Sunday, November 13, 2011

மெக்காவில் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் மதங்கள் காட்டும் ஒற்றுமை

என்னவோ கல்வி... நூல்கம் என்றெல்லாம் நம் அறிவு ஜீவிகள் ஆவேசப்பட்டதை பார்த்து நொந்து இருப்பீர்கள். ஆனால் நவீன கல்வியை வடிவமைத்த ஒரு மகானுக்கு ஒரு சிறிய மரியாதை செய்யாமல் இந்த அறிவுலகம் விட்டு விட்டது என்றால் இந்திய அரசு அவமரியாதை செய்து மனதை நோகடித்தது.

பள்ளிகளுக்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. முதல் கல்வி அமைச்சரான அப்துல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ந்தேதியை கல்வி தினமான அனுசரிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையைப்பார்த்து ஆசிரியர்கள் திகைத்தனர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தவர் . அவர் எப்போது கல்வி அமைச்சரானார்??

பிறகுதான் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தைத்தான் இப்படி எழுதி இருக்கிறார்கள் என புரிந்தது.

 பல சேவைகளை புரிந்த அவர் உண்மையான இஸ்லாமியராக திகழ்ந்தவர். ஆனால் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளிக்கவில்லை என ( அன்றைய ) தீவிர இஸ்லாமியர்களுக்கு அவர் மேல் வெறுப்பு. அதே போல அவர் இஸ்லாமியர் என்பதால் தீவிர இந்துக்களுக்கும் அவர் மேல் அக்கறை இல்லை. இப்படியாக அவர் பெயர் நம் நாட்டில் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டது.

அவர் இந்தியாவில் பிறந்தவர் அல்லர். மெக்காவில் பிறந்த அவர் இயற்பெயரும் இதுவன்று.


மவுலானா என்றால் படித்த மேதை என்று பொருள். அபுல் கலாம் என்றால் பேச்சாற்றல் மிக்க தலைவன். ஆசாத் என்பது அவர் வைத்து கொண்ட புனை பெயர்.

 நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேச கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை 1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.
அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.
1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.
1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தர வர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார். காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.
மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.
அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.
மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். 


இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர்களுக்கு அன்று.


7 comments:

  1. //இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர்களுக்கு அன்று.//

    அருமை - பார்வை சார்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.பார்வையாளன்,
    மிக்க அருமையான ஒரு ஞாபக மீட்டல் பதிவு.

    //இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர்களுக்கு அன்று.//---நெத்தியடி..!

    இத்துடன் சில விஷயங்களை நானும் இங்கே பகிர விரும்புகிறேன்.

    'ஆசாத்' என்றால் 'சுதந்திரம்'. இதனை தன் பெயராகவே மாற்றிக்கொண்டு நம் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட இவரின் இயற்பெயர்: குலாம் முஹியுத்தீன்.

    பிரிட்டிஷாரின் இந்திய தலைநகரான கொல்கத்தாவில் 1912-ல் 'அல் ஹிலால்' (பிறை) என்ற உருது வாரப்பத்திரிகை ஆரம்பித்து கடுமையாக ஆங்கில அரசை விமர்சித்து எழுதி விடுதலை வேட்கையை மக்களிடம் தூண்டினார்.

    எனவே 1914-ல் அந்த பத்திரிக்கையை தடை செய்தது பிரிட்டிஷ் அரசு. உடனே, 'அல்-பலக்' (கருப்பு)என்ற இன்னொரு வாரப்பத்திரிகை ஆரம்பித்து அதே வேலையை தொடர்ந்து செய்தார்.

    கடுப்பான வெள்ளையர்கள் இதனையும் தடை செய்ததோடு நில்லாமல் அவரை கல்கத்தாவிலிருந்து ராஞ்சிக்கு நாடு(?)கடத்தி அங்கேயே 1920 வரை சிறையில் அடைத்தனர்.

    இவர் பெயரில் கொல்கத்தாவில்...Maulana Abul Kalam Azad Institute of Asian Studies என்று ஒரு உயர் படிப்பிற்கான ஆராய்ச்சி கல்வியகம் ஒன்று உள்ளது.

    இவருக்கு பாரத்ரத்னா விருது 1992-ம் (வருஷம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்) ஆண்டில் அறிவிக்கப்பட்டு அது அவரது ஒரு சொந்தக்காரருக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது..!

    ஆனாலும், அதற்கு முன்பே -அவர் உயிரோடு இருக்கும்போதே- பாரத்ரத்னா விருது தரப்பட்டது.

    ஆனால், மந்திரி பதவியில் இருந்த காரணத்தால் அவர் அதை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்..!

    பாகிஸ்தான் உருவாவதை அதி தீவிரமாக கடைசி வரை எதிர்த்த இவரை பின்பற்றிய முஸ்லிம்கள்தான் இன்றும் தன் சொந்த மண்ணில் இந்தியாவில் இருப்போர்..!

    இவரிடம் உள்ள நியாயத்தை உணர்ந்து பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து அப்பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்த முஸ்லிம்கள் ஏராளம் உண்டு..!

    இவர் 1958 ஃபிப்ரவரி 22 ல் தன் 69-ம் வயதில் இறந்தார்.

    ம்ம்ம்... உலகில் எங்கோ பிறந்து நம் நாட்டுக்கு வந்து நமக்காக பாடுபட்ட அன்னை தெரசா போன்ற ஒருசில ரத்னாக்களில் இப்படியும் ஒருத்தர்..!

    ReplyDelete
  3. @முஹம்மத் ஆஷிக்_

    அருமை அருமை

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி தோழா, நாட்டுக்காக, மனித
    சமுதாய நலனிற்காகப் பாடுபட்ட
    எத்தனையோ நல்லவர்கள் முஸ்லிம் என்ற
    ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப் படுகிறார்கள்.

    சகோ ஆஷிக்கின் பின்னூட்டமும் அருமை

    ReplyDelete
  5. Its really wonderful.. hanks for sharing this for both.

    ReplyDelete
  6. //நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது//

    //இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால், இழப்பு அவர்களுக்கு அன்று.//

    மொத்தாத்தில் ரோம்பா நாட்களுக்கு பிறகு ஓர் அருமையான வரலாறு படித்த சந்தோஷம் - நன்றி சகோதரா

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா