Wednesday, October 31, 2018

படித்தவை சில


எம் ஜி ஆர் போன்றவர்களுடன் பழகிய , கவிஞர் முத்துலிங்கம் வாழும் வரலாறாக நம்மிடையே இருக்கிறார்... பல இலக்கிய நிகழ்ச்சிகளில் இவரைக் காண முடியும்..

அவ்வளவு அறிவும் அனுபவமும் பெரியோர்களுடன் பழக்கமும் இருந்தாலும் வெகு எளிமையாக காட்சி அளிப்பார்

ஒரு வருடங்களுக்கு மேல் தினமணி இதழ் ஞாயிறு இணைப்பிதழில் அவர் எழுதி வந்த ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே என்ற தொடர் சென்ற ஞாயிறு ( 28 10 2018 ) நிறைவுற்றது

பொதுவாக நாளிதழ்களுடன் வரும் இணைப்புகள் அவ்வளவு தரமாக இராது என்ற கருத்து பலருக்கு உண்டு.. ஆனால் தினமணி இணைப்பிதழ்கள் , சிறப்பாக இருக்கும் என்பதற்கு இந்த தொடர் ஒரு சான்று..

எத்தனையோ அனுபவங்கள் , பல்வேறு கவிஞர்கள் என வரலாற்று பொக்கிஷமாக அந்த தொடர் இருந்தது... நூலாக வர வேண்டும்

அவற்றில் சில முக்கிய பகுதிகளை அவ்வப்போது எழுதுவேன்

-----------------

திராவிட இயக்க சிந்தனையாளர் பேரறிஞர் குத்தூசி குருசாமியின் சிறு நூல் ஒன்றை படித்தேன்...   பட்டுக்கோட்டை மா நாட்டில் அவரது தலைமை சொற்பொழிவின் நூலாக்கம்..  வெகு சிறப்பு... இன்றைய மேடைகள் இந்த தரத்தை இழந்து விட்டது வருத்தம்தான்




Tuesday, October 30, 2018

சபா நாயகர்களின் பவரைக் காட்டிய சட்ட எரிப்பு போராட்ட காமெடி- அரசியல் ஃபிளாஷ்பேக்


எம் எல் ஏக்கள் பதவி நீக்க சர்ச்சை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில் இது சார்ந்த ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூர்வது நம் கடமை

சபா நாயகர்களுக்கு என சில அதிகாரங்கள் உண்டு.. அதில் யாரும் தலையிட முடியாது என முதன் முதலில் சுட்டிக்காட்டி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியவர் பி எச் பாண்டியன் தான்...


எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தின்போது திமுக சார்பில் சட்ட எரிப்பு போராட்டம் நடந்தது

தூக்கு மேடை ஏறத்தயார்,,, போலிசாரின் துப்பாக்கிகளுக்கு அஞ்ச மாட்டோம்.. சிறைச்சாலை எங்களுக்கு பசுஞ்சோலை... சட்டத்தை எரித்தே தீர்வோம் என திமுக முழக்கமிட்டது

தடைகளை மீறி எரிப்போம் என்ற திமுகவின் அறிவிப்பை அதிமுக கண்டு கொள்ளவே இல்லை.. எரித்தால் எரித்துக் கொள்ளுங்கள் என விட்டு விட்டது


பயந்து விட்டார்கள் போலயே என நினைத்தபடி திமுக சட்டமனற உறுப்பினர்கள் சட்டத்தை எரித்தனர்


 வெற்றி வெற்றி என சந்தோஷமாக சட்ட எரிப்பு புகைப்படங்களை தமது பத்திரிக்கைகளில் வெளியிட்டு மகிழ்ந்தனர்

ஆனால் அதிமுகவின் அமைதிக்கான காரணம் பிறகுதான் புரிந்தது

 சட்டத்தை மதிப்பதாக உறுதி மொழி அளித்து பதவி ஏற்ற சட்ட உறுப்பினர்கள் சட்டத்தை எரித்து , உறுதி மொழியை மீறி விட்டனர்.. எனவே அவர்களை பதவி நீக்கம் செய்கிறேன் என அதிரடியாக அறிவித்தார்  சபா நாயகர்  பி எச் பாண்டியன்

அதிர்ந்து போனது திமுக... கோர்ட்டுக்கு போவோம் என்றனர்... சபா நாயகர் அதிகாரம் வானளாவியது... நீங்கள் கோர்ட்டுக்குப்போனாலும் சரி,,, பீச்சுக்கு போனாலும் சரி,,, நான் சொன்னால் சொன்னதுதான் என தில் ஆக அறிவித்தார் பி எச் பாண்டியன்

 நாங்கள் சட்டத்தை எரிக்கவில்லை.. வெறும் பேப்பரைத்தான் எரித்தோம்  திமுக என எவ்வளவோ பணிந்தும் பதவி மீட்டெடுக்க முடியவில்லை





Monday, October 29, 2018

நடிக்க மறுத்த சிவாஜி - சினிமா ஃபிளாஷ்பேக்



ஒவ்வொரு எழுத்தாளர்க்கும் ஒரு பிரத்யேக நடை உண்டு.. அது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடையும் புகழ் பெற்ற ஒன்று

அந்த காலத்தில் கல் தூண் என்று படம் வந்தது,,, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்திருந்தார்

ஒர் காட்சியில் சிவாஜி கம்பீரமாக நடந்து வர வேண்டும்,   எப்படி நடப்பது என மேஜர் சொல்லிக்கொடுத்தார்..

ஆனால் அது அவருக்கே பிடிக்கவில்லை.. இன்னொரு விதமாக மாற்றினார்.. அதுவும் திருப்தி இல்லை

சிவாஜி சொன்னார் : ரொம்ப கஷ்டப்படாதே... நான் சில டைப்ல நடந்து காட்டுறேன்.. உனக்கு எது புடிக்குதோ அதை செலக்ட் பண்ணு... ஷூட்டிங்ல அதை ஃபாலோ பண்றேன் என சொல்லி விட்டு பத்து விதங்களில் நடந்து காட்டினார் சிவாஜி,, மேஜர் அசந்து போனார்...  நடிப்பின் அகராதிக்கு , நடிப்பு சொல்லத்தர முயன்ற தன் அசட்டுத்தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டார்

   என்னதான் நடிகர் திலகம் என பிறர் பாராட்டினாலும் இயக்குனர் சொன்னபடி நடிப்பதுதான் நல்லது என கருத்துடையவர் சிவாஜி


சாதனை என்றொரு படம்.. அதில் சிவாஜிக்கு இயக்குனர் வேடம்... பிரபுவுக்கு நடிப்பு சொல்லித்தருவது போல காட்சி


 எப்படி நடப்பது என பிரபுவுக்கு சொல்லித்தருவது போல காட்சி ... நீங்கள் அவருக்கு நடந்து காட்ட வேண்டும் என்றார் இயக்குனர்

இந்த காட்சியை நாளை எடுக்கலாமா என பணிவுடன் கேட்டார் சிவாஜி


ஏன் என வியப்புடன் கேட்டார் இயக்குனர்

பிரபுவுக்கு நடப்பதற்கு சொல்லித்தரும் முன் , முதலில் நான் நடந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் சிவாஜி


இந்த சிரத்தைதான் சிவாஜி...

Sunday, October 28, 2018

கலைஞர் vs புரட்சித் தலைவர் எலுமிச்சம்பழ யுத்தம் - சுவராஸ்ய ஃபிளாஷ்பேக்


 அண்ணா மறைவுக்குப் பின் யார் முதல்வர் என்ற குழப்பம் ஏற்பட்டது...   திமுகவின் முன்னணி தலைவராக விளங்கிய நாவலரை ஓரம் கட்டி தான் முதல்வராக கலைஞர் முயற்சி செய்து கொண்டிருந்தார்,., பலர் மக்கள் திலகத்தையே முதல்வராக்க விரும்பினர்

இந்த சூழலில் அடிமைப் பெண் படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆரை , கலைஞர் சந்தித்துப் பேசினார்... பேச்சின் முடிவில் கலைஞரை முதல்வராக்க எம் ஜி ஆர் ஒப்புக்கொண்டார்...

சினிமா புகழ் போதும் என நினைத்ததும் ,  நல்லாட்சி தருவதாக கலைஞர் அளித்த உறுதி மொழியும் எம் ஜி ஆரை இந்த முடிவுக்கு வர வைத்தன

ஆனால் எம் ஜி ஆர் எதிர்பார்த்த நல்லாட்சியாக அந்த ஆட்சி அமையவில்லை... கட்சியினர் எம்ஜி ஆரிடம் முறையிட்டனர்,...     குறிப்பாக எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தினர் கொந்தளிப்பில் இருந்தனர்

  கலைஞர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி , இனி தவறுகள் நடக்காது என் உறுதி அளித்தார்...  திமுகவில் பிரச்சனைகள் வேண்டாம் என எம் ஜி ஆர் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார்

சைதை துரைசாமி போன்றோர் , காரில் ஏற இருந்த எம் ஜி ஆரை தடுத்து நிறுத்தி , எம் ஜி ஆர் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு முக முத்து ரசிகர் மன்றம் அமைக்க தலைமை தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டினர்...  எம் ஜி  ஆர் , பொறுமையாக இருங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்

இது நடந்து சில நாட்களிலேயே எம் ஜி ஆர் கணக்கு கேட்டார்... பெரியார் , அண்ணா போன்றோர் கட்டிக்காத்த திராவிட பாரம்பரியத்துக்கு எதிராக ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்

இதனால் எம் ஜி ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்... தமிழ் நாடே கொந்தளித்தது... எம் ஜி ஆர் படம் ஒட்டப்படாத வாகனங்கள் சாலையில் ஓட முடியாத நிலை ஏற்பட்டது


மக்கள் விரோத எம் எல் ஏக்கள் தம் பதவிகளை ராஜினாமா செய்யக்க்கோரி அந்தந்த பகுதி மக்கள் அவர்களிடம் மனு அளிக்க வேண்டும் என எம் ஜி ஆர் கோரினார்

அதன்படி கலைஞரை சந்திந்த சைதை துரைசாமி மனு அளித்தார். அதை வாங்கிய கலைஞர் , சைதை துரைசாமிக்கு எலுமிச்சம் பழம் அளித்தார்... ஏதோ நினைவுப் பரிசு போல என நினைத்து அவர் வாங்கிக்கொண்டார்

பிறகு பேட்டி அளித்த கலைஞர், எம் ஜி ஆர் ஆதரவாளர்களுக்கு மூளை குழம்பி இருக்கிறது.. அதனால்தான் தலையில் தேய்த்து குளிக்க எலுமிச்சை அளித்தேன் என்றார்... இது தலைப்பு செய்தி ஆனது... எம் ஜி ஆருக்கு இதில் வருத்தம்’

சில நாட்கள் கழித்து , திமுக கூட்டம் ஒன்று சைதையில் நடந்தது

கலைஞர் பேசி முடித்ததும் ஒவ்வொருவராக வரிசையில் நின்று அவருக்கு மாலை அளித்தனர்

சைதை துரைசாமியும் மேடை ஏறினார்.. கலைஞருக்கு எலுமிச்சம்பழ மாலை ஒன்றை அணிவித்தார்...  எம் ஜி ஆரை நீக்கிய உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்களுக்கும்தான் எலுமிச்சம்பழ சிகிச்சை தேவை என்றார்..

மக்கள் ஆதரவை இழந்த கருணா நிதியே ...ராஜினாமா செய் என கோஷம் எழுப்பி விட்டு கிளம்பினார்


அவனை பிடிங்கடா...என கலைஞர் உத்தரவிடவே கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்... உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அதன் பின் எம் ஜி ஆர் தன் நேரடி கவனிப்பில் சைதை துரைசாமியை வைத்துக்கொண்டார்

அதன் பின் , அதிமுக வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததும் , சைதை துரைசாமிக்கு மிரட்டல்கள் குறைந்தன







Monday, August 27, 2018

தேகம் நாவலும் மிஷ்கினும் - சாருவுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள சாரு..

ஒரு முறை நான் , செல்வா மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் உங்களுடன் சேர்ந்து உணவருந்தியபடி உரையாடிக் கொண்டிருந்தோம்.. பல விஷயங்கள் சுவாரஸ்யமாக பேச்சு சென்று கொண்டிருந்தது.. அப்போது செல்வா திடீரென ஒரு கேள்வி கேட்டார்

- சாரு.. உங்கள் கட்டுரைகள் சிலவற்றில் எழுத்தாளர்கள் குறித்தும் அவர்கள் படைப்புகள் குறித்தும் எழுதுகையில் , அவர்கள் படைப்பின் சில பகுதிகளை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்கிறீர்கள் என்றும் இதனால் உங்கள் கருத்துகளுக்கான இடம் குறைந்து விடுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.. கட் அண்ட் பேஸ்ட் என்பதற்கு உங்கள் விளக்கம் என்றார்

எனக்கு செம ஷாக்... சும்மா ஜாலியாக பேசும்போது இப்படி குற்றம் சாட்டுவது போல ஒரு கேள்வியக்கேட்கலாமா என எனக்கு செல்வா மீது கோபம்தான்.

ஆனால் நீங்கள் உங்களுக்கே உரிய ஒரு மென் சிரிப்புடன் அதற்கு லாஜிக்கலாக ஒரு பதில் சொன்னீர்கள்.. பொது இடம் என்பதையும் மறந்து  நாங்கள் மூவரும் கைதட்டி பாராட்டினோம்

எதற்கு சொல்கிறேன் என்றால் விமர்சனங்களுக்கு இடம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை

தேகம் நாவல் வெளியீட்டின் போது , அதைப் படிக்கவில்லை என்று மிஷ்கின் பேசியது சர்ச்சை ஆனது... படிக்காமல் ஒரு விழாவுக்கு செல்வது தவறு அல்லவா.. மற்றபடி அது த்ரில்லர் ஃபார்மேட்டில் இருக்கும் நாவல், பாக்கெட் நாவல் ஃபார்மேட்டில் இருக்கும் நாவல் என்று எப்படியும் சொல்லலாம்


காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் துப்பறியும் நாவல்  வார்ப்புருவில் ஒரு நாவல் எழுதி இருக்கிறார்... அகராதி வடிவில் மிலோரத் பாவிச் உலக இலக்கியம் படைத்திருக்கிறார்..

அதுபோல சரோஜா தேவி கதைகளின்  வார்ப்புருவில் தேகம் இருக்கிறது என ஜாலியாக மிஷ்கின் பேசியதை , சரோஜா தேவி எழுத்தை விட சாரு எழுத்து எந்த விதத்தில் சிறப்பு என அவர் பேசவே இல்லை...  அவர் பேசாததை பேசியது போல திரித்து சொல்கிறார் உங்கள் நண்பர் ஒருவர்


தேகம் என்ற படகை வைத்துதான் வாழ்க்கை எனும் கடலை கடக்க வேண்டும் என்பது ஆன்மீகம்.  தேக இன்பங்களை துய்ப்பதே வாழ்வின் பயன் என வாழ்வது உலகவியல்...     கிடைத்த தேகத்தை மக்களுக்காக உழைப்பதில் பயன்படுத்த வேண்டும் என உழைப்பது  தொண்டு...  தொண்டு செய்து பழுத்த பழமாக வாழ்ந்த பெரியார் இதற்கோர் உதாரணம்.  பிறர் உடலை துன்புறுத்து வதைத்து அச்சத்தை விளைவித்து அதிகாரத்தை கைப்பற்றுதல் சர்வாதிகாரிகளின் அரசியல்..   ஹிட்லர் இதற்கோர் உதாரணம்

இப்படி ஆன்மிகம் , அதிகாரம் , அரசியல் ,  காமம் என அனைத்துக்குமே அடிப்படை தேகம்தான் . உடலை புரிந்து கொண்டால் உன்னுள் இருக்கும் உத்தமனை புரிந்து கொள்ளலாம்..

இதை சொல்ல சரோஜா தேவி வார்ப்புரு பொருத்தமானதுதான்...  மிஷ்கின் அதை விளக்கமாக பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது மட்டுமே குறை..

கேவலம் , சில டிவி வாய்ப்புகளுக்காக உங்கள் நண்பர் இவ்வளவு கீழே இறங்கி இருக்க வேண்டாம்

டிவீ வாய்ப்பெல்லாம் வாழ்க்கையில் எந்த மூலைக்கு ?

திமுக மதுரை மா நாட்டுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைத்த மு க முத்து இன்று எப்படி இருக்கிறார்?

தென்னக ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் பதினைந்து நிமிட புகழுக்காக திமுகவை ஆதரித்து பிற்காலத்தில் துணை நடிகராக மாறவில்லையா?


எ ம் ஜி ஆரின் சினிமா வாரிசு என அழைக்கப்பட்ட பாக்யராஜ் திமுகவுக்கு ஆதரவளித்த பின் என்ன ஆனார்?

எம் ஜி ஆரை எதிர்த்து திமுக ஆதரவு கொடுத்தபோது , தற்போது  உங்கள் நண்பருக்கு  கிடைக்கும் விளம்பரத்தை விட அதிக விளம்பரம் , டி ராஜேந்திருக்கு கிடைத்தது ?  இன்று அவர் எப்படி இருக்கிறார்?

வரலாறு நமக்கு பாடங்கள் கற்பிக்கிறது... நாம்தான் கவனிப்பதில்லை... உங்கள் நண்பரை கொஞ்ச காலம் கவிதையை மறந்து விட்டு வரலாறு படிக்க சொல்லவும்

அன்புடன்

பிச்சை





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா