Sunday, December 8, 2013

ஹாலிவுட் பாணியில் ஒரு தமிழ் படம்

பர்மா ராணி (1943) -  தேச ( ?!! ) பக்தி படம் 

 நடிப்பு         : ஹொன்னப்ப பாகவதர், டிஆர் சுந்தரம், கேஎல்வி வசந்தா , என் எஸ்கே, மதுரம், பாலையா , காளி என் ரத்தினம், ராஜகாந்தம் மற்றும் பலர்

 இயக்கம்   : டி ஆர் சுந்தரம்

தயாரிப்பு   : மாடர்ன் தியேட்டர்ஸ்




கதை     :  ஜப்பான் எனும் அழிவு சக்தியிடம் இருந்து உலகை காக்க பிரிட்டிஷ் அரசு செய்யும் முயற்சிகளுக்கு உதவும் தேச பக்தர்கள் கதை

வகைப்பாடு  : பொழுதுபோக்கு ,யதார்த்தம் ,மாற்று சினிமா, குப்பை , பிரச்சாரம்


************************************************************************8

இது சிறந்த படம் என்ற வரிசையில் வராது.. ஆனால் அபூர்வமான படங்கள் என்ற வரிசையில் வரும்.. இந்த பாணி படங்களின் பிரதிகள் எல்லாம் அழிந்து விட்டன..இந்த பட பிரதி மட்டும் எப்படியோ எஞ்சி இருக்கிறது.


ஓர் அரிய ஆவணமாக திகழ்கிறது இந்த படம்..இப்போதைய ஹாலிவுட் படங்களில் உலகை காக்கும் ரட்சகனாக அமெரிக்காவை காட்டுகிறார்கள் இல்லையா.. இந்த ரட்சகன் ஸ்டேட்டசை அடைய அன்றைய பிரிட்ட்டன் முயன்றது ஆவணமாகி இருக்கிறது.. இது போன்ற படங்கள் அன்று பல வந்துள்ளன.. ஆனால் அந்த பிரிண்டுகள் இன்று இல்லை... எனவே பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவான ஒரு படத்தை பார்ப்பது விசித்திரமான மன நிலையை ஏற்படுத்தியது..

இது போன்ற படங்களை நம் ஆட்கள் விரும்பி எடுக்கவில்லை.. உலகபோர் நடந்த அன்றைய கால கட்டத்தில் பிரிட்டன் அரசு இப்படி ஓர் உத்தரவு போட்டு இருந்தது.. மூன்று படங்கள் எடுத்தால், அதில் ஒரு படம் இது போல இருக்க வேண்டும் என்பது விதி..

அந்த விதிக்கு உட்பட்டு இந்த படம் எடுத்தாலும், உண்மையில் இது ஆங்கிலேய அரசுக்கு எதிரான படமாக எடுத்ததில் நிற்கிறார் டி ஆர் சுந்தரம்..

கதைப்படி பர்மா ஜப்பான் ஆதிக்கத்தில் இருப்பதாக காட்டி , ஆக்கிரமிப்பு ஜப்பானை எதிர்ப்பது போல , ஆக்கிரமிப்பு பிரிட்டனுக்கு எதிராக மறைமுகமான பிரச்சாரம் செய்கிறார்..

கதைபர்மாவில் நடக்கிறது... ஆசியாவின் ரட்சகன் என்ற போர்வையில் உலகை விழுங்க துடிக்கும் ஜப்பான், பர்மாவை பிடித்து விடுகிறது,,, பர்மாவை விடுவிக்கும் பொருட்டு , ( பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ) இந்திய விமான படை தாக்குதல்  நடத்துகிறது... அதில் ஒரு வீரர் ( பாலையா ) ஜப்பான் ராணுவத்திடம் பிடிபடுகிறார்.. குமார் ( ஹொன்னப்ப பாகவதர் ) என்ற படை வீரன் தன் சகாக்களை ஒளித்து வைத்து விட்டு , பர்மா அமைச்சர் ஒருவர் இல்லத்தில் அவருக்கு தெரியாமல் த்ஞ்சம் புகுகிறான். அவர் மகளுடன் ( வசந்தா ) காதல் ஏற்படுகிறது... பர்மாவில் பிரிட்டனின் உளவாளி பெண் ஒருவள் இருக்கிறாள்..பர்மா அதிகாரிக்ளின் திட்டத்தை கண்டறிந்து , இந்தியாவுக்கு செய்தி அனுப்புவது இவள் வேலை.. இவளுடன் இணைந்து செயல்பட்டு ,  பர்மாவின் கண்களில் மண்ணை தூவி விட்டு, பிரிட்டிஷ் அரசு கொடுத்த வேலையை செய்து முடிப்பதே கதை.. இந்த வேலைக்கு கதானாயகி உதவியாக இருக்கிறாள்..

பிரச்சார படம் என்றாலும் , அந்த கால கட்டத்தில் ஒரு வித்தியாசமான படம்.. ஒரு த்ரில்லர் பாணியில் , அதிக வசனங்கள் இல்லாமல் , ஆங்கில படம் போல எடுத்து இருக்கிறார்கள்..இரண்டு மணி நேர படம்... அந்த கால கட்டத்தில் 11,000 அடிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்ற உத்தரவு இருந்தது,,, இந்த பாணியில் எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என பாராட்ட்டப்பட்ட படம் இது..

பத்து பாடல்கள்..எல்லாம் இனிமை... இரண்டு பாடல்கள் நகைச்சுவை பாடல்கள்..இன்றும் சிரிக்க வைக்கின்றன...

என் எஸ் கே மதுரம் , காளி என் ரத்தினம் ராஜ காந்தம் என இரு நகைச்சுவை ஜோடிகள்... பிரச்சார நெடி இல்லாமல் எடுக்கப்பட்ட படம் என்றாலும் பெரிதாக ஓடவில்லை..சுந்தரம் கவலைப்படவில்லை...இது சும்மா கணக்கு காட்ட எடுக்கப்பட்ட படம்தானே..

ஹிட்லரை கேலி செய்யும் விதத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கி அதில் தானே நடித்து இருக்கிறார் டீ ஆர் சுந்தரம்... வில்லனாக வரும் ஜப்பானிய ராணுவ அதிகாரி இவர்தான்...புத்த பிட்சுவாக செருக்களத்தூர் சாமா வழக்கம்போல சிறப்பாக செய்து இருக்கிறார்..

பர்மா ராணி - பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம்
*****************************************
டெயில் பீஸ்1

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அமைந்த அரசாங்கம்  , இந்த படத்தை சென்னை மகாணத்தில் திரையிடுவதை தடை செய்து விட்டது :)

டெயில் பீஸ்2

டி ஆர் சுந்தரம் இந்த படம் தவிர இன்னொரு படத்தில் நடித்து இருக்கிறார்.. அவர் தயாரித்த படங்களில் பயங்கர ஸ்ட்ரிக்ட்... ஷூட்டிங் ஆரம்பித்து விட்டால் , ஸ்டுடியோ கதவுகள் அடைக்கப்பட்டு விடும்,யாரும் உள்ளே போகவும் முடியாது,,வெளியே வரவும் முடியாது...ஒரு படத்தில் ஹீரோ பி யூ சின்னப்பா வர நேரம் ஆகவே, அவரை தூக்கி விட்டு சுந்தரமே நடித்தார்... எம் ஜி ஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் எடுத்தது இவர்தான்... எம் ஜி ஆர் 20 நாட்கள் வரவே இல்லை... 21 வது நாள் வந்தார்... நாளையில் இருந்து சரியாக வருகிறேன் என்றார்... தேவையே இல்லை...படம் எடுத்து முடித்தாயிற்று என படத்தை ஸ்கிரீன் செய்து காட்டினார் சுந்தரம்..சில காட்சிகளை குறைத்து, சில காட்சிகளை டூப் வைத்து ஷூட் செய்து , படத்தை முடித்து இருந்தார் சுந்தரம்.. சகல வசதிக்ள் கொண்ட ஸ்டுடியோவாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் இன்று இல்லை..சேலத்தில்,  வரலாற்றின் எச்சமாக அதன் முகப்பு மட்டும் இருக்கிறது

1 comment:

  1. பல வியக்கத் தக்க தகவல்கள். பிரச்சார படங்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு தரப்பு மக்களின் எண்ணங்களை உள்வாங்கியே படைப்புக்கள் வரும். உண்மையில் இத்தகைய சினிமாக்கள் குறித்த எந்த தகவல்களையும் நிகழ்கால ஊடகங்கள் விவரிக்கத் தவறுவதும், இத்தகைய படங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க தவறுவதும் வேதனையே. தங்களின் சினிமாக் குறித்த அண்மைய கால பதிவுகள் மனம் கவர்கின்றன, இது தான் உங்களுக்கான வழி என எனக்குப் படுகின்றது. தொடருங்கள். வாழ்த்துக்கள். :)

    --- விவரணம் ---

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா