Monday, March 7, 2011

நான் ஏன் பிச்சைக்காரன் ஆனேன் ?

நண்பர் கோபி பெயர் காரணம் கேட்டு தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்... அவர் அழைப்புக்கு மதிப்பளித்து இதோ எழுதுகிறேன்....




*************************************************************



நான் பிச்சைக்காரனா?



" என் தந்தையை விட உன் மேல் மரியாதை வைத்து இருக்கிறேன்.. என் திருமணத்தில் உன் கருத்து மிகவும் முக்கியம் " என நண்பன் சொன்னபோது திகைப்பாக இருந்தது... கிட்டத்தட்ட சம வயது கொண்ட அவன் என் மேல் இவ்வளவு மரியாதை வைத்து இருக்கிறானே.. அப்போது எங்கள் நட்பு கூட்டத்தில் நான் சற்று நல்ல நிலையில் இருந்தேன்.,... எப்போதும் யாராவது வந்து கொண்டு இருப்பார்கள்... வேலை பளு அதிகம் என்றாலும், அனைவரையும் நன்கு கவனிப்பது என் வழக்கம்...

ஒரு தலைவனை போல என்னை நான் எண்ணி கொள்வது வழக்கம்...

அந்த காலத்தில், நிறைய படிப்பவன் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது... கூட இருந்தவர்கள் ஆச்சர்யமாக பார்ப்பார்கள்....

இனிதாக சென்ற வாழ்வில் , ஒரு திருப்பமாக, சில பிரச்சினைகள் காரணமாக ( அதை பற்றியெல்லாம் தனியாக பேச வேண்டும்... இந்த தலைப்பில் அது இடம்பெறாது ) , அப்போது இருந்த பணியை விட வேண்டியது ஆயிற்று..

தனிமை , தோல்வி, சோகம் எல்லாம் என்னை புடம் போட்ட காலம் அது.. முதல் வரியில் என்னை மதிப்பதாக சொன்ன அந்த நண்பன் தன திருமணத்துக்கு என்னை அழைக்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்... ஒரு குறிப்பிட்ட நபரால்தான் என் பணியும் , அந்த நண்பன் பணியும் பாதிக்கப்பட்டது... அந்த நபருக்கும் எனக்கும் மோதல் இல்லை... என் நண்பனின் எதிரி என்ற முறையில்தான் , எனக்கு அவர் எதிரி ஆனார்...



கடைசியில் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டனர்... அவர் தலைமையில்தான், நண்பன் திருமணம் நடந்தது...



அவனை குறை சொல்ல இதை சொல்ல வில்லை.. மனித இயல்பு ..



சில நண்பர்கள், என் ஊருக்கு வந்தாலும், என்னுடன் பேசுவதோ சந்திப்பதோ இல்லை.. எப்போதாவது பேச நேர்ந்தால், நீ பிசியாக இருப்பாய்.. டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என நினைத்தேன் என்பார்கள்... இந்த நல்ல குணம் முன்பு ஏன் இல்லாமல் போனது என நினைத்தாலும், அதை சொல்வதில்லை.. சும்மா சிரித்து விட்டு வந்து விடுவேன்...



பசி என்றால் என்ன என்பதை இந்த காலகட்டத்தில் உணர்ந்தேன்... பசித்தால் வயிற்றில் ஒரு வகை வலி ஏற்படும்... சாப்பிடாமல் இருந்து விட்டு,,சாப்பிட்டால் வாந்தி வரும்,,, சாப்பிடவே முடியாது என்பதைஎல்லாம் பார்த்த போது , இப்படி எல்லாம் பிரச்சினைகள் இருக்கிறதா என தோன்றியது...

சாப்பிடுவதற்கென்றே கோயிலுக்கு சென்ற வீர வரலாறும் எனக்கு உண்டு...



ஆனால் இப்படி கஷ்டப்பட வேண்டிய குடும்ப நிலை எனக்கு இல்லை... சில பிரச்சினைகளால்தான் இந்த நிலை....



அதன் பின் நிலை மாறி , சுமுகமான சூழ் நிலை உருவானது,... நானே எதிர்பாராத வசதியான நிலை ஏற்பட்டது ( அது எப்படி என்பது தனி கதை,, அந்த நல்ல நிலை ஏற்பட காரணம், புறக்கணித்த நண்பர்களே என்பது இதில் இருக்கும் ட்விஸ்ட் )

அதன் பின் பெரிய உணவகங்களில் சாப்பிடும்போதோ, வசதியான நிலையில் இருக்கும்போதோ, எதுவும் நிரந்தரம் அல்ல என்று எனக்கு நானே சொல்லி கொள்வேன்...



காதல் குறித்தும் சுருக்கமாக சொல்ல வேண்டும்...



காதலித்த கால கட்டத்தில் , அது போல யாரும் காதலித்து இருக்க முடியாது என்று நினைத்தேன்... அந்த அளவுக்கு அன்பு காட்ட்டப்பட்டேன்.. அந்த காதல் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை...பாதகமான விஷயம் ஒன்றும் கிடையாது... ஆனாலும் அது தோல்வியில் முடிந்தது...



இதை எல்லாம் பார்க்கும்போது, எதுவும் நிரந்தரமில்லை...



ஏதோ ஒன்று, ஒரு சக்தி , அல்லது கடவுள் நம்மை உயரத்தில் வைக்கிறது... திடீரென தள்ளி விடுகிறது என்று தோன்றியது...



ஆனால் அந்த சக்தி .அல்லது அந்த ஏதோ ஓன்று , சக மனிதர்கள் மூலமே நன்மையையும் தீமையும் செய்கிறது என்று புரிந்தது... ... எதிரி என நினைப்பவர்கள் நண்பர்கள் ஆவதும், நண்பர்கள் என நினைப்பவர்கள் எதிரிகள் ஆவதும் சகஜம் என்பது புரிந்தது...



எனவே ஒரு பிச்சைக்காரன் போல இருப்பதே நல்லது என தோன்றியது...



வெற்றி வரும் ... போகும் ... நண்பர்கள் எதிரிகளாக மாறலாம்.. எதிரிகள் நண்பர்கள் ஆகலாம்...



வெற்றி தோல்வியை பற்றி கவலை படாமல், நல்ல விஷயங்களை - ஒரு பிச்சைக்காரன் உணவை தேடுவது போல - தேடலாம் என நினைத்தேன் ...

அந்த வகையில் பிச்சைகாரன் என்ற நிலையில் இருந்து சிந்திப்பதால் நிறைய கற்க முடிகிறது...



பதிவுலகில் நான் கற்றதே ஆயிரம் இருக்கும்.... என்னை விட படித்தவர்கள், அனுபவம் மிக்கவர்களிடம் இருந்து நிறைய கற்கிறேன்.... என தவறுகளை திருத்துகிறேன் ( தனிப்பட்ட விதத்தில் எனக்கு ஊக்கமூட்டிய , அன்பு காட்டிய பதிவர்கள் , நேரில் சந்தித்த பதிவர்கள், போனில் பேசிய பதிவர்கள் பற்றி தனியாகத்தான் எழுத வேண்டும்..இதில் இடமில்லை ) பதிவுலகம் வந்த பின் நான் படித்த புத்தகங்கள் , பேசிய மனிதர்கள், கற்ற விஷயங்கள் அதிகம்...


அந்த வகையில், எனக்கு அதிகம் பிச்சை போட்டவர்களில், பதிவுலகமும் ஒன்று ...



அறிவை பொறுத்தவரை, எல்லாம் தெரியும் என்ற நிலையில் இருப்பதை விட, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தேடலில் இருக்கும் பிச்சைக்காரனின் நிலை எனக்கு பிடித்து இருக்கிறது...



எனவேதான் பிச்சைக்காரன் தட் பிளாக் ஸ்பாட் டாட் காம் பிறந்தது...



திருமணத்துக்கு அழைக்கவில்லை என சொன்னேன் அல்லவா? அதே நண்பன் பிறகு நல்ல விஷயங்கள் சில செய்தான்.. அவனை தவறாக நினைத்து தவறு...

யாரையும் பற்றி தீர்ப்பு சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை... அறிவும் இல்லை... அனைவர் செயலையு விருப்பு வெறுப்பு இன்றி ஒரு பார்வையாளனாக பார்ப்பதே நல்லது

அதே போல, மதங்களையும் இது உயர்ந்த மதம் , இது வன்முறை மதம் என்றெல்லாம் தீர்ப்பு சொல்ல நாம் யார்... ஒரு பார்வையாளனாக எல்லாவற்றையும் பார்ப்போம். என நினைத்தேன்...

இப்படித்தான் பார்வையாளன் பிறந்தான்.,..



இப்படி இருப்பதால் எல்லா மதக்களிலும் இருந்து நல்ல விஷ்ய்களை கற்க முடிகிறது...  இப்போது குர் ஆன் படித்து வருகிறேன்,,,

ஒரு மத நூலை படிப்பதால், கடவுளுக்கு உதவி செய்கிறேன் என நான் எப்போதும் எண்ணியது கிடையாது... படிப்பு என்பது தேடலின் ஒரு பகுதி...




கடவுளை நான் இதுவரை உணர்ந்தது இல்லை..



சில முயற்சிகள் செய்து வருகிறேன்...



கடைச்யில் கடவுளை நான் ஏற்கிறேனோ இல்லையோ... கடவுள் என ஒருவர் இருந்தால் அவர் என்னை ஏற்கும்படி என் செயல்கள் இருந்தால் போதும்

*************************
 
தொடர் பதிவுக்கு நான் யாரை அழைக்க போகிறேன்? பலரது பெயர் காரணத்தை அறிய எனக்கு விருப்பம்.. ஆனால் நான் அழைத்து- நேரமின்மை காரணமாக - மறுத்து விட்டால் என்ன செய்வது... எனவே தனியாக , மெயிலிலோ போனிலோ , அழைக்க இருக்கிறேன்...


22 comments:

  1. அருமையான பதிவு. பயிற்சியால் பெறப்பட‌ வேண்டிய முக்கியமான
    தன்மை 'பணிவு', அது தங்களுக்கு வாய்த்திருக்கிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆனால் அதே சமயம் பிச்சைக்காரன்,பைத்தியக்காரன் என்ற பெயர்கள்
    வைப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு
    தாக்கம் உண்டு.

    ReplyDelete
  3. பார்வையாளன் ஒக்கேதான் ஆனால் பிச்சைக்காரன் பிடிக்கவில்லை.
    மாணவன்,வழிப்போக்கன்,இலக்கியப் பயணி,தோழன்,அறிவுக் காதலன்,
    அறிவின் சீடன்,தேடல் நாயகன்,நலம் விரும்பி....இப்படி எத்தனையோ
    நல்ல பெயர்கள் இருக்கே.

    ReplyDelete
  4. எனது பெயர்க் காரணம் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
    ஏனெனில் அது எனது ப்ரொஃபைலிலேயே போட்டிருக்கிறேன். :))

    ReplyDelete
  5. என்ன தான் கிளைக் கதைகள் உள்ளன என்று சொன்னாலும் உள்ளூர ஒரு சோகம் காண்கிறேன்.

    தேடுவதைக் கண்டடைவீர்களாக!!

    ReplyDelete
  6. ஹாய் பார்வையாளன்...உங்கள் பெயர்காரனத்தை ஒரு வகையில் புரிஞ்சுகிட்டேன் என்றாலும்...இது வரை பார்க்காத எழுத்து நடை இந்த பதிவில் பார்த்தேன்...என்ன ஒரு முதிர்ச்சியான எழுத்து நடை...எங்கே போச்சு இதெல்லாம் இத்தனை நாளாய்???

    எந்த பெயரை நாம் வச்சுக்குரோமாங்கிறது வேற சகோ...ஆனால் ..நமக்கு நம்மை பிடிக்கிற மாதிரி எப்பவும் pleasant ஆ மைண்டை வச்சிட்டு இருந்தாலே பரமானந்தம் தான்...இதுக்கு எந்த புத்தகமோ..கடவுளையோ தேடவே வேணாம்...மற்றவங்களை சந்தோஷ படுத்தி பார்த்தாலே போதும்..கிடைக்கும் எல்லாவகை பேரானந்தமும்...:)))

    எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது நண்பா இந்த பதிவு..சூப்பர்...

    ReplyDelete
  7. ஒன்றை முக்கிமாக கூறிக்கொள்ளவேண்டும். உங்கள் தேடல்கள் ஆழமான பார்வைகள் என்பவையே என்னை எப்போதும் பிரமிக்க வைக்கும்.

    ReplyDelete
  8. சார் பிச்சைக்காரனுக்கும் பார்வையாளனுக்கும் இப்படி ஒரு பெயர் காரணம் இருக்கும் நெனச்சே பார்க்கலன்னு அப்படிலாம் எதும் போய் சொல்ல மாட்டேன்

    ஆனா இவ்வளவு அழுத்த மான காரணம் இருக்கும்னு நெனச்சு பார்க்கல

    உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. @பார்வையாளன், 'இயல்பாய் இருத்தல்' என்ற ஜென் தத்துவம் பதிவில் இழையாய் ஓடுகிறது.

    @ஆனந்தி, \\இது வரை பார்க்காத எழுத்து நடை இந்த பதிவில் பார்த்தேன்...என்ன ஒரு முதிர்ச்சியான எழுத்து நடை...எங்கே போச்சு இதெல்லாம் இத்தனை நாளாய்???\\

    இதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. எழுதப்படும் விஷயத்தைப் பொறுத்து வார்த்தைகள் தாமாகவே தம்மை வடிவமைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.

    ReplyDelete
  10. அருமையான பதிவு நண்பரே..நல்ல முதிர்ச்சி எழுத்தில்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  11. ருமையான பதிவு நண்பரே..நல்ல முதிர்ச்சி எழுத்தில்! பாராட்டுக்கள்"

    நன்றி செங்கோவி

    ReplyDelete
  12. vaav....ippadi oru kathaiyya ungal pinne :)

    ஆமா

    ReplyDelete
  13. இப்படி ஒரு வித்தியாசமான காரணமா??
    :)

    ReplyDelete
  14. உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்க”

    நன்றி மணிவண்னன் சார்

    ReplyDelete
  15. என்ன தான் கிளைக் கதைகள் உள்ளன என்று சொன்னாலும் உள்ளூர ஒரு சோகம் காண்கிறேன்.”

    மற்றவர் மனதை புரிந்து கொள்ளிம் உங்களை போன்றோர் இருப்பதால்தான், பூமி இன்னும் இயங்குகிறது என தோன்றுகிறது

    ReplyDelete
  16. இயல்பாய் இருத்தல்' என்ற ஜென் தத்துவம் பதிவில் இழையாய் ஓடுகிறது”

    பல விஷ்யங்கள் படித்து இருக்கிறீர்கள் என தெரிகிறது... சந்திக்கத்தான் முடியவில்லை

    ReplyDelete
  17. தன்மை 'பணிவு', அது தங்களுக்கு வாய்த்திருக்கிறது வாழ்த்துக்கள்.

    நன்றீ

    ReplyDelete
  18. நிறைவாய் அருமையான விளக்கம்.

    ReplyDelete
  19. அறிவை பொறுத்தவரை, எல்லாம் தெரியும் என்ற நிலையில் இருப்பதை விட, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தேடலில் இருக்கும் பிச்சைக்காரனின் நிலை எனக்கு பிடித்து இருக்கிறது...


    .... Humble mind! Super!

    ReplyDelete
  20. ”சாப்பிடுவதற்கென்றே கோயிலுக்கு சென்ற வீர வரலாறும் எனக்கு உண்டு”

    சோகத்துக்கிடையில் மெல்லிய நகைச்சுவை மிக்க ஒர் பதிவு.

    ReplyDelete
  21. இது தான் உங்க பதிவு பக்கம் நான் முதன் முதல் வருவது என்று நினைக்கிறேன்.

    உங்க பெயர்க்காரணமும் பதிவுப் பெயர்க்காரணமும் மிக அருமை. நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை - இன்னிக்கு ஒருத்தங்களுக்கு வேண்டியது, நாளைக்கு வேண்டாமல் போகலாம். செல்வமும் இல்லை, ஏழைமையும் இல்லை - எளிமையில் இருக்கிறது வெற்றி. எனவே நீங்க வெற்றி அடைஞ்சிட்டீங்க. வாழ்த்துகள்.

    அதே போல், வாழ்வின் நிலைகளிலும் / சந்திக்கின்ற மக்களிலும் கடவுளைக் காணவும் வாழ்த்துகள்!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா