Showing posts with label வீணை பாலச்சந்தர். Show all posts
Showing posts with label வீணை பாலச்சந்தர். Show all posts

Wednesday, November 6, 2013

ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் அந்த கால படம் - அவனா இவன்

உலக படங்களை தேடி தேடி பார்க்கிறோம். ஆனால் தமிழிலேயே எத்தனையோ உன்னதமான சினிமாக்கள் வந்துள்ளன. அதை பார்த்திருக்க மாட்டோம்.  பார்த்த பின்புதான் அட்டா, இதை எப்படி மிஸ் செய்தோம் என நினைப்போம். அப்படி இன்று பார்த்த படம்தான் வீணை எஸ் பாலச்சந்தரின் அவனா இவன் படம்.

இப்படி ஒரு படம் இருக்கிறது... அதை பாருங்கள் என எனக்கு சொன்னவர் நண்பர் காரிகன். அந்த நாள் படம் பார்க்கவும் இவர்தான் உந்துசக்தியாக இருந்தார்.




குறிப்பாக அவனா இவன் பார்க்கையில் இவரை அடிக்கடி நினைத்துக்கொண்டேன்.

பழைய படங்களை பார்க்கையில் சில சலுகைகள் கொடுத்து ஸ்ட்ரிக்டாக மதிப்பிடுவதை தவிர்ப்போம். அந்த காலத்துக்குரிய நாடக பாணியிலான ஓவர் ஆக்டிங் , பாடல்கள்,  செயற்கையான வசனங்கள் போன்றவற்றை பழைய படம்னா அப்படீத்தான் இருக்கும் என சலுகை கொடுத்து ரசிப்போம். ஆனால் இத்தகைய சலுகைகளை கோராமல் இன்று எடுக்கப்பட்ட புதுப்படம் போல மிளிர்கிறது அவனா இவன். கேமிரா கோணங்கள் , திரைக்கதை , இசை , பாடல் இடம்பெறும் இடம் என ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.

ஆரம்பத்தில் பாடல் , சண்டைக்காட்சி , கோயிலில் சாமி கும்பிடுவது என இல்லாமல் முதல் ஷாட்டிலேயே கதை ஆரம்பித்து விடுகிறது. ஒரு சிறுவன் , சிறுமி , பெற்றோர் , மூத்த மகள் , அவள் காதலன்,  அவளை மணக்க துடிக்கும் நாயகன் என பிரதான பாத்திரங்கள் சில நிமிடங்களிலேயே அறிமுகம் ஆகி விடுகின்றனர்.

பணத்துக்காக நாயகியை மணக்க விரும்பும் நாயகன் , தன் காதலியை கொன்று விடுகிறான். அவன் பிடிபட்டானா , நாயகி அவனிடம் இருந்து தப்பித்தாளா என்ற திசையில் படம் செல்லப்போகிறது என்பது சில நிமிடங்களில் தெளிவாக தெரிந்து விடுவதால் படத்துடன் ஒன்ற முடிகிறது. அவன் பிடிபடுவான என்ற சஸ்பென்ஸ் கடைசி வரை நீடிக்கிறது.

கதா நாயகன் தன் காதலியை கொல்லும்போது தற்செயலாக ஒரு சிறுமியும் ( நாயகியின் தங்கை ) அவள் தோழனான சிறுவனும் பார்த்து விடுகின்றனர் என்பது சுவையான ட்விஸ்ட்.

பாதிப்படத்தில்தான் இது நிகழ்கிறது. அதுவரை தன் அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை அவன் என்பது சிறுமிக்கு தெரியாது. திருமண பத்திரிக்கியை கொடுக்க வரும்போதுதான் அவன் முகத்தை பார்த்து பீதி அடைகிறாள்.. அன்று பார்த்த கொலைகாரனா இவன், அவனா இவன் என அதிர்கிறாள். இந்த இடத்தில் டைட்டில் ஓடத்தொடங்குகிறது. கிட்டத்தட்ட பாதிப்படம் முடிந்த நிலையில் டைட்டில் ஓடுவது அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த டைட்டில் இசையை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எளிமையான் இசைக்கருவிகளை வைத்து மாயாஜாலம் செய்து இருக்கிறார் எஸ் பாலச்சந்தர் . கதை , திரைக்கதை , இயக்கம் , இசை இவர்தான் .  பியானோ மேதை ஹாண்டல் மேனுவல் இதில் பணியாற்றி இருக்கிறார். பாடல்கள் மற்றும் வசனம் வித்வான் வே லட்சுமணன்

டைட்டில் இசை உங்கள் செவிகளுக்கு

படத்தில் பின்னணி இசை கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். முக்கியமான கட்டங்களில் மட்டுமே இசை ஒலித்து சிலிர்ப்பூட்டுகிறது. உதாரணமாக கொலைக்காட்சி. நாயகன் தன் காதலியுடன் ஜாலியாக பேசிக்கொண்டு செல்கிறான், அப்போது இசை ஏதும் இருக்காது, பறவைகள் ஒலிகள் , காற்றோசை கேட்டுக்கொண்டு இருக்கும். கொலை செய்து விட்டு அவள் பிரேதத்தை அப்புறப்படுத்தும் நேரத்தில் பறவை ஓசையா கேட்கும்.. பதட்டம் மட்டும்தானே இருக்கும். இதை அழகாக உணர்ந்து , இசையை அளித்து இருப்பார் பாலச்சந்தர். சிலிர்ப்பூட்டும் அந்த இசையை கேட்டுப்பாருங்கள்.கொலையின் இசை

கருப்பு கண்ணாடி , கருப்பு ஆடை , வாயில் புகையும் சிகரட் என ஸ்டைலாக நடித்து இருப்பார் பாலச்சந்தர் . அலட்டிக்கொள்ளாத வில்லன் ரோலை அன்றே செய்து இருப்பது ஆச்சர்யம். கடைசியில் கைதாகி செல்லும்போது சிறுமி டாட்டா காட்டுவாள். அதற்கு அவர் ரெஸ்பான்ஸ் அற்புதம்.

இயல்பான வசனங்கள் , கதையோட்டத்தில் அமைந்த காமெடி, இனிய பாடல்கள் என படம் சுவையான அனுபவமாக இருக்கிறது.

குழந்தைகள் கொலையை பார்த்து விட்டாலும் யாரும் அவர்களை நம்பவில்லை. கொலைகாரனிடமே சென்று , நீ கொலைகாரன் என்பது தெரியும் . கல்யாணம் வேண்டாம் என வாதிடுவார்கள். அந்த காட்சியில் காமெரா விளையாடி இருக்கும். அன்றே கேமிரா மொழியை பயன்படுத்தி இருப்பது வியப்பளித்தது.

அந்த காலத்தில் ஆங்கிலம் கலந்து பேசுவது , அதிலும் நேர்த்தியாக பேசுவது படிப்பிற்கான அடையாளமாக இருந்து இருப்பது தெரிகிறது.

சி கே சரஸ்வதி , வீ எஸ் ராகவன் , செருகளத்தூர் சாமா போன்ற சிலர் அந்த படத்துக்கு பிறகும் வெகு நாட்கள் நடித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீ எஸ் ராகவன் இன்றைய யுகத்திலும் கூட சில படங்களில் நடித்தது ஆச்சர்யம்தான். இம்சை அரசன் படத்தில் முக்கியமான ரோலில் வருவாரே.. இதில் குழந்தையாக வரும் பேபி பத்மினியும் பிறகு நிறைய நடித்தார்.

மொத்ததில் அவனா இவன் படம் ஆங்கிலப் படங்களுக்கு சவால்விடும்  அந்த கால படம் 








Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா