Saturday, October 27, 2012

ராசலீலா படிப்பதாக ஜெயமோகனின் தளபதி உறுதிமொழி- ருசிகர சந்திப்பு அனுபவம்


கிளுகிளுப்பாக எழுதுவது , இரட்டை அர்த்த தலைப்புகள் வைப்பது , சீரியசான விஷ்யங்களை தவிர்ப்பது , டீக்கடை அரட்டைக்கு உரித்தான டாப்பிக்குகளை எடுத்து கொள்ளுதல் , வம்புச்சண்டை , அவதூறு போன்றவை எதுவும் இல்லாமல் பதிவுலகில் வெற்றிக்கொடி நாட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.  தற்காலிக சுவாரஸ்யங்களுக்கோ , பரபரப்புக்காகவோ இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் படிக்க கூடிய வகையில் எழுதுபவர்கள் இன்னும் வெகு சிலரே..

இந்த சிலரில் முக்கியமானவர் திரு கோபி ( http://ramamoorthygopi.blogspot.in  )

இலக்கியம் , ஆன்மீகம் , சினிமா , பயணங்கள் , வாழ்வியல் அனுபவங்கள் என ரசித்து எழுதுபவர். ரசிக்கும் வகையில் எழுதுபவர்.  தனது இனிமையான கால கட்டங்களை மட்டும் அல்ல , தனது கஷ்டமான கால கட்டங்களையும் மறைக்காமல் எழுதுபவர்.

என் பதிவுகளில் , என்னை திட்டி வரும் பின்னூட்டங்களையும் அப்படியே வெளியிடுவது என் வழக்கம் . அப்படி ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டு இருந்தேன்.

கோபியிடம் இருந்து கால் வந்தது. அந்த குறிப்பிட்ட பின்னூட்டம் இன்னொரு பதிவரை இழிவு செய்வது போல இருக்கிறது. தயவு செய்து அதை நீக்கி விடுங்கள் என மிகவும் மென்மையாக கேட்டுக் கொண்டார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, ஒரு பின்னூட்டத்க்துக்காக இவ்வளவு அக்கறை எடுத்து எஸ் டி டீ போட்டு பேசிகிறாரே.. அதுவும் இன்னொருவர் சம்பந்தப்பட்ட விஷயத்துக்காக.

அந்த பின்னூட்டத்தை கவன குறைவால் அனுமதித்து இருந்தேன். யாரேனும் பார்த்தால் என்னையும் தவறாக நினைக்க கூடும். கோபியின் அக்கறைக்கு மதிப்பளித்து உடனடியாக அந்த பின்னூட்டத்தை நீக்கினேன்.

இப்படி அவர் மீதான மரியாதை அதிகரிக்க பல சம்பவங்களை சொல்லலாம். ஒரு முறை , ஒரு புத்தக கண்காட்சியில் சில நொடிகள் சந்தித்து இருக்கிறோம். அதன் பின் சந்திக்க முடியவில்லை.

இதற்கிடையே எழுத்தாளர் ஜெயமோகனின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் உருவெடுத்தார். ஜெயமோகன் வாசகர் சந்திப்புகளில் கோபியின் கட்டுரை விவாதிக்கப்படும் அளவுக்கு முக்கிய பிரமுகராக மாறினார்.

அதன் பின் ஏனோ தெரியவில்லை , அவர் சென்னை வந்தாலும் என்னை தொடர்பு கொள்வதும் இல்லை , சந்திப்பதும் இல்லை. சென்னை வந்து விட்டு சென்றதே , அவர் பதிவுகளை படித்துதான் எனக்கு தெரிய வரும் .

இந்த நிலையில் அவர் வெளினாடு சென்று விட்டார். இனி சந்திக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தேன். ஆனால் இனிய திருப்பமாக, நேற்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. வெளி நாட்டில் இருந்து , விடுமுறைக்காக ஊருக்கு சென்னை வழியாக செல்கிறார்.  எனவே சென்னையில் சந்திக்க முடிந்தது.

வெகு நாள் கழித்து சந்தித்தாலும், வெகு நாள் நண்பர் போல அதிரடியாக பேச ஆரம்பித்தார். எனவே என்னாலும் இயல்பாக பேச முடிந்தது.  நன்றாக இருக்கிறீர்களா, ஊரில் மழையா, மாடு கன்று போட்டதா என்றெல்லாம் பேசி , பல்ஸ் பார்த்து விட்டுத்தான் நம் மக்கள் விஷ்யத்துக்கு வருவார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் நேரடியாக பேச்சை ஆரம்பித்ததால் பல விஷ்யங்கள் பேச முடிந்தது.

சாருவை அளவுக்கு அதிகமாக நான் புகழ்வதாக சொன்னார். சாருவை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. அளவுக்கு குறைவாகத்தான் பாராட்டுகிறேன் என சொல்லி அதற்கு காரணங்க்ளையும் விளக்கினேன். ராசலீலா படித்தால்  , அவரும் சாரு வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவார் என சொன்னேன். ஊருக்கு போகும்போது கண்டிப்பாக ராசலீலா எடுத்து போய் படிப்பதாக சொல்லி இருக்கிறார்.

இலக்கியம் , உலக அரசியல் , இந்தியா , வேலை என பல விஷ்யங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

ஒரு முறை என நண்பன் ஒருவனை , சென்னையில் இருந்து டில்லி செல்ல , வழியனுப்ப விமான நிலையம் சென்று இருந்தேன்.  நேரம் இருந்ததால் , வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் . பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போனதை கவனிக்கவில்லை. திடீரென நேரம் பார்த்தபோது , தாமதமாகி விட்டது. செல்ல வேண்டிய விமானத்தில் ஏற முடியவில்லை. அது பறந்து செல்வதை சோகத்துடன் பார்த்தோம்.

அதேபோல ,  நேற்றும்  ரயிலை தவற விட்டு இருப்போம். நல்ல வேளையாக கடைசி நேரத்தில் கவனித்து , கிளம்பி நகரத்தொடங்கிவிட்ட ரயிலில் பாய்ந்து ஏறி டாட்டா காட்டினார்.

அவர் காரசாரமாக பேசினாலும் , கடைசியில் ஸ்வீட் கொடுத்ததால் , இனிமையான நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.





1 comment:

  1. ஜெ. ஒரு 3-பகுதி பதிவு போட்டிருக்கார். படித்தீர்களா தெரியவில்லை. தலைப்பு தமிழ் இலக்கியம் நேற்று- இன்று - நாளை - ஓர் ஆய்வு என்பதுபோல. இதில் என்ன பிரச்சினை என்றால், நாளை என்பதில் 2800 ஆம் ஆண்டுவரை போகிறார்! நகைச்சுவையா என்றால் அதை இவ்வளவு சீரியஸாக வேறு யாருமே எழுத முடியாது! 'போகிற போக்கைப் பார்த்தால் இலக்கியத்தில் கூட ஹைப்பர் லிங்க்ஸ் போடணுமோ? அப்புறம் கொஞ்ச நாளில் (சுஜாதா எந்தக்காலத்திலோ எழுதிய கம்புயூட்டரே ஒரு கதை சொல்லு - கதையில் மாதிரி) இன்ன ஜானர், இத்தனை பாத்திரங்கள் என்று கொடுத்தால் கணினியே கதையை எழுதிவிடுமோ என்று இரண்டு வரிகளில் ஜோக் போல எழுத வேண்டிய சமாச்சாரம்; அப்படி எழுதியிருந்தால் ரசித்திருக்கவும் முடியும். அதைப்போய் ஒரு (கற்பனையான) ஆய்வுக் கட்டுரை பாணியில் பக்கம் பக்கமாக எழுதியிருப்பதைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது, 'இவர் மனுஷனே இல்ல' என்பதுதான். எவ்வளவோ முயன்றும் இறுதிவரை அந்தக் கட்டுரையைப் படிக்க முடியவில்லை. படித்த வரையிலும்கூட ஒரு சோர்வையும், பதட்டத்தையுமே தருகிறது. இப்படி ராட்சஷத்தனமாக எழுதுபவர் எப்படிப் பட்டவராக இருப்பார் என்று நினைத்தபோது, சாரு ஜெ.யை சைக்கோ என்று கூறுவது நினைவுக்கு வந்தது... நிஜம்தானோ?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா