Showing posts with label எஸ் ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ் ராமகிருஷ்ணன். Show all posts

Saturday, April 16, 2022

இடக்கை (எஸ்ரா ) ஒரு பார்வை



 உலகில்  அறவுணர்வு என  ஒன்று இருக்கிறதா என்பது புதிரான ஒன்று;

ரயிலில் பயணிக்கிறோம்.  ஒரு,நிமிஷம் சூட்கேசை பார்த்துக்கோங்க என யாரோ ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு  டீ,அருந்த செல்கிறோம்.  

99% வாய்ப்புகளில் நமது நம்பிக்கை காப்பாற்றப்படுகிறது. நமது சூட்கேஸ் பத்திரமாக இருக்கிறது;

இதற்கு நேர்மாறானவையும் உண்டு.  நாம் மதிக்கக்கூடிய  உயிரைத்தர சித்தமாக இருக்கக்கூடிய  ஒரு தண்பரிடம் திருமணம் ,  வீடு இடம் பாரத்தல் போன்ற பொறுப்புகளை ஒப்படைக்கிறோம்.  அவர் தனக்கு எது நல்லது என யோசித்து நமக்குப்பொருத்தமில்லா ஒரு முடிவை நம் மேல் சுமத்தி விடுகிறார். 


இந்த  இரண்டையும் நம்மில் பெரும்பான்மையினோர் அனுபவித்து,இருப்போம்


அறவுணர்வு  , நீதி என்பது உலகில்  இருக்கிறதா என்ற கேள்வியை வரலாற்றுப்பின்புலத்தில் அலசுகிறது இடக்கை நாவல்

அது என்ன இடக்கை ?


வலது கை இடது கை என இரண்டுமே நமக்குத் தேவையானவை. இரண்டும் சரியாக செயல்பட்டால்தான் நமது வேலைகளை சரிவரச் செய்ய முடியும்


ஆனால்  இடதுகை விருதுகள் , அவனை எல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணனும்  , அல்லக்கை ,  நொட்டாங்கை , இடது கால் முதலில் வச்சுறாதே என ஏன் இடதுகைப்பழக்கத்தினர் இழிவு செய்யப்படுகின்றனர் ?

   பூட்டு சாவி , சவரக்கருவிகள் , கதவு , வாகனங்கள் , டைப்ரைட்டர்கள் என ஏன் எவையுமே இடதுகையினரைப் பொருட்டாக நினைக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளன ?


எல்லா தகுதிகளும் கொண்ட இடக்கை எப்படி தேவையின்றி சமூகத்தால் புறக்கணிப்புக்கு உள்ளாகிறதோ அதுபோல பால்ரீதியாக , மதரீதியாக ,  சாதிரீதியாக , வர்க்க ரீதியாக சமூகம் தொடர்ந்து இப்புறக்கணிப்புகளை செய்து கொண்டேதான்  வருகிறது.


நீதியுணர்வு,  இடக்கை புறக்கணிப்பு

என்ற இரண்டையும்  ஒருவித மாயாஜால கவிதை நடையில் பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் இடக்கை


    நீதி கிடைப்பது யாருக்குமே கடினமாகத்தான் இருக்கிறது

 ஒரு தந்தைக்கு இரு மகன்கள். ஒரு,பையன் தந்தை மீது எல்லையற்ற மரியாதையும் அன்பும் கொண்டவன்


இன்னொருவன் தந்தையை,மதிப்பதில்லை  எல்லாவித  அயோக்கித்தனங்களும் செய்கிறான் கடைசியில்  மனம் திருந்தி   தந்தையிடம் வருகிறான்


தந்தை அந்த வருகையை  பிரமாண்டமாக கொண்டாடுகிறார்.   அறுசுவை விருந்துகள்  கலைநிகழ்ச்சிகள் மகனுக்குப் புத்தாடைகள் என அம்ர்க்களம்


நல்ல  மகன் வருத்தமாய்  கேட்கிறான்  "எனக்கு நீங்கள் இப்படி சிறப்புகளை செய்ததே இல்லையே ?


தந்தை  சொன்னார்  


நீ எப்பவும் என்னுடன் இருக்கிறாய் அதில் எனக்கு பெரிய கிக் இல்லை .  வழிதவறிப்போய் திரும்பி  வந்தானே  அதில்தான் கிக் அதிகம்


தந்தை சொல்வது தர்க்கப்பூர்வ யதார்த்தம்தான்  ஆனால் தனக்கு அநீதி நிகழ்ந்ததாக ஒரு மகன் நினைக்கக்கூடும் அல்லவா

ஒரு கற்பனை உதாரணம்.. 

தனது தலைவரின் செல்வாக்கை உணராமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்காக தொண்டன் தீக்குளிக்கிறான் அவன் குடும்பம் திணறுகிறது


இதற்கிடையில்  தலைமை தவறை உணர்ந்து  தலைவருடன் இணக்கமாகி அவருக்குப் பதவிகள் தருகிறது.  தலைமைக்கு விசுவாசமாக இருப்பதுதான் தன் கடைமை  என்பதை  தலைவர் உணர்கிறார்;;

அத்தலைவருக்கு நீதி கிடைத்தது..  

 தீக்குளித்த தொண்டனுக்கு?

நீதி  , அறம் போன்றவை இன்றி மனித குலம் தழைக்க முடியாது,,  ஆனால் அறம் நீதி போன்றவற்றை  வரையறுத்தல் சிரமம்


  தனது ,கணவன்,தூமகேது சிறைக்கு சென்று விட்டதால் தன் புதல்வர்களுடன்,கஷ்டப்படுகிறாள் அவனது மனைவி நளா.


  நாயைப்பிடித்துக் கொடுத்தால் காசு கிடைக்கும் என்ற வாய்ப்பு கிடைக்கும்போது அந்த காசுக்கு ஆசைப்படாமல்  நாய்க்கு அடைக்கலம் தரும் மனநிலை கொண்டவள் அவள்


அப்படிப்பட்ட அவள் ,  கணவனின் தந்தையை  அநாதரவாக  வீட்டில் விட்டுவிட்டு  குழந்தைகளுடன் ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.

  காரணம் அங்கு இருந்தால்  ,  அவள் கைதாகி குழந்தைகள் அனாதைகளாகி விடும்.  முதிய மாமனாரை  அழைத்துக்கொண்டு ஓடுவதும் சாத்தியமில்ல

    அந்த சூழலில்  அந்த முதியவரை நிர்க்கதியாக விட்டுச் செல்வதுதான் அவளது,அறமாக இருக்க முடியும்.

      அந்த முதியவருக்கு அநீதி இழைக்கப்படுகிறதே என  யாரிடம் கேட்க முடியும் ?

      வாரிசுரிமைப்,போட்டியில்  மக்கள்,ஆதரவு,மிக்க  தனது சகோதரன் தாராவை  கொன்று  ஆட்சிக்கு வருகிறார்,ஒளரங்கசீப்.   இதுபோல அரசகுடும்ப, அநீதிகளுக்கு அதிக,முக்கியந்துவம் தராமல்  வரலாற்றில் பதிவாக  எளியவர்களுக்கு இழைக்கப்படும் கண்ணீரை  ,  அவர்களுக்கு கிடைக்காத நீதியைப் பற்றி பேசுவதுதான் இடக்கை நாவலின்  சிறப்பு

   இன்னொரு  சுவாரஸ்யம்..    அரச குடும்பம் சாமான்யர்களுக்கு இழைக்கும் அநீதி வழக்கமாக நடப்பது.  ஏதாவது ஒரு அபூர்வ கணத்தில் வரலாற்றைத்திசை திருப்பும் ஒரு சிறிய கருவியாக ஒரு சாமான்யனை  காலம் தேர்ந்தெடுக்கக்கூடும்   அப்படி ஒரு தருணத்தில் ஒரு சாமான்யன் இழைக்கும் அநீதியும் அழகாக பதிவாகியுள்ளது.

    குதிரைகள் ,  யானைகள் ,  படைகள் என பிரமாண்டங்கள் பேசப்படும் அளவுக்கு ஒரு புழு ,  தன்னைக் கடந்து செல்லும் படகைப் பாரக்கும் நீர்ப்பூச்சி போன்றவையும்  மனதில் நிற்கும்படி நாவலில் வருகின்றன


பேரரசர் ஒளரங்கசீப் இறந்ததும்  அவருக்கு மகளாக , தாயாக ,  அடிமையாக ,  உயிலில் இடம்பெறும் அளவு அவர் மனதில் இடம்பெற்றிருந்த அஜ்யா என்ற திருநங்கை  கைது செய்யப்படுகிறாள்.   அரசருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத தூமகேது எனும் தாழ்த்தப்பட்ட வஞ்சிக்கப்பட பிரிவைச் சேர்ந்த ஒருவன் கைதாகிறான்

        தவறே செய்யாத இவர்களுக்கு இழைக்கப்படும்  அநீதிதான் கதையா என்றால் இல்லை

      சாதீய ரீதியாக  பால் ரீதியாக  இடது கையாக நினைக்கப்படும் இவர்களது கதை மட்டுமல்ல

    பொதுவாக ஆணை வலது கையாகவும் பெண்ணை இடது கையாகவும் நினைககும் சமூகத்தில்  பேரரசரரின் மகள் ஜெப்புன்னிஷா என்ற கவிஞர் மக்பி  , தூமகேதுவின் மனைவி ,  சற்று நேரமே வந்தாலும் ஒளரங்கசீப்பிடம் விளையாட்டாகப்பேசி  அவருக்கு மறக்கமுடியாத ஞானத்தை வழங்கி ,  தனது அழகிய முகம் யானையால் சிதறிக்கப்பட்டு ,  பேரரசரின் கடைசித் தருணங்களில் அவரால் நன்றியுடன் நினைக்கப்படும் தாசிப்பெண் அனார் என பெண்களின் ஆளுமையை  அழுத்தமாகச் சொல்லும் நாவலும்கூட


    தனித்தனி  சிறுகதைகளாக விரிவாக்கம் செய்யக்கூடிய அளவுக்கு செறிவும் அழகும்கூட பல்வேறு பாத்திரங்கள்

      தனது வலது கையை வெறுக்கும் மனிதன் ,  இரட்டைத் தலை அரசன் ,  குள்ளமான தாசிப்பெண் ,  வசீகர ஓவிய ஆற்றல் கொண்டவன் ,  கண் தெரியாத இசைஞன் ,  வெறும் விளையாட்டுக்காக  கொள்ளை அடிக்கும்,அபூர்வ  இன மக்கள் ,  திருட்டை ஒரு அறம்மிக்க தொழிலாக கருதி அதற்குரிய அறத்துடன் அத்தொழிலை நடத்தும் ஆடு திருடன் ,  யார் ஆட்சியிலும் தமது நலனைப்,பேணிக் கொள்ளும் பண்டிதர்கள் ,  ஒளரங்கசீப்பின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயன்று உயிர்த்தியாகம் செய்யும் திருநங்கை ,  நான் முதலை மாதிரி தண்ணீர்தான் என பலம் என மதுக்கடையில்  ரகளை செய்பவன் ,  தனது பூனைக்கு எலி என பெயரிடம் ஒரு கலைஞன் ,  அந்தப் பூனை,

சமாதிப் பிளந்து வெளிவரும் மனிதக்கை எலும்பு,  விஷமேற்றும் இசை  என பக்கத்துக்குப் பக்கம் வண்ணமயமான  பாத்திரங்கள்


  நீதியை  அழிப்பதே  தமது  வாழ்க்கை எனக் கொண்டவர்கள்  பிஷாடனன் , ரெமியஸ்  ,   பண்டிதர்கள்  , விஸ்வாம்பரன் என்ற சாதி வெறியன் 

  நீதிக்கும்  அநீதிக்கும் இடையே சிக்கி அல்லாடுபவர்கள்  நளா ,  ஒளரங்கசீப் , சம்பு  போன்றோர்

    தமக்கான  அறத்துடன்  உறுதியாக,வாழ்ந்து மறைவோர் அஜ்வா , அனார் ,  பகுத்தறிவு பேசும் ஸச்சல் , சாகும் தருணத்திலும்  இளவரசனுக்கான பெட்டியை  சம்புவிடம் ஒப்படைக்கும் மர்ம நபர் .   அஜ்யாவின்  

விருப்பத்திற்கிணங்க பேரரசரின் தொப்பியை உரியவரிடம் அளிக்கும் முயற்சியில் உயிர் துறக்கும் அனுராதா, ஒடுக்கப்பட்டோருக்கு குரல் தரும் சக்ரதார்  போன்றோர்


இந்த  அறக்குழப்பங்கள் ஏதுமின்றி வாழ்ந்து மறையும்  எளிமையாக உடற்பசி , வயிற்றுப்பசி என வாழ்ந்து மறையும் மஞ்சா ,  காயத்ரி போன்றோர்


நம்மில் பெரும்பாலானோர் இவ்வகையில் ஒன்றாகத்தான் இருப்போம்


இவற்றைக் கடந்த ஒரு  பாத்திரமாக  இருப்பவன்தான் தூமகேது

     இவனும் அறக்குழப்பங்கள் அற்ற  அன்றாட தேவைக்கேற்ப வாழும் மனிதனாக இருந்தவன்தான். 

கதைகள்  அல்லது எழுத்து இவனுக்கு புதிதாக ஒரு வாழ்க்கை கொடுத்து மீட்சி அளிக்கிறது  என்பது இந்நாவலில் என்னை மிகவும் பாதித்த ஒன்று

     பேரரசரின்  தொப்பி  கடைசியில் இவனைத்தான்  வந்தடைகிறது   left hand has the last laugh


    தூமகேது  ,  வசீகர ஓவியன் நியோகி,  அபூர்வ சக்தி கொண்ட சிகிரி இன மக்கள்  ஆகியோர் இடது கையாளர்கள் என்பது  நல்லதொரு குறியீடு.

வற்புறுத்தலுக்காக இடது வகை ,   வலிமைக்காக இடது கை ,   தந்திரமான இடது கை என இடக்கைகளுக்குள் சுவையான சில பிரிவுகள்



பல  இடங்கள்  ஹைக்கூ படிப்பதுபோல இருக்கிறது

ஹைக்கூ கவிதைகளின்  கடைசி வரி ட்விஸ்ட்டை  கீழக்கண்ட  பத்தியில்  பாருங்கள்.  

     

     

     1 இன்னும்,சில நாட்கள் உயிர் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கோம். 


  2 எல்லாம் அல்லாவின் கருணை  என மனதுக்குள் நன்றி கூறிக்கொண்டாள். 

  கடைசி  வரி 

  3  உடலில் இருந்து ரத்தம் கொண்டிருந்தது


அதாவது  ,   ஒரு பணக்கார கிழவர்  உலக இன்பங்களை துய்க்க மேலும் ஆயுள் கிடைத்திருக்கிறது என  நன்றி  செலுத்துவது  வேறு

   சித்திரவதைக்கு உள்ளாகி  ரத்தம் சிந்தும்போதும் ,  கடவுளுக்கு வாழ்க்கைக்கு நன்றி செலுத்துகிறாள் என்பதுதான்  அவள் கேரக்டரை உயர்த்துகிறது

         நன்றி சகோதரர்களே என நிறைவுடன் தூக்குத்தண்டனை பணியாளர்களிடம் சொல்லி விட்டு விடைபெறும் அவளது மனநிறைவு  பெரிய மன்னர்களுக்கும் கிடைப்பதில்லை

     தூக்கில் தொங்கப்போகும் கடைசி தருணத்தில் அவளுக்கு  எதிர்பாரா அதிர்ஷ்டம்

     சாவதற்கு முன் ஒரு  நட்சத்திரம்தானே பார்க்க விரும்பினோம்   மூன்று  பார்க்க கிடைத்திருக்கிறதே  என்பதில் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி

   இம்ரானாக இருந்த  அவனை  அஜ்வா என மாற்றிய தர்ஷன் பாத்திரத்தின்  கேரக்டர் curve ம் குறிப்பிடத்தக்க ஒன்று

       பெண்ணடிமைத்தனம் என்பதில் முக்கியப்பங்கு வகிப்பது  குழந்தை பிறப்பு.     குழந்தைகளுக்காக  பிடிக்காத  கணவனுடன்  அனுசரித்துச் செல்லும் பெண்கள் ,   திருமணததுக்கு முன் கர்ப்பம் அவமானம் என்ற  சூழலில்  தற்கொலைகள் , கருக்கலைப்பு சார்ந்த மரணங்கள் .   வேறு வழியின்றி பிடிக்காதவனை மணப்பது என  இது சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் .குழந்தைகளுக்காக  வாழ்வதை புனிதமாக்கி ,தாய்மை  என்ற பிம்பச்சிறையில்  மறைந்துபோன  எத்தனையோ மேரி க்யூரிக்கள் , அயன் ராண்டுகள் ,  இந்திரா காந்திகள் உண்டு


கர்ப்ப பை தான்  உன்னை  அடிமையாக்குகிறது என்றால்,அதை  அகற்றி எறி என பெரியார்முழங்கியது இதனால்தான்

குழந்தைகள்  தனி  உடைமைகள்  அல்லர் . அவர்களை  ஊர்தான்  வளர்க்க  வேண்டும்  தனி குடும்பம் என்ற  கர்ப்பிதமே  அர்த்தமற்றது என்ற  சூழல் வந்தால் உலகமே  இனிய உலகமாகி விடும்.   சொத்துச்சண்டைகள்  ,   சாதி மத,பேதங்கள்  என எதுவும் இராது.  விவாகரத்துகள் , கள்ளக்காதல்கள் , ஆணவக்கொலைகள்  போன்ற  சொல்லாடல்களே அர்த்தமிழக்கும் என்றொரு  பார்வை உண்டு 

இது சார்ந்து  ஒரு அற்புதமான  அத்தியாயம்  நாவலில் வருகிறது


ஆணாதிக்கம் குறித்த ஒரு சிறிய கதை வருகிறது

மண்ணால் ஆன ஒரு பெண்ணை ஒருவன் தவறுதலாக மணந்து விடுகிறான்.  ஆனாலும் பெருந்தன்மையாக அவளை  ஏற்கிறான். அவன் மனம் எப்படி திரிபடைகிறது.  அதனால்,அவள் எப்படி அழிகிறாள்" அவளை  அழித்து ரசிப்பதில் கிடைக்கும் போதை  ,   முழுதும் அழித்தபின் அடையும் சோகம் என ஒருகதை   இப்படி  ஆழமான குறியீட்டு ரீதியான  ஏராளமான சிறுசிறு பகுதிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன

மனிதனின் அறவுணர்வு குறித்து எஸ்ராவின் சிறுகதை ஒன்றில் படித்திருப்போம்


பசிக்கொடுமை  வேறு வழியில்லாமல் கிழவி  தபால் செலவுக்கு கொடுத்த காசை வைத்து இருவர் சாப்பிடுகிறார்கள். அவளது பார்சலை கிழித்தெறிகிறார்கள்

அப்போது அவளது கடிதம் கண்ணில் படுகிறது.   தன்னைப்போல  கஷ்டப்படும்,ஒரு,சிநேகிதிக்கு  கிழவி கஷ்டப்பட்டு அனுப்பும் சில பரிசுகளும் ஐநூறு ரூபாய் நோட்டும் இருக்கிறது. அவளது சூழல் புரிந்ததும்தான்  அவளுக்கு தாங்கள் செய்த துரோகம் புரிகிறது    அந்த  500ரூபாயை அவர்களால் எடுத்துச்செல்ல முடியவில்லை

    இந்த இயல்பான அறவுணர்வு  சில  நேரங்களில் மறைந்து விடுவதுதான் விநோதம்    அதீதமான வறுமை  ,  அதீதமான  அதீகாரம் என அதுவும் இந்த அறப்பிழைக்கு காரணமாக  இருக்கலாம்;

      தன்னிடம் அன்பு  காட்டிய  ஒருவருக்கு செலுத்த வேண்டிய நன்றி  மன்னருக்கு தனது  ஆட்சிக்காலங்களில் நினைவில் இல்லை    மரணமடையும்போது  நினைவு வந்து  ஒரு  பரிசை அளிக்கச்சொல்லி உயில் எழுதி தன் உதவியாளரான அஜ்வாவிடம் பொறுப்பை  ஒப்படைக்கிறார்   கடும் சித்திரவதைகளுக்கு மத்தியிலும் இப்பொறுப்பில் இருந்து அவள் விலகவில்லை.   அவளிடம் இருந்து இப்பொறுப்பை, ஏற்ற அனுராதா என்ற திருநங்கையும்  இந்த பணியில்  உயிரத்தியாகம் செய்கிறாள்


இன்னொரு  புறம்

தன் கழுத்தில் கத்தி பாய்ந்து உயிர்பிரியவிருக்கும் கடைசி தருணத்திலும், இளவரசருக்கு சொல்ல வேண்டிய செய்தியை  சொல்லிவிட வேண்டும் என்ற  பொறுப்பில் வழுவாதிருக்கிறரர்  ஒருவர்


இவரிடம் இருந்து  அப்பொறுப்பை ஏற்கும் சம்பு அப்பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதுதான் வாழ்வியல் வினோதம்  சம்பு  பொதுவாக அறப்பிழைகள் செய்பவனல்லன்.   தனது"கைகளில் இருப்பது இந்தியாவின் வரலாற்றையே  மாற்றக்கூடியது   அடுத்த மன்னனை  நிர்ணயம்  செய்யக்கூடியது  என  தெரிந்தாலும்  தற்காலிக பலனுக்காக  தன்னை  நம்பியவருக்கு துரோகம் செய்கிறான்.

   தனது பொறுப்புக்கு உண்மையாக இரு்ந்த  அஜ்யா மனநிறைவுடன் உயிர் துறக்கிறாள்.     துரோகம் செய்த சம்புவை  மரணம்வரை  அந்த  துரோகம் துரத்துகிறது.


இது  போல நாவலில்  கவனித்து  ரசிக்க வேண்டிய பகுதிகள் ஏராளம்





கண்டிப்பாக  படிக்க  வேண்டிய  நாவல்


தேசாந்திரி  பதிப்பகம்

    

  ரசித்த  சில வரிகள்


 பகல் மனிதர்களை பிரித்து வைக்கிறது. இரவு ஒன்று சேர்க்கிறது. உறக்கம் என்பது  இரவு புகட்டும் பால்.தாய் பால்புகட்டுவதுபோல இரவு உறக்கத்தை மனிதர்களுக்குப் புகட்டுகிறது

  


நல்லதை எடுத்துக்காட்ட ஒரு மனிதனை ஞானியாக்கும் கடவுள் ,  தீமையை அடையாளம் காட்ட தன்னை பாவையாக்கி கொண்டாரா



 




















Saturday, June 13, 2020

யாமம் .. ரகசியங்களின் கதை


இருள் இருட்டு போன்றவற்றை நாம்
பெரும்பாலும் எதிர்மறையாகவே உருவகித்து வருகிறோம்.  இரவு என்ற வேண்டத்தகாத ஒன்றாகவும் விடிதல் என்பதை சந்தோஷமான ஒன்றாகவும் அன்றாட மொழியிலேயே நிலை பெற்று விட்டது

உண்மையில் இரவு என்பது வசீகரமானது. மர்மம் மிக்கது.  ரகசியஙககள் நிறைந்தது

இந்த இரவு என்பதை ஒரு படிமமாக்கி , மனதின் வரலாற்றின் மனிதனின் ரகசியமான பகுதிகளைப் பற்றி பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் யாமம்

யாமம் என்றால் இரவு. யாமம் என்ற பெயரில் தயாரிக்கப்படும் வசீகரம் மிக்க அத்தர் என்ற பின்னணியில் இந்த நாவல் அமைந்துள்ளது..

அத்தரின் அந்த வசீகரமிக்க கவரச்சி நாவல் முழுக்க விரவியுள்ளது

   நாவலின் கட்டமைப்பே வெகு சுவாரசியமானது

பாரம்பரியமாக பல தலை முறைகளாக அத்தர் உற்பத்தியில் பிரசித்தி பெற்ற குடும்பம் அது.  அந்த குடும்பத்தின் முதல் தலைமுறையான மீர் காசிம் என்பவர் கனவில் சுபி ஞானி பக்கீர் தோன்றி உவமை மொழியில் பேசி , சில தேர்வுகள் வைத்து , கடைசியில் யாரும் தயாரிக்க முடியாத அளவு சிறப்பான அத்தர் தயாரிப்பு முறையை கற்றுத் தருகிறார். அதைக்கற்ற மீர் காசிம் செல்வமும் கீர்த்தியும் பெறுகிறார்.

 அவரது வாரிசுகளும் அதை பின்பற்றி நன்றாக வாழ்கின்றனர்

   தற்போதைய நிகழ்கால வாரிசான அப்துல் கரீம் கனவில் பக்கீர் வருகிறார். இயேசு எப்படி தன்னை உவமைகளால் பேசுபவன் என சொல்லிக் கொண்டாரோ அதுபோல பக்கீரும் உவமைகளால் சில முன்னறிவிப்புகளை செய்கிறார் என ஆரம்பிக்கிறது கதை.
  கதையின் ஆரம்பமே பக்கீர் செய்யும் இந்த முன்னறிவுப்புதான்.  நாம் அப்போது மீர் காசிம் உரையாடலையோ , நாவலின் பிற சம்பவங்களையோ அறிந்திருக்க மாட்டோம் என்பதால் அவரது அறிவுரைகளின் முழு தாத்பர்யம் நமக்கு புரிவதில்லை. ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே உன் வியாபாரம் விருத்தியாகும் என்று மட்டுமே அப்துல் கரீம் புரிந்து கொள்கிறார்

     அதன்விளைவாக  அவர் குடும்பம் என்ன ஆகிறது என்பது ஒரு கதை

     இதைத்தவிர பத்ரகிரி , அவனது தம்பி திருச்சிற்றம்பலம் ,  அவர்களது மனைவிமார்கள் , திருச்சிற்றம்பலத்தின் நண்பன் சற்குணம் , கிருஷ்ணப்ப கரையாளர் அவரது தோழி எலிசபத் , சதாசிவ பண்டாரம் ஆகியோரின் கதைகளும் யாமம் எனும் பொதுவான அம்சத்தின் கீழ் பிணைந்துள்ளன.

லண்டன் நகரும் ஆங்கிலேய சமூகமும்கூட கதாபாத்திரங்களாக வருகின்றன

          அப்துல் கரீம் , பத்ரகிரி , கிருஷ்ணப்ப கரையாளர், சதாசிவம் ஆகியோர் மட்டுமல்ல. முன்கதையில் வரும் இளவரசி உட்பட அனைவர் வாழ்விலும் நறுமணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு விதமான உணர்வுகளையும் விளைவுகளையும் உருவாக்குகிறது


 இவர்களை வசீகரமான ஒரு சக்தி வழி நடத்துகிறது. அதைத்தான் யாமம் என கவித்துவமாக உருவகமாக்கியுள்ளார் எழுத்தாளர்



     தான் என அவர்கள் நினைப்பதற்கு சம்பந்தமில்லாத ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

      இவர்களில் சதாசிவ பண்டாரத்தை வழி நடத்தும் சக்தி மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. மற்றவர்கள் இரவு போன்ற மர்மமான ஒரு விசையால் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்

        தான் இங்கிலாந்து செல்வதே வெள்ளைக்காரிகளை புணருவதற்காகத்தான் என சொல்லக்கூடிய தன்னை பொறுக்கி என நினைக்ககூடிய சற்குணம் , சமூகநல போராளியாக மாறுகிறான்
   
தன் தம்பிக்கு தான் ஒரு தந்தை என மனப்பூர்வமாக நம்பும் பத்ரகிரி பெண்மோகத்தில் விழுகிறான்

      பற்றுகளுக்கு அப்பாற்பட்டவர் என தன்னை நினைத்துக்கொள்ளும் சதாசிவ பண்டாரம் தன் எல்லைகளை உணர்கிறார்

      தங்களை சுயநலவாதிகள் என்றும் அப்துல் கரீமின் சொத்துதான் தஙககளை பிணைத்து வைத்துள்ளது என நினைக்கும் அவரது மனைவிகள் அவர் இல்லாதபோதுதான் கடுமையான வறுமைக்கு மத்தியிலும் ஒருவருக்கு,ஒருவர் அவ்வளவு ஆறுதலாக அன்பாக இருக்கின்றர்

   
     வெளிப்படையாக தெரியாமல் தன் மனத்தால் தன் இருப்பைக் காட்டும் யாமம் போல மனிதனுக்குள் அவனுக்கே தெரியாமல் இன்னொரு மனிதன் இருப்பதும் அவன் தன் இருப்பைக் காட்டுவதும் கதையில் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது

இது மனிதனுக்கு மட்டுமன்று. இமங்களுக்கும் பொருந்தும்
வசீகரமான லண்டன் நகரைப் பாரத்து இதுதான் சொர்க்கமா என நினைக்கும் அதன் இருளான பகுதியைஒரு
தூக்குதண்டனை சம்பவம் மூலம் அறிகிறான்

அதுபோல இந்தியாவை கரையான்போல அரிக்கும் ஆங்கிலேய ஆட்சியின் இன்னொரு முகமான பெண் கல்வி , ஜனநாயக யுகத்தின் பலன் ஆகியவையும் சொல்லப்படுகின்றன

தன் சொந்த மக்களின் ஒரு
பகுதியினரை கொடுமைக்குள்ளாக்கும் அதே ஆங்கில சமூகம்தான் தமிழன் ஒருவரை தன் புதல்வனாக பத்திரமாக பார்த்துக் கொண்டு மேடை ஏற்றி அழகு பார்க்கிறது

நெடுங்குருதி நாவலில் காலம், நிலவியல்
பற்றி தெளிவான குறிப்புகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு இருக்கும். காரணம் அந்த நாவலின் தளம் வேறு. யாமம் நாவலில் இடம் மற்றும் காலம் பற்றிய குறிப்புகள் வெகு கவனமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.

முதன்முதலில் மீர் காசிம் கனவில் தோன்றும் பக்கீர்  , தனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும் என்றும் கடலின் மீன்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்ல வேண்டும் எனவும் கேட்கிறார்.
அது எப்படி முடியும் என திகைத்தாலும் பதிலுக்காக தீவிரமாக தேடுகிறார். கடைசியில் அவருக்கு பதில் கிடைக்கிறது. அந்த பதிலைவிட அந்த தேடலும் நம்பிக்கையும் பக்கீருக்கு பிடித்து விடுகிறது. எனவே தொடரந்து உரையாட ஆரம்பிக்கிறார்

  தெரியாதை தேடிச் செல்லும் நம்பிக்கையும் குறியீட்டுப் பொருளை உணரும் ஆற்றலும் கொண்ட அவருக்கு அள்ள முடியாத நறுமணமிக்க திரவமான இருளை , வடிவற்ற இருளை , வடிவம் கொண்ட அத்தராக உருவாக்கும் வித்தையை கற்றுத்தரலாம் என முடிவெடுத்து அவருக்கு மாகற்றுத்தருகிறார்

ஆனால் இந்த தேடலோ குறியீடுகளை புரிந்தும் தன்மையோ அப்துல் கரீமிடம் இல்லை என்பதை கவனிக்க முடிகிறது.
     

இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது

இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையை போன்றது



இரவின் தீரா வாசனை எங்கும்  பரவி இருக்கிறது



பகலிலும் இரவை உருவாக்கும் திறன்

உங்களது வாசனை திரவியங்களுக்கு மட்டுமே உணடு


பசுவின் காம்பில் இருந்து பால் சொட்டுவதுபோல பிரபஞ்சத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டிக் கொண்டே இருக்கிறது

நீயும் உன் மூதாதையரும் இரவை சிருஷ்டிக்கும் ரகசியம் அறிந்தவர்கள்


   இரவின் ரகசியத்தை நீ உன் புதல்வனுக்கும் அவன் தன் புதல்வனுக்குமாக கைமாற்றி தர வேண்டும்.
         இது எப்போது நிற்கிறதோ அப்போது இந்த வித்தை உங்களை விட்டுப் போய் விடும்

 என மிகுந்த கருணையோடு முன்னறிவிக்கிறார் பக்கீர்

   மீன்களின் எண்ணிக்கை என்ற உலகியல் கேள்விக்கு விடை தேடி , ஆன்மிக அனுபவம் பெற்று , தத்துவரீதியான பதிலை தந்த தன் மூதாதையரின் நுண்திறன் இவருக்கு இல்லை

   இரவின் ரகசிய புத்தக செய்தியை நன்கு அறிந்து அதை உன் மகனுக்கு புகட்டு என்பதை உலகியல் ரீதியாகவே புரிந்து கொண்டு , ஆண் குழந்தை பெற உத்தரவிடுகிறார் என புரிந்து கொண்டு அதையே தன் லட்சியமாக மாற்றிக கொள்கிறார்.   படிப்படியாக அவர் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. ராணிகள் போல இருந்த அவர் மனைவிகள் கூலி வேலை , மீன் விற்பனை என கஷ்டப்படும் சூழல் உருவாகிறது

    இவரது வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பது யாமம் . பிரசித்தி பெற்ற தனது அத்தர் பாட்டில்களை  அவர் குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்.

    இவரது பிரச்சனை காமம் கிடையாது. பேராசைதான் இவரது பிரச்சனை


  கிருஷ்ணப்ப கரையாளர் யாமம் அத்தரின் தீவிர ப்ரியர். தன் பிணத்தின் மீது அத்தரைக் கொட்டி புதைக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குண்டு. அன்பான அரவணைப்பு என்றுதான் யாமம் இவருக்கு பொருள்படுகிறது.  ஆனால் அது அவருக்கே தெரிவதில்லை.  சொத்துதான் தன்னை இயக்கும்விசை என நினைத்து அதற்காக வழக்காடுகிறார்.

   ஒரு மலைத்தங்கலின்போதுதான் , காமமோ பணமோ தனக்கு பொருட்டல்ல என்ற சுயதர்சனம் அவருக்கு கிடைக்கிறது;

இது சுவையான ஒரு சித்தரிப்பாகும்

தன்னை தியாகி என்றும் பொறுப்பான அண்ணன் என்றும் நினைக்கும் பத்ரகிரியின் ஆழ்மனத்தை காமம்தான் ஆட்டுவிக்கிறது. இவனுக்கு யாமம் என்பது காமமாக பொருள்படுகிறது

ஆனால் தன்னை பேராசைக்காரராகவும் காமக்கேளிக்கையாளராகவும் மதிப்பிட்டிருந்த கிருஷ்ணப்பரின் ஆழ்மனம் எளிய வாழக்கையே நாடி இருக்கிறது.

    கிழக்கிந்திய கம்பெனி இங்கு நிலைகொள்ள காரணமாக அமைந்தது மகள் மீது தந்தை கொண்ட பேரன்பு. அப்படி ஒரு நெகிழ்வான கணத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு கதவுகளை திறந்து விடுகிறார்

    மதராபட்டணம் உருவானதற்கு பின்னணியில் இருப்பது பிரான்சிஸ்டே என்பவனுக்கு கிளாரந்தா மீதான பாலியல் கவர்ச்சி

    சதாசிவ பண்டாரம் தன் அன்னையை துச்சமாக நினைத்து துறந்தவர்..  மான அவமானம் , பொருளாசை , பெண்ணாசையைக்கூட துறந்து விடலாம் , ஆனால் ரத்த பந்தத்தை அறுப்பது எளிதல்ல என்பதை உணர்வதுதான் இவரை முழுமை ஆக்குகிறது. தான் பாலுறவு கொண்ட பெண்ணைப்பற்றி நினைப்பதைவிட தன் குழந்தை என்னவாயிற்று என்றே அவர் மனம் துடிக்கிறது.  தன் தாயின் துடிப்பை அப்போதுதான் அவரால் உணர முடிகிறது

      மதம் மாறிய ஒரு பெண் குறித்தும் அவள் ஏற்படுத்திய பெண் கல்வி புரட்சியும் ஒரு சித்தரிப்பு வருகிறது.அவள் மதம் மாறியதும் கலப்பு மணமும் அவள் பெற்றோருக்கு மரணத்தை ஒத்த மிகப் பெரிய வேதனை. அவளுக்கு சாவு சடங்குகளை செய்துவிட்டு ஊரைவிட்டே போய் விடுகிறார்கள்
தனியாகப் பார்த்தால் அந்த பெற்றோர் வேதனை குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஆனால் சீர்திருத்தம் , பெண்கல்வி என பெரிய அளவில் பார்க்கும்போது தனி ஒருவர் கண்ணீருக்கு வரலாற்றில் என்ன பொருள் இருக்க முடியும்.
இந்த பின்னணியில்தான் தன் தாயின் கண்ணீரை புரிந்து கொண்டுஅதன்பின் அதை தாண்டும் பக்குவம் சதாசிவ பண்டாரத்துக்கு கிடைக்கிறது,..ஒரு சத்திரத்தில் தங்கியிருக்கும்போது ஒரு கல்லில் எங்குமே அனுபவித்திராத ஒரு சுகந்தமான மணம்  வீசுவதை கவனிக்கிறார். அது என்ன என்பது அப்போது புரிவதில்லை.  இரவெனும் ரகசியப்புதிரின் மணம் அவரைசூழ்வதன் முன்னறிவிப்பு என பிறகுதான் நமக்கு தெரிகிறது


    நாவலில் இரு சுவாரஸ்யமான காட்சிகள். அனைத்தையும் இழந்து சாலையில் செல்லும் பத்ரகிரி நாய் ஒன்றைப் பார்க்கிறான்.  பேசாமல் அனைத்தையும் விட்டு விட்டு இந்த நாயின் பின் போய்விடலாமா என அவனுகு தோன்றுகிறது

நாயை பின்தொடர்ந்து சென்று ஞானம் பெற்ற சதாசிவ பண்டாரம் நினைவு நமக்கு வருகிறது.

அதேபோல கப்பலில் செல்லும் திருச்சிற்றம்பலம் கடலின் மீன்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது குறித்து யோசிக்கிறான்.

நமக்கு மீர் காசிமிடம் மீன்களை கணக்கிட சொன்ன பக்கீர் நினைவு வருகிறது

    பக்கீர் அவர் கனவில் வந்து வழிநடத்துவதுபோல திருச்சிற்றம்பலத்தை அவன் அம்மா வழிநடத்துகிறாள்

   அப்துல் கரீம் இருந்தவரை தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அவரது மனைவிகள் அவர் காணாமல் போனபின்பு எந்த நிரப்பந்தமும் இல்லாமல் ஒற்றுமையாகி விடுகினறனர், ,ரஹ்மானியின் குழந்தையை வகிதா வளர்க்கிறாள்.சுரையாவையும் தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறாள்

மனித மனதின் விசித்திதங்களுக்கு எல்லையே இல்லை போலும்

எதற்கும் ஆசைப்படாத அதிகம் பேசாத விசாலா ஆசைப்படுவது அத்தர் ஒன்றுககாக மட்டுமே..

தையல் நாயகியுடனான தன் கணவன் உறவை அறிந்து அவனை தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகிறாள்

தைரியமான பெண் என நினைக்கும் தையல் நாயகியில் குணநலன்கள் கடைசியில் வெகுவாக மாறி அவளது சுயரூபம் அவளுக்கே தெரிகிறது

நடைமுறை ஞானத்துடன் பேசும் ஏ எஸ் ஐயர் , பகல் குறித்த எந்த அக்கறையுமற்ற டோபிங் , கலகலப்பான சிறுவன் சந்தீபா , அவனது கிளி, வெள்ளையர்களுக்கு மட்டுமே ஏழு கிணறு என உத்தரவிட்ட பிரிட்டிஷ் அரசு அதை கத்தியின்றி ரத்தமின்றி போராட்டமின்றி கருப்பர்களுக்கு கொடுத்து விடுதல் , இம்பாலா லாட்ஜ் வாசக சாலை , கனவில் வந்து கணக்குக்கு உதவும்"சடட்நாதன் , கால்குலேட்டர் கண்டுபிடிப்பு , நட்சத்திரஙகளுடன் உரையாடும் பத்ரகிரி , பறவைகளை எண்களாக காணும் திருச்சிற்றம்பலம் , அடிமைகளாக மாறவிருத்த மகர் இன ஏழைகள் அரசு மாறகறஙககளால் பெறும் குதூகல வாழ்வு என ஏராளமன சுவாரஸ்யங்கள்

காட்டில் சிறுசிறு திருட்டுகளைச் செய்யக்கூடிய ஆனால் காட்டை
நேசிக்கக்கூடிய ஒரு பாத்திரம் வருகிறது. அதேகாட்டுக்கு காட்டின்மீது மரியாதை இல்லாத காட்டை நுகர்வுப்பொருளாக மாற்றக்கூடிய கனவான்களின் வருகையும் சித்தரிக்கப்பட்டுள்ளது


கைவிடப்பட்ட சிறுமியாக வாழக்கையை ஆரம்பித்து பலவித சிதகதரவதைகளை அனுபவித்து , வாழ்க்கை அவ்வளவுதான் என நினைத்த நிலையில் ஒரு பெரிய மலைக்கே உரிமையாளர் ஆகிறாள் எலிசபத். அவளது மனபிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடுகிறது மலைப்பயணம் அந்த மகிழச்சியுடன் லண்டன் கிளம்புகிறாள். திரும்பி வரும்போது ஒரு அதிர்ச்சியை சந்திக்கவிருக்கிறாள்

லண்டனில் பெரும்புகழ் பெற்று தமிழகம் வரும் திருச்சிற்றம்பலம் இங்கே பெரிய அதிர்ச்சியை சந்திக்கிறான். அடுத்து என்ன செய்வான் என நம்மைப்போல அவனுக்குமே தெரியாது

யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது .அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது என முடிகிறது நாவல்


 நள் இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து வீடு திரும்பும்போது பகலில் பாரத்த நம் வீதிகள் அந்த இரவில் நமக்கே அந்நியமாக புதிதாக தோன்றும்

  அதுபோல இந்த கதை பாத்திரங்கள் தமக்குள் இருக்கும் ரகசிய வெளியைப் பார்த்து , இதுதான் நானா என திகைத்துப்போகின்றனர்

நறுமணம் மூலம் இறைவனுடன் உரையாடுதல் என்ற சுபி மற்றும் இந்திய தொன்மங்களை சற்றே மாற்றி நறுமணம் மூலம் அறியமுடியாமையுடன் உரையாடல் என மாற்றிப்போட்டு இருக்கிறார்

 உனக்குள் இருக்கும் கடவுளை கண்டுபிடி என்பதைவிட உனக்குள் இருப்பது கடவுளாக இருக்கலாம் சாத்தானாக இருக்கலாம் எளிய மனிதனாக இருக்கலாம்.  அதைக்கண்டுபிடிப்பதுதான் முக்கியம்.

இதை படித்து முடித்ததும்  நாம் என நினைத்துக் கொண்டிருக்கும் நாம் உண்மையில் யார்.  நமக்கு தெரியாமல் நமக்குள் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்ற யோசனை வருவதை தவிர்க்க முடியாது


  யாமம் நாவல் அற்புதமான அனுபவம்.

தேசாந்திரி பதிப்பக வெளியீடு

கண்டிப்பாக படியுங்கள்
   




   



 

 



































Wednesday, June 10, 2020

எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.. ஒரு பார்வை


எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பானசாதனைகளுள் ஒன்று

ஆனால் ஒரு முரண்நகைச்சுவை இதில் இருக்கிறது.

இந்த நாவலை படித்த சிலர் இதைப் புகழ்வதாக நினைத்து , இந்த நாவலைப்பற்றி இப்படி சுருங்கச்சொல்வாதுண்டு

"வேம்பலை என்ற கிராமத்தின் மீது படிந்திருக்கும் துயர் எனும் இருளையும் அவ்வூர் மக்களின் வேதனைமிகு வாழ்வையும்  சொல்லும் நாவல்தான் நெடுங்குருதி"

 இதைக் கேட்கும் புதிய வாசகன் ஒருவன் இதை ஒரு புரட்சிகர நாவலாகவோ , சமூக நாவலாகவோ , மெலோடிலாமா வகை எழுத்தாகவோ நினைத்து விடக் கூடும்

   உண்மையில் இந்த நாவல் இதுபோன்ற குறுகிய வரையறைகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டு மொத்த மானுடத்தை நோக்கி உரையாடும் நாவலாகும்

அதே நேரத்தில் கதை நடக்கும் பூமியில் தன் பாதங்களை ஆழமாக ஊன்றி இருக்கிறது நெடுங்குருதி..

தனது பூமியின் துயர்களை , வலிகளை , சந்தோஷத்தை முழுமையாக உணர்ந்து , உலக இலக்கியங்களில் தேர்ந்த ஞானம் கொண்ட ஒருவரால்தான் இப்படி ஒன்றை படைக்க முடியும்

இன்று எழுதும் பலருக்கு பெரிதாக தாம் வாழும் நிலம் குறித்த பரிச்சயம் இருக்காது. படித்ததை வைத்து எழுதுவார்கள். அந்த எழுத்து வெகு அன்னியமாக நமக்கு தோன்றும்

சிலருக்கு அனுபவம் இருக்கிறது. இலக்கியம் குறித்த புரிதல் இருக்காது. இவர்கள் எழுத்தைப் படிக்கையில் ஆவணப்படம் பாரப்பது போல இருக்கும்.



ரஷ்ய பனியை அனுபவித்தராத நாம் எப்படி தஸ்தயேவ்ஸ்கி எழுத்தில் ரஷ்ய சூழலையும் அதன் உணர்வுகளையும் உணர்கிறோமோ அதுபோல வெயிலையே அறிந்திராத ஒரு வசதியான நகரில் வாழும் மனிதனுடனும் உரையாடதக்க பொதுவான மானுட மொழிதான் நாவலின் சிறப்பு

கதை நடக்கும் காலகட்டம் குறித்தோ நில எல்லைகள் குறித்தோ பெரிதாக அக்கறைகாட்டாமல் மனிதனுள் உள்ளே பயணிக்கிறது எஸ். ராவின் எழுத்து

நாகு , அவன் பெற்றோர் , சகோதரிகள் , தாத்தா , மல்லிகா , ரத்னாவதி , ஆதிலட்சுமி, சென்னம்மா , ஜெயராணி , பவுல் , கிருபை , பாதிரி ,சமண துறவிகள் , சிங்கி , குருவன் , தெய்வானை , பக்கீர் , அவனது மனைவி , கிராம ஆசிரியர் , வசந்தா, சேது , சங்கு, திருமால் , லயோனல் , வீரம்மாள் என ஒவ்வொருவர் பாத்திரமும் அவர்கள் சார்ந்த சம்பவங்களும் அற்புதமாக அழகான சிறுகதைகளாக மிளிர்கின்றன. வெயிலும் ஒரு பிரதான பாத்திரமாக வருகிறது. வெயில் மட்டுமன்று. இருளும்கூட

500 பக்கங்களில் 100 அத்தியாயங்களில் பிரமாண்டமாக விரிந்திருக்கும் நாவல் ஒற்றை மையத்தை , ஒற்றை சரடை , ஒற்றை கருத்தை கொண்ட நாவல் அல்ல. படிக்கும் ஒவ்வொருவரும் தனக்கான கதையை உருவாக்க இடம் தரும் எழுத்து இது

உதாரணமாக , வேம்பலையின் நிழல் நகரமாக ஒரு ஊர் வருகிறது. வேம்மலையில் மறைந்தவை அங்கு வாழ்கின்றன
சென்னையில் அருண் ஹோட்டல் , ஆனந்த் தியேட்டர் போன்றவை மறைந்து விட்டாலும் இன்றும் அருண் ஹோட்டலுக்கு பஸ்சில் டிக்கெட்  கேட்டு வாங்க முடிகிறதல்லவா.  மறைந்தும் மறையாமல் வாழ்கிற ஊரை காண முடிபவர்களால் அந்த சித்திரத்தை தமக்குள் பொருத்திப் பார்க்க முடியுமக
எல்லா பாத்திரங்களும் முக்கியமனவை. அனைத்துக்கும் தனியாக கதை இருக்கிறது
   
உதாரணமாக கதையில் நாகுவின் அப்பா கேரக்டர்

பொறுப்பற்ற தன்னலமிக்க பாத்திரமாக அறிமுகம் ஆகிறது. பக்கீர் என்ற தன் நண்பனுக்கு துரோகம் செய்து அவன் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகிறார்.  பொறுப்பில்லாமல் தன் குடும்பத்தை பிரிந்து செல்கிறார்

ஆனால் அந்த பாத்திரம் பரிணாம வளர்ச்சி அடைந்து , அவர் மருமகள் அவர் தன் மேல் பெத்த அப்பனாக பாசம் காட்டி பார்த்துக் கொள்கிறார் என சொல்லத்தக்க அளவு உயர்கிறார்
இந்த மாற்றம் கவித்துவமாக ஒரு இடத்தில் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

 ஒரு மழைக்காலத்தில் தன் மகளின் சமாதிமீது ஊரந்து செல்லும் மண்புழுவை பத்திரமாக எடுத்து வந்து தன் வீட்டின் அருகே விடுகிறார். இனிமேல் இங்கே இருந்துக்கோ தாயி என நெகிழ்வாக சொல்கிறார். அழகான தருணம்

அதேபோல ரத்னாவதி. பாலியல் தொழில் செய்யும் பெண். கலகலப்பான இனிய பெண். அவளுக்குள் காதல் ஏற்படும் மந்திர கணம்.  குழந்தை பிறப்பு. காதலித்தவனின் இறப்பை உணர்தல். குழந்தையால் வேறு ஒரு பரிணாமத்தை அடைதல்.  தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியம்.  மறுமணம்.அத்தையின் பிரிவு. கணவன் இறப்பு. அதன்பின் தன் இனிய சுபாவங்களை இழந்து கசப்பையேதன்  வாழ்வாக கொள்ளுதல்.  அந்த வாழக்கையில் தொடும் உச்சம். அதில் காணும் வீழ்ச்சி . என இவளை வைத்தே தனியாக நாவல் எழுதலாம்.  அந்த சூழலிலும் கழிவிரக்கம் கொண்டு கதறாமல் வாழ்வை நெஞ்சுரத்துடன் எதிர் கொள்கிறாள். கடைசியில் மரணத்தைக்கூட ஒரு சந்தோஷமான சூழலில் மகிழ்ச்சியுடன் தழுவுகிறாள்.
மகனை ஆளாக்கி விட்டபின் , அவனைப்பற்றி சற்றும் நினைப்பதும் இல்லை. எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.

பக்கீரின் மனைவி அந்த ஊரின் வந்தேறி. அநாதரவாக வந்தவள். காலப்போக்கில் அந்த ஊரில் இரண்டறக்கலக்கிறாள். ஊருக்கு மணீக்கூண்டு அமைத்து தருகிறாள்.



   வெயில் கொளுத்தும் பூமி.  அங்குள்ள உயிர்கள் வீரியமானவை.  அங்குள்ள பாம்புகள் கடும் விஷம் கொண்டவை.அங்குள்ள தாவரங்கள் குறைந்தபட்ச தண்ணீரை வைத்து உயிர் வாழும் போராட்டத்தில் இருப்பவை. தமது வேர்கள் மூலம் எல்லாதிசைகளிலும் அலைபாயந்து உயிர் வாழ துடிப்பவை

இதுதான் இக்கதை பாத்திரங்களின் இயல்பாகவும் இருக்கிறது

 வேட்டையாடப்படும் வேம்பர்களுக்கு வேப்ப மரம் அடைக்கலம் அளிக்கிறது , கடும் உக்கிரத்துடன் அமைதியாக நின்றிருக்கும் ஊமை மரம் போன்றவை அழகிய படிமங்கள்.
இயற்கை வேம்பர்களை உருவாக்கி , காத்து , அழிக்கவும் செய்கிறது. ஆரம்பத்தில் வரும் எறும்புகள் முதல் கடைசியில் வரும் கொக்குகள் வரை இதை சொல்கின்றன

இதை வேம்பர்களுக்கு மட்டுமல்ல .  எந்த தேச மனிதனுக்கும் பொருத்தி பார்க்க முடியும்.

, நாவலில் இரண்டு இடங்களில் அணையாத நெருப்பு எனற காட்சி வருகிறது.  வெற்றிலைச் சத்திரத்தில் இருக்கும் கண்ணகி மூட்டிய நெருப்பு. மகான் ஒருவரின் சமாதியில் இருக்கும் அணையா தீபம்


இதில் வெற்றிலை சத்திர நெருப்பை , நாகுவும் காண்கிறான். அவனது மகன் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கிறான்.  ஆனால் இருவருக்கும் அது அளிக்கும் புரிதல் என்பது வெவ்வேறு

  நாகுவின் மகள் வசந்தா பார்த்திருந்தால் அவளுக்கு நாகு அடைந்த உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்ககூடும்.  வேம்பலையின் வீரிய ரத்தம் அவளுள்தான் ஓடுகிறது என்பதை நாகுவின் பறவைக்காடசி அவளுக்கும் கிடைத்தது என்பதில் உணர்கிறோம்

 அவளுக்குதான் வேம்பலையின் அழைப்பு கிடைக்கிறது.  வேம்பலை மீதான ஈர்ப்பு காரணமாகவே அவளுக்கு ஜெயக்கொடி என்ற சகமாணவி மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த நட்பு மரணத்தின் விளிம்புவரை எடுத்துச் செல்கிறது.

ஆக வேம்பலையின் அழைப்பே அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறது. வலி வேதனை காதல் காமம் என அனைத்திலுமே உச்சம் தொடுவதுதான் வேம்பலை

  இந்த பாதிப்புகள் எதையும் சந்திக்காத,ஒரே பாத்திரம் அன்னலட்சுமி மட்டுமே. நடக்க முடியாதவள். பகல் கனவுகளில் வாழ்பவள். பிறர் விஷயங்களை தெரிந்து கொள்வதில் மகிழ்பவள்..  கடைசி வரை பரிணாம மாற்றம் அடையாமல் நிம்மதியாக இருக்கும் பாத்திரம் என்பது தற்கால மனிதனை சுட்டுகிறதோ என தோன்றுகிறது

முகநூல் , ட்விட்டர் , அரசியல் அக்கப்போர்கள் என தங்களுக்கென்று தனி உலகம் அமைத்துக்கொண்டு , வாழ்வின் வெம்மையை சற்றும் அனுபவிக்காமல் வாழ்ந்து மறையும் ஒரு சவலை சமூகம் உருவாகி வரும் சூழலில் அன்னலட்சுமி கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது

   நாவலின் பாத்திரங்கள் மரணஙகளை வலிகளை இழப்புகளை சந்தித்தாலும்.அவர்களுக்குள் அணையா விளக்காக இருப்பது அன்புதான்

   திருமாலிடன் லயோனல் சார் சொல்கிறார். உலகில் அன்பைவிட உயர்ந்த ஒன்று உண்டு . அதற்காக காத்திருக்கிறோம்

படித்தவர்களுக்கும் , செல்வந்தர்களுக்கும் , நகரவாசிகளுக்கும் எட்டாக்கனியான அன்பு இந்த எளிய மக்களிடம் அபரிமிதமாக கொட்டிக்கிடக்கிறது

  தன் கணவனை அழித்த நாகு குடும்பத்தின்மீது பாசம் பொழிரும் பக்கீர்,மனைவி , அவளே ஒரு அபலை என்றாலும் நாகுவின் சகோதரி திருமணத்தை நடத்துவதில் அவள் காட்டும் உறுதி ,  மரண விளிம்பில் இருக்கும் சிங்கியை அரவணைத்து தன் அன்பால் அவனை உருவாக்கும் தெய்வானை , பிறகு கொடூரமாக மாறி விட்ட அவளை பிரிந்தாலும் அவள் இறப்புக்காக கதறும் சிங்கி கிழவன் , தன் மனைவி மக்களைக்கூட கொடூரமாக நடத்தும் கிருபைக்கு தன் தாய் மீது கசியும் பாசம் , துரோகியாக அறிமுகமாகும் நாகுவின் அப்பா செல்லையாவுக்கு தரும் வாழ்வு , அதற்கு செல்லையாக காட்டும் நன்றி என இந்த நாவலை வாதையின் நாவலாக அல்லாமல் அன்பின் நாவலாகவும் வாசிக்கலாம்.

  ஒவ்வொரு ஊராக சென்று அங்கு தூக்கம் எப்படி வருகிறது என டெஸ்ட் செய்யும் விசித்திரமான பாத்திரம். வேம்பலையில் தூங்கி பார்த்துவிட்டு , ஊரா இது? இரவு தூக்கம் வரவில்லை. இரவுதான் புத்துணர்வாக உற்சாகமாக இருக்கிறது. இது திருட்டுப்பசங்களுக்குத்தான் செட் ஆகும் என கோபமாக சொல்லி செல்கிறான். அதைக்கேட்டு ஊர்க்காரர்கள் நினைத்து நினைத்து சிரிக்கிறாரகள். காரணம், அது அவர்களுக்கே தெரிந்த உண்மைதான்

பேயுடன் ஆடுபுலி ஆட்டம் , தானிய குலுக்கைக்குள் அடக்கமாகும் சென்னம்மா , மரணமற்ற நிலை அடைவது , தீராதாகம் , ஆட்டு நாக்கு , மழை பெய்யும் கருவி என ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸ்யம்.

   தானிய குலுக்கைக்குள் போடும்,முன் கடைசியாக வெளி உலகை பார்க்குமபொருட்டு சென்னம்மாவை வெளியே கொண்டு வந்து வெளி,உலகை காண வைக்கிறார்கள்,  வேம்பலையை விட்டு நிரந்தரமாக வெளியேற முடிவு செய்த மல்லிகா கடைசியாக ஒரு முறை தன் தெருவை பார்த்துக்கொள்கிறாள் என இரு காட்சிகள் வருகின்றன . அதேபோல கிணற்றில் இருந்து நிரந்தரமாக வெளியேறவுள்ள ஆமை கடைசியாக ஒருமுறை தலைநீட்டி கிணற்றை பாரத்துக்கொள்வதாக ஒரு காட்சி. செம

விடைபெறும் வசந்தகாலம்
பறவைகள் கண்களில் கண்ணீர்
மீன்கள் கண்களிலும்;
என்ற ஹைக்கூநினைவு வந்தது

  ரத்னாவதி ஓர் அபலை. ஆனால் அந்த சூழலிலும் தனக்காக எதுவும் கேட்காமல் தன் தோழி குழந்தைக்கு கோயிலில் முடி இறக்க நாகு ஏற்பாடுகள் செய்ய கோருகிறாள் மறுபேச்சின்றி நாகுவும் ஒப்புக்கொண்டு ஒரு தாய்மாமன் ஸ்தானத்தில் குழந்தைக்கு அதை செய்கிறான்.அந்த தாய் கண்கலங்கி கைகூப்புகிறாள்

இப்படி பல குறுங்கதைகளை குறுங்கவிதைகளை நாவல் முழுக்க பார்க்கிறோம்

   அன்பும்  கொடும் சூழலிலும் போராடும் வீரமும் என்றென்றும் அழியாத நெடுங்குருதியாக வாழையடிவாழையாக வேம்பலை மக்களிடம் நீடிப்பதை நாவல் காட்டுகிறது
    தேசாந்திரி பதிப்பக வெளியீடு. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்

    பலமுறை படிப்பது உறுதி

நான் அடிக்கோடிட்டு ரசித்த சில வரிகள்

............

கத்தியை யாரோ சாணை பிடிப்பதுபோல தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது

  யாரோ முனகுவதுபோல மண் புரண்டு சப்தமிட்டது. புதையுண்டு கிடந்த மூதாதையர் எலும்புகள் வெக்கை தாங்காமல் திமிறிக் கொண்டு வெடித்தன

பள்ளிக்கு வெளியே தொங்கிய தண்டவாளத்தில் மணியை எடுத்து அடித்தாள். அடங்கியிருந்த இருள் சப்தம் கேட்டு கலைந்து திரும்பியது


சுனையில் நீர் சுரப்பதுபோல வேம்பு காற்று கசிந்து கொண்டிருந்தது

இருட்டு தண்ணீரைப்போல சரசரவென ஊரந்து போய்க்கொண்டு இருந்தது

மழைக்குப்பின் ஊரின் சுபாவம் மாறி இருந்தது. பேச்சில்கூட குளிர்மையேறிருந்தது

இருள் வெளிச்சத்தை தன் விரல்களால் பிடித்து அணைத்துவிட துடிப்பதைப்போல நெருங்கிக் கொண்டிருந்தது





 









Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா