Saturday, July 4, 2020

வண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்




என்னதான் இணையம் , kindle , ஆடியோ புத்தகங்கள் என வந்து விட்டாலும் பேப்பர் வடிவில் புத்தகங்களை படிப்பது தனி சுவைதான். வசதிகள் என்பது நவீன வடிவங்களில் அதிகம். ஆனால் அச்சு பிரதியில் தொடு உணர்ச்சி என்ற கூடுதல் கவர்ச்சி உண்டு.

சாருவின் பழுப்பு நிறப்பக்கங்கள் – 3 கைக்கு கிடைத்ததும் அந்த  பார்சலை பிரிக்காமல் வெகு நேரம் பார்த்தும் தொட்டும் முகர்ந்தும் மகிழ்ந்தேன். அதன் பிறகு வெகு மெதுவாக நிதானமாக பிரித்து புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தை முதன் முறையாக  கண்ணில் பட்ட அந்த கணம் !!!

கடின அட்டையுடன் கூடிய புத்தகம் என்பது கூடுதல் அழகு.

அதன் பின் மெல்ல ஒரு வரலாற்று பயணத்துக்குள் - காலம் இடம் கடந்து , இலக்கிய முன்னோர்கள் பாதச்சுவடுகளை பின்பற்றி – செல்லலானேன்.

பழுப்பு நிறப் பக்கங்கள் வரிசையின் முதல் இரண்டு புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை என்றாலும் இந்த மூன்றாவது புத்தகம் எனக்கு தனிப்பட்ட முறையில் வித்தியாசமான ஒன்று.

காரணம் சி சு செல்லப்பா…    சு ரா … கு ப ரா…  சா கந்தசாமி…  ம முத்துசாமி ப சிங்காரம் எனும் சம்பந்தமற்ற ஆளுமைகளின் தொகுப்பாக எனக்கு தோன்றியது..

எனவே இதை படிக்கும்போது ஒட்டு மொத்த இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் மனதில் தோன்றியது.



இதை இலக்கிய விமர்சன நூல் வரையறுப்பதா … ஆளுமைகளின் வரலாறு என்பதா.. அல்லது ஆளுமைகளுடனான ஒரு சம காலப்படைப்பாளியின் சொந்த அனுபவ பகிர்வா.. அல்லது ஓர் அறிமுகமா என சொல்லி விட முடியாத அளவுக்கு ஒரு பன்முக குணாதிசயத்தை இந்த நூல் கொண்டுள்ளது.. அதாவது கறுப்புக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்.. அதனால்தான் இது பழுப்பு நிறப் பக்கங்கள் ஆனதோ J

வண்ணம் என சொல்கையில் ஒரு விஷ்யம் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை விரைவாக மீள் வாசிக்கும் பொருட்டு பல்வேறு வண்ணங்களில் வரிகளை ஒளிர்விப்பது என் வழக்கம்.

அழகான மொழியாளுமைகளுக்கு ,  ஒப்பு நோக்க வேண்டிய புத்தக / ஆளுமைகள் பெயர்களுக்கு  ரசிக்கும் வரிகளுக்கு சுவையான சம்பவங்களுக்கு என ஒவ்வொரு வண்ணத்தை பயன்படுத்துவேன். இப்படி படித்து முடித்து விட்டு , ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பார்த்து திகைத்தேன். அந்த பக்கம் முழுமையும் , எல்லா வரிகளுமே , ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த பக்கமே வண்ணமயமாக ஜொலித்தது. கலர்ஃபுல்லாக ஓர் இலக்கிய நூலை எழுதுவது என்பதே ஒரு வியப்புதான்
பின் நவீனத்துவம் என்பதற்கு குறிப்பிட்ட யுக்தி எதுவும் இல்லை.. மூன்றடியில் எழுதி ஒரு காட்சியை சொன்னால் ஹைக்கூ , செப்பலோசை பயின்று வந்தால் வெண்பா. அகவலோசை வந்தால் ஆசிரியப்பா என்று ஃபார்முலா எதுவும் இல்லை.. ஆனாலும் பலர் பின் நவீனத்துவ ஃபார்முலா என எதையாவது நினைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக எழுவதுண்டு.

பின் நவீனத்துவ படைப்பு என்பது இயல்பாக நிகழ்வது. பின் நவீனத்துவ கட்டடங்கள் , பின் நவீனத்துவ இசை என இப்படி அமைந்தவை உண்டு,  அந்த வகையில் பின் நவீனத்துவ கூறுகளை இந்த நூலில் காண முடிகிறது.

இந்த நூலில் இன்னொரு சுவையான விஷயம் , ஒரு விஷயத்தை சொல்லாதே .. அதைக் காட்டு என்ற யுக்தி திறம்பட செயல்பட்டுள்ளது.  கு ப ரா எழுத்தை தவமாக பயின்றதன்  மூலம் அதன் சிறந்த ஒரு பகுதியை – ஒரு மாதிரியாக தேர்ந்தெடுத்து – அதை அப்படியே கொடுத்து குபராவை இது வரை படிக்காதவர்கள் கூட அவர் குறித்து புரிந்து கொள்ள உதவுவது ஒரு நல்ல யுக்தி. ஆனால் அப்படி கொடுக்கும் பகுதி அவர் எழுத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப்பெரிய உழைப்பும் புரிதலும் ஆழ்ந்த வாசிப்பும் தேவை. இதை சாரு சிறப்பாக செய்துள்ளார்.

இந்த நூலில் பேசப்பட்டுள்ள அறுவர் குறித்தும் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கிறது.

இது ஆளுமைகளை வியந்தோதும் பாராட்டுரைகளின் தொகுப்பன்று. சுருக்கமாக ஓர் ஆளுமையின் முழு பரிமாணத்தை 360 டிகிரியில் பார்க்கும் ஒரு பார்வையை தருவதுதான் நூலின் நோக்கம்.

தன் ஆளுமையை உருவாக்கியவர் என ஒரு குரு இடத்தில் வைத்து சுந்தர ராமசாமியை போற்றினாலும் அவர் படைப்புகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரிப்பது , சி சு செல்லப்பா படைப்புகளையும் அவர் வாழ்க்கையையும் அவர் குணங்களையும் அவ்வளவு தூரம் பாராட்டி விட்டு , தமிழில் விமர்சனத்துறை என்பது தனி நபர் வசையாக உருவெடுக்க ஆரம்ப புள்ளி அவர்தான் என்று சுட்டிக்காட்டுவது என விருப்பு வெறுப்பற்ற ஒரு பார்வையை வைக்கிறார் சாரு.

இந்த புத்தகத்தின் நாயகர்களான இந்த அறுவர் தவிர அசோகமித்திரன் ஜி கே செஸ்டர்ட்டன் தி ஜா  எஸ் வைதீஸ்வரன் வெங்கட சாமி நாதன் ஜெயமோகன் சார்த்தர் ஃப்லௌபர்  ஜார்ஜ் ஜோசஃப் என எண்ணற்ற  ஆளுமைகள் பக்கங்கள் தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர், வெறும் பெயர்களாக அன்று. ரத்தமும் சதையுமாக நம்முள் நடமாடுகின்றனர் .

இன்னொரு சுவையான அம்சம் .

இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் பல விஷயங்களுக்கு இந்த புத்தகமே – இதன் நூலாசியரே - உதாரணம் ஆகி விடுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

போலிகளை சுட்டிக்காட்டுவதில் எந்த தயக்கமும் கூடாது என்பதை சுந்தர ராமியிடன் கற்றேன் என்கிறார் நூலாசிரியர்,   அதே சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு ஃபேக் என தன் கைக்காசை செலவிட்டு மனைவியின்  நகைகளை அடகு வைத்து எழுதி நூலாக்கியவர் சாரு . அதாவது தான் கற்றதற்கு உதாரணமாக சுந்தர சாமி சம்பந்தப்பட்ட ஒன்றையே சொல்ல முடியும்

பாரதியார் ஒரு பன்முக கவிஞர். ஆனால் அவரது தேசிய கவிதைகள் பெற்ற பிராபல்யம் காரணமாக அவர் தேசிய கவி என சுருக்கப்பட்டு விட்டார் என்று பேசுகிறார் கு ப ரா

இந்த நூலின் இன்னோர் இடத்தில் சாரு பேசுகிறார் – என்னை நல்ல கட்டுரையாளன் என மக்கள் பாராட்டும்போது எனக்கு அவமானமாக இருக்கும்

அதாவது அவரது கட்டுரை பெற்றுள்ள வரவேற்பால் அவரது மற்ற சிறப்பம்சங்கள் மறக்கடிக்கப்படுவது அவருக்கு வருத்தம். இதைதான் குபரா நூலின் இன்னொரு பக்கத்தில் சொல்கிறார்


இதில் இன்னொரு ட்விஸ்ட் என்ன  என்றால் , சாரு மனதில் அவருக்கு இருக்கும் நாவல் மீதான காதலால் தன்னை சிறந்த நாவலாசியர் என்று மட்டுமே நினைத்துக்கொள்கிறார். அவர் மிகச்சிறந்த சிறுகதைகளை படைத்தவர்,.. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட, அந்த காலத்தில் அவர் எழுதிய லத்தீன் அமெரிக்க திரைப்பட புத்தகமெல்லாம் வரலாற்று பொக்கிஷம்,  சமீபத்தில் அவர் கு ப ரா குறித்து வழங்கிய உரைவீச்சு தமிழ் சொற்பொழிவுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் மறந்து விட்டு தன்னை ஒரு நாவலாசிரியர் என்ற அளவில் சுருக்கிக்கொள்கிறார். அதாவது இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் தவறை அவரும் செய்கிறார்

இப்படி இந்த நூலே இந்த நூலுக்கு ஒரு ரெஃபரன்ஸ் ஆகி விடுவது சுவாரஸ்யம்.

தமிழின் பல சொற்களின் பயன்பாடுகள் அருகி வருகின்றன. இலக்கியவாதிகளால் மட்டுமே பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன என பேசுகிறது இந்த நூல் ,. இந்த நூலே அதற்கு உதாரணமாகவும் உள்ளது.
எத்தனை எத்தனை அழகான சொற்கள் !!      

நாம் எதை ரசிக்கிறோம் என்பதுதான் நம்மை உருவாக்குகிறது. சாருவை கவர்ந்த சொல்லாடல்கள் பலவற்றை இதில் சாரு சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே அளவுக்கு அவரது சொல்லாடல்கள் நம் சிந்தையைக் கவர்கிறது , ஒரு கவிதையைப் போல.. ஓர் ஆப்த வாக்கியம் போல.



உதாரணமாக சில பளிச் வரிகளை பாருங்கள்.. இவற்றில் சில சாருவின் சிந்தனை.. சில சாரு மேற்கோள் காட்டும் ஆளுமைகளின் சிந்தனை…

  • இவர் தமிழ் மொழியின் பொக்கிஷம் என பாரதி குறித்து காந்தி கூறினார். காந்தியிடம் ராஜாஜி சொல்லி இருக்க வேண்டிய வார்த்தைகளை ராஜாஜியிடம் காந்தி சொன்னார்
  • ஆசிரியப்பா , கலிப்பா போன்று இப்போது ஒரு புதிய பா தோன்றி இருக்கிறது . அதுதான் செல்லப்பா
  • உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஓர் அதிசயம் இங்கு நடந்தது . அதாவது அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம்
  • அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தை கற்பித்தார்
  • அபிப்பிராயங்களை அழுத்தமாக உறுதியாகச் சொல்வார்.  நகைச்சுவையுடன் சொல்வார், புண்படுத்தாமல் சொல்வார்
  • கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும்போல தெய்வங்களும் பேய் பிசாசுகளும்கூட வாழ்ந்து வந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்து வந்தன

ஏன் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. இன்றைய சூழலில் இலக்கிய பரிச்சயம் என்பது ஓர் அடிப்படைத்தேவையாக இருக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை.

ஒரு முறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு நடிகர் ராஜேஷ் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். பேசி விட்டு கிளம்பியவர் தன் கார் இஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பதையும் , ஏசி ஆன் செய்து இருப்பதையும் கண்டு ஆத்திரம் அடைந்தார் . இவ்வளவு  நேரம் வீணாக ஓடிக்கொண்டிருப்பது ஏன் என ஓட்டுனரைக் கடிந்து கொண்டார். அதற்கு ஓட்டுனர் பதில் சொன்னார் “ முதல்வர்தான் ஏசியை இயக்கத்தில் வைத்திருக்கச்சொன்னார். அப்போதுதான் நீங்கள் கிளம்பும்போது வசதியாக இருக்குமாம் “

ஒரு வி ஐ பி வருகிறார் என்றால் அவர் வருவதற்கு முன்பே அவருக்கான அறையில் ஏசியை இயங்க வைத்து அவரது வசதியை பேணுவது வழக்கம். இந்த உதாரணத்தில் ஒரு முதல்வர் , ஒரு நடிகருக்காக யோசித்தது ராஜேஷை மட்டும் அல்ல… திமுக அனுதாபியான ஓட்டுனரையும் பிரமிக்க வைத்தது… இப்படி பிறருக்கான யோசிக்கும் தன்மை வாசிப்பால் மட்டுமே வரும்.

இலக்கியப்பரிச்சயம் உங்கள் வாழ்வை செழிப்புறச்செய்யும் என்கிறார் சாரு.. இது முற்றிலும் உண்மை..   ஒருவர் மருத்துவராக , எழுத்தாளராக , பொறியாளராக , ஓட்டுனராக , விவசாயியாக , பேருந்து ஓட்டுனராக என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..  யாராக இருந்தாலும் சரி, இலக்கியப்பரிச்சயம் இருந்தால் , அவர்கள் செய்வது கலாப்பூர்வமாக மாறும்..அவர்கள் பிரஞ்ஞையில் ஒரு மாற்றம் ஏற்படும்.
பழுப்பு நிறப்பக்கங்கள் இந்த மாற்றத்துக்கான ஒரு சாவி எனலாம்.


Sunday, June 28, 2020

பிஜேபி காங் வழியில் திமுக , அதிமுக , இணைய போராளிகள்

சில நாட்களுக்குமுன் நரேந்திர மோடி என்பதைவிட சரண்டர்மோடி தான் பொருத்தமானது என சொல்ல நினைத்து சுரேந்தர்மோடி என எழுதிவிட்டார் ராகுல் . உடனே பிஜேபியினர் அது சுரேந்தர்மோடி அல்ல சரண்டர்மோடி என சேம் சைட் கோல் போட்டனர்.

அதுபோல , காங்கிரஸ் ஆட்சியில் 43000கிமீ நிலத்தை சீனாவுக்கு தாரை வார்த்துவிட்டனர் என பிஜேபி தலைவர் குற்றம்சாட்டினார். உடனே காங் ஆதரவாளர்கள் , அவ்வளவெல்லாம் இல்லை. 43000 சதுர கிமீட்டர்தான் தாரை வார்த்தோம் என சேம் சைட் கோல் போட்டனர்.

இதுபோல அனைவருமே உண்மை பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் ?
−−−−−−−−

அதிமுக... தனியா நின்னு ஒரு தேர்தல்கூட ஜெயிக்க முடியாம கூட்டணி பலத்துலயே காலத்துல ஓட்டறீங்களே ?

திமுக ... தப்பு தப்பு கூட்டணியால ஜெயிக்கல.. எம்ஜிஆர் செல்வாக்கு , இந்திரா காந்தி ஆதரவு,ரஜினி வாய்ஸ் அப்படீனு பல காரணம் இருக்கு. சரி, அதிமுகனாலே ஊழல்தானே நினைவுக்கு வருது

அதிமுக.. தப்பு. போலிஸ் அராஜகம் , கொரோனா, சொதப்பல் அப்படீனு பல விஷயங்கள் நினைவுக்கு வருமே

.....
இணைய போராளிகள்.. செய்திதாள் நடையில எப்படி தைரியமாக புக் எழுதறீஙக

இணைய எழுத்தாளர்கள் : தப்பு தப்பு. நடை மட்டுமல்ல. கண்டெண்ட் கூட செய்திதாள் மாதிரிதான் இருக்கும். சரி. நீங்கள்லாம் ஆட்டு மந்தைகள் மாதிரி ஒரு குறிப்பிட்ட பிரச்சனைல,மட்டும் குறிப்பிட்ட காலத்துல கும்பலா இறங்கறீஙகளே .. ஏன்?

இணைய போராளிகள்.. தப்பு தப்பு
பிரச்சனைகளில் மட்டும் இல்ல. சினிமா , புத்தகம் , காமெடி அப்படீனு.எல்லாத்தலயும் நாங்க ஆட்டு மந்தைகள்தான்





Tuesday, June 16, 2020

இயக்குனர்கள் பாக்யராஜ் & "முகவரி"துரை.. தரையில் இறங்கிய விமானங்கள்


ஒரு காலத்தில் வெற்றி என்பதற்கு அகராதியில் அர்த்தம் பார்த்தால் பாக்யராஜ் என்று இருக்கும்.  அந்த அளவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தவர் அவர். வேறு மொழிகளில் யாரேனும் வெற்றிகளைத் தந்தால் அவர்களை கேரள பாக்யராஜ் , கன்னட பாக்யராஜ் என்பார்கள். அந்த அளவுக்கு வெற்றிகளை கொடுத்தார்.  கட்சி , சித்தாந்தம் போன்றவைகளில் ஆர்வமற்ற வெள்ளந்தி மக்கள்தான் இங்கு அதிகம். அவர்களின் நாயகனாக திகழ்ந்தார் அவர்

இந்த,நிலையில்தான் தன் இமேஜை சீர்திருத்தவாதி என்ற அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்பினார்.  
அதில் தவறு ஏதும் இல்லை

கண்டதேவியில் தேர் இழுப்பதில் பிரச்சனை , திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த கொடூரம் ,  ஆணவக்கொலைகள் , ரிசர்வ் தொகுதிகளில் தன் வேலையாட்களை நிற்க வைத்து வெல்ல வைத்து , மக்கள் பிரதிநிதி தன் வீட்டு வேலை செய்கிறார் என இழிவு படுத்துதல் , அல்லது வென்றதும் உடனடியாக ராஜினாமா செய்ய வைத்து , தேர்தலை கேலிக்குள்ளாக்குவது போன்றவற்றை கண்டிக்க இவருக்கு துணிவு வரவில்லை

வம்பே வேண்டாம் என பிராமணர்களை விமர்சித்து படமெடுக்க நினைத்தார்.
அதிலும் தவறில்லை. இது பலரும் செய்வதுதான்

ஆனால் கீழ்மையான செயல் ஒன்றை அரங்கேற்றியதுதான் பிரச்சனை.  பிராமணர்களை திட்டினால் தனது நடுநிலை இமேஜ் பாதிக்கப்படுமோ என நினைத்து , பிராமணர் ஒருவரையே படத்துக்கு டம்மி இயக்குனராக்க முடிவு செய்தார்.  சூதுவாது தெரியாத பாலகுமாரனை நைச்சியமாக பேசி சம்மதிக்க வைத்தார்

படம் முழுக்க பாக்யராஜின் கைவண்ணம்தான். பெயர் மட்டும் பாலகுமாரன்

படம் அபாரமான வெற்றி பெற்றது. நல்ல காசு பார்த்தார்.

ஆனால் அந்த அறமற்ற செயல் அவரை அத்துடன் முடக்கியது.  அதற்குப் பிறகு அவரது எந்தப் படமும் பழைய வெற்றியை பெறவே இல்லை. 

பாலகுமாரன் இது குறித்து பலமுறை வயிறெரிய குமுறியுள்ளார். தந்திரமாக என்னை ஏமாற்றி விட்டார்.  நான் எளியவன். என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று அனைத்தையும் கவனிக்கிறது என குமுறினார்

இது நிற்க

அஜித்துக்கு திருப்புமுனை தந்த நல்ல படங்களுள் ஒன்று. தரமான நடிகர்கள் , இயல்பான கதை என படம் சிறப்பாக இருந்தது

படத்தின் ஒன்லைன்

தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இசையில் சாதிக்க முயலும் நாயகன் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம் இது. அனைத்து டிவி சானல்களும் இதற்கு நல்ல தரவரிசை அளித்தன

படத்தின் வசனம் பாலகுமாரன். படத்தில் ரகுவரன் சொல்லும் தன்னம்பிக்கை கதை இன்றும் பிரபலம்

ஆனால் , படத்தின் கதை இந்துமதியின் தரையில் இறங்கிய விமானங்கள் போல இருக்கிறதே என்ற பேச்சும் எழுந்தது

இந்த கதையின் ஒன்லைன்


தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இலக்கிய உலகில் சாதிக்க முயலும் விஸ்வம் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

நாயகனின் பெயர் வேறு .  இலக்கியம் என்பது இசை ஆகி விட்டது

மற்றபடி குடும்ப சூழல் , பெருந்தன்மையான அண்ணன் , இனிய காதல் என அனைத்துமே ஒன்றுதான்

படத்தில் பணிபுரிந்த பாலகுமாரன் , இந்துமதியின் நண்பர் என்பதால் . இந்துமதியின் அனுமதியுடன்தான் படம் எடுக்கப்பட்டதாக பலரும் நினைத்ததால் , யாரும் அதை பெரிதாக்கவில்லை

ஆனால் சமீபத்தில் , தன்னிடம் அனுமதி வாங்காமல் கதையை திருடிவிட்டனர் என இந்துமதி குமுறியுள்ளார்

அவரது நாவலை கையில் வைத்துக்கொண்டுதான் கதை விவாதமே நடந்ததாம்

இப்படி திருடியதற்குபதில் முறைப்படி அனுமதி வாங்கி , அண்ணி கேரக்டரை நாவலில் இருப்பதுபோல அழுத்தம் கொடுத்து எடுத்திருந்தால் படம் வேறொரு உயரம் தொட்டிருக்கும்

இயக்குனர் துரை தொடர் வெற்றிகளை அளித்திருப்பார்
அஜித்துக்கு இந்த விவகாரம் தெரிய வாயப்பில்லை. ஆனால் துரைக்கு தார்மீக பொறுப்பு உண்டு

பரவலாக பாராட்டுப்பெற்று , அஜித்தை வைத்து வெற்றாப்படம் கொடுத்து ,உயரத்தில் பறந்த இயக்குனர் அதன் பின் ஒரு போதும் வெற்றியை தர முடியவில்லை

அறிவுலகில் அறம்தவறுவது அழிவையே தரும்
,
முகநூல் பதிவுகளை காப்பி பேஸ்ட்செய்வது , பிறர் கதைகளை திருடுவது என படித்தவர்கள் பலரே செய்வது வருந்தத்தக்கது

அனைத்துக்கும் எதிரவினை உண்டு என்பதை படைப்புலகம் புரிந்து கொள்ளவேண்டும்

Saturday, June 13, 2020

யாமம் .. ரகசியங்களின் கதை


இருள் இருட்டு போன்றவற்றை நாம்
பெரும்பாலும் எதிர்மறையாகவே உருவகித்து வருகிறோம்.  இரவு என்ற வேண்டத்தகாத ஒன்றாகவும் விடிதல் என்பதை சந்தோஷமான ஒன்றாகவும் அன்றாட மொழியிலேயே நிலை பெற்று விட்டது

உண்மையில் இரவு என்பது வசீகரமானது. மர்மம் மிக்கது.  ரகசியஙககள் நிறைந்தது

இந்த இரவு என்பதை ஒரு படிமமாக்கி , மனதின் வரலாற்றின் மனிதனின் ரகசியமான பகுதிகளைப் பற்றி பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் யாமம்

யாமம் என்றால் இரவு. யாமம் என்ற பெயரில் தயாரிக்கப்படும் வசீகரம் மிக்க அத்தர் என்ற பின்னணியில் இந்த நாவல் அமைந்துள்ளது..

அத்தரின் அந்த வசீகரமிக்க கவரச்சி நாவல் முழுக்க விரவியுள்ளது

   நாவலின் கட்டமைப்பே வெகு சுவாரசியமானது

பாரம்பரியமாக பல தலை முறைகளாக அத்தர் உற்பத்தியில் பிரசித்தி பெற்ற குடும்பம் அது.  அந்த குடும்பத்தின் முதல் தலைமுறையான மீர் காசிம் என்பவர் கனவில் சுபி ஞானி பக்கீர் தோன்றி உவமை மொழியில் பேசி , சில தேர்வுகள் வைத்து , கடைசியில் யாரும் தயாரிக்க முடியாத அளவு சிறப்பான அத்தர் தயாரிப்பு முறையை கற்றுத் தருகிறார். அதைக்கற்ற மீர் காசிம் செல்வமும் கீர்த்தியும் பெறுகிறார்.

 அவரது வாரிசுகளும் அதை பின்பற்றி நன்றாக வாழ்கின்றனர்

   தற்போதைய நிகழ்கால வாரிசான அப்துல் கரீம் கனவில் பக்கீர் வருகிறார். இயேசு எப்படி தன்னை உவமைகளால் பேசுபவன் என சொல்லிக் கொண்டாரோ அதுபோல பக்கீரும் உவமைகளால் சில முன்னறிவிப்புகளை செய்கிறார் என ஆரம்பிக்கிறது கதை.
  கதையின் ஆரம்பமே பக்கீர் செய்யும் இந்த முன்னறிவுப்புதான்.  நாம் அப்போது மீர் காசிம் உரையாடலையோ , நாவலின் பிற சம்பவங்களையோ அறிந்திருக்க மாட்டோம் என்பதால் அவரது அறிவுரைகளின் முழு தாத்பர்யம் நமக்கு புரிவதில்லை. ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே உன் வியாபாரம் விருத்தியாகும் என்று மட்டுமே அப்துல் கரீம் புரிந்து கொள்கிறார்

     அதன்விளைவாக  அவர் குடும்பம் என்ன ஆகிறது என்பது ஒரு கதை

     இதைத்தவிர பத்ரகிரி , அவனது தம்பி திருச்சிற்றம்பலம் ,  அவர்களது மனைவிமார்கள் , திருச்சிற்றம்பலத்தின் நண்பன் சற்குணம் , கிருஷ்ணப்ப கரையாளர் அவரது தோழி எலிசபத் , சதாசிவ பண்டாரம் ஆகியோரின் கதைகளும் யாமம் எனும் பொதுவான அம்சத்தின் கீழ் பிணைந்துள்ளன.

லண்டன் நகரும் ஆங்கிலேய சமூகமும்கூட கதாபாத்திரங்களாக வருகின்றன

          அப்துல் கரீம் , பத்ரகிரி , கிருஷ்ணப்ப கரையாளர், சதாசிவம் ஆகியோர் மட்டுமல்ல. முன்கதையில் வரும் இளவரசி உட்பட அனைவர் வாழ்விலும் நறுமணம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு விதமான உணர்வுகளையும் விளைவுகளையும் உருவாக்குகிறது


 இவர்களை வசீகரமான ஒரு சக்தி வழி நடத்துகிறது. அதைத்தான் யாமம் என கவித்துவமாக உருவகமாக்கியுள்ளார் எழுத்தாளர்



     தான் என அவர்கள் நினைப்பதற்கு சம்பந்தமில்லாத ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

      இவர்களில் சதாசிவ பண்டாரத்தை வழி நடத்தும் சக்தி மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. மற்றவர்கள் இரவு போன்ற மர்மமான ஒரு விசையால் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்

        தான் இங்கிலாந்து செல்வதே வெள்ளைக்காரிகளை புணருவதற்காகத்தான் என சொல்லக்கூடிய தன்னை பொறுக்கி என நினைக்ககூடிய சற்குணம் , சமூகநல போராளியாக மாறுகிறான்
   
தன் தம்பிக்கு தான் ஒரு தந்தை என மனப்பூர்வமாக நம்பும் பத்ரகிரி பெண்மோகத்தில் விழுகிறான்

      பற்றுகளுக்கு அப்பாற்பட்டவர் என தன்னை நினைத்துக்கொள்ளும் சதாசிவ பண்டாரம் தன் எல்லைகளை உணர்கிறார்

      தங்களை சுயநலவாதிகள் என்றும் அப்துல் கரீமின் சொத்துதான் தஙககளை பிணைத்து வைத்துள்ளது என நினைக்கும் அவரது மனைவிகள் அவர் இல்லாதபோதுதான் கடுமையான வறுமைக்கு மத்தியிலும் ஒருவருக்கு,ஒருவர் அவ்வளவு ஆறுதலாக அன்பாக இருக்கின்றர்

   
     வெளிப்படையாக தெரியாமல் தன் மனத்தால் தன் இருப்பைக் காட்டும் யாமம் போல மனிதனுக்குள் அவனுக்கே தெரியாமல் இன்னொரு மனிதன் இருப்பதும் அவன் தன் இருப்பைக் காட்டுவதும் கதையில் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது

இது மனிதனுக்கு மட்டுமன்று. இமங்களுக்கும் பொருந்தும்
வசீகரமான லண்டன் நகரைப் பாரத்து இதுதான் சொர்க்கமா என நினைக்கும் அதன் இருளான பகுதியைஒரு
தூக்குதண்டனை சம்பவம் மூலம் அறிகிறான்

அதுபோல இந்தியாவை கரையான்போல அரிக்கும் ஆங்கிலேய ஆட்சியின் இன்னொரு முகமான பெண் கல்வி , ஜனநாயக யுகத்தின் பலன் ஆகியவையும் சொல்லப்படுகின்றன

தன் சொந்த மக்களின் ஒரு
பகுதியினரை கொடுமைக்குள்ளாக்கும் அதே ஆங்கில சமூகம்தான் தமிழன் ஒருவரை தன் புதல்வனாக பத்திரமாக பார்த்துக் கொண்டு மேடை ஏற்றி அழகு பார்க்கிறது

நெடுங்குருதி நாவலில் காலம், நிலவியல்
பற்றி தெளிவான குறிப்புகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு இருக்கும். காரணம் அந்த நாவலின் தளம் வேறு. யாமம் நாவலில் இடம் மற்றும் காலம் பற்றிய குறிப்புகள் வெகு கவனமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.

முதன்முதலில் மீர் காசிம் கனவில் தோன்றும் பக்கீர்  , தனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும் என்றும் கடலின் மீன்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்ல வேண்டும் எனவும் கேட்கிறார்.
அது எப்படி முடியும் என திகைத்தாலும் பதிலுக்காக தீவிரமாக தேடுகிறார். கடைசியில் அவருக்கு பதில் கிடைக்கிறது. அந்த பதிலைவிட அந்த தேடலும் நம்பிக்கையும் பக்கீருக்கு பிடித்து விடுகிறது. எனவே தொடரந்து உரையாட ஆரம்பிக்கிறார்

  தெரியாதை தேடிச் செல்லும் நம்பிக்கையும் குறியீட்டுப் பொருளை உணரும் ஆற்றலும் கொண்ட அவருக்கு அள்ள முடியாத நறுமணமிக்க திரவமான இருளை , வடிவற்ற இருளை , வடிவம் கொண்ட அத்தராக உருவாக்கும் வித்தையை கற்றுத்தரலாம் என முடிவெடுத்து அவருக்கு மாகற்றுத்தருகிறார்

ஆனால் இந்த தேடலோ குறியீடுகளை புரிந்தும் தன்மையோ அப்துல் கரீமிடம் இல்லை என்பதை கவனிக்க முடிகிறது.
     

இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது

இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையை போன்றது



இரவின் தீரா வாசனை எங்கும்  பரவி இருக்கிறது



பகலிலும் இரவை உருவாக்கும் திறன்

உங்களது வாசனை திரவியங்களுக்கு மட்டுமே உணடு


பசுவின் காம்பில் இருந்து பால் சொட்டுவதுபோல பிரபஞ்சத்தின் காம்புகளில் இருந்து இரவு சொட்டிக் கொண்டே இருக்கிறது

நீயும் உன் மூதாதையரும் இரவை சிருஷ்டிக்கும் ரகசியம் அறிந்தவர்கள்


   இரவின் ரகசியத்தை நீ உன் புதல்வனுக்கும் அவன் தன் புதல்வனுக்குமாக கைமாற்றி தர வேண்டும்.
         இது எப்போது நிற்கிறதோ அப்போது இந்த வித்தை உங்களை விட்டுப் போய் விடும்

 என மிகுந்த கருணையோடு முன்னறிவிக்கிறார் பக்கீர்

   மீன்களின் எண்ணிக்கை என்ற உலகியல் கேள்விக்கு விடை தேடி , ஆன்மிக அனுபவம் பெற்று , தத்துவரீதியான பதிலை தந்த தன் மூதாதையரின் நுண்திறன் இவருக்கு இல்லை

   இரவின் ரகசிய புத்தக செய்தியை நன்கு அறிந்து அதை உன் மகனுக்கு புகட்டு என்பதை உலகியல் ரீதியாகவே புரிந்து கொண்டு , ஆண் குழந்தை பெற உத்தரவிடுகிறார் என புரிந்து கொண்டு அதையே தன் லட்சியமாக மாற்றிக கொள்கிறார்.   படிப்படியாக அவர் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. ராணிகள் போல இருந்த அவர் மனைவிகள் கூலி வேலை , மீன் விற்பனை என கஷ்டப்படும் சூழல் உருவாகிறது

    இவரது வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பது யாமம் . பிரசித்தி பெற்ற தனது அத்தர் பாட்டில்களை  அவர் குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்.

    இவரது பிரச்சனை காமம் கிடையாது. பேராசைதான் இவரது பிரச்சனை


  கிருஷ்ணப்ப கரையாளர் யாமம் அத்தரின் தீவிர ப்ரியர். தன் பிணத்தின் மீது அத்தரைக் கொட்டி புதைக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குண்டு. அன்பான அரவணைப்பு என்றுதான் யாமம் இவருக்கு பொருள்படுகிறது.  ஆனால் அது அவருக்கே தெரிவதில்லை.  சொத்துதான் தன்னை இயக்கும்விசை என நினைத்து அதற்காக வழக்காடுகிறார்.

   ஒரு மலைத்தங்கலின்போதுதான் , காமமோ பணமோ தனக்கு பொருட்டல்ல என்ற சுயதர்சனம் அவருக்கு கிடைக்கிறது;

இது சுவையான ஒரு சித்தரிப்பாகும்

தன்னை தியாகி என்றும் பொறுப்பான அண்ணன் என்றும் நினைக்கும் பத்ரகிரியின் ஆழ்மனத்தை காமம்தான் ஆட்டுவிக்கிறது. இவனுக்கு யாமம் என்பது காமமாக பொருள்படுகிறது

ஆனால் தன்னை பேராசைக்காரராகவும் காமக்கேளிக்கையாளராகவும் மதிப்பிட்டிருந்த கிருஷ்ணப்பரின் ஆழ்மனம் எளிய வாழக்கையே நாடி இருக்கிறது.

    கிழக்கிந்திய கம்பெனி இங்கு நிலைகொள்ள காரணமாக அமைந்தது மகள் மீது தந்தை கொண்ட பேரன்பு. அப்படி ஒரு நெகிழ்வான கணத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு கதவுகளை திறந்து விடுகிறார்

    மதராபட்டணம் உருவானதற்கு பின்னணியில் இருப்பது பிரான்சிஸ்டே என்பவனுக்கு கிளாரந்தா மீதான பாலியல் கவர்ச்சி

    சதாசிவ பண்டாரம் தன் அன்னையை துச்சமாக நினைத்து துறந்தவர்..  மான அவமானம் , பொருளாசை , பெண்ணாசையைக்கூட துறந்து விடலாம் , ஆனால் ரத்த பந்தத்தை அறுப்பது எளிதல்ல என்பதை உணர்வதுதான் இவரை முழுமை ஆக்குகிறது. தான் பாலுறவு கொண்ட பெண்ணைப்பற்றி நினைப்பதைவிட தன் குழந்தை என்னவாயிற்று என்றே அவர் மனம் துடிக்கிறது.  தன் தாயின் துடிப்பை அப்போதுதான் அவரால் உணர முடிகிறது

      மதம் மாறிய ஒரு பெண் குறித்தும் அவள் ஏற்படுத்திய பெண் கல்வி புரட்சியும் ஒரு சித்தரிப்பு வருகிறது.அவள் மதம் மாறியதும் கலப்பு மணமும் அவள் பெற்றோருக்கு மரணத்தை ஒத்த மிகப் பெரிய வேதனை. அவளுக்கு சாவு சடங்குகளை செய்துவிட்டு ஊரைவிட்டே போய் விடுகிறார்கள்
தனியாகப் பார்த்தால் அந்த பெற்றோர் வேதனை குறிப்பிடத்தக்க ஒன்றுதான். ஆனால் சீர்திருத்தம் , பெண்கல்வி என பெரிய அளவில் பார்க்கும்போது தனி ஒருவர் கண்ணீருக்கு வரலாற்றில் என்ன பொருள் இருக்க முடியும்.
இந்த பின்னணியில்தான் தன் தாயின் கண்ணீரை புரிந்து கொண்டுஅதன்பின் அதை தாண்டும் பக்குவம் சதாசிவ பண்டாரத்துக்கு கிடைக்கிறது,..ஒரு சத்திரத்தில் தங்கியிருக்கும்போது ஒரு கல்லில் எங்குமே அனுபவித்திராத ஒரு சுகந்தமான மணம்  வீசுவதை கவனிக்கிறார். அது என்ன என்பது அப்போது புரிவதில்லை.  இரவெனும் ரகசியப்புதிரின் மணம் அவரைசூழ்வதன் முன்னறிவிப்பு என பிறகுதான் நமக்கு தெரிகிறது


    நாவலில் இரு சுவாரஸ்யமான காட்சிகள். அனைத்தையும் இழந்து சாலையில் செல்லும் பத்ரகிரி நாய் ஒன்றைப் பார்க்கிறான்.  பேசாமல் அனைத்தையும் விட்டு விட்டு இந்த நாயின் பின் போய்விடலாமா என அவனுகு தோன்றுகிறது

நாயை பின்தொடர்ந்து சென்று ஞானம் பெற்ற சதாசிவ பண்டாரம் நினைவு நமக்கு வருகிறது.

அதேபோல கப்பலில் செல்லும் திருச்சிற்றம்பலம் கடலின் மீன்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது குறித்து யோசிக்கிறான்.

நமக்கு மீர் காசிமிடம் மீன்களை கணக்கிட சொன்ன பக்கீர் நினைவு வருகிறது

    பக்கீர் அவர் கனவில் வந்து வழிநடத்துவதுபோல திருச்சிற்றம்பலத்தை அவன் அம்மா வழிநடத்துகிறாள்

   அப்துல் கரீம் இருந்தவரை தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அவரது மனைவிகள் அவர் காணாமல் போனபின்பு எந்த நிரப்பந்தமும் இல்லாமல் ஒற்றுமையாகி விடுகினறனர், ,ரஹ்மானியின் குழந்தையை வகிதா வளர்க்கிறாள்.சுரையாவையும் தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறாள்

மனித மனதின் விசித்திதங்களுக்கு எல்லையே இல்லை போலும்

எதற்கும் ஆசைப்படாத அதிகம் பேசாத விசாலா ஆசைப்படுவது அத்தர் ஒன்றுககாக மட்டுமே..

தையல் நாயகியுடனான தன் கணவன் உறவை அறிந்து அவனை தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகிறாள்

தைரியமான பெண் என நினைக்கும் தையல் நாயகியில் குணநலன்கள் கடைசியில் வெகுவாக மாறி அவளது சுயரூபம் அவளுக்கே தெரிகிறது

நடைமுறை ஞானத்துடன் பேசும் ஏ எஸ் ஐயர் , பகல் குறித்த எந்த அக்கறையுமற்ற டோபிங் , கலகலப்பான சிறுவன் சந்தீபா , அவனது கிளி, வெள்ளையர்களுக்கு மட்டுமே ஏழு கிணறு என உத்தரவிட்ட பிரிட்டிஷ் அரசு அதை கத்தியின்றி ரத்தமின்றி போராட்டமின்றி கருப்பர்களுக்கு கொடுத்து விடுதல் , இம்பாலா லாட்ஜ் வாசக சாலை , கனவில் வந்து கணக்குக்கு உதவும்"சடட்நாதன் , கால்குலேட்டர் கண்டுபிடிப்பு , நட்சத்திரஙகளுடன் உரையாடும் பத்ரகிரி , பறவைகளை எண்களாக காணும் திருச்சிற்றம்பலம் , அடிமைகளாக மாறவிருத்த மகர் இன ஏழைகள் அரசு மாறகறஙககளால் பெறும் குதூகல வாழ்வு என ஏராளமன சுவாரஸ்யங்கள்

காட்டில் சிறுசிறு திருட்டுகளைச் செய்யக்கூடிய ஆனால் காட்டை
நேசிக்கக்கூடிய ஒரு பாத்திரம் வருகிறது. அதேகாட்டுக்கு காட்டின்மீது மரியாதை இல்லாத காட்டை நுகர்வுப்பொருளாக மாற்றக்கூடிய கனவான்களின் வருகையும் சித்தரிக்கப்பட்டுள்ளது


கைவிடப்பட்ட சிறுமியாக வாழக்கையை ஆரம்பித்து பலவித சிதகதரவதைகளை அனுபவித்து , வாழ்க்கை அவ்வளவுதான் என நினைத்த நிலையில் ஒரு பெரிய மலைக்கே உரிமையாளர் ஆகிறாள் எலிசபத். அவளது மனபிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடுகிறது மலைப்பயணம் அந்த மகிழச்சியுடன் லண்டன் கிளம்புகிறாள். திரும்பி வரும்போது ஒரு அதிர்ச்சியை சந்திக்கவிருக்கிறாள்

லண்டனில் பெரும்புகழ் பெற்று தமிழகம் வரும் திருச்சிற்றம்பலம் இங்கே பெரிய அதிர்ச்சியை சந்திக்கிறான். அடுத்து என்ன செய்வான் என நம்மைப்போல அவனுக்குமே தெரியாது

யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது .அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது என முடிகிறது நாவல்


 நள் இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து வீடு திரும்பும்போது பகலில் பாரத்த நம் வீதிகள் அந்த இரவில் நமக்கே அந்நியமாக புதிதாக தோன்றும்

  அதுபோல இந்த கதை பாத்திரங்கள் தமக்குள் இருக்கும் ரகசிய வெளியைப் பார்த்து , இதுதான் நானா என திகைத்துப்போகின்றனர்

நறுமணம் மூலம் இறைவனுடன் உரையாடுதல் என்ற சுபி மற்றும் இந்திய தொன்மங்களை சற்றே மாற்றி நறுமணம் மூலம் அறியமுடியாமையுடன் உரையாடல் என மாற்றிப்போட்டு இருக்கிறார்

 உனக்குள் இருக்கும் கடவுளை கண்டுபிடி என்பதைவிட உனக்குள் இருப்பது கடவுளாக இருக்கலாம் சாத்தானாக இருக்கலாம் எளிய மனிதனாக இருக்கலாம்.  அதைக்கண்டுபிடிப்பதுதான் முக்கியம்.

இதை படித்து முடித்ததும்  நாம் என நினைத்துக் கொண்டிருக்கும் நாம் உண்மையில் யார்.  நமக்கு தெரியாமல் நமக்குள் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்ற யோசனை வருவதை தவிர்க்க முடியாது


  யாமம் நாவல் அற்புதமான அனுபவம்.

தேசாந்திரி பதிப்பக வெளியீடு

கண்டிப்பாக படியுங்கள்
   




   



 

 



































Wednesday, June 10, 2020

எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.. ஒரு பார்வை


எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பானசாதனைகளுள் ஒன்று

ஆனால் ஒரு முரண்நகைச்சுவை இதில் இருக்கிறது.

இந்த நாவலை படித்த சிலர் இதைப் புகழ்வதாக நினைத்து , இந்த நாவலைப்பற்றி இப்படி சுருங்கச்சொல்வாதுண்டு

"வேம்பலை என்ற கிராமத்தின் மீது படிந்திருக்கும் துயர் எனும் இருளையும் அவ்வூர் மக்களின் வேதனைமிகு வாழ்வையும்  சொல்லும் நாவல்தான் நெடுங்குருதி"

 இதைக் கேட்கும் புதிய வாசகன் ஒருவன் இதை ஒரு புரட்சிகர நாவலாகவோ , சமூக நாவலாகவோ , மெலோடிலாமா வகை எழுத்தாகவோ நினைத்து விடக் கூடும்

   உண்மையில் இந்த நாவல் இதுபோன்ற குறுகிய வரையறைகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டு மொத்த மானுடத்தை நோக்கி உரையாடும் நாவலாகும்

அதே நேரத்தில் கதை நடக்கும் பூமியில் தன் பாதங்களை ஆழமாக ஊன்றி இருக்கிறது நெடுங்குருதி..

தனது பூமியின் துயர்களை , வலிகளை , சந்தோஷத்தை முழுமையாக உணர்ந்து , உலக இலக்கியங்களில் தேர்ந்த ஞானம் கொண்ட ஒருவரால்தான் இப்படி ஒன்றை படைக்க முடியும்

இன்று எழுதும் பலருக்கு பெரிதாக தாம் வாழும் நிலம் குறித்த பரிச்சயம் இருக்காது. படித்ததை வைத்து எழுதுவார்கள். அந்த எழுத்து வெகு அன்னியமாக நமக்கு தோன்றும்

சிலருக்கு அனுபவம் இருக்கிறது. இலக்கியம் குறித்த புரிதல் இருக்காது. இவர்கள் எழுத்தைப் படிக்கையில் ஆவணப்படம் பாரப்பது போல இருக்கும்.



ரஷ்ய பனியை அனுபவித்தராத நாம் எப்படி தஸ்தயேவ்ஸ்கி எழுத்தில் ரஷ்ய சூழலையும் அதன் உணர்வுகளையும் உணர்கிறோமோ அதுபோல வெயிலையே அறிந்திராத ஒரு வசதியான நகரில் வாழும் மனிதனுடனும் உரையாடதக்க பொதுவான மானுட மொழிதான் நாவலின் சிறப்பு

கதை நடக்கும் காலகட்டம் குறித்தோ நில எல்லைகள் குறித்தோ பெரிதாக அக்கறைகாட்டாமல் மனிதனுள் உள்ளே பயணிக்கிறது எஸ். ராவின் எழுத்து

நாகு , அவன் பெற்றோர் , சகோதரிகள் , தாத்தா , மல்லிகா , ரத்னாவதி , ஆதிலட்சுமி, சென்னம்மா , ஜெயராணி , பவுல் , கிருபை , பாதிரி ,சமண துறவிகள் , சிங்கி , குருவன் , தெய்வானை , பக்கீர் , அவனது மனைவி , கிராம ஆசிரியர் , வசந்தா, சேது , சங்கு, திருமால் , லயோனல் , வீரம்மாள் என ஒவ்வொருவர் பாத்திரமும் அவர்கள் சார்ந்த சம்பவங்களும் அற்புதமாக அழகான சிறுகதைகளாக மிளிர்கின்றன. வெயிலும் ஒரு பிரதான பாத்திரமாக வருகிறது. வெயில் மட்டுமன்று. இருளும்கூட

500 பக்கங்களில் 100 அத்தியாயங்களில் பிரமாண்டமாக விரிந்திருக்கும் நாவல் ஒற்றை மையத்தை , ஒற்றை சரடை , ஒற்றை கருத்தை கொண்ட நாவல் அல்ல. படிக்கும் ஒவ்வொருவரும் தனக்கான கதையை உருவாக்க இடம் தரும் எழுத்து இது

உதாரணமாக , வேம்பலையின் நிழல் நகரமாக ஒரு ஊர் வருகிறது. வேம்மலையில் மறைந்தவை அங்கு வாழ்கின்றன
சென்னையில் அருண் ஹோட்டல் , ஆனந்த் தியேட்டர் போன்றவை மறைந்து விட்டாலும் இன்றும் அருண் ஹோட்டலுக்கு பஸ்சில் டிக்கெட்  கேட்டு வாங்க முடிகிறதல்லவா.  மறைந்தும் மறையாமல் வாழ்கிற ஊரை காண முடிபவர்களால் அந்த சித்திரத்தை தமக்குள் பொருத்திப் பார்க்க முடியுமக
எல்லா பாத்திரங்களும் முக்கியமனவை. அனைத்துக்கும் தனியாக கதை இருக்கிறது
   
உதாரணமாக கதையில் நாகுவின் அப்பா கேரக்டர்

பொறுப்பற்ற தன்னலமிக்க பாத்திரமாக அறிமுகம் ஆகிறது. பக்கீர் என்ற தன் நண்பனுக்கு துரோகம் செய்து அவன் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகிறார்.  பொறுப்பில்லாமல் தன் குடும்பத்தை பிரிந்து செல்கிறார்

ஆனால் அந்த பாத்திரம் பரிணாம வளர்ச்சி அடைந்து , அவர் மருமகள் அவர் தன் மேல் பெத்த அப்பனாக பாசம் காட்டி பார்த்துக் கொள்கிறார் என சொல்லத்தக்க அளவு உயர்கிறார்
இந்த மாற்றம் கவித்துவமாக ஒரு இடத்தில் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

 ஒரு மழைக்காலத்தில் தன் மகளின் சமாதிமீது ஊரந்து செல்லும் மண்புழுவை பத்திரமாக எடுத்து வந்து தன் வீட்டின் அருகே விடுகிறார். இனிமேல் இங்கே இருந்துக்கோ தாயி என நெகிழ்வாக சொல்கிறார். அழகான தருணம்

அதேபோல ரத்னாவதி. பாலியல் தொழில் செய்யும் பெண். கலகலப்பான இனிய பெண். அவளுக்குள் காதல் ஏற்படும் மந்திர கணம்.  குழந்தை பிறப்பு. காதலித்தவனின் இறப்பை உணர்தல். குழந்தையால் வேறு ஒரு பரிணாமத்தை அடைதல்.  தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியம்.  மறுமணம்.அத்தையின் பிரிவு. கணவன் இறப்பு. அதன்பின் தன் இனிய சுபாவங்களை இழந்து கசப்பையேதன்  வாழ்வாக கொள்ளுதல்.  அந்த வாழக்கையில் தொடும் உச்சம். அதில் காணும் வீழ்ச்சி . என இவளை வைத்தே தனியாக நாவல் எழுதலாம்.  அந்த சூழலிலும் கழிவிரக்கம் கொண்டு கதறாமல் வாழ்வை நெஞ்சுரத்துடன் எதிர் கொள்கிறாள். கடைசியில் மரணத்தைக்கூட ஒரு சந்தோஷமான சூழலில் மகிழ்ச்சியுடன் தழுவுகிறாள்.
மகனை ஆளாக்கி விட்டபின் , அவனைப்பற்றி சற்றும் நினைப்பதும் இல்லை. எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.

பக்கீரின் மனைவி அந்த ஊரின் வந்தேறி. அநாதரவாக வந்தவள். காலப்போக்கில் அந்த ஊரில் இரண்டறக்கலக்கிறாள். ஊருக்கு மணீக்கூண்டு அமைத்து தருகிறாள்.



   வெயில் கொளுத்தும் பூமி.  அங்குள்ள உயிர்கள் வீரியமானவை.  அங்குள்ள பாம்புகள் கடும் விஷம் கொண்டவை.அங்குள்ள தாவரங்கள் குறைந்தபட்ச தண்ணீரை வைத்து உயிர் வாழும் போராட்டத்தில் இருப்பவை. தமது வேர்கள் மூலம் எல்லாதிசைகளிலும் அலைபாயந்து உயிர் வாழ துடிப்பவை

இதுதான் இக்கதை பாத்திரங்களின் இயல்பாகவும் இருக்கிறது

 வேட்டையாடப்படும் வேம்பர்களுக்கு வேப்ப மரம் அடைக்கலம் அளிக்கிறது , கடும் உக்கிரத்துடன் அமைதியாக நின்றிருக்கும் ஊமை மரம் போன்றவை அழகிய படிமங்கள்.
இயற்கை வேம்பர்களை உருவாக்கி , காத்து , அழிக்கவும் செய்கிறது. ஆரம்பத்தில் வரும் எறும்புகள் முதல் கடைசியில் வரும் கொக்குகள் வரை இதை சொல்கின்றன

இதை வேம்பர்களுக்கு மட்டுமல்ல .  எந்த தேச மனிதனுக்கும் பொருத்தி பார்க்க முடியும்.

, நாவலில் இரண்டு இடங்களில் அணையாத நெருப்பு எனற காட்சி வருகிறது.  வெற்றிலைச் சத்திரத்தில் இருக்கும் கண்ணகி மூட்டிய நெருப்பு. மகான் ஒருவரின் சமாதியில் இருக்கும் அணையா தீபம்


இதில் வெற்றிலை சத்திர நெருப்பை , நாகுவும் காண்கிறான். அவனது மகன் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கிறான்.  ஆனால் இருவருக்கும் அது அளிக்கும் புரிதல் என்பது வெவ்வேறு

  நாகுவின் மகள் வசந்தா பார்த்திருந்தால் அவளுக்கு நாகு அடைந்த உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்ககூடும்.  வேம்பலையின் வீரிய ரத்தம் அவளுள்தான் ஓடுகிறது என்பதை நாகுவின் பறவைக்காடசி அவளுக்கும் கிடைத்தது என்பதில் உணர்கிறோம்

 அவளுக்குதான் வேம்பலையின் அழைப்பு கிடைக்கிறது.  வேம்பலை மீதான ஈர்ப்பு காரணமாகவே அவளுக்கு ஜெயக்கொடி என்ற சகமாணவி மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த நட்பு மரணத்தின் விளிம்புவரை எடுத்துச் செல்கிறது.

ஆக வேம்பலையின் அழைப்பே அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறது. வலி வேதனை காதல் காமம் என அனைத்திலுமே உச்சம் தொடுவதுதான் வேம்பலை

  இந்த பாதிப்புகள் எதையும் சந்திக்காத,ஒரே பாத்திரம் அன்னலட்சுமி மட்டுமே. நடக்க முடியாதவள். பகல் கனவுகளில் வாழ்பவள். பிறர் விஷயங்களை தெரிந்து கொள்வதில் மகிழ்பவள்..  கடைசி வரை பரிணாம மாற்றம் அடையாமல் நிம்மதியாக இருக்கும் பாத்திரம் என்பது தற்கால மனிதனை சுட்டுகிறதோ என தோன்றுகிறது

முகநூல் , ட்விட்டர் , அரசியல் அக்கப்போர்கள் என தங்களுக்கென்று தனி உலகம் அமைத்துக்கொண்டு , வாழ்வின் வெம்மையை சற்றும் அனுபவிக்காமல் வாழ்ந்து மறையும் ஒரு சவலை சமூகம் உருவாகி வரும் சூழலில் அன்னலட்சுமி கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது

   நாவலின் பாத்திரங்கள் மரணஙகளை வலிகளை இழப்புகளை சந்தித்தாலும்.அவர்களுக்குள் அணையா விளக்காக இருப்பது அன்புதான்

   திருமாலிடன் லயோனல் சார் சொல்கிறார். உலகில் அன்பைவிட உயர்ந்த ஒன்று உண்டு . அதற்காக காத்திருக்கிறோம்

படித்தவர்களுக்கும் , செல்வந்தர்களுக்கும் , நகரவாசிகளுக்கும் எட்டாக்கனியான அன்பு இந்த எளிய மக்களிடம் அபரிமிதமாக கொட்டிக்கிடக்கிறது

  தன் கணவனை அழித்த நாகு குடும்பத்தின்மீது பாசம் பொழிரும் பக்கீர்,மனைவி , அவளே ஒரு அபலை என்றாலும் நாகுவின் சகோதரி திருமணத்தை நடத்துவதில் அவள் காட்டும் உறுதி ,  மரண விளிம்பில் இருக்கும் சிங்கியை அரவணைத்து தன் அன்பால் அவனை உருவாக்கும் தெய்வானை , பிறகு கொடூரமாக மாறி விட்ட அவளை பிரிந்தாலும் அவள் இறப்புக்காக கதறும் சிங்கி கிழவன் , தன் மனைவி மக்களைக்கூட கொடூரமாக நடத்தும் கிருபைக்கு தன் தாய் மீது கசியும் பாசம் , துரோகியாக அறிமுகமாகும் நாகுவின் அப்பா செல்லையாவுக்கு தரும் வாழ்வு , அதற்கு செல்லையாக காட்டும் நன்றி என இந்த நாவலை வாதையின் நாவலாக அல்லாமல் அன்பின் நாவலாகவும் வாசிக்கலாம்.

  ஒவ்வொரு ஊராக சென்று அங்கு தூக்கம் எப்படி வருகிறது என டெஸ்ட் செய்யும் விசித்திரமான பாத்திரம். வேம்பலையில் தூங்கி பார்த்துவிட்டு , ஊரா இது? இரவு தூக்கம் வரவில்லை. இரவுதான் புத்துணர்வாக உற்சாகமாக இருக்கிறது. இது திருட்டுப்பசங்களுக்குத்தான் செட் ஆகும் என கோபமாக சொல்லி செல்கிறான். அதைக்கேட்டு ஊர்க்காரர்கள் நினைத்து நினைத்து சிரிக்கிறாரகள். காரணம், அது அவர்களுக்கே தெரிந்த உண்மைதான்

பேயுடன் ஆடுபுலி ஆட்டம் , தானிய குலுக்கைக்குள் அடக்கமாகும் சென்னம்மா , மரணமற்ற நிலை அடைவது , தீராதாகம் , ஆட்டு நாக்கு , மழை பெய்யும் கருவி என ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸ்யம்.

   தானிய குலுக்கைக்குள் போடும்,முன் கடைசியாக வெளி உலகை பார்க்குமபொருட்டு சென்னம்மாவை வெளியே கொண்டு வந்து வெளி,உலகை காண வைக்கிறார்கள்,  வேம்பலையை விட்டு நிரந்தரமாக வெளியேற முடிவு செய்த மல்லிகா கடைசியாக ஒரு முறை தன் தெருவை பார்த்துக்கொள்கிறாள் என இரு காட்சிகள் வருகின்றன . அதேபோல கிணற்றில் இருந்து நிரந்தரமாக வெளியேறவுள்ள ஆமை கடைசியாக ஒருமுறை தலைநீட்டி கிணற்றை பாரத்துக்கொள்வதாக ஒரு காட்சி. செம

விடைபெறும் வசந்தகாலம்
பறவைகள் கண்களில் கண்ணீர்
மீன்கள் கண்களிலும்;
என்ற ஹைக்கூநினைவு வந்தது

  ரத்னாவதி ஓர் அபலை. ஆனால் அந்த சூழலிலும் தனக்காக எதுவும் கேட்காமல் தன் தோழி குழந்தைக்கு கோயிலில் முடி இறக்க நாகு ஏற்பாடுகள் செய்ய கோருகிறாள் மறுபேச்சின்றி நாகுவும் ஒப்புக்கொண்டு ஒரு தாய்மாமன் ஸ்தானத்தில் குழந்தைக்கு அதை செய்கிறான்.அந்த தாய் கண்கலங்கி கைகூப்புகிறாள்

இப்படி பல குறுங்கதைகளை குறுங்கவிதைகளை நாவல் முழுக்க பார்க்கிறோம்

   அன்பும்  கொடும் சூழலிலும் போராடும் வீரமும் என்றென்றும் அழியாத நெடுங்குருதியாக வாழையடிவாழையாக வேம்பலை மக்களிடம் நீடிப்பதை நாவல் காட்டுகிறது
    தேசாந்திரி பதிப்பக வெளியீடு. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்

    பலமுறை படிப்பது உறுதி

நான் அடிக்கோடிட்டு ரசித்த சில வரிகள்

............

கத்தியை யாரோ சாணை பிடிப்பதுபோல தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது

  யாரோ முனகுவதுபோல மண் புரண்டு சப்தமிட்டது. புதையுண்டு கிடந்த மூதாதையர் எலும்புகள் வெக்கை தாங்காமல் திமிறிக் கொண்டு வெடித்தன

பள்ளிக்கு வெளியே தொங்கிய தண்டவாளத்தில் மணியை எடுத்து அடித்தாள். அடங்கியிருந்த இருள் சப்தம் கேட்டு கலைந்து திரும்பியது


சுனையில் நீர் சுரப்பதுபோல வேம்பு காற்று கசிந்து கொண்டிருந்தது

இருட்டு தண்ணீரைப்போல சரசரவென ஊரந்து போய்க்கொண்டு இருந்தது

மழைக்குப்பின் ஊரின் சுபாவம் மாறி இருந்தது. பேச்சில்கூட குளிர்மையேறிருந்தது

இருள் வெளிச்சத்தை தன் விரல்களால் பிடித்து அணைத்துவிட துடிப்பதைப்போல நெருங்கிக் கொண்டிருந்தது





 









Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா