Tuesday, February 26, 2013

நாஞ்சில் நாடனின் மறக்க முடியாத படைப்பு - “ மாமிசப் படைப்பு “


சில கதைகளை படிக்கும்போது , இதை சினிமாவாக எடுத்தால் சூப்பராக இருக்குமே என நினைப்போம்.  சமீபத்தில் ஒரு கதையை படிக்கையில் சினிமாவாக எடுக்க தேவையே இல்லாமல், ஒரு சினிமா பார்த்த எஃபக்ட் கிடைத்தது.

 நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு  என்ற படைப்பைத்தான் சொல்கிறேன்.

மிக சிறிய நாவல் . குறு நாவல் என சொல்லலாம் என நினைக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு பாத்திரப்படைப்பு சிறப்பாக அமைந்த நாவல்கள் வெகு குறைவு. அதே போல நாஞ்சில் மண்ணை , வயல் சார்ந்த வாழ்க்கையை கண் முன் நிறுத்தும் நாவல்களும் வெகு குறைவுதான்.

படிக்க வெகு சுவையாக நாவல் செல்கிறது. கடைசியில்  ஓர் அதிர்ச்சியுடன் முடிகிறது. அந்த முடிவு ஏற்படுத்தும் சிந்தனை நாவலுக்கு அப்பால் விரிகிறது.

கந்தையா என்ற கேரக்டரை அறிமுகப்படுத்துவது , நம் தமிழ்  சினிமா கதா நாயகர்களை அறிமுகப்படுத்தும் காட்சிகளை விட பல மடங்கு அபாரமாக இருக்கிறது . இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்தால் , சினிமாவில் நிலவும் கற்பனைப்பஞ்சம் கண்டிப்பாக தீரும் என்றே நினைக்கிறேன்.

கந்தையா, கங்காதரம்பிள்ளை , சோணாச்சலம், காமாட்சி, விக்கிரம்சிங்கம் பிள்ளை, சடைய்யப்ப பிள்ளை பூசாரி , குற்றாலம்பிள்ளை , சாந்தப்ப்ன் , மாலையப்ப பிள்ளை , மாணிக்கம் , ”தீவட்டி ” ரங்கையா , ”லாயர் ” சின்னம்பிள்ளை  என ஒவ்வொரு கேரக்டரும் மனதை விட்டு அகலுவதில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் நாஞ்சில் நாடன்.

கடைசி பக்கங்களில் அறிமுகம் ஆகும் பொன்னுவைக்கூட மறக்க முடியாது.

வளர்ச்சி பெற்ற எந்த ஒரு சமுதாயத்தை ஆராய்ந்து பார்த்தாலும் , அதன் வளர்சுக்கு உரமாக சிலர் களப்பலி ஆகி இருப்பார்கள். சிலரது தியாகத்தால்தான் வளர்ச்சி நிகழ்ந்து இருக்கும். செழிப்பான தோட்டத்துக்கு அடி உரமாக சிலர் தம்மை பலி கொடுத்து இருப்பார்கள்.

இதைத்தான் குறியீடாக மாற்றி , பலி கொடுத்தல் போன்ற சடங்குகளை உருவாக்கினார்கள். எல்லா கலாச்சாரங்களிலும் இது உண்டு .

மாமிசப்படைப்பு என்ற குறியீடு , உண்மையாக மாறும் உக்கிரமான தருணம் மிக சிறப்பாக இதில் வந்து இருக்கிறது.

சிலர் தம் உழைப்பால் உருவாக்கும் தோட்டத்தை சிலர் பொறாமையால் அழிப்பதும் , அழிவில் இருந்து அவர்கள் மீண்டு வருவதும் , ஒரு தலைவன் அவர்களை வழி நடத்துவதும் - உலகம் எங்கும் இதுதானே நடக்கிறது.

      அடக்குமுறைகள் , சுரண்டல்கள்களும் , அதற்கு எதிரான போராட்டங்களும்  உலகெங்கும் நடப்பதுதான். இதைப்பற்றிய எழுத்துகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் பிரச்சார நெடி சிறிதும் இன்றி எழுதப்பட்ட அழுத்தமான நாவல் என்ற்வகையில் இது முக்கியமான நாவல் என நினைக்கிறேன்.

நாஞ்சில் நாட்டி வாழ்க்கை முறை , உணவு வகைகள், தானிய , பழ வகைகள் என இன்ஃபார்மட்டிவாக நாவல் செல்வதால் சுற்றுலா செல்லும் எண்ணத்தில்தான் படிக்கிறோம். மெல்லிய நகைச்சுவை வாசிப்பை இனிமையாக்குறது.

கடைசியில்தான் ஒரு  ட்விஸ்ட், சிறுகதை போல. ஒட்டு மொத்த நாவலுமே வேறோர் அர்த்தம் பெறுகிறது.

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

தலைப்பு : மாமிசப்படைப்பு

ஆசிரியர்  : நாஞ்சில் நாடன்

வெர்டிக்ட் : மாமிசப் படைப்பு -   மறக்கமுடியாத படைப்பு 

Friday, February 15, 2013

பசியை தூண்டி விட்ட “ உறுபசி”- எஸ் ராவின் மாஸ்டர் பீஸ்





எஸ்.ரா எழுத்துகளில் என்னைக் கவர்ந்தவை அவர் சிறுகதைகள்தான். அவற்றையும்விட அவரது கட்டுரைகளும் , உரைகளும் மிகவும் பிடிக்கும். அதற்குப்பின்புதான் அவர் நாவல்கள்.

உறுபசி நாவலை நான் படிக்க காரணம் அதன் சுருக்கமான வடிவம்தான். வெறும் 135 பக்கங்கள்தான்.  சும்மா புரட்டிப்பார்ப்போம் என எடுத்தேன். ஆனால் முதல் வரியிலேயே நாவல் என்னை உள் இழுத்துவிட்டது.

முன்பெல்லாம் , ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை முதல் 15 ஓவர்கள் சும்மா வார்ம் அப் செய்து கொள்வார்கள் . அதன் பின்புதான் ஆட்டம் சூடு பிடிக்கும். ஆனால் இலங்கையின் ஜெயசூரியாவும் , கலுவித்தரனேயும் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து , முதல் பந்திலேயே ஆட்டத்தை துவக்கும் பாணியை உருவாக்கி , உலக கோப்பையும் தட்டி சென்றனர்.

அது போல முதல் வரியிலேயே அதிரடியாக ஆரம்பிக்கிறது நாவல். சம்பத் என்பவன் இறந்து விடுகிறான். அவன் இறப்பின் வலியை மறக்கும்பொருட்டு அவன் நண்பர்கள் மூவர் , பரிச்சயம் இல்லாத ஓர் இடத்துக்கு ( வனத்துக்கு ) சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.

ஒரு பொருள் இல்லை என்று ஆகிவிட்ட பின்புதான் அதன் இருப்பு நம் கவனத்துக்க்கே வரும். அதன் இல்லாமையை உணர ஆரம்பிப்போம். அது போல சம்பத் இறந்த பின்பு , அந்த மூவரின் நினைவுகள் மூலம் சம்பத்தின் இருப்பை அல்லது இல்லாமையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.  

ஒருவனை இன்னொருவர் நினைவுகள் மூலம் அறிந்து கொள்வது சாத்தியமா.. ஒருவனின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில்தான் இன்னொருவனை நினைவில் கொள்வான். எனவே இந்த வகையில் இன்னொருவனை புரிந்து கொள்ள இயலாது. சம்பத்தை நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்க கூடும். ஆனால் அப்படி பார்த்தால் , நம் விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான் அவனை புரிந்து கொள்வோம். ஆக இதிலும் துல்லியமான புரிதல் நிகழாது. எனவே சம்பத்தை புரிந்து கொள்வதை விட , நம்மை புரிந்து கொள்வதே முக்கியமாகி விடுகிறது.

இந்த நாவலை படித்து முடிக்கையில் இந்த சுயதரிசனம்தான் ஆரம்பிக்கிறது.

ராம துரை , அழகர் , மாரியப்பன் மற்றும் கதை நாயகன் சம்பத் ஆகிய நால்வரும் கல்லூரியில் ஒன்றாக தமிழ் இலக்கியம் படித்தவர்கள். மற்ற மூவரும் சூழ் நிலை காரணமாக இலக்கியம் படிக்க, சம்பத்தோ ஆர்வம் காரணமாக படிக்கிறான்.  இலக்கியம் , நாத்திக வாதம் , காதல் , காமம் , தொழில் , லாட்டரி சீட்டு என பலவற்றில் தீவிரமாக ஈடுபட்டு  , அந்த தேடல் எனும் நெருப்பில் எரிந்தும் போகிறான்.

இளம் வயது தேடல்களின் , லட்சியங்களின்  ஆர்வத்தின் அர்த்தமின்மை “  ஒரு கட்டத்தில் புரிந்து விட , ஏதோ ஓர்  இடத்தில் செட்டிலாகி விடும் யதார்த்த “  வாழ்வில் மற்ற மூவரும் பயணிக்கிறார்கள்.

யதார்த்த வாழ்வில் தோல்வி அடைந்து விட்டவன் என அவன் மேல் பரிதாபப்படுவதா அல்லது உண்மையான வாழ்வை வாழ்ந்து பார்த்தவன் என்ற வகையில் அவன் மேல் பொறாமைப்படுவதா என்பதில் அவர்களுக்குள்ளேயே குழப்பம்தான் இருக்கிறது . அவரவரர் மன நிலைகளுக்கு ஏற்ப அவனை புரிந்து கொள்கின்றனர்.


கதையில் ஆசிரியர் கூற்று வெகு வெகு குறைவே. எனவே சம்பத் எப்படிப்பட்டவன் என ஆசிரியர் தன் கருத்தாக எதையும் வற்புறுத்தவில்லை. ஆசிரியர் இறந்து விடுகிறார்.

முழுக்க முழுக்க மற்றவர்கள் மூலம்தான் சம்பத் குறித்த சித்திரங்கள் நமக்கு கிடைக்கின்றன. நான் லீனியர் பாணியில் , முன்னும் பின்னுமாக நகர்ந்து ஒளித்துண்டுகளாக சம்பத் குறித்தும் , வாழ்க்கை குறித்தும் ஒர் பார்வை கிடைக்கிறது. 

இந்த ஒளித்துண்டுகளை மொத்தமாக எடுத்து குலுக்கி கலக்கி ஒன்று சேர்ந்து பார்த்தால் கிடைக்கும் சித்திரம் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. எனக்கு ஒரு வகையாக தோற்றம் அளிக்கலாம். உங்களுக்கு ஒரு வகையாக தோற்றம் அளிக்கலாம். 

பொதுவாக நாவல்களில் சம்பவங்கள் நிகழும். இதில் கொஞ்சம் வித்தியாசமான நடையை பயன்படுத்தி இருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இதில் சம்பவங்கள் நிகழ்வது குறைவே.. ஏற்கனவே நடந்ததை சொல்வதைபோன்ற நடை. உரையாடல்கள் எல்லாம் indirect speech. இந்த பாணியில் சிறுகதை எழுதலாம். ஆனால் நாவல் எழுவது கடினம். ஆனால் இந்த கதைக்கு இந்த நடை மிக கச்சிதமாக பொருந்தி போகிறது. மிக கவனமாக கன்சிஸ்டெண்டாக இந்த பாணியை , இலக்கணத்தவறுகள் ஏதேனும் செய்யாமல் , கையாண்டு இருக்கிறார் எஸ் ரா.

 நண்பர்கள் மூவரைதவிர , இரு பெண்கள் மூலமும் சம்பத்தின் நினைவுகள் உயிர் பெறுகின்றன.  சம்பத்தின் மனைவி மற்றும் பழைய தோழி யாழினி.  எளிமையான மனம் கொண்ட மனைவி சம்பத்தை எப்படி பார்க்கிறாள், ” உலக ஞானம் மிக்க யாழினி எப்படி பார்க்கிறாள் எப்படி பார்க்கிறாள் என்பது அற்புதமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. 


    சம்பத்தைப் பற்றி பல்வேறு சம்பவங்கள் சொல்லப்படுகின்றன, இவை எல்லாவற்றுக்கும் மையச்சரடு ஒன்றே ஒன்றுதான்.

PASSION - தீராத பசி - ஆர்வம் -  தேடல் 

 நாத்திகவாதம் எனும் லட்சியக்கனவு , காதல் , காமம் , லாட்டரி சீட்டு , தொழில் என ஒவ்வொன்றிலும் மிக தீவிரமான ஈடுபட்டுவிட்டு , அதை வாழ்ந்து விட்டு , அதில் உச்சத்தை தொட்டு விட்டு , அதில் இருந்து வெளியே வருகிறான் சம்பத்.

சிறு வயதில் , ஒரு சாதாரண ஆடைக்காக, சண்டையிட்டு  சித்ராவின் மரணத்துக்கு காரணமாகிறான் சம்பத். தான் யார் என்பதை அவனுக்கு உணர்த்திய முதல் சம்பவமாக அது இருக்க கூடும்., ஆடை என்பது முக்கியமில்லை , அந்த வெறி..

ஒரு கட்டத்தில் தீவிரமாக யாழினியை காதலித்தாலும் , அவள் புறக்கணிப்பு அவனை பாதிக்கவில்லை. இன்னும் சொல்லப்ப்போனால் , புறக்கணிப்பை உணரக்கூட இல்லை. மேடைப்பேச்சு என்பதில் அடுத்த ஆர்வம் செல்கிறது. ஒரு கட்டத்தில் அதையும் கடந்து வருகிறான்.

ஒரு விஷ்யத்திற்கு அடிமையாக இருப்பது வேறு. ( டாஸ்மாக் வாசலில் குடித்து விட்டு  படுத்து இருப்பார்களே - _) 

 அதை ஆண்டு அனுபவித்து அதில் இருந்து வெளியே வருவது வேறு.

ஆனால் வெற்றியாளர்கள் “  “ யதார்த்தவாதிகள் இந்த இரண்டு  வகையிலும் இருக்க முடியாது . ஆசைகளை அடக்கிகொண்டு , காம்பரமைஸ் செய்து கொண்டு, பொருளாதார ரீதியாக பலனளிக்கும் செயல்களில் மட்டும் கவம் செலுத்துபவர்களே பிழைக்க தெரிந்தவன் , புத்திசாலி. 

சம்பத் நண்பர்கள் இப்படி புத்திசாலிகளாக இருந்தாலும் , ஏதோ  ஒன்று குறைவதாகவே உணர்கிறார்கள். இந்த குறையை ஈடுகட்டத்தான் வீக் எண்ட் கொண்டாட்டங்கள் . பார்ட்டிகள். சம்பத்துடன் சேர்ந்து ஊர் சுற்றுதல்.

ஆனால் சம்பத்துக்கு வீக் எண்ட் கொண்டாட்டம் எல்லாம் தேவைப்படவில்லை.  அவனை பொருத்தவரை ஒவ்வொரு கணமுமே முழுமையாகத்தானே வாழ்ந்தான்.

ஆனால் வெளிப்பார்வைக்கு அவன் தோல்வியுற்றவன். 

இந்த முரண் தான் உறுபசி..

தீக்குச்சி நடனம் ...கடலில் மல்லிகையை எறியும் குறியீடு... திக்கு தெரியாத இடத்தில் , காசு இல்லாமல் நண்பர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். கையறு நிலை.. எதிர் பாராத விதமாக எப்படியோ, சம்பத் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு , டிக்கட்டும் வாங்கி விடுகிறான்.  பயணத்தின்போது கேஷுவலாக , கேட்கிறான். கடவுள் இருப்பதை நீ நம்புகிறாயா ....  இந்த இடம் என சொல்லிக்கொண்டே போகலாம்.. ஒரு சின்ன நாவலில் எத்தனையோ சம்பவங்கள்...  


கண்டிப்பாக படியுங்கள்


பசி என்பது வரமா . சாபமா என்ற கேள்வியை எழுப்புகிறது உறுபசி... எஸ் ராவின் மாஸ்டர் பீஸ் என்றே நினைக்கிறேன்.. 

வெர்டிக்ட்  :  உறுபசி -   பசியை கிளறிவிடுகிறது 


பிடித்த வரிகள் 
  • திருனீறு பூசிக்கொண்டால் சாவில் இருந்து தப்பி விடலாம் என்பது சற்றே ஆறுதல் தருவதாக இருந்தது.
  • அந்த கயிறை போலத்தான் , நாம் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருக்கிறோமா. பூரான் ஊர்வது போல  மனதில் பயம் நெளியதொடங்கியது.
  • லைட்டர்களில் எரியும் நெருப்பு , தீக்குச்சிபோல நெருக்கம் தரவில்லை. உலகில் எல்லா தீக்குச்சிகளும் பதட்டமாகவே எரிகின்றன. நுனி வரை எந்த தீக்குச்சியும் எரிந்து நான் பார்த்ததே இல்லை.
  • பசுமையின் கோப்பைக்குள் விழுந்து கிடப்பது போல , நாங்கள் நின்று கொண்டு இருந்தோம்.
  • ஒரு மெழுகு வர்த்தி இருட்டில் தனியே ஒளிர்ந்து கொண்டு இருப்பதைப்போல , நம் வகுப்பை ஒளி விட செய்து கொண்டு இருக்கிறாள். அந்த வெளிச்சத்தில் கரைந்து போக நாம் முன் வரவே இல்லை.
  • அடிபட்டு காயம் உலராத மிருகம் போல சுற்றிக்கொண்டே இருந்தான்.
  • நான் ஒரு தக்கை. கிணற்றில் , ஆற்றில், கடலில் என எதில் தூக்கிப்போட்டாலும் மிதக்கும் தக்கை.எல்லோரும் என்னை சேர்ந்து அமுக்கினாலும் மூழ்காத தக்கையாகவே இருக்கிறேன். 
  • ராமதுரை கணக்கு வழக்குகளை சிகரட் அட்டையில் எழுதிக்கொண்டு இருந்தான். மாரியப்பன் சோளக்கதிர் தின்று கொண்டு இருந்தான். நான் சன்னாசியிடம் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்கிறான் என கேட்டுக்கொண்டு இருந்தேன்.
  • சில பக்கங்களில் அக்பர் , பாபர் , ஷேக்ஸ்பியர் , தொல்காப்பியர் என ஏதேதோ பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. தொலைபேசி இலக்கங்களாக விசித்தரமான எண்கள் இடம் பெற்று இருந்தன.
  • செடிகள் தம் விருப்பம் போல வாழ்கின்றன. இயற்கை யாரிடமும் எதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு செடியும் தனித்துவமான இலையமைப்பை, பூக்களை , வாசனையை கொண்டுள்ளன. ஓர் இலை எந்த பக்கம் அசைய போகிறது  என யாருக்கு தெரியும். ? எனக்கு செடிகள் மிக மிக ஆச்சர்யம் அளிக்கின்றன





Sunday, February 3, 2013

கடல் - மீட்பு அளிக்கும் தேவதை


 உண்மையை சொல்ல வேண்டுமென்றால்,  “கடல் “ படம் மீது எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் ஒன்றும் இல்லை . அக்னி நடசத்திரம் , தளபதி , நாயகன் , கன்னத்தில் முத்தவிட்டால் என தன் மேதமையை ஏற்கனவே நிரூபித்து விட்ட  மணிரத்தினம் இனி சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையை அடைந்து விட்டாரோ என்ற எண்ணம்  ராவணன் படம் பார்த்தபோது தோன்றியது.

எனக்கு படம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.  அதனால் ஆரம்பம் முதலே கடல்மீது பெரிய ஈர்ப்பு இருக்கவில்லை.

ஆனாலும் அதீத கற்பனையோ, சர்வ தேச பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் அசட்டுத்தனமோ ,  தாதா உலக மோதல்ல்களோ ,  படித்தவவர்களுக்கான க்தைகளனோ இல்லாமல் , தமிழ் நாட்டின் தென்பகுதியை கதைக்களனாக கொண்ட படம் என்பதற்காகத்தான் படம் மீது சிறிய ஆர்வத்த்தை ஏற்படுத்தியது.

அதுவும் வில்லத்தனமான ஆர்வம்தான்.  தனக்கு சாதகமாக கிரவுண்டில் ஆடுவதை விட்டுவிட்டு, ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமான கிரவுண்டில் இந்திய அணி திணறுவது போல , மணியும் திணறுவார் என்றே எதிர்பார்த்தேன்.

அவரது உன்னதமான படங்களை பார்த்துள்ள நான், அவரது மொக்கை படம் ஒன்றையும் பார்த்து , மணிரத்தினம் - ஒரு சகாப்தம் முடிகிறது என ஒரு கட்டுரை எழுதலாம் என்ற ஓர் அல்ப ஆர்வம்தான் எனக்கு இருந்தது.


    படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே  இது கிறிஸ்துவ மக்கள் சார்ந்த கதை என்பது புரிந்தது . ஏன் இந்த ரிஸ்க் என்று தோன்றியது. நம் மக்கள் என்னதான் முற்போக்காக காட்டிக்கொண்டால் , அனைவருக்குள்ள்ளும் - கட்சி, இயக்கம் போன்ற விதிவிலக்கின்றி - இந்துத்துவ  மோகம் இருப்பதைப்பற்றி முன்பே சொல்லி இருக்கிறேன்.

 எனவே கிறிஸ்துவம் சார்ந்த படத்தை நம் மக்கள் ஏற்கவேண்டுமானால் , படம் சிறப்பாக இருந்தால் போதாது. எக்ஸ்ராடினரியாக இருக்க வேண்டும். அப்படி இருக்குமா என்பது கொஞ்ச நேரத்திலேயே தெரிந்து விட்டது.

     பணக்கார பின்னணியில் , அது தரும் வாய்ப்பில், சற்று பெருந்தன்மையான அரவிந்த் சாமி , அதற்கு எதிரான பின்னணியில் பிறந்த அர்ஜுன் வாய்ப்பு கிடைக்கும்போது ஜாலியாக இருக்கிறார். அப்படி எல்லோரும் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்.   விதிகளை அவர் விரும்பவில்லை. மிக மிக புத்திசாலி.  நேர்மையானவர்.

    ஆனால் அவர் தன்னை நியாயப்படுத்தாமல் , தன்னை சாத்தானுடன் ஒப்பிட்டுக்கொள்கிறார் . அந்த கேரகடர் தன்னை ஹீரோவாகவும் , அரவிந்த் சாமியை வில்லனாகவும் சொல்லி இருந்தாலும்கூட , அந்த கட்டத்தில் அதை நம்மால் ஏற்றுக்கொண்டு இருக்க முடியும்  ( பின்புதான் வில்லனாக மாறுகிறார். நான் ஆரம்ப காட்சியை சொல்கிறேன் ) . அப்படி அவர் சொல்லி இருந்தால் பெரும்பாலானோர் அவரை தம்முடன் அடையாளப்படுத்தி கொண்டு இருக்கவும் இயலும் .ஆனால் அப்படி செய்யாமல் தன்னை சாத்தானாக சொல்லும் ஆரம்ப காட்சியே , இது வேறு வகையான படம் என்பதை உணர்த்தி விட்டது.  நல்லவ்ரான அரவிந்த் சாமி ஏதேனும் தவறு செய்து இருந்தால் , அவரைக்காட்டிக்கொடுத்து  அவர் வாழ்க்கையை அழிக்கும் செயலை , “ சாத்தான் “ அர்ஜுன் செய்து இருக்க மாட்டார் என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. நல்லது , தீயது என்பதன் வரையறையே கொஞ்சம் ஆட்டம் காண்கிறது.


      அதன் பின் அடுத்தடுத்து பர பர காட்சிகள். அரவிந்த் சாமிக்கும் , அர்ஜுனுக்கும் இடையே நிகழும் பிளவு, கதானாயகன் பிறப்பு, பால்ய பருவம் , அரவிந்த் சாமியின் வருகை, கதா நாயகி அறிமுகம் என மின்னல் வேகத்தில் காட்சிகள் பறக்கின்றன.


 இந்த கட்டத்தில், ஒவ்வொரு காட்சிகளின் போதும் , இதுவே படம் முழுக்க தொடரக்கூடாதா என்ற எண்ணம் , தமிழ் படங்களில் ஊறிய ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.

உதாரணமாக ,  இதை  முழுக்க முழுக்க காதல் படமாகவும் எடுத்து இருக்கலாம் , அல்லது தளபதி பாணியில் அர்ஜுன் அரவிந்த் சாமி மோதலாகவும் எடுத்து இருக்கலாம் , அல்லது வாழ்க்கையின் கீழ்தளத்தில் பிறந்த ஒருவன் தன் ஹீரோயிசத்தால் பெரிய ஆள் ஆகி வெல்லும் ரஜினி பாணி படமாகவும் எடுத்து இருக்கலாம்.

இப்படி எந்த வகையில் எடுத்து இருந்தாலும் , படம் வழக்கமான மசாலாக உருவெடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும் . இதை செய்வது மணி ரத்தினத்துக்கு எளிதான வேலைதான்.

ஆனால், இந்த இடத்தில் படம் வேறு திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. ஆரம்ப காட்சிகளுக்கெல்லாம் வேறு அர்த்தம் கிடைக்கிறது. இதை ஒரு சவாலாக எடுத்து மணி செய்து இருப்பார் என யூகிக்கிறேன்.

இதை படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றும் சொல்லலாம். மைனஸ் பாயிண்ட் என்றும் சொல்லலாம்.

 ”நல்லவரான”  அரவிந்த் சாமியால் வாழ்க்கையை இழந்த அர்ஜுன் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார். அரவிந்த் சாமியை பழி தீர்ப்பேன் ஏன சவால் விட்ட ,  “ சாத்தான் “ அர்ஜுன் பழிவாங்கும் வலிமை கிடைத்தும் கூட பழி வாங்க முனையவில்லை. மீண்டும் வெகு வெகு தற்செயலாகத்தான் மீண்டும் சந்திக்க நேர்கிறது.  அதன் பின்புதான் பழைய கணக்குகள் அவர் நினைவுக்கு வருகின்றன.  இப்படியான தற்செயல் நிகழ்வுகள் , சுவையான முரண்கள் என படம் முழுக்கு நிறைந்து இருக்கின்றன.

” நல்லவரான “ அரவிந்த சாமி , ஒரு கட்டத்தில் “ கெட்டவராக “ மாறவும் ( கொலை முயற்சி !! ) துணிகிறார். அந்த சந்தர்ப்பத்தில் யாராக இருந்தாலும் , அப்ப்படித்தான் செய்து இருப்பார்கள். ஆனால் அந்த பாத்திரத்தின்  கறாரான பார்வையில் அது தவறுதானே.. ஆக சரி , தவறு என்பதற்கு என்ன அர்த்தம்?

  தன்னை ஆளாக்கிய ஃபாதர் கைதாவது , அவருக்கு உதவ முடியாத கையாலாகத தனம் ,  நல்லவர் ஒருவரை ஒரு நொடியில் சந்தேகிக்கும்  நன்றி மறக்கும் மக்களை சந்திக்க நேரும் யதார்த்தம் என்ற கையறு நிலையில் இருக்கும் கதானாயகனை அர்ஜுன் அழைத்து சென்று தன் பாதையை அறிமுகப்படுத்துகிறார்.

மீண்டும் ஃபாதர் வந்து அழைத்தும் . நல்ல பாதைக்கு ஹீரோ வர விரும்பவில்லை. அந்த நிலையில்தான் ஒரு தேவதையால் அவன் மீட்கப்படுகிறான்.

அவள் அப்படி என்ன செய்து அவனை மீட்டு விட்டாள் ? அவள் இருப்பே அவனை மீட்டு விடுகிறது. பெரிய பிரசங்கங்களோ, அறிவு பூர்வ தர்க்கங்களை அவள் முன் வைக்கவில்லை. அவளால் அதை நினைத்தால்கூட செய்ய முடியாது.

காரணம் அவள் குழந்தை உள்ளம் கொண்டவள். இந்த குழந்தை ஒரு கட்டத்தில் தாயாகும் தருணம்  உணர்வு பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

க்ளைமேக்சில்தான் ஒரு தேவதையால் ட்ரான்ஃபார்ம் ஆனவனுக்கும் , ட்ரான்ச்ஃபார்ம் ஆக முயற்சிக்கும் அல்லது அப்படி ஆகி விட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கும் ஒருவனுக்கும் இடையேயான வித்தியாசம் தெரிகிறது.

 பொதுவாக நாம் சொல்லும் நல்லவன் , கெட்டவன் என்பதெல்லாம் சந்தர்ப்ப வசத்தால் அமைவதுதான். நாம் நல்லவன் என நினைப்பவர்கள் தவறானதை செய்ய முடியும் , கெட்டவர்கள் நல்லதை செய்ய முடியும்.  ஆனால் உண்மையில்யே முழு மாற்றம் அடைந்தவர்கள் வெகு சிலரும் இருக்க கூடும் .

 அவ்வளவு நேரம் இனிமையே உருவாக இருந்த ஃபாதர் கொலைகாரனாக மாற எத்தனிக்கிறார். ஆனால் கதானாயகன் என்ன  நடந்தாலும் கெட்டவனாக முடியாது. அவன் குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகி விட்டான் என்று ஒரு ஜென் கதை போன்ற நுட்பமான க்ளைமேக்சுடன் படம் முடிகிறது.


இதை ஓர் ஆன்மிக கதையாக எடுத்து இருக்க முடியும் . ஆனால் அது டிரையாக இருந்து இருக்கும் . எனவே ஒரு சாதாரண மசாலா கதை போலவே எடுத்து இருக்கிறார்.

 இருவருக்கிடையே பகை. கதா நாயகனை இருவரும் வளைக்கப்பார்க்கிறார்கள். கதானாயகன் வில்லன் வலையில் விழுகிறான்.  வழக்கம் போலவே வில்லன் மகளை காதலிக்கிறான். வழக்கம்ப்போலவே வில்லன் அதை விரும்பாமல் கடத்துகிறான். வழக்க்மபோல கிளைமேக்ஸ் சண்டை .சுபம் ,. என்ற பழக்கப்பட்ட டப்பாவிற்குள் , மிகப்பெரிய விஷயங்களை அடைத்துள்ளார் மணி.

பல ஆண்டுகள் கெட்டவனாக இருந்த ஒருவன் , நல்ல சகவாசத்தாலும் , வாசிப்பாலும் , நல்லவனாக மாற முடியும் . ஆனால் இந்த மாற்றம் மிக மிக மேலோட்டமானது. அவன் கெட்ட பண்புகள் , அவனுள் புதைந்து இருக்கும். அது எப்போது வேண்டுமானாலும் வெளி வரக்கூடும்.

அதே போல “ நல்லவனாக “ வாழ்ந்து வரும் ஒருவன் , எப்போது வேண்டுமானாலும் கெட்டவனாக மாறக்கூடும்.

காரணம் இந்த மாற்றங்கள் எல்லாம் மேல்மட்ட அளவில் ந்டப்பது. ஆழமான மாற்றம் ஏதும் நிகழவில்லை.

ஆனால் , ட்ரான்ஸ்ஃபார்ம் ஆனவன் நிலை வேறு . அவன் ஒட்டுமொத்த இருப்புமே மாறி விடுகிறது.

இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ் முடியாது. அதை பயிற்சி செய்யவும் முடியாது.   சட் என ஒரு கணத்தில் நிகழ வேண்டும். திட்டம் போட்டு நிகழ்த்த இயலாது. ஒரு தேவதை அவளாக மனது வைத்தால்தான் , மீட்சி கிடைக்கும் .

. ஜென் கதைகளில் இதைப்பார்க்கலாம் , ஏதாவது ஒரு வார்த்தை , ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்த்து நொடிப்பொழுதில் ஞானம் கிடைக்கும் , இந்த கணத்தைத்தான் தேவதை அளிக்கும் மீட்சியாக உருவகப்படுத்தி இருக்கிறாரோ என தோன்றுகிறது.


கெட்ட வழியில் செல்லாதே என ஃபாதர் சொல்லியும் , அவன் கேட்பதில்லை. ஆனால் பாவம் என்றால் என்ன என்றே தெரியாத ஓர் அப்பாவி, பாவம் என்பது ஒரு நொடியில் போககூடியது என நம்பும் கதானாயகின் வார்த்தை அவனை மாற்றுகிறது என்பது அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..

எனக்கு பிடித்த காட்சிகளில் அது ஒன்று...

ஹிரோ ஒரு ரவுடியை போட்டு அடிப்பதில் இருந்து தமிழ் சினிமா காதல் ஆரம்பிக்கும். இதை இந்த படம் உடைத்து இருக்கிறது.   யோசித்து பாருங்கள் . நம்முடைய சிறந்த நட்போ,. காதலோ காரணம் ஏதுமின்றி இயல்பாகத்தான் அமைந்து இருக்கும் . இயல்பான நெருக்கம் அருமையாக சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாததைத்தான் படத்தின் பெரிய மைன்சாக சொல்ல முடியும்.

இது மட்டுமல்லாமல் , ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார்.

மின் கடைக்காரியிடம் அட்ரஸ் கேட்டு திணறும் அரவிந்த சாமி, இன்னொரு முறை ஏசணும் போல இருக்கு என சொல்லும் சிறுவன் , திடீரென மகளை பார்த்து குழம்பும்  அர்ஜுன் , திடீர் த்ரோகத்தால் நிலைகுலையும் ஃபாதர் , எனகு  அம்மா வேணும் என்று தான் சின்ன வயதில் கதறியதை டேப் ரிக்கார்டில் கேட்க நேரும் ஹீரோ அந்த டேப்ரிக்கார்டரை பார்க்க வருகையில், அவன் அது வரை ஏங்கிய தாய் அன்பு கிடைப்பது என செதுக்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு காட்சியாக சொல்லிக்கொண்டே போகலாம்.  சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுவன். வசவுகள் மூலம் தன் ஆற்றாமையை தீர்த்து கொள்ளக்கூடியவன். ஃபாதர் அழைக்கும்போது , தாக்குதலுக்கு ஆயத்தமாக “ஆயுதம் “ ஒன்றை கையிலேயே வைத்து இருக்கிறான்.
அடுத்த காட்சியிலும் ஆயுதம் கொண்டு வருகிறான். அவர் அருகே செல்ல செல்ல ஆயுதத்தை வெகு  இயல்பாக கீழே போட்டு விடுகிறான், மன நிலை மாற்றம் இயல்பாக இருக்கும்.

கடைசி காட்சியில் , சாத்தானாக தன்னை சொல்லிக்கொள்ளும் அர்ஜுன் , தன் தோல்வியை ஒப்புக்கொள்வார். ஆனால் நல்லவரான ஃபாதரும் -தோல்வி அடைந்து இருந்தாலும் - அதை ஒப்புக்கொள்ள மாட்டார்.

நன்மை , தீமைக்கு அப்பாற்ப்ட்ட ஹீரோயின் வெற்றி அடைந்ததை உணரும் நிலையில்யே இருக்க மாட்டார்... அற்புதம்.

ஏ ஆர் ரகுமான்..ம்ம்ம் ,, கலக்கி விட்டார்..பாடல்கள் , பின்னணி இசை என ஃபுல் ஃபார்மில் இருந்து இருக்கிறார். மகுடி சாங் மிக மிக பொருத்தமாக அமைந்து இருக்கிறது.

ஒளிப்பதிவு கேட்கவே வேண்டாம். ஒரிஜினல் சிடி வந்தால் , வாங்கி வைத்து கொண்டு , ஒலியை ம்யூட் செய்து விட்டு , காட்சிகளை மட்டுமே ரசிக்கலாம்.

பாடல் வரிகள் அருமை...


சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்
பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு
ஒத்தையடிப் பாத
உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்



வசனம் ஜெயமோகன்...


  • கடலுக்கு இவனை தெரியும் , தெரிஞ்சு இருக்கும்.



  • இந்த ஊர்ல விசுவாசிகள் எத்தனை பேர்?


            இந்த ஊர்ல எல்லோருமே கிறிஸ்தவர்கள்தான். ஆனால் விசுவாசிகள்




  • என்னிடம் நீங்க என்ன தேடினீங்களோ , உங்களுக்கு என்ன கிடத்ததோ தெரியாது.. ஆனால் உங்களிடம்தான் எனக்கு எல்லாமே கிடைத்தது..




  • இவனை கொன்னுட்டு நிம்மதியா வாழ்வதை விட , பக்கத்தில் வச்சுக்கிட்டு உஷாரா இருக்க்றதையே விரும்புறேன்.



  • என்னடா ரத்தம்? யாரையாவது கொன்னுட்டியா?


            கொன்னாத்தான் ரத்தம் வருமா? இது இயேசு கிறிஸ்துவின் ரத்தம்

இப்பத்தான் உன்னை நினைச்சேன்.. என்ன நினச்ச?

மறந்துட்டேன்


  • நான் நிறைய பாவம் செஞ்சு இருக்கேன்..


            பாவம் நா என்ன ?


மொத்தத்தில் ஹீரொவுக்கு அந்த தேவதை மீட்பு அளித்தது போல , மணி ரத்தினத்தின்  அடுத்த கட்ட பயணத்துக்கு வழி காட்டும் வகையில், இந்த படம் மீட்பு அளித்துள்ளது..


அதே போல , கதையை வெளிப்படையாக சொல்லி, ரசிகனின் யோசிப்புக்கு வேலையில்லாமல் செய்யும் கதை சொல்லும் முறையில் இருந்து  மீட்சி அளித்து , குறியீடுகள் மூலம் கதை சொல்லும் பாணியை தமிழுக்கு அளித்துள்ளது கடல்.


வெடிக்ட் :  கடல் - காண வேண்டிய அற்புதம் 


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா