Sunday, January 13, 2013

சாரு கண்டிப்பாக புக்கர் பரிசு பெறுவார்- கவிஞர் றியாஸ் குரானா திட்டவட்டம்




பட்டியல் கவிதை , வாய்ப்பாடு கவிதை போன்ற உயிர்மை பாணி கவிதைகளால் அலுத்து போன நமக்கு உண்மையான கவிதைகள் மூலம் ஆறுதல் அளிக்க சில நல்ல கவிஞர்களும் இருக்கிறார்கள் .அப்படிப்பட்ட நல்ல கவிஞர்களில் ஒருவர்தான் இலங்கையைச்சேர்ந்த ரியாஸ் றியாஸ் குரானா . இவருடன் உரையாடுவது ஓர் அலாதி அனுபவம்.. நள்ளிரவை தாண்டியும் உரையாடல் நீளும் . இலக்கியம் , கவிதை , சம் கால நிகழ்வுகள் என பல விஷ்யங்கள் அதில் இடம்பெறும்.. சாருவுக்கு கண்டிப்பாக புக்கர் பரிசு கிடைக்கும் என்கிறார் அவர். எப்படி சொல்கிறார் ? இந்த உரையாடலை படித்து பாருங்கள்.. இது தவிர பின் நவீனத்துவம் , சம கால கவிதைகளின் போக்கு என பலவற்றை பற்றி பேசுகிறார் அவர்.. **********************************************************


பிச்சைக்காரன்

  மனுஷ் எழுவது கவிதையாகவே தோன்றவில்லையே.. எனக்கு மட்டும்தான் அப்படியா , அல்லது அதுதான் உண்மையா.. சக கவிஞராக அவரை எப்படி மதிப்பிடுவீர்கள்


றியாஸ் குரானா 

 அவர் எழுதுவதும் கவிதை வகையினத்திற்குள் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆயினும், மிகப் பழசு பட்டுப்போன ஒன்று அது. வானம் பாடிகளின் தொடர்ச்சியும், ஆரம்ப நவீன கவிதையின் சில உத்திகளும் இணைந்த இடம் அவரின் கவிதைகள். கவிதைகள் என்ற விளிப்புக்குள் அடங்கக்கூடியவை. இன்று அதிகம் பிரயோசனமற்றவை. என்னால் ஆர்வப்படக்கூடிய ஒரு பிரதியையும் அவர் எழுதவில்லை. இதுவரை.



 காய்கறி பட்டியல் போல , பட்டியலிட்டு செல்வதெல்லாம் கவிதையா... அவர் கவிதைகளில் ஒரு ஃபீல் இல்லையே



 கவிதைக்கு ஃபீல் அவசியமில்லை. அது அவசியப்பட்டது ஒரு காலகட்டம். கதையை காவியமாக (கவிதையாக) சொன்னது ஆரம்ப காலம். பின் கவிதையை வரிகளும் உணர்வுகளும் கைப்பற்றின. (நவீன கவிதை) தற்போது கவிதையை கதையாகச் சொல்லுதல் அல்லது நிகழ்த்துதல், ம்..ம்.. வரிகளையும் உணர்வுகளையும் கடந்துவிட்டது. கவிதைச் சம்பவங்களும் அவைகளின் தீராத கதைகளுமே இன்று கவிதையாக பாவிக்கப்படுகிறது. உணர்வை பிரதிபலித்தல் என்ற வேலையை கைவிட்டுவிட்டு.. அதை உருவாக்குதல் என்ற இடத்திற்கு நகர்ந்துவிட்டது. சுருக்கமாகச் சொல்லுவதென்றால், சுழலை பிரதிபலித்தல் என்ற இடத்திலிருந்து, புதிய சுழலை உருவாக்கும் நிலையை அடைந்திருக்கிறது கவிதை. குறித்த ஒரு வேலையை செய்வதாக கவிதையை இனி புரிந்து கொள்ள முடியாது.




 ஹைக்கூவின் அலை தமிழில் ஓய்ந்து விட்டதா, அல்லது அந்த அலை உருவாகவே இல்லையா.. அல்லது அதற்கான தேவையே இல்லையா




 மிக மோசமான வரையறைகளை உடையது ஹைக்கூ. இப்போது அவை அவசியமில்லை. சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், இறுக்கங்கள் போன் எதையும் பின்பற்றச் சொல்லும் எந்த இலக்கிய வடிவங்களும் எதிர்க்கப்பட வேண்டியதே... 



மரபுகளுக்கு உட்பட்டு எழுதப்பட்ட சங்க பாடல்களில் , உன்னத உணர்ச்சிகளை தொட்டு இருக்கிறார்களே. 




 எதிர்க்கப்பட வேண்டியது என்றே சொன்னேன். முற்றாக புறக்கணித்து அழித்தொழித்துவிட வேண்டும் என்பது அதன் விரிவான வடிவமல்ல. அங்கிருந்து நமது பயணம் தொடர்கிறது என்பதை புரிந்துகொள்ள அது உதவும். அவைகூட அந்தக் காலத்தின் முக்கிய விசயம்தான். அதிலிருந்து நமது காலப் பயணம் மாறியிருக்கிறது. அதே நேரம், சங்ககால உணர்வென்பது, அகம் எனினும் புறம் எனினும், ஒரு கூட்டு மனப் புரிதலாகவே அறியப்பட்டது. அதனுாடாக சமூகத்தின் செயல்.பண்பாடு, வாழ்க்கை என அனைவருக்கும் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கவே அது உதவியது. இப்போது, பொது உணர்வை யாரும் கொண்டாடுவதில்லை. குறிப்பான அதன் பங்களிப்பை வைத்துக்கொண்டு, அதை இப்போதுக்குமான மன நிலவரமாக மாற்றி சிந்திப்பதில் உள்ள பிரச்சினையை நீங்கள் உணருவீர்கள் என நினைக்கிறேன். தேவையானால் இது தொடர்பாக விரிவாகப் பேசலாம்.


ஆமா... இதே விஷ்யத்தை நாவல்களுக்கும் பொருத்தி பார்த்து யோசித்து பார்த்தேன் 


சாரு .. தமிழின் மிக ஆற்றலுள்ள கதைவரைஞர். அவர் ஒருவரைத்தான் இதைப் பொருத்திப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. மையமற்ற நாவலான சீரோ டிகிரி தொடும் உச்சத்தை, மரபு ரீதியான ஒரு நாவல் தொட முடியாது..ஆகவேதான் கட்டுபாடுகள் , இறுக்கங்கள் போன்றவை படைப்புகளுக்கு கூடாது என்கிறேன். 

   அதே சமயம் புதிய கட்டுப்பாடுகள் , புதிய விதிகளை ஏற்படுத்தி , அதற்குள் விளையாடி பார்க்கும் முயற்சிகளும் வெளி நாடுகளில் நடக்கின்றன இந்தக் கவிதையைப் படிச்சுப் பாருங்கள்


    கலைக்கப்பட்ட கவிதை
றியாஸ் குரானா
கலைக்கப்பட்ட எனது கவிதைக்குள்
இப்போதுதான் மலர்ந்ததுபோல்
எஞ்சியிருந்த பூவொன்றை,
அதன் தாய்நிலமான மரத்தில்
இணைக்கப்போனபோதுதான்
அந்த அதிர்ச்சி நிகழ்ந்தது
எப்போதோ பூத்து
உதிர்ந்திருக்க வேண்டிய அல்லது
யாராவது பறித்திருக்க வேண்டிய இந்த மலரை,
தனது கிளையில்
இனிப் பூத்துக் காட்சிப்படுத்துவதற்கு
சம்மதிக்க முடியாதென்றது அந்த மரம்.
அது ஏன் என்பதை
பின்வருமாறு விளக்கலாம்.
கற்பனையை இரண்டாகப் பிரித்து
பங்குபோட வேண்டி வந்திருக்கிறது.
நேற்றுச் சந்தித்தவள்தான்
எனினும்,சமபாதி அவளுக்கும் வழங்க வேண்டும்
கற்பனையைப் பிரிக்கும் பொதுச் சுவரை
சொற்களை அடுக்கி கட்டமுடிவெடுத்தேன்
ஒரு பகுதிக்குள்ளிருப்பவருக்கு
மறு பகுதிக்குள்ளிருப்பவரின் நடமாட்டம்
அறியாமலிருக்கும்படி
பொதுச் சுவரின் சொற்களுக்குள்
அடர்த்தியான எல்லையற்று நீளும்
மௌனங்களை நிரப்பினேன்
அவர்களைத் தனித்தனியே
சந்திக்கக்கூடிய வகையில்,
ஒன்றிலிருந்து ஒன்று
முற்றிலும் வேறுபட்ட சூழல்களை
கற்பனையின் இரண்டு பகுதிக்குள்ளும்
மாறி மாறி  உற்பத்தி செய்தேன்
ஒரு கற்பனைக்குள்
அறவே பொருந்தாத,வித்தியாசமான
இருவேறு நிலவியலை கட்டமைப்பதும்,
அதற்காகக் கற்பனை செய்வதும்
பெரும் துயராக மாறத்தொடங்கியது
கற்பனையின் இருபகுதிக்குள்ளும்
தனித்தனியே வசிக்கும் அவர்களுக்கிடையில்,
சமநிலையைக் காப்பாற்ற முடியாது போகுமென
அஞ்சியபோதுதான்
நான் கடைசியாக எழுதிய
மஹா கவிதையைக் கலைத்தேன்
ஆக்குவது கடினம் அழிப்பது இலேசு
என்ற தத்துவம்
கவிதைக்குப் பொருந்தி வரவில்லை
எழுதுவதைவிட கவிதையைக் கலைப்பது
மிக மிகச் சிரமம் என்றறிந்தேன்
கவிதையைக் கலைக்கும்போது
ஏற்பட்ட ஒவ்வொரு தோல்வியின் போதும்
கவிஞனாக இருப்பதைவிட
வாசகராக இருப்பதன் துயரையும்
அசௌகரிகங்களையும் படிக்கத்தொடங்கினேன்.
முழுமையாக கற்பனை இருந்தபோது
எழுதப்பட்ட கவிதையை,
இரண்டாகப் பிரிக்கப்பட்ட
கற்பனைச் செயல்முறைகளால்
எப்படிக் கலைப்பதென்று புரியவில்லை
சொற்களை ஓரளவு கலைக்க முடிந்தது
தலைப்பைக் கலைத்துப் போடப்போட
வேறொரு தலைப்பாக மாறி,
முடிவற்ற அச்சுறுத்தலாக மாறியது
பெரும் யுத்தமொன்றில்
சிதைந்துபோன நகரமொன்றின்
இடிபாடுகளைப்போல
கற்பனை காட்சியளிக்கத் தொடங்கியது
அந்த இடிபாடுகளுக்கிடையிலும்,
சில கவிதைச் சம்பவங்கள்
ஆங்காங்கே மீதமாய்க் கிடந்தன
திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தை எதிர்பாராத,
கற்பனையின் இரு பகுதிக்குள்ளும்
குடியிருந்த அவர்கள் இருவரும்
மிரண்டுபோய் வெளியேறினர்
அவர்கள் போனால் என்ன
கலைக்கப்பட்ட கவிதைக்குள்ளிருந்த
அழகிய மலரையாவது
காப்பாற்றிவிடலாமென்று விரும்பினேன்.





. ஒரு நாவலுக்கான பல அம்சங்களை நான் இந்தக் கவிதைச் சம்பவங்களுக்குள் கொண்டு வந்திருப்பேன். 



புதிய கட்டுப்பாடு என்பது ஒரு நிபந்தனையல்ல. அது புனைவுத்திகளால் ஆனது. புனைவை கட்டுப்படுத்தும் விதிகளால் ஆனது அல்ல. புனைவுத்திகளின் பெருக்கமே.. அதன் மீள் பயன்படே அது , ஒரு வரைவிலக்கணம் போல் தோன்ற காரணமாகிறதே ஒழிய... அது கட்டுப்பாடு அல்ல. குறித்த பிரதிக்கென உருவாக்கும் ஒருவகை புனைவுத்தி மிக தரப்படுத்தப்பட்ட எல்லைகைளைக் கொண்டு இயங்குபவை. அது கட்டுப்பாடு அல்ல. அந்தப் பிரதிக்கான புனைவு உத்தி அவ்வளவே. எக்ஸைல் பாருங்க. பின் நவீனத்துவம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கே வரையறைகள் இருக்கின்றவே ?< பிறவற்றிலிருந்து எப்படி பி.ந வேறுபடுகிறது என்பதைக் கொண்டே அதன் வரையறையை உருவாக்குகிறார்கள்... அது வரையறையல்ல. இப்படிச் சொல்லலாம்.. பின்நவீன கவிதை,நாவல்,சிறுகதை ஏன் பிரதி என்றுகூட ஏதும் இல்லை. பின் நவீன வாசிப்பு என்றே இருக்கிறது. இதுவும் பலவகையான வாசிப்புமுறைமைகளைக் கொண்டது.



 பின் நவீனத்துவ அலை , நாவல்களில் காண்ப்படுவதை போல , மற்ற துறைகளில் காணக்கிடைக்கவில்லை என்ற பார்வை குறித்து


என்ன சொல்கிறீர்கள் பின் நவீன வாசிப்பறிகு ஏதுவாக சினிமா மற்றும் கவிதைகள் எல்ாம் இன்று இருக்கின்றன. இலக்கிய வடிவங்களில் முதலில் மாற்றத்திற்கு உள்ளானது நாவல் என்பதாலே அப்படிச் சொல்கிறார்கள். 

சினிமாவில் பின் நவீனத்துவமா ? !!!?? 


 . பின் நவீன வாசிப்பிற்கு இடந்தரும் அதிக சினிமாக்கள் (தமிழ் அல்ல) இருக்கின்றன. கருத்து ரீதியாக,திரை செயல் ரீதியாக எனப்பல....

 தமிழில் சொல்கிறீர்களோ என நினைத்து சற்று குழம்பி விட்டேன்


 ஹா...ஹா... அப்படியான நகைச்சுவையை இந்த நேரம் கண்விழித்து பேச வேண்டுமா. 

தமிழ் நாட்டு எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார் ? 



  சாரு நிவேதிதா.  அவர் பெரிய ஆள். தமிழில் எனக்கு அதிகம் ஆர்வமூட்டுவதும், அதிகம் பிடிக்காததும் அவரைத்தான். அவருடைய பிரதிகள் குறித்து விரிவாக பேசனும் என்று எண்ணமுள்ளது.. அவருக்கு கண்டிப்பாக  புக்கர் பரிசு கிடைக்கும் என நம்புகிறேன்.

எப்படி சொல்கிறீர்கள் ? 


அவருடைய பிரதிகளும், பிரதிச் செயலும் தமிழில் இருப்பதால்தான் கவனிக்கப்படவில்லை. ம்ம்ம் விரிந்த வாசிப்புள்ளதும், மனம் விரிவுள்ள எந்த ஒருவரும் எனது கருத்தையே சொல்லுவர். எனது வாசிப்புத்தான் இந்த முடிவை எடுக்க உதவியது. எனது வாசிப்பின் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. விருது கிடைத்தபிறகு நீங்கள் என்னிடம் நினைவு படுத்துவீர்கள்.

கட்டுரை , சிறுகதை , நாவல் , கவிதை என பல தளங்களில் அவர் இயங்ககூடியவர். அதில் உங்களுக்கு பிடித்தது எது ? 



ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இயங்குவது.... தனியாக ஒரு பிரதியல்ல அவரின் நாவல். பல உள்ளலகுகளை தனக்குள் உட்செரித்து வைத்திருக்கும் ஒன்று... இலக்கியம் என இதுவரை நம்பப்படுகிற மற்றும் அப்படி நம்பாத பல அம்சங்களை தனக்குள் கொண்டு கதையாடுகிற பிரதி. 
நாவலை எப்படி வாசிக்க வேண்டும், எந்த வழிகளால் புரிந்துகொள்ள வேண்டுமென்று இதுவரை வாசிக்கப்பட்டதோ அவைகளை நிராகரிக்கிற பிரதி. அதனால்தான், சாருவின் பிரதியை வாசிப்பதற்கு அதிக தயக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

 அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்...இன்னொரு புறம் போற்றப்படுகிறார்... இந்த நிலைக்கு காரணம் என்ன என நினைக்கிறீர்கள்?

கண்டுபிடிப்பதினுாடாக நாம் எதையும் சாதித்துவிடவும் முடியாது. அதே நேரம் காரணங்களின் மீது அக்கறை கொள்ளுவது இன்றைய இலக்கிய நிலவரத்திற்கு தேவையான ஒன்றுமல்ல. 



  அவர் எழுத்தில் காமம் அதிகம் இருப்பதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்களே...அது குறித்து என்ன் சொல்கிறீர்கள் 


காரணம் புரியவில்லை. காரணத்தை காமம் என்பது ஒரு பண்டையச் செயல். அது இருக்கிறது. அதை எதிர்பதாகவும் கொண்டாடுவதாகவும் நாமிருக்கிறோம். நம்மிடம் காமத்தை வைத்திருப்பவர்கள் பிரதியில் வரும்போது மட்டும் வெறுப்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. பல வழிமுறைகளால் காமத்தை செயலாககவும், சிந்தனையாகவும், கற்பனையாகவும், அறமாகவும், அறத்திற்கு எதிரானதாகவும் பயன்படுத்துகிறார்கள். காமத்தை கையாளும் வழிமுறைகளும் அளவுகளும் வேறாக இருக்கலாம். ஆனால். அது ஒரு செயல். சாரு அதில் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. அவருடைய பிரதியின் மனிதர்களும், அவர்கள் உருவாக்கும் பிரதிச் சம்பவங்களும் காமத்தின் மீது அக்கறைகொள்கிறது. அதனுாடாக பார்வையாளர்களை கலங்கடிக்கிறார் தங்களையே தங்களது செயலையே ஏற்றுக்கொள்ள முடியாத பார்வையாளர்களை நமக்கு அவரின் பிதியினுாடாக கண்டுபிடித்து தருகிறார்




6 comments:

  1. 1. காப்பி அடிப்பவர், எழுத்தை வைத்து மிக மோசமான அரசியலை செய்பவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழிலிருக்கும் மிகக் கவர்ச்சிகரமான, உலகத்தரத்திலான கதைசொல்லி சாரு நிNவேதிதாதான். உலகத்தரத்தில் பலருடைய கதைகள் இருந்தாலும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற கவர்ச்சி தமிழில் வேறு யாரிடமும் இல்லை. இது நிரந்தரமான ஒரு கருத்து அல்ல. வாசிப்பு விரிவுபடும்போது மதிப்பீடுகளும் மாற்றமடைகின்றன.

    2.கவரச்சிகரமான எழுத்து - நீண்ட நேரம் ஒரே வகையான சூழலுக்கள் பார்வையாளரை வைத்திருப்பதில்லை. பலவகையான பொருட்கள் உள்ள ஒரு வியாபார நிலையத்தைப்போல, இங்குமங்குமாக பலவகையான பொருட்களை பரப்பி வைத்திருப்பவை. எல்லா வகையான பார்வையாளர் களுக்குமான சாமான்கள் அங்கு கிடைக்கும்.மிக மோசமானது எனக் கருதப்படுபவைகள் தொடங்கி உயர்தரமானவைகள் என கருதப்படுபவைவரை அங்குண்டு. ஒரே இடத்தில் எல்லாம் பார்வைக்குண்டு. பன்மையான பார்வையாளர்களை அங்கு சந்திக்க செய்யும். விதம் விதமான பார்வையாளர்களை ஒரே இடத்தில் கூட்டிவிடக்கூடிய பிரதி என்பதால் அப்படிச்சொன்னேன். சாருவின் பிரதியைக் கையிலெடுக்கும் ஒருவர் அதை தூக்கிவீசிவிட முடியாது.ஏனெனில், அவர் எதிர்பார்ப்பவைகளும் சிறிதளவிலேனும் அங்கு கிடைக்கும். இது தமிழில் வேறு எந்த எழுத்தாளர்களின் பிரதியிலும் இல்லை. அது ராய் இசைபோல ஒரு கலப்பினம்.

    3.உலகத்தரம் - எந்த வகையான கோட்பாட்டு வாசிப்புக்களுக்கும் இடந்தருபவை.கோட்பாடுகளுக்கு அப்பாலும் லைற்றீடிங்குக்கும் இடந்தருபவை. சாருவின் பிரதிகளை வாசிக்கும்போது, எப்போதோ வாசித்த பல கோட்பாடுகள், ரசனை மதிப்பீடகள், சாதாரண செய்திபற்றிய கருத்து நிலைகள் என பலவற்றை மீண்டும் நமக்குள் கிளர்த்துகின்றன. இப்படியான காரணங்களால் அது உலகத்தரமானது என்றும் கூறினேன். உலகத்தரமென்று ஒன்று தனிப்படையான வரையறைகளுக்குள் இல்லை என்று புரிந்திருக்கின்ற நிலையிலே - உலகத்தரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்.

    4.சூப்பர் மாக்கெட்டில் சாமான்கள் பரப்புவதைப்போன்ற அம்சம் மற்றவர்களிடம் இல்லை என்றுதான் சொன்னேன்.மற்றவர்களின் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிக மலிவான பொருட்களைக் கொண்டும் பெறுமதிமிக்க ஒன்றை உருவாக்க முடியும் என்பதையே சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் பார்க்கிறேன்.அதுவே கவர்ச்சிகரமானதாக எனக்கு தோன்றுகிறது.

    5.பெறுமதி - பிரதியை உருவாக்கும் பணியில் வாசகனின் பங்களிப்பை ஏற்பவன் என்ற வகையில், பலவகைப்பட்ட வாசகர்களின் இருப்பையும் ஏற்பவன்.அது அவசியமென்றும் கருதுபவன்.ஆக, பிரதியை அர்த்தப்படுத்தும் வழிகளில் அனைத்து வகை பார்வையாளர்களும் பங்காற்றக்கூடிய இடத்தை தன்னகத்தில் கொண்டிருக்கும் கதைகளாகவே சாருவின் நாவல்களைப் பார்க்கிறேன்.அதுவே அதற்கான பெறுமதி என்றும் கருதுகிறேன்.மற்றப்படி, அகவிரிவாக்கதில் சுயவிமர்சனத்தை தவறவிடும் தருணங்கள் போன்ற உங்கள் ஏனைய விமர்சனங்கள் எனக்கு உடன்பாடனவைதான். அதை நான் எனது நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.

    6.

    ReplyDelete
  2. அருமையான நேர்காணல்.. சாருவின் புத்தகங்களை படித்து விட்டு, `அப்பாடா முடிந்ததே’ என்று நினைத்து தூக்கிப்போடவே முடியாது. என்னிடம் ஒருவர் (பல்கலைக்கழக மாணவர்) இனாமாக வாங்கிச்சென்ற அவரின் புத்தகத்தை..இன்னமும் திருப்பிக்கொடுக்காமல், `வாசித்து விட்டேன், ஆனாலும், இருங்கக்கா தரேன்.. இன்னொரு முறை வாசிக்கவேண்டும், குழப்பமாக இருக்கிறது..’ என்று அலுத்துக்கொள்கிறார். இதுதான் சாரு எழுத்தின் மகிமை. வாச்கர்களின் நிலையிலேயே சாருவின் எழுத்து புரிந்துக்கொள்ளப்படுவதால், சில வாசகர்களுக்குக் குழப்பம் வரலாம், காரணம் அவரவர் நிலை அவரவருக்கே புரிவதில்லை.. அதுதான் பிரச்சனை. இதைப்புரிந்துகொள்ளாமல் சாருவின் எழுத்தில் கோளாறு என்று சொல்லி நிராகரிக்கின்றார்கள்.
    வாழ்த்துகள் பிச்சைக்காரன். தொடருங்கள் இதுபோன்ற சுவாரஸ்ய எழுத்துக்களை.

    ReplyDelete
  3. றியாஸ் குரானா - அவருக்கு கண்டிப்பாக புக்கர் பரிசு கிடைக்கும் என "நம்புகிறேன்."
    பிச்சைகார பரதேசி தலைப்பாக போட்டது - "சாரு கண்டிப்பாக புக்கர் பரிசு பெறுவார்- கவிஞர் றியாஸ் குரானா "திட்டவட்டம்"

    இந்த இரண்டு STATEMENT க்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்.
    அடே பிச்சைகார பரதேசி உன் அலப்பறைக்கு அளவே இல்லையா! உன்னையெல்லாம் பெத்தாங்களா அல்லது .....................................

    ReplyDelete
  4. ரியாஸ் றியாஸ் குரானா புக்கர் பரிசு கமிட்டில உறுப்பினரா இருக்கிறதா யாரும் குழம்ப வேண்டாம், அவர் பெக்கர் பரிசு கமிட்டில உறுப்பினரா இருக்கிறார்.

    ReplyDelete
  5. பிச்சை , நல்ல பதிவு. சாருவின் படைப்புகளை பற்றி நல்ல மதிப்புரை. றியாசுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  6. Honesty in reporting is very important than your writing. otherwise you will defame Charu.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா