Tuesday, December 3, 2013

காதல் பித்தேறியவனின் காலம் கடந்த பாடல்- நந்தா நீ என் நிலா !!!


மாற்று சினிமா , உலக சினிமா என்றெல்லாம் பேசுகிறோம்.. அதே போல உலக இலக்கியம், செவ்வியல் படைப்பு என பேசுகிறோம்..ஆனால் இந்த வரையறைகளுக்குள் வராத சில படைப்புகளும் வேறு சில காரணங்களுக்காக நினைவு கூரப்படும்..

மாமனாரின் காம வெறி , புதிய பூக்கள் , மன்மத கலை, சாயாக்கடை சரசு , காமதாகம், பாவம் கொடூரன், அஞ்சரைக்குள்ள வண்டி போன்ற படங்கள் மாற்று படங்கள் அல்ல...ஆயினும் இன்றும் நம் மனதில் நிற்கின்றன என்றால் அதற்கு காரணம்  கில்மா படங்கள் என்ற பிரிவில் சிறந்து விளங்குவதே ஆகும்..

எல்லா படங்களுமே மாற்று சினிமாவாகவோ, மீயதார்த்த அல்லது யதார்த்த படங்களகாவோ இருக்க வேண்டியதில்லை... மாயாஜாலம் , வரலாறு , பொழுது போக்கு , நகைச்சுவை என ஏதாவது ஒரு பிரிவில் நன்றாக இருந்தால்போதும்.. அதேபோல பல்ப் நாவலாக இருந்தாலும்கூட , அந்த பிரிவில் சிறப்பாக இருந்தால் போதும்..

அந்த வகையில் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று நந்தா என் நிலா..  தமிழின் டாப்10 படங்களை பட்டியல் இட்டால் , கண்டிப்பாக இதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்..ஆனால் தமிழின் டாப்10 வெகுஜன நாவல் என பட்டியலிட்டால் , கண்டிப்பாக நந்தா என் நிலா நாவலுக்கு இடம் உண்டு.. இதை எழுதியவர் புஷ்பா தங்கதுரை..தினமணிக்கதிரில் தொடராக வந்தது..

விறுவிறுப்பு, கவர்ச்சி , வித்தியாசமான நடை, மறந்தும்கூட யதார்த்தம் பிரதிபலித்துவிடாத கவனம் , கதை எங்கேயோ ஒரு கிரகத்தில் நடப்பது போன்ற பிரமையை உருவாக்குவது , ஏமாந்துபோய் கூட கதையில் லாஜிக் வந்து விடக்கூடாது என எச்சரிக்கையாக இருப்பது , வேறு ஏதோ ஒரு மொழியை தமிழில் பேசுவது போன்ற உணர்வை உருவாக்குவது என தனக்கு என ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டவர் புஷ்பா தங்கத்துரை..

அவரது இந்த ஸ்டைல் பக்காவாக அமைந்த நாவல்தான் , நந்தா என் நிலா..இதை அப்படியே சினிமா ஆக்கி இருக்கிறார்கள்..படத்துக்கு வசனம் இவர்தான்.. இயக்கம் ஜெகனாதன்..

 நந்தா என்ற பெண்ணை உருகி உருகி ஒருவன் காதலிப்பதே கதை,,, காதல்பித்தேறி, காண்பதெல்லாம் தன் காதலி நந்தா போல தோன்றும் தெய்வீக காதல் ( !!! )  நிலையை அடைந்து , இன்னொரு பெண்ணை நந்தா என நினைத்து , அவளுடன் உடல் ரீதியாக எல்லை மீறும் உயர் நிலையை ( ???? !!! ) அடைவதை அருமையாக சொல்லி இருப்பார்...படமும் இந்த பாணியில் கன்னாபின்னாவென ஜாலியாக செல்கிறது..

வழக்கமாக நாவலை காட்சிப்படுத்துவது கஷ்டம்..ஆனால் இதில் நாவலில் இருக்கும் கவர்ச்சியை அப்படியே காட்சிப்படுத்தி விட்டார்கள்...இதற்காகவே படாபட் ஜெயலட்சுமி எண்ணிலடங்கா முறை குனிந்து நிமிர்கிறார்... ஆனால் இன்று குனிந்துதான் கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற நிலை இல்லை..அப்படி இருந்தாலும் அன்றைய கவர்ச்சிக்கு ஈடு இணை இல்லை..

கிராமத்தில் குடும்பத்துடன் வசிப்பபள் நந்தா.( சுமித்ரா ) திருமணத்தில் ஆர்வம் இல்லை...என்னடா என்று பார்த்தால் ஃபிளாஷ் பேக்..அவள் சென்னைபோனபோது ராஜ் ( விஜயகுமார் ) என்பவனை பார்த்து காதல் கொண்டு இருக்கிறாள்..

அவள் தந்தை இறந்து விடவே, வேலை கிடைத்து சென்னை செல்கிறாள்...வேலை கிடைத்த கம்பெனியின் எம் டி விஜயகுமார்தான்,, ஆச்சர்யம் அடைகிறாள்...தன்னை மறந்து இருப்பானோ என நினைத்து கண்களால் தூது விடுகிறாள்... அவனும் அந்த தூதை ஏற்கிறான்..

இங்கே ஒரு ட்விஸ்ட்... ஒரு கட்டத்தில் இந்த விஜயகுமாரின் பெயர் வசந்த்... தான் காதலித்தவன் வேறு ஆள் என தெரிகிறது... ( வேலையில் சேர்ந்த போதே , எம் டி பெயரை கேட்டு இருந்தால் , அப்போதே அது வேறு ஆள் என தெரிந்து இருக்குமே ... )///

எம் டி தீவிரமாக நந்தாவை காதலித்து , காதல் பித்தேறி பைத்தியமாகவே ஆகி விடுகிறார்... அவளோ ராஜ் என்பவனையே காதலிக்கிறாள்...அவனுக்கு இவள் மேல் ஆர்வம் இல்லை... அவனது தாயும் இவளை விரும்பவில்லை...

எம் டிக்கு நிலாவைப்பார்தாலோ , வேறு பெண்ணை பார்த்தாலோ , நந்தாவாகவே தெரிகின்றன,,அந்த அளவுக்கு காதல் பித்து...இந்த காதல் பித்து உச்சம் அடைந்து , தன் செக்ரட்டரியுடன்  ( படாபட் ஜெயலட்சுமி ) எல்லை மீறி விடுகிறார்..
இப்படி ஒரு சிக்கலுக்கு என்ன தீர்வு என்பதே கதை..

லாஜிக்கோ , திரைமொழியோ, இலக்கியத்தரமோ இல்லாமல் இருந்தாலும் இது கண்டிப்பாக சிறந்த பொழுது போக்கு படம்... நாவல்களில் இருந்து சினிமா ஆக்கப்படங்கள் பெரும்பாலும் உருப்பாடாது...ஆனால் இந்த படம் சிறப்பாக உள்ளது...அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது..

வழக்கமாக ஒரு கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை குரல் ஒலி மூலம் உணர்த்துவார்கள்..இதில் சப் டைட்டில்மூலம் எண்ண ஓட்டத்தை சொல்வது வித்தியாசமாக இருந்தது...புஷ்பா தங்கதுரை நாவல் படிப்பது போன்றது இருந்தது..

நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  நாகேஷ் , ரவிச்சந்திரன் . ஸ்ரீகாந்த் போன்ற அன்றைய ஸ்டார்கள்...அவர்களுடன் நம் கமல்ஹாசனும் :)   .. அவர் அன்றே பெரிய ஸ்டார் என ரஜினி ஒரு கூட்டத்தில் பேசினார்..உண்மைதான் போல...கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்டுகிறார்கள்..

இந்த படம் நினைவுகூரப்படுவது இதில் இருக்கும் இரண்டு பாடல்களுக்காகத்தான்,..இசை வி தட்சணாமூர்த்தி என்ற மேதை...
 நெட் எல்லாம் பரவலாக வந்து ஐந்து ஆண்டுகள்தான் ஆகின்றன... அதற்கு முன் எல்லாம் பாடல்கள் கேட்பது அபூர்வம்...இப்போதுபோல டவுன்லோடு செய்து நினைத்தபோது கேட்க இயலாது....எப்போதாவது ரேடியோவில் ஒலிக்கும்போது , ஆசையாக கேட்டால்தான் உண்டு,,,அது போன்ற பாடல்கள் டீவியில் வர வாய்ப்பில்லை...

ஆக, பாடல்களுக்கு அபூர்வ தன்மை இருந்தது...ஒரு பாடல் என்ன படத்தில் வந்தது என கண்டுபிடிப்பதே சிரமம்.. நெட் பரவலான பின்புதான், ஆன்லைன் விவாதங்கள் மூலம் , இந்த பாடல்கள் குறித்து விபரங்கள் சேகரித்தேன்... அதற்கு உதவிய யாஹூ க்ரூப், ஆர்க்குட் போன்றவை இன்று கிடையாது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது...

இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என சொல்ல மாட்டேன்,,,ஆனால் முக்கியமான நாவல் ஒன்று படமாக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியும் , அந்த படம் குறித்த சில அடிப்படை செய்திகளும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு..

படத்தை பார்க்காவிட்டாலும் , இந்த இரு பாடல்களை ரசிக்கத்தவறாதீர்கள்..
நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள் இவை...

இந்த பாடல்களை படமாக பார்த்து , ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது  , மனதில் உருவாக்கி வைத்து இருக்கும் சித்திரம் அழிந்தி விடக்கூடாது என்பதற்காக இத்தனை ஆண்டுகள் இந்த படத்தை பார்க்கவில்லை... சரி,.,,இதை பார்க்காமல் இறந்து விட்டால் , ஆத்மா சாந்தி அடைவதில் ஏதேனும் பிரச்சனை வந்து விடப்போகிறதே என பயந்து கடைசியில் பார்த்து விட்டேன்... நீங்களும் பாருங்கள்...

நந்தா நீ என் நிலா   ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்








2 comments:

  1. இரு பாடல்களையும் என்றும் ரசிக்கலாம்...

    ReplyDelete
  2. நந்தா என்றொரு நாவல் நான் 70 களில் (வன்னியில்) நண்பர் ஒருவரின் வீட்டிலிருந்து இரவல்வாங்கிவந்து வாசித்தேன், 500 பக்கங்கள் வரையில் வரும். மூன்று தலைமுறைகளின் கதை அது. அதை எழுதியவரின் பெயரையோ, பிரசுரஞ்செய்த வெளியீட்டகத்தையோ ஞாபகப்படுத்தமுடியவில்லை. அந்நாவல்பற்றிய தகவல் உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் தெரிவியுங்கள். நன்றி.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா