Tuesday, March 8, 2011

அவள் அப்படித்தான்…


” உலகில் எல்லோரும் சுய நலத்தோடு செயல்பட்டால் போதும் . பாதி பிரச்சினை தீர்ந்து விடும் “
கம்பீரமாக சொன்ன அகமதுவுக்கு அறுபது வயது. வாழ்வின் வெற்றியும், பணமும் அவை தந்த தன்னம்பிக்கையும் முகத்தில் ப்ளிச்சிட்டன.
மதுரையிலிருந்து சென்னையை நோக்கி ரயில் விரைந்து வந்து கொண்டு இருந்தது.. மீட்டிங் வெற்றிகரமாக முடிந்த மகிழ்ச்சியில் நானும் அவரும் பொது விஷ்யங்கள் பேசிக்கொண்டு வந்து இருந்தோம்.. முதல் வகுப்பு ஏ சி யை மீறி விவாதம் சூடாக மாறத்தொடங்கியது

.
அவரிடம் நான் உதவியாளனாக சேர்ந்த இந்த ஒரு வாரத்தில் இது போல ஏதாவது சொல்லி என்னை பல முறை ஆச்சர்யபடுத்தி இருக்கிறார்.
“ என்ன ..அப்படி பார்க்குற? சுயனலம் என்பதுதான் உயிரின் இயல்பு… இதை ஏற்று வாழ்வதால்தான் , பறவைகள் விலங்குகள் வாழ்வை முழுதுமாக அனுபவித்து வாழ்கின்றன.
ஆனால் மனித மட்டுமே சுய நலம் தவறு என நினைக்க பழக்கப்பட்டு இருக்கிறான்.. அதனால்தான் துன்புறுகிறான்”
எனக்கு புரியவில்லை… சுய நலம்தானே இன்று நாம் காணும் பிரச்சினைகளுக்கு காரணம் ? இவர் இப்படி சொல்கிறாரே ?!
“ சார்.. நீங்க சொல்வது த்வறு.. அன்புதான் உலகின் இன்றைய தேவை… சுய நலம் அல்ல “
என்னை கூர்ந்து பார்த்தார்.
“ சரி.. உனக்கு தெரிந்த மிகப்பெரிய திருடன் பெயர் ஒன்று சொல் ..பார்க்கலாம் “
யோசித்தேன்..
யாரை சொல்வது…
சட் என தோன்றியது..
“ *****  ‘’ என்றேன்… மக்கள் பணத்தை மன சாட்சி இல்லாமல் திருடியவர்..
“ ம்ம்.. இந்த பெயர் நானும் எதிர்பார்த்ததுதான்.. சரி… இவர்கள் எப்படி இந்த இடத்துக்கு வந்தார்கள்? சுய நலம் என்பது இவர்கள் வழியாக இருந்ததா? அல்லது பொது நலமா? “
யோசித்தேன்..
பொது நலம் என்றுதான் இவர்கள் பயணத்தை ஆரம்பித்தார்கள்… பொது காரியங்கள் நிறைய செய்து இருக்கிறார்கள்… மக்கள் எதை நம்ப வேண்டும், நம்ப கூடாது… என்ன படிக்க வேண்டும்.. என்ன கற்க வேண்டும் என மக்கள் குறித்தே சிந்தித்தவர்கள் இவர்கள்.. இன்றும் கூட மக்களுக்கு எதை பிடிக்குமோ அதை செய்வது, அதை கொடுப்பது என்று மற்றவர்களுக்காவேதான் செயல்படுகிறார்க்ள்…
பதில் சொல்ல வாயை திறப்பதற்குள் , அடுத்த கேள்வி கேட்டார்..
“ மற்றவர்கள் குறித்து கவலைப்படாமல், தனக்கு தோன்றியதை செய்து , தான் நம்புவதற்காக வாழும் ஒருவர் – உனக்கு தெரிந்த ஒருவர- பெயரை சொல் “
மீண்டும் யோசித்தேன்…
அந்த எழுத்தாளர் நினைவுக்கு வந்தார்..
யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தன் கருத்தை சொல்வார்… சிலர் மனம் புண்படுகிறதே என நினைக்க மாட்டார்.. அதே போல தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வார்.. திடீரென கடவுளை நம்பாதீர்கள் என்பார்.. மறு நாள் ஒரு சாமியாருடன் போஸ் கொடுப்பார் ..
அவர் பெயரை சொல்ல வாய் திறப்பதற்குள் , அகமது குறுக்கிட்டார்..
“ எனக்கு பதில் தேவை இல்லை… நீயே யோசித்து பார்…  தன்க்காக , தன் மகிழ்சிக்காக , தன் மனசாட்சி சொல்வதை போல வாழும் ஒருவன் – மற்றவர்கள் கருத்துக்க்ளுக்காக , மற்றவர்கள் நம்பிக்கைகளுக்காக வாழும் ஒருவன்.. இதில் யாரால் தீமை அதிகம் ? “
அவர் சொல்ல வருவது புரிந்தது…
அந்த எழுத்தாளரால் , அவரை சுற்றி இருப்பவர்களுக்கு மகிழ்ச்சிதான் கிடைகிறது.. அவர் யாரையும் ஏமாற்றவில்லை.. ஏமாற்றவும் தெரியாது.. ஆனால் அவர் கூட்ட்டம் சேர்க்காமல் தனக்காக வாழ்பவர்..
பிறருக்காக வாழும் ****  , வரலாறு காணாத திருட்டை செய்கிறார்..
“ இதைதான் சொல்கிறேன்.. ஒருவன் முழுதும் தன்க்காக மட்டுமே வாழ்ந்தால் , அனைவரும் அப்படி வாழ ஆரம்பித்தால் உலகமே சொர்க்கமாக மாறி விடும்… அன்பு, உதவி, பொது சேவை என ஆரம்பித்தால்தான் தீமை ஆரம்பிக்கிறது..உதாரணமாக , உனக்கு நான் வேலை கொடுத்தது, உன்னால் எனக்கு நல்லது கிடைக்கும் என்ற சுய நலம்தான்.. உனக்கு உதவ வேண்டும் என்பதல்ல என் நோக்கம்.. இப்படி வேலை கொடுத்தால்தான் , உனக்கும் பெருமை , என்னகும் லாபம்..
தகுதி இல்லாத ஒருவனுக்கு, உதவி செய்கிறேன்..அன்பு காட்டுகிறேன் என உதவினால் , அவனுக்கும் அது அசிங்கம்.. வேலை கொடுப்பவனுக்கும் இழப்பு “
அவர் சொல்வதை ஏற்கவும் முடியவில்லை.. மறுக்கவும் முடியவில்லை..
மேலும் பேசுவதற்குள் எக்மோர் வந்து விட்டது..
கச கசவென மக்கள் கூட்டம்.. ஜன சமுத்திரத்தில் நீந்தி சென்றோம்..  கார்  வெளியே இருக்கும்..
“ சார் பெட்டியை கொடுங்க . நான் தூக்கி வறேன் “ ஒருவன் பெட்டியை அவரிடம் இருந்து பறிக்காத குறையாக வாங்கினான்..
அவனுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்.. ஸ்மார்ட்டாக இருந்தான்.
“ யார் இவன்… “ குழம்பினேன்.
“ என்னப்பா ..எப்படி இருக்க ? “ அகமது விசாரித்தார்.
“ உங்க தயவுல நல்லா இருக்கேன் சார்.. நீங்க மட்டும், என்னிடம் அன்பு காட்டி, வேலை வாங்கி தரலைனா, இப்ப பிச்சை எடுத்துகிட்டு இருப்பென் .. ஆனா இன்னிக்கு நல்லா இருக்கேன்…”
அக்மது புன்னகைத்தார்…
“ நான் அன்பெல்லாம் ஒண்ணும் காட்டல… உன் திறமை என் நண்பனுக்கு பயன்படும் அப்படீங்க்ர கனக்குதான்… அதானல் நண்பன் மேல அன்புனு இல்லை… அவனுக்கு நல்ல ஆள் ஒருத்தனை கொடுத்தா , எனக்கு நல்லது செய்வான் அப்படீங்கற சுய நலம்.. இப்படி சுய நலம் நம்ம மூணு பேருக்கும் , உனக்கு, எனக்கு , நண்பனுக்கு , நல்லது செஞ்சு இருக்கு “
கார் வந்து விட்டது…
” சார் சார்..போய்டாதீங்க..கார்ல உட்கார்ந்து இருக்க ..குடிக்க எதுனா வாங்கி வறேன் “ ஓடினான் அவன…
அக்மது என்னை பார்த்தார்..
” போன வருஷம் என்னிடம் வேலை கேட்டு வந்தான்… சாப்பிட்டு ரெண்டு நாள் ஆவுது .. பெரிய மனசு செஞ்சு உதவுங்கனு கெஞ்சுனான்… உதவெல்லாம் முடியாதுப்பா… உன்னால் எனக்கு லாபம் இருந்தா உன்னை பயன்படுத்திக்றேன்…இந்த சிஸ்டத்துல சில அட்ரஸ் இருக்கு.. அது எல்லாத்துக்கும் அறிமுக கடிதம் எழுதணும்… ஒரே மாதிரி டெம்ப்ளேட்ல எழுத கூடாது.. ஒவ்வொரு மாதிரி எழுதணும்.. சாய்ந்தரம் வந்து பார்ப்பேன்…  உன் ஆங்கிலம், சொல்லும் திறன், வேகம் எல்லாம் பிடித்து இருந்தா , உன்னை நல்ல வேலைல சேர்த்து விடுவேனு சொன்னேன்… ஒப்புக்கிட்டான்.. என் அசிஸ்டண்ட் தீபாவுக்கு இந்த டீல் பிடிக்கல… அறிமுகம் இல்லாதவன் கிட்ட , இந்த வேலையை கொடுக்காதீங்கனு சொன்னா.. ஆனா நான் ரிஸ்க் எடுத்தேன்…
அவன் முடிக்க மாட்டான்..கெட் அவுட் சொல்லலாம்னு நினைத்தேன்.. ஆனால் சாய்ந்தரம் வந்து பார்த்தப்ப , பக்காவா எழுதி இருந்தான்…
பாரு தீபா… இவனை போயி குறை சொன்னியே… நீ இதுவரை செஞ்சதை விட இவன் நல்லா செஞ்சு இருக்கான்… சோ ..உன் பெர்ஃபாமன்சும் சரியில,,, ஜட்ஜ்மெண்டும் சரியில்லை… யூ ஆர் டிஸ்மிஸ்ட்.. ஹீ இஸ் அப்பாயிண்டெட் நு சொன்னேன்…
இன்னிக்கு இவன் நல்லா இருக்கான்,,, அந்த பொண்னும் கல்யாணம் ஆகி நல்லா இருக்கா…. அவளை டிஸ்மிஸ் செஞ்சது அவளுக்கு நல்லதா போச்சு.. அதான் சொல்றேன்..
அன்பு இரண்டாம் பட்சம்.. சுயனலம் மேன்மையானது “
அவர் பேசி முடிக்கவும், அவன் கூல் டிரிங்குடன் வரவும் சரியாக இருந்தது..
குடித்தோம்…
” சார்.. நீங்க கிளம்புங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..முடிச்சுட்டு பஸ்ல வந்துட்றேன்”
அகமது கிளம்பினார்..
அவன் இன்னும் நின்று கொண்டு இருந்தான்..
“ சார்.. அவர் உங்களை பத்தி சொன்னார்… பிரமிப்பா இருந்தது.. அவர் சொன்ன வேலையை எப்படி கச்சிதமா செஞ்சு நல்ல பேர் எடுத்தீங்க”
அவன் புன்னகைத்தான்..
“ நான் அங்கு வந்தது, அவர்கிட்ட நைசா பேசி , உள்ளே நுழைந்து கிடைத்ததை சுருட்டிகிட்டி ஓடுவதற்காகத்தான்…
ஆனா அவர் ஒரு வேலை கொடுத்த்ட்டு போயிட்டாரு..அந்த பொண்னு தீபா வேற என்னை சாடை மாடையா திட்டிகிட்டு இருந்தா..எனக்கு அவர் சொன்ன வேலை புரியல.. “ என்ன மண்ணு மாதிரி உட்கார்ந்து இருக்கேனு கேட்டா… எனக்கு வேலை எல்லாம் வேணாம்.. சாப்பிட்டு ரெண்டு நாள் ஆகுது… சாப்பிட ஏதாச்சும் கொடுங்க.. நான் கிளம்புறேனு சொன்னேன்..  அவள் கண் கலங்குவது போல இருந்துச்சு..
அவள் கொண்டு வந்த லஞ்ச் பாக்சை கொடுத்தா.. சாப்ப்ட்டு அப்படியே கண் அயந்துட்டேன்..முழிச்சி பார்த்தா, எனக்கு கொடுத்த வேலையை அவள் செஞ்சு முடிச்சு இருந்தா…
அதனால எனக்கு வேலை கிடைத்தது…அவளுக்கு வேலை போச்சு..
எனக்கும் அவளுக்கும் என்ன உறவு சார்… என்னால அவளுக்கு ஆக வேண்டியது ஒண்ணும் இல்ல… அதற்கு பின் அவளை பார்கக்வும் இல்லை.. பார்க்கவும் முடியாது…. அவ கல்யாணம் ஆகி வெளி நாடு போயிட்டா..
எனக்கு உதவணும்னு அவளுக்கு எப்படி தோணுச்சு..ஏன் தோணுச்சு “ சொல்லும்போதே அவன் கண்களில் கண்ணீர் கொட்டியது..
அகமதுவின் தர்க்கமும் , இவனது கண்ணீரும் ஒன்றாக கலந்து என்னை விழுங்குவது போல இருந்தது…

7 comments:

  1. இது தான் வாழ்வின் முரண்நகையோ..அருமை நண்பரே!

    ReplyDelete
  2. கொஞ்சம் பத்தியா பத்தியா பிரித்து போட்டால், வாசிக்க எளிதாக இருக்கும்ங்க. :-)

    ReplyDelete
  3. எல்லோரும் சுயநலத்தோடு வாழுகிறோம் ஆனால் போதுநலவாதியாய் காட்டிக்கொள்கிறோம். நமது சுயநலத்தை அங்கீகரிக்காமல் வாழ்வதால்தான் போலி பொதுநலத்தை கொண்டாடுகிறோம்.
    உங்கள் கதையில் நான் வாசித்ததில் எனக்கு பிடித்த கதை இது.
    வாழ்த்துகள்.


    ஆமாம், அந்த எழுத்தாளர் யார் நண்பா?

    ReplyDelete
  4. சார் சூப்பர்

    ReplyDelete
  5. தோழர் அருமை, கடைசியில் நெஞ்சத் தொட்டுட்டீங்க.
    ஆனா ஒண்ணு, கண்டிப்பாய் அந்தப் பெண் நல்லா
    இருப்பா எங்கிருந்தாலும். நற்கருமங்கள் வீண்
    போவதில்லை.

    ReplyDelete
  6. அதே சமயம் சுய நலம்,பொது நலம் இரண்டையும் விட
    இறை விருப்பம் தான் மேலானது, இஸ்லாத்தில்
    வலியுறுத்தப் படுவது.

    ReplyDelete
  7. சுய நலம் தான் உண்மை :)
    கதை அருமை

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா