Monday, December 28, 2020

பூமியின் கதையை சுவைபட சொல்லும் நூல்

 

 செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கின்றனவா..    பறக்கும் தட்டுகள் என்பவை உண்மையா...  கடந்தகாலப்பயணம் சாத்தியமான ஒன்றா  .. இரும்பை தங்கமாக்கல் சாத்தியமா  போன்ற சில பாமர கற்பனைகளுக்கு கேள்விகளுக்கு பதில் அளிப்பதையே தமிழ்ச்சூழலில் அறிவியல் என நினைத்து வருகிறார்கள் 


ஆனால் அவ்வப்போது சில அற்புதமான அறிவியல் நூல்களும் அத்திப்பூத்தாற்போல வருவதும் உண்டு


அப்படி நான் சமீபத்தில் படித்த நல்ல நூல் ”  நிலமும் பொழுதும் “   எழுதியவர் நிர்மல்

கிண்டில் பதிப்பாக வெளி வந்துள்ளது

பூமி எப்போது தோன்றியிருக்கக்கூடும் , உயிரிகள் எப்போது தோன்றியிருக்கும்   , இவை குறித்து ஆராய வேண்டும் என்ற உந்துதல் எப்போது எப்படி மனிதனுக்கு ஏற்பட்டது  , இவை குறித்த தேடல் என்றில்லாமல் பொதுவான அறிவுப்புரட்சிக்கு எந்த நிகழ்ச்சி தொடக்கப்புள்ளியாக அமைந்தது , அறிவியல் வளர்ந்தால் கடவுள் நம்பிக்கை அழிந்து விடும் என்ற பொதுப்புத்திக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மதவாதிகள் ஏன் இவ்வாராய்ச்சிகளுக்கு ஊக்கம் அளித்தனர் , தர்க்கம் என்பது உண்மைக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு மாறாக , தர்க்க ரீதியாக பொய்யைக்கூட உண்மை என நிறுவ முடியும் என்பதால் , தர்க்கத்தை கடந்தே உண்மையைக்காண வேண்டும் என்ற பார்வை எப்படி உருவானது , உலகின் எல்லா நாட்டு பாறை  வகைகளும் ஒரே வகையில் இருக்குமா , சகாப்தம் என்பதைக்குறிக்கும் era என்பதை விட விரிவான அர்த்தம் தரும் சொல் மற்றும் அதற்கான தேவை என்ன , ஒவ்வொரு காலகட்டத்துக்கும் பாறை வகைகளுக்கும் எப்படி பெயர் இடுகிறார்கள் என்பது போன்ற பல சுவாரஸ்யமான சங்கதிகளை அழகாக சொல்கிறது நூல்


பல சர்ச்சைக்குரிய விவாதத்துக்குரிய விஷயங்களையும் புத்தகம் தொட்டுச்செல்கிறது


பழைய ஆன்மிக நூல்கள் அறிவியல் வளர்ச்சியால் காலாவதியாகி விட்டனவா அல்லது புதுப்பொலிவு கொள்கின்றனவா  , திருக்குறள் கடவுள் பெயர் எதையும் சொல்லவில்லையா..   ஆதியில் வார்த்தை இருந்தது அது தேவனோடு இருந்தது அது தேவனாகவே இருந்தது என்ற பைபிளும் , பசு பதி என இரண்டுமே அனாதி ,அதாவது தோற்றுவித்தவன் என யாரும் இல்லை என அறைந்திடும் இந்திய ஞானமும் தற்போதைய சூழலில் என்ன பொருள்படுகின்றன ,   செப்பியன்ஸ் எனும் நமது மனித இனத்தை விட பலமும் அறிவும் கொண்ட மற்ற மனித இனங்கள் அழிய , நாம் மட்டும் வென்றிடக்காரணம் மதம் சாதி தேசம் போன்ற கற்பிதங்களை நம்பி ஒன்றிணையும் பண்பு நமக்கு மட்டுமே உண்டு , உலக சிங்கங்களே ஒன்றிணையுங்கள் என சிங்கமோ புலியோ மற்ற இனங்களோ ஒன்று சேராது , ஆக கதைகள் சாதிய வாதம் மதவாதம் போன்றவைதான் மனித இனம் வாழ்வதற்கே காரணமாகும் , ஆனால் உண்மையை அடைய இதுபோன்ற கற்பிதங்களும் கதைகளும் தடை என சொல்வதற்கான காரணம் என்ன என நம்மை யோசிக்க வைக்கிறது நூல்

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் , மனிதத்துவ யுகம் போன்றவை உலகையே மாற்றி அமைத்ததை அறிவது மட்டுமல்ல  அதன் விளைவுகளையும் தமிழக திராவிட இயக்க சூழலில் ஓர் அறிவியல் நூல் யோசிக்க வைப்பது வியப்புக்குரியது


தொல்லுயிர் படிமங்கள் மனிதனைஈர்த்ததில் ஆச்சர்யமில்லை.  அப்படி ஆரம்பித்த தேடல் பூமியின் வரலாறையே சொல்லித்தந்து விட்டது ஆச்சர்யமளிப்பது..

இயற்கை தன்னைத்தானே விளக்கிக்கொள்ள தொல்லுயிர்ப் படிமங்களை தூண்டிலாக பயன்படுத்தியதோ என தோன்றியது

உலக சிந்தனையாளர்கள் தமிழ் இலக்கியகர்த்தாக்கள் என நூல் முழுதும் பெயரளவில் மட்டுமன்றி நூல் நடையிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர்

எழுத்தாளனின் மரணம் , நான் லீனியர் எழுத்து , மையமற்ற பிரதி போன்றவற்றை புனைவில் பார்த்திருப்போம்.  முதல்முறையாக அபுனைவில் காண்கிறோம்.  முன்னுரையில் மட்டுமே படைப்பாளியை காண்கிறோம்.   மற்றபடி வேறெங்கும் எழுத்தாளனை காணிலோம். பிரதியே தன்னை கட்டமைத்துக் கொள்கிறது.

எங்கிருந்தும் ஆரம்பித்து எங்கும் முடிக்கலாம் என்பதுபோல தனித்தனி சிறுகதை போல கட்டப்பட்டுள்ளது இப்படைப்பு


 தலைப்புகள் , உப தலைப்புகள் ,  முகப்பு வரிகள் ஆகியவை உலக அறிவியலை தமிழ் மணக்க நம்முன் நிறுத்துகிறது

அடுத்த முறை ஆலயம் சென்றால் நாம் காணும் யாளி சிலை ,  சுவறில் காணும் பல்லி எலும்பு ,  மலைகள் ,  காலை இடறும் கல் ,  தீயில் எரியும் கரி போன்ற"பல நம்மை சற்றே கவனிக்க வைக்கும் அதுவே நூலின் வெற்றி


நூலில் கற்க  முரண்பட  விவாதிக்க ஏராளம் உண்டு.

புரியாமல் எழுவதுதான் தரமான எழுத்து என நினைக்கும் நோய்மைச் சூழலில் அறிவார்ந்த விஷயத்தை ஒரே அமர்வில் படிக்கத்தக்க வகையில் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது

கிண்டில் பதிப்பாக நூல் கிடைக்கிறது

நூல் வாங்குவதற்கு



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா