நான் பெங்களூரு சென்ற முதல் சில நாட்களில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. கன்னட மொழியோ , ஹிந்தி மொழியோதான் அனைவரும் பேசுவது போல இருந்தது. சின்ன சின்ன பையன்கள் எல்லாம் பல மொழிகளிலும் பேசுவதை பார்த்து ஆச்சர்யமாக இருக்கும்.
நம் ஊரில் நமக்கு இப்படி பல மொழிகளை கற்றுத்தரவில்லையே... ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லி நம்மை படிக்க விடாமல் செய்து விட்டார்களே என வருந்தினேன்.
அதன் பின் வேலையில் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி என்பதால் மொழிச்சிக்கல் இல்லை. நண்பர்களும் தமிழ் நண்பர்கள். தமிழ் படம் ஓடும் தியேட்டர்களாக தேடி சென்று பார்ப்போம். எனவே மொழி பிரச்சினை அறவே இல்லை.
அதன் பிறகு ஆங்கிலம் இல்லாத இன்னொரு வேலையில் சேர்ந்தேன். தமிழ் யாரும் இல்லை. முழுக்க முழுக்க மண்ணின் மைந்தர்களான கன்னட சகோதரர்கள்தான்.
அவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பதால் ஆங்கிலம் எல்லாம் வேலைக்காகாது.. கன்னடம் கலந்த தமிழில் பேசி எப்படியோ சொல்ல வேண்டியதை சொல்லி விடுவேன்,
ஏதோ ஒரு கணத்தில்கன்னட பேச , புரிந்து கொள்ள கை வந்து விட்டது. என் பேட்ச் நண்பன் அங்கிருந்து வட இந்தியா சென்று விட்டான்,
அவனை கொஞ்ச நாள் கழித்து பார்த்த போது, அவனது ஹிந்தியை பார்த்து அசந்து போனேன்,
ஃபேஸ் புக்கில் சிலர் , திராவிட இயக்கங்களால் ஹிந்தி கற்க முடியாமல் போய் விட்டதாகவும், அதனால் வேற்று மா நிலங்களில் வேலைக்கு செல்கையில் கஷ்டப்படுவதாகவும் எழுதுவதை பார்த்ததும் இந்த் நினைவுகள் மனதில் தோன்றின,.
வேலை நிமித்தம் , ஜெர்மனி, ஃபிரான்ஸ் , ரஷ்யா என்றெல்லாம் செல்ல வேண்டி இருக்கலாம். எல்லா மொழிகளையும் பள்ளியிலேயே கற்பிப்பது சாத்தியமா?
சென்னையில் வட இந்திய தொழிலாளர்கள் பலர் பணி புரிகிறார்கள். அவர்கள் எல்லாம் அவர்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்து விட்டா வந்தார்கள்?
அதிக பட்சம் இரண்டு மாதங்களில் புதிய மொழிக்கு செட் ஆகி விட முடியும். பள்ளியிலேயே கற்று கொடுத்தால் நல்லதுதான். ஆனால் யார் எந்த ஊருக்கு வேலைக்கு செல்வார்கள் என எப்படி கணிப்பது , எந்த மொழியை கற்று கொடுப்பது?
ஆக இந்த விஷயத்தில் திராவிட இயக்கத்தை பழிப்பது விபரம் இல்லாத செயல் என்றே நினைக்கிறேன்.
அந்த கால நாவல்களை பார்த்தாலே தெரியும். சமஸ்கிருதம் கலந்து எழுதுவார்கள். தமிழ் பேசுவது பெருமை என்ற நிலையை உருவாக்கியது திராவிட இயக்கம்தான்.
திராவிட இயக்கம் தன் பணியில் இருந்து திசை மாறக்கூடாது என சொல்வதுதான் சரியாக இருக்க முடியுமே தவிர , திராவிட இயக்கம் தவறு செய்து விட்டது என சொல்வது , மொழிப் பிரச்சினையை பொருத்தவரை நன்றி இல்லாத செயல் என்றே நினைக்கிறேன்.
