Tuesday, February 15, 2011

ஜெயமோகனின் கொற்றவை - என் பார்வையில்


ஜெயமோகனின் கொற்றவை  நாவல் படிக்க எனக்கு ரொம்ப நாளாகவே விருப்பம் இருந்தது..ஆனால் அதன் சைஸ் பயமுறுத்தியது. 
அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் எந்த எழுத்தையும் பாய்ந்து போய் படிக்கும் நான், அவரது சற்று பெரிய புத்தகங்களை பார்த்தால் தயங்குவது வழக்கம்..

அதே போல கொற்றவையை வாசிக்க ஆரம்பிப்பதிலும் ஸ்டார்ட்டிங் டிரபிள் இருந்தது. கடைசியில் ஒரு நாள் , சரி என்னதான் இதில் இருக்கிறது என மோதிப்பார்க்க தீர்மானித்தேன்.

சில பக்கங்கள் பார்ப்போம்.. சரிப்படவில்லை என்றால் அத்துடன்கொற்றவை நாவலை மறந்து விடுவோம் என நினைத்து படிக்க ஆரம்பித்தேன்..
‘ அறிய முடியாமையின் நீலம் “ என்று ஒரு கவிதை போல ஆரம்பித்த இந்த நாவலை அதன் பின் முடித்த பின் தான் நிறுத்தினேன்..

 நீலம் ஒரு புன்னகை என்ற இறுதி வாக்கியம் வரை நாவலை நிறுத்த முடியவில்லை...
முழுக்க முழுக்க தமிழ் விருந்து படைக்கும் நாவல்தான் கொற்றவை..இதை நாவல் என சொல்வது தவறு.

ஒரு கதானாயகன், நாயகி அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் , அதற்கு ஏற்படும் முடிவு என்ற விதத்தில்தான் ஒரு நாவல் இருக்கும்.

ஆனால் ராமாயாணம் , மகாபாரதம் போன்றவற்றில் இப்படி இருக்காது.. பல்வேறு மனிதர்கள் பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டு இருப்பார்கள்.
உதாரணமாக , ராமாயணத்திலேயே சில இடங்களில் வாலியின் கோணத்தில் கதை இருக்கும். அதை படித்தால் ராமன் வில்லன் போல தோன்றுவான்.
அது போல எத்தனை கோணங்கள் அதில் !!

அதே போல மகாபாரத்திலும் கர்ணனின் கோணத்தில் இருந்தும் கதை இருக்கும்.

இந்த பாணியில்தான் கொற்றவை இருக்கிறது..

கண்ணகியை வைத்து நாவல் உருவாக்கப்பட்டுள்ளது . ஆனால் கண்ணகி-கோவலன் சம்பவங்கள் எல்லையற்ற நாடகத்தின் ஓர் அத்தியாயமாகவே வருகிறது.
ஆனால் சிலப்பதிகாரத்தில் கண்ணகிதான் மெயின்..

சிலப்பதிகாரம் படித்து இருந்தால் , கொற்றவையை இன்னும் கூடுதலாக சுவைக்கலாம்..
படிக்காவிட்டாலும் கூட , இதை திறந்த மனத்துடன் படிக்க வசதியாக இருக்கும்.

ஐந்து பகுதிகளாக கதை இருக்கிறது..

ஆதி உலகை பற்றிய , ஆரம்ப கால தமிழ் தேசம் பற்றிய முதல் பகுதியின் பெயர் நீர்

கோவ்லன் , கண்ணகி திருமணம் , மாதவியுடன் பழக்கம், பிறகு மீண்டும் கண்ணகியிடன் வருதல் போன்றவை இரண்டாம் பகுதியான காற்று

பூம்புகாரை விட்டு, மதுரைக்கு செல்லுதல் , அங்கு கிடைக்கும் அனுபவங்கள் போன்றவை நிலம் என்ற மூன்றாம் பகுதியில்

அதன் பின் மதுரை, சிலம்பு, கொலை , எரித்தல் போன்றவை எரி என்ற நான்காம் பகுதியில்..

கண்ணகி தெய்வ நிலையை அடையும் கடைசி பகுதி வான்..

இதில் ஒவ்வொரு பகுதியையும் , ஓவியம் போல செதுக்கி இருக்கிறார் ஜெயமோகன்..

ஒவ்வொரு வரியையும் ரசிக்க முடிகிறது...
சொல்லப்படும் விஷயத்தின் ஆழம் ஒரு புறம், சொல்லப்படும் விதத்தின் அழகு ஒரு புறம் என ஒவ்வொரு பக்கமும் சிறப்பாக இருக்கிறது...



ஆறுமுகன், பிள்ளையார், திருமால், என அனைத்துக்கும் விளக்கம் கொடுப்பது அழகு..
சித்தார்த்தன், அகத்தியன் , அய்யப்பன, இளங்கோவடிகள், கவுந்தி அடிகள், மாதவி, மணிமேகலை என அனைவரையும் வேறோரு கோணத்தில் பார்ப்பது சுவையான அனுபவம்..

ஆழ்ந்து படித்தால், இதற்குள் பல சிறுகதைகள், நாவல்கள் இருப்பதை உணர முடியும்..


252ம் பக்கத்தில் விவரிக்கப்படும் பெரும்பிலம், அதில் இறங்கும் கற்படிகள், அங்கு இருக்கும்  மூன்று பொய்கைகள்-இதை வைத்தே தனி நாவல் எழுதலாம். 

நலமருள் நங்கை , மெய்யறிவின் ஆடி குறித்து கோவலனுக்கு விளக்கும் காட்சியின் உள்ளர்த்தத்தை யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது..

இந்த இடத்தை மீண்டும் மீண்டும் படித்தேன்..

இந்த பகுதியை மட்டுமே வைத்து ஒரு ஹாலிவுட் படம் எடுக்க முடியும்..


இதையெல்லாம் விட என் கண்களில் கண்ணீர் வர வைத்த இடம் , 318 319 ஆகிய இரண்டே பக்கங்களில் வரும், நப்பின்னை குறித்த காட்சிதான்..
என்ன ஒரு ஆழமான, அர்த்தம் மிக்க இடம்...

இப்படி பலபல சம்பவங்கள் , மனிதர்கள் , தெய்வங்கள் வந்தாலும் , அனைத்துக்கும் ஒரு மைய இழை இருக்கிறது...

கருத்து என்ற அடிப்படையில் ஒவ்வொரு பக்கமும் ஜொலிக்கிறது..

இதை தவிர மொழி அழகுக்காகவும் , பல இடங்களை ரசிக்கலாம்..

நான் ரசித்த சில இடங்கள்....
  • தீயுண்ணும் அனைத்தும் தீய்மை எனப்பட்டது. தீயுண்ணவே தூய்மை என்றாயிற்று
  • நிரம்பியிருந்தமையாலும், நிரந்திருந்தமையாலும் நீர் என்றும் கடந்து இருந்தமையால் கடல் என்றும் சொல்லப்பட்ட ...
  • கட்டுவதனால் அது காடு. அங்கே இன்னும் கண்டடையப்படாத கோடிகோடி சொற்கள் இலை நுனிகளில் துடித்தன
  • தம்மை இமிழும் அந்த மாய பெருவெளிக்கு தமிழ் என பெயரிட்டனர்
  • கொல்தவம் செய்யும் அவளை வணங்கி கொற்றவை என்ற சொல்லை தங்கள் குடிக்கு அரசி என வகுத்து கொண்டனர்
  • பெருமதில்களும், சிறுமதிலும் அதற்குள் குறுமதிலும் என மூன்று அரண்களுக்கு இருந்தது நகரம். அது மதில் நிரை என அழைக்கப்பட்டது. குழந்தைகள் அதை மதுரை என்றாக்கினர்
  • தொன்மை காரணமாக பண்டையோன் என அழைக்கப்பட்டனர். அது பாண்டியன் என மருவியது
  • ஊர்வதினால் ஊர் என்றும், நகர்வதால் நகர் , புரத்தலினால் புரம் என அவை சொல் கொண்டன.
  • இரும் பொருள் என்பதால் அதை இரும்பு என்றார்கள்
  • ”என்னை அவர் கண்கள் கவுந்தியடிகளாகவே காணும். கதையும் , காப்பியமும் அப்படியே அறியும். வழித்துணையாக வந்த வடிவிலா தெய்வம் என நீ ம ட்டுமே அறிவாய் “
  • “கடலோசையை கேட்கிறேன் “ என்றாள் அவள். “அது அலைகளின் ஓசை. கடலுக்கு ஒலியே இல்லை “ என்றாள் நீலி
  • ” நீங்கள் உலக இன்பங்களை கனவு கண்டதில்லையா என்ன ? அந்த கனவுக்குள் நாங்கள் வாழ்கிறோம் 
  • ” நானறிந்த தெய்வங்களே வேறு” என்று சொல்லும்போது கண்ணகியின் முகத்தில் தழலாட்டம் தெரிந்து மறைந்தது. கோவலன் மீண்டும் அந்த அச்சத்துக்கு ஆளானான்
  • காதல் கொண்டு காத்திருப்பவர்களுக்கு காலமே இல்லை என அவன் உணர்ந்தான்
  • “மன்னன் கோல் செல்லா இடத்திலும் அறவோர் நூல் செல்லும். நூல் செல்லா இடத்திலும் மறையோர் சொல் செல்லும். சொல் செல்லாவிடத்தும் செல்லும் ஒன்று உள்ளது “
  • “வணிகர் நெஞ்சும் துலாகோல் முள்ளும் ஒன்று. நிலை அற்று இருக்கும். நிறை கண்டவிடத்து சாயும் “
  • பெருஞ்சுமையென தங்கள் தலைகளை உணர்வோர் போல் அவர்கள் தெருவில் நடந்தனர்.
  • சொற்கள் இருப்பு என்றால் சொற்பொருள் வானம்
  • முடிவிலியே முடிவுற்றதன் சாரம்
  • அறம் அவிந்து மறம் தழைக்கும்போதெல்லாம் பேரன்னை நுண்ணுருகொண்டு ஒரு பெண்ணுடலில் ஏறி வெளி வருகிறாள்
  • ”மண்ணில் பிறக்கும் எவனுக்கும் அறிவன் ஆகும் வல்லமை உள்ளது. எந்த விதையிலும் மரம் உறங்குவது போல”
  • ”இப்போது செறுகுளத்து நற்கண்ணனார் பாடியது மதுரையின் அழிவை அல்ல. அறத்தின் அழியா பெருஞ்சிறப்பையே”
  • ”சித்தம் அறியாதவற்றை பித்தம் அறியும்”
  • ”பசியே ஒவ்வொரு உயிர்பருவின் உள்ளும் இருந்து , ஓடு ஓடு என சாட்டை சுழற்றும் தேரோட்டி”
  • ”பெரும்பாலையில் ஒரு சருகு பறந்து செல்வதை காண்கையில் என்ன நினைப்பீர்கள் அடிகளே “ “ அது போகும் திசையை வானம் அறியும் என ‘
  •  ”நீ  பிழை செய்தாய் மகளே. அறிவால் மட்டுமே பிறப்பை தாண்டுதல் இயலும்”
  • அவ்வுதடுகள் சொன்ன ஒரு சொல்லை என் ஐம்புலன்களால் கேட்டேன். அதன் பின் ஐயங்களோ வாழ்தலின் துயரோ என்னை வாட்டவில்லை “ அது என்ன சொல் என அடிகள் கேட்கவில்லை. அன்னை சொல்லவும் இல்லை
  • மண்ணில் கொந்தளிக்கும் வாழ்க்கை அழியும். ஆழமோ என்றும் உள்ளது. ஆழத்திற்கு மனிதக்கண் கொடுத்த வடிவம் அன்னை
  • எது அறிவோ அதுவே அறியப்படும் பொருளையும் உருவாக்குகிறது
  • ”கடற்கரையில் அமர்ந்து அலைகளை எண்ணி ஆழியை அறிய முயன்றாய்”

  •  ஜெயமோகன் நாவலில் வழக்கமாக இருக்கும் நகைச்சுவை இதில் இல்லாதது சிலருக்கு ஏமாற்றமளிக்க கூடும்.. 
  • அதே போல சிலர் இதை சாமி கதை என நினைக்கவும் வாய்ப்பு இருக்கிறது... 
  • சில தமிழ் சொற்களுக்கு பலருக்கு அர்த்தம்   தெரியாது...  சில சொற்களுக்கான அர்த்தத்தை பிற்சேர்க்கையாக கொடுத்து இருக்கலாம்... 
  • சில்ப்பதிகாரத்தில் சொல்லாத சில விஷ்யங்களை கற்பனை மூலமும், தர்க்க அறிவு மூலமும் நிரப்பி இருப்பதை ரசிக்க முடிகிறது... ஆனால் இதை சிலர் ஏற்காமல் போகலாம்

  • இதெல்லாம் குறைகள் .


 கூட்டிகழித்து பார்த்தால் நாவலில் சிறப்புகளே அதிகம்...
 இனிய தமிழில் ( வட்டார தமிழில் அல்ல.. பொது தமிழில் ) வழங்கப்பட்டுள்ள ஒரு சிறந்த நாவல் கொற்றவை...

கொற்றவை -  படித்தே தீர வேண்டிய நாவல் 


கொற்றவை.
எழுதியவர் ; ஜெயமோகன்
தமிழினி பதிப்பகம்.
விலை ; ரூ 390

12 comments:

  1. நல்ல அறிமுகம்..நன்றி.

    ReplyDelete
  2. இரசித்து படித்திருப்பது புரிகின்றது. ஒவ்வொரு கட்டத்தையும், பஞ்சபூதங்களால் வரையறுத்தல் சூப்பர்.
    சலப்பதிகாரத்துடன் பல முரண்பாடகள் உண்டு என்றாலும் அதை இசிப்பதுண்டு, அதேபோல ஜெயமோகனின் எழுத்துக்களில் எங்கும் பார்வைய அரங்க வைத்துவிடாத தன்மையும், புத்தகத்தை மூடமனமின்றி இருக்கும்போதையும் உண்டு என்பதை அவரது பல கதைகளில் அனுபவித்துள்ளேன். "கொற்றவை" படிக்கணும். அறிமகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. review படிச்சவுடனே தெரியுது...ரொம்பவே நீங்க ரசிச்சு படிச்சது...சந்தர்ப்பம் கிடைத்தால் நானும் வாங்கி படிக்கிறேன்...

    ReplyDelete
  4. கொற்றவை வரைக்கும் படிச்சிட்டு தேகம் நாவல்ன்னு எப்படிப்பா சொல்ற நீயி , இல்ல விமர்சனம் எழுதனுமேன்னு மேம்போக்கா படிப்பயோ ?

    ReplyDelete
  5. "கொற்றவை வரைக்கும் படிச்சிட்டு தேகம் நாவல்ன்னு எப்படிப்பா சொல்ற "

    இரண்டும் வெவ்வேறு வகையில் சிறப்பானவை

    ReplyDelete
  6. பகிர்விற்கு நன்றி பார்வையாளன். இப்போதுதான் பார்க்கிறேன். கொற்றவை வாங்கிப் படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  7. நிஜமாகவே உங்களபாத்தா எனக்கு கொஞ்சம் வியப்பாதான் இருக்கு , பக்கத்துக்கு பக்கம் பிழை , சம்பந்தமே இல்லாம சமஸ்கிருதம் , முன்னாடி எழுதியதையே கேரக்டர் பேரு கூட மாத்தாம அப்படியே அடுத்த நாவல்லயும் வருது. டுபுக்குதனமா எழுதுன ஒரு புக்க நல்லாருக்குன்னு சொன்னா என்ன தோணும் ?

    ReplyDelete
  8. கல்கி, சாண்டில்யன் எழுதிய சரித்திர நாவல்கள் வாசித்து திரிந்த நான் சகோதரன் கொடுத்த ஜெயமோகனின் கொற்றவை வாசித்தேன். அதன் பிறகு என்னுடைய வாசிப்பின் திசையையே மாற்றிவிட்ட நாவல் கொற்றவை. எனக்கு மிகவும் பிடித்த நாவல். நாவல் குறித்த தங்கள் பதிவு அருமை. ரசித்த வரிகளை தொகுத்தமைக்கும் நன்றி.
    -சித்திரவீதிக்காரன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா