Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts

Friday, April 22, 2022

இமையம் எழுதிய எங் கதெ ( நெடுங்கதை ) என் பார்வை

 

 எழுத்தாளர் இமையம் அவர்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பின்னணி கொண்டவை.

விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்பவர் , சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்பவர் என்பது உண்மை என்றாலும் இந்த அடையாளங்கள் இல்லாமல் பொதுவான மானுடம் , மனித உறவுகள் , அன்றாட வாழ்க்கை போன்றவற்றையும் இவர் எழுத்து பேசும்.

விளிம்பு நிலை  மக்களைக்குறித்த இவர் அக்கறை காரணமாக , இவர் எப்போதும் அவ்ர்களைப்பற்றியே எழுதுபவர் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது.


அப்படி இல்லாமல் தஸ்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் போல அழகான , பித்தேறிய காதல் கதைகளும் படைப்பவர்தான் இமையம்.

 நம் ஊருக்கு சூழலுக்கு தேவையான இவரது பெத்தவன் கதை ஒரு ஐரோப்பியனுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் இவரது என் கதெ என்ற  நெடுங்கதையை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அவர்களால் அதில் விரவியிருக்கும் காதலை , ஆண் பெண் உறவின் மாய கணங்களை புரிந்து கொள்ள இயலும் . 


இது எங் கதெ.பத்து வருசத்துக் கதெ.என் ரத்தம்.என் கண்ணீர்.கதெ ஆரம்பிக்கறப்போ எனக்கு வயசு முப்பத்திமூணு.கதெ முடியறப்போ நாப்பத்திமூணு. இது என்னோடது மட்டுமில்ல. கமலாவோட கதெயும்தான்.


 இதுதான் கதை ,, இதுதான் கதையின் முடிவு என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டு கதை ஆரம்பிக்கிறது.


கதை முழுக்க முழுக்க வினாயகம் என்பவரின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.

ஒருவர் பார்வையில் அதுவும் வட்டார பேச்சு வழக்கில் முழுக்கதையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதே முதலில் ஒரு பேராச்சர்யம்.


     உலகியல் பார்வையில் போதிய சாமர்த்தியம் இல்லாத , வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞந்தான் விநாயகம்.  அவ்வ்வூர் பள்ளியில் எழுத்தர் வேலையில் சேரும் கமலா மீது காதல் வயப்படுகிறான். அவள் கணவனை இழந்தவள் , இரு பெண் குழந்தைகள் .  இது தவறு  உனக்கு என ஒரு வாழ்க்கை தேவை     திரும்ணம் செய்து கொள் என பெற்றோர் சொல்வதை இவன் கேட்பதில்லை.


         அவள் பேரழகி என்பதால் ஊரே அவள் கடைக்கண்ணுக்கு காத்திருக்கிறது. ஆனால் அவளோ இவனை ஏற்கிறாள். 

அதற்கு காரணம் காதலா , காமமா , ஒரு பாதுகாப்பா , அல்லது சம்பளமற்ற வேலையாள் தேடுகிறாளோ என்பதெல்லாம் நமக்குத்தெரிவதில்லை .  காரணம் கதையில் அவளது எண்ண ஓட்ட்டங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது கதையின் மிகப்பெரிய அழகு. அவளை நியாயப்படுத்தியோ அவளை தரக்குறைவாகவோ சித்ர்கரிக்க வாய்ப்புகளை உருவாக்காமல் , கதை முழுக்க வினாயகம் பார்வையில் அவன் சொல்வதாகவே நகர்கிறது. 

  கமலா கிடைத்தது   தன் பாக்க்கியம்  , அவள் தன்னை ஏமாற்றுகிறாள் , தன்னை பயன்படுத்துகிறாள் , என அவனுக்கு அந்தந்த சூழலில் தோன்றும் எண்ணங்கள்தான் நமக்கு தெரிகின்றன. அவள் எதிர்வினைகள் , செயல்கள் நமக்கு அவன் மூலம் தெரிந்தாலும் , அவள் என்ன நினைத்து செய்கிறாள் என்பது வினாயகம் போலவே நமக்கும் புலப்படுவதில்லை.  


    மேலதிகாரி மிகவும் தொந்தரவு செய்கிறார் , எனவே சும்மா சில கொஞ்சல் குறுஞ்செய்திகள் அனுப்பினாலாவது அமைதியாக விலகி விடுவார் என நினைத்தேன் என மேலதிகாரி விவகாரம் வெடித்ததும் சொல்கிறாள். 


இது உண்மை போலவும் இருக்கிறது , உண்மை என்றால் விநாயகத்திடம் ஏன் மறைத்தாள் என்றும் அவனைப்போலவே நமக்கும்  தோன்றுகிறது ,  அவளுக்கு காசும் காமமும்தான் முக்கியம் என்றால் வினாயகத்தை விட ஆயிரம் பேர் கிடைப்பார்களே , ஏதோ ஒரு காதல் இருக்கிறதோ என்றும் தோன்றுகிற்து ( அவள் ஒரு போதும் காதல் போன்ற எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில்லை )   தன்னை காதலனின் சகோதரிகள் தேடி வந்து அவமானப்படுத்தியதைக்கூட கேலி கலந்த கிண்டலுடந்தான் சொல்கிறாள் “ இப்படி அப்படி இல்லை   செம திட்டு ஒரே கல்ல்யாண வீட்ல மூணு மைக் செட் கட்டுன மாதிரி இருந்துச்சு “ 

  அவனை சற்றும் பொருட்படுத்தாதவள் , எத்தனை நாள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தாலும் சட்டை செய்யாதவள் . அப்படிப்பட்டவள் எத்தனை நாள் கழித்து வந்தாலும் அவனை ஏற்கிறாள் .   யாரிடமும் ஏமாறாமல் கச்சிதமாக கணக்குப்போட்டு காரியம் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி  அப்படிப்படவள் , அவனை முழுமையாக நம்புவதும் , தன்னை கொல்ல வந்து இருக்கிறான் என்பது தெரியாமல் , ரத்தம் வருவதற்கு அவன் சொல்லும் லாஜிக் இல்லாத பொய்யை ( அவன் சொன்ன ஒரே பொய் )  நம்புவதும் அவளது வேறு ஒரு முகம் .  ஆனால் ஒரு போதும் அவள் தன் கணவனை மறக்கவில்லை. கணவன் இடத்தை இவனுக்கு தரவும் மாட்டாள் 

   எப்படி பலரால் நாஸ்தென்கா கதாபாத்திரத்தை மறக்க முடியாதோ அது போல இந்த கதையை படித்து முடித்தால் , கமலாவையும் மறக்க முடியாது.


  கவிதைகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட நுண்ணுண்ர்வு கொண்ட வினாயகம் கதை சொல்லும்போது நம்மிடம் நீதி கேட்கும் தொனியில் பேசுவதில்லை   ..  தன் மீதும் தவறு இருக்கலாம் என்பதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறான். 

 


பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...


நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்.

என்று தன்னிலை விளக்கம் அளிப்பவன் அவன்

கதை முழுக்க வட்டார வழக்குப் பேச்சு ரசிக்க வைக்கிறது 


இந்த விளையாட்டுக்கு நானாத்தான் போனேன் .,  அவ வேண்டாம்னுதான் சொன்னா   இது சாவுற விளையாட்டு ..  இது செகண்ட் சான்ஸ் கிடையாது


மொட்டைப்பாறையில் எம்மாம் மழை பேஞ்சி என்ன அவ காத்து நான் பஞ்சு


வாங்க போங்க  வா போ ஆகி வாடி போடி ஆச்சு..  குருத்து எல பழுத்த எலயா ஆய்டுச்சு


வெறி பிடிச்ச நாயா இருந்தாலும் உனக்குனு ஒரு நாய் இருக்கணும்


தம்பிக்கு தாழ்வாரத்துலதான் படுக்கணும்னு தலையில் எழுதி இருக்குனு அவளுக்குத் தெரியல


நான் கமலாகூட பானையும் மூடியும் போல ஆனதைப்பார்த்து ஊரே சொன்னுச்சு


அவனும் அவளும் கோழியும் கோழிக்கூண்டுமா இருந்தாங்க 


 நான் சொல்ற எதையும் ஏத்துக்காத மாதிரி இதையும் ஏத்துக்கல  விரியன் பாம்புக்கு இருக்கும் விஷத்துக்கு அதுவா பொறுப்பு


இப்ப ரெண்டு பேருக்கும்  இடையே பேச்சு வார்த்தை இல்லை... வார்த்தையாலதான் மனுஷங்க வாழறாங்க . வாழ முடியும்


     ஒரு பெண்ணின் அன்பு கிடைக்காதா ,  ஒரே ஒரு முத்தம் கிடைக்காதா என ஏங்கும் ஆண் , அவள் கிடைத்து விட்டால் அந்த சந்தோஷத்துக்கு நன்றியுடன் இருப்பதில்லை .


  அவள்: வேறு யாருடனும் பேசக்கூடாது  பேசினால் சிரித்தால் ஆசிட் வீச்சு , கத்திக்குத்து என வேறு ஒரு ஆளாக மாறி விடுகிறான்


ஆனால் வினாயகத்தின் மனதில் இருக்கும் காதலும் , அவன் படித்த நூல்களும் அவனை ஒரு காதலன் என்பதை தக்க வைக்கிறன்றன


       எனக்குக் காதல் எனும் அனுபவம் தந்தாய் . ஆண் என உணர வைத்தாய் இதற்கு மேல் என்ன... நீ யார் கூட வேணும்னாலும் இரு... எப்படி வேணும்னாலும் இரு . என நிறைவுடன் வாழ்த்து விட்டு விலகும்போது அமர் காதலர்களில் ஒருவனாக நின்று விடுகிறான்

       இமையம் எழுத்துகளில் மட்டுமல்ல....  தமிழ் நாவல்களில்  ஒரு வித்தியாசமான நாவக்ல் எங் கதெ 




Sunday, May 30, 2021

நிபுணத்துவம் அடைய எவ்வளவு மணி நேரம் தேவை ?

 ஒரு விஷயத்தில்  மேதைமை அடைய 10,000 மணி நேரங்கள் பயிற்சி தேவை என்கிறார் மால்கம் கிளாட்வெல்

எளிமையாக சொல்லவேண்டுமென்றால்

10000 / 24  =  கிட்டத்தட்ட  417 நாட்கள் தூங்காமல் சாப்பிடாமல் இரவு பகலாக பயிற்சி எடுக்க வேண்டும்.  அது சாத்தியமில்லை

தினசரி மூன்று மணி நேரங்கள் வீதம் ஒன்பது வருடங்கள் பயிற்சி எடுத்தால் ஒன்பது வருடங்களில் பத்தாயிரம் மணி நேரம் வந்து விடும்.

அதாவது தனது ஐந்து வயதில் ஒருவன் இசை , கிரிக்கெட் , வணிகம், கல்வி என ஏதேனும் ஒன்றில் ஈடுபடும் சூழல் இருந்தால் பள்ளிப்பருவத்தில் அந்தந்த துறைகளில் பிரகாசிப்பான்.  ஆசிரியர்கள் கவனிப்பு, புகழ் , தன்னம்பிக்கை ,  உயரக நட்புசூழல்என நல்ல விஷயங்கள் நடக்கும்.  பிற்காலத்தில் ஜொலிப்பான்

சற்று தாமதமாக , அதாவது பத்து வயதில் ஈடுபாடு ஆரம்பித்தால் , பயிற்சி செய்யும் காலத்தைப்பொறுத்து ,  அவனும் சாதனையாளராகலாம்

ஏஆர் ரகுமான் ,  டெண்டுல்கர் போன்றோரின் குடும்ப சூழல் இந்த பத்தாயிரம் மணி நேரத்தை அவர்களுக்கு அளித்ததை கவனியுங்கள்

ஜெயமோகன் தனது வெகு  சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் சூழல் இருந்ததாக சொன்னது நினைவிருக்கலாம்

ஒருவருக்கு 20 வயதில்தான் இந்த ஒன்றில் ஆர்வம் ஏற்படுகிறது , பயிற்சி எடுக்கும் சூழல் அமைகாறது என்றால் இரவுபகலாக கடுமையாக உழைத்து இந்த பத்தாயிரம் இலக்கை அடைதல் வேண்டும்

சாரு நிவேதிதா போன்ற பல எழுத்தாளர்கள் வெறித்தனமான வாசிப்பு மூலம் இந்த இலக்கை அடைந்தனர்

தாமதமாக தமது பயணத்தை தொடங்கி நாற்பது வயதுகளில் இலக்கை அடைந்தோரும் உண்டு ( எம்ஜிஆர் , நடிகர் விக்ரம் சில உதாரணங்கள)

அறுபது வயது வரை பயிற்சி செய்து,, ஓய்வுக்குப்பின் ஜொலிப்போரும் உண்டு


பெரிய சாதனையெல்லாம் வேண்டாம். ஒரு செயலில் நிபுணத்துவம் அடைந்தால் போதும் என்றால் அதற்கு தேவையான காலம் எவ்வளவு ?


நிபுணத்துவத்தின் நான்கு படிக்கட்டுகள் என ஜேம்ஸ் ஆலன் இப்படி சொல்கிறார்

1 பிடிவாதம் 2 தீவிர ஈடுபாடு  3 ஈடுபாடு மறைதல்  4 ஓய்வு

முதலில் ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட வேண்டும்.  மனம் அதில் ஈடுபடாமல் முரண்டு பிடிக்கும்.   வெட்டியாக இதில் ஈடுபடுகிறோமோ , நாளைக்கு செய்யலாமே என்றெல்லாம் தோன்றும்  ஆனால் பிடிவாதமாக அதில் இருக்க வேண்டும் இது முதல் நிலை

அதன் பின் மனம் சற்று அடங்கும்.  அந்த செயலை அழகாக எளிதாக செய்ய மனமே யோசனைகள் தர ஆரம்பிக்கும் . இந்த  ஈடுபாடு இரண்டாம் நிலை

சைக்கிள் , கார் , பைக் போன்றவை நன்கு பழகியபின் கவனமே இல்லாமல்கூட அவற்றை இயக்க முடியும்.   ஈடுபாடு தேவையற்ற நிலை. இது மூன்றாம் நிலை


கவிதை கதை என நிபுணத்துவம் அடைந்தபின் எழுதவேண்டும் என்ற,முனைப்பு இல்லாதபோதுகூட கற்பனைகள் ஊற்றெடுக்கும்.  உழைப்பு தேவைப்படாத இந்த நிலை நான்காவது நிலை


முதல் இரண்டு நிலைகளை அடைய 48 நாட்கள் ஆகும்


48 நாட்கள் ஒரு விஷயத்தை இடைவிடாது செய்தால் மனம் அடங்கி , ஒத்துழைக்க,ஆரம்பித்து விடும்


அதற்குப்பிறகு அடுத்த நிலைகளுக்கு செல்வதும் உறுதி  .  எடுத்துக்கொள்ளும் வேலையைப்பொறுத்து , நான்காம் கட்டத்தை அடையலாம்

48 நாட்கள் தாக்குப்பிடிப்பது முக்கியம்

 









Friday, August 21, 2020

இந்திராகாந்தியை எதிரத்த சகுந்தலா தேவி

    மனித கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் சகுந்தலா தேவி குறித்து ஒரு  திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

சினிமா ஸ்டார்கள் அரசியல்வாதிகள்  கிரிிக்கெட் வீரர்களைக்  கொண்டாடும் தேசத்தில் இது நன்முயற்சிதான்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்து பெரிய உயரம் தொட்டவர் இவர்.

கணித மேதை ராமானுஜனுடன் ஒப்பிடத்தக்க கணித மேதை அல்லர் இவர்.

இன்னொரு வித்தியாசம்.  ராமானுஜன்  தன் மேதைமைக்குக் காரணம் நாமகிரித் தாயார் என பதிவு செய்திருக்கிறார்.  சகுந்தலா தேவி அது தனது மன ஆற்றல் என்றும் முயன்றால் யாரும் இதை செய்யலாம் என்றும் சொன்னவர்

மனதிலேயே பெரிய பெரிய எண்களைப் பெருக்குதல் , குறிப்பிட்ட ஆண்டு மாதம் தேதி சொன்னால் கிழமையைச் சொல்லுதல் போன்றவை இவரால் முடிந்தது.  

இந்த திறமை எப்படி சிலருக்கு பிறவியிலேயே வருகிறது என்பது புதிராகவே உள்ளது.

இவருக்கு இந்த திறமையை வைத்து போராடி தனக்கொரு இடம் பிடிக்கும் போர்க்குணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது பலராலும் அஞ்சப்பட்ட இந்திரா காந்தியையே தேர்தலில் எதிர்க்கும் துணிச்சல் இவருக்கு இருந்தது

வெளி நாடுகளில் பல மேடைகளைப்பார்த்த இவரை 

சென்னைத் தொலைக்காட்சியில் பயன்படுத்திக் கொள்ள சிலர் நினைத்தனர்.   ஆனால் இந்திராவை எதிர்த்தவர் என்பதால் மேலிட அனுமதி கிடைக்கவில்லை

இவர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கே வந்து கடுமையாக கத்தினார்.   தவறு அவர்கள் பக்கம் என்பதால் நிலையத்தினர் மழுப்பலாக சமாதானம் பேசினர்.   அவர் விடாமல் கத்தினார் கடைசியில் அவர்களும் கத்தி பெண்சார்ந்த வசைச்சொற்களை ( வழக்கமான ஆணாதிக்க ஆயுதம்)பெரும் பிரச்சனையாகி அடுத்த நாள் இது தலைப்பு செய்தியானது

இந்த போர்க்குணம்தான் ஆணாதிக்க உலகில் அவருக்கு ஓர் இடத்தைப் பெற உதவியது

ஆனால் அவர் மனம் எப்படி செயல்பட்டது,, கணிதவியலில் அவரது ஆர்வம் எப்படி..  ஆழ்மனக்காட்சிகள் போன்றவை புதிராக உள்ளன

படத்திலும் இவை குறித்துப் பேசவில்லை.

அவர் வாழ்ந்தபோது அவரைப் புரிந்து கொள்ளாத அவர் மகள் பார்வையில் பெரும்பாலான காட்சிகள்

அவரை அவர் குடும்பம் எப்படிப்பாரத்தது. என்பது ஆடியன்சுக்குப் பிடிக்கும் என நினைத்துளளனர்

சரியான யோசனைதான்

ஆனால் அவர் எப்படி உலகத்தைப்பார்த்தார் அவர் எப்படி எண்களைப்பாரத்தார் எனபதுதான் ஆவண மதிப்பை அளிக்கும்





Saturday, August 8, 2020

நான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் கர்ஜித்த சந்திரசேகர்





 

இந்தியா மறக்கக்கூடாத முக்கிய தலைவர்களில் ஒருவர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்.  சோஷலிச தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு இருந்த இவர் அறுபதுகளிலேயே , பிஜேபியின் (அப்போதைய ஜன சங்கம் ) எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்க்கதரினசத்துடன் நினைத்தவர்.ஆச்சார்ய நரேந்திர தேவ் தலைமையை ஏற்று பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் செயல்பட்ட்ட இவர் , ஜனசங்கத்தை எதிர்க்க காங்கிரசால்தான் முடியும் என நினைத்து காங்கிரசில் சேர்ந்தார். 


மன்னர் மான்ய ஒழிப்பு , வங்கிகள் தேசிய மயமாக்கல் போன்ற இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் இவருக்குப்பிடித்து இருந்தன.  காங்கிரசில் இருந்த பழமைவாதப்போக்குகளுக்கு எதிராக குரல்கொடுத்த மோகன் தாரியா , கே , டி. மாளவியா போன்றோரை உள்ளடக்கிய இவரது குழுவினர் இளம் துருக்கியர் என அழைக்கப்பட்டனர்.  இந்திரா காந்துக்குமே பழைய தலைவர்களை பிடிக்காது என்றாலும் இந்திரா காந்திக்கு தர்ம சங்கடம் ஏற்படும் வகையில் , மொரார்ஜி தேசாய் போன்ற மூத்த தலைவர்களை எதிர்த்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருடன் அவ்வபோது மோதினார்


ஆனால் போக போக இந்திரா காந்தியின் தன்னிச்சையான போக்கு பிடிக்காமல் அவரையும் எதிர்க்கலானார். எம்ர்ஜென்சியின் போது , காங்கிரசில் இருந்தாலும் , கைது செய்யப்பட்டார்


சிறையில் இருந்து வெளி வந்ததும் ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டார். இந்திரா காந்தியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது ஜனதா. ஜனசங்க உறுப்பினர்களுடன் இவர் மோதல் தொடர்ந்தது.


விரைவிலேயே ஜனதா ஆட்சி கவிழ்ந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது

இந்திரா காந்தியை தொடர்ந்து எதிர்த்து வந்தார். 1983ல் வட இந்தியா முதல் தென் இந்தியா வரை இவர் நடத்திய பாரத யாத்திரை என்ற பெயரிலான பாத யாத்திரை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 


ஆனால் 1984ல் இந்திரா காந்தி படுகொலையால் , ராஜிவ் பிரதமரானார். ராஜிவ் ஆட்சியை எதிர்த்து வந்தார்

அடுத்த பொதுத்தேர்தலில் ராஜிவ் காந்தியை வீழ்த்து தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் சூழல் வந்தது.  பிஜேபியும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன

விபிசிங் ஒரு சந்தர்ப்பவாதி , அவர் பிரதமராக ஆதரவு அளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்

சரி , விபி சிங் வேண்டாம் , தேவிலாலை பிரதமராக்குவோம் என உறுதி அளித்ததை அடுத்து அதற்கு ஒப்புக்கொண்டார்

ஆனால் கடைசி நேரத்தில் ( ஏற்கனவே விபி சிங்குடன் நடத்திய ரகசிய பேரத்தின் காரணமாக ) தேவிலால் விபிசிங் பெயரை முன் மொழிய விபி சிங் பிரதமரானார். தேவிலால் துணை பிரதமர் ஆனார்

இந்த துரோகம் சந்திரசேகரை வெகுவாக காயப்படுத்தியது..

விரைவில் தேவிலாலுக்கும் விபிசிங்குக்கும் மோதல் ஏற்பட்டது

பிஜேபி தன் ஆதரவை தேசிய முன்னணி அர்சுக்கு விலக்கிக்கொண்ட நிலையில் , சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் ஆனார். தேவிலால் துணை பிரதமர் ஆனார்

வெறும் ஆறு மாதங்களே ஆட்சியில் இருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள்தான் இந்தியாவை பேரழிவில் இருந்து காத்தன என்கிறது வரலாற்று நூலாசிரியர் ரொடெரிக் மாத்யூஸ் எழுதிய , சந்திரசேகரும் இந்தியாவைக் காப்பாற்றிய ஆறு மாதங்களும் என்ற நூல் 

தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டு , தேர்தலை சில ஆண்டுகள் கழித்து சந்தித்து சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த ராஜிவ் காந்தி , ஏன் அவசரப்பட்டு சந்திரசேகர் அரசை கவிழ்த்தார் என ஒரு புதிய 

கோணத்தை காட்டுகிறது நூல் . அதில் இருந்து ஒரு பகுதி

-----------------------------------------------

   ராமர் கோயில் கட்டுமானப்பணிக்காக விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கி இருந்த ராம்ஜன்மபூமி ந்யாஸ் அறக்கட்டளை தலைவர்களும் அனைத்திந்திய பாபர் மசூதி  நடவடிக்கை கமிட்டி தலைவர்களும் பிரதமர் சந்திரசேகரை சந்திக்க வந்து இருந்தனர்.  ஷரத் பவாரும் , பைரோன் சிங் ஷெக்காவத்தும் ஏற்கனவே இவர்களுடன் பேசி இருந்தனர். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள்தான்

பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நிகழ்ந்தது

முதலில் இந்து தலைவர்கள் வந்தனர்

வெகு இயல்பாக  பதட்டமின்றி சந்திரசேகர் பேசினார் “ அயோத்தி பிரச்சனையில் என்னதான் செய்யலாம் . சொல்லுங்கள் “

அவரது இயல்பான தொனியை வைத்து , அவரை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம் என நினைத்த அவர்களும் இயல்பாக சொன்னார்கள்

“ இதில் பேச என்ன இருக்கிறது. அது ராமர் ஆலயம். அனைவருக்கும் தெரிந்ததுதானே அது “

இரண்டொரு நிமிடங்கள் அமைதியாக இருந்த சந்திரசேகர் சொன்னார்

“ சரி.. கொஞ்சம் சீரியசாக பேசுவோம். நான் இப்போது பிரதமர். எத்தனை நாள் பதவியில் இருப்பேன் என தெரியாது. ஆனால் நான் பிரதமராக இருக்கும்வரை யாரும் அந்த கட்டடத்தின்மீது கை வைக்க முடியாது “  சற்று இடைவெளி விட்டபின் தன் பாணியில் பேசினார் “ நான் விபி சிங் கிடையாது. மாநில முதல்வரிடம் பொறுப்பைதள்ளி விட்டு வாளாவிருக்கும் ஆள் நான் கிடையாது. யாராவது அந்த இடத்தில் கை வைத்தால் சுட்டுத்தள்ள உத்தரவிடுவேன். ஏழை நாடான இந்தியாவுக்கு இது போன்ற பிரச்சனைகள் தேவையே இல்லை. கடவுளுக்காகத்தானே போராடுகிறார்கள் , சுட்டுத்தள்ளி கடவுளிடமே அனுப்பிவிடுகிறேன் “

    அனைவரும் திகைத்தனர். இது பொதுக்கூட்ட மேடைக்கான வெற்றுப்பேச்சு அல்ல. ஒரு பிரதமராக உண்மையாக எச்சரிக்கிறார் என புரிந்து கொண்டனர்

” சரி  இஸ்லாமிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள் . அவர்களுடன் பேசி விட்டு முடிவெடுப்போம் “ என்றார்

அதன்பின் இஸ்லாமிய தலைவர்கள் வந்தனர்

   அவர்களுடன் பேசினார்

“ நான் வி எச் பியுடன் பேசி விட்டேன். தெளிவாக சொல்லி விட்டேன். நான் இங்கே இருக்கும்வரை அந்த இடம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் யோசியுங்கள். நாடுமுழுக்க லட்சக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்கின்றனர்.  நாளை ஏதேனும் கலவரம் என்றால் அனைவரையும் காக்கும் நிலையில் என்னிடம் போலிஸ் இல்லை. என்ன செய்யலாம் என நீங்களே சொல்லுங்கள் 

சரி.. இதை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்கிறோம் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்

“ சரி... சில அடிப்படை நெறிகளை பின்பற்ற வேண்டும். இரு தரப்பும் பேசுங்கள் ஷரத் பவாரும் , ஷெகாவத்தும் உங்களுடன் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் முடிவை அரசு செயல்படுத்தும். இது சத்தியம். ஆனால் சில நிபந்தனைகள் . என்ன பேசுகிறீர்கள் என்பதை வெளியே சொல்லக்கூடாது. முடிவு எட்டப்படும்வரை விஷயம் வெளியே போகக்கூடாது”


இருபது நாட்கள் வரை பேச்சு நடந்தது. பைரோன் சிங் ஷெகாவத் வெற்றிச்சிரிப்புடன் வந்தார்

“ உடன்பாடு ஏற்பட்டு விட்டது. ஆனால் இருதரப்புமே தம் ஆட்களை வெகுவாக உசுப்பேற்றி வைத்துள்ளனர். அதை எப்படி சரி செய்வது என்பதுதான் தெரியவில்லை “ 


ஒரு வழியாக உடன்பாடு ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் முன் வைத்த ஒப்பந்த நகல் இப்படி இருந்தது

“ இந்துக்களின் உணர்வுகளை மதித்து நிலத்தை அவர்களிடம் தர சம்மதிக்கிறோம். ஆனால் இரு நிபந்தனைகள் . மசூதி கட்ட எங்களுக்கு வேறு இடம் தர வேண்டும். இன்னொன்று , இது போன்ற பிரச்சனைகள் இனி ஒரு போதும் எழக்கூடாது என சட்டம் இயற்ற வேண்டும் , 05.08. 1947ல் மசூதியாக இருந்தவை மசூதி , கோயிலாக இருப்பவை கோயில் . இனி பிரச்சனைகள் எழவே கூடாது “


இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்


இந்த சம்பவதை ஷரத் பவார் தனது சுயசரிதை நூலில் உறுதிப்படுத்துகிறார்

பிரச்சனைக்குரிய இடத்தின் ஒரு பகுதியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டதாக எழுதுகிறார் அவர்

ஆனால் ஏன் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை? 

அங்குதான் அரசியல் விளையாடியது

ஷரத் பவார் , ராஜிவிடம் இந்த ஒப்பந்தம் குறித்து சொன்னார். ராஜிவ் சந்திரசேகரை போனில் தொடர்பு கொண்டார். “ நல்ல முறையில் தீர்வு கண்டமைக்கு பாராட்டுகள் . இரண்டு நாட்கள் யோசிக்க நேரம் கொடுங்கள் : என்றார் ராஜிவ்

இரண்டு நாட்களில் சந்திரசேகர் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்த்தார் ராஜிவ் 

இந்த பிரச்சனை சந்திரசேகர் ஆட்சியில் தீர்வு கண்டால் , அவர் ஒரு வலுவான தேசிய தலைவர் ஆகி விடுவார் என்ற அச்சம் ராஜிவுக்கு இருந்தது. இந்த பிரச்சனையை தான் முனைந்து தீர்ப்பதுதான் பழைய செல்வாக்கை ஈட்டுவதற்கான ஒரே வழி என ராஜிவ் நினைத்து இருந்தார். அந்த பெயரை சந்திரசேகருக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை

மலிவான அரசியல் மூலம் நடக்ககூடாத பல செயல்கள் நடந்து விட்டன


Chandra Shekhar And The Six Months That Saved India’ -  Roderick Matthews 




Thursday, January 30, 2020

ஆறுதல் அளிக்கும் நூல்

வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதாக ஒரு கருத்து இருக்கிறது.
உண்மையில் வாசிப்பதற்கு பலர் தயாராக உள்ளனர். அக்கறையுடன் எழுதுவதற்கு ஆட்கள் குறைவு.

கணினியும் ஓர் அறையும் இருந்தால் போதும். தமிழ் தெரிகிறதோ இல்லையோ, உலக அனுபவம் இருக்கிறதோ இல்லையோ..   அபார தன்னம்பிக்கையுடன் தப்புத்தப்பாக எழுதுகிறார்கள்.  அவரவர்கள் அரசியல் சார்புகளுக்கு ஏற்ப பதிப்பகங்கள் கிடைத்து அந்த குப்பைகள்  நூல் வடிவமாகின்றன..

தமிழ் ஆளுமையும் இல்லாத , வாழ்வியல் தரிசனமும் இல்லாத , சத்தியமும் இல்லாத இவற்றை ஒரு சராசரி வாசகன் சட்டை செய்வதில்லை

புத்தக கண்காட்சியில் , சமையல் ஜோதிடம் மொழிஅகராதி என எந்த ஒரு பிரிவிலும் ?அந்தந்த துறைகளில் உச்சத்தில் இருக்கும் நூல்கள் கிடைக்கின்றன.  பரபரப்பாக விற்கின்றன

ஆனால் இலக்கியம் , புனைவு,அபுனைவு என்று வந்து விட்டால் ஏமாற்றம்தான் என பலர் நினைப்பதால்தான் தமிழ் நூலகள் என்றாலே இன்றைய இளைய சமூகம் அலறி விலகுகிறது

உண்மையில் குப்பைகள் சூழ்ந்த இந்த சூழலில் குப்பைக்குள் மாணிக்கங்களும் இருக்கின்றன என்பதே உண்மை

அப்படி நான் தற்போது படித்து முடித்த நல்ல நூல் −   எங்கே போகிறோம் நாம் ?  என்ற "தமிழருவி மணியன்" எழுதிய நூல் (விகடன் பிரசுரம்)

அழகான தங்கு தடையற்ற தமிழ் , ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் , பல்வேறு அறிஞர்கள் குறித்த தகவல்கள் என படிப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எழுதப்பட்டது வாசகனுக்கு மகிழ்வூட்ட அன்று. ஆனால் சத்திய ஒளி ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிரும் நூல் ஒன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வே அவ்வளவு திருப்தியாக இருக்கிறது



முகநூல்  வாட்சப் போன்றவை அற்புதமான தகவல் தொடர்பு சாதனங்கள். ஆனால் அவற்றிலேயே புழங்கிக்கொண்டு அந்த மொழியிலேயே படித்துக கொண்டிருந்தால் கண்டிப்பாக நம் மொழித்திறன் அடி வாங்கும்.  அவ்வப்போது இது போன்ற நூல்களை படிப்பது நம் மொழி வளத்துக்கு நல்லது செய்யும்

அரசியல் நாகரிகம் குறித்த ஒரு கட்டுரை. அதில் லிஙகன் சொன்ன கதை ஒன்றை குறிப்பிடுகிறார்;
.ஒரு பெரிய மனிதரின் தலையில் அவர் மனைவி ஓங்கி அடித்து விட்டாள்.  ஏன் தடுக்கவில்லை என நண்பர்கள் கேட்டனர்

அடிப்பதில் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. எனக்கு அப்படி ஒன்றும் அளவற்ற துன்பம் இல்லை என்றார் அவர்




இப்படி பொருத்தமான நகைச்சுவை , ஊழலில் சிக்கியவர் சட்டமன்ற உறுப்பினராக முடியாது என அந்த காலத்தில் இருந்த சட்டத்தின் மாண்பை மதித்து (???!!!! )  ஊழல் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய இந்திராவின் சாமர்த்தியம் என ஒவ்வொரு பக்கத்திலும் சிறுகதை ஒன்று விரிகிறது

அரசியல்  காதல் இட ஒதுக்கீடு ஆன்மிகம் புரட்சி என அனைத்தும் நேர்மையான பார்வையில் அலசப்படுகிறது

தமிழருவி மணியன் காமராஜ் கலைஞர் மூப்பனார் என பலருடன் நேரில் பழகி அரசியல் களத்தை நேரில் கண்டவர்

இணையத்தில் படிக்கும் அரசியல் செய்திகளை வைத்து நூல்கள் எழுதி தமிழ் அறிவியக்கத்தை அழிக்கும் சூழலில் இம்மாதிரி நூல்கள் ஆறுதல் அளிக்கின்றன









Monday, May 13, 2019

அரிய ரகசியத்தை சொல்லும் நாவல் - இலக்கிய அலசல்


இப்படி ஒரு நடு நிலையான அரசியல் மற்றும் சமூக விமர்சன நாவலை படித்து எத்தனை நாளாகிறது என்ற வியப்புதான் பூரண சந்திர தேஜஸ்வியின் -சிதம்பர ரகசியம் என்ற கன்னட நாவலை படிக்கும்போது ( நான் படித்தது  பா கிருஷ்ணசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பு  ) ஏற்படுகிறது

இஸ்லாமியர் இந்துக்கள்  தலித் பிராமணர்கள் பிற்படுத்தப்பட்டோர் அரசூழியர்கள் காட்டுவாசிகள்  ஆன்மிகவாதிகள் பகுத்தறிவுவாதிகள்
என யாரையுமே விட்டு வைக்கவில்லை.. அவ்வளவு ஏன் ,.. எழுத்தாளர்களையுமே விட்டு வைக்கவில்லை.. அனைவருமே கேலி செய்யப்படுகின்றனர்

கர் நாடகத்தின் ஒரு கிராமத்தில் நடக்கிறது கதை.. ஏலக்காய் ஆய்வு மையத்தின் தலைவர் ஜோகிஹல் கொல்லப்பட்டு இருக்கிறார்.. அவர் ஏன் கொல்லப்பட்டார்... ஏலக்காய் உற்பத்தியை நிர்ணயிக்கும் காரணி எது என்பதை துப்ப்றிய ( ? ) ஷியாம் நந்தான் அங்காடி என்ற உளவுத்துறை அதிகாரி அந்த ஊருக்கு வருகிறார்...

அந்த ஊரில் ஒரு கல்லூரி இருக்கிறது...மாணவர்கள் பகுத்தறிவு இயக்கம் நடத்துகின்றனர்... ( டாக்டர் கோவூர் நாவலில் அவ்வப்போது வருகிறார் )

அந்த ஊரில் ஏற்படும் இஸ்லாமிய செல்வாக்கை ஒடுக்க இந்துக்கள் போட்டியாக மந்திரங்கள் ஓதுகின்றனறனர்

 என்ன ட்விஸ்ட் என்றால் பகுத்தறிவு இந்துயிசம் இஸ்லாமியிசம் என எதுவுமே அந்த்தந்த சித்தாங்களுக்குமே உண்மையாக இருப்பதில்லை.. எல்லோருக்குமே ஒரு சுய நல செயல்திட்டம் இருக்கிறது.. அதற்கு ஒரு முகமூடியாக சித்தாத்தங்களை பயன்படுத்துகின்றனர்

கிருஷ்ண கௌடா என்பவர் வீட்டின் மீது இரவில் கற்கள் விழுகின்றன.. சாதி பிரச்சனையா. வர்க்கப்பிரச்சனையா... காதல் விவகாரமா.. பேயா ... கற்களுக்கு எது காரணம் என யாருக்கும் புரியவில்லை


ஜோகிஹல் இறந்து விட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று ஒரு பிரச்சனை வேறு கிளம்புகிறது

உண்மை என்பது என்ன .., நடப்பதா அல்லது பலரும் சொல்வதா என்ற விவாதங்கள் நடக்கின்றன

இய்றகையை மனிதன் இப்படி அழித்துக்கொண்டே சென்றால் என்ன ஆவது என்ற கேள்வியும் பிறக்கிறது..


கொலையாளி யார்.. கற்களை வீசியது யார் என்ற ரகசியங்களை கண்டு பிடிக்கும் முன் காதல் விவாகரத்தை முன் வைத்து ப்ழைய பகைகளை தீர்த்துக்கொள்ள கலவரம் தூண்டி விடப்படுகிற்து

அறிவி ஜீவிகள் , பணக்காரர்கள்  வியாபாரிகள் என அனைவரும் அதில் சிக்கிக்கொள்ளும்போது அதில் இருந்தெல்லாம் விலகி உயர்ந்த ஒரு இடத்தில் நிற்கின்றனர் இந்த பிரச்சனைகளுக்கு காரணமான காதலர்கள்

இப்படி கவித்துவமாக முடிகிறது நாவல்

இப்படி முடிந்தால் அது சினிமாட்டிக்.. ஆனால் இந்த காதலையுமே கூட கேலிதான் செய்கிறார் நாவல் ஆசிரியர்.

உண்மையில்  அது காதலே அல்ல.. வெறும் வயதுக்கோளாறு என்பதை சொல்லி , காதல் என்பதை புனிதப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறார்

ஆக  , என்ன சொல்ல வருகிறார் என்பது பூடகமாகவே விடப்பட்டுள்ளது


மதங்கள் , இசங்கள் , நம்பிக்கைகள் , நம்பிக்கை இன்மைகள் , பகை , காதல் என எல்லாமே இயற்கை தன் வளர்ச்சிக்காக மனிதனை ஆடச்செய்ய பயன்படுத்தும் கருவிகள்தான் என்ற உண்மைதான் சிதம்பர ரகசியமோ என தோன்றுகிறது

உதாரணமாக , கோடிப்பேரை கொல் என சொன்னால் நாம் கொல்ல மாட்டோம்.. உன் சாதிக்கு  மொழிக்கு இனத்துக்கு மதத்துக்கு எதிரி அவர்கள் என நம்மை தூண்டினால் கோடி மக்களை கொல்வோம்...


இதைத்தான் நாவல் சொல்கிறது என சொல்லவில்லை.. இப்படி பல சிந்தனைகளை தூண்டுகிறது நாவல்

படித்துப்பாருங்கள்

சிதம்பர ரகசியம் - பூர்ண சந்திர தேஜஸ்வி

Friday, March 29, 2019

பூமணியின் அம்பாரம்

ஒர் எழுத்தாளரின் அத்தனை சிறுகதைகளையும் ஒரு தொகுப்பாக ஒரே நூலாக படித்து முடிப்பது என்பது ஒரு சவாலாகும்.. காரணம் சில கதைகளை முடித்ததுமே ஒரு பேட்டர்ன் பிடிபட்டு விடும்.. எல்லா கதைகளும் ஒரே மாதிரி இருப்பதால் பாதியிலேயே மூடி வைத்து விடுவோம்.

பூமணியின் அம்பாரம் சிறுகதை தொகுப்பு இந்த சவாலை அழகாக சந்தித்து வெல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை..

முற்போக்கு எழுத்துகளுக்கு என ஒரு பாணி உண்டு,,, அந்த பாணியிலான கதைகள் என்றுதான் நினைத்து படிக்க ஆரமபித்தேன்.. படிக்க படிக்க பூமணியின் எழுத்து, அவர் பாணி,,, அவர்தம் அழகியல்,,, என்னை ஈர்த்து மயக்கி விட்டது.

இசை , நடனம், காபியின் நறுமணம் , எதிர்பால் ஈர்ப்பு என்று இவர் எழுத்து பயணிக்கவில்லை.. ரத்தம், சாதிய கொடுமை , வறுமை, கொலை என்றுதான் பேசுகிறது,, ஆனால் அதை படிக்க வைக்கும் நேர்த்தியுடன் , சிறுகதை என்ற வடிவை புரிந்து கொண்டு கச்சிதமாக வாசகன் முன் வைப்பதில் பூமணி ஒரு முன்னுதாரண எழுத்தாளராக மிளிர்கிறார்

தேவையின்றி ஓர் எழுத்து கூட இல்லாத கச்சிதமான நடை இவருடையது...   ஒரு வரியை ஸ்கிப் செய்தால் கூட , அந்த கதை புரியாமல் போய் விடும்

ஒரு மிகப்பெரிய கொலை , மரணம் , அழிவு சர்வசாதாரணமாக ஒரு வரியில் சொல்லப்பட்டு விடும் என்பதால் ஒவ்வொரு வரியுமே அதீத கவனத்தை கோருகிறது

பொதுவாக ஒரு தொகுப்பில் இருக்கும் ஒரு சிறுகதையின் தலைப்பையே நூலுக்கு தலைப்பு ஆக்குவார்கள்.. அல்லது இன்னாரின் சிறுகதைகள் என தலைப்பு இருக்கும்.,... ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் அம்பாரம் என வட்டார வழக்கை ஒட்டியும் , சிறுகதையில் வரும் சொல்லை வைத்தும் , சிறுகதை குவியல் அல்லது மதிப்பு மிக்க பொருள் குவியல்  , பொக்கிஷம் , களஞ்சியம் என பொருள் வரும்படி அம்பாரம் என பெயர் வைத்திருப்பது அழகு

ஒரு முடிவை மனதில் உருவாக்கிக்கொண்டு அதை நோக்கி கதையை உருவாக்குவது ஒரு பாணி.. கதையின் ஆரம்பத்தில் ஒரு துப்பாக்கி வந்தால் கதை முடிவதற்குள் அது வெடிக்க வேண்டும் என்பது ஒரு கருதுகோள்... அப்படி எல்லாம் எந்த பார்முலாவும் இல்லாமல் நிஜமான வாழ்க்கை எப்படி நிகழ்கிறதோ அப்படி இவரது கதைகள் நம் கண் முன்  நிகழ்கின்றன

ஒரு தாயையும் அவள் சின்னஞ்சிறு மகனையும் ஒருவன் அவர்கள் தலைகளை வெட்டி கொல்கிறான் என்பதை எவ்வளவு உருக்கமாக கொடூரமாக எழுதலாம்,, அந்த பெண்ணின் பார்வையில் கொலைகாரன் பார்வையில் எவ்வளவு விரிவாக எழுதலாம்

ஆனால் இவரது கசிவு கதையில் அது ஒரே ஒரு வரியில் வருகிறது

அவர் சாவும் மிகச்சுருக்கமாக சொல்லப்படுகிறது

அவர் லேசாக வாயசைத்தார்

கா ளி ய ப்பன் ம க ன்

அவனை அழைத்து அருகில் அமர வைத்தனர்

அவர் அவன் கழுத்தையே தடவிக்கொண்டு இருந்தார்

கை சோர்ந்தது... கடைக்கண்ணோரம் குளிர்ந்து போயிற்று

அவருக்கு சாவு வந்தது

--

எழுத்தாளன் தன் உணர்வுகளையோ விமர்சனங்களையோ எந்த விதத்திலும் வெளிப்படுத்தாமல் நடப்பதை அப்படியே பதிவு செய்யும்போது கிடைக்கும் பாதிப்பு செயற்கையான வர்ணனைகளில் இருப்பதில்லை

கசிவு கதை உலகின் சிறந்த கதைகளில் ஒன்று

நகைச்சுவை எள்ளலும் கூட இப்படி இயல்பாக இருந்தாக் சுவை அதிகம்

ஏட்டு ஒருவரும் கான்ஸ்டபிளும் உரையாடுவது ஓர் உதா

கடற்கரை போயிருந்தேன். அந்த அழகுல மயங்கி நேரம் போனதே தெரியல

கரண்ட் போஸ்ட்ல சாஞ்ச்சு தூங்கி இருப்பீங்க அதை மறைக்க இப்படி ஒரு கதையா'

அட அறிவு கெட்டவனே. அந்த இடத்துல எப்படிடா தூங்க முடியும்
'
உங்களுக்கு எந்த இடம்னு இருக்கு,,,ஒண்ணுக்கு இருந்துட்டு வரதுகுள்ள ஒறக்கம் போட்டு எந்திருச்சுருவீங்க்ளே

ஒருத்தன் காபி வித்துட்டு வந்தான்.,.. ரெண்டு தடவை வாங்கி குடிச்சேன்...துட்டு கொடுத்துட்டேன்

நான் அதை கேட்டேனா

உன் முழியே சரி இல்லையே

இப்படி இயல்பான உரையாயடல்களால் சித்திரிப்புகளால் நகர்கிறது கதை.

மட்டம் என்றொரு கதை

சாதி பிரச்சனை காரணமாக ஒரு சாராரை கோயிலில் நுழைய அனுமதிப்பதில்லை .. காலப்போக்கில் உரிமை குரல் எழுகிறது,, சண்டை கலவரம் என நடந்து ஒரு வழியாக அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகின்றனர்

ஆனாலும் சண்டையை இரு தரப்பாலும் மறக்க முடியவில்லை... இந்த சூழலில் இரு தரப்பிலும் மூத்தவர்கள் இருவர் ஒரு ரயில் பாதை அருகே தற்செயலாக சந்திக்கின்றனர்

தம்மை எதிராளி தாக்கிவிடுவானோ என இருவருக்குமே அச்சம். தயங்கியபடி ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.. ஒரு ரயில் இருவருக்கும் நடுவே சென்று சில நிமிடங்கள் அவர்கள் பார்வையை மறைக்கிறது..ரயில் சென்றதும் ஒருவர் கையிலும் கல் இல்லை என்பதால் தாக்கும் எண்ணம் இல்லை என்பது புரிகிறது

பக்கத்து குளத்தில் கால் கழுவுகின்றனர்

ஆலய நுழைவை எதிர்த்தவர் இயல்பாக பேச்சை ஆரம்பிக்கிறார்

குளம் வத்திப்போச்சு.. குளம் நிரம்பினால்தால் வீட்டுல கிணறு நிரமபும்

அப்படி இயல்பாக பேச்சு தொடர்கிறது

ஆமா.. இரண்டிலும் நீர் மட்டம் நல்லா இருந்தால்தான் விவசாயம நல்லா  இருக்கும்

இபப்டி நட்புறவுடன் பேச்சு தொடர்கிறது

வற்றிக்கிடக்கும் குளத்தின் நீர் மட்டம் உயரர வேண்டும்...மன உயர்வு வேண்டும் என்பது போன்ற பல எண்ணங்கள் சிறுகதையை படிக்கையில் தோன்றியது

நாக்கு என்று ஒரு கதை..   அப்பாவியாக அமைதியாக இருக்கும் ஒருவன் நாக்கை பொய் வழக்கு போட்டு விசாரணை என்ற பெயரில் போலிஸ் வெட்டி விடுகிறது

அவனுக்கு நிகழ்ந்தற்கு பதிலடியாக இந்த சமூகத்தை திட்ட அவனிடம் நாக்கு இல்லை.. ஆனால் அவனே . அவன் இருப்பே நாக்கு ஆகி விடுகிறது,.. முரடனாகி வன்முறையில் ஈடுபாடு கொண்டவனாக மாறி விடுகிறான்..

பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த தொகுதியில் 51 கதைகள் உள்ளன.. ஒவ்வொன்றைப்பற்றியுமே விரிவாக பேசலாம்,

நீங்களும் படியுங்கள்..விவாதிப்போம்

Friday, March 22, 2019

ஆல்வின் காளிச்சரண் சொன்ன அற்புத நிகழ்ச்சி


கிரிக்கெட் உலக வரலாற்று நாயகர்களில் ஒருவரான ஆல்வின் காளிச்சரண் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றை ஹிந்து  நாளிதழ் ஏற்பாடு செய்திருந்தது

அவர் எழுதி வெளியாக இருக்கும் கலர் ப்ளைண்ட் ( நிறக் குருடு ) நூலுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி இது

 பெரிய விளம்பரங்களோ அறிவுப்புகளோ இன்றி  நூல் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டில் இவ்வளவு கூட்டமா என ஆச்சர்யமாக இருந்தது’

கேள்விகள் நிகழ்ச்சியின்போது  , பார்வையாளர்கள் ஷார்ப்பாக சுருக்கமாக கேள்விகள் கேட்டது ஆச்ச்ரயமாக இருந்தது

குறித்த நேரத்தில் ஷார்ப்பாக நிகழ்ச்சியை ஆரம்பித்தது  குறித்த நேரத்தில் பார்வையாளர்கள் அனைவரும் வந்திருந்து அரங்கை நிரப்பியது , அப்புறம்டா மச்சி என போனில் மொக்கை போடாதது என அதிசயத்து அமர்ந்து இருந்தேன்..

அதே தமிழ் நாடு.. அதே தமிழக மக்கள் ,   ஆனால் தமிழ் நூல் நிகழ்ச்சிகளில் இவர்களது வேறு விதமாகவும் ஆங்கில நூல் நிகழ்ச்சிகளில் வேறு விதமாகவும் இருப்பது ஏன் என  காரணம் தெரியவில்லை


கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய மற்ற பணிகளுக்காக தமிழ் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோர் ஏராளம் .. புலம்பெயர்ந்து கஷ்டப்பட்டு அவமானங்களை சந்தித்து மரணங்க்ளை சந்தித்து அந்தந்த நாடுகளின் குடிமகன்களாக மாறிப்போனவர்கள் பலர்.. மனதில் ஆழத்தில் தமிழ் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கும்.. அந்த உணர்வை நாம் புரிந்து கொள்வது கடினம்


ஆல்வின் காளிச்சரண் பல சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்,... அவை எல்லாம் நூலில் வெளி வரக்கூடும்.. வராவிட்டால்  நான் எழுதுவேன்..


நிகழ்ச்சியில் என் ராம் அவருடன் உரையாடியது அழகு என்றால் விவி குமாரின் பேச்சும் அவர் நினைவுகூர்ந்த தகவல்களும் அருமை..

காளிச்சரண் குறிப்பிட்ட ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று

ஒரு முறை தென் ஆப்ரிக்காவில் சிலரால் கடத்தப்பட்டார் அவர்.. அப்ப்படி கடத்தப்படுபவர்கள் உயிருடன் மீள்வது அரிது... அவரிடம் இருந்த பணத்தை எடுக்க சொன்னார்கள்..  அவர் தலை மீது துப்பாக்கியை வைத்து இருந்தனர்

சங்கிலியை கழட்ட சொன்னார்களாம்.. அது சத்ய சாய் பாபா அளித்த சங்கிலி அது... பார்த்து விட்டு கொடுத்து விட்டார்கள்...என்ன தோன்றியதோ...அவரை அப்படியே விட்டு விட்டு , எதையும் திருடாமல் விட்டு விட்டனர்


பிறகு இந்தியா வந்தபோது சாய் பாபாவை சந்த்தித்தார்...

ஸ்வாமி...என் உயிரை காத்தமைக்கு நன்றி என்றார்

பாபா சொன்னாராம்... “ எந்த சம்பவத்தை சொல்கிறாய்..தலை மீது துப்பாக்கி வைத்தார்களே..அதுவா ? “ என்றாராம்

நம்மை சுற்றி எத்தனையோ அற்புதங்கள்..ஆனால் நன்றியுடன் வாழ்பவர்கள் சிலரே...

Monday, March 18, 2019

காசி ஆனந்தன் கவிதை நூல் - ஒரு பார்வை


கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்

இலங்கை படுகொலைகளை பலரும் மறந்து விட்டு காங்கிரஸ் ஆதரவாளர்களாக மாறி விட்ட சூழலில் , இன்றும்கூட காங்கிரஸ் எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் சிலரில் இவரும் ஒருவர்..

அவர் கவிதைகள் பலவும் பிரபலமானவை என்றாலும் , காசி ஆனந்தன் நறுக்குகள் என்ற கவிதை நூல் தனித்துவம் வாய்ந்தது என்பதால் அனைவரும் வாங்கிப்படிக்கலாம்

அதற்கு முக்கிய காரணம் , இவரது முன்னுரை.. சிறுகதை , புதுக்கவிதை போன்றவை ஆங்கிலத்தில் இருந்து இங்கு வந்தன என்ற கருதுகோளே தவறு என ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்... ஆங்கிலம் என்ற மொழி தோன்றுவதற்கு முன்பே , தமிழில் கவிதைகள் வந்து விட்டன என ஆதாரங்கள் தருவது ஆச்சர்யம் அளிக்கிறது

பாரதிதாசனை ஏற்போர் சிலர் பாரதியை ஏற்பதில்லை..இவரோ இருவரையும் ஏற்கிறார்..அதுதான் கவிதை மனம்,, இருவரைப்பற்றியும் அழகாக எழுதி இருக்கிறார்

இன்னொரு சிறப்பம்சம் , திகசி யின் அணிந்துரை

சிறப்பு மேல் சிறப்பாக இன்னொரு சிறப்பு , வல்லிக்கண்ணனின் சிறப்புரை

வீர சந்தானம் அவர்களின் ஓவியம் கூடுதல் சிறப்பு

கண்டிப்பாக படியுங்கள்

நூல் : காசி ஆனந்தன்  நறுக்குகள்




சில கவிதைகள்



முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!


நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.


பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி



கோயில்..

செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.


தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.


வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்


பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர் 


வெறி..
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…
எரிந்ததுஅடுப்பல்ல-சேரி


வீரம்..
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு . 


சாமி..
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம். 


நிழல்..
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்
மாவீரன்..இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;


போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.


உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?


மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….


மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.


அறுவடை..
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது


மந்தை..
மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…
நீ என்றேன்
கைதட்டினான்


பெண்..
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.


கொடை..
தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்
செலவுக்குவைத்துக்கொள்
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்.


திமிர்..
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்


கொலை..
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு


அடக்கம்..
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்


உலகமைதி..
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.


அடி ..
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.


ஆணாதிக்கம்..
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்


வேலி..
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா


காலம்..
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.


கடற்கரை..
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரியஇடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்


நிலவு..
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.


இருள்..
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…
எங்கேவெளிச்சம்?


தாஜ்மஹால்..
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?


புலமை..
கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக
இவன் உவமைகளும்…முத்துக்கள்
என்றானே கண்ணீரை!


பால்..
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்


அரண்..
என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்.


தேர்தல்..
மாலை வளையல் ழூக்குத்தி
பென்னான எதுகும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் செல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்…
பொன்னான வாக்குகள்

இனவெறி..
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்…
மனிதர்களையே காணவில்லையே.


குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.


ஏழ்மை..
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்


கண்ணோட்டம்..
செருப்பைப்பார்கையில் நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்


நிமிர்வு..
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?


கூண்டு..
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்


மண்..
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?


குடுகுடு..
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா