லையா , நான் கன்வின்ஸ் ஆகி விட்டேன் :) தொடர்ந்து அந்த அத்தியாயத்தை படித்தேன். அதன் பின் அடுத்த அத்தியாயம். நிறுத்த முடியவில்லை. நிறுத்த ஐடியா கேட்டேன். அதற்குள் அவர் zorba வில் ஆழ்ந்து விட்டார்.

இரவு முழுதும் கண் விழித்து படித்து முடித்தேன். சிறிய நாவல்தான் . ஆனால் மீண்டும் படிக்க வேண்டி இருந்தது.

தாஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் படித்து இருந்தாலும், இந்த நாவல் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

 இந்த நாவலில் வரும் சம்பவங்க்ளை அப்படியே நேரடியாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. உள்ளர்த்தத்தை தேடியாக வேண்டும். எனவே மீண்டும் மீண்டும் படிக்க வேண்டி இருந்தது.


   இந்த நாவல் எதைப்பற்றி பேசுகிறது ?


          ஒரு பேனா தயாரிக்க விரும்புகிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள். அந்த பேனாவின் பயன்பாடு என்ன ,,அது எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லாம்  முடிவு செய்து விட்டுதான் தயாரிக்க ஆரம்பிப்பீர்கள். அதாவது அதாவது அந்த பேனா உலகிற்கு வருவதற்கு முன்பே அதன் வாழ்வின் அர்த்தம் முடிவு செய்யப்பட்டு விட்டது.

        கிட்டத்தட்ட நாம் பார்க்கும் எல்லாமே அப்படித்தான். ஒரு கார் , கம்யூட்டர் , மரம் என எல்லாமே அதன் வாழ்வின் அர்த்தம் தெரிந்த பின்பே உருவாகின்றன.

இதை எல்லாம் பார்க்கும் நாம் , மனித வாழ்வுக்கும் ஏதோ அர்த்தம் இருப்பதாக நினைக்கிறோம். ஒரு செருப்பை தயாரிப்பவனே , தன் தயாரிப்புக்கு அர்த்தம் கொடுத்த பின் தான் தயாரிக்கிறான். அப்படி இருக்க , பகுத்தறிவு கொண்ட மனிதனை படைத்த இறைவனோ , இயற்கையோ கண்டிப்பாக மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கொடுத்துதான் படைத்து இருக்கும் என நம்புகிறோம். அல்லது முன் பிறவி பாவம் தீர்க்க பிறப்பதாக வாழ்விற்கு அர்த்தம் கொடுக்க முயல்கிறோம்.

ஆனால் நடைமுறையில் , வாழ்க்கை அபத்தமாகவும் , லாஜிக் இல்லாமலும் இருக்கிறது. அதாவது 150 சி சி பைக் , 100 சி சி பைக்கை விட சக்தி மிக்கதாக இருப்பது லாஜிக், ஆனால் மனித வாழ்க்கை அப்படி லாஜிக்காக இருக்காது,  புத்தி உள்ள மனிதன் தோல்வி அடையலாம். வெற்றி பெற்ற மனிதன் புத்தி சாலி இல்லாமல் போகலாம்.

இப்படி யோசித்தால் , மனிதன் எந்த நோக்கத்துக்காகவும் படைக்கப்படவில்லை.. தன் நோக்கத்தை , வாழ்வின் பொருளை அவனவன் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கோட்பாடு தோன்றியது. அப்படி வாழ்வுக்கான பொருளை உருவாக்குதல்தான் உலகில் ஒருவனின் இருத்தலுக்கான அடையாளம். உன் வாழ்க்கைக்கு நீயே முழு பொறுப்பாளி. அதாவது படைப்புக்கு பிறகுதான் , படைப்புக்கான அர்த்தம் .


 முன்பு பார்த்த உதாரணங்களுக்கு நேர் எதிர்.

ஆனால் நம் வாழ்வின் அர்த்தத்தை நாமே உருவாக்கி கொள்ளுதல் எளிதல்ல. நாம் அர்த்தத்தை மற்றவர்களே முடிவு செய்யவே முயல்வார்கள். யோசித்து பார்த்தால் , சமூகம் , பெற்றோர்கள் , குடும்பம் என பலரும் சில விதிகளை உருவாக்கி , ஒருவனை கட்டுப்படுத்தவே பார்ப்பார்கள். இதை எல்லாவற்றையும் மீறி , ஒருவன் தன் வாழ்வுக்கான அர்த்தத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இப்படி அதிகாரத்தை மீறுகிறேன் என சொல்லிக்கொண்டு வேறு வகை விதிகளை உருவாக்கி கொண்டு அதில் சிக்கி கொள்ள கூடாது.

  பெரிய பணக்காரன் ஆவது , புகழ் பெறுவது போன்றவைதான் வாழ்விற்கு அர்த்தம் கொடுப்பவை என நினைக்க கூடாது. Life is beautiful படத்தின் நாயகன் , நாஜிக்களின் சிறையில் இருந்தபோதும் , ஓர் அர்த்தம் உள்ள வாழ்வானே ..அது போல எந்த நிலையிலும் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கலாம். அல்லது பொருளற்ற வாழ்வை வாழ்ந்து முடிப்பதானாலும் ஓகே.. அவரவர் விருப்பம். 

இப்படி தன்னையும் , தான் சார்ந்த உலகத்தையும் வரையறை செய்து ஆதற்கு அர்த்தம் கொடுக்க முயன்ற ஒருவரின் கதைதான் நோட்ஸ் ஃபிரம் அண்டர்கிரவுண்ட்.
கதா நாயகன் தன் கதையை தானே சொல்வது போன்ற பாணியில் கதை அமைந்துள்ளது. ஆனால் இந்த கதா நாயகன் , தான் கிடையாது என தாஸ்தயேவ்ஸ்கி ஆரம்பத்திலேயே உணர்த்தி விடுகிறார். கதா நாயகனின் சில கருத்துகளில் அவர்க்கு உடன்பாடு இருக்கலாம். ஆனால் இது அவரைப்பற்றிய கதை இல்லை.

தான் பெரிய வீரன், அழகன் என கதை சொல்ல ஆரம்பிக்காமல் ,


I am a sick man. ... I am a spiteful man. I am an unattractive man. I believe my liver is diseased. However, I know nothing at all about my disease, and do not know for certain what ails me.

என்று ஆரம்பிக்கும்போதே அட என தோன்றுகிறது. உலக இலக்கிய / சிந்தனை போக்கையே மாற்றி அமைத்த நாவலின் முதல் வரிகளை படித்து கொண்டு இருக்கிறோம் என்பதை நன்றாக உணர முடிகிறது.


 நோயுற்ற , வயதான , தனிமையில் வாழும் ஒருவர் தன்னைப்பற்றி வெறுப்புடன் சொல்லிக்கொள்ளும் இந்த பாணி நாவல் முழுதும் தொடர்கிறது. முதல் பகுதியில் இவரது சிந்தனைகள் , டைரி குறிப்புகள் போல தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இவரைப்பற்றிய மன சித்திரம் தெளிவாக கிடைக்கிறது. இரண்டாம் பகுதியில்தான் , நாம் வழக்கமாக படிக்கும் கதை நடக்கிறது.


When petitioners used to come for information to the table at which I sat, I used to grind my teeth at them, and felt intense enjoyment when I succeeded in making anybody unhappy


It was not only that I could not become spiteful, I did not know how to become anything; neither spiteful nor kind, neither a rascal nor an honest man, neither a hero nor an insect



இப்படி தன்னைப்பற்றிதாழ்வாகவே சொல்லிக்கொள்ளும் இவரிடம் இருக்கும் ஒரே ஒரு பிளஸ் பாயிண்ட் , இவரது அறிவாற்றல்தான் , ஆனால் இந்த அறிவாற்றல்தான் இவரது பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் சொல்கிறார்.


   தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தை தேடும் இவர் ஒரு கட்டத்தில், தன் வாழ்க்கைக்கு எந்த பொருளும் இல்லையோ என்ற பீதிக்கு ஆளாகிறார். கஷ்டத்திலேயே உழலும் நிலை வரும்போது , அதையே ஒரு கட்டத்தில் எஞ்சாய் நிலைக்கு வருவது போல, தன்னையே ஆறுதல் படுத்தி கொள்கிறார்.

” முட்டாள்கள் மட்டுமே எதைப்பற்றியும் தீர்மானமாக கருத்து சொல்லி , உறுதியாக செயலாற்ற முடியும். அறிவாளிகளுக்கு எது குறித்தும் சந்தேகமே இருக்கும் :” என சொல்லி தன் செயலின்மைக்கு நியாயம் கற்பிக்கிறார்.


oh, if I had done nothing simply from laziness! Heavens, how I should have respected myself, then. I should have respected myself because I should at least have been capable of being lazy; there would at least have been one quality, as it were, positive in me, in which I could have believed myself.

தனக்கான வாழ்க்கையை தானே வரையறை செய்யும் ஆசை ஒரு புறம் ,  வாழ்க்கையின் சவாலை எதிர்கொள்ள ஏற்படும் பயம் ஒரு புறம் , சித்தாத்தங்களுக்கும் ய்தார்த்தத்துக்கும் ஏற்படும் முரண்பாடுகள் , செயலின்மையில் நம்மை தள்ளுவதை அருமையாக சித்திரித்து இருப்பார் தாஸ்த்தயேவ்ஸ்கி. நடப்பது நடக்கட்டும் என்ற சரணாகதி மனப்பான்மை

இந்த கட்டத்தில் இரண்டாம் பாகம் தொடங்குகிறது. சிந்தனை பகுதி முடிந்து செயல்பகுதி ஆரம்பிக்கிறது. உலகத்துடன் தொடர்பு கொள்ள முயன்றபோது என்ன ஆயிற்று என்பதை சொல்கிறது இரண்டாம் பகுதி.

கதை சொல்லியின் இருப்பையே புறக்கணிக்கும் ஓர் அதிகாரி. அவனை ஓர் ஆளாகவே அவர் மதிப்பதில்லை.. இந்த கொடுமையின் உச்சம் என்னவென்றால் , இவன் ப்ழிவாங்க முனையும்போது, அதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை.

சில நண்பர்களுடன் விருந்துக்கு செல்கிறான். அவர்களுடன் நல்ல உறவு இல்லாதிருந்தபோதும் கூட , தானும் வருவதாக சொல்லி  விருந்துக்கு செல்கிறான் . குறித்த நேரத்தில் சென்று விடுகிறான். ஆனால் விருந்தின் நேரம் மாற்றப்பட்டதை இவனுக்கு சொல்ல மறந்து விடுகிறார்கள். இதனால் ஏற்பட்ட கசப்பு அடுத்தடுத்த சம்பவங்களால் பெரிதாகிறது. அவர்களுடன் இவனால் ஒட்ட முடியவே இல்லை.

தனித்துவத்தை பேண வேண்டிய ஆசை, அதே சமயம் ஒரு குழு அல்லது இனத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ள ஏற்படும் துடிப்பு என்ற இருமை நிலை அபாரமாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.

அங்கே லிசா என்ற பாலியல் தொழிலாயை சந்திக்கிறான். அவளுடன் அன்பாக பேசுகிறான். முதல் முறையாக காதல் பற்றியெல்லாம் பேசுகிறான். அவன் பேச்சில் அவளும் ஈடுபாடு காட்டுகிறாள். அவனை பார்க்க மீண்டும் வருகிறாள்.
இவன் மீண்டும் பழைய பாணிக்கு மாறி கசப்பான , வெறுப்பான மனிதனாகிறான். அவளை அவமானப்படுத்துகிறான்.

அவள் சோகத்துடன் அவன் வாழ்க்கையை விட்டு பிரிகிறாள்.

 நம் பார்வைக்கு அவன் வாழ்க்கையில் , அனைத்து விதங்களிலும் தோற்று விட்டான் என தோன்றுகிறது. ஒரு நல்ல பெண்ணை இழந்தது வீழ்ச்சியின் உச்சம் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் அவனுக்கு அது வெற்றியே.. அவன் தன்னைப்ப்பற்றியும் , உலகத்தை பற்றியும் புரிந்து கொண்டு விட்டான். தான் யார் என அவனால் வரையறை செய்து கொள்ள முடிகிறது.  அதே போல அவனை பொருத்தவரை உலகம் என்றால் என்ன என்பதற்கான அர்த்தமும் அவனுக்கு பிடிபடுகிறது.

   இதை விட வேறு என்ன வேண்டும் அவனுக்கு.

   தன் தனி உலகில் ( அண்டர்கிரவுண்ட் ) இருந்து  கொண்டே  ,  அதை கைவிட மனம் இல்லாமலேயே , வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள விரும்பிகிறான். அதில் இருந்தே வெளி உலகத்தை பார்க்கிறான் என்பது முக்கியமான குறியீடு.

இதன் முடிவு இன்னும் ஆழமானது. எழுதுயது போதும் என டைரி குறிப்பை முடிக்க விரும்புகிறான். ஆனால் இந்த எளிய விஷய்த்தை கூட அவனால் செய்ய முடியவில்லை. முடிக்க முடிவு செய்த பின்பும் எழுதிகொண்டே செல்கிறான். ஆனால் நாம் இத்துடன் முடித்து கொள்வோம் என  நாவலாசியர்  நாவலை முடிக்கிறார்.

 ஒரு மனிதனின் இருப்பை , போராட்டத்தை , உலகின் புரிதலை இவ்வளவு ஆழமாக அதே சமயம் சுருக்கமாக சொன்ன நாவல் வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை


 நாவல் பெயர்    - Notes from the underground
 எழுதுயவர்         - தாஸ்தயேவ்ஸ்கி
  வெர்டிக்ட்          - ultimate




Wednesday, July 4, 2012

லட்சமா , ஆயிரமா? கவனித்ததில் கவர்ந்தவை - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

பிச்சை எடுப்பது உவப்பான ஒன்றல்ல..ஆனால் இதன் பொருட்டு அலைவது ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் தரக்கூடியது. 

இப்படி அன்றாடம் காணும் காட்சிகளில் ரசித்த சிலவற்றை அவ்வப்போது பகிரலாம் என நினைத்து இருக்கிறேன்.

இதோ நான் ரசித்தவற்றில் சில....

1. நூலகத்துக்கு எப்படி எல்லாம் பிரச்சினை பாருங்கள் 



இந்த அறிவிப்பு பலகையிலேயே நம் ஆட்கள் கை வரிசை காட்டி இருப்பதால், அதை சென்சார் செய்து இருக்கிறேன்..



                       2 தமிழுக்கு ”பெறுமை ” சேர்க்கும் தமிழ் காதலர்கள் 






                                   3 கோடையை முடித்து வைத்த ஒரு மழை பொழுது 




                              4 கோடை முடிந்தவுடன் தான் சூரியனை பயமின்றி ரசிக்க முடிகிறது 






5 ஒரே நிகழ்வு - செய்திகள் வெவ்வேறு - லட்சங்களா , ஆயிரங்களா 





Sunday, July 1, 2012

நெய்வேலி புத்தக கண்காட்சி - ஒரு விசிட்

 நெய்வேலியில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடந்து வந்தாலும் , இதுவரை நான் சென்றதில்லை. தேவையான புத்தகங்களை சென்னையிலேயே வாங்கி கொள்ளலாமே என்ற எண்ணம் , நெய்வேலி செல்ல தடையாக இருந்தது.

ஆனால் இந்த முறை செல்ல வேண்டும் என்று தோன்றியது.  அங்கு புத்தக கண்காட்சி எப்படி நடக்கிறது என பார்க்க விரும்பினேன். நானும் ஒரு நண்பரும் ( பதிவுலகத்தில் இல்லாத நண்பர் ) செல்ல முடிவு செய்தோம்.

காலை சீக்கிரமே எழுந்து , ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தோம்.  நெய்வேலி பேருந்தில் ஏற இருந்த என்னை , நண்பர் சற்று தடுத்து நிறுத்தி , பயணத்தில் சிறு மாறுதல் செய்தார்.

நெய்வேலிக்கு , பாண்டிச்சேரி வழியாக சென்றால்தான் நல்லதாம். அவர் சதித்திட்டம் புரிந்தது.  நேரம் அதிகமாகும்தான். சரி, ஈ சி ஆர் சாலையில் ஜாலியாக செல்லும் திருப்தி எனக்கு கிடைக்கும்,..பாண்டி செல்லும் திருப்தி அவருக்கு கிடைக்கும்.. ஓகே என்றேன்.

அதன் பின் பாண்டி சென்று அவர் கடமைகளை முடித்து விட்டு நெய்வேலி சென்றபோது இரண்டு மணி. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து , நூலக வளாகத்துக்கு பேருந்து வசதி இருக்கிறது.





சென்னையில்  நகர  நெரிசலில் புத்தக கண்காட்சியை கண்ட நமக்கு அமைதியான சூழலில் ஒரு கண்காட்சியை பார்ப்பது  புது அனுபவமாக இருந்தது.  நான் கவனித்த வகையில் சும்மா வேடிக்கை பார்க்க வந்தவர்கள் குறைவே,, உண்மையிலேயே படிப்பில் ஆர்வம் இருப்பவர்களே பெரும்பாலும் வந்து இருந்தனர். இதனால் தேவையற்ற கூட்டம் இல்லை.

மற்ற ஊர்களை விட நெய்வேலியில் வாசிப்பவர்கள் சதவிகிதம் அதிகம். அந்த ஊரின் தன்மை அப்படி.

முக்கியமான பதிப்பகங்களின் ஸ்டால்கள் இருந்தன. ஆனாலும் சில முன்னணி பதிப்பகங்களை காண முடியவில்லை. சென்னையை ஒப்பிட்டால் , ஸ்டால்களின் எண்ணிக்கை மிக குறைவுதான், ஆனாலும் புத்தகங்கள் அதே அளவுதான் இருக்கும். காரணம் சென்னையில் ஸ்டால்கள் பல இருந்தாலும் , ஒரே  வகை புத்தகங்கள்தான் பல ஸ்டால்களை பி( பீ )டித்து இருக்கும் . ஆன்மீகம் , சமையல் , அழகு குறிப்ப்புகள் , சுஜாதா , ரமணி சந்திரன் போன்றவை.

 நெய்வேலி கண்காட்சியில் இந்த பிரச்சினை இல்லை. எனவே தேவையானவ்ற்றை தேடி எடுக்க வசதியாக இருந்தது.

 தஞ்சை பல்கலை , அண்ணாமலை பல்கலை போன்றவற்றின் ஸ்டால்கள் என்னை கவர்ந்தன, பண்டைய தமிழ் நூல்களில் இரும்பின் பயன்பாடுகள் பற்றிய குறிப்புகள் இருப்பதை பற்றிய ஒரு புத்தகம் ஆச்சரியப்படுத்தியது. அதே போல பிற்கால சோழர் வரலாறு புத்தகமும் கவனிக்க வைத்தது.


 சில ஸ்டால்களில் ஆங்கில நாவல்களை மிக மலிவான விலைக்கு கொடுத்து கொண்டு இருந்தார்கள். பலர் ஆர்வமாக வாங்கி சென்றதை கவனிக்க முடிந்தது.

அதே போல ஆன்மிக ஸ்டால்களிலும் பயங்கர கூட்டம்.  இஸ்லாமிய புக் ஸ்டால்களில் , மாற்று மதத்தவர்களை அதிகம் காண முடிந்தது சந்தோஷமாக இருந்தது.

சாரு புத்தகம் ஆண்டுக்கு எட்டுதான் விற்கிறது என கணக்கு காட்டி ஏமாற்றிய பதிப்பகம் , சாருதான் தன் டிரம்ப் கார்ட் என உணர்ந்து அவர் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டிஸ்ப்ளே செய்து இருந்தது..

கண்காட்சிகளின் ஹீரோவான லிச்சி ஜூசும் இடம் பெற்று இருந்தது, நான் அந்த பகுதியில்தான் அதிகம் சுற்றினேன்.


ஓ ஹென்றி சிறுகதைகள்  வாங்கி பேருந்தில் சென்னை வருவதற்குள்ளாகவே படித்து விட்டேன். வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் விரைவில் படிக்க வேண்டும்.

கார்ப்பரேட் சாமியார்கள் ஸ்டால்களில் வழக்கமான கூட்டம் இல்லை. சில கார்ப்பரேட் சாமியார்களின் ஸ்டால்களையே காண முடியவில்லை .
பணக்க்காரன் ஆவது எப்படி போன்ற புத்தகங்களுக்கும் முன்பு இருந்த ஆதரவு இல்லை. அதே நேரத்தில் இலக்கிய புத்தகங்களை கேட்டு வாங்குகிறார்கள்..
 நல்ல மாற்றம்தான்.

எட்டாம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. நேரம் கிடைத்தால் போய் வாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா