Monday, October 21, 2013

இன்றும் , என்றும் ரசிக்கத்தக்க அந்த காலத்து த்ரில்லர் !!


சிவாஜி கணேசனின் சாதனைகளைப்பற்றி இனி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனாலும் சிலர் அவ்வப்போது அவரை ஓவர் ஆக்டிங் என சொல்வது ஓர் உறுத்தலாகவே இருந்து வருகிறது.

இன்று என்னைப்போன்ற மக்கு மாணவர்களுக்குக்கூட தெரிந்த விஷயமான சார்பியல் தத்துவம் நியூட்டனுக்கு ஏன் தெரியவில்லை.. அவர் ஏன் அதைப்பற்றி எழுதவில்லை என அவரை குறை சொல்ல இயலுமா..  

அது போல சிலர் இன்றைய தொழில் நுட்பத்தை அளவுகோலாக வைத்து அவரை குறை சொல்கிறார்கள்.. என்னை பொருத்தவரை அந்த கால கட்டத்தில் அவர் மாபெரும் சாதனையாளரே...அவர் நடிப்பை அந்த கால அளவுகோலை வைத்தே பார்க்க வேண்டும்.

இது ஒரு புறம்,... 

இன்னொரு புறத்தில் பார்த்தால் எந்த காலத்திலும் ரசிக்கும்படி சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அதில் முக்கியமான படம் அந்த நாள். பாடல் கிடையாது.. வசனம் குறைவு.இயல்பான இசை...எல்லாவற்றுக்கும் மேலாக அவர் கேரக்டர் சற்று எதிர்மறையானது.

அது சூப்பர் ஹிட் ஆன படம்.. ஆனாலும் அது போன்ற படங்கள் அதற்குபின் வரவில்லை.. சிவாஜியும் அதுபோன்ற இயல்பான நடிப்பை அதன் பின் வழங்கவில்லை... ( முதல் மரியாதை , தேவர் மகன் போன்ற பிற்கால படங்கள் விதி விலக்கு ) 

அந்த படத்தை எடுத்தவர் எஸ் பாலச்சந்தர். வித்தியாசமான படங்களுக்கு பேர்போனவர். பெரிய ஜீனியஸ்.. வெற்றிப்படங்களாக கொடுத்தாலும் , தன் மேதமைக்கு உரிய அங்கீகாரம் சினிமாவில் கிடைக்கவில்லை என நினைத்து , உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி , இசையில் - குறிப்பாக வீணையில் - ஈடுபடலானார்.. வீணை பாலச்சந்தர் என்றே பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

அவரது அந்த நாள் படத்தை முன்பு ஒருமுறை  டீவியில் பார்த்து ரசித்து இருக்கிறேன். ஆனால் அவரது பொம்மை படத்தை ஏனோ டீவியில் ஒளிபரப்புவதில்லை. 
தமிழில் ஆரம்ப கால படங்களின் பிரதிகள் அழிந்தே போய் விட்டன. நமக்கு ஆரம்ப கால வரலாறு இல்லாமலேயே போய் விட்டது.. ஆரம்ப காலத்தை விடுங்கள்.. சற்று பிற்கால படங்களான ஜெயகாந்தனின் படங்களின் பிரதிகள்கூட நமக்கு கிடைக்கவில்லை. தமிழில் நியோரியலிச படமான பாதை தெரியுது பார் படம் எல்லாம் கிடைக்கவே இல்லை...

ஆனால் பொம்மை படத்துக்கு  நல்லவேளையாக அந்த நிலை வரவில்லை. பட பிரதிகள் கிடைக்கின்றன. ஆனால் டீவியில் ஏனோ ஒளிபரப்பாவதில்லை. 
அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற என் கனவு சமீபத்தில்தான் நிறைவேறியது.

படம் பார்த்து அசந்து போனேன்,, ஒரே நாளில் நடக்கும் கதை என்ற கான்செப்ட்டை அந்த காலத்திலேயே செய்து பார்த்து இருக்கிறார்.

முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்து விடுகிறார். ஒரு ஸ்டைலான பணக்கார பெரியவர். சிங்கப்பூருக்கு போகப்போவதாகவும் கம்பெனியை பார்த்து கொள்ளுமாறும் ஊழியர்களிடம் சொல்கிறார். தன் பார்ட்னருக்கு தெரிய வேண்டாம் என்கிறார். சிங்கப்பூருக்கு ஏன் போகிறார் என்பதை சொல்ல மறுக்கிறார்.

இப்படி ஆரம்பமே மிக வித்தியாசமாக இருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் செம விறுவிறுப்பு.  பிரபாகரம் என்ற ஊழியன் என்னவோ ஆராய்ச்சி செய்து தன் கண்டுபிடிப்பை ஒரு பெட்டியில் வைத்து இருக்கிறான். தன் தங்கைக்குகூட காட்டவில்லை.

பார்ட்னருக்கு தன் ஒற்றர்கள்மூலம் அந்த பெரியவர் சிங்கப்பூருக்கு போவது தெரிந்து விட்டது. அந்த பெரியவர் தன்னைப்பற்றிய ரகசியம் ஒன்றை கண்டுபிடிக்கத்தான் சிங்கப்பூர் போகிறார் என்பதும் தெரிந்து விட்டது.

இப்படி அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள்.

வெளி நாடு செல்லும் பெரியவரிடம் வெடிகுண்டு  பொருத்தப்பட்ட பொம்மையை கொடுத்தனுப்பி , சிங்கப்பூரில் அவர் அதில் இருக்கும் முகவரி சீட்டை எடுக்கும்போது வெடிக்கசெய்து , அவரை கொல்ல திட்டமிட்டிருக்கிறார் பார்ட்னர்,,ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தை...

ஆனால் திட்டத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டு பொம்மை கைமாறி சென்று விடுகிறது. வேறு எங்காவது வெடித்து மாட்டிக்கொள்ளக்கூடாதே என அதை தேடுகிறார்கள் என்ற கதையை செம விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் பாலச்சந்தர்.

அடுத்தடுத்த திருப்பங்கள்.. அந்த பொம்மை வெவ்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு கையாக மாறுகிறது.. அந்த ஒவ்வொரு காரணமும் ஒவ்வொரு சிறுகதை.

உதாரணமாக அந்த உயிர்கொல்லி பொம்மை , ஒரு தாயின் உயிரைக்காக்க பயன்படுகிறது என்பது செம இண்டரஸ்டிங்.. இதன் பின் விளைவாக , அந்த பெரியவரின் உயிர் பிறகு காப்பாற்றப் படுகிறது என்பது ஃபைனல் டச்.

அதாவது எந்த காட்சியிம் அந்தரத்தில் தனியாக தொங்கவில்லை. ஒரு காட்சி ஏதோ ஒரு விதத்தில் இன்னொன்றுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.. அந்த அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை.

ஒரு த்ரில்லர் படத்தை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லி இருப்பதே இதன் வெற்றி என்பேன். சில வருடங்கள் முன் பார்த்த நகைச்சுவையை இன்று பார்த்தால் சிரிப்பு வருவதில்லை. இதற்குப்போயா சிரித்தோம் என நினைப்போம். காரணம் அதெல்லாம் அந்தெந்த கால கட்டத்தில் இதுதான் சிரிப்பு என செயற்கையாக ஏற்படுத்தப்படும் ரசனை சார்ந்தவை.. இந்த செயற்கையான ரசனையின் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்களால் அதை சிரிப்பு என நினைக்கவே முடியாது. சமீபத்தில் தமிழ் நாட்டில் பரபரப்பாக ரசிக்கப்பட்ட “ சிரிப்பு” படங்களை தமிழ் சினிமாக்களை தொடர்ந்து பார்க்காத ஒரு வேற்று மானில ரசிகனால் ரசிக்கவே முடியாது.

ஆனால் உண்மையான நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப்படும் காட்சிகள் என்றும் நிற்கும். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்றும் ரசிக்க முடிகிறது. வெடிகுண்டை எந்த காரில் விட்டோம் என தேடி அலையும்போது நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள் வெகு இயல்பாக இருக்கும். அந்த நகைச்சுவை கிளைமேக்சிலும் தொடரும் என்பது கச்சிதமாக கதை சொல்லலுக்கு ஓர் இலக்கணம். 

இதில் அந்த வெடிகுண்டு நிபுணனாக வரும் பிரபாகரன் கேரக்டரை மறக்க முடியாது. பெரிய அறிவாளி, ஜீனியஸ்... உழைப்பாளி , அரைமணி நேரத்தில் வெடிகுண்டு செய்யத்தக்க புத்திசாலி. ஆனாலும் வில்லன் கோஷ்டியில் இருக்கிறான். கிட்டத்தட்ட அந்த நாள் கதா நாயகன் போல.

அங்கீகாரம் பெறாத ஜீனியஸாக தன்னை பாலச்சந்தர் கருதி , அந்த பாதிப்பில் இந்த கேரக்டர்களை உருவாக்கினாரா என்பது தெரியவில்லை.

அந்த வெடிகுண்டு எப்படி வெடிக்கும் என்பதை அவன் விளக்கும் இடம் சுவாரஸ்யமானது.

வெடிகுண்டை முகவரி சீட்டுடன் இணைத்து இருக்கிறேன், அவர் அந்த சீட்டை உருவினால் , கிர் என ஒரு சத்தம் கேட்கும் .பிறகு வெடிக்கும் என்பான்.

அடுத்த காட்சியில் அந்த பொம்மையுடன் ஜாலியாக விளையாடிக்கொண்டு இருப்பான் அவர்கள் கூட்டத்தில் ஒருவன் ( இவன் கேரக்டர் மங்காத்தாவில் வரும் பிரேம்ஜி போல காமெடி கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும்)

அதைப்பார்த்து பதறிப்போய் பொம்மையை பிடுங்குவான் பிரபாகரன். “இது நுட்பமான பொம்மை..இபப்டியெல்லாம் விளையாடினால் உள்ளே மாற்றங்கள் நிகழும். கிர் என சத்தம் கேட்கும். வெடித்து விடும் “ என்பான்.


பொம்மை தொலைந்த பின் எல்லோரும் பதட்டமாக விவாதிப்பார்கள்.. அப்போது மீண்டும் விளக்குவான் “ யாரேனும் விளையாட்டாக தூக்கிப்போட்டால் , உள்ளே மாற்றங்கள் நிகழும். கிர் என சத்தம் கேட்கும். வெடித்து விடும் “ என்பான்.

 முதலில் ஆர்வமாக கேட்ட நமக்கு கொஞ்சம் காமெடியாக தோன்றும்.. என்னடா இது..கிர் என்ற சத்தம் என கொஞ்சம் சிரிப்பாக இருக்கும்..

ஆனால் பிறகுதான் அதன் முக்கியத்துவம் தெரியும். சிலர் கேஷுவலாக கையாளும்ப்போது , கிர் என்ற சத்தம் கேட்கும். அவர்களுக்கு அது பெரிதாக தோன்றாது. பார்க்கும் நமக்கு பதைபதைப்பாக இருக்கும்.

சில படங்களில் யார் வில்லன் என்பது நமக்கு தெரியாது...கேரக்டர்களுக்கு தெரியும். இதில் நமக்கு உண்மை தெரியும். பொம்மையில் குண்டு இருப்பது தெரியும்.ஆனால் கேரக்டர்களுக்கு தெரியாது. 

இந்த ஓப்பன் சஸ்பென்ஸ் வகை திரைக்கதையை செம விறுவிறுப்பாக கொண்டு போய் இருப்பார் இயக்குனர்.
அளவான பின்னணி இசை...அவ்வப்போது அமைதி ,அவ்வபோது மிரட்டல் என கலக்கி இருக்கும் இசை.

ஒரு கடிகாரம்தான் முதல் ஷாட்... அப்படியே வீட்டின் சூழலுக்கு செல்கிறோம். அப்போது வரும் ஒரு மவுத் ஆர்கன் இசையும் , காட்சிகளும்... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதம்..


அந்த கால படங்கள் சிலவற்றில் பின்னணி இசையையும் , பாடலுக்கான இசையையும் ஒரே நபர் கவனிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் ஒரே நபர் கவனிப்பதும் உண்டு.

அந்த நாள் படத்தில் பாடல்கள் இல்லாததால் , பாலசந்தருக்கு பாடல்களில் ஈடுபாடு இல்லை என நினைத்தேன்.. ஆனால் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலையும் தேனின் விழுந்த பாலா சுளையாக அமைத்து இருக்கிறார். வரிகளும் , காட்சி அமைப்பும் , பாடலுக்கான சூழலும் அருமை.

முதல் பாடலில் விஜயலட்சுமியின் அருமையான நடனம் .. குழந்தை பாடும் பாடலில் அற்புதமான வரிகள் ( தத்தி தத்தி  நடந்து வரும் தங்க பாப்பா

இத்தனை நாள் எங்கு இருந்தாய் சொல்லு பாப்பா.தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா..உன் தங்க கைக்கு முத்தம் தறேன் காட்டு பாப்பா) , பொம்மையே தேடி செல்லும் வில்லன் கோஷ்டிய்னரின் கொண்டாட்ட மன நிலையிலான பாடலின் ஆரம்பதில் வரும் மவுத் ஆர்கன் ( இந்த பாடல் , ஆடாம ஜெயிச்சோமடா என்ற மங்காத்தா பாடல் போல இருக்கும் ) என இருந்தாலும் வரலாற்று சிறப்பு மிக்க நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் முக்கியமானது.
வரிகள் அற்புதமாக இருப்பது மட்டும் இதன் சிறப்பல்ல... அதன் பின் எம் ஜி ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் , ரஜினி என பலருக்கு பாடி ஒரு டிரண்டை உருவாக்கிய ஜேசுதாசின் முதல் பாடல் இதுதான். என்னைப் போன்ற ஒரு பிச்சைக்காரன் பாடுவது போன்ற காட்சியை ஈடுபாட்டுடன் ரசித்தேன்.

இபாடல் செம ஸ்லோவாக இருக்கும்.. ஆரம்ப பாடல் இப்படி அமைந்து விட்டதே... இத்துடன் நம் கேரியர் க்ளோஸ் என்றே தான் நினைத்ததாகவும் ஆனால் அந்த பாடல் பெரிய பெயரை பெற்றுத்தந்ததாகவும் பிற்காலத்தில் ஜேசுதாஸ் நன்றியுடன்  சொன்னார்.

இந்த படத்தில் பங்கேற்ற  நடிகர் வி எஸ் ராகவன் , பாடகர்கள் ( பாடகிகள் என சொல்வது மரியாதைக் குறைவான சொல்  )  சுசீலா , எல் ஆர் ஈஸ்வரி போன்றோர் அதன் பின் பல வருடங்கள் திரைத்துறையில் நீடித்து சாதனைகள் புரிந்தது குறிப்பிடத்தக்கது..
கேமரா கோணங்கள் வெகு வெகு சிறப்பாக இருக்கும். காட்சிகளில் மட்டும் அல்லாது பாடல்களிலும் ஒளிப்பதிவு உன்னதமாக இருக்கும். 

   வெடிகுண்டு , துரத்தல் என்று மட்டும் இல்லாமல் அன்பு , காதல் , வறுமையின் வலி, தாய் பாசம்  , துரோகிகள் மத்தியிலும் ஒரு நல்லவன் இருப்பது என்பதையும் கலந்து இருப்பார்.  அருமையாக இருக்கும்.

அந்த பொம்மையை ஓர் ஏழைப்பையனிடன் இருந்து போலீசார் கைப்பற்றி ஸ்டேஷனுக்கு கூட்டி வருவார்கள்..ஒரு பொம்மைக்கடைக்காரர் தன் கடையில் இருந்து அவன் திருடியதாக சொல்வார்.

அந்த பையன் வீரத்துடன், ”இது என் பொம்மை இல்லை சார்..ஆனா இந்த கடைக்காரர் பொய் சொல்றார் சார் ”என உண்மையை நிலை நிறுத்த போராடுவது ஃபர்ஸ்ட் கிளாஸ். அந்த ஏழைப்பையனின்  நேர்மை, பணக்கார கடைக்காரரின் பொய் என்ற அந்த முரண் தனி சிறுகதை..

அந்த பெரியவ்ர் யார்...செமையாக நடித்து இருக்கிறாரே என யோசித்துக்கொண்டே இருந்தேன்.

கடைசிக்காட்சியில் இயக்குனரே திரையில் தோன்றி ஒவ்வொரு கேரக்டராக அறிமுகம் செய்வார். அப்போது அந்த பெரியவர் யார் என அறிந்து திகைப்பில் ஆழ்ந்தேன். கடைசியாக முக்கியமான கேரக்டரை அறிமுகப்படுத்துகிறேன் என சொல்லி பொம்மையையும் அறிமுகம் செய்வார்..சூப்பர்..

கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படம் பொம்மை...

ரசிப்பவர்கள் ஐந்து முறையேனும் பார்க்க வேண்டும். சினிமாவை கற்க விரும்புபவர்கள் பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.
















4 comments:

  1. Very good review. Thanks for sharing. As you said, its must watch.

    ReplyDelete
  2. பலமுறை ரசித்ததுண்டு... ஆழ்ந்த விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. தங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது....

    ரசித்து வாசித்தேன் தல...

    ReplyDelete
  4. நண்பரே,
    சிறப்பான பதிவுக்கு பாராட்டுக்கள். எஸ் பாலச்சந்தரின் படங்கள் சற்று வித்தியாசமானவை. அவர் காலத்தை தாண்டியவை. பொம்மை நவீன பாணியில் எடுக்கப்பட்ட ஒரு இறுக்கமான திரில்லர் வகையைச் சேர்ந்தது. ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். வியப்பை தவிர வேறொன்றும் அப்போது தோன்றவில்லை. அபாரமான இயக்கம். படத்தின் முகவரிப் பாடலான நீயும் பொம்மை பாடலை இரவில் தனியாகக் கேட்டுப்பாருங்கள். ஒரு அமானுஷ்யம் அதில் இருப்பதை உணரலாம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா