Tuesday, October 15, 2013

இயக்குனருக்கு சவால் விட்டு ஜெயகாந்தன் தானே இயக்கிய படம் - இமயங்களின் மோதல்

ஜெயகாந்தனின் எழுத்துகளைப்போல அவர் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது. எழுத்தாளாரான அவர் சினிமாவிலும் இறங்கியது அப்படி ஒரு சுவையான நிகழ்வுதான்.

அப்போது அவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். சோவியத் யூனியன் ஆதரவாளராகவும் இருந்தார். திமுகவினரை எதிர்த்து பேசுவது அவரது முக்கியப்பணியாக இருந்தது.. திமுகவினர் சினிமாவை முக்கிய பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துவதை பார்த்த கம்யூனிஸ்ட் தோழர்கள் , அதற்கு மாற்றாக நல்ல சினிமாவை வழங்கி சினிமா எனும் ஊடகத்தை கைப்பற்ற வேண்டும் என நினைத்தார்கள். அவர்கள் முயற்சியால்தான் ஜெயகாந்தன் சினிமாவுக்கு வந்தார்.

அவரது இயக்கத்தில் வந்த முதல் படமான உன்னைப்போல ஒருவன்  அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. இந்த பின்னணியில் அவரது யாருக்காக அழுதான்  நாவலை படமாக்க பலரும் விரும்பினர். அதில் முக்கியமானவர் சந்திர பாபு. ஆனால் சந்திரபாபு தன்னை டாமினேட் செய்வதாக நினைத்த ஜெகே அவருக்கு படம் தயாரிக்கும் உரிமையை தரவில்லை.

பாலும் பழமும் போன்ற வெற்றிப்படங்களை எடுத்த வேலுமணிக்கு படம் தயாரிக்கும் உரிமையை கொடுத்தார். அந்த படத்துக்கு இயக்குனர் ஸ்ரீதர்.
அப்போதைய ஸ்டார்கள் சிவாஜி , சாவித்ரி , ரங்காராவ் என அட்டகாசமான டீம் அமைந்து இருந்தது.. படம் மளமளவென வளர்ந்து வந்தது..அப்போதுதான் விதி விளையாடியது.

வழியில் போகும் தச்சரைகூப்பிட்டு , தனக்கு ஓர் ஆப்பு அடித்து விட்டு போகசொல்வது போல , ஜெயகாந்தனை அழைத்து , தான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் திரைக்கதையை சொன்னார் ஸ்ரீதர்.

சிவாஜி ஓர் அனாதை ,,, லாட்ஜில் வேலை செய்கிறார்.. தன் முதலாளி பாலையாவுக்கு விசுவாசமாக இருக்கிறார். .. பாலையாவும் அன்பாக இருக்கிறார்..அங்கு தங்கி இருக்கும் ரங்காராவ் சிவாஜி மீது அன்பாக இருக்கிறார்.. இனிமையான பாடல் எல்லாம் பாடுகிறார்கள்.. அங்கே சாவித்ரியும் ஓர் ஆணும் தங்க வருகிறார்கள்..டூயட் எல்லாம் பாடுகிறார்கள்.. அவன் சந்தர்ப்ப சூழ் நிலையால் சாவித்ரியை பிரிந்து செல்கிறான்.

சிவாஜிக்கு இதை எல்லாம் ஃப்லாஷ் பேக்காக சொல்கிறார். சிவாஜியும் தன் கதையை சொல்கிறார். ஊரில் அவரை வளர்த்த பாதிரியார். சிவாஜியின் காதல்... ஒரு டூயட்...காதல் தோல்வி.. ஒரு சோகப்பாடல் என சொல்லி முடிக்கிறார்...
சிவாஜியை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் அவமானப்படுத்த , சாவித்ரி மட்டும் அன்பாக இருக்கிறார்.

இந்த நிலையில் சிவாஜி மீது , அவர் செய்யாத தவறுக்கு பழி சுமத்தப்படுகிறது... அடி உதை என எல்லாவற்றையும் தாங்குகிறார்.. ஆனால் வருந்தவில்லை.. ஆனால் ஒரு கட்டத்தில் சாவித்ரியும் சேர்த்து பழி சுமத்தப்பட்டு அவமானத்துடன் ஊரை விட்டு செல்லவே, சிவாஜி ஒரு சோகப்பாட்டு பாடி , உயிர் துறக்கிறார்.

எப்பூடி என பெருமையாக ஜெகேயை பார்த்தார் ஸ்ரீதர்...
என் கதையையே மாற்றி விட்டீர்களே... டைட்டிலையும் மாற்றி விடுங்கள்.. யாருக்காக செத்தான் என மாற்றுங்கள் என கோபமாக சொல்ல ஸ்ரீதர் திகைத்தார்.. ஜெயகாந்தன் இப்படி வழக்கமான ஃபார்மேட்டில் தன் கதை படமாவதை விரும்பவில்லை.. ஆனால் அப்படி எடுத்தால்தான் ஓடும் என்பது ஸ்ரீதர் கருத்து.. இந்த கருத்து வேறுபாடு முற்றி கடைசியில் படம் கைவிடப்பட்டது... இருவரும் அவரவர் துறையில் இமயங்கள்.. ஆனால் ( அதனால் ) ஒத்துபோக முடியவில்லை.
அந்த படம் வெளியாகி இருந்தால் , பாசமலரை மிஞ்சும் வகையில் ஹிட் ஆகி இருக்கும்.. சிவாஜிக்கு முக்கியமான படமாக இருந்திருக்கும்.

எ ந்த இயக்குனரும் வேண்டாம்,



என் கதையை நானே எடுக்கிறேன் என சவால் விட்டு ஜெகேயே படத்தை பின்பு எடுத்தார்..
 நாகேஷ் , கே ஆர் விஜயா , பாலையா , சகஸ்ர நாமம் நடித்தனர். கண்ணதாசன் பாடல் எழுதினார்.. சவால் படம் என்பதால் அந்த காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது..

அதே எதிர்பார்ப்புடன் நானும் இன்று அந்த படம் பார்த்தேன்...தமிழ் ஸ்டுடியோ திரையிடலில்.

படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

******************************************************

ஜெயகாந்தன் தன் படம் காட்சிபூர்வமாக இருக்க வேண்டும்  என நினைத்ததால்தான் ஸ்ரீதருடன் பிணக்கு ஏற்பட்டது என்பது கொஞ்ச நேரத்திலேயே தெரிந்தது.. பாடல்கள் , டூயட்டுகள் இல்லாத யதார்த்தவாத பாணி படமாக எடுப்பது அவர் கனவாக இருந்து இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடல் இருந்தாலும் அது பின்னணி பாடலாக வருகிறதே தவிர யாரும் பாடுவதாக வரவில்லை.

ஃப்ளாஷ் பேக் , பழைய காதல் சம்பவங்கள் என்றெல்லாம் செல்லாமல் சொல்ல வேண்டியதை சுருக்கமாக நேரடியாக ஆங்கிலப்படம் போல சொல்லி இருக்கிறார்.


கே ஆர் விஜயா , நாகேஷ் ஆகியோரின் ப்ழைய கதைகள் சில காட்சிகளில் வலுவாக சொல்லப்பட்டு விடுகின்றன.


அவர்கள் மட்டும் அல்ல... லாட்ஜ் ஓனர், சமையல்காரர் , சூதாடி . சேட்டு , ஜோசியக்காரர் என ஒவ்வொருவர் பற்றியும் நமக்கு நன்கு தெரிந்து விடுகிறது , வலுவான காட்சிகள் மூலம்.

ஒவ்வொரு கேரக்டரையும் பற்றி சொல்வதற்கே ஆரம்பத்தில் பெரும்பாலான நேரம் செலவிடப்படுகிறது.. வணிகப்படங்களில் ஆரம்பத்திலேயே கதையை ஆரம்பித்து ரசிகனை ஈர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. இதில் பொறுமையாக கதை ஆரம்பிக்கிறது. ஆனால் க்தை ஆரம்பித்தவுடம் நம்மால் ஒன்ற முடிகிறது.

கெட்டது செய்யக்கூடாது என்றால் , கெட்டது என்றால் என்ன என்று கேட்பவன் ஜோசப் ... அந்த அளவுக்கு கெட்டது என்றால் என்ன என்றே தெரியாதவன்.


அனைவரிடம் அன்பாக இருப்பவன்.. திட்டினாலும் , அவமானப்படுத்தினாலும் அழ வேண்டும் என்பது கூட தெரியாதவன். லாட்ஜ் ஒன்றில் வேலை செய்து , கஷ்டப்பட்டு பணம் சேர்க்கிறான்.. அங்கு தங்கி இருக்கும் ஒரு பெண் அவன் மீது பரிவுடன் இருக்கிறாள்..



ஒரு நாள் அங்கு தங்க வரும் சேட் குடிபோதையில் பர்சை தவற விடுகிறான்..




அது ஓனர் கைக்கு வருகிறது... அதை அவர் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து கொள்கிறார்.




மறு நாள் பர்சைத்தேடும் சேட்டு , ஜோசப் மீது பழி போடுகிறான்.. எல்லோரும் அவனை சந்தேகிக்கிறார்கள்... பர்ஸ் ஓனரிடம் இருப்பது தெரிந்தும் ஜோசப் அமைதி காக்கிறான்..அவனை அடித்து துன்புறுத்துகிறார்கள்.. அவன் சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை பிடுங்கி கொள்கிறார்கள்... உதவ வரும் அந்த பெண்ணையும் சந்தேகிக்கிறார்கள்...

ஊருக்கு சென்று இருந்த சமையல்கார் திரும்ப வருகிறார்.. அவர் முயற்சியால் பர்ஸ் சேட்டுக்கு கிடைக்கிறது.. அப்போதும் முதலாளி வாய் திறக்கவில்லை.. இத்தனைக்கும் அவர் பெரிய பக்திமான்...

பெரிய மனிதனிடம் இருக்கும் சின்னத்தனம்,. கூட இருப்பவர்களே குழி பறிக்கும் அவலம், உதவ நினைப்பவர்களுக்கு கிடைக்கும் அவமானம் , அப்பாவிகளின் கையாலாகத நிலை என்பதெல்லாம் ஜோசப்புக்கு அப்போதுதான் உறைக்கிறது...

அதுவரை அழுதறியாத அவன் வாய் விட்டு கதறுகிறான் என்பதுடன் படம் முடிகிறது.

எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் கூட்டத்திலும் ஒரு நல்லவன் இருப்பான் ( ஷிண்டலர் லிஸ்ட் நினைவு இருக்கிறதா ) என்பது போன்ற அழுத்தமான பாத்திரபடைப்பு ( சமையல்காரர் ) , பொம்மை காட்சி , தன்னை நல்லவன் என நினைத்து கொண்டு - ஆனால் கெட்டது செய்யும் லாட்ஜ் ஓனரின் குற்ற உணர்வு , ஆதரவற்ற நிலையில் தான் இருந்த போதும்  ஜோசப் மீது பரிவு காட்டும் பெண் , போட்டு வாங்கும் யுக்தி மூலம் இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக்க முயலும் ஜோதிடர் என பலவற்றை ரசிக்க முடிகிறது..

படத்தை டிரை ஆக செல்லாமல் பல சுவாரஸ்யமாக காட்சிகள் காப்பாற்றுகின்றன. உதாரணமாக , அந்த பெண் தன் நகைகளை விற்க தன்னுடன் துணைக்கு வருமாறு ஜோசப்பை கூப்பிட்டு இருப்பாள்.. இந்த காட்சி கேஷுவலாக வரும். முக்கியத்துவம் ஏதும் இல்லாத காட்சி போல தோன்றும்...

அதன் பின் ஜோசப்புக்கு திருட்டுப்பட்டம் கிடைத்தவுடன்.அந்த காட்சி அழுத்தம் பெற்று விடும்.. அந்த காட்சியின் தொடர்ச்சியாக , இப்போது நகையை விற்க முயன்றால் , அந்த பெண்ணும் சந்தேக வளையத்தில் சிக்கி விடுவாளோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்தவே அந்த காட்சி...

இப்படி வசனங்கள் , பாடல்கள் இல்லாமலேயே உணர்வு பூர்வமாக படம் எடுத்த ஜெயகாந்தனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால் அன்றைய ரசிகர்களுக்கு அவ்வளவாக படம் பிடிக்கவில்லை.. வசூல் ரீதியாக தோல்விதான்.

ஆனால் விஷ்யம் தெரிந்தவர்கள் அன்றே பாராட்டி இருக்கிறார்கள்..இன்றும் படத்தை பார்க்கும்படி இருக்கிறது..
பாலையா, நாகேஷின் நடிப்பு , கே ஆர் விஜ்யாவின் அழகு , கண்ணதாசனின் பாடல் போன்றவற்றை என்றும் ரசிக்கலாம்.
ஒரு வேளை வேறு இயக்குனர் இயக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்க கூடும்..

ஆனால் ஸ்ரீதர் இயக்கி வணிகப்படமாகி அடையும் வெற்றியை விட , இப்படி ஒரு முயற்சியில் ஜெகே அடைந்த தோல்வி ஒருவகையில் வெற்றிதான்..

முயலை குறி வைத்து அடித்து வீழ்த்தும் அம்பை விட , யானை மீது எய்து , குறிதப்பிய அம்பை ஏந்துவது இனிமை அல்லவா..

யாருக்காக அழுதான்? - யார் வேண்டுமானாலும் ரசிக்கத்தக்க படம் 
*************************************************
பின் குறிப்பு

படம் முடிந்ததும் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.. இத்தனை ஆண்டுகள் கழித்தும் கிடைக்கும் கைதட்டலை விட வேறு என்ன விருதை நாகேஷ் எனும் அந்த  மகா கலைஞனுக்கு வழங்கி விட முடியும்..








2 comments:

  1. 'யாருக்காக அழுதான்' - அது வெளிவந்த காலத்தில் மிகுந்த கருத்துப்புரட்சியை உண்டாக்கிய படம். அதைத் தியேட்டர்களில் வெளியிடவே ஜெயகாந்தனுக்கு விருப்பம் இல்லை. சிறு சிறு ரசிகர் குழுக்கள் மூலமே திரையிட விரும்பினார். இன்று கமல்ஹாசனே விரும்பியும் கூட, DTH மூலம் விஸ்வரூபம் வரமுடியாதது போல், அன்று ஜெயகாந்தனின் வணிகநோக்கமற்ற விருப்பம் நிறைவேறவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயருக்காகப் பார்க்க முடிந்ததே தவிர, படமாக்கப்பட்ட முறையில் பல குறைபாடுகள் இருந்தன என்பதை மறைக்க வேண்டியதில்லை. - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    ReplyDelete
  2. யதேச்சையாக இந்தப்படத்தின் சில காட்சிகளை டீவியில் பார்த்து ஒரு ஆர்வத்தில் தேடி இந்த தளத்தினை வாசித்தேன். அபூர்வமான படம், தகவல்களுக்கு நன்றி!

    தனக்குப் பழக்கப்படாத, தெரியாத துறையில் அளவெடுக்காமல் காலடி வைக்க முயன்றதை அறியும்போது - திரு ஜெயகாந்தன் மீதான மரியாதை லேசாக சரிந்தாலும், ஆயிரக்கணக்கான கமெர்ஷியல் டெம்ப்ளேட் படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு படத்தினை இந்நாட்களில் காண்பது ரிலீஃபாகவே உள்ளது. குறைகள்பல இருப்பினும் தனித்துநிற்கும் ஆக்கத்துக்கு பாராட்டுகள்!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா