Monday, December 29, 2025

மண்ணில் கால் பதித்து நடக்கும் நாவல்

சார் பேப்பர்– பேசப்படாதவர்களை பேசும் நாவல் - பிச்சைக்காரன் 

( வையம் டிசம்பர் 2025 வார இதழில் வெளியானது) 



         இந்திய இலக்கியத்தில் இந்தியாவின் உண்மையான முகம் வெளிப்படுகிறதா? இந்திய இலக்கியம் என இங்கே பொதுவாக முன்வைக்கப்படுவது எளிமையான அன்றாட அரசியலை முன்வைக்கும் எழுத்துக்கள். சாதாரணமான சமூகஉண்மைகளை சாதாரணமாகச் சொல்லும் இதழியல் எழுத்துக்கள் என்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதைப் படித்தேன். 

  அவரது உணர்வு சரியானதுதான். பார்ப்பதை அப்படியே பதிவு செய்வது நல்ல எழுத்தாகாது. ஆனால் இன்றைய எழுத்தின் பிரச்சனை அது அல்ல.


        இன்று பலருக்கு நேரடி அனுபவம் என பெரிதாக எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை உள்வாங்கும் திறன் இல்லை. உலகுக்கும் அவர்களுக்கும் தொடர்பாக இருப்பவை சமூக ஊடகங்களும் அதில் பேசப்படும் அரசியலும்தான். 

              அதைப்படித்து விடுத்துவிட்டு ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து முகநூலில் பேசப்படும் அரசியல் கலந்து ஒரு கதையை எழுத, அதை முகநூலில் இருப்பவர்கள் பாராட்ட, அது நூல் வடிவமும் பெற்று விட தம்மை எழுத்தாளர்களாக கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையான வாழ்க்கை பதிவாவதில்லை.

             அதனால்தான் நம் அன்றாட வாழ்வில் சில நிமிடங்கள் வந்து போகும் கொரியர் சேவையினர், கேஸ் போடுபவர்கள், நியூஸ் பேப்பர் போடுபவர்கள் போன்றோரை நம் வேலை முடிந்ததும் அப்போது மறந்து விடுகிறோம். அவர்கள் பற்றி பெரிதாக எங்கும் பதிவாவதில்லை. 


                     இந்த சூழலில் அறிவுமணி அவர்களின் சார் பேப்பர் நாவல் சென்ற புத்தகக் கண்காட்சியின்போது வெகுவாக கவனம் ஈர்த்தது. காரணம் பேப்பர் போடுபவர்கள் நம் வாழ்வில் கலந்தவர்கள். கொரானா கால கட்டத்தில் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டபோதுகூட நாளிதழ்கள் வந்து கொண்டு இருந்தன.மக்களை அடைந்து கொண்டு இருந்தன. ஊரடங்கு, மழை, வெயில் என சிக்கலான கால கட்டங்களிலும் செய்தித்தாள்கள் விநியோகம் தடைப்படுவதில்லை. இப்படி நம்மை பேப்பர் தவறாமல் வந்து அடைகிறது என்றால் அதற்குப்பின் பலரது உழைப்பும் தியாகமும் இருக்கிறது. தூக்கம் கெட்டு வெயிலிலும் மழையிலும் அலைவதால் ஏற்படும் உடல்நலப்பிரச்சனைகள், நாய்ப்பிரச்சனைகள், சாலை விபத்துகள், பிரச்சனை செய்யும் வாடிக்கையாளர்களை சமாளித்தல் என அனைத்தையும் ஒரு ஷாக் அப்சார்பர்கள் போல தாங்கிக்கொண்டு நமக்கு அன்றாடம் ஞானத்துளியை அளிக்கும் தொழிலாளர்கள் குறித்து பதிவு செய்யும் நாவல் என்ற முறையில் இந்த நாவல் நல்லதொரு கவனம் பெற்றது. 


                  நாவலின் நாயகன் செய்தித்தாள் என குரல் கொடுக்கும் அளவுக்கு தமிழ்ப்பற்று மிக்கவன். தாங்கள்தான் செய்தித்தாள் விநியோகிப்பாளரா ? என கேலிக்கு உள்ளாபவன். நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதால் பெரிய அளவில் ஜொலிப்பான் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாதாரண ஊதியத்தில் பேப்பர் போடும் தொழிலில் இருப்பவன், இந்தத் தொழில் என்றல்ல பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு ஒவ்வொன்றையுமே ஊக்கத்துடனும் தனித்துவத்துடனும் செய்து தோன்றில் புகழுடன் தோன்றுக என்பது போல திகழ்பவன், குடும்பம் உள்ளிட்ட அனைத்து அதிகார மையங்களையும் எதிர்ப்பவன், யாருக்கும் தலை வணங்காதவன், இடதுசாரி தோழர் ஒருவருடன் நெருக்கமாய் இருந்து தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக உணர்பவன் என அழுத்தமான நாயகன். செயற்கையாக ஊதிப்பெருக்கப்படாத நிஜமான நாயகன் குடும்பம் உள்ளிட்ட எந்த அதிகார அமைப்பு முன்பும் தலை வணங்காதவன்.                            சில ஆண்டுகள் முன்னர் every road is paved with gold என்ற நூல் படித்தேன். தேவூ கார் நிறுவன நிறுவனர் வூ-சூங் கிம் சுயவரலாற்று நூல். பேப்பர் போடும் வேலையில்தான் தனது தொழில் வாழ்வைத்தொடங்கினார். அவ்வேலையுமேகூட தனது அண்ணனுக்குப் பதிலாக செய்ய நேர்ந்த வேலைதான். வாடிக்கையாளருக்கு செய்யவேண்டிய துரித சேவை, புன்னகையுடன் சேவை செய்தல், போட்டியாளர்களை மிஞ்சிக்காட்டுதல் என பலவற்றை அங்குக் கற்றுக்கொண்டது பிறகு சர்வதேச அளவில் தொழில் செய்ய உதவியதாக சொல்கிறார். 


        Rain: What a Paper boy Learned About Business' என்ற புகழ்பெற்ற நூலும் நினைவுக்கு வருகிறது வெளிநாடுகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேப்பர் போடுவதை பகுதிநேரமாகச் செய்வதும் பயோ டேட்டாவில் அதைக் குறிப்பிட்டால் அதற்கென சிறப்பு கவனம் கிடைப்பதும் வழக்கமான ஒன்றுதான். 


         ஆனால் நம்மூரைப் பொருத்தவரை வேலை செய்கின்றவனுக்கு வேலையைக் கொடு வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு என்ற மனப்பான்மை நிலவுவதால் இதில் கடுமையாகவும் திறமையாகவும் உழைக்கும் நாயகனுக்கு வீட்டு விசேஷங்களுக்குக்க்கூட போக முடியாத அளவு வேலை அவனை முழுமையாக உறிஞ்சி எடுப்பதை நாவல் அழகாக பதிவு செய்கிறது விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசும்கதைகளில் வழக்கமாக காணப்படும் கொடூரமான ஆதிக்க சக்தி என்ற பிரதான எதிர்மறைப் பாத்திரம் இதில் இல்லை, முழுக்க முழுக்க கண்ணீரில் மிதக்கும் சுரண்டலுக்கு உள்ளாகும் நாயகன் என்ற சித்தரிப்பும் இல்லை ஜாதிய ஆதிக்க சக்திகள் வருகின்றனதான்.. ஆனால் அவை இடதுசாரி தோழர் ஒருவர் துணையுடன் முறியடிக்கப்படுகின்றன. வர்க்க ரீதியான சுரண்டல்கள், சிறுமை கொண்ட பாத்திரங்கள் என பல பாத்திரங்கள் எதிர்மறை அம்சத்துடன் வந்தாலும் பிரதான எதிர்மறைப் பாத்திரம் இல்லை. 


                    ஆனாலும் நாயகனின் தம்பி பாத்திரம் சுவையாகவும் நாயகனுக்கு எதிர்நிலையிலும் சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது தம்பியும் தன் மானம் மிக்கவன்.. அதிகாரத்துக்கு எதிரானவன். ஆனால் அண்ணன் அளவுக்கு திறமைசாலியோ உழைப்பாளியோ அல்லன்,, ஆனால் தன் வலியறிந்த புத்திசாலி என்ற பாத்திர வார்ப்பு சிறப்பு இருவரும் சேர்ந்துதான் பேப்பர் போடுகிறார்கள் 


              தினமலர், தந்தி, மணி, கரன், தீக்கதிர், ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ் என ஒவ்வொரு பத்திரிக்கைக்குமான வாசகப் பரப்பு, நிர்வாக ரீதியான ஒவ்வொன்றின் செயல்பாடு எனப்படிக்கும்போது நாம் படித்து வளர்ந்த பேப்பர்கள் பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற ஆச்சர்யம் ஏற்படுகிறது. கேபி கந்தசாமி அவர்களால்நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வந்த தினகரன் இதழ் தனித்துவமான ஒன்றாகும். 


             அதன் தலையங்கள் பலராலும் ஆழ்ந்து கவனிக்கப்பட்டவை. ஒரு கட்டத்தில் அதை முழுமையாக சன் குழுமம் வாங்கி அதன் உள்ளடக்கம், தாளின் தரம், வாக்கிய அமைப்புகள் போன்ற அனைத்தையுமே இன்னொரு பிரபல இதழ் போல மாற்றி விட்டது. அதில் வேலை செய்த பலர் பணியிழந்து புதியவர்கள் அமர்த்தப்பட்டனர் என்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அதன் விலை வெறும் ஒரு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ரூபாய் கான்செப்ட் என்பது பெங்களூரு போன்ற நகரங்களில் ஆங்கில இதழ்கள் கடைப்பிடித்த ஒரு யுக்திதான் என்றாலும் சன் டிவியின் இடையறாத விளம்பரத்தால் ஒரு ரூபாய் தினகரன் என்பது அப்போது டிரெண்ட்டிங்கில் இருந்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் ( நேர் மறை .எதிர்மறை என இரண்டும்) ஒரு கட்டத்தில் ஒரு ரூபாய் கான்செப்ட் நிறுத்தப்பட்டபோது என்னவானது போன்றவற்றை ஆவணப்படுத்திய ஒரே நாவலாக இது இருக்கக்கூடும். 




         எப்படி பிரதான எதிர்மறைப் பாத்திரம் இல்லையோ அதேபோல பிரதான நாயகியும் இல்லை. மெல்லுணர்வு மிக்கவர், அழகானவர், முரட்டுத்தனமானவர், வாழ்க்கையின் வெம்மையால் பொசுங்குபவர் இப்படி பலதரப்பட்ட பெண்களை பார்ப்பது சுவாரஸ்யம். சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார். இவர் தந்தை மகன் என்ற இரு புஷ்களிடமும் துணை அதிபராக இருந்த தனித்துவ பெருமைக்கு சொந்தக்காரர். அதிபர்களைவிடவும் சக்தி வாய்ந்தவராக இருந்தவர். அவர் இறந்தபோது அவர் சாதனைகள் பேசப்படவில்லை. பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்து ஈராக் மீது போர் தொடுத்து சதாம் ஹுசேன் உள்ளிட்ட ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகி அந்தப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை குலைத்த அராஜகம்தான் பேசப்பட்டது 


         அதுபோல ஒரு காட்சி.. பள்ளி தேர்வு முடிவுகள் வருகின்றன. பேப்பர் வாங்க பலர் அலைமோதுகிறார்கள் பேப்பர் கேட்பவர்கள் இரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.. கடையில் ஒரு மாவட்டத்துக்கான பேப்பர்தான் இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தேவையில்லாத பதிப்பை வாங்கி ஏமாந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எந்த ஸ்கூல் என கேட்க முயல்கிறான்.. கடைக்காரர் டென்ஷனாகி அவனை நகரச்சொல்லி விட்டு தேவையோ இல்லையோ அனைவருக்கும் விற்றுவிட்டு காசை வாங்கிப் போட்டுக்கொள்கிறார். 


     அவர் ஒரு நாள் காலமாகிவிடும்போது இந்த நினைவு அவனுக்கு வருகிறது. இது போன்ற சித்தரிப்புகள் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை என்பதைத்தாண்டி ஒட்டு மொத்த மானுடத்தைப் பேசுகின்றன.

         சகோதரிகள் மீது அன்பு,நூலக ஆர்வம், பள்ளியில் திறமையைக்க்காட்டுதல் என இருந்தாலும் அவனது போதாமைகளும் குறிப்பிடப்படுவது சிறப்பு. கட்டட வேலை விவசாய வேலை என எதைச் செய்தாலும் “ வேலை தீப்பிடிக்கணும் தீ மாதிரி வேலை செய்யணும்” என்ற அவன் உத்வேகம் அவனை ஒரு நாயகனாக்குகிறது. படிப்பு, உழைப்பு, திறமை எல்லாம் நிறைந்த அவன் வேலையை இழப்பதுடன் நாவல் முடிந்தாலும் அது கொடுக்கும் தாக்கம் நீடிக்கிறது. 


கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல். 



  இந்த நாவல் குறித்து வையம் இதழுக்காக நாவலாசிரியர் அறிவுமணியுடன் நிகழ்த்திய உரையாடலின் ஒரு தொகுப்பு



1. நசிந்த இருவரின் வாழ்வு பற்றிப் பேசும் நாவல் என புத்தக அறிமுகம் சொல்கிறது. ஆனால் யாருக்கும் தலைவணங்காத தன்மை, படிப்பு ஈடுபாடு, காதலுணர்வு, தொழில்நேர்த்தி, சுறுசுறுப்பு என வெற்றியாளனாக ஒரு நாயனாகத்தான் இதன் நாயகன் நம் மனத்தில் பதிகிறான்.. நாவலின் இறுதியுலுமே கூட இவ்வளவு திறமைசாலி வருமானம் குறைவான இதில் இருப்பதை விட இதை விட்டு வெளியேறியது நல்லதுதான் என்ற எண்ணமே எழுகிறது. வேலை போயிற்றே இனி சாப்பாட்டுக்கு என்ன செய்வான் என்ற எண்ணம் வருவதில்லை… அவன் பாத்திரவார்ப்பு அப்படி.. எனவே நசிந்தவன் என்பது சற்றே பொருத்தமற்ற அறிமுகமாய் தோன்றுகிறது… உங்கள் பார்வை? 


உண்மைதான் அத்தொழில் சார்ந்து இயங்கும் நிலையில் படிப்படியான வளர்ச்சி என்பது இல்லாமல் படிப்படியான வீழ்ச்சியாக இருப்பதே நசிவுக்கு அடிப்படையாக நாவல் கூறுகிறது. இறுதியில் அந்த வேலையைச் செய்ய முடியாதவனாக, வெளியேற்றப்படுவபவனாக இருப்பதும் ஒரு வகையில் மனதளவில் பாதிக்கும் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. 


 2. சம்பளம் என்பது தாண்டி வேலையில் ஆர்வமும் திறனும் உள்ள ஒருவனை நிர்வாகம் சரியாக மதிப்பதில்லை … அவன் மதிப்பை உணர்வதும் இல்லை என்ற பிரச்சனை எல்லா துறைகளிலுமே உள்ளது.. எனவே பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்குக்கூட இந்த நூல் பேசும் பிரச்சனை புரியும் என கருதுகிறேன், இதையும் நாவல் எழுதும்போது கவனத்தில் கொண்டீர்களா? 


இது பொதுவான விமர்சனம்தான். ஆனால் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் ஏமாற்றப்படுவது பெரும்பாலும் தெரிவதில்லை. காலப் போக்கில் அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதனால்தான் பிடிமானம் செய்த பணத்தை திருப்பூர் சென்று வாங்கி வருவது போலான காட்சிகள் வைக்கப்பட்டன. 

 3. இக்கதை நிகழும் கால கட்டத்தை உணர்த்துவதுபோல திரைப்படம் சார்ந்த குறிப்புகள் இயல்பாக இடம் பெற்றுள்ளன.. ஆனால் அப்போதைய அரசியல் நிகழ்வுகள் வெகு குறைவுதான்… அரசியலை வேண்டுமென்றே தவிர்த்துள்ளீர்களா 


அரசியல் சார்ந்த பதிவுகள் கதையோட்டத்தில் நேரடியாக இல்லாமல் பதிவு பெறுவதைத்தான் விரும்பினேன். உதாரணமாக நான்கு வழிச் சாலைக்காக மலைகள் அழிக்கப்படுவது குறித்த பதிவு போகிற போக்கில் சொல்லப்படுவது. மேலும் பெருவாரியான மக்களிடம் கம்யூனிச ஒவ்வாமை இருப்பது பற்றி கனி என்கிற பாத்திரத்தின் மூலம் கூறப்படுகிறது. 


 4. பேப்பருக்காக காத்திருந்து படித்தல், பேப்பருக்காகவே டீ விற்பனை அதிகரிப்பு போன்ற சூழல்கள் இன்றும் உள்ளனவா.. 


பேப்பர் படிப்பது இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. ஆனால் முந்தைய காலத்தின் தன்மை இன்றைக்கு இல்லை. செய்திகள் நொடிக்கு நொடி மக்களிடம் சென்று சேர்வதற்கான தொழில்நுட்பம் அதற்குக் காரணமாகலாம்.


 5. வாசிப்புப் பழக்கம் குறைகிறது என்பது பலரது கவலை... இன்று எழுதும் வாசிக்கும் பலருக்கு நல்லதொரு துவக்கமாய் அமைந்தவை நாளிதழ்கள்தான்.. பெரியவர்கள் நாளிதழ் படிப்பதைப் பார்த்து தாமும் படிக்க ஆரம்பித்து அப்படியே நூல்கள் வாசிப்புக்கு வந்தவர்கள் பலருண்டு.. அப்படிப்பார்த்தால் பேப்பர் போடுபவர்கள் வாசிப்பு எனும் இயக்கத்துக்கு முக்கியப்பங்கு ஆற்றியுள்ளனர்.. வேலை தேடுவோர்க்கு அவர்கள் கடவுளின் தூதர்கள் போன்றவர்கள்.. ஆனாலும் அவர்களைப் பற்றி யாரும் பதிவு செய்யவில்லை என்பது ஆச்சர்யம்தான்.. இந்த கருப்பொருளில் எழுதும் யோசனை எப்படி வந்தது? 

எத்தனையோ உதிரித் தொழிலாளர்களை தினந்தோறும் சந்திக்கிறோம். ஆனால் அவர்களைப் பற்றிய சிந்தனை ஓரிரு கணங்களில் நின்று மறைந்து போகின்றன. அத்தகையவர்கள் பற்றிய பதிவுகளின் இன்றியமையாமையை உணர்ந்தே இந்த நாவலை எழுதினேன்.


 6. இந்நாவலில் இடதுசாரித் தோழர் ஒருவர் முக்கியப் பாத்திரத்தில் வருகிறார்.. இந்த நாவலில் வர்க்க பிரச்சனை பதிவான அளவுக்கு ஜாதிய பிரச்சனை பதிவாகவில்லை..( ஒரு இடத்தில் ஜாதி அடக்குமுறை பதிவாகியுள்ளது) வர்க்க பிரச்சனை சரியானால் மற்றவை சரியாகி விடும் என்பதே இடதுசாரி பார்வை எடுத்துக்கொள்ளலாமா? 

வர்க்கம், சாதிப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட உதிரித் தொழில் பற்றிய சிக்கல்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் இத்தொழிலாளர்கள் சார்ந்த சமூகத்தில் அதன் இயக்கப் போக்கில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் பதிவு கெய்யப்படுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.




 7. தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன். தமிழ் இந்து தீக்கதிர் இதழ்கள் பற்றி உங்கள் பார்வை ஓரிரு வரிகளில் இந்த நாளிதழ்கள் குறிப்பிட்ட வர்க்கத்தவர்களுக்கானவை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வெகுசன வாசிப்பில் இன்றைக்கும் முதலில் நிற்பது தினதந்திதான். டீக்கடைகளில் அதைத்தான் பெரும்பாலும் காண முடியும். மற்ற நாளிதழ்கள் குறிப்பிட்ட சமூகத்தவர்களால் வாங்கப்படும். வெகுசன வாசிப்பை அதிகரித்தத்தில் தினகரன் ஒரு பங்கு வகித்தது உண்மைதான். ஆனால் அது கட்சி சார்ந்து இயங்கும் என்பதால் அதை வெறுப்பவர்களும் இருந்தனர். அது போலவே தினமலரும். தினமணி படிப்பவர்கள் மிக சொற்பமானவர்கள் படித்த மேட்டிமையாளர்களாக அவர்கள் இருப்பார்கள். அது போல ஆங்கில தினசரிகளைப் படிப்பவர்களும் எலைட் மனிதர்களாக இருப்பார்கள். தீக்கதிர் கட்சிப் பத்திரிகைதான். அதை வாங்குபவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள் மட்டும்தான் அதை படிப்பதும் குறைவு.

 





Friday, September 19, 2025

வன்மமும் சாருவும்

 

அன்புள்ள சாரு..

யாருடனும் வன்மம் இல்லை என்ற உங்கள்  கட்டுரை தொடர்பாக 

சில விஷயங்கள் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது என்பதாலும் பழைய தலைமுறையினருக்கு மறதி அதிகம் என்பதாலும் சில விஷயங்களை நினைவுபடுத்த வேண்டியுள்ளது..


அப்போது ஜெயமோகனுடன் கடும் கருத்தியல் மோதல் நடந்து வந்த காலகட்டம். அப்போது நீங்கள் உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதி வந்தீர்கள் அடுத்து வெளிவரும்  இதழில் நான் கடவுள் படம் குறித்தும் ஜெயமோகனின் பங்களிப்பு குறித்தும் எழுதி இருப்பதாக ஒரு போஸ்ட் போட்டீர்கள்..
அவ்வளவுதான்.. இணையமே பற்றி எரிந்தது.. உயிர்மை வெப்சைட்டே திணறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். உயிர்மை போன்ற இதழ்கள் பெரும்பாலும் சந்தா மூலம் வாசகர்களை அடையும். வெகு சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். அந்த மாத இதழ் நான் வழக்கமாக வாங்கும் எங்கும் கிடைக்கவில்லை. என்னவோ தெரியலை சார்.. எல்லாம் வித்துப்போச்சு என்றார்கள்.. கடைசியில் கஷ்டப்பட்டு வாங்கிப்படித்தேன்.

அதைப் படித்தபோது இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா என்ற நெகிழ்ச்சியில் எப்படி கண்கள் கசிந்தனவோ அதேபோல இதை டைப் செய்யும்போதும் கண்கள் கசிகின்றன

அக்கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது 

”தமிழகமே கொண்டாடி வரும் பாலாவின் படங்களை இதுவரை நான் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவன். அதனால் இந்த முறை 'நான் கடவுள்' படத்தைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். பாலா மூன்று வருடம் உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்; அதற்கும் மேலாக எனக்குப் பிடிக்கவே பிடிக்காத இளைய ராஜாவும், ஜெயமோகனும் வேறு சேர்ந்திருக்கிறார்கள். அதனால் இந்த மூவர் கூட்டணி இருக்கும் பக்கமே திரும்ப வேண்டாம் என்று இருந்துவிட்டேன் எதற்குப் போக வேண்டும்: அப்புறம் திட்ட வேண்டும்.”

----அடுத்து சிலவரிகளில் இப்படி வருகிறது ...

ஐந்தே நிமிடம்தான்  தெரிந்து போயிற்று இது பாலாவின் வழக்கமான படம் இல்லை. ருத்ரன் (ஆர்யா) வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்ததுமே ஒரு உலகத்தரமான படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. அப்போதுதான் படத்தில் பிச்சைக்காரர்களும், குருடர்களும் உடல் ஊனமுற்றவர்களும். பைத்தியக்காரர்களும், குரூரமான விசித்திரமான உருவ அமைப்புகளோடு பிறந்தவர்களும் இடம் பெறும் காட்சிகள் துவங்குகின்றன.

ஜெயமோகன் குறித்து 

படத்தில் பாலாவுக்கு இணையாகப் பங்களிப்புச் செய்திருப்பவர்கள் என இரண்டு பேரைக் குறிப்பிடலாம். ஒருவர். ஆர்ட் டைரக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி: மற்றொருவர், ஜெய மோகன். இவர்கள் இருவருமே இலக்கியத் தொடர்பு உடையவர்கள் என்பதை இங்கே குறித்துக் கொள்ள வேண்டும் பாலா என்ன நினைத்தாரோ அதைப் பேசி இருக்கிறார் ஜெயமோகன் இதைப் பற்றித் தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றி ரசிப்பதற்கு ஜெயமோகனின் வசனம் பெரும்பங்கு வகிக்கிறது நரகத்தைப் பற்றிய குரூரமான காட்சிப் படிமங்களாக இருந்தாலும் படம் நெடுகிலும் ப்ளாக் ஹ்யூமர் என்று சொல்லப்படும் அவல நகைச்சுவை பார்வையாளரைப் படத்தின் உள்ளே இழுத்துக் கொண்டே செல்கிறது.

கடைசி வரி


உலகின் க்ளாஸிக்குகளில் ஒன்றை உருவாக்க முனைந்த பாலா என்ற கலைஞனுக்குத் தலை வணங்குகிறேன்.

பல படங்கள், நூல்களை ஆதாரம் காட்டி அப்படத்தின் சிறப்பை பட்டியல் இட்டு இருப்பீர்கள் 
இந்தக் கட்டுரை அப்போது ஏற்படுத்திய பிரமிப்பு மறக்கவே முடியாது.. அதை விட இன்னொன்று


சிலர் கேட்டார்கள் 

ஜெயமோகனை இவ்வளவு காலம் விமர்சித்துவிட்டு இப்போது அவரைப்பாராட்டுவது உங்களது தோல்வி இல்லையா?

அதற்கு நீங்க சொன்னீர்கள்

நான் அவரைத் திட்டவேண்டும் என நினைத்துதான் படத்துக்கே போனேன்..ஆனால் அவர் எழுத்து என்னை ஜெயித்து விட்டது,, அதற்கு நான் என்ன செய்ய முடியும்.. இப்படி என் கருத்தை பொய்யாக்கி தன் எழுத்து மூலம் என்னை வென்றால் எனக்கு சந்தோஷம் தான்.. நான் தோற்றனவாக்வே இருந்து விட்டுப்போகிறேன் என சொன்னீர்கள்


ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் துரியோதனன் வலிமையும் மாபெரும் உளவிரிவும் மிக்கவன். சிறுமை சற்றும் இல்லாதவன் அரசனல்லன் என்பதால் கர்ணன் அவமானத்துக்கு உள்ளாகும்போது அவனை நான் அரசனாக்குகிறேன் என் ஒரு பகுதி நிலத்துக்கு இனி அவனே அரசன் என்பான் பெரியோர் அதை ஒப்ப மாட்டார்கள்.. அப்படியெல்லாம் சுலபமாகக் கொடுக்க முடியாது ஓர் அரசனை வென்றுதான் அரசை அடைய முடியும்.. வாழ்நா:ள் முழுக்க அவனால் தோற்கடிக்கப்பட்டனாகவே இருக்க நேரும் என்பார்கள் துரியோதனன் சற்றும் தயங்க மாட்டான் சரி...அவனிடம் நான் தோற்றதாகவே இருக்கட்டும்.. நானும் என் பரம்பரையும் தோல்வியாளர்களாவே இருக்கிறோம்..அவனுக்கு முடிசூட்டுங்கள் என்பான் அக்காட்சியை படிக்கும்போது உங்கள் நினைவுதான் வந்தது ஜேஜே சில குறிப்புகள் வெளிவந்தபோது அந்த நாவல் அழிய வேண்டும் என நினைத்து இருந்தால்  கள்ள மவுனத்தோடு கடந்து சென்று இருக்கலாம். ஆனால் பணம் கஷ்டம் மிகுந்த அநத நாளில் மனைவியின் நகையை விற்று அதை விமர்சித்து நூல் வெளியிட்டீர்கள்..  உண்மையில் அது அந்த நூலுக்கு நல்லதுதான் செய்தது. பரவலான அறிமுகம் பெற்றது



அதன் பிறகு பழுப்பு நிறப்பக்கங்களில் சுந்தர ராமசாமியைப் பற்றி விரிவாக பதிவு செய்தது வேறு விஷயம் மேலே சொன்ன கட்டுரையில் பாலாவை அவ்வளவு உயர்த்திப்பேசிய நீங்கள் அவருடன் நல்லுறவு பேணி இருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால் நீங்கள் சாரு அல்லவே.. அடுத்த படங்களில் அவரை சாடத்தான் செய்தீர்கள்.

இப்படி பாரபட்சமின்றி படைப்பை மட்டுமே பார்த்து அதனால் இழப்புகளை மட்டுமே சந்தித்து இலக்கிய உலகுக்கு நன்மை மட்டுமே செய்யும் நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமையாக இருக்கிறது

Monday, June 30, 2025

பாட்டும் நானே.. பாவமும் நானே.. சர்ச்சையும் கண்ணதாசன் விளக்கமும்




தினமணி கதிர்  15.6.2025  இதழில் வெளியான துணுக்கு


'பாட்டும் நானே... பாவமும் நானே....'

..........

நடிகர் சிவாஜி கணேசனை வைத்து, `சிவலீலா' எனும் படத்தை பிரபல தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு தயாரித்தார். அது தொடரவில்லை. அதையே ‘திரு விளையாடல்' என்ற பெயரில் ஏ.பி.நாகராஜன் எடுத் தார். 'சிவலீலா' படத்துக்காக, கவி. கா.மு.ஷெரீப் எழு திய ‘பாட்டும் நானே.. பாவமும் நானே...' என்ற பாட லையும் ஏ.பி.நாகராஜனிடம் கொடுத்துவிட்டார். அந் தப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற் றது. படம் வெளியானபோது, அந்தப் பாடல் கண் ணதாசன் எழுதியதாக, அவருக்குத் தெரியாமலேயே டைட்டிலில் வந்தது. இதனால் வருத்தப்பட்ட எம்.ஏ. வேணு, “என்ன இப்படி செய்துவிட்டீர்களே” என்று கேட்டார். பின்னர், படக் குழுவினர் கவி.கா.மு.ஷெ ரீப்பை நேரில் சந்தித்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரி வித்து, ஐந்தாயிரம் ரூபாயை கொடுத்தனர். ஆனால் ஷெரிப்போ, "நான் ஒருமுறை எழுதிய பாடலுக்கு ஒரு முறைதான் ஊதியம் வாங்குவேன். ஏற்கெனவே இந்தப் பாடலுக்கு முந்நூறு ரூபாய் வாங்கிவிட்டேன். எனது பாடலை மக்கள் ரசிக்கிறார்களே அதுவே போதும்” என்று கூறிவிட்டார்.


29.06.2025 இதழில் வெளியான மறுப்பு


விளக்கம்...


தினமணி கதிர் 15.6.2025 இதழில் வெளிவந் துள்ள துணுக்கில், 'திருவிளையாடல்' திரைப்ப டத்தில் இடம்பெற்ற 'பாட்டும் நானே.. பாவமும் நானே..பாடல் எழுதியவர் குறித்து வந்த தகவல்


தவறு. இந்தப் பாடல் எழுதப்பட்ட விதம் குறித்து கவி ஞர் கண்ணதாசன் அவர்கள் தனது 'கண்ணதாசன்' ஜூலை 1978 இதழில் 'முக்கியமான இரண்டு கேள் விகள்' என்று தலைப்பிட்டு குறிப்பிடுகிறார். இதில் வந்துள்ள விவரம்:


"எந்தப் பாட்டையும் தனியாக உட்கார்ந்து எழு திக் கொண்டு போய் கொடுத்ததாக வரலாறே கிடை யாது. நான் எப்போது எழுதினாலும், என்னைச் சுற்றி என் உதவியாளர் பஞ்சு அருணாசலம் உள் பட குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள். மேற் படி பாடலை நான் சொல்லச் சொல்ல இதை எழு திய ஏ.பி.நாகராஜனின் உதவியாளர் சம்பத் ஐயங் கார் உயிரோடு இருக்கிறார். கூட இருந்தவர் மேலா ளர் வைத்தியநாதன், இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன், அவரது உதவியாளர் புகழேந்தி, ஏ.பி. நாகராஜன் குடும்பத்தினர் எல்லோரும் உயிரோ டுதான் இருக்கிறார்கள் (1978-இல்)" என்று கவி ஞர் கூறியிருக்கிறார். எனவே, கதிரில் வெளிவந்த தகவல் தவறானது. வருந்துகிறோம்.


ஆசிரியர்


Friday, March 28, 2025

அறியப்படா ராமாயணம்.-நாடக உரையாடல்




 மூத்த நடிகர் அசுஸ்தோஷ் ராணா, ராம் ராஜ்ஜியத்தின் ஆசிரியரும் ஆவார், ஹமாரே ராம் நாடகம் அவரது விருது பெற்ற இலக்கியப் படைப்பின் இயல்பான விரிவாக்கமாகும். எனவே, நாடகத்தை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தபோது, ​​புகழ்பெற்ற இலங்கை அரசரான ராவணனை சித்தரிக்க அவர் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. இந்த பாத்திரம், ராமரைப் பற்றிய ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியதாக சொல்கிறார் அவர்/

ராவணனாக நடித்த அனுபவத்தை சொல்லுங்கள்...

 

 

இது எனது விருப்பப் பட்டியலில் இருந்தது. இந்த கண்டுபிடிப்பு -   ராவணனாக இருந்தாலும் நீங்கள்  ராமனும் கூட - மாற்றத்துகான பயணமாகும். இதை ராவண்ன் மூலம் உண்மையிலேயே உணர முடியும். அவர் ஜோதிடர் மற்றும் ஆயுர்வேத நிபுணர் மட்டுமல்லர், சஸ்திரம் (ஆயுதம்) மற்றும் சாஸ்திரம் (புராணம்) இரண்டிலும் தேர்ச்சி பெற்று,    சிவபெருமானின் பக்தியுள்ள சீடராக இருந்தார், மேலும் அவர் விரும்பிய எதையும் அடையும் திறனைக் கொண்டிருந்தார். ராமரும் ராவணனும் எதிரிகளாக இருந்தாலும், அவர்களின் கதாபாத்திரங்களின் கருணையும் வலிமையும் அவர்களுக்கிடையேயான இயக்கவியலை சுவாரஸ்யப்படுத்துகின்றன


 

 ஒரே ஆண்டில் 200 காட்சிகள் நடத்தியிருக்கிறீர்கள்

இந்த நிகழ்ச்சியின் வெற்றி என்ன? 


மிகப்பெரிய காரணம், ராமாயணத்திலிருந்து அதிகம் அறியப்படாத கதைகளை நாங்கள் இணைத்திருப்பதுதான். வால்மீகி, துளசிதாசர், கம்பன் மற்றும் பலரால் இக்காவியத்தைப் பற்றி அதிகம் எழுதப்பட்டிருந்தாலும், எங்கள் நாடகம் சொல்லப்படாத, ஆராயப்படாத   கதைகளில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, ராமர் இராவணனை ராமேஸ்வரத்தில் ஒரு பூஜை செய்ய அழைக்கும் கதை. இந்த பூஜைக்குப் பின்னால் இருந்த காரணம் ராமரின் இலங்கையைக் கைப்பற்றும் விருப்பம் என்றாலும், ராமரின் விருப்பத்தை நிறைவேற்ற ராவணன் அதில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார். அதேபோல், பெரும்பாலான மக்கள் சூர்ப்பனகையின் கதையை அறிந்து இருந்தாலும்,  ராவணன் கொன்ற அவரது கணவர் வித்யுத்ஜிஹ்வாவைப் பற்றி மிகச் சிலருக்குத்தான் தெரியும். நாடகம் உங்களுக்கு சிந்தனைக்கு உணவளிக்கிறது, மேலும் பல யோசனைகள் மற்றும் பாடங்களை நம் வாழ்வில் பயன்படுத்தலாம்.





ராவணன் ஒரு பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரம், சிலரால் ஒரு அரக்க ராஜாவாகவும், மற்றவர்கள் ஒரு அறிஞர் மற்றும் சிவபெருமானின் பக்தியுள்ள சீடராகவும் பார்க்கப்படுகிறார். இந்த சிக்கலான நபர் மக்களின் பல்வேறு விளக்கங்களுடன் எவ்வாறு ஒத்துப்போகிறார்?


நாடகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மக்கள் ராவணனின் கதாபாத்திரத்தை விரும்புகின்றனர், மேலும் பலர் அவரை தவறாகப் புரிந்து கொண்டதாக உணர்கிறார்கள். ராமர் உண்மையிலேயே கடவுள் என்றால், நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளும்போது ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ராமர் தனது சொந்த உயரத்தைக் குறைத்துக்கொள்ளாமல்  ராவணனின் கதாபாத்திரத்தை உயர்த்துகிறார். தென்னிந்தியாவின் சிந்தனை செயல்முறை வட இந்தியாவிலும் பரவலாக பாராட்டப்பட்டுள்ளது. இது பெரிய மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும்  பெரிய மனிதர்கள்ஆக்குகிறார்கள் என்பதைக் காண்பிப்பதாகும்.   யாரையும் இழிவுபடுத்தாத கதாபாத்திரங்களையும் கதைகளையும் எவ்வாறு உருவாக்குவது என்பது எழுத்தில் ஒரு முக்கியமான பாடம் என்று   நம்புகிறேன் -


 

தற்போதைய காலத்தில் ராமாயணத்தின் பொருத்தம் என்ன?


ராமர் மற்றும் ராவணனின் கதை நமக்குள் நடக்கும் போரை பிரதிபலிக்கிறது - நேர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை ஆற்றல். உண்மையான மோதல் நமக்குள்ளேதான்உள்ளது, அதைக் கட்டுப்படுத்துவது நம் கையில்தான் உள்ளது. நம் புலன்களைக் கட்டுப்படுத்தினால், நாம் ராமனைப் போல ஆகிவிடுகிறோம். இல்லையென்றால், நாம் ராவணனைப் போல முடிவடைகிறோம். இதுதான் முக்கியப் பாடம்: ஒரு சாதகமற்ற சூழ்நிலையை எவ்வாறு சாதகமாக மாற்றுவது? பெரும்பாலான மக்கள் சிந்திக்காமல் சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள், ஆனால் இந்த நாடகம் நாம் எவ்வாறு ஞானத்துடன் எதிர்வினையாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது. இன்றைய உலகம் போர்களால் நிறைந்துள்ளது - அது ஆல் அல்லது பிற சவால்களின் எழுச்சியாக இருந்தாலும் சரி - மேலும் குழப்பத்தில் தெளிவைக் கண்டறிவது எப்படி என்பதற்கான பாடங்களை ராமாயணம் வழங்குகிறது.


 


 

ன்று, ராமர் ஒரு 'அரசியல்மயமாக்கப்பட்ட' நபராக மாறிவிட்டார். அரசியலில் இருந்து கடவுள்களை எவ்வாறு பிரிப்பது?


ராமரின் ஞானத்தையும் அவரது போதனைகளையும் நாம் ஏற்றுக்கொண்டால், நம் வாழ்க்கை இன்னும் நிறைவானதாக இருக்கும். அவரது சரணம் (பாதங்கள்) மற்றும் ஆசாரம் (நடத்தை) இரண்டையும் நாம் வணங்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. அரசியலுக்கும் அறம்சார் தலைமைக்கும் வித்தியாசம் உள்ளது. ராமரின் அணுகுமுறை சகவாழ்வைப் பற்றியது. அவர் வாலியை விட சுக்ரீவனைத் தேர்ந்தெடுத்தார், சபரியை சந்தித்தார், அனுமனுடன் நெருங்கிய பிணைப்பை உருவாக்கினார், கேவத் மற்றும் நிஷாத்ராஜுடன் நட்பு கொண்டார். கவனிக்கப்படாதவர்களை முன்னணியில் கொண்டு வந்தார்.


ராமர் வாலியைக் கொன்றபோது, ​​கிஷ்கிந்தா ராஜ்யத்தை சுக்ரீவனுக்குக் கொடுத்தார், அதை தனக்காகவோ அல்லது தனது சகோதரனுக்கோ  வைத்துக்கொள்ளவில்லை. இலங்கையை வென்றபோது, ​​இலங்கை மக்கள் தனக்குச் சொந்தமானவர்கள் என்றும், அவர்களை அவர்களே ஆள வேண்டும் என்றும் நம்பியதால், விபீஷணனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். ராமரின் தலைமை நியாயம், ஞானம் மற்றும் மேம்பாடு பற்றியது.






Wednesday, February 26, 2025

நான்காம் வகுப்புப் படித்தவர் நான்கு மொழி அகராதி படைத்தார்



ஒரு அகராதியைத் தொகுத்தல் என்பது கடினமான பணியாகும், இது பல வருட ஆராய்ச்சி, மொழியியல் நிபுணத்துவம் மற்றும் துல்லியமான   அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கோருகிறது.  கேரளாவின் தலசேரியை பூர்வீகமாகக் கொண்ட  86 வயதான ஞாட் யெலா ஸ்ரீதரன், இதை சாதித்துள்ளார். 

இவர் நான்காம் வகுப்பில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர் இதை எல்லாம்  மீறி இந்த அசாதாரண சாதனையை நிகழ்த்தியுள்ளார்
. 2020 இல், அவர் நான்கு திராவிட மொழிகளின் அகராதியான சதுர் திராவிட பாஷா நிகண்டுவை வெளியிட்டார்.


மொழியியல்  துறைக்கு  அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என்றாலும்   மாநில அரசு அவரது முயற்சிகளை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. கேரள பாஷா நிறுவனம் 2022 இல் அகராதியை மீண்டும் வெளியிட்ட போதிலும், ஸ்ரீதரனுக்கு இன்னும் எந்த ராயல்டியும் கிடைக்கவில்லை. பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் அவரை கௌரவித்திருந்தாலும், அவர் இன்னும் தனது சொந்த மாநிலத்திலிருந்து அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறார்.

"நான் அகராதியை தொகுக்க 40 ஆண்டுகள் செலவிட்டேன்," என்கிறார் ஸ்ரீதரன். "நான் கர்நாடகா மற்றும் ஆந்திரா  சென்று, மொழிகளைப் படிக்க அங்கு பல மாதங்கள் செலவிட்டேன். நெருங்கிய நண்பர்கள் உட்பட பலர் என்னை ஊக்கப்படுத்தவில்லை, அகராதி தொகுப்பு அறிஞர்களுக்கான பணி என்று வலியுறுத்தினர். நான் ஒரு அறிஞராக இல்லாமல் இருக்கலாம். எனக்கு முனைவர் பட்டம் இல்லாமல் இருக்கலாம். ஆம், நான் நான்காம் வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்டேன். ஆனால் எனக்கு மொழிகள் பிடிக்கும். அவற்றைக் கற்க பல வருடங்களை அர்ப்பணித்தேன்,  ," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.



பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஸ்ரீதரன் பீடி சுருட்டுப்பவராக  பணியாற்றினார்.

CPM  இன் குழந்தைகள் பிரிவில் இருந்த காலத்தில்தான்  மொழிகள் மீதான அவரது ஆர்வம் தொடங்கியது.   அங்கு அவர் மலையாளம் எழுதக் கற்றுக்கொண்டார். பின்னர், பாலக்காட்டில் பணிபுரியும் போது, ​​அவர் தமிழ் படிக்கவும் பேசவும் கற்றுக்கொண்டார்.

நான்கு திராவிட மொழிகளிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அவரது ஆசை பாலக்காட்டில்தான் வேரூன்றியது.  

 "நான் தமிழ் பாடப்புத்தகங்களைப் படித்து, மொழியை நன்கு கற்றுக்கொண்டேன்.   தமிழுடன் சேர்ந்து, பிற திராவிட மொழிகளைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ஒரு பாடம்  வலியுறுத்தியது.

தமிழர்கள் தங்கள் மொழியில் மிகுந்த பெருமை கொள்கிறார்கள், மேலும் அவர்கள்தான் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிடுபவர்கள். அதே நேரத்தில், மலையாளத்தில் உண்மையான பெருமை பிற திராவிட மொழிகளைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது    என்று வாதிட்ட டாக்டர் K.N  எழுத்தச்சனின் ஒரு கட்டுரையைப் படித்தேன். அதுதான்  என்னைத் தட்டி எழுப்பியது.  தெலுங்கு மற்றும் கன்னடத்தையும் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

1980களில், திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை ஸ்ரீதரன் மீண்டும் உணர்ந்தார், அகராதியை உருவாக்க இது ஊக்கமளித்தது.

 இருப்பினும், சுய சந்தேகம் அவரைத் தடுத்து நிறுத்தியது. "நான்காம் வகுப்பில் பாதியில் நின்ற ஒருவரின் தாழ்வு மனப்பான்மை என் படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதைத் தடுத்தது. என் நண்பர்கள் இறுதியில் அதைக் கண்டுபிடித்தபோது, ​​நான் பயந்தது போலவே அவர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால் செய்தித்தாள்கள் எனது நோக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது, ​​நான் தொடர்ந்து முயற்சி செய்ய முடிவு செய்தேன்," என்று அவர் கூறினார்.

அகராதியை வெளியிடுவது ஒரு கடினமான போராட்டமாக மாறியது. அவருக்கு முறையான கல்வி இல்லாததை அறிந்த பிறகு, வெளியீட்டாளர்கள் அவரது கையெழுத்துப் பிரதியை நிராகரித்தனர். "நான் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் என்பதை உணர்ந்தபோது, ​​ஒரு புகழ்பெற்ற பதிப்பகத்தின் ஆசிரியரின் முகத்தை நான் இன்னும் நினைவில் கொள்கிறேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

இறுதியில், 2020 ஆம் ஆண்டில், சதுர் திராவிட பாஷா நிகண்டு கேரள மூத்த குடிமக்கள் மன்றத்தால் வெளியிடப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் 500 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அப்போதைய தலைமைச் செயலாளர் கே. ஜெயக்குமாரின் தலையீட்டைத் தொடர்ந்து, கேரள பாஷா நிறுவனம் அகராதியை மீண்டும் வெளியிட்டது, இது நூல் பலரிடம் சென்று சேர்வதை உறுதி செய்தது.

 
ஸ்ரீதரனின் திராவிட மொழிகள் மீதான வாழ்நாள்  ஆர்வம் கடும் செலவு வைத்தது. "நான் ஆராய்ச்சிக்காக லட்சக்கணக்கில் செலவிட்டேன், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்குச் சென்று மொழிகளில் மூழ்கினேன். இந்தப் படைப்பு எனக்கு எதையும் ஈடாகத் தரவில்லை. என் குடும்பம் நிதி ரீதியாகப் போராடியது, குறிப்பாக என் குழந்தைகள் படிக்கும் போது. நான்  ஒருவன்தான் எங்கள்குடும்பத்துக்கு   வருமானம் ஈட்டும் ஒரே  நபர். ஆனால் என் மனைவி புகார்கள் இல்லாமல் வீட்டை நிர்வகித்தாள். நான் ஏன் வேலை செய்யாமல் எழுதுகிறேன் என்று அவள் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை," என்று அவர் கூறினார்.

அவரது கதை நந்தன் இயக்கிய தேசிய விருது பெற்ற ஆவணப்படமான  Dreaming of words இல்  இடம்பெற்றது.



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா