Showing posts with label வாலி. Show all posts
Showing posts with label வாலி. Show all posts

Sunday, November 7, 2021

வாலி−லட்சுமணன் , பரதன் − லட்சுமணன்.. சுவையான ஒப்பீடு

 ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் வெகு உயர்வாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

நல்ல மகன், நல்ல நண்பன் ,  நல்ல கணவன் ,  நல்ல அரசன் என ஜொலிக்கும் அவனது புகழுக்கு சற்றே மாசு ஏற்படுத்துவது வாலியை அவன் கொன்ற விதம்தான்.

ராமன் − வாலி பகுதி ராமாயணத்தில் − குறிப்பாக கம்ப ராமாயணத்தில் − வெகு அற்புதமாக ஒரு சிறப்பான திரைகதையாக மிளிர்கிற்து

வாலி என்பவன் ராமன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன்.  ராமன் உன்னைக் கொல்லக்கூடும் என யாரேனும் சொன்னால் , அவர்கள்,மீது சீறுபவன்.  ராமன் எப்பேற்பட்ட குணசீலன் தெரியுமா என வியந்தோதுபவன்.   சீதையை தேடும் ராமனின் பணிக்கு திறமையாக உதவியிருக்கக்கூடியவன்


ஆனால் சுக்ரீவனோ ராமன் மீது பெரிய மரியாதை அற்றவன்.  அண்ணனையே கொல்லத்துணியும் துரோகியை நம்ப வேண்டாம் என்று லட்சுமணன் இவனை இழிவாகவே நினைக்கிறான்.


இப்படி எல்லா விதங்களிலும் உயர்வான வாலியை விட்டுவிட்டு சுக்ரீவனோடு ராமன் கூட்டணி அமைப்பதுதான் பிரபஞ்சத்தின் புரிந்து கொள்ள முடியாத விதி.   எத்தனையோ நல்லவர்கள் திறமைசாலிகள் வாடுவதும் பொய்யர்கள் திறமையற்றவர்கள் செழிப்பதும் அன்றாடக்காட்சிதானே


வாலிக்கு எதிராக விதி எப்படி செயல்படுகிறது,  ராமனின் புகழை கெடுக்க விதி எப்படி செயல்படுகிறது என்பதை ராமாயணம் வெகு துல்லியமாக விளக்குகிறது.


ராமனுக்கு வாலி , சுக்ரீவன் என யாரையும் தெரியாது.  அப்போது கபந்தன் என்ற அரக்கனுடன் மோத வேண்டியது வருகிறது.  கபந்தன் வீழ்த்தப்பட்டு ,  சாபவிமோசன் பெற்று கந்தர்வன் ஆகிறான்

இந்த நன்றிக்கடனுக்காக ராமனுக்கு ஒரு டிப்ஸ் தருகிறான்.  சீதையை மீட்க படைபலம் தேவை , எனவே சுக்ரீவனுடன் கூட்டணி அமையுங்கள் என்கிறான் அவன்

வாலியை அறிமுகம் செய்யாமல் ஏன் சுக்ரீவனை  சொல்கிறான் ?  ஒரு,வேளை பலமும் , வளமும் பெற்ற வாலி மீது அவனுக்கு ஏதும் பொறாமையா என நினைக்கிறோம்;

அடுத்தபடியாக ராமன் சந்திப்பது சபரி எனும் ஞானியை.   அவளிடம்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்கிறான் ராமன்.  சுக்ரீவன் வேண்டாம் , வாலியைப் பாருங்கள் என  அவளும் சொல்லவில்லை.   சுக்ரீவனைப் பார்க்க வழி காட்டுகிறாள்.

கபந்தனுக்கு உள்நோக்கம் இருக்கலாம். தவத்தில் கனிந்த சபரிக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.  ராமன்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்டான் ,  அதை சொல்லி விட்டோம் என்பதைத்தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை

அடுத்தபடியாக அனுமனை சந்திக்கிறான் ராமன். பார்த்ததுமே  ராமனை நேசிக்க ஆரம்பித்துவிட்ட அனுமனும் சுக்ரீவனுக்கு ஆதரவாகவே பேசுகிறான்


கபந்தன் ,  சபரி  மற்றும் அனுமன் என யாரேனும் ஒருவர் வாலியை ஆதரித்து இருந்தால் , வாலியின் உயிரும் ராமனின் புகழும் காப்பாற்றப்பட்டு இருக்கும்


அது நிகழாமல் போனது பிரபஞ்ச பெரு நியதி

இதில் ஒரு சுவாரஸ்யம்


தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவன் நமக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பான் என்ற நியாயமான  சந்தேகம் எழுப்புகிறான் ( பிற்பாடு நன்றி இல்லாமல் நடந்து கொண்டு இந்த சந்தேகத்தை உண்மையாக்குகிறான் சுக்ரீவன்)

லட்சுமணன் கேள்விக்கு ராமன் சரியாக பதிலளிக்கவில்லை.  சரி விடு , அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என மழுப்பிவிடுகிறான்

ஆக தனக்குப் பிடிக்காத  ஒருவனுக்காக தன்னை மதிக்கககூடிய ஒருவனை கொன்று பழி சுமக்கும் சூழல் உருவாகி விடுகிறது


கடவுள் அவதாரம் என்றாலும் விதியை வெல்ல முடியாது என்ற இந்த பகுதி அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று

பின்குறிப்பு

இதில் ஒரு சுவாரஸ்யம்.  அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவனை நம்ப வேண்டாம் என்கிறான் லட்சுமணன்

ஃப்ரீயா விடு.. அவனுக்குத் தெரிஞ்சது

அவ்வளவுதான். சகோதர பாசம் அரிது.  எல்லோரும் உன்னைப் போல இருப்பார்களா என்றுதானே  சொல்லி இருக்க வேண்டும் ?

ஆனால் ராமன் இப்படி  சொல்கிறான்

சகோதர பாசம் அரிது.  எல்லோரும் பரதனைப்போல இருப்பார்களா?  பரதனின் பாசத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியுமா என  பரதனை லட்சுமணைவிட ஒருபடி மேலாக வைத்து பேசுகிறான் ராமன்

சுவையான இடம்




Monday, September 14, 2020

சந்தர்ப்பவாதமே நல்லது !! கவிஞர் வாலியும், சில சினிமா கலைஞர்களும்

 

கவிஞர் வாலி  தன் கட்டுரையொன்றில் இங்கனம் குறிப்பிடுகிறார்

------------------------

இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?

# 2 ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ”வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!”

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

# 3 என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்’ என்று மெல்லிய குரலில் சொன்னார்.

# 4 சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.

ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.

‘ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-

கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.


என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.


நாடகம் எழுதித் தரக் கேட்டவர் – நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் – தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் – திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!


--------------

  வறுமையில் தள்ளப்பட்ட கலைஞர்களைப்பார்த்தபின் சந்தர்ப்பவாதம் என்பது தவறில்லை என்ற முடிவுக்கு அவர் வந்ததை நேர்மையாக ஒப்புக்கொண்டது பாராட்டத்தக்ககது..


அந்தக்காலத்தில் திமுக ஆட்சி நடந்தபோது இனியொரு வாய்ப்பு கிடைக்காது என நினைத்ததுபோல வீராணம் ஊழல் , மஸ்டர் ரோல் ஊழல் , பூச்சிக்கொல்லி மருந்து ஊழல் , குளோபல் தியேட்டர் மோசடி என புகுந்து விளையாடினர்



அப்போது கலைஞரை விமர்சித்து வாலி எழுதிய பாடல் இது

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்


வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே

தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே

ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்

தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே

இப்படி எம்ஜிஆர் படத்தில் எழுதினார்.




எம்ஜிஆர் மறைந்தபின் திமுக ஆட்சிக்கு வந்தபின் கலைஞரைப் பாராட்டி இப்படி எழுதினார்




நீ பாலுாட்டும் தாயானாய்


நான் வாலாட்டும் நாயானேன்


இப்படி சந்தர்ப்பவாதமாகப்பேசி கடைசி"வரை வளமாக வாழ்ந்தார்


,.......

தியாகராஜபாகவதரும் இப்படி நடந்து கொண்டிருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம்

அம்பிகாபதி படத்தில் நாயகனாக நடித்தவர் அவர். பிற்காலத்தில் அதே படம் சிவாஜியை நாயகனாக வைத்து எடுக்கப்பட்டது. அம்பிகாபதியின் அப்பாவாக நடிக்க கோரி அவரை அணுகினர். 


நான் நாயகனாக நடித்த கதையில் சிறு வேடத்தில் நடிக்க மாட்டேன் என சுயமரியாதையுடன் மறுத்துவிட்டார்.  அவர் நாயகனாக நடித்தபோது பெற்ற ஊதியத்தைவிட அதிகம் தர  முன்வந்தும் ஏற்கவில்லை


சந்திரபாபு என்ற அருங்கலைஞனும் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசியதால் வறுமைக்கு ஆளானார்


அந்த கட்டுரையில் வரும் சாவித்திரியும் இளங்கோவனும் சுயமரியாதைமிகு கலைஞர்கள்


அவர்கள் வரலாற்று நாயகர்கள். வாலியோ வறுமைக்கு அஞ்சி சந்தர்ப்பவாதி ஆகி விட்டார்.



இன்று திமுகவைப் பாராட்டினால் ஊடக வாய்ப்புகள்  , பிஜேபியைப் பாராட்டினால் அரசு விருதுகள் என்ற தற்கால சூழலில் பெரும்பாலான படைப்பாளிகள் திமுக அல்லது பிஜேபி சார்பு நிலைக்கு சென்று விட்டனர் கைமேல் பலனும் பெறுகின்றனர்.

ஆனால் உண்மையான"படைப்பாளிகளுக்கு பாரதியின் இவ்வரிகளே வேதம்


பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

− பாரதியார்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா