இடம் பொருள் தெரியாமல் கத்துக்குட்டித்தனமாக கேள்வி கேட்பவர்கள் பரபரப்பை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்... ஆனால் ஒரு நல்ல ஊடகம் பரபரப்பை மட்டும் நம்பி செயல்படாது.. பரபரப்பு என்பது ரொம்ப நாள் நிற்காது என்பது அவர்களுக்கு தெரியும்..
கொஞ்ச நாட்களாக தொலைக்காட்சி , இணையத்தில் இருந்து விலகி அதிகம் வானொலிதான் கேட்கிறேன்..அதில் ஹலோ எஃப் எம்மில் கேட்ட ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் தங்கி இருக்கிறது...
இதில் கலந்து கொண்டவர் கமல்ஹாசன்..
பரபரப்பு ஏற்படுத்தி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் அதை எப்படி அவர் தவிர்க்கிறார் என்பதை கவனியுங்கள்
எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெற்றால்தான் பிள்ளையா என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது... கமல்ஹாசனும் , ஹலோ எஃப் எம்மும் இணைந்து இதை வழி நடத்துகிறார்கள்...
சிறுவர்களுக்கு எப்படி எய்ட்ஸ் வருகிறது என்றால் , அவர்களது பெற்றோர்கள் மூலம் பிறக்கும்போதே வந்து விடுகிறது...
அப்படி பாதிக்கப்பட்டோருடன் கமல் பேசுவதை கவனியுங்கள்.. அந்த பண்பை பாருங்கள்
--------------
வணக்கம்மா... என் பேரு கமல்ஹாசன்... உங்களைப்பத்தி சொல்லுங்க
அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றாலும் தன்னை அறிமுகம் செய்தபின்பே பேசும் நாகரிகம்...அது மட்டும் அல்லாமல் , ஒரு செலிப்ரிட்டியாக பேசாமல் , ஒரு நண்பன் போல அவர்கள் பிரச்சனையை , அவர் சொல்லாமல் விட்டதைக்கூட நினைவு படுத்தி பேசுகிறார்..
எப்ப கல்யாணம் ஆச்சு
எனக்கு பதினாறு வயசுலயே , முப்பது வயசு ஆளு ஒருவருடன் கல்யாணம்
ரொம்ப வயசு வித்தியாசமா இருக்கே..எப்படி ஒத்துக்கிட்டீங்க
என்னை யாரும் கேட்கல... கடமையை முடிச்சா போதும்னு ரெண்டாம் தாரமா பண்ணி வச்சுட்டாங்க..அவர் மூலமா எனக்கு இந்த நோய் வந்திருச்சு
ஓ..ரெண்டாம் தாரமா...அப்ப இன்னொரு பொண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பாரே...
-------------
அடுத்து சிறுவனுடன் பேசுகிறார்
வணக்கம்,... நான் யாருனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்... உங்க பேரு என்னனு சொல்ல வேண்டாம்... அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்...
அவர்கள் அடையாளத்தை சொல்லி பரபரப்பு ஏற்படுத்த விரும்பாத தன்மையை கவனிக்கவும்.. பரபரப்பு வேண்டாம் ..ஒரு எமோஷனல் டச் கொடுப்பதற்காகக்கூட பெயரை பயனபடுத்தலாகாது என நினைக்கிறாரே... அது பெரிய மனம்
-------
பெற்றால்தான் பிள்ளையா எனும் இந்த அமைப்பு குறித்தி அறிந்து கொள்ள ஹலோ எஃப் எம்மை கேட்கவும்
