Thursday, April 30, 2020

ராமன் என்ற தன்மை ..ஜெயமோகன் சிறுகதை பார்வை


 சிறுகதைகளில் தன்னிலையில் கதை சொல்லும் யுக்தியில் பலவகைகள் உண்டு
அனைத்து கதாபாத்திரஙகளையும் சற்றே விலகல் தன்மையுடன் கவனிக்கும் கதை சொல்லி , முக்கிய கதாபாத்திரமாக கதை சொல்லியே இருப்பது என பல விதங்கள் உண்டு

ஜெயமோகனின் பிடி சிறுகதை முதலில் , கர்நாடக இசை கலைஞரான மதுரை ராமையா என்ற மேதை குறித்தான கதை என தோன்றியது. மறு வாசித்தலில்தான் அது கதை சொல்லியான அனந்தன் என்ற சிறுவனின் தரிசனம்தான் கதை என்பது புலப்பட்டது
அந்த அளவுக்கு அனந்தனின் பாத்திரப்படைப்பு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது

ராமன் என்ற கேரக்டர் ஒரு புராண கதை மாந்தராகவோ , தெய்வமாகவோ , மனிதனாகவோ அல்லாமல் அன்பு, கருணை , இடைவிடா போராட்டம் ஆகியவற்றின் குறியீடாக வருகிறது


  ஆனந்தன் அரைத்த தோசைமாவை திரும்ப வாங்க போவதில் கதை ஆரம்பிக்கிறது.

ஊரின் விழாச்சூழல் , அவனது குணாதிசயம் போன்றவை சில வரிகளில் நிறுவப்பட்டு விடுகின்றன.

மாவு அரைக்கும் வீட்டில் முடங்கிகிடக்கும் பெரியவர் , அன்றைய கச்சேரியில் பாடவிருக்கும் மதுரை ராமையாவை திட்டுகிறார். இவனுக்கு இசையும் தெரியாது , ராமையாவையும் தெரியாது என்பதால் வெறுமனே கேட்டுக் கொள்கிறான்

மாவை அரைத்து கொடுக்கும் பானுமதி அநாக்கா ,பத்திரமாக மாவை கொண்டு செல்லும்படி உரிமையுடன் அதட்டுகிறாள். மதுரை ராமு பாடலை கண்டிப்பாக கேட்கும்படி சொல்கிறாள்

வீட்டுக்கு வருகிறான். பாட்டு கேட்க போகிறேன் என்கிறான். அவன் அக்கா அதெல்லாம் நமக்கு புரியாதுடா. நல்லா இருக்காது என்கிறாள். இவனுக்கும் இசை தெரியாதென்றாலும் வீம்புக்காக பிடிவாதம் பிடிக்கிறான். அவள் அவனுக்கு தோசை ஊற்றி சாப்பிட வைத்து , செலவுக்கு காசு கொடுத்து அனுப்புகிறாள்

குடும்பம் சார்ந்த நெருக்கடிகள் இல்லாத, அம்மா சாயல் கொண்ட அன்பை பெறும் ஆரோக்கியமான சூழலில் அவன் இருக்கிறான் , அவனும் அதற்கேற்ப நடந்து கொள்கிறான் என்பது உணர்த்த்ப்படுகிறது

கச்சேரியில் ராமையா பாடுவது ஏதோ சண்டை போடுவதுபோல தோன்றுகிறது. அவர் பாடுவது புரியவில்லை. இதையா பாடல் என்கிறாரகள் என திகைக்கிறான்.

அப்படியே கண்ணயர்ந்து விடுகிறான். ராமர் குறித்து அவர் பாடும் பாடல் புரியாவிட்டாலும் இனம்புரியாத உணர்வுபூர்வமான புரிதல் அவனுள் நிகழ்கிறது. ( பிற்பாடு பாடல் வரிகளின் அர்த்தம் பேச்சு வாக்கில் புரிகிறது..)


அடுத்த நாள் காலை அவர் சிறுவர்கள் புடைசூழ உடற்பயிற்சி செய்ய காண்கிறான். உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக , குஸ்தியின் பொருட்டு ஒருவரிடம் அழைத்துச் செல்கிறான். போகும் வழியெங்கும் அவரை வியந்து பேசுகிறார்கள். பிச்சைக்காரன் உட்பட அனைவரையும் மதித்துப் பேசுகிறார். பாடிக்காட்டுகிறார்

குஸ்தி பயில்வானுடன் மோதும்போதுதான் நிறைவு அடைகிறார்

கடைசியில் கதை ஆரம்பித்த மாவரைக்கும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.  பாடலை கேட்கச் சொன்ன அக்கா , அந்த கச்சேரிக்கு வர முடியவில்லை. இவன் புண்ணியத்தில் அந்த பாடகரே வீடு தேடி வந்து அவளுக்குப் பிடித்த பாடலை பாடுகிறார்;

உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் என அந்த வீட்டு பெரியவரிடம் கேட்க, எனக்கா என கேட்டு அவர் அழத் தொடங்குகிறார்

இங்கே கதை முடிகிறது

 அந்த பாடகருக்கோ , அந்த பெரியவருக்கோ பொதுவான இணைப்பு அம்சங்கள் இல்லை.
ஆனால் ஆனந்தன் பார்வையில் இணைப்பு அம்சம் உண்டு

  ஏழையாகிய என்னைத் தேடி வந்தாயோ ராமா என்ற பாடலை அவன் தன் வாழ்வில் முதல்முறையாக முதல்நாள்தான் கேட்டிருக்கிறான்.
முடங்கிக் கிடக்கும் பெரியவர் , இசை மேதையை திட்டியவர் , அவரே வீடு தேடி வந்து என்ன பாட்டு வேண்டும் என கேட்டால் எப்படி உணர்வார் என ஆனந்தனுக்கு மட்டுமே தெரியும். அவனால்தான் உணரமுடியும்.

என்னை தேடி வந்தாயோ ராமா என மனமுருக கேட்ட தியாகராஜர் உணர்வை,பெரியவரும் பெற்றிருப்பார்

அவன் பாரத்தவரை முழுக்க முழுக்க அன்பை மட்டுமே பரப்பிவருகிறார் ராமையா. அந்த அன்பு மட்டும் ராமன் அல்ல.  தன்னை திட்டியவரையும் அரவணைக்கும் தன்மை மட்டும் ராமனல்ல

தனக்கு நிகரான சவாலை ஒவ்வொரு கணமும் தேடிச் செல்லும் அந்த தன்மையும்தான் ராமன் என்பதும் ராமனின் தன்மையை ராமையா அடைந்ததுபோல ஆனந்தன் அடைவதற்கும் சாத்தியம் உண்டு என்பதற்கான குறிப்புகளும் கதையின் சாரம் என நினைக்கிறேன்

தனக்கு இசை அனுபவம் தந்த அக்காவுக்கு ஒரு நல்ல அனுபவம் தர வேண்டும் என்ற ஆசை , சிறுவன் என்றாலும் டீக்காசை தான் தர வேண்டும் என்ற எண்ணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை

பிடி சிறுகதை..  பிடித்த சிறுகதை




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா